எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 28, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அடுத்து என்ன?

குலசேகரன் சொன்னதைக் கேட்டு முதலில் வியந்தாலும் பின்னர் அவர்கள் அனைவரும் சென்று நம்மாழ்வார் விக்ரஹத்தைக் கொண்டு வந்தார்கள். ஆழ்வாரை எப்படித் தண்ணீருக்குள் இருந்து எடுத்தார்கள் என்பதைப் பலமுறை குலசேகரனும் மற்ற முக்குளவர்களும் சொல்லக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். இது நிச்சயம் இறைவன் செயலன்றி வேறேதும் இல்லை என்னும் தீர்மானத்துக்கு வந்தார்கள். அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வாருக்கு "வட்டமனை" என்னும் பெயரில் ஓர் வாகனத்தைத் தங்கத்திலேயும், வெள்ளியினால் ஆன திருமுன் பந்தம் (தீவர்த்தி) ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார்கள். சிறிது தூரம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமலே சென்றார்கள். "திருக்கிணாம்பி" என்னும் வைணவத்தலம் ஒன்று கர்நாடகத்தில் உள்ளது. அங்கே சென்று சிறிது காலம் அங்கே எந்தவிதமான பிரச்னையும் இன்றித் தங்கினார்கள். பின்னர் அரங்கன் ஊர்வலத்தாருக்குத் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்குச் செல்ல ஆவல் உண்டாக அங்கே செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஆழ்வார் ஊர்வலத்தாருக்குத் திருக்கிணாம்பியை விட்டுச் செல்ல விருப்பமில்லை.

இதைப் பற்றி இருவரும் விவாதித்தனர். அபிப்பிராய பேதங்கள் அதிகம் ஆகவே அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வார் ஊர்வலத்தார் வராவிட்டாலும் தாங்கள் செல்வது என முடிவு செய்தனர்.  ஆழ்வார் ஊர்வலத்தாரிடம் அவர்கள் விருப்பம் போல் செய்யும்படி சொல்லிவிட்டுத் திருநாராயணபுரம் செல்லும் வழியில் புங்கனூர் சென்று அடைந்தார்கள் அரங்கன் ஊர்வலத்தார். இங்கே ஆழ்வார் ஊர்வலத்தார் தனித்து விடப்பட்டதால் அவர்களுக்கு அங்கிருக்க மனமில்லாமல் அவர்களும் கிளம்பினார்கள்.  அரங்கன் ஊர்வலத்தார் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சென்று ஓர் கிராமத்தைச் சென்று அடைந்தனர்.  பின்னர் சிறிது வாத, விவாதங்களுக்குப் பின்னர் மேற்கே பயணிக்க முடிவு செய்து கொண்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு கிளம்பினார்கள். அப்போது கிராமத்தார் இது பற்றிக் கேள்விப் பட்டு ஓடோடி வந்து மேற்கே கள்வர் கூட்டம் அதிகம் என்பதால் அவ்வழி செல்லவேண்டாம் என்றனர். கிழக்கே போகிறோம் என ஊர்வலத்துப் பரிசனங்கள் சொன்னதுக்குக் கிராமத்தார் அங்கேயும் கள்வர் உண்டு. ஆழ்வாருடன் கூடவே நகைகள், பொக்கிஷங்கள் எடுத்துச் செல்வதால் தனிவழி செல்வது உசிதம் இல்லை என்றனர். மேலும் வடக்கே துருக்கியர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாயும் போதாதற்குக் கடலோரமாகக் கடற்கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

