எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 26, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! --உபதளபதி இறந்தான்!

அம்சகலாவால் தள்ளப்பட்ட உபதளபதி கீழே விழுந்து இறந்தது தற்செயலான ஒன்றாகவே தில்லிப் படைகளால் கருதப்பட்டது. எவருக்கும் அவன் எப்படி இறந்தான் என்னும் மர்மம் புரியவில்லை.  கோபுரத்தின் மேலேறிப் பார்த்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. தவறி விழுந்ததாகவே எண்ணிக் கொண்டு அவன் உடலை அடக்கம் செய்தார்கள். இங்கே அழகிய மணவாளபுரத்தில் சிங்கப்பிரான் என்பார் சகல மரியாதைகளுடனும், மேள, தாள வாத்தியங்களுடனும், பரிவாரங்களுடனும் ஶ்ரீரங்கம் நோக்கிக் கிளம்பினார். அவருக்கு அம்சகலா அங்கே போனதும் நடந்த விபரங்களும் தெரியாது. தில்லிப் படைகளின் நடமாட்டங்களையும் முன்னேற்றங்களையும் கணிக்க வேண்டுமானால் அவர்களுடன் நட்புப் பாராட்டுவது போல் இருந்து தான் பார்க்க முடியும். ஆகவே அவர் கிளம்பி இருந்தார். திருவரங்கத்தின் சில சொத்துக்கள் அழகிய மணவாளபுரத்தில் இருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார் அவர்.

தில்லிப் படைகள் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றவர் உபதளபதி ஒருவன் கோபுரத்திலிருந்து விழுந்து இறந்த செய்தியைக் கேட்டுக் கொண்டார். பின்னர் மற்றொரு உபதளபதியைக் காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார். உபதளபதியிடம் தில்லி சுல்தானின் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துக் கொண்டார். தாம் கொண்டுபோயிருந்த பரிசுகளையும் உபதளபதிக்கு அளித்தார். முத்துக்கள், பவளங்கள், நீலங்கள், வைரக்கற்கள், தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், வெள்ளியினால் ஆன பொருட்கள், பட்டுப் பட்டாடைகள், அந்த நாட்களில் பண்டமாற்றுக்கெனப் பயன்பாட்டில் இருந்து வந்த யவனப் பொற்காசுகள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன. அதைப் பார்த்த உபதளபதியின் கண்களில் பேராசை மின்னியது. மிகவும் மகிழ்ந்து போனான்.

இதைத் தவிர பாடகர்கள் பலர் சுருதி போட்டவண்ணம் உள்ளே வந்து நமஸ்கரித்தனர். இன்னும் சிலர் இடுப்பளவு உயரமுள்ள பெரிய பெரிய குடங்களில் திராக்ஷை மதுவை நிரப்பிக் கொண்டு வந்தனர். மதுவைப் பார்த்த உபதளபதி அதன் வாசனையிலேயே கிறங்கிப் போனான். பின்னர் சந்தேகத்துடனேயே சிங்கப்பிரானைப் பார்த்து, "நீ யார்? ஏன் இவற்றை எல்லாம் எனக்குப் பரிசளிக்கிறாய்? காரணம் என்ன?" என்று சந்தேகத்தோடு கேட்டான். அதை ஹொய்சள வீரன் ஒருவன் மொழிபெயர்த்துச் சொல்ல சிங்கப்பிரான் நாங்கள் உங்கள் பிரஜைகள். உங்களுக்குப் பரிசாகக் கொண்டு வந்துள்ளோம், என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் நம்பாத உபதளபதி அந்த மதுவை சிங்கப்பிரானையே எடுத்து அருந்தச் சொன்னான். மதுவைத் தான் பருகுவதில்லை என்று அவர் எத்தனை சொல்லியும் கேட்காமல் அவரை வற்புறுத்தவே அவர் ஓர் கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றிக் குடித்துக் காட்டினார். பின்னரே தயக்கமின்றி அந்த மதுவை ஏற்றுக் கொண்டான் உபதளபதி.

பின்னர் அந்த அறைக்கு ஒரு அழகான மங்கையும் வந்து சேர்ந்தாள். அவள் அழகைப் பார்த்து வியந்தான் உபதளபதி. அவள் தன் பெயர் எம்பெருமானடியாள் என்று கூறினாள். அவளை அழகிய மணவாளபுரத்தின் ராணி என அறிமுகம் செய்தார் சிங்கப்பிரான்.  அவளை அருகே அழைத்து உபதளபதியை வணங்கச் செய்தார். அவள் சிங்கப்பிரானிடம் தான் உபதளபதியின் பாதுகாப்பில் இருக்க விரும்புவதாகச் சொல்ல அதை அப்படியே மொழி பெயர்க்கச் சொன்னார் சிங்கப்பிரான். அதைக் கேட்ட உபதளபதிக்கு மகிழ்ச்சி மீதூறியது. அவள் மேலும் திருவரங்கத்திற்கு உரிய நிலங்களையும் மற்றச் சொத்துக்களையும் சிங்கப்பிரான் நிர்வாகம் செய்யும்படி கேட்டுக் கொள்வதாகக் கூற அதையும் உபதளபதி ஒப்புக் கொண்டான். உரிய கப்பம் செலுத்திவிடுவதாக சிங்கப்பிரானும் கூறினார்.

இப்படியாக உபதளபதியைச் சமாதானம் செய்துவிட்டு சிங்கப்பிரான் கோயிலை நோக்கி நடந்தார். கிழக்கு வாயிலருகே செல்கையில் யாரோ தீனக்குரலில் முனகும் சப்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் துளசிச் செடிகளுக்கு இடையில் அம்சகலா கிடந்தாள். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அவள் உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக சேதம் ஆகி இருந்தது என்பது அங்கே தெரிந்த ரத்தச் சேற்றிலிருந்து தெரிந்தது. அவள் எப்படி இங்கே வந்தாள், என்ன ஆயிற்று என்றெல்லாம் புரியாத சிங்கப்பிரான் அவளைக் கீழே குனிந்து சோதித்துப் பார்த்தார். உயிர் கொஞ்சம் போல் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவளை அழைத்தார். மிகப் பிரயாசையுடன் கண்களைத் திறந்த அம்சகலா மிகுந்த சிரமத்துடன் அவரை யாரெனப் புரிந்து கொண்டாள்.

பேச வாயெடுத்த அவளால் பேச முடியவில்லை. என்றாலும் மெல்ல மெல்லத் தான் இங்கே வந்து தில்லித் தளபதியைப் பழி வாங்கிய கதையைச் சொன்னாள். திருவரங்கத்துக்காகவும் அரங்கனுக்காகவும் இப்படி எல்லாம் தியாகம் செய்த அம்சகலாவை நினைத்து நினைத்து வருந்திய சிங்கப்பிரான் அவள் தியாகம் எவ்வளவு பெரிது என்று உணர்ந்து கொண்டார். அவள் மனதில் ஏதேனும் ஆசை இருந்தால் நிறைவேற்றி வைப்பதாகச் சொல்ல அவளும் திருமடைப்பள்ளியிலிருந்து தனக்கு வாய்க்கரிசியும், பரிவட்டமும், கோயில் மாலையும் கொண்டு வந்து போட்டு மடைப்பள்ளியில் இருந்து கொள்ளி எடுத்து வந்து தன்னை எரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

Thursday, April 21, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வெள்ளைக் கோபுரத்தின் கதை!

ஏற்கெனவே இந்த நர்த்தகியின் தோழியின் தாய் ஶ்ரீரங்கத்துக்கு ஏற்பட்டிருந்த அவலங்களையும், நம்பெருமாள் ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் இன்னொரு பக்கமும் தனித்தனியாகப் பிரிந்து சென்றதையும் கேள்விப் பட்டு மனம் கொதித்துப் போயிருந்தாள். போதாதற்கு அவள் இன்னொரு தோழி ஒருத்தியும் உலுக்கானின் வாளால் காயம் ஏற்பட்டது புரையோடியதில் இறந்து விட்டாள். எல்லாமும் சேர்ந்து அவள் கொதிநிலையில் இருந்தாள். ஆகவே இந்தத் துலுக்கர்களைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். ஆகவே ஒரு நாள் அதிகாலையிலேயே எழுந்து சீவிச் சிங்காரித்துக் கொண்டு அரங்கன் கோயிலருகே வந்து மூன்றாவது வாயிலின் அருகே ஒய்யாரமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் அவள் கண்கள் அந்த வழியாக வருபவர்கள் போகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அப்போது துலுக்கப்படையின் உபதளபதி மற்ற வீரர்கள், ஊழியர்கள் ஆகியோரின் வேலையை மேற்பார்வை செய்வதற்காக அங்கே தன் குதிரை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட அம்சகலா தான் மிகவும் நாணம் அடைந்தவள் போலப் போக்குக் காட்டிக் கொண்டு ஓரமாக ஒய்யார நடை நடந்தாள். தன் எழிலை எல்லாம் காட்டி அந்தத் துலுக்கத் தளபதியை மயக்கும் எண்ணத்துடன் கடைக்கண் பார்வையை அவன் மேல் வீசினாள். சாதாரணமாகவே பெண் பித்தனான உபதளபதி இப்படி வலிய ஒரு பெண் அவன் மேல் காதல் வலை வீசினால் சும்மாவா விடுவான்! அவனும் உடனேயே குதிரையை விட்டுக் கீழே இறங்கி அவளருகே சென்றான். அவள் கோயிலினுள்ளே செல்ல அவனும் அவள் பின்னேயே சென்றான்.

இருவரும் செல்கையில் மறைவான ஓர் இடம் வந்ததும் உபதளபதி அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முற்பட்டான். அவள் தன் சாகசங்கள் அனைத்தையும் காட்டி அவனை மயக்கி ஒரு கோபுர நிலைக்கருகே அழைத்துச் சென்றாள். அதன் படிகளில் விறுவிறுவென அவள் ஏறப் பின்னாலேயே அவனும் ஏறினான். கோபுரத்தின் மூன்று நிலைகளிலும் அவள் ஜாடையால் அங்கே கோயிலின் சொத்துக்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு சொல்லவே அதை நம்பி அவனும் பின் சென்றான். தந்திரமாக அவள் ஓர் இடத்தில் கோபுர நிலைவாயிலின் துவாரத்தருகே சென்று கையை நீட்டி வெளியே காட்ட, அவள் அழகில் முற்றிலும் மயங்கிக் கிடந்த உபதளபதியும் வெளியே எட்டிப் பார்த்தான். அவள் வஞ்சகமான புன்னகையுடன் அவன் கால்களைப்பற்றிக் கொண்டு தூக்கி அவனைக் கீழே தள்ளி விட்டாள். கீழே கல்தரையில் மண்டை பிளக்கப் படீர் என விழுந்தான் உபதளபதி!

தளபதி விழுந்த சப்தம் கேட்டு அங்கே கீழே கூட்டம் கூடுவதற்குள்ளாக அம்சகலா என்பாள் கோபுர துவாரத்தின் எதிர்பக்கம் சென்று அங்கே பொன்மயமான திருவரங்க விமானத்தைப் பார்த்தாள். "ரங்கா! ரங்கா!" என்று கூவினாள். விமானத்தின் பரவாசுதேவரின் உருவம் அவளைப் பார்த்துச் சிரித்து ஆசி கூறுவது போல் உணர்ந்தாள். மீண்டும், "ரங்கா! நான் பழிவாங்கிவிட்டேன்!" என்றாள். "ரங்கா, உன் அடியவர்கள் துன்புற்று இறந்தவர் எத்தனை பேர்! உன் செல்வமெல்லாம் பாழாய்ப் போய் விட்டதே! திருவரங்கத்தை இருள் சூழ்ந்ததே! நீ ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் ஒரு பக்கமுமாகப் பிரிந்து வாழ்கின்றீர்களே! இது அடுக்குமா? எப்போதும் ரங்கா ரங்கா என்ற ஆனந்தக் கூச்சல்களே கேட்டுக் கொண்டிருந்த திருவரங்கத்திலே இன்று ஒப்பாரி ஒலிக்கின்றதே! அரங்கா இதுவும் உன் திருவுளமோ? ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை! ரங்கா! ஆகவே என்னால் இயன்றவரை பழி தீர்த்துக் கொண்டேன்!" என்றாள்.

பின்னர் தன் கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் வைத்த வண்ணம் இமைகளை மூடிக்கொண்டு "ரங்கா! ரங்கா!" என்று கூவிய வண்ணம், "என்னை ஏற்றுக்கொள்!" என்ற வண்ணம் அவளும் கோபுர வாசலின் வழியாக வெளியே பாய்ந்தாள்.

Wednesday, April 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நாயகனைப் பிரிந்த ரங்க நாயகி!

ரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகின்றன இங்கே வந்து! அரங்கனைப் பட்டினி போட்டுவிட்டு நிறுத்தியது தான் அதுக்கப்புறமா எழுத முடியாமல் பிரயாணங்கள். அவ்வப்போது சில பதிவுகளை எண்ணங்கள் பக்கத்தில் எழுதி வந்தாலும், இங்கே எழுதும்போது கூடுதல் கவனம் இருக்கணும் இல்லையா? நான் பாட்டுக்கு எழுதிடக் கூடாது. ஆகவே தகவல்களைச் சரி பார்க்கணும், சரி பார்க்கணும்னே போயிட்டு இருந்தது! சோம்பேறித்தனமாக இருக்கேனேனு உறுத்தலும் இருந்தாலும் வேறு வழியில்லை. :( அரங்கன் சாப்பிட்டானா என்னனு இப்போப் பார்ப்போம்.

அரங்கனுக்கு உண்ணக் கூட வழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பக்தர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்தக் கூட்டத்தில் இருந்த நர்த்தகிகளில் ஒருத்தி தன் நகைகளைக் கழட்டிக் கொடுத்துப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று தன் நகைகளை  விற்று வரும் பணத்தில் அரங்கனுக்கும், உடன் வரும் பரிஜனங்களுக்கும் தேவையான உணவைச் சம்பாதித்துக் கொண்டு வரும்படி இருவரை அனுப்பினாள். அந்தக் காலத்தில் பண்டமாற்றுக்கு உதவிய யவன நாட்டுச் செம்பொன் நாணயங்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்து உதவினாள். அவற்றை எடுத்துக்கொண்டு அடியார் கூட்டத்தில் இருவர் பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடந்தனர். அதற்குள்ளாக ரங்கநாயகித் தாயாரும் வேறுதிசையில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவளுக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்.
ரங்கநாயகித் தாயார் க்கான பட முடிவு
திருவரங்கக் கோயிலில் தனி சந்நிதி,அரங்கனுக்கு நிகராகத் தனி மரியாதைகள், வழிபாடுகள் என்று செங்கோலோச்சிக் கொண்டிருந்த ரங்கநாயகித் தாயார் இப்போது தன்னந்தனியாகத் தன் நாயகன் ஒரு திசையிலும் தான் மற்றொரு திசையிலுமாகப் பயணித்துக் கொண்டிருந்தாள். படையெடுப்பு நடந்த சமயம் பெரிய பெருமாளான ரங்கநாதரின் சந்நிதியைக் கல்சுவர் எடுத்து மூடிய அடியார்கள் ரங்க நாயகியைப் பெயர்த்து எடுத்து சந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வில்வமரத்தினடியில் புதைத்து வைத்தனர். அந்த வில்வ மரம் இப்போதும் இருக்கும் வில்வமரம் தான் என்கின்றனர்.  உற்சவரான அர்ச்சாமூர்த்தியை ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணினார்கள். தாயாரின் நகை, நட்டு மற்றச் செல்வங்களையெல்லாம் பெட்டகங்களில் அடுக்கினார்கள். ஒரு சில பரிசனங்கள் துணை வர இந்த ஊர்வலம் மேற்கு நோக்கிச் செல்வதாக முடிவாகி இருந்தது. இந்த ஊர்வலத்தில் பின்னால் அழகிய நம்பி என்பாரும் அவருடைய ஆட்களும் சேர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி ரங்கநாயகித் தாயார் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அழகிய நம்பி என்பானும் அவனுடைய ஆட்களும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பயணம் செய்து நாச்சியார் போய்க் கொண்டிருக்கும் திசையில் நாச்சியாரையும் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கிருந்த அனைவருடனும் கலந்து ஆலோசித்து ஊர்வலத்தைத் திருப்பதி/திருமலைப்பக்கமாய்க் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆகவே அழகிய நம்பி ஊர்வலத்தைச் சாலை மார்க்கத்தில் செலுத்தாமல் காட்டு மார்க்கமாகவே செலுத்தினான். வழியில் தென்பட்ட கள்ளர் கூட்டத்தினரிடம் எப்படியோ தப்பி மூன்று தினங்கள் பயணம் செய்த பின்னர் நான்காம் நாள் காட்டு வழியில் சென்றபோது வழியில் தென்பட்ட அசாதாரணமான இயக்கங்களினால் அழகிய நம்பிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. கள்ளர் கூட்டம் தான் தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு தப்பி ஓட நினைத்து அதைக் குறித்துப் பேசுவதற்குள்ளாகக் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டது.

உடனே கள்வர்கள் தான் தொடர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கு காய்ந்து கொண்டிருந்த புற்களின் மேல் நெருப்பை வைத்துப் புகை உண்டாக்கி அந்தப் புகையில் அனைவரும் ஆளுக்கொரு திக்காய்த் தப்பி ஓடினார்கள். அழகிய நம்பி மூன்று ஆபரணப் பெட்டிகளுக்குப் பொறுப்பேற்றுப் பின்னாலேயே சென்றவன் சற்று தூரத்தில் ஒரு கணவாய் தென்படவே அங்கே சென்று கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தான். பெட்டிகளைத் தூக்கி வந்த ஆறுபேரும், அவர்களுக்கு உதவ வந்த மற்ற மூன்று பேரும் அன்றிரவை அங்கேயே கழிக்க எண்ணவே அழகிய நம்பியும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் இரவில் கிசுகிசுவென்று சிலர் சேர்ந்து பேசும் குரல் கேட்கவே விழித்த நம்பி என்னவென்று பார்க்க பெட்டகங்களைத் தூக்கி வந்த ஆறு ஊழியர்களும் தாயாரின் ஆபரணங்களைத் தாங்களே பங்கிட்டுக் கொண்டு விடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான். என்ன செய்யலாம் என நம்பி சிந்திப்பதற்குள்ளாக அவனைக் கொல்வதற்கு ஆறு பேரும் பாய, நம்பி மற்ற மூவரையும் எழுப்பி இவர்கள் ஆறுபேரையும் எதிர்கொள்ள ஆயத்தமானான்.

நம்பியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டு ஓடிவிட்டனர். நம்பியும் மற்ற மூவரும் விடியும்வரை விழித்திருந்து பெட்டகங்களை அங்கேயே ஓர் இடத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அடையாளத்திற்காகச் சில கற்களையும் வைத்து மூடினார்கள். பின்னர் கிழக்கே நோக்கிப் பயணம் செய்தனர். 

அதற்குள்ளாக இங்கே திருவரங்கத்தில் துலுக்கர்களின் அராஜகம் அதிகமாக இருந்தது. அரங்கனின் சொத்துக்காகவே படை எடுத்த அவர்கள் ஒன்றும் கிட்டவில்லை என்பதறிந்து கோபம் கொண்டனர். ஆகவே அரங்கன் எங்கே போயிருக்கிறான் என்பதைக் கண்டறியவும் அவனுடைய சொத்துக்களும் அவனுடனே செல்கின்றனவா என்பதை அறியவும் ஒற்றர் படைகளை ஏவி விட்டால் சுல்தானின் தளபதி. மேலும் கோயிலிலும் பல இடங்களையும் தோண்டியும் இடித்தும் செல்வங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினான். பல சிற்பங்கள் உடைக்கப்பட்டன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கற்றூண்கள் இடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கேள்விப் பட்ட அரங்கன் முன் ஆடும் நர்த்தகிகளில் ஒருத்தியான அம்சகலா என்பாள் துடிதுடித்தாள். தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே எனத் தவித்தாள்; உருகினாள்! வேதனையில் ஆழ்ந்தாள். அவளும் திருவரங்கத்தில் வாழ்ந்தவள் தான். இப்போது தப்பிக் காவிரியின் எதிர்க்கரையில் அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தாள்.