எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 04, 2022

சம்புவரையர்களின் ஆட்சியின் நிலைமை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இளைஞர்கள் மூவரும் பேசியதைக் கண்டு மகிழ்வடைந்த சிங்கழகர் பதினெட்டு ஆண்டுகளாகத் தாம் இத்தகைய தைரியம், வீரம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டதே இல்லை எனவும். காரியம் நடக்கிறதோ இல்லையோ இளைஞர்களின் தைரியமான பேச்சினால் மனம் நிறைவடைந்தது என்றும் கூறினார். அதன் பேரில் வல்லபனும் தத்தனும் அன்றிரவு அங்கேயே உறங்கிவிட்டுப் பின்னர் காலையில் தாங்கள் தங்கி இருந்த சத்திரத்துக்குத் திரும்பிச் சென்றனர். சத்திரத்தை விட்டு வெளியே வராமல் யார் கண்களிலும் படாமல் மதியம் வரை இருந்துவிட்டு மதியத்திற்கு மேல் மறுபடி சிங்கழகரின் குடிலுக்குச் சென்றனர். அப்போது இரு ராஜசேவகர்கள் மிகவும் கோபமாக சிங்கழகரிடம் பேசிக் கொண்டிருந்தனர். 

இளைஞர்கள் கொஞ்சம் கவலையுடன் ராஜசேவகர்கள் எதிரில் போய் நிற்காமல் ஒதுங்கியே நின்றனர். சற்று நேரத்தில் சேவகர்கள் சென்றதும் இருவரும் உள்ளே சென்று சிங்கழகரைப் பார்க்க அவர் அவர்கள் இருவரையுமே தாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்போது வல்லபனும், தத்தனும் அவருக்கெதிரே அமர்ந்த வண்ணம் வந்த ராஜசேவகர்கள் யார் எனவும் எதற்காக வந்தார்கள் என்பதையும் கேட்டார்கள். சிங்கழகர் அதற்கு அந்தச் சேவகர்கள் சம்புவரையரின் வீரர்கள் எனவும் வரி(இறை) வாங்க வந்திருந்ததாகவும் சொன்னார். ஊரிலே எதை எடுத்தாலும் எதற்கென்றாலும் இறை விதித்துக் கடுமையாக வசூலிப்பதாகச் சொன்னார். ராஜரிகம் இப்போதைய நாட்களில் முன்னைப் போல் இல்லை எனவும் மோசமாக இருப்பதாகவும் சொன்னார். தாங்கள் அது குறித்து எதுவும் அறிய மாட்டோம் என்றனர் இளைஞர்கள்.

அப்போது சிங்கழகர் கூறலுற்றார்: இந்தச் சம்புவரையரின் ராஜ்யம் புதிதெல்லாம் இல்லை. காலம் காலமாய் இருந்து வருவது தான். தர்மத்தின் பால் நின்று நிலைத்திருந்தது. ஆனால் இப்போதோ? ராஜ்யத்திலே அநீதிகள் பெரிதாக ஆரம்பித்துவிட்டன. அரசரோ இதை எல்லாம் தெரிந்து கொண்டும் தெரியாதது போல் இருக்கிறார். அரசரின் புத்தி இப்படியும் மாறுமா என நினைத்துக் குடிமக்கள் அதிசயமும் ஆத்திரமும் கொண்டு இருக்கின்றனர்.  அரசர் ஏனோ இப்படி இருக்கிறார்." என்றார் சிங்கழகர். அதற்கு வல்லபன் இந்தச் சம்புவரையரின் நாடும் சுல்தானுக்குக் கீழே தானே வருகிறது என்று கேட்டான். ஆமாம் என ஆமோதித்த சிங்கழகர் சுல்தானுக்குச் சம்புவரையர் கப்பம் கட்டி வருவதாகவும் இல்லை எனில் இந்த ராஜ்யத்தையே அவர் இழந்திருக்க வேண்டியது தான் எனவும் கூறினார். சோழ, பாண்டியர்கள் அப்படி அடங்கி நடக்கவில்லை என்பதால் அவர்களுக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் ஏற்பட்டிருக்கும் எனவும் சிங்கழகர் கூறினார். 

மேலும் தொடர்ந்து கூறினார் சிங்கழகர். "சம்புவரையர்கள் தந்திரசாலிகள். சுல்தான்கள் உள்ளே நுழைந்ததுமே அவர்களுக்கு அடி பணிந்து விட்டார்கள்.சிற்றரசர்களாகவே இருந்து கப்பம் கட்டி வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டார்கள். ஆகவே அவர்கள் ராஜ்யம்பிழைத்ததோடு அல்லாமல் ஆட்சியும் பிழைத்துவிட்டது. "என்றார். அப்போது தத்தன் குறுக்கிட்டுச் சம்புவரையர்கள் வேதாந்த சமயங்களைச் சார்ந்தவர்கள் ஆதலால் தங்கள் சமயத்துக்கு மாற்றாக இருக்கும் சுல்தான்களை ஏன் எதிர்த்துப் போரிட்டு நாடுகளைக் காப்பாற்றவில்லை. இப்போது அடிமைகளாக இருப்பவர்களை ஏன் மீட்கவில்லை!" என்றெல்லாம் கேட்டான். 

சிங்கழகர் அதற்கு இந்தச் சுல்தான்களை எதிர்க்கும் அளவுக்கு வீரம் செறிந்தவர்கள் அல்ல இந்தச் சம்புவரையர்கள் என்றதோடு போதிய படை பலமும் இல்லை. ஏதோ இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றி வருகிறார்கள். சுல்தானியருக்குப் பயந்து பயந்து தான் இவர்கள் ஆட்சி நடக்கிறது. " என்றார். தத்தன் தனக்கு அது தெரியாது எனவும் காஞ்சிக்குள் நுழைந்ததில் இருந்து மக்கள் நிச்சிந்தையாகப் போய் வருவதையும் கோயில்களுக்குத் திருமஞ்சனக்குடங்கள் போய் வருவதையும் பார்த்துவிட்டு இங்கே சுதந்திர ஆட்சி எனத் தான் நினைத்ததாகச் சொன்னான். பூரண சுதந்திரத்துடன் சம்புவரையர்கள் ஆட்சி நடத்துகிறார்கள் எனத் தான் நினைத்ததாகவும் வல்லபனும் அதுவே நினைத்ததாகவும் சொன்னான். 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சிங்கழகர் இவை எல்லாம் வெளிப்பூச்சுக்களே! சும்மாவானும் பார்ப்பதற்கு அப்படித் தோன்றும்படி நடந்து கொள்வதாகவும் சுல்தானியர்கள் நினைத்தால் இங்கே ஆட்சியாளர்களிடம் வந்து பணம் கேட்டுத் தொந்திரவு செய்வதாகவும் அதனால் தான் இவர்களும் அதிகமாக இறை வசூலித்து மக்களைத் துன்புறுத்துவதாகவும் சொன்னார்.  மக்கள் மனம் நைந்து போய்விட்டார்கள். கோயிலில் வழிபாடுகள் என்பதெல்லாம் வெளிப்பூச்சு. காலை ஒரு நாழிகையும் மாலை ஒரு நாழிகையும் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. மற்ற நேரங்களில் கோயில்கள் அடைக்கப்பட்டுவிடும். பூஜைகள் நடப்பது கூட சுல்தானியர்கள் இருந்தால் நடப்பதில்லை. அவர்களுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது. தெரிந்தால் விபரீதங்கள் ஏற்படும்.இவர்களால் என்றைக்கும் மதுரை சுல்தான்களை எதிர்த்து நடந்து கொள்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. என்ன ஒரே ஒரு நன்மை என்றால் என்னைப் போன்ற திக்கற்றவர்களுக்கு இது "அஞ்சினான் புகலிடம்" ஆக இருந்து வருகிறது." என்று கூறி நிறுத்தினார் சிங்கழகர்.

Thursday, April 07, 2022

மஞ்சரியின் வேண்டுகோள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள்.  தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், "என்ன ஆயிற்று மஞ்சரி?" என வினவினான். மஞ்சரி அவனைப் பார்த்து, "ஐயா! அமைதியாக இருந்த நம் நாட்டிலே கடந்த இருபது/இருபத்தைந்து வருஷங்களாக என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மனம் வேதனை அடைகிறது.  நம் மூத்தோர்கள்/முன்னோர்கள் எத்தகையதொரு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் அனுபவித்தும் வருகின்றனரே! அதிலும் அரங்கமாநகரின் மனதுக்கு இனியவனான அந்த அரங்கன்! அவனுக்கே எத்தனை எத்தனை கஷ்டங்கள்! எப்படி எல்லாம் தப்பிப் பிழைத்திருக்கிறான்! இன்னமும் அவன் தன் இருப்பிடம் போய்ச் சேரமுடியவில்லையே! என்று நடக்கும் இது? நம் தாத்தா/தந்தை காலங்களில் நடக்கவில்லை எனில் நம் காலத்திலாவது நடக்குமா என எண்ணினால் மனம் சோர்ந்து போகிறது! அரங்கனுக்கே இத்தனை துன்பங்கள் நேர்ந்தது எனில் சாமானிய மக்கள் எவ்வளவு துன்பம் அடைந்திருப்பார்கள்!" என்று சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதாள்.

மேலும் தொடர்ந்து, "ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அன்றாட வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றி விட்டார்களே! அவர்கள் அந்த சுல்தானியர்களின் இந்த நடவடிக்கையால் தானே என் தாய்/தந்தை இருவரையும் நான் ஒருசேர இழந்து அநாதை ஆகிவிட்டேன். இதைப் போல் ஒவ்வொரு குடும்பமும் தங்கள்/தங்கள் அன்புக்குப் பாத்திரம் ஆனவர்களையும் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்துக்கள்/பூமி போன்றவற்றையும் இழந்து விட்டார்களே! இதற்கெல்லாம் என்ன மாற்று? எப்படி நிவர்த்தி செய்வது? அரங்கனும் தன் திருவரங்கத்தை இழந்துவிட்டான். "திரு" அவனை விட்டு நீங்கி விட்டதே! இப்படி அநாதையாய் அங்குமிங்கும் அலைகிறானே! இதைப் பற்றி யாரும் எதுவும் கேட்பதும் இல்லை. அரங்கனைப் பற்றிக் கவலைப்படுபவரும் இல்லை.  கண்டிப்பாரும் இல்லையே!"

"நம் நாடு வீரர்கள் நிறைந்திருந்த நாடு தான். ஆனால் இந்த சுல்தானியர்கள் உள்ளே நுழைந்த காலத்தின் தோஷமோ என்னமோ எல்லோரும் தங்கள் வீரத்தையும் ஆண்மையையும் இழந்து பெண்களை விட மோசமானவர்கள் ஆகிவிட்டார்களே! அவர்களுக்கு இருந்த திட மனதும் மனோபலமும் வீரமும் ஏட்டில் தான் இனி எழுதிப் பார்க்கணுமோ? எனக்கு துக்கம் அடங்கவில்லையே! மனது வேதனையில் தவித்துத் துடிக்கிறதே!" என்று கூறிய வண்ணம் மேலும் மேலும் விம்மி விம்மி அழுதாள்.  தத்தனுக்கு ஒரே திகைப்பு.  வாய் பேசாது நின்றான். ஆனால் வல்லபனுக்குள் ஆவேசம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. எரிமலை கொதிப்பது போல் அவன் உள்ளூரக் கொதித்தான். கண்களில் இருந்து துக்கக் கண்ணீருடன் சேர்ந்து அவன் உதடுகளும் ஏதோ பேசத்துடித்தன. ஆனால் பேச முடியவில்லை. ஒருவாறு அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். 

"மஞ்சரி! நீ பேசியதெல்லாம் என் உள்ளத்தில் அம்புகளைப் போல் தைத்திருக்கின்றன.  அந்த அம்புகள் கொடுக்கும் துன்பம் என்னை வாட்டி வதைக்கிறது. என் தந்தை வரையிலும் இருந்த மாந்தர்கள்  காட்டிய சிறுதுளி வீரத்தைக் கூட இப்போதுள்ள என் வயது இளைஞர்கள் காட்டவே இல்லையே! இது எவ்வளவு பெரிய கொடுமை! மற்றவர்கள் எப்படியோ! என் தந்தையின் கடைசி ஆவலும் இதுவாகவே இருந்தது. என் தாயும் என்னிடம் அதைச் சொல்லிச் சொல்லியே வளர்த்தாள். மற்றவர்கள் எப்படியோ தத்தனின் துணை கொண்டு நான் மாபெரும் லட்சியத்தை நோக்கிப் பயணப்பட்டிருக்கிறேன். அதை நிறைவேற்றி வைப்பேன். அரங்கனை அரங்கமாநகரில் கொண்டு சேர்ப்பேன்! இது சத்தியம்!" என்று ஆவேசம் வந்தவன் போல் பேசினான்.

பிறகு தன் இடுப்பிலிருந்து குறுங்கத்தியை எடுத்து மஞ்சரியின் எதிரே வைத்து அவளை அந்தக் கத்தியை எடுத்துத் தொட்டுக் கொடுக்கச் சொன்னான்.  அவள் அவ்விதம் கொடுப்பதன் மூலம் அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்குள் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் ஆவேசத்தீ அணையாமல் பாதுகாக்கும். அவன் லட்சியத்தை விட்டு இம்மி அளவும் பிறழாமல் நடக்கவும் உறுதுணையாக இருக்கும்.  மனம் வெதும்பி மஞ்சரி பேசிய வார்த்தைகளை எப்போதுமே நினைவூட்டும்!" என்றான்.

மஞ்சரி கண்களால் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் வல்லபன் பேச்சைக் கேட்டு அவள் இதழ்களில் புன்னகை ஒன்று பூத்தது கண்ணீல் நீரும் உதட்டில் முகிழ்ந்திருக்கும் புன்னகையுடனும் அவள் அந்தக் குறுவாளை எடுத்து வல்லபனிடம் நீட்டிக் கொண்டு, இப்போது தன் மனம் ஆனந்தப் பெருக்கில் திளைப்பதாகவும் உற்சாகம் அதிகம் ஆவதாகவும் கூறினாள். அவள் சொல்வதைக் கேட்ட வண்ணம் அங்கே நொண்டி நொண்டி நடந்து கொண்டு சிங்கழகர் வந்தார்.

Saturday, April 02, 2022

சிங்கழகருக்கு ஏற்பட்ட விபரீதம்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

சுற்றும் முற்றும் பார்த்த சிங்கழகர் கண்களில் அங்கே இருந்த அரங்கனும் படவில்லை. சீராம தாசரே அரங்கனையும் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டாரா? அல்லது இருவரையும் துருக்கியப் படையினர் பிடித்துவிட்டார்களா? ஆனால் அங்கே படை ஏதும் வந்து போனதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. மறுபடி மறுபடி தேடிய வண்ணம், "சீராமா! சீராமா1" எனக் குரல் கொடுத்து அழைத்தும் பார்த்தார். மாலை நெருங்கிற்று. அது வரை சீராமர் இருக்கும் இடமே தெரியவில்லை.  சற்றுக் கழித்து கருகருவென இருட்டுக் கவிந்து வரத் தாம் தனிமையில் இந்தக் காட்டில் இருட்டில் அகப்பட்டுக் கொண்டதை நினைத்து வருந்தியவண்ணம் எப்படி ஆனாலும் இன்றிரவை இங்கே தான் கழித்தாக வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்தால்!

