எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 30, 2006

34.ஓம் நமச்சிவாயா-5

பசுபதி நாதருக்கு 5 முகங்கள். 4 திசைகளிலும் 4 முகங்கள், மேலும் தலையில் மேலே பார்த்து ஒரு முகம், இதை "அதோ முகம்" என்கிறார்கள். மொத்தம் 5 முகங்கள். திருக்கைலையிலும் கைலை நாதனுக்கு 5 முகங்கள். ஆகவே திருக்கைலைநாதனைத் தரிசிக்கும் சிறப்பு இந்தப் பசுபதி நாதனைத் தரிசிக்கும்போதும் கிடைக்கிறது. கூட்டத்தில் கிடைத்த இடத்தில் நின்று கொண்டோம். நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாம் வெளியில் இருந்து வந்திருக்கிறோம் என்றால் உடனேயே நம்மை முன்னால் பார்க்க விடுவார்கள். நிதானமாகவும் பார்க்க விடுவார்கள். அவசரப் படுத்துவது இல்லை. இங்கே அம்மாதிரி இல்லை என்பதோடு போலீஸ் காவலையும் மீறிச் சிலர் உரிமையோடு கூட்டத்தில் முன்னே போய்ப் பார்த்துக் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். நம்ம தமிழ்நாட்டுக் கோவில் மாதிரித் தான் இருந்தது. மேலும் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது. பல வயதானவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் கூட வந்து தரிசனம் செய்து கோயிலிலேயே இறக்கும் வரைத் தங்குமாறு ஏற்பாடு செய்து தருகிறார்கள். கோவில் நிர்வாகம் இதைச் செய்கிறது. கோயிலின் அர்ச்சகர் ஒரு இந்தியர். கேதார்நாத் கோவிலில் அர்ச்சனை செய்யும் "ராவல்" சமூகத்தைச் சேர்ந்தவர். நல்ல சிவப்பழமாக இருக்கிறார்கள். இது வரை இவரை நியமிக்கும் அதிகாரம் நேபாள மன்னரிடம் இருந்தது. இனிமேல் எப்படியோ தெரியாது.

நாங்கள் வரிசையில் நிற்கும்போது சில அர்ச்சகர்கள் வந்து "ருத்ராபிஷேஹம்" செய்ய வேண்டுமா எனக் கேட்டனர். கட்டணம் ரொம்ப ஜாஸ்தியாக இருந்ததால் நாங்கள் மறுத்து விட்டோம். சுமார் 1/2 மணிக்கும் மேலாக வரிசையில் நின்ற பிறகு ஒரு முகத்தின் தரிசனம் சற்றுக் கிடைத்தது. இறைவனை எவ்வளவு பார்த்தாலும் திருப்தி ஏது? பிறகு ரொம்பக் கஷ்டப்பட்டு மற்ற முகத்தின் தரிசனத்துக்குப் போனோம். 3வது, 4வது முக தரிசனத்துக்குப் போகவே முடியவில்லை. கூட்டம் நெட்டித் தள்ளியது. பின் அங்கிருந்து கிளம்பிச் சற்றுத் தூரத்தில் எல்லாரும் தரையில் பதிக்கப்பட்ட சில வடிவங்களை வணங்குவதைப் பார்த்துவிட்டு, என்ன எனவே தெரியாமல் வணங்கிவிட்டு, காலபைரவரைத் தேடிவிட்டுப் பின் அங்குள்ள 1,008 லிங்கங்களைத் தேடினோம். இதெல்லாம் எங்களுக்குச் சொல்லி வழிகாட்ட வேண்டிய வழிகாட்டியும், திரு மனோஹரும் எங்கள் யாருடனும் வரவே இல்லை. பின்னால்தான் தெரிந்தது தரையில் பதிக்கப்பட்டவை நவக்ரஹங்கள் என்றும், ருத்ராபிஷேஹம் குழுவாக வந்தவர்கள் செய்தால் எல்லாரும் உள்ளே போய்த் தரிசித்திருக்கலாம் என்றும். நாங்கள் 24 பேர் இருந்ததுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 2 குழுவாகப் போய்த் தரிசித்திருக்கலாம். கூட்டத்தில் இடிபட்டு, மணிக்கணக்காக நின்றிருக்க வேண்டாமே? எங்களில் ஒருவர் கோபத்துடன் இப்போ நாங்கள் போய் ருத்ராபிஷேஹம் செய்து தரிசிக்கிறோம் என்றதற்கு நேரம் ஆகிவிட்டது என்றும் இன்னும் 2 கோவில்கள் போக வேண்டும் என்றும், கைலை யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மறுபடி ஒருமுறை தரிசனம் செய்விக்கிறோம் என்றும் கூறவே ஒருமாதிரி சமாதானம் ஆகி எல்லாரும் காரில் ஏறி உட்கார்ந்தோம்.

