எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 10, 2009

ஜெய் சோம்நாத்! 2

பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஸரஸ்வதி நதி, சமுத்திரம், சோமநாதர், (அம்பிகையுடன் கூடிய சோமநாதர்), சோமன் என்ற பெயரால் அழைக்கப் படும் சந்திரன், சோமநாதரின் தரிசனம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றிருந்தது. பின்னால் காலப் போக்கில் ஸரஸ்வதி நதி மறைந்து போய் விட்டது. இங்கே உள்ள சமுத்திரக் கரையில் கிருதஸ்மார மலை என அழைக்கப் பட்ட மலையில் இருந்து இந்த க்ஷேத்திரம் மேற்கே அமைந்திருந்தது.இந்த கிருதஸ்மார மலையும் இப்போது காணக்கிடைக்காத ஒன்று. ஸரஸ்வதி, பிப்பலனுக்குக் கிடைத்த அக்னியை ஏந்திக் கொண்டு வந்து சமுத்திரத்தில் விட்டதால் புனிதம் இழந்து இருக்கின்றாள். ஆனால் கிருதஸ்மார மலை அரசனோ ஸரஸ்வதியைக் கண்டு மணக்க எண்ணுகின்றான். அவள் புனிதமாய் இல்லை என்றாலும் பரவாயில்லை என அவளைத் தன்னில் தாங்குகின்றான். ஸரஸ்வதியோ தான் அக்னியை சமுத்திரத்தில் விட்டபின்னர் புனித நீராடிவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றாள். ஸரஸ்வதியின் கை அக்னி கிருதஸ்மாரனைத் தாக்குகின்றது. அக்னியின் கடுமை தாங்காமல் மலை அரசன் தூள் தூளாய்ப் போய் சாம்பல் ஆகிவிடுகின்றான். உடைந்த மலைக் கற்கள் எங்கும் பரவுகின்றன. அந்தக் கற்களே இப்போது கோயில்கள் கட்டப் பெருமளவில் பயன்படுவதாய் உள்ளூர் மக்கள் சொல்லுகின்றனர்.

பிரபாஸ காண்டம் மேலும் இந்த சோமநாத லிங்கத்தைப் பற்றி வர்ணிக்கும்போது சொல்லுவது என்னவெனில்:” ஒரு கோழிமுட்டை அளவே உள்ள இந்தச் சுயம்புலிங்கமானது பூமிக்கு அடியில் மறைந்திருந்தது. ஸ்பரிஸ லிங்கம் என்ற பெயருடன் இந்த லிங்கமானது ஒரு பாம்பு சுற்றிய வண்ணமும், சூரியனுடைய கிரணங்களின் பிரகாசத்துடனும் ஒளி மிகுந்து காட்சி அளித்தது.பூமிக்கு அடியில் இருந்த இந்த ஸ்பரிஸ லிங்கம் சந்திரனுக்காக பிரம்மா வெளியே கொண்டு வந்தார். அந்தக் கதை தெரிந்த ஒன்றே. தட்சனின் 27 பெண்களை மணந்த சந்திரன் அவர்களில் ரோஹிணியிடம் மட்டும் தனியாகப் பிரியம் வைக்க, மற்றப் பெண்கள் அதனால் துன்புற்றுத் தந்தையிடம் முறையிடுகின்றனர். தட்சன் சொல்லியும் சந்திரன் மனம் மாறாததால் தட்சன் சந்திரன் தேய்ந்து போகச் சாபம் கொடுக்கின்றான். சந்திரன், தன் பிரிய மனைவி ரோஹிணியோடு தன்னுடைய மாமனார் ஆன தட்சனின் சாபம் நீங்க இங்கே வந்து தான் ஸ்பரிஸ லிங்கத்தை 4,000 வருஷங்கள் வழிபட்டான். அவன் இழந்த ஒளியை இங்கே பெற்றதாலேயே இந்த க்ஷேத்திரம் பிரபாஸம் என்ற பெயரும் பெற்றது. பிரம்மாவின் ஆணையின் பேரில் சந்திரன் தன் மனைவி ரோஹிணியுடன் இங்கே சோமநாதருக்குக் கோயில் ஒன்று கட்டினான். பிரம்மா பூமியின் பிளவைத் தோண்டி உள்ளே பேரொளியோடு கூடிய ஸ்பரிசலிங்கத்தைச் சந்திரனுக்குக் காட்டினார். ஒரு கோழி முட்டை அளவே இருந்த அந்த லிங்கம் தேனாலும் தர்ப்பைப் புற்களாலும் மூடப் பட்டிருந்தது. அதன் மேலேயே பிரம்மாவால் எழுப்பப்பட்ட சிலையும் அமைந்தது. வேதமந்திரங்களுடன் அவற்றிற்கு வழிபாடு செய்யப் பட்டது.

ஏழுவகைப் பட்ட கர்க குலத்தவர்கள் அங்கே பாஷுபத யோகத்தில் ஈடுபட்டு சித்தி பெற்று உயர்வாக இருந்ததாயும் சொல்லப் படுகின்றது. இது தவிர, கெளசிக கோத்திரத்தினரும் சோமநாதரைப் பெருமளவு வழிபட்டிருக்கின்றனர். பாசுபத சம்பிரதாயத்தின் முக்கியச் சீடர்களாய் கெளசிகர், கர்க்யர், கெளருஷர், மைத்ரேயர் ஆவார்கள் என்றும் தெரிய வருகின்றது. இந்தப் பாசுபத சம்பிரதாயத்தின் மூலகர்த்தா லகுலிஸா என அழைக்கப் படுவார். லகுலிசா பாசுபதத்தில் ஒரு வகை. கிட்டத்தட்ட காபாலிகர் மாதிரி என்று சொல்லலாம். இதன் முதல் குரு பெயர் லகுலிசா என்று சொல்கின்றனர். ஆகவே அவர் பெயரிலேயே இந்த சம்பிரதாயமும் அழைக்கப் படுகின்றது. இவர் ஈசனின் கடைசி அவதாரமாகவும், அதே சமயம் 28வது அவதாரமாகவும் கருதப் படுகின்றார். பரோடாவில் உள்ள ஒரு அந்தணக் குடும்பத்தில் உடலோடு அவதாரம் எடுத்ததாய்க் கருதப் படுகின்றார். அவர் காயாரோஹணம் என்னும் இடத்தில் ஒரு மரணமடைந்தவரின் உடலில் புகுந்தார் எனவும் சொல்லப் படுகின்றது.

மஹாபாரதம் ஆதி பருவத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் பற்றிக் கூறும்போது, அர்ச்சுனன் இங்கே வந்தபோது தான் சுபத்ரையைக் கண்டு அவளிடம் காதல் கொண்டு மணக்க எண்ணி, பலராமருக்குப் பயந்து சுபத்ரையோடு ஓடிவிடத் திட்டம் போட்டான் எனச் சொல்லுகின்றது. இது தவிரவும், வன பருவத்திலும், பீமனிடம் பிரபாஸ தீர்த்தம் பற்றிச் சொல்லப் படுகின்றது. தருமரும்,திரெளபதியும் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் முன்னர் இங்கே வந்து நீர் மட்டுமே அருந்தி விரதம் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேல் சரஸ்வதி நதி அப்போது ஓடிக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும் பாரதம் விநாசனா என்னும் ஊருக்கருகே மறையும் நதியானது, சாமாசோபேதா என்னும் ஊருக்கருகே செளராஷ்டிரக் கடல் கரையில் கடலுடன் கலப்பதாயும், இந்த இடத்தில் தான் லோபாமுத்ரை தன்னுடைய கணவர் ஆன அகஸ்தியரைக் கண்டதும், மணந்து கொண்டதும் என்றும் சொல்லுகின்றது.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலே சந்திரன் இங்கே வந்து வழிபட்டு தன் இழந்த செளந்தரியத்தையும் ஒளியையும் திரும்பப் பெற்றதே மிகச் சிறப்பாய்க் கூறப் படுகின்றது.





மேல் அதிகத் தகவல்களுக்கு மதுரைக்கு அருகே உள்ள அரிட்டப் பட்டி பற்றிய குறிப்புகளில்இங்கேபார்க்கவும்.


On the right side of sanctum sanctorum is a beautiful sculpture of Shiva in the form of `Lakulisa.' There are several sects in Saivisim and one of them is `Lakulisa Pasupatham.' The presiding deity of this sect is Lord Shiva. On the left, rests Lord Vinayaka.

The Lakulisa Shiva is apparently a rare specimen in Tamil Nadu. One similar sculpture is found at Kudimallam near Vellore, where Lord Shiva is seen in a standing posture. (Hinduonline 2005)

No comments: