எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 29, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா! 2


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
1.10.1
98

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.



அருணாசலேஸ்வரர் கோயில் ஐந்து பிராகாரங்களோடு இருந்தாலும் மாடவீதியும் கிரிவலப் பாதையும் இரண்டு பிரஹாரமாய்க் கணக்கெடுத்துக்கொள்ளப் படுகிறது. கிரிவலப் பாதையில் யாரும் கால்களுக்குச் செருப்புப்போட்டுக்கொண்டு நடப்பதில்லை. கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகப் பழமையான கோயில் என்பது பார்த்தாலே தெரியும். கருவறை பல்லவர் காலத்திலேயே அமைக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. கோபுரங்கள் ஒன்பது உள்ளன. அருணகிரிநாதர் கிளி உருவில் காட்சி அளித்த கோபுரம் கிளி கோபுரம் என்றே அழைக்கப் படுகிறது. இதைத் தவிர மற்ற கோபுரங்கள் பெரிய கோபுரம், கிட்டி கோபுரம், அம்மணி அம்மாள் என்பவர் கட்டிய அம்மணி அம்மாள் கோபுரம், வடக்குக் கட்டை கோபுரம், மேலக்கோபுரம் (இதைப் பேய்க் கோபுரம் என்கின்றனர்) மேற்குக் கட்டை கோபுரம், திருமஞ்சன கோபுரம்(தெற்கு கோபுரம் இப்படி வழங்கப் படுகிறது) வல்லாள ராஜா கோபுரம்(போசள மன்னன் மூன்றாம் வீர வல்லாளன் கட்டியது) இந்த வாசலே வல்லாளன் திருவாசல் என அழைக்கப் படுகிறது. கிழக்குக் கோபுரம் 216 அடி உயரத்துடனும் 11 நிலைகளுடனும் காட்சி அளிக்கிறது.

இதைத் தவிரவும் கோயிலில் அநேக மண்டபங்களும் இருக்கின்றன. அவை தீர்த்தவாரி நடக்கும் தீர்த்தவாரி மண்டபம், ஞானப்பால் மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப்பிறப்பு மண்டபம், உருத்ராக்ஷ மண்டபம், அமாவாசை மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை. திருக்கல்யாண மண்டபத்தின் மர விதானம் செப்பால் ஓடு வேயப்பட்டுக் காட்சி அளிக்கிறது. தூண்கள் அழகிய வேலைப்பாடுகளோடும், ஓவியங்களும் நிறைந்த மண்டபம். பார்க்க ஒரு நாளாவது வேண்டும். :( பிராகாரங்களின் மதில்கள் உயரமாய்க் குறைந்தது முப்பது அடி உயரத்துடன் காட்சி அளிக்கின்றன. அகலமே நிறைய இருக்கும்போல் தெரிகிறது. இந்த மதில்கள் மூலவரின் திருச்சுற்றுப் பாதையில் அமைந்துள்ளன. இவற்றில் மேற்கு மதில் ஆதித்திய சோழனாலும், பின்னர் அவன் மைந்தன் முதலாம் பராந்தக சோழனாலும், கிழக்குச் சுவர் உத்தம சோழனாலும் கட்டப்பட்டவை எனத் தெரிய வருகிறது. கருவறைக்குள் நுழையும் வாசலே உத்தம சோழன் பெயரால் அழைக்கப் படுகிறது. கருவறைக்குள் உத்தமசோழனின் சிற்பமும் இருக்கிறதாய்த் தெரிய வருகிறது. இந்தத் தகவல் முன் கூட்டியே தெரியாது என்பதால் நாங்க தேடிப் பார்க்கலை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிழக்கு வாயிலின் வலப்பக்கம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் மற்றக் கோயில் மண்டபங்கள் போல் இல்லாமல் சரியாக ஆயிரம் தூண்கள் உள்ளதாயும் தெரிவிக்கின்றனர்.

வல்லாள கோபுரத்தில் வல்லாளனின் சிலை இருப்பதாயும் கூறினார்கள். அண்ணாந்து பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த வல்லாளனுக்காக ஈசனே குழந்தையாக வந்து ஈமக்கடன்களைச் செய்வதாயும் ஐதீகம். அந்த வரலாறு வருமாறு:

குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மகாராஜா, இறைவனை வேண்டினார். ஒரு நாள் அண்ணாமலையாரே சிவனடியார் உருவில் அரண்மனைக்கு வந்தார். தன்னுடன் தினம் ஒரு பெண் தங்க வேண்டும் என்றும், அன்றிரவு தங்கப் பெண்ணே கிடைக்கவில்லை என்றும் கூறி மன்னனைக் கேட்கிறார். கோயிலில் தேவதாசியர்கள் இல்லாமையாலும், மற்றப் பெண்களை அனுப்ப மனமில்லாமையாலும் தன் மனைவியான சல்லாமா தேவியையே அந்தச் சிவனடியாரிடம் அனுப்பி வைக்கிறான் வல்லாள ராஜன். சல்லாமா தேவி உள்ளே சென்றதுமே சிவனடியார் மறைந்து ஒரு பச்சிளம் குழந்தை இருக்கிறது. திகைத்த தேவி தன் கணவனிடம் சொல்ல, அண்ணாமலையார் ரிஷபாரூடராய்க் காட்சி அளிக்கிறார். மன்னனுக்குத் தாமே குழந்தையாக வந்து இறுதிக்கடன்களை நிறைவேற்றுவதாய் வாக்கும் கொடுத்து மறைகிறார்.

இதனால் ஒவ்வொரு வருஷமும் மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அண்ணாமலையார் அருகிலுள்ள, "கொண்டப்பட்டு" என்னும் கிராமத்துக்கு எழுந்தருளி, வல்லாள ராஜாவுக்கு உத்தரகிரியைநடத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் நடராஜப் பெருமானின் செப்பு விக்ரஹம் காணப்படுகிறது. அதை ஒட்டி இருக்கும் அறைகள் ஈசனின் அணிகலன்கள், ஆடைகள், பொக்கிஷ அறை போன்றவை ஆகும். இங்குள்ள கல்லால் ஆன சங்கிலித் தூண் அருகே இருந்து சுரங்கப்பாதை ஒன்று மலையை ஊடுருவிச் செல்வதாய் ஒரு கருத்து உண்டு. கிளி கோபுரத்தின் தெற்கே இருக்கும் விநாயகர் யானையாக வந்து கொடுங்கோல் அரசன் ஒருவனை மிரட்டியதாயும் செவிவழிச் செய்திகள் உண்டு. கிளி கோபுரத்துக்கு அடுத்துக் காணப்படும் மண்டபம், மங்கையர்க்கரசி என்பவரால் கட்டப்பட்டது. இங்கு மலைமீது தீபம் ஏற்றும்போது உற்சவ மூர்த்திகள் எழுந்தருளுவது வழக்கம்.

கிளி கோபுரத்திற்கு எதிரே நந்தி மண்டபம். மண்டபம் வல்லாள ராஜாவால் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சின்ன மண்ட்டபத்தில் அண்ணாமலையார் யோகி உருவில் சூக்ஷ்ம வடிவில் உறைவதாகவும், இங்கு அமர்ந்து ஆழ்நிலைத் தியானம் செய்தால் மன அமைதி கிட்டும் என்பதும் ஐதீகம். சிவகங்கைக்குளத்துக்கு அருகே கம்பத்து இளையனார் சந்நிதியில் முருகன் வில்லேந்திய கோலத்தில் காட்சி கொடுக்கிறான். அருணகிரிநாதருக்காக பிரெளட தேவராயன் என்பவனுக்கு முருகன் காட்சி கொடுத்த இடம் இது என்கின்றார்கள். ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்குப் பக்கம் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. பகவான் ஸ்ரீ ரமணர் பலகாலம் இங்கே தங்கி தவம் இருந்ததைக் கூறும் இந்தச் சந்நிதி "பரோசா தலையார் காண்" என்ற வெளி நாட்டுப் பெண்மணியால் அவர் தலைமையில் புநர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. 1949-ம் வருஷம் அப்போதை கவர்னர்ஜெனரல் ஸ்ரீராஜாஜி அவர்களால் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 108-க்கும் மேல் கல்வெட்டுக்கள் உள்ள இந்தக் கோயிலில் பரத சாஸ்திரத்தின் தாண்டவ லக்ஷணத்தை விளக்கும் நாட்டிய நிலைகள் 108-ஐயும் விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

Wednesday, November 17, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம், கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞாநிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப்பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும் திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞாந நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞாந நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.



பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக்கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக்கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச்சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை.

தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞாநசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக்குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர்.

கார்த்திகை தீபம் நெருங்கிவிட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டுவிட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக்கொள்ளவும். நன்றி.

Tuesday, November 16, 2010

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


தக்ஷிணாமூர்த்தி தென்முகம் காட்டி அமர்ந்திருப்பதன் காரணம் கேட்டிருந்தார் ப்ரியா. பொதுவாய் வடக்கு வாழ வைக்கும் என்று சொல்வது உண்டு அல்லவா?? எந்த ஒரு நல்ல காரியத்தையும் தென்பக்கம் பார்த்துச் செய்யக் கூடாது என்றும் கூறுவார்கள். தென் திசை அழிவைக்குறிக்கும். ஆகவே அழிவைக்குறிக்கும் திசையை நோக்கி அமர்ந்திருக்கும் ஈசனின் திருவுருவை நாம் வாழ வைக்கும் வடதிசை நோக்கி அமர்வோம் அன்றோ?? நம் ஆன்மாக்கள் உய்வுறவேண்டி ஈசனே அங்ஙனம் அமர்ந்திருக்கிறார். இது தவிர த+க்ஷி+ணா என்பது நமது மும்மலங்களான ஆணவம்,கன்மம், மாயை ஆகியவற்றையும் குறிக்கும் என்றும் திரு நடராஜ தீக்ஷிதர் அவர்கள் தெரிவிக்கிறார். ஆணவன், கன்மம், மாயை அகல மோனத்தின் மூலம் ஞாநத்தை உணர்த்தியஞாநகுருவான தக்ஷிணாமூர்த்தியை வழிபடுதல் சிறப்பு என்றும் கூறுகிறார்.

ஒரு சமயம் பிரம்மாவிற்குப் படைப்பில் ஆர்வம் இல்லாமல் போக, நான்கு குமாரர்களைப் படைத்து அவர்களிடம் தன்பொறுப்பை ஒப்படைக்க எண்ணுகிறார் பிரம்மகுமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர் ஆகிய நால்வரும் பிறவி ஞாநம் பெற்றுத் திகழ்ந்தார்கள். பிரம்மா தன் மக்களிடம்பொறுப்பை ஒப்படைக்க எண்ணியபோது, நாரதருக்கு அதுகுறித்துத்தெரிய வந்தது. தன் சகோதரர்கள் பிரம்ம ஞாநத்தை அறிந்தவர்கள் என்பதும், தாங்கள் யார் என்ற ஞாநம் பெற்றவர்கள் என்பதும் தெரிந்ததால் நாரதர் சகோதரர்களை எச்சரிக்கிறார். அவர்களும் இம்மாதிரியான சிருஷ்டிப்பொறுப்பை ஏற்க மனமின்றித் தங்களுக்கேற்ற குருவை நாடி ஒவ்வொரு இடமாய்த் தேடிச்செல்கின்றனர். தங்கள் தந்தை சிருஷ்டியில் மூழ்கி இருப்பதும் அது குறித்த பிரச்னைகளையும் அறிந்த அவர்கள் தங்களால் அது இயலாது என்று வைகுண்டத்தில் மஹாவிஷ்ணுவை நாடிச் செல்கின்றனர். அவரோ அங்கு ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி உடனிருக்கப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக் காண்கின்றனர். ஆஹா, இவரும் குடும்பஸ்தராகவே இருக்கிறாரே என எண்ணிக்கொண்டு, கைலை நோக்கிச் செல்கின்றனர்.

சநத்குமாரர்கள் தன்னை நாடி வருவதைத் தெரிந்து கொண்ட ஈசன் இங்கேயும் தான் தன் மனைவியோடு இருப்பதை அறிந்துகொண்டால் சநத்குமாரர்கள் ஏமாந்து போய்விடுவார்கள் என்பதோடு அவர்களுக்கு முக்திக்கு வழியும் காட்ட முடியாது என்பதையும் புரிந்து கொண்டு, தான் ஒரு பதினாறு வயதுப்பால யோகியாக மாறி, மானசரோவர் ஏரியின் வடகரையில் ஒரு வடவிருட்சத்தின் கீழ் தென் முகம் நோக்கி அமர்கின்றார்.

கைலை வரும் வழியில் வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்த தவம் செய்யும் யோகியைக் கண்ட சநத்குமாரர்கள் இவரே தங்களுக்கு ஏற்ற குரு எனத் தெளிந்து அவரிடம் வந்து அமர்கின்றனர். பாலயோகியும் சீடர்களை வரவேற்கிறார். சநத்குமாரர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்க யோகியும் அதற்கேற்ற பதில்களைக் கொடுக்கிறார். இவர்கள் சந்தேகங்கள் மேன்மேலும் எழும்புகின்றன. யோகியும் அசராமல் பதில் கொடுக்கிறார். கடைசியில் இந்த சந்தேகங்களும், அவற்றுக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷம் தொடர்ந்து நடைபெற்று வர, ஈசன் இனி இது ஒன்றே அனைத்திற்கும் ஒரே பதில் எனக் கூறுவது போல் சின்முத்திரை காட்டி நீடித்த மெளனத்தில் சமாதி நிலையில் அமர்கிறார். ஈசன் சமாதி நிலையில் அமர்ந்ததுமே சநத்குமாரர்கள் மனதிலும் இனம் காணா அமைதி, ஆநந்தம். ஈசனுடைய சமாதிநிலையின் சர்வத்துவம் அவர்களிடமும் வந்து அடைய அவர்களும் சச்சிதாநந்தப் பெரு வெள்ளத்தில் மூழ்கி அமைதி அடைகின்றனர். இதுவே சத்தியம், இதுவே நித்தியம், இதுவே அநந்தம் என்று தெளிவும் அடைகின்றனர்