பின் நாங்கள் போனது "பூடா நீல்கண்ட்" என்னும் கோவில். இந்தக் கோவிலில் ஒரு தடாகத்தின் உள்ளே சிவன்/விஷ்ணு படுத்திருக்கிறார். மிகப் பெரிய உருவம். நஞ்சுண்ட கண்டனான ஈசன் நஞ்சை உண்ட அசதியில் மெதுவாக நடந்து கைலை வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள இங்கே படுத்தாராம். படுத்தவர் மஹாவிஷ்ணுவாக மாறி விட்டார் என்கிறார்கள். உள்ளே கிட்டத்தில் போய்ப் பார்க்க எல்லாவற்றையும் வெளியே வைத்துவிட்டுப் போக வேண்டும். உள்ளே போய்ப் படம் எடுக்க முடியாது. சிலர் வெளியேயே நின்று படம் எடுத்தார்கள். சிவன் ரூபத்திலும், விஷ்ணு ரூபத்திலும் ஏககாலத்தில் தோன்றுவதுதான் இவர் தனிச்சிறப்பு. அங்கேயே பூஜை செய்து பிரசாதம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலேயும் நம் இந்தியாவில் உள்ள மாதிரிக் கதைகள். ஆன்மீக நம்பிக்கைகள். சொல்லப் போனால் நேபாளம் ஒரு குட்டி இந்தியாதான். எல்லா வடமாநில நகரங்களைப் போல்தான் இருக்கிறது. பேச்சிலும், எழுத்திலும் இந்தி ஆதிக்கம் நிறையவே இருக்கிறது. நேபாள மொழியை அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும் அதிகம் புழங்குவதி இந்தி மொழிதான். கலாசாரம், நம்பிக்கைகள், கடவுள் பக்தி இவற்றில் எல்லாம் இந்தியத் தன்மையே மிகுந்து இருக்கிறது. எந்தப்பாட்டுப் பாடினாலும், பஜனை செய்தாலும் கடைசியில் ராமரிடத்திலும், சீதையிடத்திலும் வந்து முடிக்கிறார்கள். ராமாயணமும், ராமரும், சீதையும் தான் முதலில். அவர்களைத் துதி செய்யாமல் இருப்பதில்லை. பரமசிவன் பற்றிப் பாட ஆரம்பித்தால் கூட அதில் ராமரும், சீதையும் வெகு அழகாகவும், ஸ்வாதீனமாகவும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். பொதுவாகப் பக்தி நிறைந்த மக்கள். நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையே சுற்றுலாதான். ஆகவே அதற்கு நிறைய முக்கியத் துவம் இருக்கிறது.

Friday, September 29, 2006

33. ஓம் நமச்சிவாயா--4.

இந்தியாவில் காலை 4-30 என்றால் நேபாளத்தில் 4-50 ஆகிறது. அந்த அதிகாலையே விடிய ஆரம்பித்து விடுகிறது. எல்லாரும் சுறுசுறுப்பாக வேலை ஆரம்பிக்கிறார்கள். பெண்களும், ஆண்களும் நன்கு குளித்துத் தலை முழுகிக் கையில் ஒரு தட்டு அல்லது கூடையில் பூக்கள், ஒரு கெண்டியில் தண்ணீர் முதலியன எடுத்துக் கொண்டு அவரவருக்குப் பிடித்த கோவிலுக்குப் போகிறார்கள். பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் இலங்கை மக்கள் வாழ்வைப் பற்றி திரு கல்கி எழுதி இருப்பார். மக்கள் சந்தோஷமாகக் கோவிலுக்கும், விளையாட்டுத் திடல் களுக்கும் சென்றார்கள் என. அது நினைவு வந்தது. ஆகவே நாங்கள் கோயிலுக்குப் போகும்போது மணி 9 ஆகி விட்டதால் கோயிலில் கூட்டம் எல்லாம் இருக்காது என நினைத்தோம். அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேனே, அங்கே எல்லாம் தினமும் தெருவைச் சுத்தம் செய்கிறார்கள். நம் நாட்டில் குறிப்பாகச் சென்னையில் பார்க்க முடியாத காட்சியாகையால் எனக்குச் சற்று வியப்பாகவே இருந்தது.