என்ன கொடுமை. இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் தனக்கு இயங்கவில்லை என்பதைக் கண்டு கொண்டார் சிங்கழகர். திகைத்துப் போனவராகக் கொஞ்சம் சாய்ந்தாற்போல் எழுந்து கொண்டு இரு கால்களையும் நோக்கினால் மூட்டு வரை நீலம் பாரித்திருந்தது இரு கால்களிலும். அப்போது தான் அவருக்கு நினைவில் வந்தது. தாசர்களின் கடைசிக் கிரியைக்காக அவர்கள் உடல்களைத் தேடிக் கண்டு பிடிக்கையிலும் அதன் பின்னர் புதர்களை ஊடுருவிக்கொண்டு அவர்களுக்குக் கடைசிக் கிரியைகள் செய்யச் சென்றபோதும் அவ்வப்போது "சுருக்" "சுருக்" என ஏதோ குத்திக் கொண்டே இருந்தது. கூடவே காலில் வலியும் தோன்றியது. முள் செடிகள் குத்திக் காலில் வலி தோன்றியதாக நினைத்தவண்ணம் அப்போதே அதை என்ன என்றே பார்க்கவில்லை. இப்போது அவருக்குப் புரிந்தது ஏதோ விஷச் செடிகளின் முட்களோ, அல்லது விஷப்பூச்சிகளோ, விஷ ஜந்துக்களோ தன் கால்களைக் கடித்திருக்க வேண்டும். அது தான் கால்கள் மூட்டு வரை நீலம் பாரித்துவிட்டது என நினைத்தவண்ணம் கால்களைப் பார்த்தவர் மனதில் அதிர்ச்சியே மேலோங்கியது.

கால்கள் கட்டையாகிவிட்டன. தமக்கு இனி எழுந்து நடக்க முடியாது என்பதை உணர்ந்ததும் அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  உதவி இல்லாமல் தன்னால் இனி எங்கேயும் போகமுடியாது என்பதைப் புரிந்து கொண்டவராக எங்கோ சென்ற சீராம தாசர் வரட்டும். அதுவரை இங்கேயே காத்திருக்க வேண்டியது தான் என நினைத்த வண்ணம் அங்கேயே அன்று பகல், இரவு முழுவதையும் கழித்தார்.  இரண்டாம் நாள் பொழுது புலரும்போதே இனி இந்தக் காட்டில் இருப்பதில் எந்தவிதப் பலனும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார். சீராமதாசர் இனியும் வருவார் என எண்ணுவதும் வியர்த்தமானது. காட்டை விட்டு உடனே வெளியேறாவிட்டால் ஆட்கொல்லி மிருகங்களால் ஆபத்துத் தான் வந்து சேரும் என்று எண்ணிக் கொண்டு தவழ்ந்த வண்ணம் மெல்ல மெல்ல அந்தக் காட்டில் ஊடுருவிக் கொண்டு செல்லலானார். பசி, சோர்வு! இரண்டும் அழுத்தியது அவரை.  அப்படியே தவழ்ந்த வண்ணம் மேலும் மூன்று நாட்களும் கழிந்து விட்டன. காடு எங்கே முடிந்து நகரம் ஆரம்பிக்கிறது எனத் தெரியவில்லை அவருக்கு. மயங்கிக் கிடந்தார்.

அப்போது அங்கே வேட்டைக்கு வந்த செஞ்சு இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களில் ஒருவர் அவரைக் கண்டு கொண்டார்.  அவர்கள் அவர் இன்னமும் உயிருடன் இருப்பதைக் கண்டுத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு அல்லாமல் பசியுடனும் இருப்பதை அறிந்து கொண்டு தங்களிடம் இருந்த பழங்கள், தேன் போன்றவற்றைச் சாப்பிடக் கொடுத்தனர். பிறகு மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவருடைய விருத்தாந்தங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர். அவர்களில் தலைவனாக இருந்தவன் ஒரு டோலாவைக் கொண்டு வரும்படி மற்றவர்களைப் பணித்தான். உடனே ஒருவன் சென்று எங்கிருந்தோ ஒரு டோலாவைக் கொண்டு வந்தான். அந்த டோலாவில் சிங்கழகரை அவர்கள் ஏற்றினார்கள்.  நான்கு பேர் அவருடைய டோலாவைத் தூக்கிச் சென்று  காட்டைக் கடந்து நாட்டுக்கு அருகே ராஜபாட்டையில் இறக்கி விட்டார்கள். அங்கேயே விடப்பட்ட சிங்கழகர் செஞ்சு வேடர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவ்வழியாக வந்த போக்கு வண்டிகளில் மாறி மாறிப் பயணம் செய்து கடைசியில் ஒரு வழியாகக் காஞ்சிபுரத்துக்கு வந்து சேர்ந்தார். முற்றிலும் மரத்துப் போயிருந்த தம் கால்களுக்கு அங்கேயே வைத்தியரிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டு காஞ்சி நகரிலேயே வசிக்கலானார். 

இதைச் சொல்லி முடித்த சிங்கழகர் இப்போது முற்றிலும் தன்னை வேற்று மனிதனாகப் பாவித்துக் கொண்டு, "அவர் இவ்விதம் பதினெட்டு ஆண்டுகள் இந்தக் காஞ்சியில் வசித்துவிட்டார் அப்பா! அவருடைய ஆசைகள், எண்ணங்கள் , மனோரதங்கள் ஆகியவை இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் சுக்குச் சுக்காய்ச் சிதறிவிட்டன. இப்போது கேவலம் ஓர் நடைப்பிணம்!" என்று சொல்லிய வண்ணம் முட்டிக் கொண்டு வரும் கண்ணீரை அடக்க முடியாமல் கேவிய வண்ணம் தம் கதையைச் சொல்லி முடித்தார் சிங்கழகர்.

இளைஞர்கள் கற்சிலை போல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.  மஞ்சரியும் செய்வதறியாது திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். புராண இதிகாசக் கதை ஒன்றைக் கேட்டது போன்ற உணர்வில் இருந்தனர் வல்லபனும், தத்தனும். அதன் சோகமான முடிவு அவர்கள் மனங்களை அசைத்துவிட்டது. துக்கம் அந்த அறையைச் சூழ்ந்து கொண்டது. ஓரளவுக்குத் தம்மைத் தேற்றிக் கொண்ட சிங்கழகர் அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே!" என அழைத்தார். சோகமான மன நிலையிலிருந்த இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.  சிங்கழகர் மேலும் சொன்னார். " நீங்கள் கேட்டது ஒரு சோக காவியம். அதனால் உங்கள் மனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் நீங்கள் எங்கும் போக வேண்டாம். இங்கேயே இந்தக் குடிலிலேயே தங்குங்கள். என் மனதின் பாரமும் சற்று நீங்கட்டும். அதன் பின்னர் நான் மேலும் கொஞ்சம் உங்களுடன் உரையாடுவேன்." என்றார். இருவரும் மௌனமாக இருக்க சிங்கழகர் மெள்ள எழுந்திருந்து விந்தி விந்தி நடந்து புழக்கடையில் உள்ள நந்தவனத்துக்குச் சென்றார்.  இளைஞர்கள் அப்படியே அமர்ந்திருக்க அவர்கள் காதுகளில் திடீரென ஓர் விசும்பலும், கேவலும் கேட்க நிமிர்ந்து பார்த்தார்கள். மஞ்சரி தான் விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள்.

Thursday, March 31, 2022

சீராமதாசர் எங்கே! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சீராமதாசருக்கும் மற்ற மூத்த கொடவர்கள் இருவருக்கும் என்ன கதி நேர்ந்தது என்பது பற்றித் தெரியாமலேயே இங்கே சிங்கழகர் தனிமையில் கிடந்து தவித்துக் கொண்டிருந்தார். துருக்கியப் படைகள் மேலே ஏறிக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தார் ஆகையால் அந்தப் படைகளால் கொடவர்களுக்கும் அரங்கனுக்கும் என்ன கேடு நிகழ்ந்ததோ எனப் பரிதவித்துக் கொண்டிருந்தார்.  பகல் போய் மாலையும் நெருங்கியது. மாலை ஏற ஏறச் சிங்கழகரின் தவிப்பும் அதிகம் ஆகிவிட்டது. ஆனால் அவர் வெளியே வந்தால் உடனே மலையைச் சூழ்ந்திருக்கும் துருக்கியப் படைகள் கண்களில் பட்டுவிடுவார். ஆகவே அப்படியே அமர்ந்திருந்தார். மெல்ல மெல்ல அந்தியும் மறைய ஆரம்பித்தது. ஆங்காங்கே நிழல்கள் நீண்டு போய் இருட்டுக் கவிய ஆரம்பித்தது. அப்போது தூரத்திலிருந்து ஏதோ குரல் கேட்ட மாதிரி சிங்கழகருக்குத் தெரியவே கூர்ந்து கவனித்தார். "சுவாமி, அழகர் சுவாமி!" என யாரோ மெல்லிய குரலில் மிக மிகச் சன்னமாகக் கூப்பிடும் ஒலி அவருக்குக் கேட்டது. தன்னைத் தான் யாரோ அழைக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டவரின் மனதிலும்/உடலிலும் தெம்பு கூடியது. சற்றுக் கூர்ந்து கவனித்தவர் குரல் கேட்ட திசையை ஒருவாறு அனுமானித்துக் கொண்டு அந்தத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிட்டே செல்லச் செல்லக் குரலும் அருகில் கேட்கத் தொடங்கியது.

சற்றுத் தொலைவிலேயே சீராமதாசரைச் சிங்கழகர் கண்டு கொண்டார். அவரைக் கண்டதுமே சிங்கழகருக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் சுற்றுச் சூழலை மறந்து, சீராமரே! சீராமரே! எனக் கத்திக் கூப்பிட்ட வண்ணம் ஓடினார். ஓடி வந்ததில் மூச்சு இரைத்தது சிங்கழகருக்கு. சீராமதாசரை நெருங்கியதும் அவரைப் பார்த்துக் கட்டித் தழுவிக் கொண்டார். இருவருக்கும் என்ன பேசுவது எனத் தெரியாமல் பிதற்றினார்கள். உளறினார்கள்; அழுதார்கள்; மீண்டும் மீண்டும் கட்டிக் கொண்டார்கள். சிங்கழகரும் அங்கே இருந்த அரங்கனைக்கண்டு கொண்டார். உடனே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சீராமதாசரிடம் நடந்தவற்றைப் பற்றிக் கேட்டார்.  சீராமதாசரால் முதலில் பேசவே முடியவில்லை. கண்ணீர் பெருகியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு நடந்தவற்றைப் படிப்படியாகக் கூறினார். அதற்குள்ளாக அவருக்குப் பல முறை தொண்டை அடைத்ஹ்டுக் கொண்டது. சிங்கழகரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டதும் பேசுவது ஏதும் அறியாமல் கண்ணீர் உகுத்தார்.

மெல்ல மெல்ல இரவு தன் கரங்களை நீட்டியது. இருவரும் அன்றிரவு அங்கேயே தங்க முடிவு செய்து அங்கேயே உட்கார்ந்து கொண்டு பழையனவற்றை எல்லாம் பேசிப் பேசிப் பேசித் தீர்த்தார்கள். புலம்பினார்கள். மறுநாள் காலை விடிந்ததும் முதல் வேலையாக சிங்கழகர்  திருக்குருகூர் தாசர் மற்றும் வில்லிபுத்தூர் தாசர் இருவரின் திருமேனிகளையும் தேடிச் சென்றார். அவற்றுக்கான கடைசிக் கிரியைகளை முறைப்படி செய்ய விரும்பினார் அவர். அதைக் குறித்து சீராமதாசரிடம் கூறிவிட்டுக் கிளம்பினார். சீராமதாசர் எதுவுமே பேசாமல் "உம்" கொட்டினார். சிங்கழகர் அதை முன்னாலேயே கவனித்தார். சீராமதாசரால் எதுவும் பேச முடியவில்லை என்பதும் பேசுவது தெளிவாக இல்லாததையும், வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதையும் கண்டு கொண்டார்.  தாம் சொன்னதை எல்லாம் அவர் புரிந்து கொண்டாரா என்னும் சந்தேகம் சிங்கழகருக்கு ஏற்பட்டது. சந்தேகங்களின் நடுவே அவர் இப்போது முதலில் கவனிக்க வேண்டியது இறந்த இரு தாசர்களின் உடல்களைக் கண்டு பிடித்து அந்திமக் கிரியைகளை நடத்த வேண்டும் என்பதே! ஆகவே சீராமதாசரைத் தேற்றும் விதமும் தெரியாமல் அப்படியே விட்டு விட்டுச் செல்ல நினைத்தார். அதீத சோகத்தில் இருப்பவர் சற்றுத் தனியாக இருந்தால் மேலே மேலே வரும் யோசனைகளில் சரியாகிவிடுவார் என்று நினைத்தார் சிங்கழகர்.

அவரைக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு அவரிடம் இருந்து ஏதும் மறுமொழி வரும் முன்னரே சிங்கழகர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அன்று முழுதும் அலைந்து திரிந்து கடைசியில் நடுப்பகலில் இறந்து போன இரு தாசர்களின் உடல்களையும் சிங்கழகர் கண்டு விட்டார். மனதில் துக்கம் பொங்கி வழிந்து கண்கள் வழியே ஆறாய்ப் பெருகியது.  அரங்கனைப் பார்த்து, அரங்கா! அறுபது பேர் இருந்த இடத்தில் இப்போது வெறும் இரண்டு பேராக மாறி விட்டதே! இன்னும் என்னென்ன நடக்கப் போகிறாதோ என நினைத்துக் கொண்டு வருந்தி அழுதார். பின்னர் இரு தாசர்களின் திருமேனிகளையும் ஓர் ஓடையின் படுகைக்குக் கொண்டு சென்றார்.  பின்னர் தம் கைகளாலேயே மணலில் குழிகள் பறித்து அவர்கள் உடல்களை அந்தக் குழியில் கிடத்தி விழி சோர முறைப்படி பிரார்த்தனைகள் எல்லாம் செய்து பின்னர் அவர்கள் மேனிகளை மண்ணால் மூடினார். எரிக்க ஒன்றும் வழியில்லாமல் போய்விட்டதை எண்ணி மனம் நொந்தார்.  பின்னர் சீராமதாசரை விட்டு விட்டு வந்த இடம் நோக்கிச் சென்றால் அங்கே அவர் இல்லை.

Sunday, March 27, 2022

அரங்கன் எங்கே?சீராமதாசரின் கவலை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 பழசெல்லாம் நினைவுக்கு வந்ததும் சிங்கழகர் மனதிலே துக்கம் பொங்கியது. கண்களில் இருந்து பிரவாகம் எடுத்தது.  மனமே நைந்து விட்டாற்போல் இருந்தது. எதிரே அமர்ந்து கொண்டு அவருடைய முக மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் அவர் உள் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிய வரவே இருவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். அரங்கனைக் காப்பாற்ற எத்தனை எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு பேரின் உயிரிழப்பு! அரங்கா! இது உனக்கே நியாயமாய் இருக்கா? என்றெல்லாம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அடுத்துச் சிங்கழகர் பேச்சைத் தொடருவதற்காகக் காத்திருந்தனர்.  சின்னஞ்சிறு பெண்ணான மஞ்சரிக்கும் இவை எல்லாம் நடந்திருக்கிறது என்பதே நம்ப முடியாமல் இருந்தது. ஆச்சரியத்தினாலும் அச்சத்தினாலும் விரிந்த கண்களோடு சிங்கழகர் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  சிங்கழகர் கொஞ்சம் நீரைக் குடித்துத் தன்னுள் எரிந்து கொண்டிருந்த ஆக்ரோஷத்தைத் தணித்துக் கொண்டார்.  கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

"அரங்கன் என்ன ஆனான் என்பது தானே வேண்டும்? இதோ!" என ஆரம்பித்தார். தான் கண்டு கேட்டு உணர்ந்தவற்றை அவர் விவரிக்கலானார்.

