எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, October 02, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


தக்ஷிணாமூர்த்தி வடிவங்களில் பல்வேறு விதங்கள் உண்டு. அவை ஞான தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, வீர தக்ஷிணாமூர்த்தி, வீணாதர தக்ஷிணாமூர்த்தி, சுத்த தக்ஷிணாமூர்த்தி, திவ்ய தக்ஷிணாமூர்த்தி, கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி சக்தி தக்ஷிணாமூர்த்தி என்று பல்வேறு விதமான வடிவங்கள் உண்டு. சிலவற்றைப் பார்ப்போமா??

ஞான தக்ஷிணாமூர்த்தி: நான்கு கரங்கள் கொண்ட இவரது பின் வலக்கையில் அட்ச மாலையும், பின் இடக்கரத்தில் தாமரை மலரும் விளங்கும். முன் வலக்கரம் சின் முத்திரை காட்ட இடக்கை அபயம் காட்டும். சில இடங்களில் தண்ட ஹஸ்தமாகவும் காணப்படும். மாயவரம் என்னும் மயிலாடுதுறைக் கோயிலிலும், சுநீந்திரம் கோயிலிலும் ஞான தக்ஷிணாமூர்த்தி வடிவத்தைக் காணலாம் என்று சொல்கின்றனர்.

யோக தக்ஷிணாமூர்த்தி: யோகக் கலையின் மூலமாகவே இறைவனை அடைதல், அந்தக் குறிக்கோளில் உறுதியாக நிற்பது போன்ற ஆற்றல் கிடைக்கிறது. அத்தகையதொரு ஆற்றலை யோக மார்க்கமே நமக்கு வழங்கும். யோகம் என்பது இங்கே வெறும் ஆசனங்களில் செய்யும் பயிற்சியைக் குறிப்பது அல்ல. உண்மையான யோகத்தை குரு மூலமாகவே செய்ய முடியும். அதற்கேற்ற மன ஆற்றலையும், உறுதியையும் நமக்குக் கிடைக்கச் செய்வதே இந்த தக்ஷிணாமூர்த்தியின் வடிவம் எனலாம். இந்த வடிவத்தில் யோகத்தின் ஆற்றலை விளக்கும் வடிவில் யோகப் பட்டையுடன் கூடிய ஸ்வஸ்திகாசனத்தில் தக்ஷிணாமூர்த்தி காட்சி கொடுப்பார். அட்சமாலையும், கமண்டலமும் பின்னிரு கரங்களில் காணப்படும். காஞ்சிபுரம், திருவொற்றியூர் போன்ற தலங்களில் யோக தக்ஷிணாமூர்த்தியின் வடிவைக் காணலாம். இவரே பிரம்மாவுக்கு அருளிச் செய்தார். ஆகவே பிரம்ம தக்ஷிணாமூர்த்தியும் இவரே என்றும் சொல்லப் படுகிறது.

வியாக்யான தக்ஷிணாமூர்த்தி: பெயரிலேயே அவரின் செயல் புரிந்துவிடுகிறது. சாத்திரங்களை விளக்குபவராக, ஆசானாக இமயமலையில் ஆலமரத்தின் கீழ் புலித்தோலாசனத்தில் அமர்ந்து இருப்பார் இவர். வலக்கால் கீழே தொங்கும். இடக்காலை மடித்து வலக்கால் தொடையின் அடியில் மடித்து வைத்திருப்பார். தொங்கும் வலக்காலின் கீழ் முயலகனைக் காணலாம். ஆலங்குடி என்னும் குரு பரிஹார க்ஷேத்திரத்தில் வியாக்யான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது.

சித்ரம் வடதாரோர் மூலே வ்ருத்தா சிஷ்யா குரூர்யுவா!
குரோஸ்து மெளநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சிந்ந ஸம்சயா!!