எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 26, 2021

சிங்கழகரின் அனுபவங்கள் தொடர்ச்சி! ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம்.

 அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள திருநாராயணபுரத்தில் அரங்கனை எழுந்தருள வைத்துக் கொண்டு பலரும் அங்கேயே அரங்கனுடன் தங்கிவிட்டார்கள் என்றார் சிங்கழகர். தாமும் அவர்களில் ஒருவனாக அப்போது இருந்ததாகவும் சொன்னார். மொத்தம் அறுபது பேர் கிளம்பியதில் யாத்திரையின் கடுமையான சோதனைகளில் பலரும் திசைமாறிப்பல்வேறு திக்குகளிலும் போய்விட சிலர் ஆங்காங்கே தங்கி விட எஞ்சிய சிலருடன் கன்னடத்தின் மேல்கோட்டையில் அரங்கனுடன் சிலர் தங்கினார்கள். அவர்களில் சிங்கழகரும் ஒருவராக இருந்தார்.  சில ஆண்டுகளின் பின்னர் ஹொய்சள மன்னன் மதுரை சுல்தானுடன் சண்டை இடுவதாகத் தகவல்கள் கிட்ட மேல்கோட்டையிலிருந்து கிளம்பி கொங்கு வழியாகச் சத்தியமங்கலத்தை வந்தடைந்தனர் சிலர். அவர்களில் சிங்கழகரும் ஒருவர். ஆனால் அந்தப் போரில் ஹொய்சள மன்னன் கொல்லப்பட்டு ஹொய்சளப்படைகள் தோல்வி அடைய மீண்டும் மேல்கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டனர் அனைவரும். 

சுல்தானியர்களோ தமிழர்களின் இந்தத் திடீர் எழுச்சியைச் சகிக்காமல் மேலும் கோபம் கொண்டு அக்கம்பக்கம் நாடுகளையும் குறிப்பாக ஹொய்சள நாட்டையும் கோயில்களையும் சூறையாடினார்கள். அவர்கள் அப்படியே அரங்க விக்ரஹம் மேல்கோட்டையில் இருக்கும் செய்தியைத் தெரிந்து கொண்டு அங்கே வருவார்கள் என்னும் செய்தி மேல்கோட்டையில் பரவியது. பீதி அடைந்த அவர்கள் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வேறெங்காவது இன்னமும் தூரமாகப்போய்விட எண்ணினார்கள். ஆனால் வடக்கே செல்ல முடியாது. ஏனெனில் வடக்கே பெரும்பாலும் துருக்கியரே ஆண்டு வந்தனர். ஆகவே கிழக்கே செல்லலாம் என நினைத்துத் திருமலை/திருப்பதி நோக்கிப் போய் அங்கேயே தங்கத் தீர்மானம் செய்தனர் அவர்கள் அனைவரும்.  இவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். திருவரங்கத்திலிருந்து கிளம்பிய போது அறுபது பேர்களாக இருந்தவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். இவர்களில் சிங்கழகர் தவிர இன்னொருவர் மாலழகர். மற்ற மூவரும் பந்துக்களான கொடவர்கள் குருகூர் தாசர், சீராம தாசர், வில்லிப்புத்தூர் தாசர் ஆகியோர்.  சீராம தாசர் குருகூர் தாசரின் மகன். வில்லிபுத்தூர் தாசரோ சீராம தாசரின் தாய் மாமன் ஆவார்.

அரங்கனின் பொன் நகைகள், எஞ்சி இருந்த அணிமணிகள், ஆடைகள் என அனைத்தையும் ஓர் சுமையாகக் கட்டி ஒருவர் எடுத்துக் கொண்டோம். அரங்க விக்ரஹம் கனமாக இருந்ததால் மாறி மாறி அவரைத் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டு சென்றோம்.வழியெங்கும் கலவரமாக இருந்ததால் மிகவும் கவனமாக வழி நடந்து ஆங்காங்கே வைணவர்களாகத் தேடித்தேடி அவர்கள் உதவிகளைப் பெற்று இரவுகளில் ரகசியமாகத் தங்கிக் கொண்டு நாற்பது நாட்கள் கழித்துச் சந்திரகிரிக்கோட்டையை அடைந்தோம். என்ன துரதிருஷ்டம்! சந்திரகிரிக்கோட்டையும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கவே கோட்டையைத் தவிர்த்துவிட்டுக் காட்டு மார்க்கத்தில் இறங்கிப் பிரயாணப்படும்போது அங்கிருந்த தனிப்பாதையில் மூன்று துருக்கிய வீரர்கள் காவலுக்கு இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள், என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தோம்.

Wednesday, June 23, 2021

சிங்கழகரின் அனுபவங்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சத்திரத்துக்குத் திரும்பினாலும் தத்தன் கண்களின் எதிரே மஞ்சரியின் முகமே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தயவாக ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருக்கலாமோ என நினைத்துக் கொண்டான் தத்தன். மறுநாள் காலையில் கட்டாயமாய் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்து ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என தத்தன் நினைத்துக் கொண்டான். மறுநாள் காலையில் இருவருமே மஞ்சரியின் மாமா வீடு சென்றனர்.  மஞ்சரி அவர்களைக் கண்டதுமே மிகுந்த உற்சாகத்துடன் அவர்களுக்கு உபசரணைகள் செய்தாள். ஓர் பெரிய கிண்ணம் நிறையக் காய்ச்சிப் பக்குவமாய் நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பாலை இதமான சூட்டுடன் குடிக்கக் கொடுத்தாள். 

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் பின்னர் மெதுவாக சிங்கழகரிடம் தாங்கள் இருவரும் அரங்கனைக் கண்டு பிடிக்கும் வேலையில் இருப்பதாகவும் அரங்கனை எங்கே கண்டு பிடிக்க முடியும் என்பது பற்றி அவருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் கேட்டார்கள். இதைக் கேட்ட சிங்கழகர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் பெருகியது. எழுந்து வந்த அவர் இளைஞர்களைத் தழுவிக் கொண்டு கண்ணீர் மழை பொழிந்தார். இக்காலத்தில் அரங்கனை நினைப்பாரும் இருக்கிறார்களே எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  அரங்கன் என ஒருத்தர் இருந்ததையே பலரும் மறந்திருக்கையில் இளைஞர்களான இவர்கள் இருவரும் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு செல்வதை அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார். அவர்கள் யாரெனக் கேட்டார். வல்லபனின் தந்தை பற்றி அறிந்ததுமே அவருக்குள் ஆனந்தம் பொங்கிற்று. தான் வல்லபனின் தந்தையை நேரில் பார்த்திருப்பதாகவும், அவர் வீரத்தைக் குறித்தும் அறிந்திருந்ததாகவும் சொன்னார்.

வல்லபன் பார்க்கத் தன் தந்தையையே சாயலில் உரித்து வைத்தாற்போல் இருப்பதையும் சொன்னார்.  வல்லபனின் தந்தை அரங்க நகரையும், அரங்க நகரத்து மக்களையும், அரங்கனையும் கொடியோர் கைகளில் இருந்து பாதுகாக்கப் பட்ட பாட்டை நினைவு கூர்ந்தார் அந்தக் கிழவர். அதோடு இல்லாமல் வல்லபனின் தாய் வாசந்தியைப் பற்றியும் மிகவும் புகழ்ந்து சொன்னதோடு அல்லாமல் வல்லபனைக் குறித்துப் பெருமிதமும் கொண்டார். இப்போதுள்ள நிலைமையில் நாடுகளெல்லாம் அழிந்து நம் சமயங்கள் எல்லாம் சீரழிந்து வரும் இந்தச் சமயத்தில் அரங்கனை நினைப்பாரும் உண்டோ! அவனைத் தேடுவாரும் உண்டோ எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  வல்லபன் அவரிடம் அரங்கனைத் தூக்கிக் கொண்டு கோட்டையிலிருந்து புறப்பட்டஐவரில் சிங்கழகரும் ஒருவர் எனத் தான் அறிந்திருப்பதைக் குறித்துக் கூறினான்.ஆகவே சிங்கழகருக்கு நேர்ந்ததை எல்லாம் அவர் நினைவில் இருக்கிறபடி அப்படியே கூறினால் அதிலிருந்து அரங்கன் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என்றான் வல்லபன்.  சிங்கழகரும் அதை ஒப்புக் கொண்டு தன் நினைவில் இருந்தவரையிலும் எல்லாவற்றையும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் எடுத்துக் கூறலானார். 

Wednesday, June 09, 2021

மஞ்சரியின் மாமன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய் மாமன் வீட்டிற்கு எனச் சொன்னான் தத்தன். நேற்றுக் கேட்டதற்கு மாமன் கிடைக்கவில்லையே என தத்தன் சொன்னதை நினைவூட்டின மஞ்சரியிடம் தத்தன் முதலில் பெற்றோர் இல்லை என்பதை அவளிடம் சொல்லி மனதளவில் அவளைத் தயார் செய்ய வேண்டி இருந்ததாய்ச் சொன்னான். அதன் பின்னர் அவள் தாய் மாமன் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல இருந்ததாயும் சொன்னான். மஞ்சரியின் கண்கள் நீரை ஆறாய்ப் பெருக்கின. உள்ளுக்குள் அவள் குமுறுகிறாள் என்பதை நிலை குத்திய அவள் பார்வையும் துடிக்கும் உதடுகளும் வெளிப்படுத்தின. அவள் வாய்விட்டு அழட்டும் என தத்தன் நினைத்தான். சில வினாடிகளில் அவள் குமுறிக் குமுறி வாய்விட்டுக் கதறினாள். 

தன் பாட்டனார் தன்னிடம் இந்த உண்மையைச் சொல்லாதது குறித்தும் சொல்லி இருந்தால் தான் ரொம்பவே வேதனைப் பட்டிருப்போம் என்பதால் தன் நன்மையைக் கருதியே பாட்டனார் சொல்லவில்லை எனத் தான் புரிந்து கொண்டதாகவும் சொன்னாள் மஞ்சரி. ஆனாலும் அதனால் ஏற்பட்ட தீமையும் உண்டு எனச் சொன்ன மஞ்சரியை தத்தன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் தென்பட்ட ஆச்சரியக் குறியைக் கண்ட மஞ்சரி தான் தன் பெற்றோர் இருப்பதாகவே கருதி ஆசைகளை வளர்த்துக்கொண்டதையும் பெற்றோருடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வை நினைத்துக் கண்ட கனவுகளையும் சொல்லி இப்போது அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டதால் அவள் தாத்தா சிறு வயதிலேயே அவளுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அவளைத் தயார் செய்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். சிறிது நேரம் அவளை அழவிட்ட தத்தன் அவளை மாமன் வீட்டிற்காகக் கிளம்பச் சொல்ல அவளும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

சிங்கழகர் என அழைக்கப்பட்ட வயது முதிர்ந்த மஞ்சரியின் தாய் மாமன் ஒரு நந்தவனத்திற்கு அருகே உள்ள மண் வீட்டில் வசித்து வந்தார். விஷக்கடியினால் ஏற்பட்ட வியாதிகாரணமாக அவரால் அதிகம் நடமாட முடியாது. சுமார் அறுபது பிராயங்கள் ஆன அவர் மஞ்சரியையும் தத்தன்.வல்லபன் இருவரையும் பார்த்ததும் வியப்படைந்தார். யாரோ அதிதிகள் என எண்ணிக்கொண்டு அவர்களை உபசரித்து ஆசனங்களில் அமர வைத்து என்ன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார். தத்தன் அவரிடம் மஞ்சரியைக் காட்டி அவருடைய சகோதரியின் பெண் தான் இந்தப் பெண் என்பதையும் சொல்லி அவள் பாட்டனார் வளர்த்து வந்ததையும் பெற்றோர் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது அந்நியப் படையெடுப்பில் கொல்லப்பட்ட விபரத்தையும் இது நாள் வரை மஞ்சரிக்கு அது விஷயம் தெரியாது என்பதையும் சொன்னான். பின்னர் அவர் இங்கே இருக்கும் விஷயத்தை மஞ்சரியின் தாத்தா மூலம் அறிந்து கொண்டதாகவும் அவர் காலம் ஆகிவிட்டதால் மஞ்சரியைத் தானும் வல்லபனும் பொறுப்பெடுத்துக் கொண்டு காஞ்சிகுக் கூட்டி வந்து அவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும் சொன்னான்.