முதலில் நாங்கள் போன கோவில் குஹேஸ்வரி அம்மன் கோயில். சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் மகளான தாட்சாயணி ஈசனை மணக்கிறாள். தட்சனுக்கு மருமகன் எல்லாம் வல்லவர் என்று அறிய முடியாமல் மாயை மறைக்கிறது. அகங்காரத்தில் இருக்கும் தட்சன் ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறான். அந்த யாகத்தில் எல்லா தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய அவிர்ப் பாகத்தைக் கொடுக்கிறான் தட்சன் ஈசனைத் தவிர. ஈசனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை. யார் பேச்சையும் செவிமடுக்காத தட்சன் யாகத்தை தொடரும்போது அழைப்பில்லாமல் பிறந்தகம் தானேனு நினைத்துக் கொண்டு வருகிறாள் தாட்சாயணி. அவளை மகள் என்றும் மதிக்காமல் அலட்சியம் செய்கிறான் தட்சன். தாட்சாயணி அவனுக்கு எடுத்துச் சொல்லியும் அலட்சியம் செய்கிறான் தட்சன். மனவேதனையுடன் அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் விடுகிறாள் தாட்சாயணி. தன் சக்தியை இழந்த சிவனின் உக்கிரத்தை அடக்க முடியவில்லை. தட்சனை அழித்து விட்டு சதியின் உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டாக்க அது பாரத தேசம் எங்கும் ஒவ்வொரு பாகமும் போய் விழுகிறது. அம்மாதிரி விழுந்த இடங்களை" ஸ்ரீமஹாசக்தி பீடம்" என்று சொல்கிறார்கள். நேபாளத்தில் அம்மாதிரி அன்னையின் ஒரு மார்புப் பகுதி விழுந்த இடம்தான் குஹேஸ்வரி கோவில். நேபாளிகள் இந்தக் கோயிலைக் குயேஸ்வரி மந்திர் என்று அழைக்கிறார்கள்.

பாக்மதி ஆறின் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குத் தான் முதலில் போனோம். ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், சற்று மேலே படிகள் ஏறிக் கோயிலை அடைய வேண்டும். வழியெல்லாம் நம் முன்னோர்களின் தொந்தரவுதான். ஆகவே விலை உயர்ந்த காமிரா, கைப்பை, மற்றும் முக்கியப் பொருட்களைப் பத்திரமாக வைத்துவிட்டுப் போனோம். உள்ளே குகை போன்ற அறைக்குள் போனதும் ஒரு பள்ளத்தில் அருவமாக அன்னை வீற்றிருக்கிறாள். பிண்டி ஸ்வரூபமாக இருக்கும் அந்த அருவுருவம் தான் அன்னையின் மார்பாகக் கருதப்பட்டுப் பூஜைகள், அலங்காரங்கள, நைவேத்யங்கள் முதலியன அதற்குச் செய்யப் படுகின்றன. பூஜை செய்வது எல்லாம் நேபாளப் பெண்களே. அங்கு அம்மனை மனதாரவேண்டி விட்டுப் பின் ஐயனை தரிசிக்கப் பசுபதிநாத் கோவிலுக்குப் போக வண்டிக்கு விரைந்தோம். நேபாளத்தில் முக்கியமான ஆறுகளாகக் கண்டகி நதியும், அதன் கிளை நதியான பாக்மதியும் இருக்கின்றன. பாக்மதி நதி காட்மாண்டு நகரைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஓடுகிறது. தண்ணீர் ஜில்லோ ஜில். குடிக்கப் பயமாக இருந்தது. எனக்கு" ஜில்லுனு ஒரு தண்ணீர் " குடிக்க ஆசைதான். கைப்பை நிறையக் கொண்டு வந்திருந்த மருந்து வகைகள் அந்த ஆசையைத் தடை செய்தது. எல்லாரும் தண்ணீர் குடிக்கப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பசுபதி நாத் கோவிலுக்குப் போகும் வழி எல்லாம் ஒரே ட்ராபிக் ஜாம். டிரைவர் எப்படியோ சாமர்த்தியமாக வண்டியை ஓட்டினார். மேடு என்றால் ஒரே மேஏஏஏஏஏடு. பள்ளம் என்றால் ஒரே பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளளளளம். மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்கும்போது பார்த்தால் பயமாகக் கூட இருந்தது. இன்னும் பயமெல்லாம் இருப்பது அப்போது தெரியாது அல்லவா? பசுபதி நாத் கோவிலில் தோல் சம்மந்தப் பட்ட பொருட்கள் எதுவும் கொண்டு போகத் தடை. ஆகவே அனைவரும் அங்கே எங்கள் ட்ராவல்ஸ் காரர்களுக்குத் தெரிந்த கடையில் ஒரு லாக்கரில் கொண்டு போன பொருட்களை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை நம்பிக்கையான ட்ராவல்ஸ்காரரின் பணியாளரிடம் கொடுத்துவிட்டுப் போனோம். மிகப் பெரிய கோவில். புத்தமதப் பகோடாக்கள் போல் வெளியில் இருந்து தெரிந்தாலும், தஞ்சைக் கோவிலின் நந்த அளவில் உள்ள பெரிய நந்தி பிரமிக்க வைக்கிறது. நேபாள ராஜா 2-வது ராம்ஷா என்பவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் வைக்கப் பட்ட இந்த நந்தி எம்பெருமான் பித்தளையால் ஆனது. நந்தியைக்கடந்து எதிரே பசுபதிநாதரின் மூலஸ்தானம். சுலபமாகக் கோவிலில் தரிசனம் முடிக்கலாம் என்றால் கூட்டமோ கூட்டம். பெரிய வரிசைகளில் பிரதான 4 வாசல்களிலும் உள்ளூர் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அன்று சோமவாரம், சிவனின் உகந்த நாள் என்பதால் இவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொண்டோம். எல்லார் கையிலும் நெய்த்திரிகளால் நிரப்பப் பட்ட பெரிய தட்டுக்கள், மூங்கிலால் அல்லது பித்தளைத் தட்டுக்கள். தீபங்கள் ஏற்றப்பட்டுக் கையில் அதை எடுத்துக் கொண்டு தீச்சட்டி ஏந்துவது மாதிரி மக்கள் கூட்டம் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டு இருந்தது. கூட்டத்தில் எங்கள் குழு பிரிந்து விட்டது. நாங்களும், வயது முதிர்ந்த டாக்டர் தம்பதியும், பங்களூரில் இருந்து வந்திருந்த சங்கரன் என்ற 76 வயது முதியவரும் தனித்து விடப் பட்டோம். மற்றவர் அவரவருக்குப் பிடித்த வாயிலில் நின்றார்கள் என்பதையும் பார்த்தோம்.

