எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

13. விதியின் வலிமை

ஜுன் 23, 2006

நேற்று முன் தினம் தற்செயலாக வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் படித்துக் கொண்டு இருந்தேன். சில சந்தேகங்கள் தெளிவதற்கு. அப்போது விதியின் வலிமை பற்றிச் சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறியது பற்றிப் படித்தேன். அதில் இருந்து தெரிந்தது, விதி என்பது வலிது என்றும், அதில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும்.அந்தச் சம்பவம் ராமாயணத்தில் நடைபெறும் சமயம், ஸ்ரீராமர் நிறை கர்ப்பிணியான சீதையைக் காட்டில் விட்டு வரும்படி லக்ஷ்மணனிடம் சொல்ல அவனும் விட்டு விட்டுத் திரும்புகிறான். அப்போது அவன் தன் அண்ணனின் நிலை பற்றிப் புலம்ப சுமந்திரர் அவனுக்கு எடுத்து உரைக்கிறார்."லக்ஷ்மணா, வருந்தாதே, கேள்!தன் பிள்ளைகளான ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்களின் பிற்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிட வல்லுனர்களிடம் தசரதர் கேட்டார். அவர்கள் ஸ்ரீராமர் தன் மனைவி, சகோதரர்களைப் பிரிந்து வாழ்வார் என்றும், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வார் என்றும், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளால் ரகுவம்சம் தழைக்கும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

இதனால் வருத்தமடைந்த தசரதன், வசிஷ்டரைப் பார்க்க ஆசிரமத்திற்குப் போன போது அங்கே தற்செயலாக வந்திருந்த துர்வாச முனிவர், தசரதரின் பிள்ளைகளான ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்கனர் ஆகியோர் பற்றி மன்னனிடம் கூறியது என்ன என்றால்:"தசரத மன்னனே! எதுவும் நம் கையில் இல்லை. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது விதி! அதை யாராலும் மாற்ற முடியாது. இது மஹாவிஷ்ணு பெற்ற சாபத்தின் பலன்" என்றார். "அது என்ன" என்று தசரதர் கேட்டார்.துர்வாசர் கூறினார்:"மன்னா, கேள்1 முன்னொரு காலத்தில் அசுரர்கள் தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாமல் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தார்கள். பிருகு முனிவரின் மனைவி கருணை மிகுந்தவள். அவளால் அசுரர்கள் பாதுகாக்கப் பட அசுரர்கள் அங்கே பயமில்லாமல் வாழத் தொடங்கினார்கள். அசுரர்களின் இந்தச் செயல் பற்றிக் கோபம் உற்ற தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிடவே அவர் தகுதி இல்லாத அசுரர்களைக் காத்து ரக்ஷித்த பிருகு முனிவரின் மனைவியைத் தன் சக்கராயுதத்தால் அறுத்துத் தள்ளினார். மஹாவிஷ்னுவின் இந்தச் செயலால் மனைவியை இழந்த முனிவர் மஹாவிஷ்ணுவைப் பார்த்துக் "கோபத்தினால் மதி இழந்த நீங்கள் எந்த நியாயமும் இல்லாமல் என் மனைவியைக் கொன்றீர்கள். பாவங்களை எல்லாம் விலக்கும் வல்லமை படைத்த நீங்களே இப்படிச் செய்யலாமா? உங்களை நான் சபிக்கிறேன். நீங்கள் பூவுலகில் மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து நெடுங்காலம் மனவேதனையுடன் வாழவேண்டும்."என்று சபித்தார்.

பிறகு தன் சாபத்தாலும், மன வேதனையில் தானும் கோபமுற்றதாலும் முனிவருக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. அவர் வேதனையைக் கண்ட மஹாவிஷ்ணு அவரைத் தேற்றி பூவுலக நன்மைக்காகத் தான் அவருடைய சாபத்தை ஏற்பதாகக் கூறினார்." அதன்படி ஸ்ரீராமர் அவதாரம் எடுத்து அயோத்தி மாமன்னனாக ஆட்சி புரிந்து, மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே மனைவியைத் துறந்து பின் தன் கையாலேயே தன் அருமைத்தம்பியான லக்ஷ்மணனையும் துறந்து மனவேதனை உற்றுப் பின் அவதாரப் பூர்த்தி செய்வார்." இது தான் தசரத மஹாராஜாவிடம் துர்வாசர் வசிஷ்டர் ஆசிரமத்தில் கூறியது. ஆனால் இது தேவ ரஹஸ்யம் என்பதால் ஒருவருக்கும் கூறக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். நான் அந்தச் சமயம் அங்கே இருந்தேன். இத்தனை நாள் இது பற்றிப் பேசாமல் இருந்ததுக்குக் காரணம் இது இப்படித்தான் இருக்கும் என்று உனக்குத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகையால் வருந்திப் பயன் இல்லை. மனதைத் தேற்றிக் கொள். கடவுளே ஆனாலும் பாவம் செய்பவன் தண்டிக்கப்படுவான். அவன் விதி அது. மனிதகுலம் இதைப் புரிந்து கொள்வதற்குத் தான் ராமாவதாரம் ஏற்பட்டது" என்றார்.

No comments: