எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 28, 2021

வல்லபனின் கேள்விகள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 தத்தன் தனியாக விசாரிக்கப் போயிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் பெண் மஞ்சரி அவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலையையும் தெரிவித்தாள். குறுகிய காலத்தில் தத்தன் மேல் அந்தப் பெண் காட்டும் ஈடுபாட்டையும், அன்பையும் கண்ட வல்லபன் ஆச்சரியப் பட்டான். அவர்கள் பயணத்தின்போதும் வரும் வழியெல்லாம் அவள் தத்தனுடைய சௌகரியங்களையும், அவன் உடல் நிலை மீதும் மிகுந்த கரிசனம் காட்டினாள்.  அவனுக்குத் தவறாமல் மருந்துகள் கொடுப்பது, சரியாக உணவு உண்டானா எனக் கவனிப்பது, அவன் துணிகளைத் தோய்த்து உலர்த்தித் தருவது என அவள் காட்டிய ஈடுபாடு வல்லபனுக்குள் ஆச்சரியத்தையும் தோற்றுவித்திருந்தது. வல்லபனுக்கு ஒரு பெண் ஒரு ஆண்மகன் மேல் அன்பும், பாசமும் கொண்டு விட்டால் அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் குறித்து வியப்பு ஏற்பட்டது. அதோடு அந்தப் பெண் அந்த ஆண்மகனிடம் காட்டும் ஈடுபாடும் சேவைகளும் இனிமையானவை என்று எண்ணும் அதே சமயம் அதன் மூலம் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் ஏற்படும் வேதனைகளையும் எண்ணினான். தானும் மகரவிழியாள் எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாமல் அவதிப்படுவதையும் அதனால் தன் மனதில் எழும் வேதனைகளையும் நினைத்துப் பெருமூச்செறிந்தான்.

இப்போது அந்த மகர விழியாள் இங்கே இருந்திருந்தால்? இதை எண்ணிய வல்லபனுக்குத் தனக்கு அவள் இப்படி எல்லாம் சேவைகள் செய்திருப்பாளா என எண்ணிப் பார்க்க அந்த எண்ணங்களே அவனுக்கு இன்பமயமாக இருந்தன. ஆனால் அவை உண்மையில் நடக்காது எனவும்,அ வள் யாரோ அரச குடும்பத்து வாரிசு எனவும் என்னதான் அவள் தன்னைக் காதலித்தாலும் திருமணம் என வந்தால் அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்வது நடக்காத ஒன்று என்பதும் வல்லபனுக்குப் புரிந்தது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் அவனுக்கு தத்தன் மேல் கொஞ்சம் பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  என்றாலும் மீண்டும் மீண்டும் அவன் மனதினுள் மகரவிழியாளின் முகமே தோன்ற அவளைக் குறித்து மஞ்சரியிடம் கேட்டால் என்ன என்னும் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.  இப்போது இங்கே தத்தனும் இல்லை. ஆகவே இதுவே நல்ல தருணம் என நினைத்தான் வல்லபன். மேலும் அந்தச் சேவகர்கள் கூடவே அந்த மகரவிழியாளையும் அழைத்து வந்து தான் இருந்த இடத்திற்கு எதிரே அவளை வைத்திருந்ததை நினைவு கூர்ந்தான். ஆகவே மஞ்சரிக்கு அவளைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

உடனே அவன் மஞ்சரியிடம்,  நல்லூரில் அந்த சேவகர்கள் வந்தபோது தனியாக வந்தார்களா? அல்லது கூடவே ஒரு பெண்ணும் வந்தாளா என்று கேட்டான்.  அவள் ஏதானும் பார்த்தாளா என்று அறியவே அவன் கேட்டான். ஆனால் அதற்கு மஞ்சரி தான் அந்தப் பெண்ணைப் பார்த்ததோடு அல்லாமல் அவள் கூடவே இரண்டு நாட்கள் இருந்ததாயும், அந்தப் பெண் உடல் நலமில்லாமல் இருந்ததாயும் தெரிவித்தாள். அதனால் தான் அந்த சேவகர்கள் அங்கேயே தங்கி அவள் உடல் நலம் கொஞ்சம் சொஸ்தம் ஆனதும் கிளம்பினார்கள் என்றும் சொன்னாள்.  வல்லபன் மனம் பதைத்தது. எனினும் வெளியே காட்டிக் கொள்ளாமல் என்ன உடம்பு என விசாரித்தான். நல்ல ஜூரமாகவும் அதோடு வயிற்று வலியும் சேர்ந்து கொண்டதாக மஞ்சரி சொன்னாள். பிரக்ஞையே இல்லாமல் இருந்தவளை முதலில் ஆதுரசாலையில் சேர்த்ததாகவும், பிறகு அங்கே நடமாட்டம் அதிகம் இருந்ததால் வேறே தனி வீட்டுக்கு அவளைக் கொண்டு சென்றதாகவும், எவரும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவள் இருப்பதையே ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

தன்னையும், வைத்தியரையும் மட்டும் நெருங்க விட்டதாய்ச் சொன்ன மஞ்சரி தான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணுக்கு வைத்தியம் செய்யும்போது நான் கூட இருப்பது அவளுக்கும் அனுகூலம் என நினைத்திருப்பார்கள் என்றும் சொன்னாள். ஆனால் வீட்டுக்கு அவளை எடுத்துச் சென்ற பின்னர் தன்னை அந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் போகும்போது தன்னையும் வைத்தியரையும் கடுமையான எச்சரிக்கைகளால் பயமுறுத்திவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அதோடு இல்லாமல் அந்த ஆதுரசாலைக்கு வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இதற்காக ஒரு நாடகமும் நடத்தியதாகச் சொன்னாள். வல்லபன் ஆவலுடன் என்ன நாடகம் எனக் கேட்க மஞ்சரி  மேலே சொன்னாள். அங்கே சேவகன் ஒருவன் காலில் அடிபட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்திருப்பது போல் கிடந்தான். ஆனால் அவன் உண்மையில் அடிபட்டுக்கொண்டவன் எல்லாம் இல்லை. அந்தப் பெண் ஆதுரசாலையில் தனி அறையில் இருந்ததால் அங்கே வருபவர்களைக் கண்காணிக்க அந்தச் சேவகன் அங்கே வந்து படுத்துக் கொண்டான் எனவும் அவனுக்குத் துணையாகச் சிலர் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சொன்னாள். 

பின்னர் அந்தப் பெண்ணைப் பற்றி அவள் வர்ணித்தாள். அவள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அவள் ஓர் ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அந்தச் சேவகர்கள் அவள் யாரோ ஓர் பிரபுவின் பெண் என்றே சொன்னதாகவும் சொன்னாள். மேலும் அந்தப் பெண் எப்போதும் மயக்கத்திலேயே இருந்ததாகவும் அது இயற்கையாக இல்லை என்பதால் வைத்தியருக்கும் அவளுக்கும் பயம் ஏற்பட்டதாகவும் சொன்னாள். இருவருக்குமே அவளை இவர்கள் கடத்திச் செல்வது புரிந்து விட்டதாகவும் அதனாலேயே அவளை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.  வல்லபன் அவள், அந்த மகரவிழியாள், பேசினாளா என்றும் எப்படிப் பேசினாள் என்றும் தீவிரமாகக் கேட்டறிந்ததைக் கண்ட மஞ்சரி சிரித்தாள். "உங்களுக்குத் தெரிந்தவளா?"என்று வல்லபனிடம் கேட்க அவனோ அவள் மீது தனக்கு ஓர் அனுதாபம் தோன்றியதாகவும் அதனால் கேட்டதாகவும் சொன்னான். 

Tuesday, May 25, 2021

காஞ்சிபுரத்தில் இளைஞர்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

தயா சதகம் பாடி கோபண்ணாவை வழி அனுப்பி வைத்தார் தேசிகர். கோபண்ணாவும் தன் அந்தரங்க வேலைக்காரர்களுடன் கிழக்கு நோக்கித் திருமலையில் போய்த் தேடும் எண்ணத்துடன் கிளம்பினார். இரண்டாவது கோஷ்டியாக அவர்கள் சென்றனர்.
***************************************************** 
இங்கே வல்லபனும், தத்தனும் கடைசியாகத் தங்கிய இடத்திலிருந்து இடைவிடாது பயணித்துக் காஞ்சிபுரத்தை அடைந்திருந்தனர். காஞ்சிபுரம் எத்தனையோ பேரின் ஆட்சிகளைக் கண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் சம்புவராயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சம்புவராயரின் ராஜ்யத்திற்கு "ராஜ கம்பீரம்" என்னும் பெயர் வழங்கி வந்தது.  காஞ்சிபுரம் செல்ல அவர்கள் மனம் தயங்கினாலும் வேறு வழியில்லாமல் மஞ்சரிக்காகச் செல்ல வேண்டி வந்தது. தங்களிடம் அவள் பொறுப்பை அவள் தாத்தா சுமத்திவிட்டதாக இருவருமே நினைத்தனர். காலை வேளையிலே காஞ்சிபுரத்துக்குள்ளே நுழைந்த அவர்கள் அந்த நகரின் வீதிகள் அப்போது இருந்த சுறுசுறுப்பைக் கண்டு வியந்தார்கள். இத்தனைக்கும் பழைய பெருமை எல்லாம் குறைந்து இருந்தது காஞ்சிபுரம். யானை ஒன்றின் மீது திருமஞ்சனக்குடம் வைக்கப்பட்டு அதன் அருகே இருபக்கமும் அம்பாரியில் பட்டாசாரியார்கள் வீற்றிருந்து கவரி வீசி வர, சங்குகளும் எக்காளங்களும் சப்தமிட பெரிய பெரிய குடைகளுடன் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட இளைஞர்களுக்கு வியப்பு அதிகமாய் இருந்தது. இம்மாதிரி ஒரு காட்சியை அவர்கள் கண்டதே இல்லை.

நகரத்தின் வீதிகள் கலகலப்புடன் இருந்ததோடு அல்லாமல் போவோரும் வருவோருமாக, வண்டிகள் ஆங்காங்கே ஓசைப்படுத்தப் பல்லக்குகளிலும் பயணித்த மனிதர்களோடு தெருக்கள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன.  அங்கே வரை சுல்தான்களின் கொடுமைகள், கொடூரங்கள் வராத காரணத்தால் மக்கள் முகங்களும் மலர்ந்து நிச்சலனமாகக் காணப்பட்டன. இது வல்லபனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.  எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, கமுகு, வாழைமரங்கள் போன்றவையும் கட்டப்பட்டிருக்கவே ஊரில் ஏதோ திருவிழா/அல்லது வேறு ஏதோ விசேஷம் என இருவரும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.  எங்கு பார்த்தாலும் அலங்காரப் பந்தல்களும், அலங்கரிக்கப்பட்ட விசித்திரமான சித்திரங்களுமாகக் காணப்பட்ட வீதிகள் அத்ஹ்டனையும் சுத்தமாகவும் நீளமும் அகலமுமாகக் காணப்பட்டதோடு விதம் விதமான மாக்கோலங்கள் வீதிகளை அலங்கரித்தன.  வல்லபனுக்கும் தத்தனுக்கும் தாங்கள் ஏதோ மாயாலோகத்தில் நுழைந்து விட்டாற்போல் உணர்ந்தார்கள். 

ஆங்காங்கே திண்ணைகள், மாளிகையின் பெரிய கூடங்களில் திவ்யப்ரபந்தங்களைச் சேவிக்கும் கோஷங்களும் அவ்வப்போது கேட்டன.  அதைத் தவிரவும் ஆங்காங்கே பல வீடுகளில் இருந்து வேத கோஷங்களும் ப்ரபந்தங்களின் கோஷங்களுக்கு இணையாகப் போட்டி போட்டுக் கொண்டு கேட்டன.  அதைக் கண்ட வல்லபனுக்கு நெஞ்சு குமுறியது! தத்தனிடம், "தத்தா! நம் நாடும் தமிழ் பேசும் நாடு தானே! அங்கேயும் இப்படித்தானே இருந்திருக்க வேண்டும். இத்தனை கோலாகலங்களோடு ஜனங்கள் வாழ்ந்திருபபர்கள் அல்லவா?  இந்த சுல்தான்களின் ஆட்சியில் அனைத்தும் மறைந்தும்/மறந்தும் போய் விட்டன அல்லவா?" என்று மனம் நொந்து கலங்கினான் வல்லபன். மஞ்சரியும் இதுநாள் வரை சுல்தான்கள் ஆட்சியிலேயே இருந்ததால் அவளுக்கும் இதெல்லாம் புதுமையாகவே இருந்தது.  காஞ்சியின் காட்சிகள் பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணின. 

மூவரும் ஓர் சத்திரத்தைத் தேடிப் பிடித்துத் தங்க எண்ணினார்கள். அதன் பின்னர் எப்படியேனும் மஞ்சரியின் மாமனைத் தேடி அவரிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.  ஆகவே சத்திரம் ஒன்றைக் கண்டு பிடித்து அங்கே தங்க இடம் பார்த்துக் கொண்டு மஞ்சரியை அங்கே பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டுப் பின்னர் இருவரும் மஞ்சரியின் மாமனைத் தேடிச் சென்றார்கள்.  பகல் முழுவதும் தேடியும் மஞ்சரி சொன்ன "சிங்கழகர்" என்னும் பெயருள்ள அந்த மாமனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையும் ஆகி விட்டது. கலங்கி நின்ற அவர்களில் தத்தன், வல்லபனைப் பார்த்து, "வல்லபா! ஊரில் உள்ள வைணவ மடங்களில் கேட்டுப் பார்க்கலாமா? நான் அவற்றிற்குச் சென்று ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டு வருகிறேன். இப்போது இரவாகி விட்டதால் மஞ்சரிக்கு யாரேனும் காவல் இருக்க வேண்டும். ஆகவே நீ போய்ச் சத்திரத்தில் அவளுக்குத் துணை இரு!" என்று சொன்னான்.

அதன் பேரில் வல்லபன் சத்திரத்துக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சத்திரத்தின் முற்றத்தில் இருந்த துளசிமாடத்துக்கு அருகே உள்ள மேடையில் அமர்ந்து கொண்டு யோசனையில் இருக்க உள்ளே இருந்த மஞ்சரி வெளியே வந்து வல்லபனைப் பார்த்த வண்ணம் எதிரே அமர்ந்து கொண்டாள். தத்தன் தனியே தேடப் போயிருப்பது குறித்துத் தன் கவலையைத் தெரிவித்தாள். தத்தன் மீது அவள் வைத்திருக்கும் கரிசனமும் , பாசமும் வல்லபனைக் கவர்ந்தன. 

Wednesday, May 19, 2021

மஞ்சரியின் கதை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபன் தானும் அந்தப் பெண்ணின் மாமா மூலம் அரங்கன் குறித்த தகவல்கள் கிடைக்கும் என நம்பியே ஒத்துக் கொண்டதாகவும், மேலும் அவர்கள் இருவரும் அந்தச் சேவகர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் இந்தப் பெண் உதவியதாலும் அவளைக் கூட அழைத்துவரச் சம்மதித்ததாகச் சொன்னான். அதை தத்தனும் ஒத்துக் கொண்டான். மேலும் சொன்னான். அந்தச் சேவகர்கள் இவர்களைத் தேடிக் கொண்டு வைத்தியர் வீட்டில் சோதனை போட்டபோது தான் மட்டும் புழக்கடைக் கிணற்றுக்குள் இறங்கி ஒளியவில்லை எனில் அவர்களிடம் மாட்டிக் கொண்டிருப்போம் எனவும் உயிருடன் தப்பி இருக்க முடியுமா என்பதே சந்தேகம் எனவும் சொன்னான். அதுவும் அந்த ஆழமான கிணற்றின் கடைசி உறையில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் மயக்கம், மயக்கமாய் வந்ததாகவும் சமாளித்துக் கொண்டு இருந்ததாயும் சொன்னான். 

அப்போது வல்லபன் தத்தன் ஜன்னி கண்டு நினைவின்றிப் படுத்திருந்த காலத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்ட சேவகன் ஒருவன் அவனருகே வருவதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண் மஞ்சரி தத்தன் இறந்துவிட்டான் எனப் பொய் சொல்லி அவனருகில் அந்தச் சேவகன் வராதவாறு தடுத்ததோடு அல்லாமல் குச்சிலில் தத்தனை மறைத்து வைத்துப் பணிவிடைகள் செய்து மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்து அவனைக் காப்பாற்றியதையும் சொன்னான். தத்தன் அதற்கு இதெல்லாம் ஓர் உதவியா எனச் சிரிக்க, வல்லபனோ இந்த உதவிக்கு மட்டுமின்றி அந்தப் பெண் வந்து பணிவிடைகள் செய்ததற்கும் தத்தன் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கவேண்டும் எனவும் இல்லை எனில் இதெல்லாம் நடந்திருக்காது என்றும் சொன்னான்.  தத்தனோ மிகத் தீவிரமான மனோநிலையில் இவை எல்லாம் நடந்ததற்குத் தன் விதி தான் காரணம் எனவும், தான் பிழைக்கவேண்டும் என்பது விதி என்றும் அதனால் தான் தான் பிழைத்ததாகவும் சொன்னான்.

வல்லபனுக்கு தத்தன் பேச்சுப் பிடிக்காததால் மௌனமானான். அதைக் கண்ட தத்தன் அவனைப் பேச்சுக்கு இழுக்க நினைத்துத் தான் அரங்கனைப் பற்றிய தகவல்களைத் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாய்ச் சொன்னான். வல்லபன் தனக்கும் அதே குறிக்கோள் தான் என்றான்.  மேலும் அதனால் தான் அந்தப் பெண் நம்மோடு வந்தால் அவள் மாமாவைப் பார்த்துத் தகவல் அறிய வசதியாக இருக்கும் என நினைத்து அவளையும் கூட அழைத்து வந்ததாகவும் வல்லபன் கூறினான். மேலும் வல்லபன் அவள் கூட வரும் அவள் பாட்டனார் அந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணுவதாகவும் அதற்குத் தான் உதவியாக இருக்கப் போவதாகவும் கூறினான்.  அப்போது பக்கத்து அறையில் இருந்து மஞ்சரி ஓடி வந்து இவர்கள் இருவரையும் அழைத்தாள். பெரியவர் எப்படியோ பார்ப்பதாகவும் தனக்குப் பயமாக இருப்பதால் அவர்கள் இருவரும் துணைக்கு வரவேண்டும் எனவும் அழைத்தாள்.

இருவரும் ஓடோடிச் சென்று பார்த்தால் கிழவர் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. கண்கள் ஒரு மாதிரியாகச் சொருகிக் கொண்டிருந்தன. பார்க்கவே பயமாக இருந்தது. தத்தன் அவர் அருகே போய் உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அவர் மயக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தார். தத்தனை அடையாளம் கண்டு கொண்டார். மஞ்சரியிடம் குடிக்க வெந்நீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அவர் தத்தனிடம் பேசலானார்.  தான் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வடக்கே காஞ்சியை நோக்கிச் செல்வதாகவும் இவள் தன்னுடைய பேத்தி என்று, சொன்னவர் வழியில் தனக்கு ஜுரம் கண்டதால் பூங்குளத்தில் வைத்தியரிடம் தங்கிச் சிகிச்சை பெற்றதையும் சொன்னார். ஆனாலும் தனக்கு வயது ஆகிவிட்டதால் இனித் தான் பிழைக்கப் போவதில்லை என்று நம்புவதாகவும் சொன்னார். அதற்கு முன்னர் அந்தப் பெண்ணிற்குத் தான் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருப்பதாகவும் அதைத் தான் இப்போது தத்தனிடம் கூறப்போவதாகவும் சொல்லிவிட்டு அவனை அருகே அழைத்துக் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அந்தப் பெண் மஞ்சரி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் என்றும் குழந்தைக்குப் பிரார்த்தனையை நிறைவேற்றத் திருப்பதிக்குக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு திருப்பதி செல்ல நினைத்தவர்கள் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்ததால் ஊரிலேயே விட்டு விட்டுக் கணவன், மனைவி இருவரும் மட்டும் சென்றதாகவும் அவர்கள் சென்ற வழியில் தான் அப்போது கண்ணனூர்ப் போர் நடந்ததாகவும் தெரிவித்தார். கண்ணனூர்ப் போரில் வெற்றி பெற்ற துருக்கியர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் அக்கம்பக்கம் ஊர்களை எல்லாம் சூறையாடிப் பெண்களை பலவந்தம் செய்து என்று பல அக்கிரமங்கள் செய்ததாகவும், அவர்கள் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தத் தம்பதியர் அவர்களால் கொல்லப்பட்டதையும் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதைத் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்றே சொன்னதாகவும் சொன்னார்.  பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்ற பெண்ணிடம் காஞ்சியில் மாமன் வீட்டில் இருப்பதாகப் பொய் சொன்னதாகவும் நாட்டில் நடக்கும் கலவரங்களால் இப்போது போக முடியாது என்றும் நாட்களைக் கடத்தியதாகவும் மேலும், மேலும் அவள் வற்புறுத்தல் தாங்காமல் தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகச் சொன்னார்.  இதைச் சொல்லும்போதே அவருக்குப் பலத்த இருமல் வரப் பேசமுடியாமல் தவித்தார். விடாமல் நீடித்த இருமல் அவர் உயிரை வாங்கிக் கொண்ட பின்னரே நின்றது.

**************************************************

திருநாராயணபுரம், மஹான் வேதாந்த தேசிகரின் வீடு. காலை வேளை. பட்சிகளின் விதம் விதமான கூவல்கள் அந்த இடத்தையே ஒளிரச் செய்து கொண்டிருந்தது. வேதாந்த தேசிகரைப் பார்க்க கோபண்ணா வந்திருந்தார். அவரை நமஸ்கரித்துத் தான் திருப்பதி யாத்திரை மேற்கொண்டிருப்பதாகவும் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அவரது ஆசிகளைப் பெற்றுக் கொண்டவர் தனக்கு இன்னொரு ஆசையும் உண்டென்றும் அது தான் அரங்கனைத் தேடுவது என்றும் அதற்கும் தேசிகரின் ஆசிகள் தேவை என்றும் சொன்னார். அரங்கன் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடி நடந்து நன்மையாகவே முடியும் என ஆசிகளைத் தந்த தேசிகர் "தயா சதகம்" என்னும் நூலை இயற்றிப் பாட ஆரம்பித்தார்.

Sunday, May 16, 2021

நண்பர்களுக்குள் தர்க்கம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 எதிர் வீட்டில் காணப்பட்ட அந்த அழகி தன்னைக் கவனிக்கவில்லை என்பதில் வல்லபனுக்கு வருத்தம் தான். மனது வேதனைப் பட்டது. அவன் மச்சிலில் புகுந்து ஓய்வு எடுக்கும்போதெல்லாம் அந்த தேவதாசிப் பெண்மணி சுகிர்த ரத்னா வந்து பார்த்து வல்லபனை விசாரித்துச் சென்றாள். அந்தச் சேவகர்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் நுழைந்து புகுந்து சோதனைகள் போட்டுத் தேடுவதையும் அட்டகாசம் செய்வதையும் சொல்லி வருந்தினாள்.  இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்கின்றனர் என்றும் வருந்தினாள். நாடு உண்மையிலேயே சீரழிந்து விட்டதாகவும் நல்ல நடவடிக்கைகள், நல்லெண்ணெங்கள் மறைந்து வருவதாகவும் போகப் போக என்னாகுமோ என்னும் கவலை ஏற்படுவதாகும் சொன்னாள். அவள் சொன்னது சற்றும் மிகையில்லை என்பதைப் போல் அந்த ஊரிலே அனைவருக்கும் மனதில் கலக்கம் ஒன்று வந்துவிட்டது. சேவகர்கள் அனைவரும் அந்த அளவுக்கு ஊர் மக்களைப் படுத்தி எடுத்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே இதன் காரணம் புலப்படவில்லை.

அந்தச் சேவகர்கள் சம்புவராயரின் சேவகர்கள் அல்ல என்றும் யாரோ கொள்ளைக்காரர்கள் என்றும் சிலர் சொல்ல இன்னும் சிலர் யாரோ உயர்ந்த குடியில் பிறந்தவர்களை இவர்கள் கடத்திக்கொண்டு செல்வதாகவும் இவர்கள் கை தேர்ந்த கடத்தல்காரர்கள் என்றும் உறுதியாகச் சொன்னார்கள். இதைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கு அன்றிரவே அவர்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து கொண்டு போய்விட்ட செய்தி மறுநாள் கிடைத்ததும் தான் நிம்மதி ஆயிற்று. மழைக்காலம் இன்னமும் விடாததால் இரண்டு நாட்கள் வெறித்திருந்த வானம் அன்று மோடம் போட்டு மழையும் பெய்தது. அந்த ஊரில் இருந்த பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. வடிகால்கள் வழியே நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. ஏரிக்கரைக்குச் சற்றே தள்ளி ஓர் மேடான இடத்தில் ஓர் மண்டபம் காணப்பட்டது.  பதினாறு தூண்களுடன் பதினாறுகால் மண்டபம் என்றும் அழைக்கப்பட்ட அது அந்த வழியாகச் செல்லும் பயணிகள் தங்கி இளைப்பாறிச் செல்லவென்று ஏற்படுத்தப்பட்டது. சிற்பங்கள் பல செதுக்கப்பட்டிருந்தன.

தண்ணீர் அருகிலேயே ஏரியில் கிடைப்பதால் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் குளித்துக் கடமைகளை முடித்துக் கொண்டு உணவும் சமைத்து உண்டு ஓய்வு எடுத்துப் பின் செல்வது வழக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவு வரை மழை பெய்ததால் ஓர் ஊதல் காற்றுடன் அந்த இடமே ஈரப்பிசுபிசுப்புடன் காணப்பட்டது. வெளியே இருந்து எழுந்த சத்தங்களைப் போல் மண்டபத்துக்கு உள்ளே இருந்தும் ஓர் முனகல் கேட்டது. வயோதிகர் ஒருவர் உடல்நிலை சரியில்லாதவரின் முனகல் குரல். மண்டபத்தின் தரையில் கோரைப்பாயைப் பரப்பி மேலே துணிகளைய்ப் போட்டுப் பெரியவரைப் படுக்க வைத்து விட்டு அருகே அமர்ந்திருந்தால் ஓர் இளம்பெண். அவருக்குப் பணிவிடைகளை அவள் தான் செய்து கொண்டிருந்தாள். அந்த மண்டபம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மண் சுவரைத் தற்காலிகமாய் எழுப்பி இரு தனி அறைகள் போலச் செய்திருந்தார்கள். அதில் தான் ஒன்றில் அந்தப் பெரியவரைப் படுக்க வைத்திருந்தாள் அந்த இளம்பெண். அவர் தலைமாட்டில் ஓர் விளக்கு மென்மையான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. 

அந்தப் பெண் உள்ளே பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டபத்தின் இன்னொரு ஓரத்தில் இருந்த ஓர் யாளிச் சிற்பத்தின் மீது சாய்ந்து கொண்டு வல்லபனும், தத்தனும் பேசிக் கொண்டிருந்தனர். உண்மையில் காரசாரமான விவாதம். அந்தப் பெரியவரையும், இளம்பெண்ணையும் வல்லபன் தன் பொறுப்பில் அழைத்து வந்திருப்பான் போல் அவர்கள் பேச்சில் இருந்து தெரிந்தது. அதை முழுத்தவறு என ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தத்தன்.  தத்தனைக் கேட்டுக் கொண்டே தான் முடிவெடுத்ததாய்ச் சொன்ன வல்லபனிடம் தத்தன் தான் ஒத்துக் கொண்டதற்கான காரணமே வேறே என்று சொன்னான்.

"அந்தப் பெண்ணின் மாமன் ஒருவர் அரங்கனுடன் புறப்பட்ட ஐந்து பேரில் ஒருத்தர். ஒருவேளை இப்போது அவர் காஞ்சியில் இருந்தால் அவரைச் சந்தித்தால் அரங்கனைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் புதிதாக இருந்தால் நமக்குத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். நம் காரியத்திற்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் நான் ஒத்துக் கொண்டேன்." என்று தத்தன் சொல்ல, வல்லபன் அது மட்டும் காரணம் அல்ல என்றும் அந்தப் பெண் தத்தனின் உயிரைக்காப்பாற்றியதோடு வல்லபனையும் சேவகர்கள் பிடித்துச் செல்லாவண்ணம் காப்பாற்றிப் பாதுகாத்தாள் என்பதால் அவளுக்குத் தாங்கள் செலுத்தவேண்டிய நன்றிக்கடனாகவும் கூடவே அழைத்து வந்ததாய்ச் சொன்னான்.

Wednesday, May 12, 2021

வல்லபன் மறைந்திருந்த இடம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

உள்ளே நெடுகிலும் பார்த்துவிட்டு மீண்டும் கூடத்துக்கூ வந்த அவர்களுக்கு முகங்களில் வெறுப்பும், தேடியதனால் ஏற்பட்ட களைப்புமாகத் தெரிந்தது. மஞ்சரியையும் அவர்கள் வெறுப்புடன் பார்த்தார்கள். பின்னர் எதுவுமே சொல்லாமல் வெளியே சென்றனர். மஞ்சரி அவர்கள் கொஞ்ச தூரம் போய்விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு உள்ளே குச்சிலுக்கு ஓடினாள். குச்சிலில் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள். அங்கே யாரையுமே காணோம்! எங்கே போயிருப்பார் அவர்? மஞ்சரி கலக்கம் அடைந்தாள்.  அங்கிருந்த குதிர்களைத் திறந்து பார்த்தாள். பானைகளின் உள்ளே ஒளிந்திருப்பாரோ எனத் தேடினாள். மேலுள்ள பரண்களில் படுத்திருப்பானோ என எம்பி எம்பிப் பார்த்தாள். எங்கேயுமே காணவில்லை. புழக்கடைக் கதவைத் திறந்து அங்கே வெளியே எங்காவது மறைந்திருப்பானோ என்றும் பார்த்தவளுக்கு எங்கேயுமே காணோம் என்றதும் துக்கம் மேலோங்கியது. அயர்ந்து போய் அங்கேயே அமர்ந்தாள்.

சித்திரசாலையில் இருந்து இனிமையான மணங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தன. மேல் மாடம் முழுவதும் பரவி நிறைந்து எங்கும் இனிய மணம் வீசிற்று. கூடவே இனிய கீதம் மெல்ல மெல்ல சிற்றலையைப் போல் கிளம்பிற்று. ஐந்து தினங்களாய்த் தொடர்ந்த இந்த இனிய மணமும், இனிய கீதமும் அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. எங்கோ ஓர் உலகில் சஞ்சரிப்பதைப் போல் உணர்ந்தான். எனினும் வல்லபனுக்கு தத்தன் கதை என்னவாகி இருக்குமோ என்னும் கவலை வாட்டி எடுத்தது.கடுமையான ஜூரத்துடன் நோயாளியாகக் கட்டிலில் படுத்திருந்தானே! அவனை அந்தச் சேவகர்கள் கண்டு பிடித்திருப்பார்களோ? பிடித்துக் கொண்டு போயிருப்பார்களோ! அப்படி அவர்கள் பிடித்துச் செல்லவில்லை என்றாலும் நோயின் கடுமையிலிருந்து அவன் தப்பி உயிர் பிழைத்திருப்பானா?  மேற்கொண்டு பிரயாணம் செய்யவும் யோசனை தான். ஏனெனில் சோதனைகள் தொடர்ந்து வந்து சூழ்கின்றன. இந்தச் சேவகர்கள் எங்காவது தொலைந்தால் தான்! மேலே என்ன செய்யலாம் என யோசிக்கவே முடியும். 

ஆனாலும் இவர்கள் வந்ததால் தானே அந்த மங்கையையும் பார்க்க முடிந்தது. இல்லை எனில் அவளுடன் சந்திப்பே நடந்திருக்காதே! அந்த அழகிய முகமும் அந்த நீண்ட பெரிய கண்களால் அவள் பார்ப்பதும் தனி சுகம். இவ்விதம் யோசித்தவனுக்கு அந்த மாடத்துக்குப் படிகளில் ஏறி யாரோ வரும் அரவம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான் வல்லபன். உள்ளே வந்தவள் சுகிர்த ரத்னா என்னும் பெண்மணி. எம்பெருமாண்டியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். தேவதாசிகளை அந்நாட்களில் எம்பெருமாண்டியார் என அழைத்து வந்தனர். அவள் கண்ணன் மேல் அபார பிரேமை கொண்டவள். சங்கீதம், நிருத்தியம், சித்திரம், ஆரூடம் என அனைத்திலும் தேர்ந்தவள். நன்கு கற்றுத் தேர்ந்த அவளுக்கு எல்லோரையுமே கண்ணனாகப் பார்க்கும் இயல்பு கை வந்திருந்தது. பார்க்குமிடமெல்லாம் அவள் கண்ணனையே பார்த்தாள். அவள் மனம் கண்ணனின் பிரேமையில் ஆழ்ந்திருந்தது. 

மேலே வந்தவள் வல்லபனைப் பார்த்து, "கண்ணா! காலையிலிருந்து எந்த உணவும் சாப்பிடாமல் பட்டினியாகவே இருக்கிறாயே!எனக்குக் கவலை தாங்கவில்லை என்பதால் உணவை எடுத்துக் கொண்டு நானே வந்தேன்!" என்றபடி கையிலிருந்த வெள்ளித்தட்டுக்களை அவன் முன்னர் வைத்தாள். அவனைக் "கண்ணா!" எனப் பல முறை அழைத்து அவன் வேண்டிய மட்டும் உணவு படைத்துவிட்டுக் கீழே சென்றால் சுகிர்த ரத்னா! வல்லபன் இங்கே வந்ததில் இருந்து அவனைக் கவனித்துக் கொள்பவள் அவள் தான். அவன் தாயைப் போலவே இவளும் அவனிடம் பரிவு காட்டினாள்.  அன்பு ஒன்றைத் தவிர அவளிடம் கொடுப்பதற்கு வேறு எதுவும் இல்லை என்பதை நிதரிசனமாக உணர வைத்தாள்.  சத்திரத்து வாசலில் போக இடம் இல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த வல்லபன் தற்செயலாக இவளைப் பார்த்தான். அவளிடம் விஷயத்தைச் சொன்னதும் மிகவும் மகிழ்வுடன் அவனை அவள் தன் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டாள்.

வல்லபன் உணவை உண்டு முடிக்கையில் கீழே சென்றிருந்த சுகிர்தரத்னாவிடம் யாரோ ஏதோ விசாரிக்கும் குரல் கேட்டது. ஆஹா! இந்தத் தோரணையான குரல்! அந்தச் சேவகர்களில் ஒருவன் அல்லவோ? வல்லபன் எச்சரிக்கை அடைந்தான்.  அந்தக் குரல் வீட்டில் யார் இருக்கிறார்கள் என சுகிர்த ரத்னாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள் தாம் என சுகிர்தா மறுமொழி கொடுப்பதும் அதற்கு அவர்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும் எனவும் சொல்லுவதைக் கேட்டான் வல்லபன். சுகிர்தாவின் மறுப்பும், அவர்களின் வற்புறுத்தலும் சோதனைக்கு வழிவிடும்படியான ஆணையும் வல்லபன் காதில் கேட்டது. சுகிர்தாவை மீறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழையப் பிரயத்தனப் படுவதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் சுகிர்தாவோ உரத்த குரலில் "நில்லுங்கள்!" எனக் கத்திக் கொண்டே அவர்களைத் தடுத்தாள்.

தங்களைத் தடுக்கக் கூடாது எனச் சேவகர்கள் கூறுவதும் அவர்களிடம் "நீங்கள் சம்புவராயர் நாட்டைச் சேர்ந்தவர்களா?" என சுகிர்தா விசாரிப்பதும் வல்லபன் காதில் விழுந்தது. அவர்கள் அதை ஆமோதிக்கவும் சுகிர்த ரத்னா உடனே தாங்கள் இருப்பது சுரத்தான் நாடு. இங்கே சம்புவராயர் நாட்டுச் சட்டங்கள் செல்லாது எனவும் அதற்கு அந்தச் சேவகர்கள் இன்னும் ஒரு காத தூரத்துக்கு மேலே எல்லைக்குப் போயாக வேண்டும் என்றும் சொன்னாள். சுரத்தானுக்குத் தேவைப்படும்போது ஆயிரம் பேருக்கு மேல் படையைத் தான் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் சுரத்தானிடம் போய்ப் புகார் செய்யப் போவதாயும் திட்டவட்டமாய்க் கூறினாள். சேவகர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள். அவர்களை விரட்டினாள் சுகிர்தா. சுரத்தானுக்கு ஆள் அனுப்பப் போவதாகவும் பயமுறுத்தினாள். சற்று நேரம் எதுவும் பேச்சு இல்லாமல் இருந்தார்கள் அனைவரும். பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அங்கிருந்து வெளியேறுவது வல்லபனுக்குக் காலடி ஓசைகளில் இருந்து புரிந்தது.

வல்லபன் உடனே திட்டி வாசலுக்கு வந்தான். அங்கிருந்து தட்டோட்டிக்குச் சென்று கைப்பிடிச் சுவர் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த உயரத்திலிருந்து கீழே இருந்த ஆட்களின் தலைகள் மட்டுமே தெரிந்தன. ஆவலோடு பார்த்தான் வல்லபன். மூன்று சேவகர்கள் வெளியேறுவது அவனுக்குத் தெரிந்தது. அளவற்ற சந்தோஷத்துடன் திரும்புகையில் தற்செயலாக அவன் பார்வை எதிர் மாடியின் சாளரத்திற்குச் சென்றது. அப்படியே உறைந்து போய் நின்றான் வல்லபன். அங்கே அந்தப் பெண் நின்று கொண்டு இங்கே கீழேயே பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண் தலை நிமிர்ந்து தன்னைப் பார்ப்பாளோ என வல்லபனுக்குள் ஆவல் மீதூறியது. அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவளோ அங்கும் இங்குமாய்ப் பார்த்துவிட்டு ஒரு கணம் வல்லபனைப் பார்ப்பது போல் இருந்த நேரத்தில் சட்டெனப் பார்வையைத் திருப்பி விட்டாள். வல்லபன் கண்களில் இருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது.

Monday, May 10, 2021

மஞ்சரியின் கலக்கம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபனைத் தேடிக் கொண்டு சத்திரத்தை நோக்கி நடந்தாலும் மஞ்சரிக்குத் தன்னை யாரோ பின் தொடருவதாகவே தோன்றியது. இருந்தாலும் அங்கும் இங்குமாகச் சிறிது சுற்றி விட்டுச் சந்துகளுக்குள் புகுந்து சத்திரத்தை அடைந்தாள். கூடத்துக்குள் நுழைந்தாளோ இல்லையோ! யாரோ அவள் கைகளைப் பிடித்து இழுத்தார்கள். திடுக்கிட்ட மஞ்சரி திகைத்துத் திரும்பிப் பார்த்தால் ஏற்கெனவே அறிமுகம் ஆன சேவகர்களில் ஒருவன். சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். திகைத்த மஞ்சரி நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். அவனைப்பார்த்துத் தன்னைத் தொடக் கூடாது எனவும் தொட்டால் சம்புவராயரிடம் புகார் கொடுப்பேன் என்றும் எச்சரித்தாள். சம்புவராயர் பெயரைக் கேட்ட அந்த சேவகன் கொஞ்சம் தயங்கினான். பின்னர் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்குப் பயப்படுவதாவது என்று தோன்றியோ என்னமோ அவளைப் பார்த்து, "ஆமாம், ஆமாம்! உனக்குத் தான் அவரை நன்றாகத் தெரியுமே!" என்று கேலி செய்தான்.

ஆனால் மஞ்சரியோ அசராமல், "ஆமாம்! நானும் என் தாத்தாவும் அவரைப் பார்க்கவே இங்கே வந்தோம். போகப்போகிறோம் அவரைப் பார்த்துப் பேச!" என்றாள். சேவகன் திகைப்புடன் அவளைப் பார்த்து அவள் சத்திரத்துக்கு வந்த காரணம் என்னவெனக் கேட்க சத்திரத்துப் பாட்டியைப் பார்த்துப் பேச வந்ததாய் மஞ்சரி பொய் சொன்னாள்.  சேவகனோ இன்னமும் திகைத்துப் பாட்டி ஒருத்தி இங்கே எங்கே வந்தாள் என்ற யோசனையில் ஆழ்ந்தான். அதை அவளிடம் கேட்கவும் கேட்டான். அவளோ அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிக் கேட்டுவிட்டு அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டுச்சத்திரத்தை விட்டு வெளியேறி வீதிகளில் நடக்க ஆரம்பித்தாள். மஞ்சரி மருத்துவசாலைக்கூ வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தாள்.

தாத்தா தன்னிடம் மற்றவர்களுக்கு அதிலும் முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய வேண்டாம். நமக்கே ஆபத்து வரும் என்று சொன்னதை நினைத்துப் பார்த்து அதே போல் இப்போது ஆகிவிட்டதே என நினைத்துக் கொண்டாள். பின்னர் அவள் மனம் வல்லபன் எங்கே போயிருப்பான்? தான் தத்தனுக்கு என்ன பதில் சொல்லுவது என்றெல்லாம் யோசனையில் ஆழ்ந்தது. மெதுவாக நடந்து மருத்துவசாலைக்கு வந்து படி ஏறினாளோ இல்லையோ குதிரைகளில் ஐந்து நபர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார்கள். "சம்புவராயரிடம் புகார் செய்வேன் என்றாயாமே! உனக்கு அவ்வளவு தைரியமா? சம்புவராயரிடம் அவ்வளவு செல்வாக்கா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் சத்திரத்தில் பார்த்த அந்தச் சேவகன் குதிரையிலிருந்து குதித்தான்.

மஞ்சரி ஆத்திரத்துடன் திரும்பினாள். "சொல்லமாட்டேன் என்றெல்லாம் நினைக்காதே! நிச்சயம் சொல்லுவேன்." என்றாள் படபடப்புடன். அதற்கு அவர்கள் இன்னமும் கேலியாக, "சொல்லு!சொல்லு! நிறையப் புகார்களைக் கொடு! நாங்கள் அந்தச் செத்துப் போனவன் பிழைத்துவிட்டான் எனக் கேள்விப் பட்டோம். அதைப் பார்க்கிறோம்!" என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்குள் நுழைந்தார்கள்.  மஞ்சரிக்கு இவர்களுக்கு எப்படித் தெரியும் என்னும் எண்ணம் மனதில் வந்தது. இந்த இருவரையும் இந்தச் சேவகர்கள் எதற்காக இப்படித் தீவிரமாகத் தேடுகிறார்கள். உண்மையில் குற்றம் செய்தவர்கள் யார்? அந்த இளைஞர்களா? அல்லது இவர்களா?  என்றெல்லாம் குழம்பிப் போனாலும் உள்ளூர தத்தனைக் காப்பாற்றும்படி அரங்கனை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.  அந்த மருத்துவசாலை முழுவதும் போய் அவர்கள் தேடினார்கள். உரத்த குரலில் சப்தம் போட்டுக் கொண்டு அவர்கள் தேடியது மற்ற நோயாளிகளுக்குச் சிரமங்களை உண்டாக்கிற்று. 

உக்கிராண அறையைப் பார்த்துத் தேடிவிட்டு வெளியே வந்தவர்களைப் பார்த்து மஞ்சரி, "ஐயா, சேவகர்களே!" என்று மிக மரியாதையாக அழைத்தாள். அவர்கள் திரும்பவும் அவர்களைப் பார்த்து, "ஐயாமார்களே! இங்கெல்லாம் நீங்கள் அழைப்பில்லாமலோ, உள்ளே நுழைய உத்தரவில்லாமலோ செல்லலாமோ? உள்ளே பல்வேறுவிதமான மூலிகைகள், மருந்துகள் இருக்கின்றன. சில மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றை நீங்கள் காரணமில்லாமல் தொட்டு வைத்தால் உங்களைத் தான் பாதிக்கும். அதோடு துர் தேவதைகளை மந்திர சக்தியால் கட்டிக் குடங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். நீங்கள் பாட்டுக்குக் குடங்களைத் திறந்து பார்த்தால் என்ன ஆகும்?" என்றாள். ஆனால் அந்த சேவகர்களோ கொஞ்சம் தயங்கினாலும் எதற்கும் கவலைப்படாமல் உள்ளேயும் சென்று தேடிவிட்டே திரும்பினார்கள்.  மஞ்சரி திகிலோடு வெளியேயே காத்திருந்தாள். நீண்ட நேரம் தேடினார்கள் போல! போனவர்கள் திரும்பவில்லை! என்ன ஆயிற்றோ என்னும் கவலையோடு மஞ்சரி உள்ளே இருந்து அவர்கள் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.