அஞ்சனாத்ரி மலையின் அடிவாரத்தில் அரங்கனோடு சறுக்கி இறங்கிய திருக்குருகூர் தாசரும் அவர் மைத்துனரான வில்லிபுத்தூர் தாசரும் உயிர் இழந்ததைக் கண்ட சீராம தாசருக்கு மனம் கலங்கியது. அடுத்து என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்படியே பாறை மீது படுத்துக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தார். திடீரென அவருக்கு அரங்கன் என்ன ஆனான் என்னும் எண்ணம் தோன்றவே திடுக்கிட்டு எழுந்தார். சுற்றும் , முற்றும் பார்த்தார். சங்குப் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்த அந்தப் புதர்க்காட்டில் உற்றுப் பார்த்த போது ஏதோ காட்டுக்கொடிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதைக் கண்டார். சட்டென அவர் மனதில் இது திருக்குருகூர் தாசர் அரங்கனைப் பிணைத்துக் கொண்டு கீழே இறங்குவதற்காகத் தாம் கட்டிய காட்டுக் கொடிக் கயிறல்லவோ?  எனக் கூர்ந்து பார்த்தார். அந்தக் கொடிகள் கன்னாபின்னாவெனச் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அங்கே ஓடோடிச் சென்றார்.

ஓடிச் சென்றவர் கொடிகளின் சிக்கலைப் பிரிக்கமுடியாமல் அவரும் சேர்ந்து சிக்கிக் கொண்டுவிட்டார். திகைத்துப் போனார் சீராமதாசர்.  இதென்னடா புதுக்குழப்பம்? காட்டுக்கொடிகளைப் பிணைத்து மிருகங்களைப் பிடிப்பார்கள். அது போல் இப்போது இந்தக் கொடி என்னைப் பிணைத்துவிட்டதே! இதை எப்படிப் பிரிப்பது என்று யோசித்தார். வேறு வழியில்லாமல் பாதுகாப்புக்காகத் தம் இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்துக் கொடிகளை அறுத்து விட்டு உள்ளே சென்றார். அந்தக் கொடிகள் போகப் போகப் போய்க் கொண்டே இருந்தனவே அல்லாமல் முடிவே தெரியவில்லை. அரங்க விக்ரஹம் அந்தக் கொடியில் தான் பிணைக்கப்பட்டு திருக்குருகூர் தாசரோடு சேர்த்துக் கட்டி இருந்தது. இப்போதோ அரங்க விக்ரஹம் இருக்குமிடமே தெரியவில்லையே! இது என்ன கலக்கம்? என எண்ணிக் கொண்டு மனதில் பெருகிய துக்கத்துடன் அப்படியே கீழே அமர்ந்து விட்டார். 

"அரங்கா! இது என்ன சோதனை அப்பா! நீ இருக்கும் இடத்தை இப்போதே எனக்குக் காட்டிவிடு! இனி பொறுக்க இயலாது!: என்ற வண்ணம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார். சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தவருக்கு சூரியன் அந்தி வானில் சாய ஆரம்பித்துவிட்டான் என்பது அங்கே விழுந்திருக்கும் சூரிய கிரணங்களின் புதிய கோணத்தில் தெரிய வர அந்தக்கிரணங்களின் வீச்சு சங்கு மலர்ப் புஷ்பங்களின் செடிக்கூட்டத்தின் இன்னொரு பகுதியிலே அந்தக் கிரணம் பட்டுப் பளீரென ஒளி வீசிற்று. துள்ளி எழுந்த சீராம தாசர் அந்தப் புதர்களை எல்லாம் வெட்டி விலக்கிக் கொண்டு ஒளி தெரிந்த அந்த இடத்திற்கு முன்னேறிச் சென்றார். அங்கே  அரங்கனுக்கு என்றே ஏற்படுத்தி இருந்தாற்போல் பசுந்தழைகளாலும் ,கொடிகளாலும், மலர்களாலும் பின்னி இருந்த ஓர் படுகையில் எந்தவிதமான சேதாரமும் இன்றி யாரோ படுக்க வைக்கப்பட்டது போல் மல்லாந்து கிடந்தான் அரங்கன்.  தாய் தேடுகையில் வந்து ஒளிந்து கொண்ட குழந்தை போல் காணப்பட்டான் அவன்.

சீராமதாசருக்குப் புல்லரித்தது. "என் குட்டா! என் குட்டா!" என்று புலம்பிய வண்ணம் ஓடோடியும் வந்து அரங்க விக்ரஹத்தின் அருகே அமர்ந்தார். அரங்கனை எடுத்துத் தம் மடி மேல் ஓர் குழந்தையைப்போட்டுக் கொள்வது போல் போட்டுக் கொண்டார். அரங்கனைப் பார்த்து, "உமக்கென்ன! எந்தக் கவலையும் இல்லை. நல்லவேளையாக ஒரு குறையும் இல்லை/ ஆனால் எங்களைக் குறை உள்ளவன் ஆக்கிவிட்டீரே!" எனப் புலம்பிய வண்ணம் அரங்கனைத் தடவிக் கொடுத்தபடி பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார்.

Saturday, March 26, 2022

கொடவர்களுக்கு நேர்ந்த கதி! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 அங்கும் இங்குமாக அந்த மலைக்காட்டில் அலைந்து திரிந்து தேடியவர்களில் ஒருவர் கண்களில் மூத்த கொடவர் தென்பட அவர் இதோ, இங்கே! என்று கூச்சலிட்டார். உடனே சீராமதாசர் என்னும் மற்றொருவர் ஓடிப் போய்ப் பார்த்தால்! என்னவென்று சொல்வது! மேலிருந்து உருண்டு வருவது வெகு எளிது என நினைத்தாலும் அதைப் போல் சிரமமான ஒன்று இல்லை என்பது மூத்த கொடவரைப் பார்த்ததுமே புரிந்து விட்டது. சங்கு மலர்கள் பூத்திருந்த பூச்செடிகளின் நடுவே காலும், கையும் ஒடிந்து தோள் பட்டையிலிருந்தும் முழங்கால் மூட்டிலிருந்து பிரிந்து தனியாய்த் தொங்க, முகத்திலே கண், வாய், மூக்கு இருந்த இடங்களே தெரியாமல் ரத்தச் சேறாகக் காட்சி அளிக்கக் கீழே கிடந்த மூத்த கொடவரின் உயிர் எப்போவோ பிரிந்து விட்டது என்பது நன்கு தெரிந்தது. மனதில் வேதனை மூள மூத்த கொடவரின் மகனான சீராம தாசர், "அப்பா!" எனக்கூக்குரலிட்டுக் கொண்டு அவர் உடலையும் கைகளையும் தொட்டு அசைத்தார். பலனில்லை என்பது தெரிந்தது தான். ஆனாலும் பெற்ற மகன் ஆச்சே! மனசு கேட்கவில்லை.

வயிற்றின் ஆழத்திலிருந்து பெருக்கெடுத்ததொரு பெரிய கேவலோடு அவர் தன் தகப்பன் உடல் மேல் அப்படியே விழுந்தார். "அப்பா! அப்பா! அப்பா!" எனக் கதறிய வண்ணம் விழுந்து புரண்டார். எத்தனை நேரம் அழுதாரோ, துக்கம் கரையவா போகிறது! அவர் மிகுந்த துக்கத்துடன் தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்டு தன் மாமன் ஆன வில்லிபுத்தூர் தாசரிடம்  சென்றார். அவரோ நிலை குத்திய பார்வையுடன் ஒரே பக்கம் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவர் நிலையைக் கண்டு பயந்த சீராமதாசர் அவர் அருகே சென்று அவரிடம், "மாமா!மாமா! இங்கே பாருங்கள் மாமா! அப்பா இறந்துவிட்டாரே! பார்த்தீர்களா?" என அரற்ற வில்லிபுத்தூர் தாசரோ வாயே திறக்காமல் அமர்ந்து இருந்தார். ஏதோ சந்தேகம் மனதில் ஜனிக்க சீராமதாசர் அவரை மாமா, மாமா என அழைத்த வண்ணம் உலுக்க வில்லிபுத்தூர் தாசரின் உடல் அப்படியே கீழே விழுந்து விட்டது.

திகைத்துப் பதைத்துப் போனார் சீராமதாசர். மாமனின் கை நாடியையும் இதயத் துடிப்பையையும் சோதித்தவருக்கு மாமன் உயிருடன் இல்லை என்பது புரிய வர மாமா! எனப் பெருங்கூச்சல் இட்டார்.  பெரிய கொடவர் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் வில்லிபுத்தூர் தாசர் இறந்திருக்கிறார்.  அதை உணர்ந்ததுமே சீராமதாசர் எல்லாமும் இழந்துவிட்டேனே! எனப் புலம்பிக் கொண்டு தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது புரண்டார். தேற்றக் கூட ஆள் இல்லாக் காட்டு வனாந்தரம்.  சோகத்துடன் அப்படியே படுத்துக் கிடந்தார்.

மேற்சொன்ன கதையை சிங்கழகர் வாய் மூலம் கேட்ட வல்லபனுக்கும் தத்தனுக்கும் அரங்கனைக் காக்கும் வேலையில் எத்தனை பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகியது!  அப்போது சிங்கழகருக்கும் பேச்சே எழும்பவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட அவர் இளைஞர்களைப் பார்த்து, "சற்றுப் பொறுங்கள்! மேலே சொல்கிறேன். இப்போது துக்கத்தில் எனக்குப் பேச்சு எழும்பவே இல்லை!:" என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப் பெருகியது. இது எல்லாவற்றையும் உள்ளே கூடத்தில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருந்த மஞ்சரியும் துக்கம் தாங்காமல் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஓர் சிலை அமர்ந்திருப்பது போலவே காட்சி அளித்தாள் அவள். சிங்கழகர் அவளிடம், "அம்மா, மஞ்சரி, குடிக்கக் கொஞ்சம் நீர் கொண்டு வா!" என்று கேட்க இளைஞர்களும், மஞ்சரியும் மேற்கொண்டு அரங்கனைப் பற்றி அவர் என்ன சொல்லப் போகிறாரோ என எண்ணினார்கள். சிங்கழகர் தண்ணீரைக் குடித்த பின்னர் மேலும் ஆரம்பித்தார்.

Tuesday, March 22, 2022

அரங்கன் தப்பித்தானா? ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சற்று நேரம் யோசித்த மூத்த கொடவரான திருக்குருகூர்தாசர் மற்றவர்களைப் பார்த்துக் கூறலானார். "கீழே செங்குத்தான பகுதியில் யாரும் இல்லை என்பதாலும் அங்கே யாரும் இறங்க முடியாது என்பதாலும் இப்போது நாம் ஒரு வேலை செய்யலாம். நீங்கள் இருவரும் நல்லதொரு கயிற்றில் என்னைப் பிணைத்து என்னோடு அரங்க விக்ரஹத்தையும் சேர்த்து நன்றாகக் கட்டி விடுங்கள். காட்டுக்கொடிகளால் நல்ல உறுதியான கயிறைத் தயாரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே கொடிகளால் இன்னொரு உறுதியான கயிற்றை நீளமாகத் தயாரியுங்கள். என்னை அந்த நீளமான கயிற்றில் பிணைத்து இருவருமாகக் கீழே இறக்கி விட்டுவிடுங்கள்.  இது செங்குத்தான பள்ளமாக இருக்கிறது. யாராலும் அவ்வளவு சுலபமாகக் கீழே இறங்க முடியாது. அதன் அப்பால் இருக்கும் இறக்கத்தில் யாரும் நடந்து செல்ல முடியாது. ஆனால் உருண்டு போக முடியும். அந்தச் சரிவில் நான் தொட்டதும் நீங்கள் உங்கள் பக்கத்துக் கயிறுகளை நழுவ விடுங்கள். நான் அந்தச் சரிவில் உருண்டு உருண்டு போய்க் கொள்கிறேன். சரிவில் உருண்டு போனால் கடைசியில் நான் அடிவாரத்தை அடைந்து விடுவேன். "என்று சொன்னார்.

ஆனால் இதைக் கேட்ட மற்ற இருவரும் திடுக்கிட்டுத் திகைத்துப் பயந்து போனார்கள். இது மிக மிக ஆபத்தான காரியம் என யோசித்தார்கள். ஆனால் திருக்குருகூர் தாசரோ அரங்கனைக் காப்பாற்ற வேண்டுமானால் இப்படி எல்லாம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவாகக் கூறினார்.  ஆனாலும் இருவரும் மீண்டும் மீண்டும் யோசிக்கவே திருக்குருகூர் தாசர் அவர்களைச் சமாதானம் செய்து இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் அங்கேயே அவர்கள் இருந்தால் எப்படியும் படைவீரர்கள் வந்து பிடித்துவிடுவார்கள். அரங்கனையும் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி இருவரையும் சமாதானம் செய்தார்.  மிகவும் யோசித்துவிட்டுக் கடைசியில் வேறே வழி ஏதும் தோன்றாததால் அவர்கள் இருவரும் சம்மதித்தனர். காட்டுக்கொடிகளை அறுத்து எடுத்துக் கொண்டு வந்து கயிறு திரிக்க ஆரம்பித்தனர். 

பின்னர் மூத்த கொடவரான திருகுருகூர் தாசர் கீழே அந்தக் காட்டுத் தரையில் மல்லாந்து படுத்தார். அவர் வயிற்றின் மீது அரங்க விக்ரஹத்தைக் குப்புறப் படுக்க வைத்தார்கள் இருவருமாக. காட்டு மூலிகைக் கொடிகளால் இருவரையும் பிணைத்து நன்கு இறுகக் கட்டினார்கள்.  கட்டும்போதே அவர்கல் விக்ரஹத்தையும் கொடவரையும் தொட்டுத் தொட்டு வணங்கிக் கொண்டார்கள். பின்னர் அவரை விக்ரஹத்தோடு சேர்த்துக் கட்டிய காட்டுக்கொடிக் கயிற்றில் கொஞ்சம் பகுதியை நீளமாக விட்டு விட்டு அதில் ஒரு மூலையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து  பெரியவரின் இடுப்பில் பிணைத்துவிட்டு இன்னொரு மூலையை அங்கிருந்த பெரிய ஆலமர விழுதில் பிணைத்தார்கள்.

பின்னர் அவர்கள் மிகுந்த முயற்சியுடன் மீண்டும் மீண்டும் திருக்குருகூர் தாசரை வணங்கிக் கொண்டு, விக்ரஹத்தையும் தொட்டு வணங்கிக் கொண்டு அஞ்சலிகள் பலமுறை செய்துவிட்டு தாசரிடம் விடை பெற்றுக் கொண்டு அவரை மெல்ல மெல்ல அந்த மலை முகட்டின் நுனிக்கு எடுத்துச் சென்றார்கள். அவரோடு சேர்த்து அரங்கனையும் கொண்டு போக வேண்டி இருந்தது. கனம் தாங்கவில்லை. எப்படியோ மெதுவாக எடுத்துச் சென்று விட்டார்கள்.  பின்னர் மெதுவாகக் கிழவரையும்  அவரோடு இறுக்கிக் கட்டி இருந்த அரங்கனையும் சேர்த்து மெல்ல மெல்ல நிதானமாகக் கீழ் நோக்கி விட்டார்கள். பெரியவரும் கயிற்றில் தொங்கிய வண்ணம் ஊசலாடிக் கொண்டு கீழ் நோக்கிப் பயணித்தார். அந்த மலை முகடு கீழே பார்க்க முடியாதவண்ணம் உச்சியில் மிகவும் வளைந்தும் நெளித்தும் இருந்தது.  என்றாலும் பயத்துடனேயே மற்ற இரு கொடவர்களும் மெல்ல மெல்ல கொடிக்கயிற்றை நழுவ விட்டார்கள். உத்தேசமாக முன்பே கயிற்றில் கணித்துள்ள இடம் வந்ததும் முழுக்கொடியையும் கீழே நழுவ விட்டார்கள்.

கீழே சென்று கொண்டிருந்த திருக்குருகூர் தாசருக்குச் சரிவு தட்டியது, உடனே கிடு கிடு சரிவில் அரங்கனோடு சேர்ந்து உருண்டு உருண்டு வெகு வேகமாகப் போனார். சர்ரென இறங்கிய அந்தச் சரிவில் கீழே நெடுந்தூரம் அப்படி உருண்டு பயணம் செய்த பின்னரே அடிவாரம் வந்தது.  அந்தக் கடினமான பாறைச் சரிவில் கல்லிலும், முள்ளிலும்,, புதர்களிலும் உருண்டு மேலே எல்லாம் காயம் பட்டுக் கொண்டு எதையும் லட்சியம் செய்யாமல் அரங்கனைக் காப்பாற்றுவதே குறிக்கோளாய் தாசர் உருண்டு கொண்டிருந்தார்.  அவர் உருண்டு போனதைப் பார்த்த இரு கொடவர்களும் உடனே தாங்களும் அடிவாரம் செல்ல வேண்டும் என்று எண்ணினார்கள். அதன்படியே இருவரும் அடிவாரத்திற்கு இறங்க ஆரம்பித்து இரண்டே நாழிகையில் கீழே இறங்கி மூத்த கொடவரையும் அரங்கனையும் தேட ஆரம்பித்தனர். 

Sunday, March 20, 2022

கொடவர்களைத் துரத்தும் துருக்க வீரர்கள்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

 சிங்கழகர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லபனுக்கு ஆச்சரியமும் வருத்தமும் ஒரு சேரத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அரங்க நகரிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய அறுபது பேரில் இன்று மீதம் இருப்பவர்கள் சொல்பமே. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  நம்பிக்கை அவர்களைக் கைவிடவில்லை. அரங்கனை எப்படியானும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் அவர்களுடைய தீவிரமான முடிவு ஓர்  சமுதாயத்தின் நம்பிக்கையையே கட்டிக் காத்துக் கொண்டிருந்தது.  ஓர் அருமையான சமுதாயத்தின் நம்பிக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தவன் அந்த அரங்கன். இவனைக் காப்பாற்ற எத்தனை பேர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! இதை நீனைக்க நினைக்க வல்லபன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிங்கழகரைப் பார்த்துக் கண்கள் கலங்கிய வண்ணம் தன் மனம் எவ்விதம் துன்பத்தால் குமுறுகிறது என்பதைச் சொன்னான் வல்லபன். அதற்குச் சிங்கழகர் வல்லபனின் நல்ல உள்ளத்தையும் நேர்மையான நடத்தையையுமே அது குறிப்பதாகச் சொன்னார்.  நல்ல ஆத்மாக்களுக்கே இப்படி எல்லாம் தோன்றும் எனவும் அரங்கனைத் தேடிக் கண்டு பிடிப்பாரில்லாமல் தாம் இத்தனை ஆண்டுகளாக வருந்திக் கொண்டிருந்ததையும் சொன்னார். இப்போது இவர்கள் இருவரையும் பார்த்ததும் தம் மனம் கொண்ட ஆறுதலையும் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அவர்கள் இருவரிடமும் மேலே நடந்தனவற்றையும் தாம் சொல்லப் போவதாகவும் அதையும் கேட்கும்படியும் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தார்.

அஞ்சனாத்ரி மலையடிவாரத்தில் உள்ள காட்டில் அடர்ந்து வளர்ந்து கிடந்த புதர்களின் மறைவிலே நின்றவண்ணம் சிங்கழகர் பரிதவித்துக் கொண்டிருந்தார். துருக்கிப் படைகள் பேர் ஆரவாரத்தோடு காட்டை ஊடுருவிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தன. காட்டில் தோன்றிய பேர் ஆரவாரத்தால் கலங்கிய பக்ஷிகளும், மிருகங்களும் அங்கும், இங்குமாக ஓடி அலைக்கழிக்கப்பட்டன.  இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிங்கழகருக்கோ செய்வது என்ன என்று தெரியாமல் கலக்கம் ஏற்பட்டது.  கண்ணீர் பெருக்கிய வண்ணம் இனி தாம் செய்வது எதுவும் இல்லை; என்ன நடக்கப் போகிறதோ நடக்கட்டும். வேறே வ்ழி இல்லை என நினைத்தவராய் அந்தப் புதர்களிலேயே மறைந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

படை வீரர்கள் அடிவாரக்காட்டை அடைந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் அங்கும் இங்குமாகத் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டிருப்பதையும்  தங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும் மேலே ஏறிக் கொண்டிருந்த மூன்று கொடவர்களுக்கும் தெரியாது.  ஆபத்து இனித் தொடரப் போவதில்லை என்று நினைத்த வண்ணம் கவலை இல்லாமல் ஆனால் வேகமாக மலை மேல் ஏறிக் கொண்டிருந்தனர். போகும் வழியெல்லாம் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மேலே ஏற ஏற ஆங்காங்கே பாறைக்கற்களும், தரையெல்லாம் கற்கள் நிரம்பியனவாகவும் காணப்பட்டன. கொஞ்ச தூரத்துக்கு ஒரே வெட்டவெளியாகவும் இருந்தது. அந்த வெட்டவெளியிலே அரங்கனைத் தூக்கிக் கொண்டு அவர்கள் சென்றதைக் கீழே இருந்த வீரர்களில் சிலர் பார்த்துவிடவே ஒரே கூக்குரல். கோஷம். திடீரென எழுந்த பெரிய ஆரவாரத்தைக் கேட்ட கொடவர்களும் திரும்பிப் பார்க்க மேலிருந்து கீழே படைவீரர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டுஇருப்பதைக் கவனித்து விட்டார்கள். 

உடனே அரங்கனைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக அந்தப் பெரிய பரந்த வெளியைக் கடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் வெகு விரைவில் மறுபடி புதர்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்ததும்  இனி திருப்பதி மலை மேல் ஏறி அரங்கனைக் காப்பாற்றுவது கஷ்டம் என்பதோடு கோயிலுக்கும் அவர்களால் தீங்கு ஏற்பட்டுவிடும் எனப் பயந்த கொடவர்கள் அருகிலுள்ள மலை முகட்டின் மேலே ஏறி எங்கானும் மறைந்து கொள்ளலாம் என நினைத்தனர். அதற்குள்ளாகக் கீழே என்ன நடக்கிறது எனக் கவனித்த கொடவர்களுக்குப் படை வீரர்கள் தங்களில் ஒரு பிரிவினரை மலை மேல் ஏறிக் கொடவர்களைத் தொடரும்படி ஆணை இட்டுக் கொண்டிருந்ததையும் அதன்படி வீரர்கள் மலைமேல் ஏறத் தொடங்குவதையும் கண்டனர்.  இனி என்ன செய்யலாம் எனக் கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தனர். 

மலை முகடுகளைக் கூர்ந்து சுற்றிச் சுற்றிப்பார்த்தனர் மூவரும். மூவரின் பெயர்களும் முறையே திருக்குருகூர் தாசர், திருவில்லிபுத்தூர் தாசர், சீராம தாசர் ஆகியோர் ஆகும். திருக்குருகூராரின் மைத்துனர் திருவில்லிபுத்தூர் தாசர் ஆவார். குருகூர் தாசரின் மகன் சீராம தாசர் ஆவார். இப்போது மேலே ஏறிக்கொண்டிருக்கும் படை விரைவில் அவர்கள் இருக்குமிடம் வருவதற்குள்ளாக ஏதேனும் செய்ய வேண்டுமே. ஆகவே மூத்தவரான திருக்குருகூர் தாசர் (அரங்கத்தை விட்டுக் கிளம்புகையில் அறுபத்திரண்டு வயசில் இருந்தவருக்கு இப்போது எண்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. நல்ல மூப்பு) அவர் மற்ற இருவரையும் பார்த்துத் தப்புவதற்கு எப்படியேனும் வழி தேடவேண்டும் என்று சொல்லிச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.  அந்த மலை முகடு மூன்று பக்கங்களிலும் சரிவாகக் காணப்பட்டது. நான்காவது பக்கம் செங்குத்தாகப் பாம்பு படமெடுத்தாற்போல் காணப்பட்டதையும் கவனித்தவருக்கு அந்தச் செங்குத்தான மலைமுகட்டில் ஏறுவது கஷ்டம் என்பதால் படை வீரர்கள் அந்தப் பக்கம் யாரையும் ஏவவில்லை என்பதையும் கண்டு கொண்டார். 


