எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 06, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!


முன் பதிவு

அரங்கனை மேற்கண்ட பதிவில் செல்பவர்களோடு பிரயாணம் செய்ய விட்டு விட்டுக் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அரங்கமாநகரில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம். ஏற்கெனவே  பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1311-ஆம் ஆண்டிலே மாலிக்காஃபூர் தலைமையிலே நடந்த படையெடுப்பில் களவாடிச் செல்லப்பட்ட அழகிய மணவாளர் விக்ரஹம் குறித்தும் பின்னர் அது திரும்ப அரங்கம் கொண்டுவரப் பட்டது குறித்தும் அறிந்து வைத்திருந்த இப்போதைய சுல்தான் தன் மகனைத் தளபதியாக அனுப்பிக் கட்டாயமாய் ஶ்ரீரங்கம் நகரில் நுழைந்து வேண்டிய மட்டும், பொன், மணி, ஆபரணங்கள், விக்ரஹங்கள் என எடுத்து வரும்படி கட்டளை இட்டிருந்தான்.  ஆகவே உலுக்கான் என அழைக்கப்பட்ட அந்தத் தளபதியும், (இவன் தான் பின்னர் அரியணை ஏறி முகமது-பின் - துக்ளக் என்னும் பெயரில் ஆட்சி புரிந்தவன்) தனக்கு வழிகாட்டிச் சென்ற ஹொய்சளர்களை அரங்கமாநகருக்குள்ளே நுழைந்து செல்லும்படி கட்டளை இட்டிருந்தான்.  வேறு வழியின்றி ஹொய்சளப் படைகள் முதலில் வழிகாட்டியபடி ஶ்ரீரங்கம் நகருக்குள் நுழைந்தது.

அதற்குள்ளாகக் கோயிலில் பெரிய பெருமாள் சந்நிதிக்குக் கல்திரை போட்டு மூடியதோடு அல்லாமல், தாயார் சந்நிதியின் மூலவரை அங்கிருந்த நந்தவனத்தில் ஒரு வில்வ மரத்தடியில் ஒளித்து வைத்துவிட்டு உற்சவரை அரங்கன் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் அனுப்பி வைத்தனர். இனி கடவுள் விட்ட வழி என வேதாந்த தேசிகரும் களைப்புடன் அமர்ந்த நிலையில் அவருக்கு அரங்கன் ஊர்வலம் தென் திருக்காவிரியின் எதிர்க்கரையில் ஒரு தோப்பினுள் மறைந்த வண்ணம் தேசிகர் வருகைக்குக் காத்திருப்பது சொல்லப்பட்டது. ஆனால் தேசிகர் இத்தனை மக்களையும், அரங்கனின் பரிசனங்களையும் விட்டுவிட்டுத் தான் மட்டும் செல்வது எப்படி என மறுத்துக் கொண்டிருக்கையில் அங்கே விவாதம் ஆரம்பித்தது. அப்போது கோயிலின் மூன்றாவது திருச்சுற்றில் காவலுக்கு இருந்தவர்கள் காதில் எச்சரிக்கை முரசொலி கேட்டது.

அனைவரும்  திடுக்கிட்டுப் போய்ப்பார்க்க, டில்லி சுல்தானின் படை வடகாவிரியைக் கடந்து வந்து கொண்டிருக்கும் செய்தி கிட்டுகிறது. ஆற்றில் ஆழம் காணவேண்டிப் பதிக்கப்பட்டிருந்த கொண்டைக் கோல்கள் அனைத்தும் அரங்கன் கோயிலைக் காத்து நின்ற படையால் அகற்றப்பட்டதால் டில்லி வீரர்களுக்கு  ஆற்றின் ஆழம் புரிந்து அதன் பின்னர் ஆழமில்லாத இடங்களைத் தெரிந்து கொண்டு ஆற்றைக் கடக்க நேரம் பிடிக்கும் என இங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களோ விரைவில் கண்டு பிடித்து விடிவதற்குள்ளாக ஆற்றின் மறுகரைக்கு வந்துவிட்டனர்.  இதைக் கண்ட ஶ்ரீரங்கம் படை வீரர்கள் திகிலுடன் கோயிலுக்குச் செய்தியைச் சொல்லப் பறந்தனர்.  ஹொய்சளப் படைகள் வழிகாட்ட, டில்லிப் படைகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன.  அவற்றிற்கு ஓர் முடிவே இல்லாதது போல் நீளமாக வந்து கொண்டே இருந்தன.  அலங்காரப் பல்லக்கு ஒன்றில் டில்லி சுல்தான் கியாசுதீனின் மூத்த மகன் உல்லு கான் எனப்படும் உலுக்கான் அமர்ந்திருந்தான்.  போர் புரியும் திறமைகளை நன்கு கற்றறிந்தவன் எனப் பெயர் பெற்றிருந்த அவன் தன்னைச் சுற்றிலும் இங்குமங்கும் காணப்படும் காட்சிகளைக் கண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டு வந்தான்.

இங்கே கோயிலில் மூன்றாவது திருச்சுற்றில் வரும்படைகளை வரவேற்க வேண்டி அண்டாக்களில் எண்ணெயும், நெய்யும் கொதித்துக் கொண்டிருந்தது.  மரக்குச்சிகள், கொம்புகள், இரும்புத் துண்டங்கள் போன்றவை கூர் தீட்டப்பட்டு வீரர்கள் கைகளை அலங்கரித்தன.  பஞ்சு கொண்டான் என்னும் முதிய வீரர் படைகள் வரும் வடக்கு வாயிலையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். உடைவாளை இறுகப் பற்றிய வண்ணம் டில்லிப் படைகள் வரக் காத்திருந்தார் அவர்.  டில்லிப் படைகள் அடிக்கும் நகராவின் சப்தமும், முரசுகளின் சப்தமும் ஓங்கி ஒலித்தன. ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களை இப்போதுள்ள கருட மண்டபத்தின் பின்னே இருந்த பட்சிராஜன் தோப்பு என்னும் காட்டுக்குள்ளிருந்து டில்லிப் படைகள் துரத்த ஆரம்பித்தனர்.

கோயிலினுள் வெளீயே நடப்பவை தெரியாமல் திருமடைப்பள்ளியில் சமையல் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.  அப்போது தான் ஆர்யபடாள்  வடக்கு வாயிலுக்கே டில்லிப் படைகள் வந்துவிட்ட செய்தியும் கிடைத்தது.  குதிரைப்படை முன்னால் வந்தது.  அந்த வீரர்கள் மெல்ல மெல்ல முன்னேறி நான்காம் திருச்சுற்றின் இருபுறங்களையும் சுற்றி வளைத்துக் கொண்டது.  அவர்களுக்குப் பின்னால் பூரண ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் பரபூரண கவசத்தோடு அணிவகுத்து நின்றனர்.  பின்னர் திடீரென அத்தனை வீரர்களும் பின் வாங்க, அவர்களில் பத்துப் பேர் மட்டும் முன்வந்து கோயிலுக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் சுல்தானிடம் ஒப்படைக்குமாறும், இல்லை எனில் அநாவசியமாகப் போர் புரிந்து உயிரை விட வேண்டி இருக்கும் எனவும், சுல்தானுக்குப் பணிந்து போவது தான் ஒரே வழி எனவும் எச்சரிக்கை செய்தனர்.

Wednesday, September 03, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்--திருக்கோயில் வழிபாட்டு முறைகள்--பகுதி 8

இதைத் தவிரவும் சரக்கறைத் தலைவர் கோயிலுக்குச் சேர்ந்த பசுக்களைத் தலைமை இடையன் முன்னிலையில் பால் கறப்பது, கறந்த பாலை ஒப்படைத்தல் போன்றவற்றோடு கோயிலுக்கு அளிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், புறாக்கள், பசுக்கள், மான்கள், மயில்கள், கிளிகள் ஆகியவற்றையும் ஒழுங்காகப் பராமரிக்கிறார்களா என்று கண்காணிப்பார். மாட்டுத் தொழுவங்கள் பல இருந்தன.  ஒவ்வொரு தொழுவமும் ஒவ்வொரு இடையன் தலைமையில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு இருவேளைகள் இடையர்களின் மேற்பார்வையில் பால் கறக்கப்பட்டுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இவர்களிலேயே கோயில் கண்காளிப்பாளர் ஒருத்தரும் இருந்தார். அவர் திருமதில்கள், கோயில் கோபுரங்கள் ஆகியவற்றின் மேல் வளர்கின்ற செடிகள், மரங்கள், புல்லுருவிகள் ஆகியவற்றை நாள்தோறும் அகற்றுவதற்கு ஆட்களை நியமித்து வேலை வாங்குவார். கட்டிடங்களைப் பழுது பார்ப்பார்.  புதிய கட்டிடங்கள் தேவைப்பட்டால் ஆட்களை நியமித்துக் கட்டிக் கொடுப்பார்.  மற்ற அலங்கார வேலைகளான திரைச்சீலைகள், தொங்கல்கள், தோரணங்கள் ஆகியவற்றை அழகாய் அமைக்கத் திட்டங்கள் செய்து, நித்திய, நைமித்திகத் திருவிழாக் காலங்களில் பந்தல்கள் அமைத்து, அவற்றை அழுகு படுத்துவார்.  இவருக்குத் தனியாக இரண்டு ஏகாங்கிகள் உண்டு.

பூந்தோட்டங்களைக் கவனித்துக்கொள்ளவும், பருவகாலத்துக்கு ஏற்ப மலர்ச்செடிகளை நட்டுப் பயிராக்கவும்  அவற்றைப் பாதுகாக்கவும் தனியாகக் கண்காளிப்பாளர் இருப்பார்.  இவர் இதோடு கூட கோயிலுக்குத் தேவையான காய்கறிகள், கரும்பு போன்ற சாறுள்ள பயிர்கள் ஆகியவற்றையும் பயிர் செய்து தேவையான காய்களைத் திருமடைப்பள்ளிக்குச் சேர்ப்பிப்பார்.  சரக்கு அறைகளில் பொருட்கள் திருட்டுப் போகாமல் பாதுகாப்பதும், திருட்டுப்போனால் அவற்றைக் கண்டறிந்து உரிய தண்டனை கொடுப்பதும் இவர் பொறுப்பாகும்.

கோயிலைச் சார்ந்த நிலங்களுக்குத் தனியான கண்காணிப்பாளர் உண்டு. பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் விதை விதைத்தல், பயிர் செய்தல், விளைந்தவற்றைத் தொகுத்துத் திரட்டி சரக்கு அறைகளில் உரிய இடத்தில் சேர்ப்பித்தல், கோயிலைச் சார்ந்த கிராமங்களில் இருந்து கோயிலுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தல், கோயிலைச் சார்ந்த மருத்துவமனையைக் கண்காணிக்க ஆட்களை நியமித்தல், மருத்துவமனை நன்கு நடைபெறுகிறதா என மேற்பார்வையிடுதல் ஆகியவை இவர் பணி.  இந்த மருத்துவ மனை கோயிலுக்கு உள்ளே இருந்ததாகவும், கிராமம் ஒன்றை அந்த மருத்துவமனையின் செலவுகளுக்காக வழங்கப் பெற்றிருந்ததாகவும் அறிய வருகிறோம். மருத்துவமனை சிறப்பாக நடைபெற்றதாகவும், கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.  இடையில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பினால் இது நலிவுற்றுப் பின்னர் கி.பி. 1493 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் தொடங்கியது எனக் கோயில் ஒழுகு சொல்கிறது.

இது வரை சொன்னவை எல்லாம் ஶ்ரீராமாநுஜரால் கோயிலில் சீரமைக்கப்பட்ட நிர்வாகங்களின் நடைமுறைகள் என்றும் கோயில் ஒழுகு சொல்கிறது.  ஆனால் இந்த நிர்வாகமும், சீரமைப்பும், சமயத் தலைவர்களின் பொறுப்பிலேயே கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்து வந்ததாகவும் சோழ அரசர்களோ, பாண்டிய அரசர்களோ இவற்றில் குறுக்கிடாமல் சிறிதும் மாற்றாமல் அதன் பாதுகாவலர்களாக மட்டும் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.  ஆனால் பின்னர் 1311, 1323 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பின் பின்னர் இவற்றில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.  அவற்றைத் திருவரங்கன் ஆகிய நம்பெருமாள் அரங்கத்துக்  கோயிலை விட்டுச் சென்ற உலாவில் இருந்து மீண்டும்  பார்க்கலாம். 

Saturday, August 30, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயில் வழிபாட்டு முறைகள் -- பகுதி 7

கோயில் ஆட்சியாளரின் பணிகளைக் குறித்துப் பார்ப்போமா?  கோயில் ஆட்சியாளர் தினம் தினம் வைகறையில் நீராடிய பின்னர் கோயிலுக்குச் சென்று தன் வேலையுடன் தொடர்புடைய தன் உதவியாளர்களைக் கண்டு அன்றாட வேலைகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.  இரண்டாம் பிரகாரத்தின் கொடிக்கம்பத்தடிக்குச் சென்று வழிபட்டுப் பின் திருமடைப்பள்ளியைப் பார்வையிட்டுத் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என விசாரிப்பது, சரக்கு அறையில் புதிதாகச் சரக்குகள் வந்தால் அவற்றைச் சரிபார்ப்பது, கோயிலுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கொடுக்கப்படுவதா எனப் பார்ப்பது, நறுமணப் பொருட்கள் எவ்வளவு தேவையோ அவற்றைச் சரியான முறையில் கொடுக்கிறார்களா என்று பார்ப்பது, இத்தகைய வேலைகளைச் சரிவரச் செய்யும்படி ஊழியர்களுக்குப் பங்கிட்டுச் செய்ய வைப்பது, திருநந்தவனம் சென்று, அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பல்வேறு பூக்களைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை முடித்துக் கொண்டு பின்னர் வழிபடுவதற்குச் செல்வார்.

வழிபாடுகள் முடிந்ததும், கோயில் ஊழியர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றாட வேலைகள் எவ்வாறு நடக்கின்றன என்றும், இனி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிப்பதோடு ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் கூறி உற்சாகப்படுத்துவதும் அவர் வேலை.  பின்னர் அன்றாட வழிபாடுகள் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பார்.  பகல் நிவேதனம் முடிந்து கோயில் நடை சார்த்தினால் அவர் தன் வீட்டுக்குச் சென்று உணவு உண்டு ஓய்வெடுப்பார்.  பிற்பகலில் பல்வேறு சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடுகள் செய்து நடத்துவது அவர் வேலையாக இருக்கும்.

ஒவ்வொரு சடங்கையும், விழாவையும் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பது அவர் முக்கிய வேலை.  நம்பிகள், பிராமணர்கள் நீங்கலாக, இத்துறையில் மற்ற அனைவரையும் இவரே கண்காணிப்பார். கருவூலத்தில் வைக்கப்படும் பொருட்களின் மேல் இலச்சினை பொறிப்பதும் இவர் வேலை.  கோயிலின் உள்துறை ஊழியத் தலைவர்கள் இவருடைய நேரடிக் கண்காணிப்புக்கும், ஆணைக்கும் உட்பட்டவர்கள். இவருக்கு உதவியாக இருப்பவரை ஏகாங்கி என அழைப்பார்கள். இவருக்குக் கோயிலில் மிக உயர்ந்த மரியாதைகளைச் செய்வார்கள்.

இவருக்குத் துணையாக நான்கு உதவி ஆட்கள் இருப்பார்கள்.  இவர்கள் கோயிலின் ஆட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள், அதன் புறம்பே உள்ள கட்டிடங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.  இவர்களில் சரக்கறைக்கு எனத் தனியாக இருக்கும் தலைவர் ஆட்சியாளர் கோயிலுக்கு வரும் முன்னரே சரக்கறைக்குச் சென்றும், திருமடைப்பள்ளிக்குச் சென்றும் அன்றாடத் தேவைக்கான அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், பழங்கள், தயிர், நெய், பால், காய்கறிகள், தேங்காய் போன்றவை கொடுத்திருக்கின்றனரா எனச் சரிபார்ப்பார்.  கோயில் நிலங்களில் இருந்து விளையும் நெல் வகைகள், புளி, மாங்காய், மாம்பழம், தேங்காய் போன்றவை மற்றும் பல்வேறு விளை பொருட்களையும்  சரி பார்ப்பார். கோயிலின் சரக்கறைக்குக் கொண்டுவரப் படும் எண்ணெய் வித்துக்களை எண்ணெய் அறைக்குக்கொண்டு சென்று உடைத்தோ அரைத்தோ பயன்படுத்தப் படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார். சுவாமி திருவீதி வலம் வருவதற்கான வாகனங்களைத் தயாரித்தல், குடை, கொடிகள் என்பனவற்றைத் தூக்கிச் செல்ல அன்றாடக் கூலியாட்களை நியமித்தல் போன்றவையும் சரக்கறைத் தலைவர் வேலையே.

Thursday, August 28, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் ---திருக்கோயில் வழிபாட்டு முறைகள் --பகுதி 6

இவர்களைத் தவிரவும், தெய்வ வடிவங்களைச் செதுக்கும் சிற்பிகள், கொடிகளுக்கு வர்ணம் தீட்டும் சம்மியர்கள், புதிய நகையைச் செய்து கொடுத்துப் பழையனவற்றைப் புதுப்பிக்கும் பொற்கொல்லர்கள், பாத்திரங்கள் செய்யும் கன்னார்கள், கோயில் மணிகள், சேமக்கலங்கள், நிலைவிளக்குகள், பீடங்கள், படிகள் ஆகியனவற்றைச் செய்யும்  உலோக வேலைக்காரர்கள் ஆகியோரும் இவர்களில் உண்டு.

அடுத்த தொகுதியில் தையற்காரர்கள், தச்சர்கள், நெசவாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் கோயில் தூண்களிலும், பந்தல் கூரைகளிலும் தொங்கவிடப்படும் விதானங்கள், மடிப்புத் தொங்கல்கள் முதலியனவற்றைத் தைத்துச் சரிகை வேலைப்பாடுகள் , சித்திரவேலை போன்றவற்றால் அழகு செய்வார்கள்.  சுவாமிக்குரிய ஆடைகள், தோரணம், கொடி போன்றவற்றையும் தயாரிப்பார்கள்.  சுவாமி வீதி உலா வருகையில் பிடிக்கும் குடைகள், ஆலவட்டங்கள், விருதுச் சின்னங்கள், பல்லக்கை அலங்கரிக்கும் மேற்புறத் துகில்கள்  முதலியவற்றைத் தச்சர்களும், பூமாலைகள் தொடுப்பதற்கான சரிகைகள், சாமரைகள், ஒட்டடை நீக்கிகள், தொங்கும் குஞ்சங்கள் ஆகியவற்றை நெசவாளர்களும் செய்து வந்தனர்.

அடுத்த பணியாளரில் முக்கியமானவர்கள் சலவைக்காரர்கள் ஆவார்கள்.  இவர்கள் சுவாமிக்குச் சார்த்தப்படும் ஆடைகளைத் துவைத்து உலர்த்தியும் பூஜையின் போது பயன்படும் தட்டுக்களை மூடும் துணிகளையும் துவைப்பார்கள். சுவாமியின் ஆடைகளைச் சிறப்புச் சலவையாளர் தினம் தினம் துவைப்பார்.  அப்படி ஒரு சலவையாளருக்குக் கோயிலொழுகில் சிறப்பானதொரு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி சுல்தானின் காலத்தில் இங்கே நடந்த படையெடுப்பில் கவர்ந்து செல்லப்பட்ட அழகிய மணவாளர் பல வருடங்கள் கழித்துத் திரும்ப இங்கே வந்தபோது அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணமாக இருந்தவர் ஒரு கண் தெரியாத வயதான சலவைக்காரரே.

தினம் தினம் அழகிய மணவாளரின் ஆடையைத் துவைத்து அந்த நீரைப் பிரசாதமாக அருந்தும் வழக்கம் உள்ள அந்தச் சலவைக்காரர் அடி மனதில் அந்த நீரின் வாசம் தங்கி இருந்தது.  பின்னர் வெகு காலம் கழித்து வந்த அழகிய மணவாளர் முதலில் இங்கே இருந்தவர் தானா எனப் பலருக்கும் சந்தேகம்.  ஆகவே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்ரஹத்திற்கும், அறுபது ஆண்டுகள் கழித்து வந்த அழகிய மணவாளருக்கும் திருமஞ்சனம் செய்விக்கப் பட்டு அந்த ஆடையை இந்த வயது முதிர்ந்த கண் தெரியாத சலவைக்காரரிடம் கொடுக்க அவர் அந்த ஆடைகளைப் பிழிந்து அந்த நீரை உட்கொண்டதும், அழகிய மணவாளர் தான் இங்கே இருந்த பெருமாள் என்பது புரிந்து, "இவரே நம்பெருமாள், இவரே நம் பெருமாள்!" என்று ஆனந்தக் கூச்சலிட்டாராம்.  ஆகவே அன்று முதல் அழகிய மணவாளரும் நம்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.  இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன்.

அடுத்த தொகுதியினர் குயவர்கள்.  தினம் தினம் நிவேதனத்துக்குப் பயன்படும் மட்பாண்டங்களை இவர்களே செய்து தருவார்கள்.  குயவர்களுக்கு அடுத்துப்  படகோட்டிகள்.  அந்நாட்களில் காவிரியில் நீர் வரத்து இருந்து வந்திருக்கிறது என்பதால், காவிரியின் அக்கரையில் இருந்து திருமடைப்பள்ளிக்குத் தேவையான பால், தயிர் போன்றவற்றையும் மற்றப்பொருட்களையும்  கொண்டு வந்து சேர்ப்பார்கள்.  இவர்களைத் தவிர இசைவாணர்கள், நடன ஆசிரியர்கள் போன்றோரும் கோயிலைச் சேர்ந்த பணியாளர்களே ஆவார்கள்.

முதலில் சொன்ன பத்துத் தொகுதியினரோடு இவர்கள் பத்துத் தொகுதியினரும் சேர்ந்து மொத்தம் இருபது தொகுதியினர் கோயில் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இவர்களை ஆள எந்த சபையுமோ, அல்லது குழுவோ இல்லை.  கோயிலின் ஆட்சித் தலைவரையே அது முழுதும் சார்ந்திருந்தது.  அடுத்து ஆட்சித் தலைவரின் பணிகள் எப்படிப்பட்டது எனப் பார்க்கலாம்.

Wednesday, August 27, 2014

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் --திருக்கோயில் வழிபாட்டு முறைகள்! பகுதி 5




முன் சொன்ன பத்து வகைத் தொகுப்பான அந்தணர் குழுவினருடன், ஶ்ரீராமாநுஜர் ஏகாங்கிகள் என்னும் நான்கு உதவியாளர்களையும் சேர்த்தார்.  இவர்கள் சந்நிதி வாசலில் நின்று கொண்டும், திரை போடும்போதும் கர்பகிரஹத்தைப் பாதுகாக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர்.  அனுமதி பெறாமல் உள்ளே நுழைபவர்களைத் தடுத்து நிறுத்தும் உரிமையும் இவர்களுக்கு இருந்தது.  கோயிலின் நித்திய, நைமித்திக வழிபாட்டுக்கு உரிய நிவேதனங்கள், நறுமணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதும் அதைப் பாதுகாப்பதும் இவர்கள் கடமை.

இவர்களைத் தவிர, "சாத்தாத முதலிகள்" எனப்படும் எட்டு வைணவத் துறவிகளும் ஶ்ரீராமாநுஜரால் நியமிக்கப்பட்டு, அவர்கள் கொடி பிடித்தல், பொன், வெள்ளி விளக்குகள் ஏந்துதல் ஶ்ரீராமாநுஜரின் வாட்படையைத் தாங்குதல், திருக்கோயிலின் அர்ச்சகர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க மெய்க்காவல் புரிதல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.                  

அடுத்து வேத்திரபாணிகள் என்னும் குழுவினர் கோயிலுக்கு வெளியே இருந்து எடுத்துச் சேர்க்கப் பெற்றார்கள்.  சுவாமி கர்பகிரஹத்திலிருந்து உலாக்கிளம்பும்போதும், உலாவை முடித்துக் கொண்டு திரும்பி வருகையிலும் ஒழுங்கும், அமைதியும் நிலவும் வண்ணம் பார்த்துக்கொள்வது இவர்கள் கடமையாகும்.  சுவாமி திருவுலாக்கிளம்பும் முன்னர் இவர்கள் ஓங்கிய குரலில் வாழ்த்துப் பாராட்டு ஒலிகளை எழுப்புவார்கள்.  வேத பாராயணம், ப்ரபந்தம் ஓதுதல் ஆகியவை நடைபெறும்போது அமைதி நிலவும் வண்ணம் பார்த்துக்கொள்வார்கள்.  சுவாமியின் வழிபாட்டில் தினமும் திருப்பதிகம் ஓதும் குழுவினருக்கு வழி அமைத்துக் கொடுத்தலும் இவர்கள் கடமையாக இருந்தது.