Tuesday, September 26, 2006

32. ஓம் நமச்சிவாயா-3

திரு கைலை மனோஹரிடம் முக்கியமான குறைகள் இரண்டு. மொழிப் பிரச்னை. ஹிந்தி சுத்தமாகத் தெரிய வில்லை. ஆங்கிலமும் சுமார்தான். (இவர் எப்படி 8 முறை கைலை யாத்திரை போய் வந்திருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. 8 முறை ஏற்பாடு செய்து அழைத்தும் போய் இருக்கிறார்.) ஆகவே அவர் ஒண்ணு சொல்ல ஏர்போர்ட்காரர்கள் வேறே மாதிரிப் புரிந்து கொள்ளச் சற்று நேரம் குழப்பமான சூழ்நிலை நிலவியது. திடீரென நாங்கள் 12 பேரும் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் நாங்கள் மேலே வருவதை தொலைபேசியில் சொல்லச் சொல்லிவிட்டுப் படை எடுத்தோம். மனோஹரும் உடன் வந்தார். அவர் பக்க விவாதம் குழுவாக வந்திருக்கையில் எல்லாருக்கும் கூப்பிட்டு முத்திரை வைத்திருக்க வேண்டும் என்பது. ஏர்போர்ட் காரர்கள் குழுவில் எத்தனை பேர் என்று தெரியாதபோது முன்னால் போனவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பது. திரு மனோஹர் சொன்னது சரியில்லை என எங்களுக்குத் தெரிய நாங்கள் அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டோம். இந்தப் புதிய நடைமுறை பற்றி மனோஹர் அவர்கள் டெல்லியிலேயோ அல்லது இறங்கும் முன்போ தெரிவித்திருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஒருவழியாக அதிகாரி சமாதானம் ஆகி எங்கள் எல்லாருக்கும் ஸ்டாம்ப் ஒட்டி அனுமதி முத்திரை போட்டுத் தந்தார்.

