எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 19, 2019

சிங்கப்பிரானின் நிலைமை!

சென்ற பதிவில் பாதி எழுதும்போதே சேமித்துவிட்டு வேறே வேலை வந்ததால் பார்க்கப் போனேன். அப்புறம் பார்த்தால் சேமிப்பதற்குப் பதில் பப்ளிஷ் கொடுத்திருக்கேன் போல. பாதிப் பதிவு வந்துவிட்டது.இனி அதன் தொடர்ச்சி!
*********************************************************************************
குதிரையை ஓட்டிக் கொண்டு மெதுவாகவே சென்று கொண்டிருந்த குலசேகரனுக்குக் கழுத்தில் ஏதோ கனப்பது தெரியத் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அது தாழியில் அவனை வைத்துக் காவிரியில் விடும்போது வாசந்திகா அவனைக் காப்பாற்றுபவர்களின் செலவுக்கென வைத்திருந்த ஆரம் எனப் புரிந்து கொண்டான். சிங்கப்பிரானால் காப்பாற்றப் பட்டதால் அந்த ஆரத்தை விற்க வேண்டிய அவசியமே நேரிடவில்லை. அது குலசேகரனிடமே தங்கி இருந்தது. அதைத் தான் வெகு நாட்களாகக் கழுத்தில் போட்டிருந்த போதும் அதன் நினைவே இல்லாமல் இருந்தவனுக்கு இன்று வாசந்திகாவின் லிகிதத்தைப் படித்ததும் அது தன் கழுத்தில் இருப்பது தெரிந்து கனக்கவும் செய்தது. உண்மையில் அது ஆரத்தின் கனமா என்ன? இல்லை; இல்லை. வாசந்திகாவின் நினைவுகள் அவன் மனதில் ஏற்படுத்திய கனம். இருக்கும் இடமே தெரியாமல் கிட்டத்தட்ட அவளை அவன் மறந்து விட்ட நிலையில் அவள் லிகிதம் வந்து அவளைப் பற்றிய நினைவுகளைக் கிளப்பியதோடு அல்லாமல் அவன் மனமே கனத்து பாரமாகி விட்டதே! "வாசந்திகா! வாசந்திகா! நீயுமா என்னை நினைத்தாய்? " இப்படி எத்தனை பெண்கள் நினைத்தார்களோ! இதை எண்ணி மறுபடி குலசேகரன் மனம் கனத்தது.

மெல்ல மெல்லப்பொழுது புலர ஆரம்பிக்கக் குலசேகரன் வேறொரு கிராமத்தை அடைந்திருந்தான். அங்குள்ள சிதிலமாகக் கிடந்த ஒரு வீட்டினுள் நுழைந்தான். அதன் கூடத்திற்குள் நுழைந்து சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு, "சுவாமி! சுவாமி" என அழைத்தான். மெல்லிய குரலில் பதில் வரவே திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கூ அந்தக் கூடத்தின் ஓரமாய்க் கீழே பாயை விரித்துக் கொண்டு சிங்கப்பிரான் படுத்து இருப்பதைக் காண நேர்ந்தது. கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, "சுவாமி, நான், குலசேகரன் வந்திருக்கிறேன்!" என அவர் அருகே போய்ச் சொன்னான். பலத்த இருமலுடன் எழுந்த சிங்கப்பிரான் அவனைப் பார்த்துத் தாம் ஒரு மாசமாய்ப் படுக்கையில் வீழ்ந்து விட்டதாய்ச் சொன்னார். இதைச் சொல்லுவதற்குள்ளாக இருமல் அவரை உலுக்கக் குலசேகரன் மீண்டும் அவரைப் படுக்க வைத்தான். நோயால் மெலிந்து நலிந்திருந்த அவர் தேகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது!  இப்பேர்ப்பட்ட மஹானுக்குமா நோய் வந்துவிட்டது என நினைத்து நொந்து கொண்டே சிங்கப்பிரானிடம் வீர வல்லாளர் படை எடுத்து வரும் விஷயத்தையும் கண்ணனூரை நெருங்கிவிட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.

ஆனால் சிங்கப்பிரானோ அதனால் மகிழவில்லை. குலசேகரனிடம், தான் வெகு காலம் இருக்கப் போவதில்லை எனவும், அந்திம காலம் நெருங்கிவிட்டதாய் உணர்வதாயும் கூறியவர் அதற்குள்ளாக ஶ்ரீரங்கம் கோயில் திறக்கப்பட்டு அரங்கனும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்குவதைப்பார்க்க ஆசைப்படுவதாய்த் தெரிவித்தார்.  அதை நேரில் கண்ட பின்னரே தான் உயிர் துறக்க விரும்புவதாயும் கூறினார். குலசேகரன் மிகுந்த மனவருத்தத்துடன்  அவரை மீண்டும் படுக்க வைத்துவிட்டு அவரைப் பார்த்துக்கொள்ளும் பெண்மணியிடம் செலவுக்காகச் சில பொற்காசுகளையும் கொடுத்தான். பின்னர் சிங்கப்பிரானிடம் விடை பெற்றுக் கொண்டு தான் கண்ணனூர் நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் கூறி அங்கிருந்து கிளம்பினான். காலை வெளிச்சத்தில் குதிரையை வேகமாக விரட்டிக் கொண்டு கண்ணனூர்க் கோட்டையை அடைந்த அவன் கண்களில் ஹொய்சளர்களின் முக்கியப் படை பெருத்த ஆரவாரத்துடன் அந்தக் கோட்டையின் வெளிவாசலில் வந்து கூடிக் கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தான்.

அதற்குள்ளாக இங்கே மேல் கோட்டையிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய கோஷ்டி வேதாந்த தேசிகரைப் பின் தொடர்ந்து சென்று சத்தியமங்கலத்தை அடைந்தது. அது கொங்கு நாட்டுப் பிரதேசமாக இருந்தாலும் ஹொய்சள ஆட்சியின் கீழ் வந்ததால் யாரும் எவ்விதமான பயமும் இல்லாமல் இருந்து வந்தார்கள். அந்த ஊர்க் கோயில் மண்டபத்தில் அரங்கனுக்காகத் தனி இருக்கை ஏற்படுத்தி அவனை அங்கே அமரச் செய்துவிட்டு வேண்டிய உபசரணைகளை எல்லாம் நித்தியப்படி செய்வதற்கும் பாரிசாரகர்கள் சித்தமானார்கள்.  சிறிது காலம் வரை தெற்கே இருந்து எவ்விதத் தகவலும் இல்லாததால் யாரேனும் யாத்ரிகர்கள் தெற்கே இருந்து வந்தால் அவர்களிடன் அங்கே உள்ள நிலவரம் பற்றிக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் ஹொய்சள மன்னரின் முற்றுகை வெற்றி பெற்று அரங்கனை திருவரங்கத்தில் போய்க் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.

இந்த நிகழ்வு நடந்த சமயம், அதாவது ஹொய்சள மன்னர் கண்ணனூர்க் கோட்டையின் முற்றுகையை ஆரம்பித்த வருடம் கி.பி.1342 ஆம் ஆண்டு.

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசித்துவருகிறேன்.

Mrinalini said...

The hero is somewhat confused when it comes to matter of hearts. Great update.
Please update soon.

Geetha Sambasivam said...

தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி.

மிருணாளினி, நீங்க எதிர்பார்க்கும் வேகத்தில் பதிவுகள் இட முடியாமைக்கு வருந்துகிறேன்.