எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 03, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ஜ்வரதேவர்!


கண்ணன் சென்றதும் முதலில் விநாயகரை அங்கே தரிசித்து ஆசிகள் பெற்றுப் பின்னர் முருகனையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றான்.  பின்னர் உமாதேவியிடமும் ஆசிகள் வாங்கிய கண்ணன் ஈசனை எதிர்கொள்கிறான்.  ஈசன் அவனோடு போர் புரிய ஆயத்தமாகக் கண்ணன் முதலில் பின் வாங்குகிறான்.  பின்னர் ஈசனே இது உண்மையான யுத்தமில்லை; பாணாசுரனோடு நீ போடப் போகும் யுத்தமே உண்மையானது.  அதில் நீயே வெல்வாய்!  கவலை வேண்டாம் என்று கூற ஈசனோடு போர் புரிகிறான் கண்ணன்.  ஈசன் உஷ்ண ஜ்வராக்னியை விட, கண்ணன் தன் சீதள ஜ்வராக்னியால் அதை எதிர்கொண்டான்.  ஆனால் கண்ணனின் சீதள ஜ்வராக்னியை ஈசனின் உஷ்ண ஜ்வராக்னி வென்று விடுகிறது.  மூன்று சிரங்கள், நான்கு கரங்கள், ஒன்பது விழிகள், மூன்று கால்களோடு அந்த ஜ்வராக்னி தேவன் விளங்கினான்.  பின்னர் கண்ணன் ஒருவாறு ஈசனோடு சமர் புரிந்து வர, ஒரு கட்டத்தில் அவன் பாணாசுரனை வெல்லும் நேரம் வந்தது என ஈசன் ஒதுங்க கண்ணன் பாணாசுரனோடு போர் புரிந்து அவன் கைகளை வெட்டினான்.  ஈசனைத் தொழுத கைகள் தவிர மற்றக் கைகள் வெட்டப் பட்டன.  பின்னர் குடமுழா வாசிக்க பாணாசுரன் மீண்டும் அமர்த்தப் பட்டான்.  உஷைக்கும் அநிருத்தனுக்கும் திருமணம் முறைப்படி நடந்தது.

இந்த ஜ்வரதேவரை வணங்கினால் தீராத ஜ்வரம் தீரும் என்பார்கள்.  இவருக்கு நிவேதனமாக சுக்குக் கஷாயம் படைப்பது உண்டு.  மதுரையில் சுவாமி சந்நிதிப்  பிராகாரத்தில் ஒரு மூலையில் ஜ்வரதேவர் காணப்படுவார். இவருக்கு சீதளமான பசுந்தயிரால் அபிஷேஹமும் செய்வார்கள்.