நேபாளத்தில் உள்ள 'ECO TREK' என்னும் நிறுவனம் நேபாளத்தில் இருந்து திருக்கைலாயம் வரை சென்று திரும்பி வரும் வரை யாத்திரீகர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. திரு மனோஹர் அதன் சென்னை ஏஜெண்ட் மட்டும் தான். நாம் முன்னதாக மனோஹரிடம் 5,000 ரூபாய் முன்பணம் கட்டிப் பதிவு செய்து கொண்டால் அதை வைத்து அவர்கள் காட்மாண்டு சென்று குழுவில் எத்தனை பேர் சேருகிறார்களோ அத்தனை பேருக்கும் குழுவாக விசா ஏற்பாடு செய்கிறார்கள். சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்மாண்டு சென்று அங்கிருந்து கைலை சென்று பின் திரும்பி ரெயில் மூலமே சென்னை திரும்பக் கட்டணம் முன் பதிவையும் சேர்த்துரூ.52,900/-. சென்னையில் இருந்து டெல்லி ரெயிலில் சென்று பின் அங்கிருந்து விமானம் மூலம் காட்மாண்டு சென்று கைலை தரிசனம் முடித்துப் பின் அதே மாதிரி திரும்பி வரக் கட்டணம் ரூ.58,400/-. நாங்கள் டெல்லி வரை சொந்தச் செலவிலும் பின் அங்கிருந்து காட்மாண்டுவிற்கு விமானம் மூலமும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இதை ஏற்று நடத்தும் "எக்கோ ட்ரெக்" காரர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்து எங்களை வரவேற்று ஒரு பஸ்ஸில் எங்களை எல்லாம் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்கள். ஹோட்டல் 3 நட்சத்திர அந்தஸ்து உள்ளது. கணவன், மனைவியராக வந்தவர்களுக்கு ஒரு ரூமும் தனியாக வந்தவர்களுக்கு அவரவர் விரும்பும் நண்பருடன் இரண்டு பேருக்கு ஒரு ரூமுமாக ஏற்பாடு செய்து தந்தார்கள். சாமான்கள் எல்லாம் வந்ததும் எல்லாரும் ரூமுக்குப் போகும்போது திரு மனோஹர் டின்னர் சாப்பிட அழைத்தார். ஏற்கெனவே மணி 11-00P.M. நெருங்கிக் கொண்டிருந்தது. மேலும் விமானத்தில் 9-00P.M.-க்குத் தான் சாப்பிட்டிருந்தோம். ஆகையால் நாங்கள் சாப்பாடு வேண்டாம், பால் மட்டும் போதும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினோம். அவங்க விளம்பரத்தில் பால், ஹார்லிக்ஸ், காபி, டீ, போர்ன்விடா, சாக்லேட் டிரிங்க் என்று எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆகையால் தான் அம்மாதிரி வேண்டுகோள் விடுத்துவிட்டுப் போனோம். அறைக்குப் போய் 1/2 மணி ஆகியும் தண்ணீர் கூட வரவில்லை. என்ன இது என்று அறையைத் திறந்து கண்ணில் எதிர்ப்பட்ட ரூம்பாயிடம் எங்கள் வேண்டுகோளைச் சொன்னோம். அவன் சிரித்து விட்டுப் போனான். என்ன இது? நாம் நல்லாத் தானே ஹிந்தி பேசறோம்? என்று எனக்கு ஆச்சரியம்?

அதற்குள் எதிர் அறைக்கதவு தற்செயலாகத் திறந்து புனே நகரில் இருந்து வந்திருந்த திரு. ராமச்சந்திரன் எதிர்ப்பட்டார். அவரிடம் "சாப்பிட்டீங்களா? நாளை என்ன ப்ரொக்ராம் சொன்னார்கள்?" என்று கேட்டேன். அவர், "காலை 7-30 மணிக்கு காலை உணவுக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். அங்கே அறிவிப்பார்களாம்." என்றார். உடனேயே நான், "பின் காலை காபிக்கு ரூம் செர்வீஸ் உண்டா?" என்று கேட்டேன். உடனேயே அவர்,"தெரியவில்லை. இப்போ நாங்கள் சாப்பாடு வேண்டாம். பால் போதும் என்று சொன்னோம். பால் கொண்டு கொடுத்துவிட்டு பில் கொடுத்தான். பணம் நாங்கள் தான் கொடுத்தோம்." என்றார். உடனேயே என் கணவரிடம் சொல்ல அவர் ரிசப்ஷனுக்கு போன் செய்து எங்கள் விருப்பத்தையும், இன்னும் பால் வராததையும் சொல்ல அவர்கள் பால் தருவதாகவும் உடனேயே பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பால் என்ன ஆயிரம் ரூபாயா இருக்கப் போகிறது? சரி என்றோம். பால் வந்தது. பில்லும் கூட. அதில் எங்கள் சொத்தையே கேட்பார்கள் போல் பாலுக்கு விலை. நேபாளத்தில் இந்திய 500ரூ. 1,000ரூ செல்லாது. 100ரூ தான் செல்லும். 100ரூபாய்களாகக் கொடுத்துவிட்டு மிச்சம் நேபாள ரூபாயில் சில்லறையாகத் தந்ததை வாங்கிக் கொண்டோம். சரி, யு.எஸ்ஸுக்கு போன் செய்தாவது பேசலாம் என்று ரிசப்ஷனை அழைத்துக் கேட்டால் அவன் சொத்தெல்லாம் போதாது. ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட் இருக்கிறதா? என்று கேட்டான். போனே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டுப் படுத்தோம். காலைக் காப்பி வாயிலும் மண். காலை எழுந்து குளித்து முடித்துவிட்டுக் காலை உணவு அளிக்கும் இடம் சென்றோம். ப்ரெட் டோஸ்ட், சாஃப்ட் ப்ரெட், தோசை என்ற பெயரில் ஒரு வஸ்து, சட்னி, சாம்பார் ஆகியவையும் காப்பி,டீ போன்றவையும் காலை உணவு. யாருமே காலைக் காப்பியைப் பற்றிப் பேசவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்றும் கேட்கவில்லை. நாம் மட்டும் எப்படிக் கேட்பது? எல்லாரும் முக்திநாத் போவது பற்றி மட்டும் விசாரித்தோம். ரெயிலில் வருபவர்கள் அன்று மாலை அளவில் வருவதாகவும் எல்லாரும் வந்த பின்னர் கைலை யாத்திரை முடிந்து திரும்ப வரும்போது முக்திநாத் போகலாம் என்றும் மெம்பர்கள் ஜாஸ்தி ஆக ஆகப் பணம் குறையும் என்றும் சொன்னார்கள். இன்று நேபாளத்தில் உள்ள பசுபதி நாத், குஹேஸ்வரி(சக்தி பீடம்) கோயில், பூடா நீல்கண்ட் கோவில் மற்றும் ஸ்வயம்புநாத் கோவில் ஆகியவை செல்ல பஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்லவே எல்லாரும் மறுபடி உற்சாகம் அடைந்து காலை உணவை முடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினோம்.

