எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

15. நஞ்சுண்ட கண்டன்

ஜுலை 09,2006

நேற்று எதிர்பாரா விதமாகச் சுருட்டப்பள்ளி "பள்ளி கொண்டேஸ்வரர்" கோவிலுக்குச் சனி மஹாப் பிரதோஷம் பார்க்கப் போயிருந்தேன். என்னை நன்கு அறிந்தவர்கள் எல்லாம் நான் இந்த மாதிரிப் போவது பார்த்து "உனக்கு இறை அருள் நிறைய இருக்கிறது. இல்லாட்டி உன்னோட உடல் நிலையில் இப்படிப் போக முடியாது." என்று சொல்வார்கள். நான் அதைப் பூரணமாக ஒவ்வொரு முறையும் உணருகிறேன். நேற்றும் அப்படி உணர்ந்த ஒரு பிரயாணம். என்னோட பெருமை அப்புறம். இப்போ அந்த சிவன் பெருமை.

"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

இந்தத் தென்னாடுடைய சிவன் எல்லாக் கோவில்களிலும் லிங்க ரூபத்தில் இருக்கிறார். ஆனால் சுருட்டப்பள்ளியிலோ பள்ளி கொண்ட பெருமானாக இருக்கிறார். அதுவும் அன்னையின் மடியில் பள்ளி கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சி எங்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சி. மேலும் இந்தக் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வாம பாகத்தில் (இடப்பக்கம்) அன்னை உட்கார்ந்திருக்கிறாள். இப்படித் தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தியும் எங்கும் பார்க்க முடியாது. பரமாச்சார்யாள் 72-ம் வருடம் இந்தக் கோவிலில் தங்கி இருந்து தினமும் ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்திருக்கிறார். அப்போதுதான் இந்தக் கோவிலில் உள்ள எல்லாக் கடவுளர்களும் குடும்ப சமேதராகத் தரிசனம் செய்தது பற்றித் தெரிந்து கொண்டு கோவிலின் தலபுராணம் பற்றிக் கூறியதாவது: பாற்கடலைக் கடைந்த போது வாசுகி கக்கிய "காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அதன் உக்கிரத்தால் அஞ்சிய தேவர்களையும் அசுரர்களையும் பரமேஸ்வரன் உலக நன்மைக்காகத் தான் விழுங்க எண்ணித் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அதை எடுத்து வரச் செய்கிறார்.

அது ஒரு கருநாவல்பழம்போல் உள்ளது. அதை வெளியே வீசினாலும் சரி, ஆண்டவன் உண்டாலும் சரி, சகல உயிர்களுக்கும் ஆபத்து. ஆகவே ஈசன் "விஷாபகரணமூர்த்தி" ஆகி விஷத்தை முழுங்க அம்பிகைத் தன் தளிர்க்கரங்களால் அதைத் தடுத்து விஷம் உள்ளே போகாதவாறு கண்டத்திலேயே அடக்குகிறாள். விஷத்தை உண்ட ஈசன் "விஷாபகரணமூர்த்தி" என்று அழைக்கப் பட்ட மாதிரி அன்னை அகிலத்தோர் வாழ்வை அமுதம் ஆக்கியதால் "அமுதாம்பிகை" என அழைக்கப் படுகிறாள். அபிராமி அந்தாதியில் "பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால் வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார். அன்று முதல் திருநீலகண்டனான ஐயன் கைலாயம் செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கம் தீர அம்மை மடியில் படுத்து இளைப்பாறுகிறார். அந்த அரியக் காணக் கிடைக்காத காட்சியைத் தான் நேற்று கண்டு வந்தோம். அன்னை மடியில் ஐயன் படுத்திருக்கச் சுற்றி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பிரான், நாரதர், மார்க்கண்டேயர், இந்திரன், சந்திரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கெளதமர், தும்புரர், வஸிஷ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி, எல்லாரும் இருக்கிறார்கள்.

மரகதாம்பிகை சன்னதி தனியாக இருக்கிறது. மற்றபடி காமதேனு, கற்பகவிருஷம், மற்ற மூர்த்திகளுடன் தட்சிணாமூர்த்தித் தன் மடியில் அன்னையுடன் காட்சி தருகிறார். மற்றக் கோயில்களில் ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதட்சிணாமூர்த்தி, மேதாதட்சிணாமூர்த்தி என்று இருக்கும். இங்கு மட்டும் இடப்பாகத்தில் தன் மனைவியுடன் காணப்படுகிறார். "மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்" என்று கோளறு பதிகத்தில் திருஞானசம்மந்தர் இவரைத்தான் சொன்னாரோ என்னவோ? இந்தத் தலத்தில் பக்தர்களுக்குப் பெருமாள் கோவில் மாதிரிச் சடாரி சாதித்துத் தீர்த்தமும் பிரசாதமாகத் தருகிறார்கள். பகவானின் பாத தரிசனம் இருப்பதால் சடாரியும், மஹாவிஷ்ணுவும் உடன் இருப்பதால் தீர்த்தமும் தருவதாய்ச் சொல்லுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்துப் புத்தூர் செல்லும் பேருந்துகள் சுருட்டப்பள்ளியில் நிற்கும் என்று சொன்னார்கள்.

இங்கிருந்துதான் ஆந்திர எல்லை ஆரம்பிக்கிறது. கோவிலும் ஆந்திர மாநில அறநிலையத் துறை வசம்தான் இருக்கிறது. தரிசனம் செய்யப் பணம் நிறைய ஆகிறது. பிரதோஷ நாளில் போனால் தர்ம தரிசனம் கிடையாது. ஒரு ரூபாய் ஒருவருக்குச் செலுத்திப் போய்ப் பார்க்கவேண்டும். அதைத் தவிரச் சிறப்புத் தரிசனம் ஒருத்தருக்கு ரூ.50/ என்று வைத்திருக்கிறார்கள்.

கூகூகூகூகூகூகூகூகூட்ட்ட்ட்ட்ட்ட்டடடடடடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தாங்கவில்லை. என்னால் பிரதோஷ அபிஷேகம் முடியும் வரை நிற்கமுடிந்தது. மஹாதீப ஆராதனைக்கு நிற்கமுடியவில்லை. கூட்டத்தில் மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. ஆகவே தரிசனம் மட்டும் போதும் என்பவர்கள் சாதாரண நாளில் போவது உத்தமம். பொதுவாக நான் கோவில்களுக்கு சாதாரண நாளில் தான் போவேன். நேற்று அப்படி முடியவில்லை.

சங்கரன் கோவில் கோமதி மகிமையில் பாரதியார் கூறுகிறார்.

"இக்கடலதனகத்தே-அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன்குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள்:-திசைத்
தூவெளியதனிடை விரைந்தோடும்,
மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்,
மெய்க்கலை முனிவர்களே!-இதன்
மெய்பொருள் பரசிவன், சக்தி கண்டீர்!

எல்லையுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?"

இந்தப் பாட்டை அவர் முடிக்கவில்லை. காரணம் அவர் கண்ட காட்சியில் அவரால் மேற்கொண்டு விளக்க முடியாமல் போனதோ என்னவோ? ஆனால் கோமதி அம்மனுக்காக அவர் எழுதிய வார்த்தைகள் இங்கும் பொருந்துகின்றன. ஓம் நமச்சிவாய:

No comments: