எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 29, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகர் மலையில்!

ஹொய்சள மன்னர் திருவண்ணாமலை திரும்பி விட்டார். சுமார் 20 நாட்களுக்கு மேலாக அவர் அழகர்மலையையும் மதுரையைச் சுற்றியும் மாறுவேடத்தில் சுற்றிப் பார்த்திருந்தார். அவர் கண்ட காட்சிகள் அவர் மனதைக் கலங்க அடித்து விட்டது. எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டு விட்டு மக்கள் எங்கெல்லாமோ ஓடி ஒளிந்திருந்தார்கள். கிராமங்களும் நகரங்களும் பாழடைந்து காணப்பட்டன. பாண்டிய ராஜ்ஜியமே சிதறிப் போய்ச் சின்னாபின்னமாகி இருந்தது. அப்போது ஆண்டு கொண்டிருந்த மன்னரைத் தான் காணோம் எனில் அவரது தாயாதிகளும் எங்கோ ஓடி ஒளிந்திருந்தார்கள்.  மதுரையின் தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லை. வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் காணப்பட்டாலும் பெண்களைக் காணவே முடியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டு நிலவறைகளில் தங்கள் செல்வத்தைக் கொண்டு வைத்ததோடு தாங்களும் ஒளிந்து வாழ்ந்தார்கள். பலருக்குச் சூரிய ரச்மியே மறந்து விட்டது. மன்னர் மனம் வெதும்பிப் போனார். இத்தகைய காட்சிகள் அவரைத் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது. கனத்த மனதுடன் திருவண்ணாமலை  திரும்பியவரை ராணி கிருஷ்ணாயி எதிர்கொண்டாள்.

மன்னர் நாட்டு மக்களைப் பற்றி விவரிப்பதைக் கேட்க அவளுக்குப் பொறுமை இல்லை. அரங்கனைப் பற்றியே கேட்டாள். மன்னர் மீண்டும் மீண்டும் மக்கள் சீரழிந்து இருப்பதைச் சொன்ன போதும் அவள் அதைக் காதிலேயே வாங்காமல் அரங்கனைப் பார்த்தீர்களா இல்லையா எனக் கோபத்துடன் மன்னரை வினவினாள். மன்னர் தாம் அழகர் மலை சென்றதையும் அரங்கனைப் பார்த்ததையும் எடுத்துக் கூறினார். அரங்கனைச் செடி, கொடிகளால் ஆன ஒரு தழைப்பந்தலின் கீழ் அமர்த்தி இருப்பதாகவும், அவன் அமர ஒரு பீடம் கூட இல்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார். அப்படியே வனத் தரையில் அரங்கன் அமர்ந்திருப்பதை வர்ணித்தார். "வாகனங்கள் ஏதும் இல்லாமல் திருவாசி இல்லாமல், தோளுக்கினியான் என்னும் அவன் பல்லக்கு இல்லாமல், அர்க்ய பாத்திரங்களோ,தூப தீபத் தட்டுக்களோ, அலங்காரங்களோ இல்லாமல் , பூக்களோ, வாசனைத் திரவியங்களோ இல்லாமல் மணி அடித்து நிவேதனம் இல்லாமல்  கிடைத்ததைக் கிடைத்த நேரத்துக்கு உண்டு கொண்டு அரங்கன் வாழ்ந்து வருகிறான். அங்குள்ள ஓர் கிணற்று நீர் தான் அவனுக்கு அபிஷேகம்! அது தான் அவன் வாசனைத் திரவியம்!  அரங்கத்துக்கே ராஜாவாக இருந்த அரங்கராஜன் இப்போது ஏழையிலும் ஏழை பரம ஏழை!" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.  அரங்கனுக்கு உயிர் கொடுத்த அந்தக் கிணறு இப்போதும் இருப்பதாகத் தெரிய வருகிறது.

இதைக் கேட்ட கிருஷ்ணாயி அரங்கனைக் காப்பாற்றும் வழி என்ன என யோசித்தீர்களா என மன்னரைக் கேட்டாள். மன்னர் தாம் யோசித்ததாகவும் 200 வீரர்களை அனுப்பி வைத்தாலும் தில்லிக்கோ தில்லி வீரர்களுக்கோ தெரியாமல் அரங்கனைக் காப்பாற்றும் விதம் தமக்குத் தெரியவில்லை என்றும் சொன்னார். நாம் செய்யப் போகும் காரியத்தைப் பற்றித் தெரிந்தால் தில்லித் தளபதியைச் சீண்டி விட்டாற்போல் ஆகும் எனத் தாம் பயப்படுவதையும் சொன்னார். ராணியும் யோசித்தாள். பின்னர் மன்னனிடம் தனக்கு ஓர் வழி புலப்பட்டிருப்பதாய்க் கூறினாள். மன்னர் அவளை விசித்திரமாய்ப் பார்த்தார். ஆனால் கிருஷ்ணாயி லட்சியம் செய்யவில்லை.

மன்னரிடம் அவள் மகாராணி கன்யாகுமரிக்குப் புனித யாத்திரை போவதாக அறிவிக்கச் சொன்னாள். மூடு பல்லக்குகளில் யாத்திரை கோஷ்டியைப் பிரயாணப்பட வைக்க வேண்டும் என்றும் சொன்னாள். சில பல்லக்குகள் மட்டும் பெண்களால் நிறைந்திருந்தால் போதும் எனவும் பல பல்லக்குகள் வெறுமையாக இருக்கட்டும் என்றும் கூறினாள். வீரர்களை எப்படி அனுப்புவது என்ற மன்னரின் கேள்விக்கு அவள் பல்லக்குகளின் முன்னும், பின்னும் காவலாக 50 வீரர்களை அனுப்பி வைத்துவிட்டு மற்றவர்களை மறைந்து இருந்து கொண்டு வரும்படி பணிக்க வேண்டும் என்றாள். அது எவ்வாறு முடியும் எனக் கேட்ட மன்னரிடம் பல்லக்குத் தூக்கிகளுக்குப் பதிலாக வீரர்களைப்பல்லக்குத் தூக்கிகளாக வேஷம் தரிக்கச் செய்ய வேண்டும். அவசியம் நேர்ந்தால் அவர்கள் சண்டையிட முடியுமே என்ற யோசனையைத் தெரிவித்தாள். மன்னர் மனம் கலங்கினார். கிருஷ்ணாயியை அப்படி எல்லாம் அனுப்பி வைக்கத் தம்மால் இயலாது எனத் தெரிவித்தார். அவளோ தானும் போக இஷ்டப்படவில்லை என்றாள்.

Wednesday, June 27, 2018

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! தொடர்ச்சி!

ராணி கிருஷ்ணாயி சாமர்த்தியம் உள்ளவள். எடுத்த எடுப்பில் மன்னரிடம் அவர் மனதுக்கு உகந்த பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினாள். கடைசியில் தான் அரங்கனைப் பற்றிப் பேச்சு எடுத்தாள். வீரர்களைக் குலசேகரனுக்கு அளிக்காதது பற்றிக் கேட்டதுக்கு மன்னர் அது இயலாத காரியம் என்றார். பெரும்பாலான படை வீரர்கள் வடக்கே இருப்பதால் இங்கே இருக்கும் கொஞ்சம் படையிலும் இருநூறு வீரர்களைக் கொடுப்பது சாத்தியமே அல்ல எனத் தெளிவு செய்தார். கிருஷ்ணாயி அப்போது முகத்தில் ஓர் செல்லச் சிணுங்கலைக் கொண்டு வந்தாள். அரசன் கைகளைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு விரலாக மெல்ல நீவி விட்டாள். தன் ஸ்பரிசத்தில் மன்னர் மனம் மகிழ்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பின்னர் இது உங்களுக்கு அசாத்தியமான காரியம் அல்லவே என்று பெருமை அடித்துக் கொள்வது போல் மன்னர் மனம் மகிழச் சொன்னாள். மன்னருக்குத் தன் திறமையை ராணி பாராட்டுகிறாள் என்று உள்ளூர உற்சாகம். ஆனால் அதற்காக இருக்கும் சொற்ப வீரர்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியுமா? அதோடு அவர் தன்னிடம்  இருக்கும் ஐயாயிரம் வீரர்கள் இந்தத் திருவண்ணாமலையைக் காப்பதற்கே போதாது என்பதால் சாமானிய மக்களிடம் கூட வாட் பயிற்சி எடுத்துக் கொண்டு கையில் வாளும் வேலும் வைத்திருக்கும்படி கட்டளை இட்டிருந்தார். அதை இப்போது ராணிக்கு நினைவூட்டினார்.

அந்த விஷயம் பெரும்பாலோருக்குத் தெரியாது. ரகசியமானது. எல்லோரும் நிறைய வீரர்கள் வீர வல்லாளரிடம் இருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். இப்போது அதை மன்னர் சுட்டிக் காட்டவும் கிருஷ்ணாயிக்கு எங்கிருந்தோ கண்ணீர் பெருகியது. மன்னருடன் வாக்குவாதம் செய்தாள். கடைசியில் வாதம் முற்றிப் போகவே ராணி கிருஷ்ணாயி அழுது கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்து உப்பரிகையில் போய் நின்று கொண்டாள். அவள் பின்னாலேயே சென்ற மன்னர் அவளைச் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் ராணி மசியவே இல்லை. தான் துளுவ நாட்டு அரசகுமாரியாக இருந்தும் அவரை மணந்து கொண்டு திருவண்ணாமலைக்கு வந்ததையும் தன் நாட்டையும் அவர் நாட்டுடன் இணைத்து விட்டதையும் சுட்டிக் காட்டினாள். தன்னால் தான் இந்த ஹொய்சள ராஜ்ஜியம் மேற்குக்கடற்கரை வரை விரிந்து பரந்து கிடப்பதாகவும் சொன்னாள். இத்தனை செய்தும் மன்னர் அவளுக்காக எதையுமே செய்யவில்லை என்றும் சின்ன ஆசையான இதைக் கூட நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக் காட்டி விட்டு மீண்டும் விம்மினாள்.

மன்னர் அவளை எப்படி எல்லாமோ சமாதானம் செய்தும் அவள் மனம் மாறவில்லை. தான் நினைத்த காரியத்தை மன்னர் நிறைவேற்றிக் கொடுக்காதவரை அவருக்குத் தான் மசியப் போவதில்லை என உள்ளூர உறுதி பூண்டிருந்தாள் அவள். ஆகவே மேலும் சொன்னாள். வீர வல்லாளரைத் துளுவ நாட்டு அரசகுமாரி மணந்ததன் மூலம் துளுவ நாட்டுக்கு என ஒரு வாரிசு பிறப்பான் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்ததாகவும் இன்று வரை அது நடக்கவே இல்லை என்றும் சொன்னாள். ஒரு ஆண் குழந்தையை, நாட்டின் வாரிசை வேண்டித் தான்  தீர்த்த யாத்திரைகளும் விரதங்களும் மேற்கொண்டு  படும் கஷ்டத்தைத் தெரிவித்தாள். அவள் மனம் இதனால் படும் பாட்டையும், குழந்தை இல்லையே என்ற அவள் ஏக்கத்தையும் மன்னரிடம் விவரித்தாள். அதோடு இப்போது அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுவதாகவும் அது அவளுக்குக் குழந்தையே பிறக்காததின் காரணம் ஏதோ தெய்வக் குற்றம் தான் என்றும் சொல்லிவிட்டு விம்மி விம்மி அழுதாள்.

மன்னர் திகைத்துப் போனார். எந்த தெய்வத்தின் குற்றம் எனக் கேட்க, அரங்கனின் குற்றம் தான் என்றாள் கிருஷ்ணாயி. மேலும் சொன்னாள். "பதினோரு வருடங்களுக்கு முன்னர் படை எடுத்து வந்த மாலிக் காபூருக்குத் தமிழகம்  செல்ல வழி காட்டியது ஹொய்சள ராஜாவான வீர வல்லாளர் தானே என்றும் குற்றம் சுமத்தினாள். மன்னர் தான் தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒத்துக் கொண்டார். அவர்கள் அப்போது அரங்க நகருக்குள் நுழைந்ததும் அல்லாமல் அரங்கனைத் தூக்கிக் கொண்டு தில்லிக்கே சென்றதையும் சுட்டிக் காட்டினாள் ராணி. அரங்க நகர்வாசிகள் ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து தில்லிக்கே சென்று அரங்கனைத் தந்திரமாகத் திரும்பிக் கொண்டு வந்தனர். அப்போதும் வல்லாளர் ஏதும் உதவவில்லை.  இப்போது இரண்டாம் முறையாக தில்லி வீரர்கள் தாக்கியதில் அரங்கன் இருப்பதற்கு இடமே இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து இப்போது அழகர் மலையில் ஒளிந்து  இருப்பதாகச் சொல்கின்றனர். அரங்கத்தில் இருந்தவரையும்  அவருக்கு ஆறு கால பூஜைகள் நடந்திருக்கின்றன. இப்போது ஒரு காலம் செய்வதற்கே  அரங்கனின் விசுவாசிகள் கஷ்டப்படுகின்றனர்.  ஒரு நாளைக்கு ஒரு தரம் கூட அமுது படியும் செய்ய முடியவில்லை. காட்டுக் கனிகளை அரங்கனுக்குப் படைத்து வருகின்றனர்.   இதற்காகத் தானே அரங்க நகர் வாசிகள் உங்களை உதவி கேட்டிருக்கின்றனர்."

"நீங்கள் அதை எப்படி நிராகரிக்க முடியும்? முதல் முறை அரங்கனைத் தூக்கிச் செல்ல வழிகாட்டிய நீங்கள் இப்போது அரங்கனை ஊர் ஊராகச் சுற்ற வைத்ததோடல்லாமல் அவனைப் பட்டினியும் போட்டு விட்டீர்கள். அரங்கனை இரு முறை அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்தக் காரணத்தால் தான் நான் இன்னும் மலடியாகவே இருக்கிறேனோ? அரங்கா! இது என்ன சோதனை!" என்றவள் மன்னனைக் கம்பீரமாகப்பார்த்து, "அரசே! எனக்கு விரைவில் மகப்பேறு கிட்டவில்லை எனில் விரைவில் துளுவ நாடு ஹொய்சளத்திடம் இருந்து பிரிந்து தனி நாடாகும்!" என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்று மன்னர் அழைப்பதையும் லட்சியம் செய்யாமல் அறைக் கதவைச் சார்த்தித் தாளிட்டுக் கொண்டாள்.

மன்னர் திகைத்துப் போனார். யோசனையில் ஆழ்ந்தார். இரவு முழுவதும் தூங்காமல் யோசனையில் ஆழ்ந்தவர் விடிவதற்குள்ளாக ஓர் முடிவு எடுத்து அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றும் தீர்மானித்தார். காலை எழுந்ததும் தன் பிரதானிகளை அழைத்து "மன்னர் துவாரசமுத்திரம்  போகிறார்!" என்று ஊர் முழுதும் முரசு கொட்டி அறிவிக்கச் செய்தார். பின்னர் குலசேகரனையும் அவனோடு வந்த அழகிய நம்பி, குறளன் ஆகியோரையும் அரண்மனைக்கு வரவழைத்துத் தான் உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்பதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நாட்டின் தொல்லைகளால் மனம் குழம்பி இருப்பதாகவும் அவற்றைத் தீர்க்க வேண்டி அரங்கனிடம் முறையிடப் போவதாயும் தன்னை அழகர் மலைக்கு அரங்கனைக் காண அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படியே அன்றிரவு யாத்திரிகர்களைப் போல் வேஷம் தரித்து அவர்கள் நால்வரும் அழகர் மலை நோக்கிச் சென்றார்கள். 

Monday, June 25, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுதைச் சிற்பங்கள்!

  à®šà¯à®¤à¯ˆà®šà¯ சிற்பங்கள் க்கான பட முடிவு


    à®šà¯à®¤à¯ˆà®šà¯ சிற்பங்கள் க்கான பட முடிவு

 படங்களுக்கு நன்றி விக்கிபீடியா

சுதைச் சிற்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு மேலாகவே தமிழகக் கோயில்களில் பயன்படுத்தப்பட்டன. மகேந்திர பல்லவன் காலம் வரையும் கருவறையில் சுதைச் சிற்பங்களே காணப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டான பல்லவன் காலத்திலே கட்டப்பட்ட குடவரைக் கோயில்களிலும் சுதைச் சிற்பங்களே இடம்பெற்றிருந்ததாகத் தெரிய வருகிறது. இது சுண்ணாம்பு, மரக்குச்சிகளை வைத்துச் செய்யப்பட்டது. காலம் மாற மாற சிமென்டின் பயன்பாடு அதிகரிக்கவும் சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு செய்யப்படுகிறது.  மதுரைக்கோயில் கோபுரங்களில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நீண்ட காலமாகக் கருவ
றை மூர்த்தங்களில் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் பெரிய பெருமாள் சுதையால் ஆனவர். ஒரு சிலர் கல்லால் வடிக்கப்பட்டு மேற்புறம் மட்டும் சுதையைப் போன்று தோற்றமளிக்கும் நிலையிலே ஒரு வகைக்கலவைப் பொருளால் பூசப்பட்டது என்கின்றனர். ஆனால் இதற்கான ஆதாரம் எவரும் காட்டவில்லை. ரங்கநாதருக்கு அபிஷேஹம் கிடையாது. தைலக்காப்பே சார்த்துவார்கள். இதைத் தவிரவும் சமயபுரம் மாரியம்மன், அழகர் கோயில் பெருமாள், சீர்காழிக் கோயில் மற்றும் மதுரைக் கூடலழகர் கோயில் பெருமாள் ஆகியோர் சுதையினால் ஆன மூலவர்களே. விமானங்கள், கோபுரங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் சுதைச் சிற்பங்களுக்கு வண்ணம் பூசப்பட்டுக் காட்சி அளிக்கும்.

காஞ்சிபுரத்தில் சங்கரமடத்துக்கு அருகிலுள்ள பாண்டவ தூதரான பெருமாள் கோயிலில் உள்ள மூலவர் விஸ்வரூபக் காட்சி தரும் கோலத்தில் 24 அடி உயரம், 14 அடி அகலத்தில் காட்சி தருகிறார். இவரும் சுதையால் ஆனவரே! தன்னை அவமானம் செய்த கௌரவத் தலைவன் ஆன துரியோதனனுக்குக் கண்ணன் காட்சி கொடுத்த விஸ்வரூபக் கோலம் இது எனச்சொல்லுகின்றனர். அமர்ந்த திருக்கோலம்.  சுதைச் சிற்பம் செய்ய கெட்டியான மூங்கில் குச்சிகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்துச் செய்ய வேண்டிய உருவத்தின் உள் கட்டமைப்பை முதலில் உருவாக்கிவிட்டு அரைத்த சுண்ணாம்பு, தேன், மூலிகைச்சாறுகள்,  சேர்த்துப் பிசைந்து கூழாக்கிக்கொண்டு மூங்கில் குச்சிகள் மேல் கெட்டியாகப் பூசி இதை உருவாக்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்தச் சிற்பத்திலேயே இறைவன் உடுத்தி இருக்கும் உடையான பஞ்சகச்சத்தின் ஒவ்வொரு மடிப்பும் மிகுந்த கலை நயத்துடன் இம்மாதிரி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.  இது எப்போது உருவானது என்ற காலத்தைக்கணக்கிடுவது இயலாததாக இருக்கிறது.  மன்னர்கள் யாரும் இந்தக் கோயிலுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்ததாகத் தெரியவில்லை எனினும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இது புதுப்பிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் கல்வெட்டாகக் காண முடிகிறது. இந்தப் பெருமாளுக்குத் தைலக்காப்பிற்கான சாம்பிராணித் தைலம் ஒரு முறைக்கு சுமார் 20 இல் இருந்து 25 கிலோ வரை தேவைப்படுகிறது. காஞ்சிபுரத்தின் மற்றக் கோயில்களின் வருமானத்தில் கால் பங்கு கூட இந்தக் கோயிலுக்கு இல்லாத நிலையில் மிகவும் சிரமத்தின் பேரிலேயே கோயில் பட்டாசாரியார்கள் செய்து வருகின்றனர்.

ஶ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆகிய பெருமாள்களைப் போலவே மதுரை அழகர் கோயிலின் சுந்தரராஜப் பெருமாளும் சுதையால் ஆன மூலவரே!  பரிபாடல், சிலப்பதிகாரம் போன்றவற்றில் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கும் அழகர் கோயில் பெருமாள் இரு தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கட்டுடலுடன் காண்போரைக் கவரும் வண்ணம் அழகாகக் காட்சி அளிக்கும் இவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையே தைலக்காப்புச் சார்த்தப்படுகிறது.  கீழே நின்ற திருக்கோலத்தில் மூலவராய்க் காணப்படும் பெருமாளைப் போலவே அடுத்தடுத்த அடுக்குகளில் இருந்த, கிடந்த நிலையில் காணப்படும் பெருமாள் திருவுருவங்களும் சுதையால் ஆனவையே.  மேலே உள்ள அடுக்குகளில் காணப்படும் பெருமாளுக்கு வண்ணம் தீட்டப்பட்டிருக்கும். கீழே மூலவருக்கு மட்டுமே மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு!

இதே போல சமயபுரத்தின் மாரியம்மனும் சுதையினால் திருவுருவமே! தமிழ்நாட்டின் பெரும்பாலான குலதெய்வ அம்மன் திருவுருவங்கள் சுதையினாலேயே அமைக்கப்பட்டுள்ளன. சீர்காழி சிவன் கோயிலில் கீழே கருவறையில் நாம் பார்க்கும் பிரம்மபுரீஸ்வரர் லிங்க அமைப்புக்கொண்டவர். ஆனால் முதல் தளத்தில் உள்ள தோணியப்பர் குரு அமைப்பில் உள்ளவர். மேலே உள்ள தளத்தின் சட்டைநாதர் சங்கம அமைப்புக் கொண்டது. இவர் சுதையுருவத்தில் காணப்படுகிறார்.  சட்டைநாதரை மூங்கில் பட்டைகளாலும்  சுண்ணாம்புக்கலவைகளாலுமே அமைக்கப்பட்டிருக்கிறார். இவருக்கும் அபிஷேஹம்கிடையாது. புனுகு சார்த்துவதே வழக்கம். இவர் இருக்கும் தளத்துக்குச் செல்லும்போது வாசனைப் பொருட்களைப் பூசிக் கொண்டோ பெண்கள் பூ வைத்துக் கொண்டோ செல்லுவதில்லை.

இன்னிக்கு அரங்கன் அருள் இம்மாதிரிச் சுதைச் சிற்பங்கள் பற்றிப் பார்ப்பதில் கழிந்து விட்டது. நாளை குலசேகரனையும், வீர வல்லாளரையும் கிருஷ்ணாயி எவ்விதமெல்லாம் ஆட்டி வைக்கப் போகிறாள் என்பதைக் காண்போம். 

Saturday, June 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஜேஷ்டாபிஷேஹம்!

அடுத்த வாரம் ஶ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேஹம் நடைபெறும்.
சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால் வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம் செய்யப்படும். அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித் திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள். இது நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும். அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள் சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும் சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத் தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில் நடந்த பின்னர் நடைபெறும். அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம். ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு வரையில் என்ற கணக்கில் இருந்து வரும். பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில் காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள். ஒரு பட்டுப்புடவையில் மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின் மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள்.

இந்த ஜேஷ்டாபிஷேஹம் ரங்கநாயகித் தாயாருக்கும் தனியாக ஒரு நாள் நடைபெறும். அதோடு ஶ்ரீரங்கத்தின் சுற்று வட்டாரப் பெருமாள் கோயில்களிலும் நடைபெறும். அநேகமாகப்பள்ளி கொண்ட பெருமாள் இருக்கும் கோயில்களில் எல்லாம் நடைபெறும் என எண்ணுகிறேன். இந்த வருஷம் இங்கே ஶ்ரீரங்கத்தில் அடுத்த வாரம் ஜூன் 27 ஆம் தேதி ஜேஷ்டாபிஷேஹம் எனப் பஞ்சாங்கத்தில் போட்டிருந்தது. ஆனால் கோயிலில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வரவில்லை. பெரிய ரங்குவின் திருவடியை மூடுவதற்கு முன்னர் போய்ப் பார்க்கணும்னு விருப்பம். ஆனால் அந்தப் படிகளில் ஏறித் தான் திரும்பி வரணும்னு நினைக்கும்போது கவலையாயும், பயமாயும் இருக்கு! பார்ப்போம். இது குறித்த தகவல்கள் போயிட்டு வந்தால் பகிர்கிறேன்.

நிறையப் பேர் படிச்சாலும் யாரும் கருத்துச் சொல்லுவது இல்லை. சொல்லும் ஒரு சிலரும் வந்ததுக்கான அடையாளம் வைத்துவிட்டு (பால் கணக்குக்கு வைக்கும் பொட்டுப் போல க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) போகின்றனர். போகட்டும், அடுத்து நம்ம குலசேகரனைப் பார்க்கப் போறோமா அல்லது அழகிய மணவாளர் என்னும் பெயரில் இருக்கும் அரங்கன் ஒளிந்து வாழும் அழகர்மலைக்குப் போகப் போறோமா! பார்க்கலாம்.
*********************************************************************************

இந்தச் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தின் தென்னாடு முழுவதும் ஒரே களேபரமாக இருந்தது. ஆங்காங்கே தில்லித் துருக்கர்கள் படையெடுப்புக்களால் திராவிடத்தின் ராஜ்ஜியங்கள் வாரிசு இல்லாமலும், துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டும் அடிமை வாழ்வு வாழ வேண்டி இருந்தது. எங்கெங்கும் கோயில்கள் உடைப்பும், கோயிலின் செல்வங்களைத் துருக்கர்கள் எடுத்துச் செல்லுவதுமாக இருந்தமையால் எங்கும் ஒரு வகை பீதி நிலவி வந்தது. அவரவர் தங்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ளுவதையே பெரிதாக நினைக்கும்படி இருந்தது. ஆகவே எந்த நாடும் அரசருக்குக் கீழ் இல்லை. படைகளும் இல்லை. இருந்த சொற்ப வீரர்களும் ஆங்காங்கே சிதறிப் போய்விட்டார்கள். இந்நிலையில் தான் குலசேகரன் ஹொய்சள நாட்டு வீர வல்லாளரிடம் வீரர்களைக் கொடுத்து உதவும்படி கேட்டிருந்தான். வீர வல்லாளரிடம் படை இருந்தாலும் அவருக்குத் தெற்கே இருந்த பெரும் பகைவரான தில்லி வீரர்களிடம் கப்பம் கட்டுவதாகச் சமரசம் செய்து கொண்டிருந்தார். ஆனால் வடக்கே உள்ள தெலுங்கு நாடு, கம்பிலி நாடு ஆகியவற்றில் இருந்து அவருக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. அவ்வப்போது அவர்களை அடக்கி வைக்க அவருடைய வீரர்கள் போராடி வந்தனர். ஹொய்சள நாட்டு மன்னரின் கவனம் முழுவதுமே வடக்கே இருந்தது. இந்நிலையில் அவரால் எவ்வாறு குலசேகரனுக்கு வீரர்களைக் கொடுத்து உதவ முடியும்? குலசேகரனுக்கு மறுப்புச் சொன்ன அன்று, குலசேகரன் ராணியைக் கண்டு பேசிய அன்று, ராணி கிருஷ்ணாயிக்குக் குலசேகரன் சத்தியம் செய்து கொடுத்த அன்று இரவு மன்னர் அந்தப்புரம் வந்து சேர்ந்தார். 

Friday, June 15, 2018

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியும் என யோசித்தான். அரசரிடம் தானே கேட்க முடியும் என்ற குலசேகரனிடம் இந்த ஹொய்சள ராஜ்ஜியத்தில் அரசருக்கு இணையாக அவளுக்கும் அதிகாரம் உண்டு என்றும் தன்னிடமும் கேட்கலாம் என்றும் கிருஷ்ணாயி கூறவே குலசேகரன் உடனே ராணியிடம் இருநூறு வீரர்களைக் கொடுத்து உதவும்படி கேட்டான். செய்வதாக உறுதி கூறிய ராணியிடம் அப்போதும் குலசேகரனுக்கு நம்பிக்கை வரவில்லை. அப்போது அவனிடம் தான் செய்யும் உதவிக்கு ஒரு நிபந்தனை உண்டென ராணி கிருஷ்ணாயி தெரிவித்தாள். என்ன நிபந்தனை எனக் கேட்டவனிடம் சாதாரணமானது தான் என்றாள் கிருஷ்ணாயி.

குலசேகரன் அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அவனிடம் கிருஷ்ணாயி, "அரங்கனைத் தெற்கே கொண்டு போய்விட்ட பின்னர் குலசேகரன் மட்டும் திருவண்ணாமலைக்குத் திரும்ப வர வேண்டும்! அது மட்டும் போதாது. குலசேகரன் ஒரு மாதம் அங்கே தங்கி இருக்கவும் வேண்டும்." என்றாள் ராணி கிருஷ்ணாயி. குலசேகரனுக்கோ அரங்கனை விட்டும் அவன் ஊர்வலத்தை விட்டும் எப்படிப் பிரிவது என்னும் கவலை மேலிட்டது. அதற்குக் கிருஷ்ணாயி இப்போதே அவன் அரங்கனை விட்டுப் பிரிந்து தானே இருக்கிறான். அதுவும் பல மாதங்கள் ஆகி விட்டனவே என்று கேட்டாள். அவள் இப்படிக் கேட்டதால் பதில் சொல்ல முடியாத குலசேகரன்  ஆனால் இங்கே வந்து ஏன் இருக்க வேண்டும் என வினவத் தான் அதை விரும்புவதாகக் கிருஷ்ணாயி அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கூறினாள்.குலசேகரனுக்கு பதில் சொல்ல வாய் எழவில்லை.

ராணி கிருஷ்ணாயி குலசேகரனைப் பார்த்து அவனுக்கு விருப்பம் இல்லை எனில் விட்டு விடுமாறு கூறினாள். அவன் ஒத்துக்கொண்டால் மட்டுமே தன்னால் உதவ முடியும் எனச் சொன்ன அவள் அவனுக்கு விருப்பமில்லை எனில் அதற்கு மேலும் தன்னால் உதவி செய்ய முடியாது எனவும் கூறினாள்.  அவள் அதோடு நிறுத்தாமல் அப்படி ஒரு வேளை அரசருக்கு மனம் மாறி உதவி செய்யப் போவதாய்த் தெரிவித்தால் தான் அதைத் தடுத்து விடுவேன் எனவும் ஆத்திரத்துடன் கூறினாள். அப்போது அவள் கண்கள் நெருப்பிலிட்ட ஜ்வாலையைப் போல் ஒளி வீசித் திகழ்ந்தன. குலசேகரன் யோசனையில் ஆழ்ந்தான். ராணி கோபத்துடன் திரும்பிப் போக ஆரம்பித்தாள். குலசேகரன் இவ்வளவு நேரம் யோசனையில் ஆழ்ந்தவன் அவளை அழைத்தான். திரும்பிப் பார்த்த ராணியிடம் தனக்குச் சம்மதம் எனத் தெரிவித்தான். இப்போது ராணி ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

மிகவும் தீவிரமான முகபாவத்துடன் அவன் பக்கம் திரும்பியவள் அவனைப் பார்த்துத் திருவண்ணாமலையில் தங்கினால் மட்டும் போதாது என்றும் அவள் அழைக்கும்போதெல்லாம் அரண்மனை அந்தப்புரத்துக்கு வர வேண்டும் என்றும் சொன்னாள். குலசேகரனுக்கு இப்போது உண்மையாகவே தூக்கி வாரிப் போட்டது. "மகாராணி, மகாராணி, நான் ஏன் இங்கே வர வேண்டும்! அது அவசியமும் இல்லை, நல்லதும் இல்லையே!" என்று பணிவுடன் சொன்னான். ஆனால் ராணி மிகக் கடுமையாக அவனைப் பார்த்தாள். "வீரரே! இது என் விருப்பம். அதை நீர் மீற முடியாது! இதற்கு நீர் இசைந்தால் நான் இதோ இப்போதே ஆணை இடுகிறேன். இருநூறு  வீரர்கள் உம்முடன் வருவார்கள். இல்லை எனில் நீங்கள் இங்கிருந்து செல்லலாம்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தாள்.

குலசேகரன் திடுக்கிட்டுப் போனான். அவளை அழைத்தான்! அவள் நின்றாள். ஆனால் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. குலசேகரன் தான் சம்மதிப்பதாகக் கூறவும் திரும்பினாள் ராணி. அவனை நெருங்கி வந்து, " அந்த அரங்கன் சாட்சியாகச் சம்மதத்தைத் தெரிவியுங்கள் வீரரே! "என்றாள். குலசேகரனும் அவ்வாறே அரங்கன் சாட்சியாகச் சம்மதம் கூறினான். அரங்கன் மேல் சத்தியமும் செய்து கொடுத்தான். உடனே முகம் மலர்ந்த அரசி அவனுக்குப் பரிசில்களாக விலை உயர்ந்த ஆபரணங்களையும் பொன் நாணயங்களையும் கொடுத்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்பினான் குலசேகரன். யோசனையுடன் நடந்தவனை அபிலாஷினி "வீரரே!" என அழைக்கத் தடுமாறிய குலசேகரன் திரும்பிப் பார்க்கத் தூண் ஓரத்தில் ஹேமலேகா நின்று கொண்டு அவனையே பார்த்த வண்ணம் இருப்பதைக் கண்டு கலங்கிப் போனான். ஆனால் உள்ளிருந்து அரசி அவனைக் கவனித்துக் கொண்டிருப்பதால் ஹேமலேகாவிடம் பேச வேண்டும் என்னும் ஆவலை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்து சோகமாகப் புன்னகைத்து விட்டு வெளியேறினான்.



Wednesday, June 13, 2018

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

கோபமாக ராணியின் அந்தப்புரத்துக்குள் நுழைந்த குலசேகரன் முன்னால் ராணி எதிர்ப்படவே அவளைப் பார்த்து, "எதற்காக என்னை அழைத்தீர்கள்?" எனக் கோபத்துடன் வினவினான். ராணியோ சாவகாசமாக அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்த வண்ணம் கொஞ்சம் யோசனையுடனே அவனைப் பார்த்தாள். அவ்வாறு அவள் பார்ப்பது குலசேகரனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. தவிப்பாக இருந்தது. ராணியோ என்ன கோபம் அரங்கமாநகரத்து வீரருக்கு என விளையாட்டாகக் கேட்டாள். அவன் முன்னால் வந்து அவனை நெருங்கி நின்றாள். அவள் மேனியிலிருந்து எழுந்த சுகந்தமான மணம் குலசேகரன் மனதையும் புத்தியையும் மழுங்கடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. அவளோ அசராமல் மீண்டும் கோபத்துக்கான காரணம் என்னவோ என அவனைப் பார்த்துக் கொஞ்சும் குரலில் கேட்டாள்.
குலசேகரன் பதிலே சொல்லாமல் நிற்க அவள் அவன் கோபத்துக்குக் காரணம் அவன் ஏமாந்தது தான் என்று சொல்லி அவனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தாள். கேலி செய்தாள்.குலசேகரனின் கோபம் அதிகம் ஆனது.  அவன் உறுமிய வண்ணம் ஏமாந்தது அந்த அரங்கன் தான் என்றும் தான் ஏமாறவில்லை என்றும் சொன்னான்.

அதைக் கேட்ட ராணி, "அரங்கனா? யார் அவன்? அந்த உலோக அரங்கனா? அவனையா சொல்கிறீர்கள்?" என ஏளனமாய்க் கேட்டாள். மேலும் அவர் எப்படி ஏமாந்தாரோ என்னும் கேள்வியையும் எழுப்பினாள். கொதித்துப் போன குலசேகரன், இங்கே இருந்து எந்த உதவியும் கிட்டாது என்பது முன்னரே தெரிந்திருந்தால் தான் இங்கே வந்திருக்கவே மாட்டேன் எனச் சொன்னான். வந்ததோடு அல்லாமல் அவர்கள் உதவியை எதிர்பார்த்தே அவளுக்குக் குற்றேவல் புரிந்ததாகவும் இப்படிக் கைவிடப் படுவோம் எனத் தெரிந்தால் எந்த ஊழியமும் செய்திருக்க மாட்டேன் எனவும் சொன்னான். "அரங்கனுக்குச் சேவை செய்ய வேண்டிய நான் ஒரு ராணிக்குச் சேவை செய்ய நேரிட்டது! எதற்காக! எல்லாம் அந்த அரங்கனை எப்படியேனும் காப்பாற்றலாம் என்பதற்காகவே! ஆனால் அது நடக்கவில்லை! வருகிறேன்." என விடை பெற்றுக் கிளம்பியவனை ராணி உள்ளே அழைத்தாள்.

அவனிடம் தான் துளுவ நாட்டுப் பெண் என்றும் அவர்கள் நாட்டில் பெண்ணானாலும் சரி ஆண் ஆனாலும் சரி, சமம் ஆனவர்களே எனவும் சொன்னாள். ஆகவே குலசேகரனின் சேவையைத் தான் இரவலாக ஒருபோதும் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் சொன்னாள். அதற்குக் குலசேகரன் ஏளனமாக அவள் முன்னர் ஒரு நாள் கங்கணங்கள் பரிசளித்ததைக் குறிப்பிட்டான். ஆனால் ராணி அதற்குப் பதில் சொல்லவில்லை. அவனையே பார்த்தாள். "வீரனே, உன் கோபம் அடங்கவில்லை! போகட்டும். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறேன். உனக்கு வேண்டியது 200 நபர்கள் அடங்கிய படை தான் அல்லவா?" என்று கேட்டாள். குலசேகரனுக்கு ஆச்சரியம் உண்டானது. அவளையே பார்த்தான்.

அவள் இங்கே அந்தப்புரத்தில் இருக்கும் தனக்கு அரச சபையில் நடந்த விஷயம் எப்படித் தெரியும் என்றே குலசேகரன் ஆச்சரியப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆகவே அவனைப் பார்த்து, "இந்த அரண்மனையில் ஒரு சிறு  எறும்பு நகர்ந்தால் கூட எனக்குத் தெரியும். என் காதுகளுக்கு எல்லா விஷயங்களும் உடனடியாக வந்து விடும். உங்களுக்குத் தேவை 200 வீரர்கள் அடங்கிய ஒரு படை! அது தானே!" என்றாள்.

Sunday, June 10, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அப்போது குலசேகரன் குறுக்கிட்டு, "மன்னரே, எங்கள் குறிக்கோள் அழகர்மலைக்காட்டினுள் ஒளிந்து மறைந்து வாழும் அரங்கனை அங்கிருந்து அகற்றித் தென்னாட்டுக்குக் குறிப்பாய் நாஞ்சில் நாட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என நினைக்கிறோம். அதன் பின்னர் அவருக்கு தினம் அன்றாட வழிபாடுகளை அங்கே இருந்து கொண்டு செய்துவிடுவோம். இதற்குத் தாங்கள் உதவினாலே போதும்!" என்றான். அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என மன்னர் கேட்டார். அவர்களுக்கு உதவ ஒரு சிறு படை வேண்டும் எனக் குலசேகரன் கேட்டான். மன்னருக்கு ஆச்சரியம் மேலிட்டது. படையை வைத்து உங்களால் என்ன செய்ய முடியும் என வினவினார். தென்னாட்டுக்குச் செல்லும் ஏதேனும் ஓர் வழியில் இந்தப் படையைக் கொண்டு சென்று திடீர்த் தாக்குதல் நடத்தி தில்லிப் படைகளைத் தோற்கடித்து அவ்வழியே தென்னாட்டுக்குச் செல்வோம் எனக் குலசேகரன் சொன்னதற்கு மன்னர் மீண்டும் சிரித்தார்.

அவர்களைப் பார்த்து, "தில்லிப் படையினர் எவ்வளவு பேர் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? அவ்வளவு எளிதில் அவர்களை வெற்றி கொள்ள முடியுமா? நீங்கள் ஒரு பக்கம் தாக்கினால் அதை உடனே போய்ச் சொல்ல அவர்களிடம் தூதுவர்கள் இல்லையா? அவர்கள் உடனே சென்று சொன்னதும் அங்கே இருக்கும் படையினர் நீங்கள் செல்லும் வழியை உடனே போய் மறிப்பார்கள். அதோடு நானே அவர்களுக்குக் கப்பம் கட்டுவதாகச் சொல்லித் தான் போரைத் தடுத்திருக்கிறேன். இந்நிலையில் என் படைகள் இந்தப் போரில் ஈடுபட்டது தெரிந்தால் என்னையும் சும்மா விட மாட்டார்கள். இந்த வட தமிழகமும் அழிந்து போகும்." என்றார்.

ஆனால் குலசேகரன் விடாமல் மனோ தைரியம் மிக்க இருநூறு வீரர்களைக் கொடுத்தால் போதும் என்றான். அவர்களை உங்கள் நாட்டுப் படை வீரர்களாகச் சொல்லாமல் எங்கள் அரங்கனின் பக்தர்களாகவே அழைத்துச் செல்கிறோம். ஆயுதங்களை மறைத்து எடுத்துச் சென்று அவர்கள் துணையோடு இரவுகளில் மட்டும் ரகசியமாய்ப் பயணம் செய்து அரங்கனை மறைத்து எடுத்துச் செல்வோம். இடையில் தில்லிப் படை வீரர்கள் எதிர்ப்பட்டால் மட்டுமே அவர்களுடன் போர் புரிவோம். மெல்ல எப்படியேனும் நாஞ்சில் நாட்டுக்குள் புகுந்தோம் எனில் பின்னர் பிரச்னை இல்லை!" என்றான்.

ஆனாலும் மன்னர் இருநூறு வீரர்களை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அழகிய நம்பி ஒரு அரசரான உங்களால் இது முடியாத காரியமா என வினவ அதற்கு மன்னர் தன்னிடம் படை இருந்தால் தன் ராணியின் தீர்த்த யாத்திரைக்கு ஏன் குலசேகரனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அழகிய நம்பி யோசித்தான். மன்னரிடம் அவர் படைகள் எங்கே தண்டு இறங்கி இருக்கின்றன என விசாரித்ததில் இன்னும் வடக்கே கொங்கண, தெலுங்கு தேசத்து அரசர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். அவர்கள் இருவரும் அடிக்கடி தொல்லைகள் கொடுப்பதால் அவர்களை அடக்குவதற்காகப் படைகள் அங்கே இருப்பதாகச் சொன்னார்.  மேலும் தென்னாட்டினரான அவர்கள் அனைவரும் கன்னடர், தெலுங்கர், தமிழர் எனப் பிரிந்திருக்காமல் அனைவரும் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து அந்நியரை எதிர்க்க வேண்டும் என்றும் சொன்னார். நாமெல்லாம் ஒன்று சேரவே மாட்டேன் எனப் பிடிவாதமாகத் தனித்து இருக்கிறோம். இதனால் அந்நியர் உட்புக வசதியாக ஆகி விட்டது என்றும் சொன்னார்.

மேலும் சொன்னார். அப்படி ஒன்றுபட்டால் அனைவரும் சேர்ந்து தில்லிப் படைகளை ஓட ஓட விரட்டலாம் என்றும் சொன்னார். இந்த முக்கியமான வேலையில் தான் தன் படை வீரர்களைத் தான் ஈடுபடுத்தி வருவதாகவும் சொன்னார். இந்த நேரம் பார்த்துத் தென்னாட்டுப் பக்கம் தன் பார்வையைச் செலுத்த முடியாது. தான் அங்கே ஒன்றும் செய்வதற்கில்லை என முடிவாகக் கூறி விட்டார். அதற்கு அழகிய நம்பி மதுரை நகரில் ஒளிந்து வாழும் பல பெண்களையும் பற்றி எடுத்துச் சொன்னான். பெண்கள் மட்டுமில்லாமல் கணக்கற்ற பொருளும் அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருப்பதைச் சொல்லிவிட்டு இவற்றை மீட்க வேண்டியது நம் கடமை என்றும் சொன்னான். ஆனால் மன்னரோ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாரே ஒழியப் படைகளை அனுப்பச் சம்மதிக்கவில்லை. பொருள் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாய்க் கூறினார். யோசனையில் ஆழ்ந்த இருவரும் திரும்பினார்கள். வழியில் அவர்கள் முன்னர் அபிலாஷிணி எதிர்ப்பட்டாள். குலசேகரனைப் பார்த்து மகாராணி அவனை அழைப்பதாகச் சொன்னாள். அப்போது குலசேகரனுக்கு ஓர் யோசனை தோன்ற அவனும் அழகிய நம்பியை மட்டும் சத்திரத்துக்குப் போகச் சொல்லிவிட்டுத் தான் மகாராணியைப் பார்க்க அபிலாஷிணியுடன் சென்றான். அவன் மனதில் ஆத்திரம் மிகுந்தது.

Friday, June 08, 2018

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தப் படைகளை எதிர்த்து வெற்றி கொள்ளும் அளவுக்கு நம்மிடம் ஆட்கள் இல்லையே என வருந்தினார்கள் அனைவரும். வேறு யார் உதவியும் கொண்டு வெல்ல முடியுமா எனவும் ஆலோசித்தார்கள். அழகிய நம்பி அது மிகக் கடினம். இவர்கள் படைகள் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. தென் பாண்டி நாடு, நாஞ்சில் நாட்டு மன்னர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் மட்டும் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டதால் தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இவரிடம் ஏதேனும் உதவி கிட்டினால் முயன்று பார்க்கலாம் என்றான் யோசனையுடன். பாண்டிய மன்னர்கள் எங்கே எனக் கேட்ட ஒரு கொடவரிடம் அவர்களில் ஒருவர் சிறைப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மற்ற நால்வர் இன்னும் தெற்கே ஓடி ஒளிந்திருப்பதாகவும் கூறிய அழகிய நம்பி "தமிழர்களான நமக்கும் இன்னும் தமிழ் பேசும் நாட்டில் இருப்போருக்கும் இங்கே வாழும் ஒரே அரசர் வீர வல்லாளர் மட்டுமே கதி!" என்றும் கூறினான்.

சற்று நேரம் மௌனமாக இருந்தவர்கள் பின்னர் நமக்கு வேறு யார் தான் துணையாக வருவார்கள் என மனம் நொந்து கேட்டார். அழகிய நம்பி அதற்குத் தனக்கும் ஏதும் புரியவில்லை என்றும் ஆனால் அரங்கனை மட்டும் இப்போதைக்கு இங்கிருந்து கொண்டு போகக் கூடாது என்றே தான் நினைப்பதாகவும் உறுதியாகக் கூறினான். அவருக்கான வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து தருவோம் என்றும் கூறினான். பின்னர் வல்லாளரைப் பார்க்கப் போனக் குலசேகரன் இன்னும் திரும்பவில்லை என்பதைக் குறித்தும் பேசிக் கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் குலசேகரன் திரும்பவில்லை எனில் அழகிய நம்பி திருவண்ணாமலை போய்ப் பார்க்க வேண்டியது தான் என்றும் முடிவெடுத்தனர்.


இங்கே ஹொய்சள மன்னரின் அரண்மனைக்குப் போய் அவரைப் பல முறை சந்தித்தும் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் குலசேகரனும் குறளனும் தவித்தார்கள். மன்னர் பிடி கொடுத்தே பேசவில்லை. இருவரும் மனம் வருந்தினார்கள். விரக்தியின் எல்லைக்கே போனவர்கள் கடைசி முயற்சியாக ஒரு தரம் போய்ப் பார்த்துவிடலாம் என்று கிளம்பினார்கள். ஒரு புதன்கிழமையைத் தேர்வு செய்து அவர்கள் இருவரும் கிளம்பத் தயாராகிச் சத்திர வாயிலுக்கு வந்தால் அங்கே அழகிய நம்பி நின்று கொண்டிருந்தான். இருவரும் ஆச்சரியத்துடன் அவனை உள்ளே அழைத்துச் சென்று எல்லாவற்றையும் குறித்துப் பேசினார்கள். பின்னர் நம்பியிடம் குலசேகரன் தான் மன்னரிடம் கடைசி முறையாகப் பேசச் செல்வதாகவும் இந்நேரம் நம்பி வந்ததும் நன்மைக்கே என்றும் கூறினான். மூவரும் கிளம்ப நினைத்துப் பின்னர் அரங்கன் விஷயமாகப் போவதால் மூன்று பேராக வேண்டாம் என முடிவெடுத்துக் குறளனைச் சத்திரத்தில் தங்கச் சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் சென்றனர்.

வெகு நேரம் காத்திருப்புக்குப் பின்னர் மதிய நேரத்தில் தான் மன்னரின் தரிசனம் கிடைத்தது. அழகிய நம்பி மன்னரைக் கண்டதுமே அவரின் வீரக்களை பொருந்திய முகத்துக்கும் அறிவொளி வீசும் கண்களுக்கும் அடிமையானான். மன்னரும் அவர்களைப் பார்த்தார். "உங்களை நான் இத்தனை நாட்கள் கவனிக்காமல் இருந்தது என் அலட்சியத்தால் அல்ல. எனக்கும் பல தர்மசங்கடங்கள்! அவை தீரக் காத்திருந்தேன். அரங்கமா நகர் வாசிகளே! நானும் வைணவனே! பெருமாளின் பக்தன் தான். எங்கள் முன்னோர் ஆன விஷ்ணு வர்த்தா மகாராஜா மகான்ஶ்ரீராமானுஜரின் அருளால் பரம வைஷ்ணவர் ஆக மாறினார். நானும் அந்தப் பரம்பரையில் தான் வந்திருக்கிறேன். உண்மையில் திருவரங்கத்துக்கும், அரங்கனுக்கும் நேர்ந்திருக்கும் கொடுமைகளைக் கண்டு நான் கலங்கிப் போய் இருக்கிறேன். மனம் வருத்தம் அடைந்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறீர்கள். எவ்வகையில் நான் உதவ முடியும் என ஆலோசிக்கிறேன். பார்ப்போம்." என்றார் மன்னர்.

Thursday, June 07, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹேமலேகா அவனை அழைக்கவுமே குலசேகரன் அவளிடம் அவளைப் பார்க்கவே அவள் அழைத்ததின் பேரில் வந்ததாய்க் கூறினான். ஹேமலேகாவுக்கு ஆச்சரியம். தான் அழைக்கவில்லை எனத் தெரிவித்தவள் தான் ராணி வாசத்தில் இருக்கையில் தன்னை யாரும் பார்க்க வர முடியாது என்பதையும் கூறிவிட்டு அருகே இருந்த சேடியைப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்தும், சேடியின் முகபாவத்திலிருந்தும் தன்னை அழைத்தது ராணி கிருஷ்ணாயியே, ஹேமலேகா பெயரைப் பயன்படுத்தி அழைத்திருக்கிறாள் என்பதைக் குலசேகரன் புரிந்து கொண்டான். அவள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்! இதில் ஏதோ சூது உள்ளது. அவள் மனதில் ஏதோ இருக்கிறது என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான் குலசேகரன்.  யார் அவனை அழைத்தது என்ற உண்மையான விஷயம் தெரிந்ததும் தான் மேலும் அரண்மனையில் தாமதிக்கக் கூடாது என அவன் ஹேமலேகாவிடம் அரச சபைக்கு வந்த தான் அப்படியே அவளைக் கண்டு தன் தாயாரின் திதி எப்போது என அறிந்து செல்ல வந்ததாய்ச் சொன்னான். அவளும் திதியைக் கூறவும் அவளிடம் விடைபெற்றுத் திரும்பியவனை ஹேமலேகா மீண்டும் அழைத்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்த ஹேமலேகா அவனிடம் எச்சரிக்கைக் குரலில் கீழ்க்கண்டவற்றைக் கூறினாள். "ஸ்வாமி, மிருகங்களைப் பொறி வைத்துப் பிடிப்பது போல் சில மனிதர்கள் தங்கள் சௌகரியத்துக்கும் வசதிக்கும் மனிதர்களையும் பொறி வைத்துப் பிடிக்கின்றனர். லட்சியங்கள், கொள்கைகள் முக்கியமாய்க் கருதுபவர்கள் இத்தகையோரிடமிருந்து விலகியே நிற்க வேண்டும். இது நம்மைப் பிடிப்பதற்கான பொறி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரங்கனைக் காக்கும் தலையாய கடமையில் உள்ள  நீங்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். இடையூறுகள் வரும், வரலாம். ஆனால் நம் சொந்த ஆசாபாசங்களை ஒதுக்கிவிட்டு லட்சியத்திலேயே நாட்டம் கொள்ளுங்கள். வேறே எதையும் குறித்துக் கவலைப்படாதீர்கள்!" என்று கூறியவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

குலசேகரன் மனம் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. ஆனால் அவனால் வாய் திறந்து பேச முடியவில்லை. அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அவள் கண்களில் வேதனை தெரிந்தது. முகபாவமும் வேதனைப்படுவதைக் காட்டியது.  உள்ளூர அவள் மனம் பரிதவிப்பதையும் வேதனையில் ஆழ்ந்திருப்பதையும் புரிந்து கொண்டான் குலசேகரன். இந்த நிலையிலும் நம்மைச் சமாதானம் செய்ய எண்ணுகிறாளே என எண்ணிய குலசேகரன் அவள் கொடுத்த அறிவுரையை நினைவில் கொள்வதாக வாக்களித்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.  ஹேமலேகாவிடம் இன்னும் சிறிது நேரம் பேசாமல் அவசரமாகத் திரும்பி விட்டோமோ என நினைத்து வேதனைப் பட்டான். அவளுக்குத் தன் மீது மிகுந்த பற்று இருப்பதாலேயே தன்னைக் குறித்துக் கவலைப்படுகிறாள். எல்லோரையும் போல் தன்னை நினைக்கவில்லை என்று அவன் உள்மனம் சொன்னாலும் அதை உண்மையா எனப் புரிந்து கொள்ள விடாமல் அவன் வெளிமனம் அவனைத் தடுத்தது. குழப்பத்தில் ஆழ்ந்தான். பின்னர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு குறளனை அழைத்தான். அரண்மனையில் நடந்ததைக் கூறவும் குறளன் சற்றும் சிந்திக்காமல் அவனிடம்,"சுவாமி, அந்த ராணியைப் பார்த்தால் நல்லவளாகத் தெரியவில்லை. உங்களைச் சிக்கல் எதிலோ மாட்டி விடப் போகிறாள். கவனமாக இருங்கள்!" என எச்சரித்தான். குலசேகரன் திகைத்தான்.

மீண்டும் மதுரை நகர்!

அழகிய நம்பி மதுரை நகர் முழுவதும் சுற்றிப்பார்த்ததோடு அல்லாமல் அருகிலிருந்த ஊர்களையும் ஓர் சுற்றுச் சுற்றினான். பின்னர் அழகர் மலைக்கே திரும்பினான். அவன் அறிந்தவரையில் தில்லிப்படை வீரர்கள் தென்னாட்டுக்குச் செல்லும் வழியை எல்லாம் அடைத்து விட்டார்கள். கடுமையான காவலும் போட்டு இருந்தார்கள். இங்குள்ள சொத்துக்களைத் தாங்களே அடைய வேண்டும் எனவும் அவை நாஞ்சில் நாடு வழியாகக் கேரளத்துள் சென்று விடக் கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாய் இருந்தார்கள். குறிப்பாய் திருவரங்கத்து அரங்கனும் அவன் பரிவாரங்களும் அரங்கனின் சொத்துக்களுமே அவர்கள் குறியாக இருந்தது. தான் கண்ட, கேட்ட விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான் அழகிய நம்பி. எல்லோரும் கலந்து ஆலோசித்ததில் தற்சமயம் அழகர் மலையிலேயே அரங்கன் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். பின்னால் எப்போதேனும் முடியுமா என ஒருவர் கேட்க. அழகிய நம்பி அதற்குப் பதில் சொன்னான்.


" அது தான் தெரியவில்லை. அந்த அரங்கன் தான் கண் திறந்து தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும். மதுரைக்கு அருகிலுள்ள ஊர்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டேன். எல்லாம் சூன்யங்கள். எங்கும் கோயில்கள் திறக்கவில்லை. மக்கள் ஊர்களை விட்டு வேறிடம் நோக்கி ஓடிவிட்டார்கள். ஓட முடியாதவர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். மதுரை நகரில் பெண்கள் பலர் அப்படி மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். நிலவறைகளில் சூரிய ஒளியே படாமல் வாழ்ந்து வருகின்றனர்.பெண்களோடு சேர்த்துப் பொன்னையும் பொருளையும் அத்தகைய நிலவறைகளில் ஒளித்து வைத்திருக்கின்றனர். இவர்களில் யாரேனும் தில்லி வீரர்களிடம் மாட்டிக் கொண்டால் மற்றவர் கதி அதோகதி தான். பின்னர் தில்லிக்காரர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவார்கள்." என்றான்.

அப்போது ஒருவர் மதுரையிலிருந்து தில்லி ஆறு மாதப் பயணத்தில் இருக்கையிலே அங்கிருந்து இவர்கள் இங்கே வந்து ஏன் தங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அழகிய நம்பி, "நாடாளும் ஆசை தான். பரதக் கண்டம் முழுவதும் அவர்கள் ஆட்சியே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் அப்படித் தானே நினைத்தார். அவர் காலத்தில் ஈடேறவில்லை. ஆனால் இப்போதைய சுல்தான் கியாசுதீன் நாடு முழுவதையும் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர முயல்கிறான். அதனால் தான் மதுரையை வென்றதோடு நிற்காமல் அங்கேயே தங்கி ஆட்சியும் செய்கின்றனர். இதைத் தவிர்த்துத் திருவரங்கத்தில் இதன் துணைப்படையும் ஒன்று உள்ளது.. இரண்டையும் வெற்றி காணாமல் நமக்கு ஒரு வழியும் பிறக்கப் போவதில்லை."

Wednesday, June 06, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

மீண்டும் குலசேகரனைப் பார்ப்போம். ஹேமலேகாவின் ராணி வாசம் குறித்து அறிந்ததில் இருந்தே அவன் நிலை குலைந்து போயிருந்தான். மிகுந்த மனக் கஷ்டத்தில் இருந்த அவனைக் குறளனோ அரண்மனைக்குப் போய் அரசரைச் சந்திப்போம் என அழைத்துக் கொண்டிருந்தான். குலசேகரனோ எதிலும் நாட்டமில்லாமல் இருந்ததைக் கண்ட குறளனுக்கு இரண்டு நாட்கள் வரையே பொறுமையாக இருக்க முடிந்தது. பின்னர் அவன் குலசேகரனிடம் தன் கடமையில் இருந்து அவன் பிறழ்வதாகக் குற்றம் சாட்டி ஆத்திரப் பட்டான். அதைக் கேட்டக் குலசேகரன் அவனைப் பக்கத்தில் அமரச் சொல்லித் தான் சில விஷயங்களைப் பேச விரும்புவதாய்க் கூறினான். குறளனும் கேட்கத் தயாராக இருக்க அவனிடம் குலசேகரன் ஹேமலேகா மேல் தான் கொண்டிருந்த அபிமானத்தையும் அதைப் புரிந்து கொண்டே ராணி அவளை ராணி வாசத்துக்கு அழைத்திருக்க வேண்டும் எனத் தான் நம்புவதாயும் அதனால் தன் மனம் படும் பாட்டையும் விவரித்தான். குறளன் அதிர்ச்சி அடைந்தான்.

ஆனாலும் அவனால் குலசேகரன் இத்தகைய ஆசாபாசங்களில் ஈடுபட்டதை ஏற்க முடியவில்லை. அவனிடம் நேரிடையாகவே, "சுவாமி, தங்களைப் போன்ற லட்சியவாதி ஒருத்தர் இத்தகைய ஆசாபாசங்களில் ஈடுபடலாமா? அரங்கனை விட நம்முடைய சுக துக்கங்களா முக்கியம்? ஆனானப் பட்ட அந்த அரங்கனே தன் நாச்சியார்களைப் பிரிந்திருக்கிறார். உறையூர்ச் சோழகுலவல்லியையும் சூடிக் கொடுத்து அவரை ஆட்கொண்ட ஆண்டாளையும் பிரிந்திருக்கிறாரே! அரங்கன் இத்தகைய கஷ்டத்தில் இருக்கையில் நாமெல்லாம் இத்தகைய உலக சுகங்களில் பற்று வைக்கலாமா? அரங்கன் இப்போது வனவாசத்தில் இருக்கிறான் என்பதை நினைவு வையுங்கள்." என்றான்.

"ஆம், குறளா, நீ சொல்வது எல்லாம் சரியே! ஆனாலும் என் மனம் படும் பாடு. நானும் அதை எப்படி எல்லாமோ அடக்கிப் பார்க்கிறேன். அது அடங்குவதாக இல்லையே! என் செய்வேன்!" என்று கண்ணீர் விட்டுக் கலங்கினான் குலசேகரன். குறளன் அவனைச் சமாதானம் செய்து அரண்மனைக்கு அரசரைப் பார்க்க அழைத்துச் சென்றான்.  அஙே அரச சபை கூடி இருந்தது. அவர்களைக் கண்டதுமே இரு ராஜ பிரதானிகள் வந்து அவர்களை அழைத்துச் சென்று உரிய ஆசனங்களில் அமர்த்தினார்கள். சபையில் நாட்டியம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சேடி அவனிடம் தாம்பூலம் வழங்க வந்தாள். அவள் தாம்பூலம் மட்டும் கொடுக்கவில்லை. கூடவே ஒரு ஓலைச் சுருளையும் கொடுத்தாள். தயக்கமாக வாங்கிக் கொண்ட குலசேகரனுக்கு அதில் ஹேமலேகா, "என்னைப் பார்க்க வருவீர்களா?" என்று எழுதிக் கையொப்பம் இட்டிருந்ததைப் பார்த்தான்.


விரைவில் நிருத்தியம் முடிந்து. எங்கும் தூபம் போட ஆரம்பித்தனர். குலசேகரன் இறங்கி நேரே வெளி முற்றம் நோக்கி நடந்தான். அப்போது ஒரு சேடி அவனருகே வந்து ஹேமலேகா இருக்குமிடம் அழைத்துச் செல்வதாய்க் கூறி, அவனை அழைத்துக் கொண்டு பல தாழ்வாரங்கள், அறைகளைக் கடந்து ஒரு பெரிய கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். அவனை அங்கே ஓர் ஆசனத்தில் அமர வைத்து விட்டு ஹேமலேகாவை அழைத்து வருவதாய்ச் சென்றாள். சிறிது நேரத்தில் அங்கே ஓர் பெண் வர நிமிர்ந்து பார்த்த குலசேகரன் அங்கே ராணி கிருஷ்ணாயியைக் கண்டு திடுக்கிட்டான். உடனே ஆசனத்திலிருந்து எழுந்து, "எங்கே ஹேமலேகா?" என்று கடுமையாய்க் கேட்டான்.

ராணி கிருஷ்ணாயி உல்லாசமாய்ச் சிரித்துக் கொண்டே, "ஓகோ, அப்போ ஹேமலேகா என்றால் தான் வருவீர்களாக்கும்? என்னைப் பார்க்க வர மாட்டீர்களாக்கும்?" என வினவ, குலசேகரன், "எனக்கு விரும்பியவர்களை நான் பார்ப்பேன். ஹேமலேகா பெயரைச் சொல்லி என்னை இங்கே அழைத்து வந்து ஏமாற்றப் பார்க்கிறீர்களோ?" எனக் கோபமாய்க் கேட்டான். உடனே கிருஷ்ணாயியும் கோபம் கொண்டவளாய் அவனைப் பார்த்து நாக்கை அடக்கிப் பேசுமாறு எச்சரித்தாள். அவன் நுழைந்திருப்பது ராணி கிருஷ்ணாயியின் அந்தப்புரம் என்பதைத் தெரிவித்தவள் யாரைக் கேட்டுக் கொண்டு அவன் அங்கே நுழைந்தான் என்றும் கேட்டாள். இப்படி ராணியின் அந்தப்புரத்துக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தால் சிரச்சேதம் தான் என்பதையும் தெரிவித்தாள். குலசேகரனுக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. ஆகவே அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை பெற்று வெளியே செல்ல ஆரம்பித்தான். அப்போது ராணி ஒரு சேடியை அழைத்து அவனை ஹேமலேகா இருக்குமிடம் சென்று அவளைக் காட்டுமாறு உத்தரவு கொடுத்தாள். இனி ராணி வாசத்தில் இருக்கும் பெண்ணைப் பார்க்க யாரும் வரக் கூடாது எனவும் யாருக்கும் இனி அனுமதியும் கிட்டாது என்றும் தெரிவித்தாள்.

அந்தச் சேடிப் பெண் அவனை அழைத்துக் கொண்டு அந்தக் கூடத்தின் அருகே காணப்பட்ட அடுத்த மாளிகைக்குள் நுழைந்தாள். உள்ளே மற்றொரு கூடத்துக்குச் சென்று கதவைத் திறக்கவும் அங்கிருந்த பல பெண்களும் அவர்கள் இருவரையும் பார்த்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஹேமலேகா குலசேகரனை அடையாளம் கண்டு கொண்டு முன்னால் ஓடோடி வந்தாள். சிவந்த அவள் முகம் இப்போது கருத்துக் கிடப்பதையும் விழிகளின் ஓரத்தில் தன்னைக் கண்டதும் துளிர்த்த கண்ணீரையும் கண்டான் குலசேகரன். மெல்லிய குரலில் அவனைப் பார்த்து அவள், "ஸ்வாமி!" என அழைத்தது யாழின் இசை போல் குலசேகரன் செவிகளில் ஒலித்தது.