எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனும் பட்டினி!

இந்த சுரதானியையும் ஒருவன் காதலித்ததாகவும், அரங்கனையே நினைத்திருந்த சுரதானி இறந்த பின்னர் அவள்  விருப்பமான அரங்கன் மேல் அவள் கொண்ட காதல் அவனுக்கும் வந்துவிட்டதாகவும், சுரதானி காதலித்த அந்த அழகிய மணவாளர் மேல் அவனுக்கும் ஈர்ப்பு பிறந்துவிட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. அந்த அரங்கன் மேல் கொண்ட காதல் மாறாமல் பார்க்கும் பொருளை எல்லாம் அரங்கனாகவே அவன் பாவித்ததாகவும் அப்படி ஓர் நாள் அவன் சுட்ட ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிய கோழியையும் அரங்கனாகவே பாவித்து, நெய் தடவாத ரொட்டியை எடுத்துச் சென்று விட்டாயே அரங்கா என்று கூவிய வண்ணம் தொடர்ந்தவனுக்கு ஓர் அற்புத அனுபவம் கிட்டியதாகவும், அந்த நேரமே அவன் ஜீவன் முக்தனாக மாறி விட்டான் என்றும் அவனுக்கு முக்தி கிடைத்து அரங்கனின் கழல்களை அடைந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆண்டாள் வைத்த பக்திக்குப் பின்னர் சுரதானியின் காதலே அதிகம் பேசப்படுகிறது. ஆகவே பின்னர் வந்த நாட்களில் கோவிலில் சுரதானியின் உருவத்தைச் சித்திரமாக எழுதி வைத்து தினம் காலை கோதுமை ரொட்டி, கிச்சடி என்னும் பருப்புச் சேர்த்த பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைப்பதாகவும் அந்த நேரத்தில் அரங்கனுக்குக் கைலி உடுத்துவதாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. அரங்கன் விக்ரஹம் மாற்றில்லாப் பசும்பொன்னால் செய்யப்பட்டிருப்பதாக ஓர் கூற்று. மேலும் விக்ரஹத்தினுள் வைர, வைடூரியங்களையும் நவரத்தினங்களையும் புதைத்து மறைத்து வைத்திருப்பதாகவும் சுல்தானின் வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் சுரதானியின் தந்தை சுரதானி இறந்த பின்னர் பாரசீகமே திரும்பினாலும் உறவினர்களில் சிலர் இங்கேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அந்த அரங்கன் சிலையில் ஏதோ மாய, மந்திரம் இருப்பதாகவும், வசிய சக்தி அதில் இருப்பதாகவும் நம்பினார்கள். ஆகவே அந்த விக்ரஹத்தை எப்படியேனும் தேடி அடைந்து உருக்கி உலோகமாக மாற்றி விடவேண்டும் என்னும் வெறியில் விக்ரஹத்தைத் தேடி அலைந்தனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக நம் அரங்கனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அரங்கனோ எவரும் அறியாமல் காட்டுக்குள் ஒளிந்து ஒளிந்து பரிசனங்களாலும் முக்கிய பக்தர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டு வந்தான்.

திருக்கோஷ்டியூருக்கு அருகே உள்ள சோலைகளில் அரங்கன் மறைத்து வைக்கப் பட்டிருந்தான், ஊர் மக்களுக்கே அந்த விஷயம் தெரியாது. அரங்கனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சாமான்கள் வாங்க வந்தபோது ஊர் மக்கள் இல்லாமல் ஊரே வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அங்கிருந்த ஓரிருவரிடம் விசாரித்தால் டில்லி சுல்தானின் சூறைக்கும் படையெடுப்புக்கும் பயந்து மக்கள் ஊரை விட்டே ஓடிவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தன.  ஆகவே உணவுப் பொருள்கள் ஏதும் கிடைக்காமல் அரங்கனுடன் சென்ற பலருக்கும் உடல் நலிவு ஏற்பட்டது. உலகாரியரின்  உடலும் மிகவும் நலிந்து விட்டிருந்தது.  முன்பிருந்த பொலிவு அவரிடம் இப்போது இல்லை.  நகருக்குள் வந்து அவருக்காகக் கஞ்சிக்குச் சிறிதேனும் உணவு சம்பாதிக்க வந்த மக்களும் ஏதும் கிடைக்காமல் தயங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கே வந்த ஓர் அரங்கவாசியைக் கண்டதும் அவன் டில்லி ஒற்றனாக இருப்பானோ என்றே நினைத்துக் கொண்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இவன் கண்களில் படாமல் அரங்கன் ஊர்வலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டினார்கள். ஆனால் உண்மையில் வந்தவன் ஒற்றனே அல்ல. நல்லவனே ஆகும். எல்லோரும் ஒருவர் மற்றவரைச் சந்தேகப்படும் அளவுக்கு மனம் வெறுத்துப் போய் மாறி விட்டனர். இதைக் கண்ட அந்த அரங்கவாசிக்குத் தன் நிலைமை கண்டு வேதனை ஏற்பட்டது.  ஆனால் அவனைக் கண்டு தப்பி ஓடியவர்கள் அரங்கன் ஒளிந்திருந்த இடம் சென்று டில்லி ஒற்றன் தங்களைத் தேடி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உலகாரியரின் உடல்நிலை இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்படியாக இல்லை.

அங்கிருந்த வேறொரு முதியவர் பார்த்துச் சொன்னதும் அனைவரும் அப்போது ராகுகாலமாக இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பினர். ஒரே ஓட்டமாக ஓடினார்கள். அவர்கள் நடக்க அவர்கள் சென்ற பாதை சுருங்கிக் கொண்டே வந்தது. ஓர் இடத்தில் ஶ்ரீபாதம் தாங்கி ஒருவன் மயங்கி விழ அனைவரும் அரங்கனின் பல்லக்குக் கவிழாமல் பாதுகாத்துக் கீழே இறக்கிவிட்டு ஶ்ரீபாதம் தாங்கிக்கு மயக்கம் தெளிவித்தார்கள். ஆனால் பல நாட்கள் உணவில்லாமல் இருந்த அவனுக்கு மயக்கம் தெளிந்தாலும் முன்போல் நடமாட முடியவில்லை.  உலகாரியரிடம் கேட்டுக் கொண்டு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றால் அது வேட்டுவரின் கிராமமாக இருந்தது. அங்கிருந்து வேறிடம் செல்லலாம் என அனைவரும் முயன்றால் சிலரால் எழுந்து நடமாடவே முடியவில்லை. ஒரு வாய்த் தண்ணீராவது வேண்டும் என்று பலரும் அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டனர்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் பலரும் அரங்கனுக்கும் அமுது படைக்க முடியாமல் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையிலிருந்து மீள்வது எப்படி என்று கலங்கினார்கள். உலகாரியர் இது அரங்கன் நமக்கு வைத்திருக்கும் சோதனை என்றும் பசி, களைப்பு எல்லாம் நம் போன்ற சாமானியர்களுக்குத் தான் என்றும் அரங்கனுக்கு இல்லை என்றும் தெளிவூட்டினார். இத்தகைய சோதனைகள் மூலம் நம் பக்தி புடம் போடப்படுவதாகவும் உலகாரியர் கூறினார். உணவைத் தேடிச் சென்ற மக்கள் அங்கிருந்த வேட்டுவர் தலைவனிடம் நடந்ததை நடந்தபடியே கூறி உதவி கேட்டான். தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவும்படி கேட்டார்கள். நடந்ததைக் கேட்டறிந்த வேட்டுவர் தலைவன் குடியிருப்பில் இருந்த புல்லரிசி, தினை மாவு, தேன், பனங்கிழங்குகள், காட்டுக் கிழங்குகள், பழங்கள் என்று சேகரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.

பின்னர் அரங்கனின் பல்லக்கின் எதிரே நின்று கொண்டு அனைவரும் அவர்கள் பாணியில் ஒரு நடனம் செய்து அரங்கனுக்கு அஞ்சலி செய்தனர். வேட்டுவர் குடியிருப்பின் ஊருணிக்கிணற்றிலிருந்து குடிநீரும், குடியிருப்புகளிலிருந்து காய்ச்சிய பாலும் வந்தது. அந்தப் பாலில் கொஞ்சம் போல் ஶ்ரீபாதம் தாங்கிக் கொடுத்தால் நீண்ட நாட்கள் உணவுண்ணாமல் இருந்த காரணத்தாலோ என்னமோ அவரால் அதைக் குடிக்க முடியவில்லை. கொஞ்சம் போல் குடித்தவர் பின்னர் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் மூச்சு குறுக அப்படியே கிடந்தார்.

அந்தச் சமயம் அங்கே இருந்த பலருக்குள்ளாகவும் தில்லி ஒற்றன் என்று நினைத்தவன் பெரிய வீரனாக இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு தங்களுக்கு வேண்டும் என்றும், உண்மையில் அவன் அரங்கவாசி என்றும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த வீரனுடன் நண்பனாக இருந்த இன்னொருவனோ அவன் அரங்க வாசி தான் ஆனால் இப்போது ஒற்றனாக மாறிவிட்டான் என்றும் அவன் தங்களுடன் சேரக் கூடாது என்றும் அரங்கனை தில்லிக்காரர்களிடம் காட்டிக் கொடுத்துவிடுவான் என்றும் கடுமையாக மறுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு பெரிய படை வீரர்கள் குதிரைகளில் வரும் மாபெரும் சப்தம் அலை ஓசை போல் கேட்டது. அனைவர் நெஞ்சமும் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.