எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 28, 2021

வல்லபனின் கேள்விகள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 தத்தன் தனியாக விசாரிக்கப் போயிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் பெண் மஞ்சரி அவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலையையும் தெரிவித்தாள். குறுகிய காலத்தில் தத்தன் மேல் அந்தப் பெண் காட்டும் ஈடுபாட்டையும், அன்பையும் கண்ட வல்லபன் ஆச்சரியப் பட்டான். அவர்கள் பயணத்தின்போதும் வரும் வழியெல்லாம் அவள் தத்தனுடைய சௌகரியங்களையும், அவன் உடல் நிலை மீதும் மிகுந்த கரிசனம் காட்டினாள்.  அவனுக்குத் தவறாமல் மருந்துகள் கொடுப்பது, சரியாக உணவு உண்டானா எனக் கவனிப்பது, அவன் துணிகளைத் தோய்த்து உலர்த்தித் தருவது என அவள் காட்டிய ஈடுபாடு வல்லபனுக்குள் ஆச்சரியத்தையும் தோற்றுவித்திருந்தது. வல்லபனுக்கு ஒரு பெண் ஒரு ஆண்மகன் மேல் அன்பும், பாசமும் கொண்டு விட்டால் அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் குறித்து வியப்பு ஏற்பட்டது. அதோடு அந்தப் பெண் அந்த ஆண்மகனிடம் காட்டும் ஈடுபாடும் சேவைகளும் இனிமையானவை என்று எண்ணும் அதே சமயம் அதன் மூலம் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் ஏற்படும் வேதனைகளையும் எண்ணினான். தானும் மகரவிழியாள் எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாமல் அவதிப்படுவதையும் அதனால் தன் மனதில் எழும் வேதனைகளையும் நினைத்துப் பெருமூச்செறிந்தான்.

இப்போது அந்த மகர விழியாள் இங்கே இருந்திருந்தால்? இதை எண்ணிய வல்லபனுக்குத் தனக்கு அவள் இப்படி எல்லாம் சேவைகள் செய்திருப்பாளா என எண்ணிப் பார்க்க அந்த எண்ணங்களே அவனுக்கு இன்பமயமாக இருந்தன. ஆனால் அவை உண்மையில் நடக்காது எனவும்,அ வள் யாரோ அரச குடும்பத்து வாரிசு எனவும் என்னதான் அவள் தன்னைக் காதலித்தாலும் திருமணம் என வந்தால் அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்வது நடக்காத ஒன்று என்பதும் வல்லபனுக்குப் புரிந்தது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் அவனுக்கு தத்தன் மேல் கொஞ்சம் பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  என்றாலும் மீண்டும் மீண்டும் அவன் மனதினுள் மகரவிழியாளின் முகமே தோன்ற அவளைக் குறித்து மஞ்சரியிடம் கேட்டால் என்ன என்னும் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.  இப்போது இங்கே தத்தனும் இல்லை. ஆகவே இதுவே நல்ல தருணம் என நினைத்தான் வல்லபன். மேலும் அந்தச் சேவகர்கள் கூடவே அந்த மகரவிழியாளையும் அழைத்து வந்து தான் இருந்த இடத்திற்கு எதிரே அவளை வைத்திருந்ததை நினைவு கூர்ந்தான். ஆகவே மஞ்சரிக்கு அவளைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