சிங்கழகருக்கு ஒரு புறம் வியப்பு! மகிழ்ச்சி! இன்னொரு புறம் சோகம்! வருத்தம். அவருக்கும் தன் சகோதரி குடும்பம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்ததில் இப்போது விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் இன்னொரு பக்கம் துக்கமும் மேலிட்டது. மஞ்சரியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் உகுத்தார். அவளைத் தன் கைகளால் தொட்டு ஆசீர்வதித்தார். துணை இல்லாமல் பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இப்போது துணையோடு வாழ்க்கையில் பற்றும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொன்னார்.இனி தன் வாழ்க்கையை மஞ்சரிக்காக வாழ வேண்டும் எனவும் சொன்னார். இது ஒரு சுமை தான் தனக்கு என்றாலும் சுகமான சுமை அதிலும் சொந்தமான ஒரு சுமை. தன் கடமை எனவும் சொல்லிக் கொண்டார். மஞ்சரியைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாக உறுதியும் அளித்தார்.

சிறிது நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தத்தனும் வல்லபனும் சத்திரத்துக்குக்கிளம்ப "ஐயா!" என மஞ்சரி அவர்களை அழைத்தாள். வல்லபனுக்குப் புரிந்தது அவள் தத்தனோடு தனியாகப் பேச விரும்புகிறாள் என்பது. ஆகவே அவன் தத்தனிடம் அவனைப் போய்ப் பேசச் சொல்லிவிட்டுத் தான் ஒதுங்கி நின்றான். மஞ்சரி தத்தன் வரவும் அவனிடம், இப்படித் தன்னை முன்பின் தெரியாத ஓர் இடத்தில் நிர்க்கதியாக விட்டுச் செல்வதைக் குறித்துக் குறை கூறினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தத்தன் திடுக்கிட்டான். மஞ்சரியோ மேலும் அவளை விட்டுவிட்டு அவர்கள் சீக்கிரம் கிளம்பியதற்கும் ஆக்ஷேபம் தெரிவித்தாள். என்னதான் தன் மாமன் அங்கே இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத புதிய இடம் தனக்குப் பாந்தமாக இல்லை எனவும் தத்தன் தான் சொந்தம் போலவும் மாமன் அந்நியராகவும் தெரிவதாய்ச் சொன்னாள்.  தத்தனையும் வல்லபனையும் விட்டுப் பிரியக் கஷ்டமாக இருப்பதாகவும் அதிலும் தத்தனோடு நிரந்தரப்பிரிவு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுவதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் சொன்னாள். தத்தனால் பேச முடியவில்லை. அவளைச் சமாதானம் செய்யப் பல நல்ல வார்த்தைகளைச் சொல்லி வாக்குறுதிகளைக் கொடுத்து மெல்ல மெல்ல அவளைச் சமாதானம் செய்ய முற்பட்டான். தானும் வல்லபனும் நாளையும் வருவோம் எனவும் காஞ்சியில் இருக்கும்வரை தினம் வந்து பார்த்துவிட்டுச் செல்வதாயும் வாக்குறுதி அளித்தான்.

Friday, June 04, 2021

மஞ்சரியின் பெற்றோர்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இரவில் நேரம் சென்று வந்த தத்தனிடம் அந்தப் பெண் மஞ்சரி உரிமையுடனும் சலுகையுடனும் கடிந்து கொண்டது வல்லபன் காதில் விழ அவன் வியப்பின் எல்லைக்கே போனான். தத்தன் என்ன சொல்கிறானோ எனக் கவனித்துப் பார்த்தவனுக்கு தத்தன் வாயைத் திறக்காமல் மௌனமாக இருந்தது உறுத்தியது. ஆனால் அந்தப் பெண் விடாமல் தன் மாமனைக் கண்டு பிடித்தானா தத்தன் என்பதை அவனிடம் விசாரிக்க அதற்கும் தத்தன் சிறிது நேரம் கழித்தே தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதைச் சொன்னான். தத்தனுக்கு என்ன ஆயிற்று என வல்லபன் யோசித்தான். மஞ்சரி தத்தனிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். தன் மாமன் எங்கிருப்பார் என்பது குறித்தும் தத்தனுக்குத் தெரியாது என்பதைக் கேட்டறிந்தவள் தன்னையே நொந்து கொண்டாள். 

