எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

12. கடவுள் என்னும் முதலாளி

ஜுன் 21, 2006

இந்தக் கடவுள் என்பவரைப் பற்றிப் பலவிதமாகக் கருத்துக்கள் நிலவுகிறது. இருக்கிறார் என்று சில பேர், அப்படி யாரும் கிடையாது என்று சில பேர். என்னைப் பொறுத்த வரை இருக்கிறார். இதை நான் ஒவ்வொரு நிமிஷமும் உணர்ந்தேன், உணருகிறேன், இது ஒரு உணர்வுதான். ஆனால் வழிபாடுகளில் கடவுளுக்கு உருவம் வைத்திருக்கிறோம். கடவுளுக்கு உருவம் இல்லை என்பதும் ஒரு கோட்பாடுதான். கடவுள் பல உருவங்களில் இருக்கிறார் என்பதும் ஒரு கோட்பாடுதான். இதில் எது நம் மனதுக்குப் பிடித்திருக்கிறதோ அதைத் தான் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கடவுள் கல்யாணம் செய்து கொள்கிறாரே, குழந்தை பெற்றுக் கொள்கிறாரே, ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறாரே, இது எல்லாம் நமக்குப் பிடித்தமானது. நாம்தான் கடவுள் மேல் ஏற்றுகிறோம். இது போல அவரவர் மனதுக்குப் பிடித்தமான உருவங்களிலும் கடவுளை நினைக்கிறோம். இது சகுண வழிபாடு என்பது. சாதாரண மனிதனுக்கு இது தான் ஏற்றது.

கடவுளுக்கு உருவம் இல்லை. மனம்தான் அறிய முடியும். புலன்களால் உணர முடியாது. இதயத்தால் மட்டுமே உணரமுடிந்த, புலன்களுக்குப் புலப்படாத உருவமில்லாத தன்மையான நிர்க்குணம் அடைய நாம் எல்லாரும் ஞானிகளாக இருக்க வேண்டும். எல்லாரும் ஞானிகளாகி விட்டால் சிருஷ்டி தத்துவம் என்ன ஆவது? ஆதலால் தான் நாம் முதலில் சகுணத்தின் மூலம் கடவுளைப்புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். பண்பட்டவர்களுக்கு, நாள் செல்லச் செல்ல அவர்களுக்குள்ளேயே கடவுளை உணர முடியும். இதுதான் உள்ளொளி எனப்படும். இது நிர்க்குண வழிபாடு. இது கிடைக்கத் தான் எல்லாரும் முயற்சி செய்கிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒரு சின்னக்கதை. நான் படித்ததில் பிடித்தது: ஒரு கிராமத்தில் ஒருத்தன் கடவுளை நினைக்காமலோ, ஆராதிக்காமலோ எதுவும் செய்ய மாட்டான். ரொம்பவும் பக்திமான். அந்தக்கிராமத்தில் மழை நாட்கள் வந்த போது நதி உடைப்பு எடுத்து ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது எல்லாரும் கிராமத்தை விட்டுக் காலி செய்யும்படி அரசு உத்தரவு போட்டது. எல்லாரும் காலி செய்து கொண்டு இருந்தார்கள். நம் பக்திமான் கடவுள் நினைப்பிலேயே இருந்து வந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் வரவில்லையா என்று கேட்டதற்கு என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று பதில் சொன்னார். கொஞ்ச நேரம் ஆனது வெள்ளம் அதிகமாகச் சூழ்ந்தது. பக்திமான் முதல் மாடியில் ஏறி நின்று கொண்டார். அப்போது ஒரு படகு வந்தது. படகுக் காரர்கள் ஊரில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு வந்தவர்கள் இவரைப் பார்த்து விட்டுச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்கள். இவர் திரும்பவும் "நான் வரவில்லை, கடவுள் வருவார், என்னைப் பாதுகாக்க" என்று சொல்லி விட்டார். படகுக்காரர்கள் கெஞ்சினார்கள். அவர் அசைந்து கொடுக்கவில்லை.

நேரம் சென்று கொண்டே இருந்தது. முதல் மாடியும் தண்ணீரால் சூழ்ந்தது. மேலே மொட்டை மாடிக்குப் போனார். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு எல்லாம் நம்ம பக்தர் இருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு அங்கே வந்து வட்டமிட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ஏணி இறக்கப்பட்டது. ஒரு ஆளும் கூடவே இறங்கினான். " என்ன செய்கிறீர்கள், தனியாக, ஊரில் யாருமே இல்லை, சீக்கிரம் இந்த ஏணியில் ஏறுங்கள்" என்றான். நம்ம பக்தர் மறுத்து விட்டார். "என்னைக் கடவுள் காப்பாற்றுவார் அப்பனே, நீ போய் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்றார். அவன் எவ்வளவு கெஞ்சியும் அவர் மறுத்து விட்டார். பின் அவனும் போய் விட்டான். ஊரை வெள்ளமும் சூழ்ந்தது. நம்ம பக்தர் வெள்ளத்தோட அடித்துச் செல்லப் பட்டார்.

அப்போ அவன் நினைச்சான். " நாம் இவ்வளவு வேண்டியும் கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லையே" என்று நினத்தான். அப்போது கடவுள் அவன் முன் கடவுள் தோன்றி "அப்பனே, நான் மூன்று முறை வந்தேன், உன்னைக் காப்பாற்ற, நீதான் இடம் கொடுக்கவில்லை" என்றார். "ம்ஹும், நீங்கள் எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான். கடவுள் சொன்னார். "அப்பனே, முதலில் நான் பக்கத்து வீட்டுக் காரனாக வந்தேன். பின் படகுக்காரனாக வந்தேன். பின் ஹெலிகாப்டரில் வந்தேன். மூன்று முறையும் என் உதவியை நீதான் மறுத்தாய்" என்றார். (சுகி.சிவம் சொன்ன கதை என்று நினைக்கிறேன்.)

நாம் ரொம்பக் கஷ்டத்தில் இருக்கும்போது, அது மனக்கஷ்டமோ, பணக்கஷ்டமோ, உடல் கஷ்டமோ எங்கிருந்தோ வந்து நீளும் உதவிக்கரம் கடவுளுடையது தான் என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும்.

No comments: