எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

10. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 3

மே 30, 2006

"கிக்கா" என்று சொல்லப்படும் ரிஷ்யசிருங்கர் மலையில் இருந்து கிளம்பி நாங்கள் வந்து மடத்தின் அறையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம். பிறகு மறுபடி சாயந்திரம் துங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள சில நதிகள் இத்தனை சுத்தமாக இருக்குமா என்று எண்ணம் தோன்றியது. ஒரு காலத்தில் மிகச் சுத்தமான நதியாக இருந்த கூவம் நதி இப்போது சாக்கடையாக மாறி விட்டது. அது போலப் பெரிய நகரங்களில். எனக்குத் தெரிந்து மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுருங்கி இருக்கிறது. அதனால் தான் நமக்கு இறைவன் தண்ணீருக்குக் கை ஏந்தும்படி வைத்திருக்கறான் போலும். எஙகு சென்றாலும் இந்த எண்ணம் தவிர்க்க முடிவது இல்லை. மறு நாள் காலை சிருங்கேரிக்குக் கிழக்கே உள்ள அன்னபூரணி கோயில் இருக்கும் ஹொரநாடு என்ற ஊர் போகக் கிளமபினோம். கார் வைத்துக் கொண்டு போகும்படி சிலர் சொன்னாலும் பஸ்சில் போக ஆசைப்பட்டு பஸ்சில் போனோம். அதிகம் மலைப் பிரதேசங்களில் போக வேண்டி இருப்பதால் நம்ம ஊர் மினி பஸ்ஸை விடச் சிறியதுதான் அந்த பஸ். ஆனால் பஸ்ஸின் நடத்துனர் எங்களுக்கு உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த மனிதாபிமான் செய்கை அங்கே எல்லா ஊர்களிலும் காணப்பட்டது. ஊருக்குப் புதியவர் என்றால் முதல் மரியாதை கொடுக்கிறார்கள்.

பஸ் முழுக்க முழுக்க மலை மேலேயே போகிறது. நல்ல உயரம் 8,000/ அடியில் இருந்து 10,000/அடி வரை இருக்கும். கொண்டை ஊசி வளைவுகள் 15-க்கும் மேலே. 10 அல்லது 20 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போக முடியாது. அநேகமாக மலைவாழ் மக்களுக்கு இது ரொம்ப வசதியாக இருப்பதால் எல்லா ஊர்களிலும் நின்று ஏற்றிக் கொண்டே போகிறது. மலைவாழ்மக்கள் என்றால் பழங்குடியினர் என்று நினைக்க வேண்டாம். எல்லா ஊர்களிலும் "நவோதயா" பள்ளிகள் காணப்பட்டன. நாம் எதை இழந்தோம் என்று நமக்கு இன்னும் புரியவில்லை. மத்தியானம் 12 மணி அளவில் ஊர் வந்தது. மிகவும் கஷ்டமான பிரயாணம். கோவில் மூடி இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் திறந்து இருந்தது. வாயிலில் இருந்தே அம்மனைப் பார்க்க முடிகிறது. ஆனால் கோவில் ஊழியர்கள் கிட்டே போய்ப் பார்க்கச் சொல்லக் கிட்டே போனோம். தங்க அன்னபூரணி நின்றகோ்லத்தில் கையில் அன்னக் கரண்டியுடன் உலகுக்கே உணவு அளிக்கத் தயாராக இருக்கிறாள். அவளின் அந்தக் கோலத்தைப் பார்த்ததும் நம் பசியே போய் விடுகிறது. நிதானமாக ஒரு 10 நிமிஷம் அம்மன் தரிசன்ம் நடை பெற்றதும் பிரசாதம் வாங்கிக்கொண்டோம். பின் கோவில் ஊழியரிடம் கேட்டதில் சாப்பாடு வெளியில் சரியான ஹோட்டல்கள் இல்லை என்றும் கோயிலில் போடுவார்கள் என்றும் சொல்லவே, அங்கே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

திரும்ப நாங்கள் வந்த அதே மாதிரி பஸ் தயாராக இருக்கவே அதிலேயே போக முடிவு செய்தோம். அஙகே ஒரு கடையில் ஏலக்காய், கிராம்பு, காபிப்பவுடர், டீத்தூள் போன்றவை வாங்கிக் கொண்டோம்.பிறகு பஸ்ஸில் ஏறித் திரும்ப சிருங்கேரி வந்தோம். சிருங்கேரியில் நண்பர் ஒருவர் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனின் நிர்மால்ய தரிசனத்தைப் பற்றிச் சொல்ல மீண்டும் உடுப்பி போக ஆசை வந்தது. ஆகவே மறுபடி உடுப்பி போக நினத்தோம். அதற்குள் ஒரு முறை மறுபடி மஹாஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. மறுநாள் காலை வேளையில் போக முடிவு செய்தோம்.

2 comments:

கோமதி அரசு said...

அன்னபூரணி கோவிலில் ஒரு கஷாயம் கொடுத்தார்கள்., வளையல் கொடுத்தார்கள்.
நாங்களும் இங்கு சாப்பிட்டோம்.

இயற்கை எழில் சூழ்ந்த கோவில்.

Geetha Sambasivam said...

கஷாயம் கொடுத்தார்களா நினைவில் இல்லை. ஆனால் ரிஷ்ய சிருங்கர் கோயிலிலும், அன்னபூரணி கோயிலிலும் வளையல்கள் கிடைத்தன. ரிஷ்யசிருங்கர் கோயிலில் ரவிக்கைத் துணி கூடக் கொடுத்தார்கள்.