Monday, November 08, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


வீணாதர தக்ஷிணாமூர்த்தி: கைகளில் வீணை ஏந்தியவண்ணம் காட்சி அளிப்பார். ஈசன் சங்கீத ஸ்வரூபம். அவன் மீட்டுவது சாதாரண வீணை அல்ல. ஞாநவீணை. அதிலிருந்து எழும் கீதமும் ஞாநத்தை அளிக்கவல்லது. நமக்கு ஆத்ம ஞாநத்தை அளிக்கும் வல்லமை பெற்ற இனிய கீதத்தை ஈசன் இசைக்கிறான். முன் கரங்களிரண்டாலும் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும், ஈசனின் பின்னிரு கரங்அள் அக்ஷமாலையையும் நெருப்பையும் ஏந்திக் காட்சி அளிக்கின்றன. அமர்ந்த கோலத்திலேயும் காட்சி அளிப்பார், நின்ற வண்ணமும் காட்சி கொடுப்பார். முனிவர்கள் புடைசூழக் காட்சி தரும் இவரை வேதாரண்யம், திருப்புந்துருத்தி ஆகிய ஊர்களிலே காணலாம் என்று தெரியவருகிறது. இரண்டு ஊரும் பார்க்கலை இன்னமும். அதனால் நிச்சயமாய்த் தெரியவில்லை.

அடுத்தவர் சக்தி தக்ஷிணாமூர்த்தி: இவரை நாம் ஏற்கெனவே சுருட்டப்பள்ளியில் பார்த்திருக்கோம். அம்பிகையை அணைத்தவண்ணம் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி அளிப்பார் இவர். திருமணப் பேறு வேண்டி இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் அங்கே செய்யப் படுகின்றன. மான், மழுவோடு, சின் முத்திரை திகழ, அன்னை ஈசனைத் தழுவிய வண்ணம் காட்சி கொடுக்கிறார்கள்.

மேதா தக்ஷிணாமூர்த்தி: ரிஷப வாஹனராய்க் காணப்படும் தக்ஷிணாமூர்த்தியை மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் தெரிந்து கொள்கிறோம். ரிஷபத்தின் மீது அமர்ந்த வண்ணம் ஞாந உபதேசம் செய்கிறார். ரிஷபம் தர்மத்தின் வடிவம். ஆகவே நமக்கு தர்மத்தையும், ஞாநத்தையும் உபதேசிக்கும் தக்ஷிணாமூர்த்தியோடு ரிஷபத்தையும் சேர்த்து வழிபடுவது நலம் பயக்கும்.

இவற்றைத் தவிர பசுபத சைவர்கள் வழிபடும் லகுளீசர் கூட தக்ஷிணாமூர்த்தி வடிவமே எனத் தெரிய வருகிறது. மதுரைக்கு அருகே அரிக்கம்பட்டு என்னும் ஊரில் லகுளீசர் சந்நிதி உள்ளது. திருவொற்றியூரிலும், திருவையாறிலும் சடையை எடுத்துக்கட்டியவண்ணக் காட்சி அளிப்பார். கரங்களில் சூலம், கபாலம், வலக்கரம் சின் முத்திரையோடும், இடக்கரம், தியான முத்திரையோடும் காட்சி அளிக்கும். திருவையாறுக் கோயிலில் பிராஹாரம் சுற்றும்போது ஈசன் சடை பரந்து விரிந்து இருப்பதால் அதைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பதால் பிராஹாரவலம் முதல் சுற்று ஆரம்பித்துப் பின்னர் திரும்பி வந்த வழியே வந்து அப்பிரதக்ஷிணமாய்ச் சென்று தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கவேண்டும்.

Saturday, November 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!

எதிர்பாராமல் சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தரிசனம் கிட்டியது. தென்னாங்கூர் பாண்டுரங்கன் தரிசனம், மேல் மலையனூர் அம்மன் தரிசனம் ஆகியவை கிட்டியது. அது குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சிவ வடிவங்களில் பைரவர் முடிந்ததும், அது குறித்த தொடர் ஆரம்பிக்கும். தாமதமான இடுகைகளுக்கு மிகவும் மன்னிக்கவும். பல்வேறு பிரச்னைகள்! எழுதியவற்றைக் கூட அப்லோட் செய்ய முடியவில்லை. :(