காஞ்சிக்குப் பெற்றோர்களைக் கண்டு அவர்களுடன் சேரலாம் என நினைத்திருந்த தன் எண்ணத்துக்கு மாறாக எல்லாம் நடப்பதைக் கண்டு மனம் வருந்தினாள் மஞ்சரி.  தத்தன் வல்லபனைத் தேடி வந்து அவனுடன் இனிச் செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்தான். இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  காலை விடிந்ததும் தத்தன் மஞ்சரியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் வெளியே செல்லத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். மஞ்சரியைப் பெயர் சொல்லி தத்தன் அழைக்கவும் அதிலேயே மகிழ்ந்து போன மஞ்சரி ஆவலுடன் அவனைப் பார்த்தாள். தத்தன் அவளை அமரச் சொல்லித் தானும் அவளருகே சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். மஞ்சரியிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றான் தத்தன்.  பின் மெல்ல மெல்ல அவள் தாத்தா தன்னிடம் கூறினவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சரியிடம் எடுத்துச் சொன்னான் தத்தன். கடைசியில் மஞ்சரியின் பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை எனவும் அவர்கள் இறந்து பல காலம் ஆகிவிட்டது என்றும் சொன்னான். 

மலர்ந்த முகத்துடன் அந்தக் காலை வேளையில் அன்றலர்ந்த மலர்போல விகசிப்புடன் இருந்த மஞ்சரிக்கு மெல்ல மெல்ல முகம் மாறி வெளிறிப் போய்விட்டது.  சிலை போல் அமர்ந்திருந்த மஞ்சரியின் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அது ஒன்றே அவள் உயிருள்ள பெண் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.  அவள் அழுது முடித்து மெல்ல மெல்லத் தேறட்டும் எனக் காத்திருந்தான் தத்தன். பின்னர் அவளைப் பார்த்து அவள் பெயர் சொல்லி, "மஞ்சரி, மஞ்சரி!" என அழைத்தான். ஆனால் அவளோ நிமிரவே இல்லை. தலை குனிந்தபடியே அப்படியே அசையாமல் வீற்றிருந்தாள்.  தத்தனுக்குள் இரக்கம் மீதூறியது. மெல்ல அவளைத் தொட்டு அசைத்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அவள் சோகத்தில் கசிந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மிகுந்த இரக்கத்துடன் சோகம் ததும்பிய அவள் முகத்தைப் பார்த்த தத்தன் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

"இதோ பார் மஞ்சரி! நாட்டைப் பீடித்திருக்கும் பீடைகள் இன்னமும் விலகவில்லை. நாம் இன்னமும் அந்நிய ஆட்சியில் இருக்கிறோம். நாட்டில் நடந்த இந்த மோசமான படையெடுப்புக்களில் எத்தனையோ மக்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பெற்றோரை இழந்தும் வாழ்கிறார்கள். இறந்தவர்கள் அனைவருமே நம் அரங்கனுக்காகவும் தமிழ் பேசும் மக்களுக்காகவும் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.  சொர்க்கத்தில் இடம் பெற்றவர்கள். ஆகவே உன் பெற்றோரும் சொர்க்கத்திற்குத் தான் போயிருப்பார்கள்.  நீ அவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே! மனதைத் தேற்றிக் கொள்!" என்றான்.

மஞ்சரி அவனிடம், "ஐயா! இந்தக் காஞ்சிக்கு வந்து சேர்ந்ததும் ஒருவழியாகப் பெற்றோர்களிடம் சென்று விடுவேன் என நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது தங்கள் செய்தியிலிருந்து எனக்கு அந்த பாக்கியம் இல்லை; நான் பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.  என் நினைப்பெல்லாம் பெற்றோர்களைச் சென்று அடைவதில் இருந்தது. நினைப்பிலேயே அவர்களை அடைந்து நினைப்பிலேயே அவர்களை இழக்கவும் செய்திருக்கிறேன்.  இப்போது இந்த நினைவுக்கள் என்னை விட்டு அழிய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே கனவும்களும் நினைவுகளுமாகப் போய்விட்டன." என்று கண்ணீருடன் கூறினாள். அவள் மன முதிர்ச்சியும் பேச்சும் தத்தனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இத்தனை சிறிய வயதில் எவ்வளவு மன முதிர்ச்சி என நினைத்துக் கொண்டான். அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.  ஆனால் நேற்றுத் தான் சொன்ன ஒரு சிறு பொய் அவளை என்ன செய்யப் போகிறதோ எனக் கவலை கொண்ட தத்தன் அவளை விரைவில் அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வல்லபனைப் பார்க்க எழுந்து சென்றான்.