31.ஓம் நமச்சிவாயா-2

திரு தி.ரா.ச. அவர்கள் என்னுடைய தைரியத்தைப் பாராட்டி இருக்கிறார்.உண்மையில் எனக்கு அதற்குத் தகுதி உண்டா? போகப் போகச் சொல்லுங்கள்.

செப்டெம்பர் 1-ம் தேதி டெல்லி போய்ச் சேர்ந்து அங்கிருந்து
குர்காம்மில் உள்ள மைத்துனன் வீட்டிற்குப் போயாகி விட்டது.
அங்கே நாங்கள் ஒரு மாதமாவது தங்கப் போகிறோம் என நினைத்த என் மாமியாரிடம் என் கணவர் நாங்கள் 3-ம் தேதி விமானத்தில் நேபாள் போவதாய்க் கூறியதும் ஏமாற்றம் அடைந்தார். அப்போதும் எங்கள் முழுப் பயணத்திட்டத்தை
நாங்கள் என் மைத்துனனிடமும் கூறவில்லை. எல்லாரும்
பயப்படுவார்கள் என்பதோடு ஒரு வேளை ஆதரவு தெரிவிக்காமல்
discourage செய்தால் என்ன செய்வது என்ற எண்ணம் தான்.
என் பையனுக்கு முழு விவரமும் தெரிந்திருந்தும் எங்களை
ஆர்வத்தில் இருந்து தடுக்கக்கூடாது என்று பேசாமல் இருந்து
விட்டான். இதனால் என் பெண்ணோ எங்களுடன் சரியாகப்
பேசக்கூட முடியாமல் திணறினாள். எங்களுக்கு அப்போது அது
ஒன்றும் தெரியவில்லை. போவதற்கு வேண்டிய சாமான்கள்
எல்லாம் சென்னையிலே எங்களிடமே இருந்தாலும், trekking shoe, wollen socks, rain coat போன்றவை டெல்லி போய் வாங்கிக் கொண்டு, 3-ம் தேதி மாலை 3-00P.M. அளவில் விமான நிலையம் போனோம்.

எங்களுடன் யார், யார் வருகிறார்கள் என்ற விவரம் ஒன்றும் எங்களுக்குத் தெரியாது. என் கணவர் ஒரே ஒரு முறை "சென்னை, மயிலாப்பூரில் நடுத்தெருவில் உள்ள அன்னபூர்ணா யாத்திரா
சர்வீஸுக்குப் போனதோடு சரி. அப்புறம் அவங்க ஆள் "ஆதி"
என்பவர் வந்து விசாவிற்காக வேண்டிய பாஸ்போர்ட் காப்பி
வாங்கிப் போனார். எல்லாப் பேச்சு வார்த்தையும்தொலைபேசியில்தான். அதுவும் இந்த சேவையை நடத்தும் "கைலை மனோஹர்" அவர்களைப் பார்த்தது கூடக் கிடையாது. தொலைபேசியில் கிடைத்தாலோ ஒரு நிமிடம் பேசுவதற்குள் அவருக்கு வேறு அழைப்பு வந்து விடும். ஆகக்கூடி எந்த விதமான தகவலும் சரியாக இல்லாமல் தான் நாங்கள் போவதற்கு டி.டி. முதற்கொண்டு எடுத்துக் கொண்டு
இங்கே உள்ள மனோஹரின் சேவைக்கு உரிய பணத்தைச்
செக்காகக் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். இதை ஏன்
இவ்வளவு விவரமாக எழுதுகிறேன் என்றால் வேறு யாரும் இனிமேல் இந்த மாதிரி இருக்கக்கூடாது என்பதற்குத் தான்.

