எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, August 28, 2006

. 29. மடத்துத் தெரு பகவத் விநாயகர்.

இது முன்னேயே எழுத வேண்டாம் சரியாகப் பிள்ளையார் சதுர்த்தி அன்று எழுதலாம் என வைத்திருந்தேன். நேற்று எழுதவே முடியவில்லை. மேலும் சிவா வேறு வேலை செய்து கொண்டிருந்தால் தொந்திரவாக இருக்குமே என்ற எண்ணத்தினாலும் பேசாமல் இருந்து விட்டேன். இனி நம்ம உயிர் நண்பர் பிள்ளையார் பற்றி. மதுரையில் இருந்த வரை வடக்கு மாசி வீதி,மேல மாசி வீதி கூடும் இடத்தில் உள்ள ஆலமரப் பிள்ளையார் தான் எதுக்கும். அவர் என்னுடைய உயிர் நண்பர். இப்போவும் சில சமயம் அவரை நினைச்சுக்குவேன். என் மனம் அமைதி அடையும். அதுபோல என் கணவருக்குக் கும்பகோணத்தில் படிக்கும் சமயம் மடத்துத்தெருப் பிள்ளையார் இருந்திருக்கிறார். நான் அவரைப் பார்த்ததே இல்லை. இம்முறை பல வருஷங்களுக்கு முன்னால் உள்ள பிரார்த்தனை ஒன்றும் நிறைவேற்ற முடியுமா எனக் கேட்கவும், பிள்ளையாரைத் தரிசனம் செய்யவும் போனோம்.

கோவிலில் சாயங்கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிள்ளையாரை அழகாக அலங்கரித்து இருந்தார் குருக்கள். எப்பவுமே பிள்ளையாரைப் பார்த்ததும் ஏற்படும் ஒருவிதமான அமைதி இப்பவும் ஏற்பட்டது. சின்னக் கோவில் தான். பிரஹாரம் சுற்றி வந்தோம். அப்போது இந்தக் கோவில் பற்றிய வரலாறு சித்திரங்களில் வரையப் பட்டிருந்தது. சங்கட ஹர சதுர்த்தி ஹோமம் செய்யும் குண்டத்திற்கு முன்னால் நவக்ரஹ விநாயகர் படம் வரைந்திருந்தது. இப்போ கோவிலின் வரலாறு:

வேதாரண்யத்தில் "பகவத்" என்னும் பெயருடைய ஒரு முனிவர் இருந்து வந்தார். அவருடன் அவர் சிஷ்யனும், அவர் தாயாரும் வசித்து வந்தார்கள். வயதில் மிக மூப்பு அடைந்த அந்த அம்மாள் தனக்கு முடிவு நெருங்குவதைப் புரிந்து கொண்டு தன் பிள்ளையான பகவத் முனிவரை அழைத்துச் சொல்கிறாள்: "நான் இறந்ததும் என் அஸ்தியை அது எந்த இடத்தில் மலர்களாக மாறுகிறதோ அந்த இடத்தில் உள்ள நதியில் கரைத்து விடு." என்றாள். சில நாட்களில் தாயார் இறந்து போக பகவத் முனிவர் தன் தாயின் அஸ்தியை எடுத்துக் கொண்டுக் காவிரிக் கரையோரமாக வருகிறார். காவிரியின் வட கரையில் கும்பகோணத்திற்கு வந்தார். அங்கே ஒரு பிள்ளையார் கோவிலைப் பார்க்கிறார். நதியில் குளித்து விட்டுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்யலாம் எனத் தன் சிஷ்யனிடம் அஸ்திக் கலசத்தைக் கொடுக்கிறார். கரையில் காத்திருந்த சிஷ்யன் தற்செயலாக அஸ்திக் கலசம் திறந்திருப்பதைப் பார்த்து மூடப் போகும்போது அஸ்தியே அதில் இல்லாமல் மலர்களாக இருப்பதைக் காண்கிறான். தாயின் அஸ்தி இல்லை என்றால் குரு என்ன சொல்லுவாரோ என்று பயந்து உடனேயே அஸ்திக் கலசத்தை மூடி விடுகிறான். நடந்தது தெரியாத முனிவர் வந்து தன் அன்றாடக் கர்மாக்களையும் பிள்ளையார் பூஜையையும் முடித்துக் கொண்டு சிஷ்யனுடன் கிளம்புகிறார்.

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே கடைசியில் காசிக்கு வருகிறார். அஸ்தி அப்படியே இருக்கிறது. மனம் நொந்த முனிவர் மறுபடிக் கும்பகோணம் போகலாம், அல்லது வேதாரண்யமே போகலாமா என ஆலோசிக்க அப்போது சீடன் உண்மையை உரைக்கிறான். உடனேயே குரு சொல்கிறார்; "அப்பனே, அதனால்தான் காசிக்கு வீசம் அதிகம் கும்பகோணம்" என்று. பின் திரும்பிக் காவிரிக்கரையில் கும்பகோணம் வர, அஸ்திகள் மலர்களாக மறுபடி மாறுகிறது. உடனேயே காவிரியில் அஸ்தியைக் கரைக்கிறார். பின் அங்கேயே இருந்து பிள்ளையாருக்குக் கோவில் கட்டிப் பூஜை செய்கிறார். அதில் இருந்து அந்தப் பிள்ளையார் "பகவத் விநாயகர்" என்று அழைக்கப் படுகிறார்.

நாளாவட்டத்தில் காவிரி தன் திசையை மாற்றிக் கொள்ள வடகரையில் இருந்த பிள்ளையார் தென்கரைக்கு வந்து விடுகிறார். காவிரி சற்று நகர்ந்து போனதினால் இந்த மாற்றம் என்று சொல்கிறார்கள். இப்பவும் அந்தத் தெருவில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது ஆற்று மணலாக வரும் என்கிறார்கள். இந்தப் பிள்ளையாருக்கு மராட்டிய மன்னரின் அமைச்சரான "அண்ணாஜிராவ்" என்பவர் நிலங்கள் ஒதுக்கித் தினப்படி பூஜைக்கு வழி செய்திருக்கிறார். அவர் சிலை அந்தக் கல்வெட்டைத் தாங்கியபடி விநாயகரின் இடது பக்கம் சன்னதிக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறது. பின் "டபீர் தெரு" இளைஞர்கள் சங்கம் சேர்ந்துக் கோவிலைப் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேஹம் நடத்தி இருக்கிறார்கள். கோவிலில் எல்லாம் பார்த்த பிறகு நாங்கள் வந்த காரியத்தைச் சொன்னோம். அது பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் உடைக்க வேண்டும் என்பதுதான். உடனேயே குருக்கள் தேங்காயை மூட்டையில் வரவழைத்து உடைக்கவும் ஆட்கள் தயார் செய்து முதல் தேங்காயும், கடைசித் தேங்காயும் என் கணவர் உடைக்க 4 பேர் நின்று தேங்காய்களை உடைத்து அன்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம் என்று கோவில் குருக்கள் சொன்னார். அந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் அதுவும் 108 என்றால்தான் பிடிக்கும் போல் இருக்கு என்று நான் நினைத்தேன். எப்படியோ பிள்ளையாருக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.

2 comments:

Geetha Sambasivam said...

தனிப்பதிவு போட்டப்புறம் யாரும் இந்தப்பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கலியே? யாருமேவா படிக்கலை? ஆச்சரியமா இருக்கு!

Geetha Sambasivam said...

தனிப்பதிவு போட்டப்புறம் யாரும் இந்தப்பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கலியே? யாருமேவா படிக்கலை? ஆச்சரியமா இருக்கு!