உடனே அவன் மஞ்சரியிடம்,  நல்லூரில் அந்த சேவகர்கள் வந்தபோது தனியாக வந்தார்களா? அல்லது கூடவே ஒரு பெண்ணும் வந்தாளா என்று கேட்டான்.  அவள் ஏதானும் பார்த்தாளா என்று அறியவே அவன் கேட்டான். ஆனால் அதற்கு மஞ்சரி தான் அந்தப் பெண்ணைப் பார்த்ததோடு அல்லாமல் அவள் கூடவே இரண்டு நாட்கள் இருந்ததாயும், அந்தப் பெண் உடல் நலமில்லாமல் இருந்ததாயும் தெரிவித்தாள். அதனால் தான் அந்த சேவகர்கள் அங்கேயே தங்கி அவள் உடல் நலம் கொஞ்சம் சொஸ்தம் ஆனதும் கிளம்பினார்கள் என்றும் சொன்னாள்.  வல்லபன் மனம் பதைத்தது. எனினும் வெளியே காட்டிக் கொள்ளாமல் என்ன உடம்பு என விசாரித்தான். நல்ல ஜூரமாகவும் அதோடு வயிற்று வலியும் சேர்ந்து கொண்டதாக மஞ்சரி சொன்னாள். பிரக்ஞையே இல்லாமல் இருந்தவளை முதலில் ஆதுரசாலையில் சேர்த்ததாகவும், பிறகு அங்கே நடமாட்டம் அதிகம் இருந்ததால் வேறே தனி வீட்டுக்கு அவளைக் கொண்டு சென்றதாகவும், எவரும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவள் இருப்பதையே ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

தன்னையும், வைத்தியரையும் மட்டும் நெருங்க விட்டதாய்ச் சொன்ன மஞ்சரி தான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணுக்கு வைத்தியம் செய்யும்போது நான் கூட இருப்பது அவளுக்கும் அனுகூலம் என நினைத்திருப்பார்கள் என்றும் சொன்னாள். ஆனால் வீட்டுக்கு அவளை எடுத்துச் சென்ற பின்னர் தன்னை அந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் போகும்போது தன்னையும் வைத்தியரையும் கடுமையான எச்சரிக்கைகளால் பயமுறுத்திவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அதோடு இல்லாமல் அந்த ஆதுரசாலைக்கு வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இதற்காக ஒரு நாடகமும் நடத்தியதாகச் சொன்னாள். வல்லபன் ஆவலுடன் என்ன நாடகம் எனக் கேட்க மஞ்சரி  மேலே சொன்னாள். அங்கே சேவகன் ஒருவன் காலில் அடிபட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்திருப்பது போல் கிடந்தான். ஆனால் அவன் உண்மையில் அடிபட்டுக்கொண்டவன் எல்லாம் இல்லை. அந்தப் பெண் ஆதுரசாலையில் தனி அறையில் இருந்ததால் அங்கே வருபவர்களைக் கண்காணிக்க அந்தச் சேவகன் அங்கே வந்து படுத்துக் கொண்டான் எனவும் அவனுக்குத் துணையாகச் சிலர் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சொன்னாள். 

பின்னர் அந்தப் பெண்ணைப் பற்றி அவள் வர்ணித்தாள். அவள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அவள் ஓர் ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அந்தச் சேவகர்கள் அவள் யாரோ ஓர் பிரபுவின் பெண் என்றே சொன்னதாகவும் சொன்னாள். மேலும் அந்தப் பெண் எப்போதும் மயக்கத்திலேயே இருந்ததாகவும் அது இயற்கையாக இல்லை என்பதால் வைத்தியருக்கும் அவளுக்கும் பயம் ஏற்பட்டதாகவும் சொன்னாள். இருவருக்குமே அவளை இவர்கள் கடத்திச் செல்வது புரிந்து விட்டதாகவும் அதனாலேயே அவளை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.  வல்லபன் அவள், அந்த மகரவிழியாள், பேசினாளா என்றும் எப்படிப் பேசினாள் என்றும் தீவிரமாகக் கேட்டறிந்ததைக் கண்ட மஞ்சரி சிரித்தாள். "உங்களுக்குத் தெரிந்தவளா?"என்று வல்லபனிடம் கேட்க அவனோ அவள் மீது தனக்கு ஓர் அனுதாபம் தோன்றியதாகவும் அதனால் கேட்டதாகவும் சொன்னான். 

No comments: