எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, September 30, 2019

வழியில் சந்தித்த பெரியவரின் நினைவலைகள்!

சற்று தூரம் மௌனமாகப் பயணித்தவர்களுக்கு ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவரைப் பற்றிய குறிப்புக் கிடைத்தது.  அவருக்கு அரங்கன் தற்போது இருக்கும் விபரம் தெரியலாம் எனச் சிலர் மூலம் அறிந்தார்கள். அவரைத் தேடிக் கொண்டு இருவரும் சென்று அவரை நமஸ்கரித்தனர். வல்லபன் அவரைப் பார்த்து, "ஐயா, சுமார் 37,38 ஆண்டுகளுக்கு முன்னால் ஶ்ரீரங்கம் என்னும் திருவரங்க க்ஷேத்திரத்தை தில்லியிலிருந்து வந்த சுல்தானியர் ஆக்கிரமித்துக் கொண்டனர். அப்போது அரங்கமாநகர வாசிகள் பயத்தின் காரணமாகவும், அரங்க விக்ரஹத்தைக் காப்பாற்ற வேண்டியும் அவரை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிச் சென்றார்கள்.  அங்கிருந்து கேரள/மலையாள தேசம் வழியாகப் பயணம் செய்து கொங்கு நாட்டைக் கடந்து கர்நாடக தேசத்தின் மேல்கோட்டை என்னும் க்ஷேத்திரத்தை அடைந்தார்கள். அரங்கன் அங்கே சில காலம் தங்கியதாகக் கேள்விப் பட்டோம். ஆனால் தற்சமயம் இல்லை என்கின்றனர். அரங்கன் இருக்குமிடம் தேடிக் கொண்டு நாங்கள் வருகிறோம். உங்களுக்கு அவர் மேல்கோட்டையிலிருந்து எங்கே எடுத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் தெரியுமா?" என்று கேட்டான்.

எழுபது வயதிருக்கும் அந்த மனிதருக்குத் தலை சுத்தமாக நரைத்திருந்தது.  கண்கள் இடுங்கிக் காணப்பட்டன. அணிந்திருந்த பூணூலின் பிரம்ம முடிச்சைத் தொட்டுக் கொண்டு அவர் ஏதோ ஜபம் செய்த வண்ணம் இருந்தார். அவர் இந்த உலகில் சஞ்சரிக்கவில்லை என்றும் அக உலகில் சஞ்சரிக்கிறார் என்பதும் அவரைப் பார்த்ததுமே புரிந்தது. வல்லபன் சொல்லுவதைக் கேட்ட அவர் கண்ணீர் பெருக்கினார். நாற்பது வருடங்கள் முன்னர் நடந்த துர்ப்பாக்கியமான சம்பவங்களைப் பற்றியே வல்லபன் கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. தனக்கு அந்தச் சம்பவங்கள் எல்லாமே நன்றாகத் தெரியும் என்று சொன்னார். அவருக்கும் ஸ்ரீரங்கம் தான் சொந்த ஊர் எனவும். ஸ்ரீரங்கம் முற்றுகை ஆவதற்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறிய குடும்பங்களில் அவர் குடும்பமும் ஒன்று எனவும் கூறியவர் காவிரிக்கரையின் மேற்குக் கரையோரமாகப் பயணித்து அவர்கள் ஒரு வாரத்தில் சத்தியமங்கலத்தை அடைந்ததாகவும் கூறினார். அவர் வரும்போது வழியில் தாயாரின் மரணம் நிகழ்ந்ததாகவும் கூறிவிட்டுப் பின்னர் கர்நாடகம் நோக்கிச் சென்று மேல்கோட்டையில் தங்கி நாட்களைக் கழித்ததாகவும் கூறினார்.

அவர் மேல்கோட்டையில் தங்கி இருக்கையில் தான் அரங்க விக்ரஹம் மேல்கோட்டைக்கு வந்ததாகவும் அரங்கனைக் கண்ட அவர் தந்தையார் அரங்கன் நிலைமையையும் முறையான வழிபாடுகள் இல்லாமல் அரங்கன் இருப்பதையும் பார்த்து அழுது புலம்பியதாகவும் சொன்னவர் மேலே சொன்னது வல்லபனுக்கும் கண்ணீரை வரவழைத்தது. கானகத்தில் சுற்றித் திரிந்த ஸ்ரீராமனைப் போன்ற கதி அரங்கனுக்கும் நேரிட்டு விட்டதே எனப் புலம்பினாராம். இதைக் கேட்ட வல்லபனும் கண்ணீர் பெருக்கினான். கண்ணனூர்ப் போரில் தாங்கள் ஜெயிப்போம் என ந்மபியதாகவும் ஆனால் அந்தப் போர் இப்படி முடிந்ததாகவும் கூறியவர் ,"தம்பிகளா! கண்ணனூர்ப் போர் எந்த வருஷம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். எந்த வருஷம் என்பது தெரியுமா?" என்று கேட்க அதற்கு தத்தனும் வல்லபனும் பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதாய்த் தெரிவித்தனர்.

கண்ணனூர்ப்போர் ஓரளவுக்குத் தனக்கு நினைவிருப்பதாகச் சொன்னவர் தன் தந்தையார் அந்தப் போரில் நாம் ஜெயிப்போம் என்னும் செய்தி கேட்டுவிட்டு உயிரைத் துறக்க வேண்டும் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் போரின் முடிவு அவருக்கு துக்கத்தைக் கொடுத்ததாகவும் அந்த முடிவைக் கேட்டதுமே அவர் இறந்ததாகவும் கூறினார். வெற்றி வல்லாளருக்கே என இருந்த கடைசித் தருணத்தில் சூழ்ச்சி செய்து வல்லாளரைக் கொன்று விட்ட சுல்தானியரைப் பற்றிக் கூறினார். வல்லாளர் இறந்த செய்தி கேட்ட நம் படை வீரர்கள் அடைந்த மனத் தளர்ச்சியும் படைகள் சின்னாபின்னப்பட்டுக் கலைந்து சென்றதையும் துக்கத்தோடு விவரித்தார். போரின் முடிவு தெரிந்ததுமே அரங்கனைப் பார்த்து அவர் தந்தையார், "அரங்கா உனக்கா இந்தக் கதி? இன்னமும் உன்னால் உன் ஊருக்குப் போக முடியவில்லையே!" என்று சொல்லியவண்ணம் அரங்க விக்ரஹத்தின் முன்னால் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை என்றார்.

தம் தந்தையாருக்குப் போரில் வெற்றி அடைய முடியாமல் போனது மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்ததாகச் சொன்னவர் அனைவருக்குமே அந்தப் போரின் முடிவு கொடுத்த அதிர்ச்சியை எடுத்துரைத்தார். போரில் கிட்டத்தட்ட வெற்றி கிட்டிவிட்ட செய்தி கிடைத்ததும் இனி அரங்கன் திருவரங்கம் சென்று விடலாம் என நினைத்தவர்கள் அனைவரும் அரங்கனை மேல்கோட்டையிலிருந்து சத்தியமங்கலத்துக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும், பின்னர் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியைப் பற்றிக் கேட்டதும் அரங்கன் பரிவாரத்தார் மீண்டும் மேல்கோட்டைக்கே திரும்பி விட்டதாகவும் சொன்னார். இதை எல்லாம் பார்த்தும் கேட்டும் மனம் நொந்து போய்த் தான் என் தந்தையார் பரமபதம் அடைந்து விட்டார்." என்றார் அந்தப் பெரியவர்.

Sunday, September 29, 2019

இனி தொடரும்!

சாதாரணமாக எழுதிக் கொண்டே இருக்கையில் ஒரு சில செய்திகளைக் கேள்விப் படவும் மனதில் ஏற்பட்ட வருத்தத்தாலும் கவலையாலும் மேலே தொடராமல் இதை  நிறுத்தினேன். இனி தொடருவேன். பொறுத்துக் கொண்டமைக்கு நன்றி.