எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 07, 2009

துவாரகையில் கிருஷ்ணனைக் காணோம்! 2

அவர் வண்டியைத் தள்ளிச் செல்லும்போது இறைவன் எடையே இல்லாதது போல் மிக மிக லேசாக இருந்தான். ஆகவே வெகு விரைவில் அவர் டகோரை அடைந்து விட்டார். ஆனால் இங்கே துவாரகையிலேயோ, ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது. குக்ளி என அழைக்கப் படும் ஒருவகை அந்தணர்களால் துவாரகைக் கோயில் வழிபாடுகள் நடத்தப்படும். அவர்களுக்கு மறுநாள் விடிந்ததுமே கருவறையில் மூர்த்தத்தைக் காணாமல் கலக்கம் உண்டானது. பின்னர் தீவிர விசாரணைகளின் பேரில் வஜேசிங் பொடானோ தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் எனப் புரிந்தது. அவர்கள் அந்தப் பகுதி அரசன் உதவியுடன், வில் வித்தையில் தேர்ந்த சிலருடன் டகோரை நோக்கிச் சென்றனர். இங்கே டகோரை நெருங்கிக் கொண்டிருந்தது பொடானோவின் வண்டி. நடுவழியில் இளைப்பாற வேண்டி உம்ரேத் என்னும் ஊருக்கு அருகே சற்றே நிறுத்தினார் பொடானோ வண்டியை. உம்ரேத்தில் இன்னமும் இறைவனின் காலடிகள் இருப்பதாய் ஐதீகம். மேலும் பொடானோ நிறுத்தி இருந்த வேப்பமரம் அதன் பின்னர் தன்னுடைய கசப்புத் தன்மை போய் இனிப்பாக மாற ஆரம்பித்ததாயும் சொல்லுகின்றனர்.

இப்போ துவாரகையில் இருந்து வரவங்க கிட்டே இருந்து இந்தக் கிருஷ்ணனை எவ்வாறு மறைப்பது? பொடானோ கலங்கினார். யோசித்தார். பின்னர் தோன்றியது அவருக்கு. கண்ணனை மறைத்து வைக்கச் சரியான இடம் கோமதி குளமே என.

கிருஷ்ணர் கோமதி குளத்தில் மறைத்து வைக்கப் பட்டார். குகுளி பிராமணர்களும் தக்க ஆட்களோடு வந்துவிட்டனர் கிருஷ்ணனைத் தேடி. சண்டை நடக்கின்றது. சண்டையின் முடிவு இருவிதமான வாதங்களாய்ச் சொல்லப் படுகின்றது. ஒரு வாதம், கோமதி குளத்தில் கிருஷ்ணரை மறைத்ததுமே பொடானோ வஜேசிங் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுவிட்டார் எனச் சொல்கின்றது. அதைத் தெரிந்த கூட்டத்தினர் அவரின் விதவை மனைவியிடம் போய்ச் சண்டை போட்டு விக்ரஹத்தைத் திரும்பக் கேட்டதாயும், பின்னர் வஜேசிங்கின் மனைவி மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் விக்ரஹத்திற்குப் பதிலாய்ப் பொன்னைத் தர ஒப்புக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.

இன்னொரு வாதம் கோமதி குளத்தில் விக்ரஹம் ஒளித்து வைக்கப் பட்டதைக் கண்டறிந்த கூட்டத்தினர் விக்ரஹத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அப்போது நடந்த சண்டையில் பொடானோ வஜேசிங் இறந்ததாகவும், விக்ரஹத்தின் ஒரு பக்கத்தில் அம்பு பட்டதாகவும், அந்தத் தழும்பு இன்றளவும் விக்ரஹத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர். எது எப்படியோ விக்ரஹம் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால் பொடானோவோ உயிருடன் இல்லை. அவர் மனைவியோ பிடிவாதமாய் மறுக்கின்றாள் கிருஷ்ணரைக் கொடுக்க. பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே அந்தக் கிருஷ்ணர் விக்ரஹத்தின் எடைக்கு எடை பொன்னைப் பெற்றுக் கொண்டு செல்லுமாறு துவாரகா வாசிகளுக்குக் கட்டளை பிறக்கின்றது. அதுவும் கிருஷ்ணரே துவாரகா பிராமணர்களின் கனவில் வந்து சொல்லுகின்றார். மேலும் துவாரகையில் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய விக்ரஹம் அங்கே உள்ள சாவித்திரி குண்டத்தில் இருந்து கிடைக்கும் எனவும் சொல்கின்றார்.

அரை மனதாய் ஒப்புக் கொண்ட பிராமணர்கள் எடைக்கு எடை பொன்னைக் கேட்கின்றனர். இவ்வளவு ஏழையான ஒருவனிடம் என்ன பொன் இருக்கப் போகின்றது? கடைசியில் விக்ரஹத்தை எடுத்துச் சென்றுவிடலாம் எனவே எண்ணினார்கள். ஆனால் என்ன ஆச்சரியம்? அந்த விதவைப் பெண்மணியின் சிறு மூக்குத்தியை வைத்ததுமே விக்ரஹம் எடை சரிசமமாய் ஆகிவிட்டது. இது ஏமாற்று வேலை எனச் சொன்ன அந்தணர்கள் மீண்டும், மீண்டும் பார்க்கவே அதே தான் எடை நின்றது. வேறு வழியில்லாமல் அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு சென்ற அவர்கள் கிட்டத்தட்டப் பத்து மாதங்கள் அலைந்து திரிந்து கடைசியில் சாவித்திரி குண்டத்தில் இருந்து இப்போது இருக்கும் துவாரகை கிருஷ்ண விக்ரஹத்தைக் கண்டெடுத்தனர். ஆனால் டகோரில் சொல்லுவது என்னவெனில் கிருஷ்ணர் ஒரு நாளில் எட்டில் ஏழு பாகம் டாகோரில் கழித்துவிட்டு மீதி ஒரு பாகத்தை துவாரகையில் கழிக்கின்றார் என்றே சொல்கின்றனர். பொடானோ கிருஷ்ணரை துவாரகையில் இருந்து கொண்டு வந்த வருஷம் கி.பி 1155-ம் வருஷமாய் இருக்கலாம் என பாம்பே கெஜட்டர், கைரா மாவட்டத்தின் தகவல் தெரிவிக்கின்றது. கவி கோபால்தாஸ் என்பவர் சம்வத் வருஷம் 1212 ஆக இருக்கலாம் எனவும் அன்று கார்த்திகை மாதம், பெளர்ணமி, வியாழக்கிழமை எனவும் சொல்லுகின்றார். இதைத் தவிர வேறு சரித்திரச் சான்றுகள் இது உண்மையா எனத் தெரிந்து கொள்ள இல்லை.\

நம்ம கிருஷ்ணரோ சர்வ செளக்கியமாய் டகோரில் கோயில் கொண்டார். அந்தப் பகுதி மக்களுக்கு மிக மிக ஆனந்தம். தற்போது டகோரில் இருக்கும் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது கி.பி. 1722-ம் ஆண்டு. கோபால் ஜகந்நாத் தம்பேகர் என்பவர் சதாராவைச் சேர்ந்தவரும் அப்போதைய பேஷ்வாவின் கஜானா மந்திரியாகவும் இருந்தார். இவரே திருப்பணிகள் செய்திருக்கின்றார். அப்போது சுற்றுவட்டார கிராமங்களின் வரி வசூல் பூராவும் கோயிலின் அன்றாடச் செலவுகளுக்காக இறையிலியாக விடப் பட்டிருந்தது. இந்தியாவின் மேற்கு பாகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கிய புண்ணிய ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. பரோடா மஹாராஜா கெய்க்வாட் ரூ. ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் செலவில் பீடங்களை தங்கத்தாலும், வெள்ளியாலும் அலங்கரித்தார். சில நாட்கள் வரை கோயிலின் தர்மகர்த்தாக்களாய் தம்பேகர் குடும்பமே இருந்து வந்தது. ஆனால் பின்னால் உள்ளூர் மக்களுக்கும் இவர்களுக்கும் மன வேற்றுமை ஏற்படவே வழக்கு ஏற்பட்டு மும்பை கோர்ட்டுக்கு வழக்கு சென்று கோயில் உள்ளூர் மக்கள் கையில் வந்தது.