ஏர்போர்ட் போனதும் தொலைபேசியில் மனோஹரை அழைத்தோம். உடனேயே வந்து check-in-counter-க்கு அழைத்துப் போனார். அப்போது தான் சக பிரயாணிகளைப் பார்த்தோம். அநேகமாக என் வயதுக்குள் (ஹி ஹி ஹி 15 தான்) ஒரு 4 அல்லது 5 பேர்
இருந்தார்கள். மற்ற எல்லாரும் 60+ தான். ஒரு டாக்டர் அம்மா
மடிப்பாக்கத்தில் இருந்து வந்திருந்தார். 78 வயது. அவர் கணவரும் வயதானவர் தான். வேறு ஒரு பெரியவர் பங்களூரில் இருந்து 76 வயது. ஆனால் திடமாக இருந்தார். இப்படியாக நாங்கள் ஒர் 26 பேர் இருந்தோம். இன்னும் 22 பேருக்கும் அல்லது அதிகமாகச் சென்னையில் இருந்து ரெயில் மார்க்கமாகக் "காட்மாண்டு" வருவதாக மனோஹர் தெரிவித்தார். சென்னையில் இருந்து ரெயில் மார்க்கம் என்றால் சென்னை-கோரக்பூர் வந்து அங்கிருந்து பஸ்ஸில் காட்மாண்டு வரவேண்டும். நேபாள் போவதற்கு விசா எல்லாம் கிடையாது. இந்தியர்கள் தடையின்றிப் போகலாம், வரலாம், நேபாளியர்களும் அப்படியே. ஆனால் தற்சமயம் மாறுபட்ட
அரசியல் சூழ்நிலையால் பாஸ்போர்ட் நம்பரைக் குறித்துக்
கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சோதனை மிக அதிகம். இங்கே இந்தியாவிலும் அதிகமாக இருந்தது.

சோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்து சாமான் எல்லாம்
சரிக்கட்டி (ஆமாம், உண்மையிலேயே சரிக்கட்டினோம். ஒருத்தருக்கு 25 கிலோ தான் அனுமதி) குழுவாகப் போனதால் சிறப்பு அனுமதி பெற்று சாமான்களை அனுப்ப முடிந்தது. விமானப் பயண நேரம் 1-20 நிமிடங்கள் என்று
சொல்கிறார்கள். ஆனால் போய் உட்கார்ந்து அவங்க சாப்பாடு
கொடுத்து சாப்பிட்டு முடிக்கும்போதே வந்து விடுகிறது.
ஒரு வழியாக நேபாளம் வந்து விட்டோம், இரவு 9-30 மணி
இந்திய நேரம். நேபாள நேரம் 20 நிமிஷம் கூட. அங்கே ஆரம்பித்தது ஒரு சிறிய தவறு. நாங்கள் எல்லாரும் நேபாளத்திலேயே அதிக நாள் தங்கப் போவதில்லை.
மறு நாளுக்கு மறு நாள் அதாவது 5-ம் தேதி "மானசரோவர்,
கைலாஷ்" யாத்திரை போக வேண்டும். அது இருப்பதோ
சீனப்பகுதியான திபெத்தில். அதற்கு நேபாளத்தில் இருந்து
அனுமதி வாங்காமல் எப்படிப் போவது? இந்த விவரம் பற்றிய
தெளிவு இல்லாமல் நாங்கள் ஒரு 12 பேர் முன்னால் வந்தவர்கள்
பாஸ்போர்ட்டைக் காட்டி நம்பர் குறிக்கப்பட்டதும் கீழே வந்து
விட்டோம். வந்த பின்னர்தான் திரு மனோஹர் அவர்கள்
பாஸ்போர்ட்டில் entry seal வைக்கவேண்டும் எனக்கூற
நாங்கள் எல்லாரும் மறுபடி மாடிக்குப் போக அனுமதி
கிடைக்கவில்லை. விமானம் ஏறும்போதோ அல்லது
விமானத்தில் இறங்கி வரும்போதோ தான் அங்கே போக
முடியும். என்ன செய்வது?

பி.கு.: ரொம்பவே விவரமாக எழுதுவதின் காரணம் நாங்கள்
செய்த தவறு வேறு யாராலும் செய்யப்படாமல் இருக்க
வேண்டித்தான். போரடித்தால் மன்னிக்கவும்.

