***************************************************************************************
ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் வெண்ணைய் சாப்பிட்டுவிட்டு, திரும்பத் திரும்பக் கிருஷ்ணனைப் பார்த்ததோடு நம் பயணம் முடியவில்லை. அங்கே கோபி தாலாப் என்னும் இடம், ருக்மிணிக்கெனத் தனிக் கோயில், அது தவிர, துவாரகையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஓகா என்னும் துறைமுகத்தில் இருந்து நாம் நீராவிப் படகு, மோட்டார் படகு, அல்லது படகு எது கிடைக்குமோ அதில் ஏறி அங்கிருந்து அரை மணிப் பயணத்தில் உள்ள ஒரு சிறு தீவான பேட் துவாரகா செல்ல வேண்டும். அது கிட்டத் தட்ட நம் கண்ணனின் வசந்த மாளிகை ஆகும். அங்கே தான் சத்யபாமா, ஜாம்பவதி போன்றோர் இருந்ததாய்ச் சொல்கின்றனர்.
துவாரகை நகரும் சரி, அதன் கடைத் தெருக்களும் சரி சற்றும் மாறவே இல்லை. கோயிலில் இருந்து தங்குமிடம் வந்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் கிளம்புகின்றோம். தங்குமிடத்திலேயே தற்சமயம் ஓகாவுக்கு எப்படிப் போவது? எந்த எந்த மாதிரிப் போக்குவரத்து சாதனத்துக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். இதற்கு முன்னர் பதினைந்து வருஷம் முன்பு வந்தப்போ எல்லாம் அலுவலகத்தில் வண்டி ஏற்பாடு செய்து கொண்டு சென்றதால், இப்போதைய நிலவரம் எப்படினு தெரிஞ்சு கொண்டோம். போகவர, ஆட்டோவுக்கு 300 ரூயில் இருந்து 350 வரை கேட்பார்கள் எனவும், இண்டிகா என்றால் 400 ரூ என்றும் சொன்னார்கள். நாங்க இரண்டு பேர்தானே, ஆட்டோவே போதும் என முடிவெடுத்துக் கொண்டோம்.
வழியிலேயே ருக்மிணி கோயிலையும் பார்த்துக்கொண்டு செல்லவேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டதில் ருக்மிணி கோயிலுக்குச் செல்லுவதும் சேர்த்து ரூ. 350/- கேட்டார். போகும் வழிதான் என்றாலும் நம் சென்னையை நினைத்துப் பார்க்கும்போது இது ரொம்பவே கம்மி எனத் தோன்றியது. மேலும் ஓகாவில் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆட்டோ காத்திருக்கவேண்டும், நாம் திரும்பி வருவதற்காக. ஓட்டுநரின் செல் நம்பர், பெயர் எல்லாம் கேட்டு வச்சாச்சு. ஆட்டோவில் ஏறி இப்போ ருக்மிணி கோயிலை நோக்கிப் பயணம்
தொடர்கின்றோம்.


"ஒரு முறை துர்வாசரைப் பல்லக்கில் வைத்து அழைத்து வந்த ஸ்ரீகிருஷ்ணர், ருக்மிணியோடு சென்று அழைத்து வருகின்றார். அப்போது ருக்மிணிக்குத் தாகம் எடுக்க, கிருஷ்ணர் தன் சக்தியால் நீர் வரவழைத்துப் பருகக் கொடுக்க, துர்வாசருக்குக் கோபம் வருகின்றது. ருக்மிணியைச் சபிப்பதாயும், அவள் ஆறு மாதம் தனியாய் இருக்கவேண்டும் எனவும், துவாரகையில் நீரே கிடைக்காமல் போகக்கடவது எனச் சாபம் கொடுததாயும் சொல்கின்றனர். ஆனால் ருக்மிணி நீர் தானம் செய்ததால் சாபத்தில் இருந்து விடுபட்டாள் எனவும் சொல்கின்றனர். அதே போல் இந்த ருக்மிணி கோயில் வளாகத்தில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைக்கும். மற்றபடி துவாரகை நகர் முழுதும் நீர் உப்பாய்த் தான் இருக்கும். கையில் கொண்டு போனால் பிழைத்தோம். இல்லாட்டிக் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இப்போ அரசு குடிநீருக்காகப் பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
2 comments:
நல்ல பயணத்தொகுப்பு.
நன்றி உழவரே!
Post a Comment