எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 30, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜ்வரதேவர்!


நடராஜ தத்துவம் பற்றி இன்னும் நிறையக் குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.  அதுக்குள்ளே இங்கே அடுத்த மூர்த்தி பற்றிப் பார்க்கலாமா?  அடுத்தவர் ஜ்வரதேவர். சின்ன வயசிலே எனக்கு அடுத்தடுத்து ஜுரம் வந்து கொண்டே இருக்கும்.  மீனாக்ஷி கோயிலில் ஜ்வர தேவருக்கு யாரானும் அர்ச்சனை, அபிஷேஹம்னு பண்ணிப் பிரசாதம் கொண்டு வந்து கொடுப்பாங்க.  என்னோட ஜுரம் அதுக்கெல்லாம் மசிஞ்சதில்லை.  எத்தனை நாள் இருக்கணுமோ இருந்துட்டுத் தான் போகும்.  ஆனால் ஜ்வரதேவர்னு ஒருத்தர் இருக்கிறதைச் சின்ன வயசிலேயே தெரிந்து கொண்டேன் என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.  இந்த ஜ்வரதேவரும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் ஒருத்தரே.

மஹாபலியின் மகன் பாணாசுரன்.  இவன் மனைவி சுப்ரதீபிகை.  இருவரும் ஈசனிடம் பக்தி பூண்டவர்கள்.  நர்மதை நதிக்கரையில் சிவலிங்கம் அமைத்து தினந்தோறும் ஆயிரம் முறை சஹஸ்ரநாமாவளிகளால் அர்ச்சனை செய்து வந்தான்.  ஈசனும் மகிழ்ந்து அவன் கேட்ட வரமான, அழிவற்ற நிலையும், நெருப்பிலான மதில் சுவரும் அனைத்து உலகையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து ஆளும் வல்லமையும், தேவாதி தேவர்களின் அடித்தாமரையும் கொடுத்து அருளினார்.  தினந்தோறும் தனக்கு இருந்த ஆயிரம் கைகளாலும் பாணாசுரன் குடமுழா வாசித்து ஈசனை மகிழ்வித்து வந்தான்.  ஈசன் மிகவும் மகிழ்ந்தார்.  அவனுடனேயே வசிக்கவும் சம்மதித்தார்.  மேலும் ஈசனைத் தவிர வேறு எவராலும் தன்னை வெல்ல முடியாது என்னும்படியான வரத்தைக் கேட்க  தன்னுடன் அவன் போர் செய்யலாகாது எனவும், கண்ணன் வந்து அவனைத் தோற்கடிப்பான் எனவும் கூற பாணாசுரன் கோபம் மீதூற,” யார் அந்தக் கண்ணன்?  எங்கு உள்ளான்?  என்று வருவான்?” எனப் பரபரத்தான்.  “அவன் பேரன் தான் உனக்கு மாப்பிள்ளையாகப் போகிறான்.” என ஈசன் சொல்ல,” கண்ணன் பேரனுக்கு என் மகளை மணம் முடிக்க மாட்டேன்.” என்று பாணாசுரன் கூறிவிட்டான்.

காலக்கிரமத்தில் பாணாசுரனுக்கு ஒரு மகள் பிறக்க அவளுக்கு உஷை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.  உஷைக்குத் தக்க பருவம் வந்தபோது கன்னிமாடத்தில் அக்கால வழக்கப்படி அவள் வசித்தாள். அப்போது ஒரு நாள் கனவில் தான் ஓர் அழகிய இளைஞனோடு பந்து விளையாடுவதாய்க் கனவு கண்டாள் உஷை.  அந்தக் கனவிலேயே அந்த இளைஞனைத் தான் மணம் செய்து கொள்வதாயும் கனவு கண்டாள்.  விழித்தெழுந்த உஷை கண்டது கனவு என்றறிந்து மனம் வருந்த, அவள் தோழி சித்ரலேகை என்பாள் அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசர்கள், இளவரசர்கள், வீரர்கள் என அனைவரையும் சித்திரம் வரைந்து காட்ட ஒவ்வொருத்தரையும் ஒதுக்கிய உஷை கடைசியில் கண்ணன், பலராமன், கண்ணன் மகன் ப்ரத்யும்னன் ஆகியோரின் சித்திரத்தைப் பார்த்து மரியாதையும் வெட்கமும் காட்ட அடுத்து ப்ரத்யும்னன் அநிருத்தனின் சித்திரத்தைப்  பார்த்து மிகவும் வெட்கம் அடைந்து இவனே அந்த மணாளன் எனச் சொல்கிறாள்.

சித்ரலேகை உடனே எவ்வாறோ துவாரகை சென்று அநிருத்தனிடம் விஷயத்தைக் கூறி உஷையைக் காண அழைத்து வந்துவிடுகிறாள்.  இருவரும் உஷையின் பெற்றோருக்குத் தெரியாமல் காந்தர்வ விவாஹம் அக்கால வழக்கப்படி செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.  இது எவ்வாறோ பாணாசுரனுக்குத் தெரியவர, அவன் அநிருத்தனைக் கொல்ல முயன்றான்.  அநிருத்தன் அங்கிருந்து சென்று தன் தாத்தாவான கண்ணனிடம் விபரத்தைக் கூறுகிறான்.  பாணாசுரனைக் கொன்று அவன் அகம்பாவத்தை அழித்து அவன் ஆயிரம் கைகளையும் வெட்டி  உஷையைக் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாய்க் கண்ணன் கிளம்பிச் செல்கிறான்.