Sunday, September 24, 2006

30. ஓம் நமச்சிவாயா

நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்நீங்காதான் தாள் வாழ்க! ******************
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி!
**********************
சின்ன வயசிலே பள்ளிப் பாடத்தில் கைலாஷ்னு ஒரு மலை இருக்கிறதா பூகோளத்தில் படிச்சது தான். அது பற்றி அப்போ
ஒண்ணும் குறிப்பிடத் தகுந்த மாதிரியா தோணியது இல்லை.
அதுக்கு அப்புறம் ஒருமுறை ஆனந்த விகடனில் திரு நம்பியார்
அவர்கள் கைலாய யாத்திரை போய் வந்தது பற்றி எழுதி
இருந்தார். அட்டைப் படத்திலே போட்டுக் கெளரவித்து
இருந்தார்கள். அப்பவும் இது எல்லாம் நாம் போகப் போகிறோம்
என்ற மாதிரியான எண்ணம் எல்லாம் இல்லை. அதன் பிறகு
கொஞ்சம் கொஞ்சமாகக் கைலாய மலை பற்றியும், மானசரோவர்
பற்றியும் அறிய அறிய நாமும் ஒருமுறை போக முடியுமா என்ற
எண்ணம் வந்தது. ஆனால் அது திபெத்தில் இருக்கிறதாலும்,
நடுவில் கொஞ்ச நாள் சீன அரசு யாத்திரீகர்களை
அனுமதிக்காததாலும் இதெல்லாம் நம்மால் முடியாத ஒன்று என்ற
நினப்புத் தான் இருந்து வந்தது. பிறகு அனுமதிக்கு இந்திய அரசு
முயற்சி செய்து யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பி வரும் விஷயம்
தெரிந்ததும் சுத்தமாக நம்மால் முடியாது என்றே இருந்தேன்.

அதுக்கு அப்புறம் என் கணவரின் வேலை நிமித்தமாகவும், வேறு பலகாரணங்களாலும் ஊர் ஊராகச் சுற்ற நேர்ந்த போதும் இந்த
மாதிரி ஒரு நினைப்பு இல்லை. சமீபகாலமாக யாத்திரீகர்கள்
அதிகம் போக ஆரம்பித்ததிலும்,அதைப் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்ததிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆசை துளிர்
விட்டது. ஆனால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளானால்
மறுக்கப் படும் என்ற உண்மைநெஞ்சைக் குடைந்து
கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் தான் என் கணவர் தான்
மட்டும் போய் வருவதற்கு ஆயத்தங்கள்செய்யஆரம்பித்தார்.அப்போது தான்
தெரிந்தது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படாமலேயே
நேபாளம் வழியாகப் போக முடியும் என்று. நேபாளம் போவதற்கு விசாதேவை இல்லை. அங்கிருந்து திபெத் போவதற்குத் தான் தேவை. என்ன செய்வது? இங்கே சென்னை, மயிலாப்பூரில் உள்ள
"அன்னபூர்ணா யாத்திரா" நடத்துபவர்களைப் போய்ப்
பார்த்தார். அவங்க வீட்டிற்கு வந்து பாஸ்போர்ட் காப்பி வாங்க வந்த சமயம் என்னைப் பார்த்து விட்டு, "நீங்க வரலியா?" என்று கேட்க நான் என்னுடைய உடல் நிலையைச் சொன்னேன். அவங்க
உங்களை விட உடல் நிலை மோசமானவர்கள் எல்லாம்
வராங்க! தைரியமா வாங்க! விசா நாங்க குழுவாக வாங்குவதால்
பிரச்னை இல்லை," என்று சொல்லி என்னுடைய பாஸ்போர்ட்
காப்பியும் வாங்கிப் போய் விட்டார்கள். இப்படியாக நான்
போவதும் ஒரு மாதிரியாக உறுதி செய்யப் பட்டது.

ஆனால் விஷயம் முதலில் யாருக்கும் சொல்லவில்லை. எங்களோட பையன், பெண்ணுக்குக் கூட விசா வந்ததும் தான் சொன்னோம்.
அப்போ கூட இங்கே சென்னையில் உள்ள உறவினர்கள் கிட்டேயோ அல்லது என் கணவரின் வயதான அம்மாவிடமோ கூடச் சொல்லவில்லை. டெல்லி போனதும் அவங்க கிட்டே நேபாள்
போகிறோம் என்று மட்டும் தான் சொன்னோம்.முக்திநாத் கோவிலுக்கு என்று நினைத்த அவர்கள் அதுக்கே கவலைப் பட்டார்கள். டெல்லியில் தங்குவதாக இருந்த நான்
திடீரென ஏற்பட்ட மாறுதலால் பயணத்திற்குத் தயாரானேன். ஒரு
விதத்தில் சந்தோஷம் தான். அவரை மட்டும் தனியாக எப்படி
அனுப்புவது? என்று குழப்பமாக இருந்தது தற்சமயம் நானும்
போவதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி
சென்னையில் இருந்து புறப்பட்டுத் தமிழ்நாடு விரைவு வண்டியில்
டெல்லி போனோம்.