தற்சமயம் கோயிலை உள்ளூர் மக்களே நிர்வகிக்கின்றனர். எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்தக் கோயில் பரோடாவில் இருந்து ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் உள்ளது. ஆனந்த் இதற்கு மிக அருகில் இருந்தாலும், பரோடாவில் இருந்து சென்றால் ஆனந்தை அடையாமலே செல்லலாம். ஆனால் உம்ரேத் என்னும் ஊரைத் தாண்டியே செல்லவேண்டும். வழியெங்கும் புகையிலைப் பயிர்கள். செழிப்பாய் வளர்ந்து நிற்கின்றன. அந்தப் பகுதியே செல்வச் செழிப்போடு இருப்பது நன்கு தெரிகின்றது. குஜராத்தியர் வெளிநாட்டில் வசித்தாலும், தங்கள் பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்கின்றனர். ஆகையால் சிறு கிராமமாய் இருந்தாலும், தரமான சாலைகள், நல்ல கட்டிட அமைப்புள்ள பள்ளிகள், குடிநீர் வசதி என அடிப்படை வசதிகளோடு காண முடிகின்றது. இறை பக்தியும், கலாசாரம், மொழி ஆகியவற்றைக் காப்பதிலும் அவர்களுக்கு ஒப்புவமை சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக குஜராத்தி மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. குழந்தைகளுக்கு எண்கள் குஜராத்தி மற்றும் நமக்குப் பழக்கப்பட்டிருக்கும் ரோமன் எண்கள் இரண்டுமே கற்பிக்கப் படுகின்றன. பெண்களுக்கு அவர்கள் என்ன படிப்புப் படித்தாலும் இலவசம் தான். டாக்டரோ, மருத்துவமோ அல்லது துறைகளில் ஆய்வு செய்வதோ எதுவானாலும் இலவசமே.

இத்தனை இருந்தும் பக்தி செலுத்துவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது. நாங்கள் டகோர் சென்ற அன்று செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடிக் கொண்டு பெரிய பதாகைகள், கொடிகள், மற்றும் கோயில் உற்சவங்களுக்குத் தேவைப் படும் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள் என எடுத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தோம். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் மிகப் பணம் படைத்தவர்கள் என்பதும், சிலர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கின்றனர் என்பதும் விசாரித்ததில் தெரிய வந்தது. என்றாலும் சற்றும் கூச்சம் இல்லாமல் கிருஷ்ணன் ஒருவனையே நினைந்து கோபியர்களைப் போலவும், கோபர்களைப் போலவும் ஆணும், பெண்ணும் பஜனைப் பாடல்களும் மற்ற வழிபாட்டுப் பாடல்களும் பாடி, ஆடிக் கொண்டு அங்கங்கே நின்று கூட்டமாய்ச் சுற்றி வந்து கும்மி அடித்துக் கொண்டும் சென்று கோயிலை அடைந்தனர். கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் கிருஷ்ணனுக்கே. அவனுக்குச் சமர்ப்பிக்கவே இத்தனையும். கோயிலுக்குக் கொடுப்பதிலோ, பக்தர்களுக்குக் கொடுப்பதிலோ குறையே வைப்பதில்லை.

பல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன குஜராத்தில். சிலர் ராமானுஜரையும், சிலர் ராமானந்தரையும், சிலர் கபீரையும், சிலர் ஸ்வாமிநாராயணனையும், சிலர் வல்லபாசாரியாரையும் பின்பற்றுகின்றனர். எனினும் கிருஷ்ணன் அனைவருக்கும் பொது. அவனை நினைப்பதிலேயோ, அவனுக்குச் செய்வதிலேயோ அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. தாங்கள் பெற்ற பிள்ளைகளை விடவும் ஸ்ரீகிருஷ்ணனே அவர்களுக்கு அன்றும், இன்றும், என்றும் முதல் பிள்ளை, மூத்த பிள்ளை. டாகோர் கோயில் எந்தவிதமான வைணவ சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் கிருஷ்ணன் ஒருவனை மட்டுமே பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றது.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

அடுத்து ஜெய் சோம்நாத்!

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

எங்காவது தீர்த்த யாத்திரை செல்வதானால் உங்களுடன் போகணும் அப்படின்னு நினைக்கிறேன்..அருமையா எழுதிவருகிறீர்கள். நன்றி.

திவாண்ணா said...

ஆமாம் அவர்கள் கொடுக்க அஞ்சாதவர்கள் அதான் கிடைக்கவும் கிடைக்கிறது.