மிகவும் யோசனைக்கு இடையில் ஆழ்வாரின் ஊர்வலத்தார் ஆழ்வாரைத் தூக்கிக் கொண்டு தென்மேற்கே செல்ல முடிவு செய்தார்கள்.  அதிகாலையில் கிளம்பினார்கள். முன்னே சிலர் செல்லப் பின்னே சிலர் தொடர்ந்து வர நடுவில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆழ்வாரின் பரிவாரங்கள் தக்க இடைவெளி விட்டுப் பயணம் செய்தார்கள். அப்படியும் சிறிது தூரத்திலேயே பின்னால் வந்த எச்சரிக்கையாளர்கள் கள்வர்கள் வேவு மூலம் இவர்கள் பயணம் செய்வதைத் தெரிந்து கொண்டு விட்டதாகச் சொன்னார்கள். பின்னாலேயே பெரும் கூட்டமாக அவர்கள் வந்து கொண்டிருப்பதாயும் தனிமையான இடம் பார்த்து அனைவரையும் மடக்கிவிடுவார்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். பரிவாரங்கள் குழம்பிப் போய் நிற்க மீண்டும் வாத, விவாதங்கள் தொடர்ந்தன.

சிலர் எழுந்து அரங்கன்  ஊர்வலத்தாரோடேயே அவர்களும்  போயிருக்க வேண்டும் எனவும் அது தவறு எனவும் கூறினார்கள். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். ஆபத்து நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டிருப்பதால் எங்கே சென்றாலும் எந்தத் தரப்பில் சென்றாலும் ஆபத்து அவர்களைச் சூழ்ந்து கொள்வதோடு ஆழ்வாரின் கதி என்ன என்பதை நிரணயம் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள். அப்போது சிலர் ஆழ்வாரை மறைத்து விட்டுத் தாங்களும் பிரிந்து தனித்தனியாக நடந்தே சென்று வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விடுவது தான் சரியான வழி எனக் கூறினார்கள். எல்லோரும் இதற்கு ஒரு மாதிரியாக ஒத்துக் கொள்ள ஆழ்வாரை மறைத்து வைக்க என்ன வழி என யோசித்தனர்.

அப்போது ஒருவர் எதிரே தெரிந்த முந்திரிப்பு மலை என்னும் மலையில் எங்காவது ஆழ்வாரை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லலாம் என்று கூறினார். அனைவரும் மீண்டும் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு ஒத்துக் கொண்டார்கள். எல்லோரும் உடனே அதி விரைவாக மலையை நோக்கிப் பிரயாணம் செய்தனர். கொடி, செடிகள் நிறைந்த மலையில் மெல்ல மெல்ல மேலே ஏறினார்கள். அத்அன் விளிம்பில் இருந்து எட்டிப் பார்த்தால் கீழே அதலபாதாளம். அங்கே ஒரு குகை! அந்தக் குகைக்குச் செல்ல வழி தேடினால் கிடைக்கவில்லை. குகைக்குச் செல்ல வழியில்லை. கூர்ந்து கவனித்துப் பார்த்ததில் குகைக்கு அடுத்தாற்போல் கீழேயும் ஓர் செங்குத்தான சரிவு காணப்பட மலைகளுக்கு நடுவில் அந்தரத்தில் தொங்குவது போல் அந்தக் குகை காணப்பட்டது. 

2 comments:

நெல்லைத்தமிழன் said...

ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆக எழுதறீங்க. சம்பவங்களும் அப்படிச் செல்கின்றன.

நான், நிறைய உற்சவமூர்த்திகளின் முகங்கள் சிதைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் என்ன மாதிரியான சமாதாங்களும் கதைகளும் சொன்னாலும், இந்துமதத்துக்கு துருக்கியர்களால் வந்த சோதனை அளப்பரியது என்பதைக் காண்பிக்கின்றன அவைகள். (அல்லிக்கேணி, காஞ்சீபுரம், நம்பெருமாள் போன்று பல முக்கிய தலங்களில்)

Geetha Sambasivam said...

வாங்க நெல்லைத் தமிழரே, வரலாற்றுச் சம்பவங்கள்! ஆகவே நடந்ததை நடந்தபடி சொல்லத் தானே வேண்டும். பாராட்டுக்கு நன்றி.