எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 26, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி

திருக்குருகூர் தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில் தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார் ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை பற்றிப் பார்ப்போமா??

ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும் இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில் போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும் பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்??? விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்! கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்! அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.(2832) திருவாய்மொழி

சரி, எல்லாரையும் பிறக்கச் சொல்லியாச்சு, அதற்கான இடம் வேண்டாமா? அதுக்குத் தகுந்த க்ஷேத்திரமாகத் திருக்குருகூர் தேர்வு செய்யப் பட்டது பகவானாலேயே. தாய், தகப்பன்? அதுவும் தேர்வு செய்யப் பட்டது. திருவழுதி வளநாடரின் வழித் தோன்றலான காரி என்பவருக்கும் அவர் மனைவியான உடைய நங்கைக்கும் குழந்தைகளே இல்லை. அவர்கள் இருவரும் அருகே உள்ள திருக்குறுங்குடி என்னும் திவ்ய க்ஷேத்திரத்தின் நம்பியை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். இருவரின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்த எம்பிரான் தம்பதியரிடம், “யாரைப் போன்ற பிள்ளை வேண்டும்?” என்று கேட்க, உடைய நங்கையோ யோசிக்கவே இல்லை. “பரந்தாமா! உன்னைப் போல் பிள்ளை வேண்டும்” என்று கேட்டுவிட்டார். பகவானும், “அவ்வண்ணம் நாமே உமக்கு மகனாய்த் தோன்றுவோம்” என்று சொன்னாராம். அப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், சேனை முதலியாரின் அம்சமும் சேர்ந்து தோன்றியவரே நம்மாழ்வார். குழந்தை பிறந்தாச்சு. குழந்தை அழணுமே? ஆனால் அழவே இல்லை, பால் குடிக்கணுமே? தாயிடம் பால் குடிக்கவும் இல்லை. எந்தவிதமான உணவும் எடுக்கவில்லை. இது என்ன அதிசயக் குழந்தை? இதை எவ்வாறு வளர்ப்பது? புரியாமலேயே கலங்கிப் போன காரியாரும், உடைய நங்கையும் குழந்தை பிறந்த பனிரண்டாம் நாள் குழந்தையை ஆதிநாதர் சந்நதிக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அக்குழந்தையை ஆதிசேஷனின் அவதாரமாய்த் தோன்றி இருக்கும் புளிய மரத்தடியில் விட்டுச் செல்லுமாறு தோன்ற அவ்வண்ணமே செய்தனர். குழந்தை ஏன் இவ்விதம் பிறந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை. பின்னாட்களிலேயே தெரிய வந்தது.

பிறக்கும்போது, தாயின் கர்ப்பத்தில் கூட ஒவ்வொரு குழந்தையும் ஞானம் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனால் பிறப்பின் ரகசியத்தால் இறைவன் சிலருக்கு மட்டுமே ஞானத்தோடு பிறக்க அருள் புரிகின்றான். மற்ற நம் போன்ற சாமானியருக்கு கர்ப்பத்தில் இருந்து வெளியே வரும்போதே சடம் என்னும் வாயு சூழ்ந்து கொண்டு நம்மை அஞ்ஞானம் என்னும் சாகரத்தில் தள்ளிவிடுகிறது. நம்மாழ்வாரோ தெய்வக் குழந்தை மட்டுமல்ல, பிறக்கும்போதே ஞானக் குழந்தையும் கூட அல்லவோ? ஆகையால் தம்மைச் சூழவந்த சடத்தைக் கோபித்து விலக்கிவிட்டார். அதனாலேயே அவர் பேசவில்லை, பால் அருந்தவில்லை. இப்படிச் சடத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிறக்கும்போதே ஞானத்தோடு பிறந்த குழந்தைக்குச் “சடகோபன்” என்னும் திருநாமம் சூட்டினார்கள். குழந்தை புளியமரத்தடியிலேயே வளர்ந்தது. கையிலே சின்முத்திரையைத் தாங்கிக் கொண்டு தெற்கே பார்த்து அமர்ந்திருந்தது அந்தக் குழந்தை. வரவேண்டுமே, உரிய நேரத்தில் சீடன் வரவேண்டும் அல்லவா? அதற்குத் தானே காத்திருந்தது குழந்தை? பதினாறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தை இன்னும் தவம் செய்துகொண்டு மோன நிலையிலேயே இருந்தது. அப்போது!

Monday, August 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


கொஞ்சம் அவசரமாவே திருக்கோளூரில் தரிசனம் பண்ணினோம்னு நினைக்கிறேன். பெருமாளோட பெயர் மட்டும் நல்லா நினைவில் இருக்கு. என்ன பெயர் தெரியுமா? வைத்தமாநிதி! பெருமாளே ஒரு மாநிதிதான். அதிலும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் குபேரன் வைத்த மாநிதிகள் அத்தனையும் கிடைக்கும். கேட்பானேன்! பெருமாளின் அருளே வைத்தமாநிதிதானே. நாம் கொடுத்து வைத்திருந்தால் தவிர இத்தகையதொரு மாநிதியான இறை தரிசனம் கிடைக்குமா? இந்தக் கோயிலின் தலவரலாறு பின்வருமாறு:

ஈசனின் நண்பன் ஆன குபேரன் ஈசனின் அருளால் அலகாபுரியில் தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டு வடதிசைக்கு அதிபதியாக இருந்து வந்தான். இறைவனின் அருள் பரிபூரணமாய்க் கைவரப் பெற்ற அவனுக்கு நவநிதிகளும் வசமாகி இருந்தது. அவனுக்கு இறைவனிடம் இருந்த செல்வாக்கினாலும், அதீத உரிமையினாலும் எப்போது வேண்டுமானாலும் கைலையங்கிரிக்குச் சென்று ஈசனைத் தரிசிக்கும் உரிமையைப் பெற்றிருந்தான். அவ்வாறே ஒருநாள் அவன் சென்றிருந்த சமயம் இறைவனும், இறைவியும் தனித்திருந்த நேரம். அம்பாள் அதீத அழகுடன் சுடர்விட்டுப் பிரகாசித்தாள். இவர்கள் தனியாய் இருப்பதை உணராமல் சென்ற குபேரன் ஒளிவீசிப் பிரகாசிக்கும் காந்தியுடன் விளங்கிய அம்மையைக் கண்டு ஒரு கணம் மனம் தடுமாறினான். அவளையே உற்று நோக்கினான். உலக நாயகியாம் அம்மாவுக்குத் தன் மகனில் ஒருவன் இம்மாதிரி நடப்பது பொறுக்குமா? மகன் தான் என்றாலும் இதே தவறை மற்றவரும் செய்யாவண்ணம் காக்கவேண்டுமே? தக்க தண்டனை ஒன்றை இவனுக்கு அளிக்கவேண்டும். அதன் மூலம் பாடமும் கற்கவேண்டும் எனத் தீர்மானித்தவளாய்,” தீய எண்ணத்தோடு உன் தாய் போன்ற என்னைப் பார்த்ததால் உன் உருவம் விகாரமடைந்து, உனக்கு ஒரு கண்ணும் போகும். உன்னை விட்டு நவநிதிகளும் விலகும்.” என்று சொல்லுகின்றாள்.

உடனேயே தன் தவற்றை உணர்ந்த குபேரனும் ஈசனை வணங்கித் தன்னை மன்னிக்குமாறு கேட்க, இதற்கேற்ற பரிகாரத்தை மலை மகளே சொல்லுவாள், அவளையே போய்ப் பணிந்து கேள் என அனுப்புகின்றார் ஈசன். பூலோக வாசமும் செய்யுமாறு அவனைப்பணித்து, பொருநையாற்றின் கரையில் இந்த நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனைப் பணிந்து வா. ஒருநாள் நீ வேண்டியது நடக்கும் எனச் சொல்லிவிடுகின்றாள் உமை அம்மை. அதன்படி குபேரனும் இங்கே வந்து நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனாகிய பெருமாளைக் குறித்துத் தவம் இயற்றப் பெருமாளும் மனமிரங்கி, இந்த க்ஷேத்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது. தர்மம் இங்கே நிலைத்து நிற்கிறது. அதர்மம் இந்த க்ஷேத்திரத்தை அணுகாது. நீ உமையை கெட்ட நோக்குடன் பார்த்த பாவம் மெதுவாய்த் தான் போகும். உன்னுடைய நவநிதிகளையும் தற்சமயம் தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் கொண்டுபோ! என்று சொல்லிவிட்டுத் தான் படுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அடியில் இருந்து நிதியை எடுத்து ஒரு மரக்காலால் அளந்து குபேரனுக்குக் கொடுக்கிறார். நவநிதிகளில் அனைத்தும் குபேரனைச் சென்றடையவில்லை என்பதாலும், இங்கே உள்ள நவநிதிகளையும் காத்துக் கொண்டு அதன்மேலேயே பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சி கொடுப்பதாலும் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். கிழக்கே பார்த்துக் கொண்டு புஜங்க சயனத்தில் படுத்துக் கொண்டு நிதியைப் பத்திரமாய்க் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.

தாயார் கோளூர் வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார். மதுரகவி ஆழ்வார் இங்கேதான் அவதாரம் செய்ததாய்ச் சொல்லுகின்றனர். நம்மாழ்வார் இந்தத் தலத்திற்கும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார். கோயில் விமானத்தை ஸ்ரீகரவிமானம் என அழைக்கின்றனர். செல்வம் வேண்டிப் பிரார்த்திப்போர் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து பெருமாளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டால் செல்வம் கிட்டும் என்றும் சொல்லுகின்றனர். குபேரன் செல்வம் பெற்றது மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில். அப்போது இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கும்.

அடுத்து நாம் காணப்போவது மிக முக்கியமான தலம். திருக்குருகூர். நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம். மதுரகவி ஆழ்வார் வடக்கே சென்றிருந்தவர் நம்மாழ்வாரைத் தேடிக் கண்டுபிடித்தது, மணவாள மாமுனிகள் அவதார க்ஷேத்திரம், நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் பிரபந்தங்களை அருளிச் செய்தது போன்றவற்றை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

Friday, August 21, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம். திருச்செந்தூரில் நடை சார்த்த நேரம் ஆகும் என்பதாலும், இந்த மாதிரி கிராமங்களின் சிறு கோயில்கள் சீக்கிரம் மூடிவிடுவதாலும் , திருச்செந்தூரில் இருந்து திரும்ப வரும்போது பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தாலும் போகும்போதே சென்றோம். இந்த நவதிருப்பதிகள் அனைத்துமே டிவிஎஸ் நிர்வாகத்தினரின் உதவியோடு நிர்வாகமும், பக்தர்களுக்கு தரிசன வசதிகளும் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோயில்களும் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மக்களே கொஞ்சம் சுத்தம் பராமரிக்கப் படுவதில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். பெரும்பாலும் வடமாவட்டங்களில் காணப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், அங்கே குறைவாகவே காணமுடிகிறது. சாலைப் பராமரிப்பும் மிகவும் சுகமாய் இருக்கிறது. ஆகையால் பயணமும் செளகரியமாகவே அமைந்தது. ஓட்டுநரும் கோயில்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்தவராய் இருந்ததால் வசதியாகவும் இருந்தது.

திரு டோண்டு சாரின் குலதெய்வமும், இஷ்டதெய்வமும், வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவரும் ஆன மகரநெடுங்குழைக்காதர் கோயில் தென் திருப்பேரையில் தாமிரபரணியாற்றின் தென்கரையில் உள்ளது. பெருமாள் நல்ல ஆஜாநுபாகுவாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். பெரிய காதுகள், அதற்கேற்ற மீன் வடிவம் கொண்ட மகர நெடுங்குழைகள். அதி அற்புதமாய் உள்ளது. கிழக்கே பார்த்துக்கொண்டு பூமாதேவி அளித்ததாய்ச் சொல்லப் படும் குழைகளை அணிந்து கொண்டு அதன் காரணமாய் ஸ்ரீ எனப் படும் லட்சுமியின் கோபத்துக்கு ஆளானதாய்ச் சொல்லுகின்றார்கள். தென் திருப்பேரையில் தான் பகவான் பூமாதேவியிடம் ஆசை கொண்டதாயும் சொல்லுகின்றனர். ஒருவேளை இந்த இடத்தின் தண்மையும், பசுமையும் ஆசை கொள்ள வைத்ததோ என்னமோ?? நாங்களும் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு, இப்போ பசுமை அப்படியே இருக்கா இல்லையா எப்படினு தெரியலை!  இங்கே மஹாலக்ஷ்மி பூமாதேவியின் பேரில் பெருமாளுக்குத் தனி ஆசை இருப்பதைக் கண்டு தனக்கு பூமாதேவியின் உருவும், நிறைவும் ஏற்படவேண்டும் என வேண்டினாளாம். அதுவும் துர்வாஸரிடம் கேட்டிருக்கிறாள். உடனே துர்வாஸர் பூமாதேவியைப் பார்க்க தென் திருப்பேரையை அடைந்தார்.

பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 3.4.3
3049
சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 3.4.4 நம்மாழ்வார் பாசுரம். ஆனால் இந்தக் கோயில் பற்றி ஒரு பாசுரம் தான் எழுதி இருக்கார். கண்டுபிடிக்கணும். :))))))

ஆனால் பகவானின் மடியில் செளக்கியமாய் அமர்ந்திருந்த பூமாதேவி துர்வாஸரைக் கண்டு வணங்கவில்லை. மடியை விட்டு எழுந்து உபசரிக்கவில்லை. அதனால் ஸ்ரீயின் உடலை நீ பெறவேண்டும் என துர்வாசர் சபித்ததாகவும், ஸ்ரீயின் உடல் தனக்கு வேண்டாம் என பூமாதேவி கேட்டுக் கொண்டதின் பேரில் அவளை பொருநை நதிக்கரையின் தென்கரையில் பங்குனி மாதப் பெளர்ணமியில் நதியில் நீராடித் தவம் புரியச் சொன்னார். அஷ்டாக்ஷரத்தில் தவம் இருந்ததாயும் சொல்கின்றனர். பூமாதேவி அவ்வாறு தவம் புரியும் வேளையில் மீன்போன்ற வடிவுடைய இரு குண்டலங்கள் அவள் கைகளுக்குக் கிடைத்தன. அவற்றைக் கண்டதும் மீண்டும் பெருமாள் நினைவே அவளுக்கு வர, அவற்றைப் பெருமாளிடம் கொடுக்க, அவரும் அதை ஆசையுடன் வாங்கித் தம் காதுகளில் அணிந்து கொண்டார். அது முதல் பெருமாள் மகரநெடுங்குழைக்காதர் ஆனார். தாயார் பெயர் குழைக்காதவல்லி,/ ஊர் பெயர் ஸ்ரீபேரை என்றும், தென் திருப்பேரை என்றும் வழங்குகிறது. மற்றொரு தாயாரை தென் திருப்பேரை நாச்சியார் என்றும் சொல்லுவார்கள்.

அசுரர்களால் தோற்கடிக்கப் பட்ட வருணன் தனது நாகத்தையும், பாசத்தையும் இழந்து தவிக்க, அவன் மனைவி தேவகுருவிடம் வேண்ட தேவகுரு அவனை தென் திருப்பேரை மகர தீர்த்தத்தில் நீராடி “திருவைந்தெழுத்தால்” பகவானை வழிபட வேண்டியது பெறுவாய் என்று சொல்ல அவ்வண்ணமே வருணன் பங்குனி பூர்ணிமையிலேயே வழிபட்டதாகவும், அப்போது மகிழ்ந்த பெருமான் கொடுத்த நீரானது பாசமாக மாறி அதைப் பெற்று வருணன் மனமகிழ்வோடு அசுரர்களைத் தோற்கடிக்கப் புது வலிமை பெற்றதாகவும் தலபுராணம் சொல்லுகின்றது. மேலும் விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது தாமிரபரணிக் கரைக்கு தென் திருப்பேரைக்கு வந்து மகரநெடுங்குழைக்காதரை வேண்ட பஞ்சம் நீங்கி, மழை பொழிந்ததாகவும் சொல்கின்றனர்.

அடுத்தது திருக்கோளூர் என்னும் ஸ்தலம். நம்மாழ்வாரைக் கண்டெடுத்த மதுரகவியாழ்வார் அவதாரம் பண்ணிய இடம் இது.

Monday, August 17, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!


இந்த இரட்டைத் திருப்பதியில் அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அதனால் இவை இரட்டைத் திருப்பதி என அழைக்கப் படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 மைல் தொலைவிலே தாமிரபரணியின் வடகரையிலே இவை உள்ளன. முதல் திருப்பதியிலே பெருமாள் திவ்ய நாமம் ஸ்ரீநிவாசன் என்ற தேவர்பிரான் ஆகும். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார். தாயார் ஸ்ரீதேவிதிருமார்பிலும் இருபக்கமும் உபய நாச்சியார்களும் உள்ளனர்.

அடுத்த கோயிலில் செந்தாமரைக் கண்ணன், அரவிந்தலோசனன் என்ற திருநாமங்களால் அழைக்கப் படும் பெருமாள். குமுத விமானத்திலே தாயார் கருத்தடங்கண்ணியோடு எழுந்தருளி இருக்கிறார். நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்த ஊர். இந்தக் கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு சொல்லப் படுகிறது.

திருப்புளியங்குடிக்குத் தென் கிழக்கே நெல் வயல்களும், பூந்தோட்டங்களும் நிறைந்த கோதார நிலையம் என்னும் திருப்பதி ஒன்று இருந்தது. அதுவே தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் பட்டது. ஆத்ரேயகோத்திரத்தைச் சேர்ந்த சுப்ரபர் என்னும் முனிவர், இங்கே ஊரின் அழகையும், பொலிவையும் கண்டு யாகம் செய்யத் தகுந்த இடம் எனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். யாகசாலை அமைக்கப் பூமியை உழுது சமன்படுத்தியபோது அங்கே ஒரு வில்லும், தராசும் கிடைக்கப் பெற்றார்.

இது யாருடையவை என எண்ணி எப்படி இங்கே வந்தது என்றும் யோசித்துக் கொண்டே அவற்றை எடுத்தார். தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஓர் ஆண்மகனாகவும் மாறிக் கணவன், மனைவியாகத் தோற்றம் தர, சுப்ரபரும் மற்றவரும் வியந்து, இது என்ன விந்தை என அந்தத் தம்பதிகளைக் கேட்டனர். தம்பதிகளில் கணவன் சொன்னான்:” முன்பிறவியில் வித்யாதரன் என்னும் தேவனாக இருந்த அவன் தன் மனைவியான இந்தப் பெண்ணுடன் மோகம் கொண்டு உடலில் ஆடையில்லாமல் இருந்த கோலத்தில் யாத்திரை சென்று கொண்டிருந்த குபேரன் கண்ணில் பட அவனும் இவ்விதம் பொதுஇடத்தில் அநாகரீகமாய் நடந்து கொண்டதற்கு அவர்களை வில்லாகவும், தராசாகவும் மாறும்படி சாபம் கொடுத்துவிட்டான். சாபவிமோசனம் கிடைக்காதா என எண்ணி ஏங்கிய அவர்களுக்கு, சுப்ரபாதர் என்னும் முனிவர் யாகசாலை அமைக்க நிலத்தை உழும்போது உங்களுக்குச் சுயவுருக் கிட்டும் என்று சொன்னதாகவும், இப்போது சுயவுருக்கிட்டியதால் அவரைப் பணிந்து ஏத்துவதாகவும் சொன்னார்கள். முனிவர்களும் அவர்களை அனுப்பிவிட்டு விஷ்ணுவை ஆராதித்துப் பணிந்து தேவர்பிரான் என்ற பெயரோடு அங்கே எழுந்தருளச் செய்தனர். வில்லுக்கும், தராசுக்கும் முக்தி கொடுத்த இடமாகையால் அந்தப் பெயரிலேயே இது தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் படவேண்டும் என்றும் பிரார்த்தித்தனர்.

சுப்ரபர் தினமும் அந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள பொய்கைக்குச் சென்று அங்கே தாமரைப் பூக்களைப் பறித்து மாலை தொடுத்து பெருமானை அணியச் செய்து வந்தார். மாலையின் அழகைக் கண்டு உவந்த பெருமான் எங்கே இருந்து இத்தனை அழகான மலர்கள் கிடைக்கின்றன என்று கண்டறிய முனிவரோடு அங்கே வர, பொய்கையின் அழகையும், மலர்களின் வண்ணவிசித்திரங்களையும் கண்டு மனம் மகிழ்ந்து, தான் யாகசாலையில் தேவர்பிரானாகவும், இந்தப்பொய்கைக் கரையில் அரவிந்தலோசனனாகவும் இருக்கப் போவதாய்ச் சொல்கின்றார். தினந்தோறும் முதலில் தேவர்பிரானுக்கு இந்தத் தடாகக் கரையின் பூக்களால் வழிபாடுகள் நடத்திவிட்டு பின்னர் இந்த அரவிந்தலோசனனையும் தாமரை மலர்களால் அர்ச்சிக்கவேண்டும் என்றும் அருளிச் செய்தார்.

அச்வினி தேவர்கள் வைத்தியத்தில் தேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தேவர்களுக்குக் கிடைப்பதுபோல் யாகங்களிலும் யக்ஞங்களிலும் அவிர்பாகம் கிடைக்கவில்லை. ஆகவே பிரம்மாவிடம் சென்று தங்களுக்கும் அவிர்பாகம் கொடுக்கவேண்டுகின்றனர். பிரமன் அவர்களை தேவர்பிரானையும், அரவிந்தலோசனனையும் வணங்கித் தவம் இயற்றி வரம் வாங்கி வருமாறு கூறுகின்றான். அச்வினி தேவர்கள் அவ்விதமே தொலைவில்லிமங்கலம் பொய்கையில் நீராடி தேவர்பிரானையும், அரவிந்த லோசனனையும் வழிபாடுகள் செய்து தவம் இயற்றினார்கள். இறைவனும் அவர்கள் தவத்தை மெச்சி அவர்களுக்கும் அவிர்பாகம் கிடைக்குமாறு தேவர்களுக்குச் சொல்லிவிட்டு இந்தத் தீர்த்தமும் உங்கள் பெயரால் அச்வினி தீர்த்தம் என வழங்கப் படும் என்றும் அருளிச் செய்தார். இந்த அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் சகலவியாதிகளும் தீர்ந்துவிடும் என்றும் சொல்லுகின்றனர். கங்கைக்கரையில் உள்ள ஓர் அந்தணரான சத்தியசீலரின் இரண்டாவது மகன் ஆன விபீதகன் குஷ்டத்தால் பீடிக்கப் பட்டிருக்க, நாரதமுனி அவன் முற்பிறவியில் தன் குருவின் பசுவைத் திருடியதால் குருவின் சாபத்தால் இந்நிலைமை அடைந்திருப்பதாயும் தென்னாட்டிற்கு வந்து அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் ரோகம் நீங்கும் என்று சொல்லுகின்றார். அது போல் விபீதகனும் தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலம் வந்து அச்வினி தீர்த்ததில் நீராடி ரோகம் நீங்கப் பெற்றான் என்றும் சொல்லுவார்கள். அடுத்து நம்ம டோண்டு சாரின் இஷ்ட தெய்வமும், வலைஉலகப் பெருமக்களின் குலதெய்வமும் ஆன தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன். அப்பா, எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய குழை???

Sunday, August 02, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

திருக்குளந்தை செல்ல உண்மையாகவே பெருங்குளம் என்னப்படும் ஊரின் பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை! குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப் போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:

“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!”
(2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச் சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும் மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம் இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக் கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்

“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே
!”

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது. பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வரும்படி அமைந்துள்ளது.

விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும் அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள். அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.

அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.

மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம் வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான். விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும் பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான் பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின் மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக் கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக் கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.

சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக் கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட, அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான். அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர, சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின் பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி அருளினார்.

ஆணவம் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம் நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக் கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம் பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி வழியனுப்புவதும் நடந்து வருகிறது.

பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல் பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர் என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான் என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும், மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார். கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடைப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.