Tuesday, March 15, 2022

சிங்கழகரின் அனுபவங்கள்! தொடர்ச்சி 3!

 கிட்டத்தட்டப் பத்து மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது தொடர்ந்து எழுத.  போன வருஷம் ஜூன் மாதம் உடம்பு முடியாமல் போனதில் இருந்து எத்தனையோ முறை முயன்றும் இதை எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும் எனக் காலையிலிருந்தே முயன்று பார்த்துவிட்டு ஒரு வழியாக இப்போ உட்கார்ந்திருக்கேன். நல்லபடியாகத் தொடர அந்த அரங்கன் தான் அருள் செய்யணும். பங்குனித் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அரங்கன் உறையூருக்குப் போயிருக்கான். கமலவல்லியைத் திருமணம் செய்து  கொள்ள. நேற்று எங்க தெருவழியாகத் தான் போயிருக்கான். ஆனால் முன் அறிவிப்பு இல்லாததால் எங்களுக்கெல்லாம் தெரியலை. நான் அரங்கனைப் பார்த்தே சுமார் இரண்டரை வருஷங்கள் ஆகின்றன. :(

*************************************************************************************

துருக்கியர் எங்களைப் பார்த்துவிட்டனர் என்பது அவர்கள் கூக்குரலில் இருந்தும் அவர்கள் ஓடி வருவதில் இருந்தும் புரிந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த எங்களை மாலழகர் என்பார் பார்த்துவிட்டு," எனக்கு மல் யுத்தமும் தெரியும், சிலம்பமும் தெரியும்.  ஆகவே வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் உங்களைத் தொடராமல் நான் இங்கேயே தடுத்து நிறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு விரைவில் வெகுதூரம் போய்விடுங்கள்!:" என்றார். அது தானே ஒரே வழி. ஆகவே நாங்களும் மாலழகரை அங்கே தனியாக விட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியில் விரைந்தோம். இங்கே மாலழகருக்கும் வீரர்களுக்கும் கடுமையான போர். என்றாலும் தனக்குத் தெரிந்த சிலம்ப வித்தையை வைத்துக் கொண்டு மாலழகர் அவர்கள் தன் மேல் வாள் வீசுவதைக் கூடியவரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.  என்றாலும் ஆயுதங்கள் இருந்தமையால் அவர்கள் விரைவில் மாலழகரைக் குற்றுயிராகக் கீழே தள்ளினார்கள்.

பின்னர் அவர்கள் மாலழகரிடம் அவர் யார் எனவும், எங்கே போய்க் கொண்டிருக்கிறார் எனவும் விசாரித்தார்கள்.  உடல் உபாதை பொறுக்க முடியாத மாலழகர் "அரங்கா! அரங்கா!" எனப் புலம்ப ஆரம்பிக்க அவர்களோ இவர்கள் அந்த அரங்க விக்ரஹத்தைத் தான் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் போலும். கூடவே கையில் வைத்திருந்த மூட்டைகளில் அரங்கனின் ஆபரணங்களும், வைர, வைடூரியங்களும், ரத்தினங்களுமாக இருக்க வேண்டும். வாருங்கள் விரைவில் சென்று அவர்களைப் பிடிப்போம் என அவர்களில் ஒருவன்மற்றவர்களைத் துரிதப்படுத்த  இன்னொருவன் நாம் தனியாகப் போவதை விடக் கோட்டைக்குள் சென்று மற்றப்படை வீரர்களையும் அழைத்துச் சென்றால் விரைவில் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று யோசனை சொல்ல அதன் பேரில் அவர்கள் அனைவரும் கோட்டைக்குச் செல்ல ஆயத்தம் செய்தார்கள். போகிற போக்கில் ஏற்கெனவே காயங்களால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த மாலழகரின் கால்களையும்  வெட்டி விட்டார்கள்.

அப்போது சிங்கழகர் மேலும் தொடர்ந்து, "மேற்சொன்ன சம்பவம் நடந்த போது நான் மற்ற இருவருடனும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அரங்க விக்ரஹம் ரொம்பக் கனமாக இருந்தபடியால் மாறி மாறித்தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு சென்றோம். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் நான் மற்றவர்களைப் பார்த்து அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் போய் மாலழகர் கதி என்ன எனப் பார்த்து வருவதாகச் சொன்னேன். பின்னர் நான் விரைந்து வந்து மாலழகரைத் தேடிக் கொண்டு அவர் கீழே விழுந்து கிடக்கும் இடம் வந்து அவரைப் பார்த்து மனம் நொந்து போனேன். இரண்டு கால்களும் வெட்டப்பட்டுக் குற்றுயிராக இருந்த மாலழகரின் உயிர் பிரியும் தருவாயில் இருந்தார்.  கண்ணீருடன் அவரருகே சென்று அவர் தலையைத் தூக்கி என் மடியில் வைத்துக்கொண்டு அவரை அழைத்தேன். மிகச் சிரமப்பட்டுக் கண் திறந்து பார்த்த அவர் என்னிடம்,"சீக்கிரம், சீக்கிரம் விரைந்து செல்லுங்கள். அந்தப் போக்கிரிகள் அரங்கன் உங்களிடம் இருப்பதை எப்படியோ கண்டு கொண்டார்கள். படை வீரர்களை அழைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி உங்களைக் கண்டு பிடித்துவிடப் போகிறார்கள். விரைந்து சென்று அரங்கனையும் மற்றவர்களையும் காப்பாற்றுங்கள்!" எனக் கை கூப்பி வேண்டிக் கொண்டார்.  உடனே அவர் உயிர் உடலில் இருந்து பிரிந்து சென்றது.

அவர் உடலை அங்கே இருந்த பள்ளத்தில் விட்டுவிட்டுச் செடி, கொடி, கம்புகள், இலைகள், தழைகளால் மூடினேன். பின்னர் விரைவாக மற்ற இருவரையும் அரங்கனோடு விட்டு விட்டு வந்த இடம் நோக்கி ஓடினேன். அவர்களிடம் மாலழகர் கூறிய விஷயத்தைக் கூறிவிட்டு படை வீரர்கள் அங்கே அவர்களைத் தேடிக் கொண்டு வந்து சேர்வதற்குள்ளாக நாம் வெகு தூரம் போய்விட வேண்டும் என்றும் சொன்னேன். இம்மாதிரித் திக்குத் தெரியாமல் பல காத தூரம் ஓடிய எங்கள் கண்களில் பட்ட அஞ்சனாத்ரி மலை மனதில் ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. மலை மேல் ஏறி மேலே போய்விட்டால் இந்த வீரர்களிடமிருந்து தப்பிக்கலாம் என நினைத்து அதைச் சொல்வதற்குள் மற்றக் கொடவர்கள் என்னிடம்,  அவர்கள் அரங்கனைத் தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறுவதாகவும் என்னைக் கீழேயே இருந்து வீரர்கள் வருவதைக் கண்காணிக்கும்படியும் சொன்னார்கள்.  சுமார் 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு எவராலும் தொந்திரவு நேராது என்பது உறுதியானதும் என்னையும் மேலே வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.  சரி என ஒத்துக்கொண்டு அவர்களை மலை மேல் ஏறச் சொல்லிவிட்டு நான் மட்டும் பாறைகளுக்கும் புதர்களுக்கும் நடுவில் இருந்த குகை போன்ற இடத்தில் மறைந்து கொண்டேன். சில நாழிகைகளிலேயே பேரிரைச்சல் கேட்டது.  சற்று வெளியே வந்து எட்டிப்பார்த்தால் துருக்க வீரர்கள் காட்டிலிருந்து வெளியே ஓடி வந்து அஞ்சனாத்ரி மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். திடுகிட்ட நான் என்ன செய்வது எனத் தெரியாமல், "அரங்கா! அரங்கா!" எனப் புலம்பத் தொடங்கினேன்.