மேற்சொன்ன அந்தணர்கள் அல்லாத எல்லாக் குழுவினர்களையும் தவிரக் கூடுதலாக ஶ்ரீராமாநுஜர் உழுதொழில் புரியும் வேளாளர்களையும் கோயில் பணிகளில் நியமித்திருந்தார்.  இவர்கள் தானியங்களை அளந்து தினப்படிக்குக் கொடுப்பது, முதல் பிரகாரத்தில் காவல், கோயில் கணக்குகள் ஆகியவற்றைப் பார்த்தனர்.  கருவூலத் தலைமை அலுவலர் ஒரு வேளாளராகத் தான் இருக்க வேண்டும் என்பது அநேக வாத, பிரதிவாதங்களின் மூலம் முடிவு செய்யப் பெற்றதாகக் கோயில் ஒழுகு கூறுகிறது.

இதைத் தவிரவும் பல சின்னச் சின்னப் பதவிகள் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குக் கொடுக்கப் பட்டது.  அவற்றில் வழிபாட்டுக்குரிய பொருட்களைச் சேமித்தல், உப்பு, மிளகு, மசாலை போன்ர பொடிவகைகள் தயாரிப்பது, கோயில் கதவுகளில் முத்திரை இடுவதற்குக் களிமண், அரக்கு போன்றவை தயாரித்தல் ஆகியவை ஆகும்.

மூன்றாம் தொகுதியினர் தெய்விக நடனம் புரியும் தேவதாசிகள்.  இவர்கள் பதவி இன்றைய நாட்களில் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டு இவர்களும் கேவலப் படுத்தப் பட்டுவிட்டார்கள்.  ஆனால் உண்மையில் இவர்கள் இறைவனுக்கன்றி வேறெவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. 11 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் மிகுதியாக வாழ்ந்து வந்த இவர்கள் 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறவே ஒழிக்கப்பெற்றனர்.  ஆனால் இவர்கள் கடமைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையவை ஆகும்.  தினம் இறைவனுக்கெதிரே அவன் மட்டுமே பார்க்கும்படி நடனம் ஆடி இறைவனை மகிழ்விக்கும் பேறு வாய்க்கப் பெற்றவர்கள்.  இவர்கள் பணி மிகப் புனிதமான ஒன்றாகும். கோயிலொழுகு புத்தகங்களில் திருக்கோயில் தல வரலாற்றில் இவர்களுக்கு மிக உயர்வான இடம் கொடுத்துச் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றனர்.

ஏற்கெனவே வெள்ளையம்மாள் என்னும் தேவதாசி தன் உயிரைக் கொடுத்து அரங்கன் கோயிலைக் காப்பாற்றியது குறித்துப் படித்தோம் அல்லவா!

Monday, August 25, 2014

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம் -- திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள் -பகுதி 4

7.ஏழாம் வகையினர் ஸ்தானத்தார் எனப்படுவார்கள்.  பெருமாளின் வழிபாட்டோடு தொடர்புடைய அனைத்தையும் கவனித்துச் சரிவரச் செய்வது இவர்கள் கடமையாகும்.  உற்சவர் கருவறையிலிருந்து வெளியே எழுந்தருளுகையில் பல்லக்கைத் தூக்குவது இவர்கள் தான். மேலும் வாகனங்களைத் தாங்குவார்கள்.  திருக்குடைகளைப் பிடிப்பார்கள்.  பல்லக்கின் பக்கத்திலேயே சென்று ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதும் இவர்கள் முக்கிய வேலை.  இறைவனுக்குப் பால், தயிர் வழங்குதல், தலைமை ஆட்சியாளர்களுக்குப் பூமாலைகள் சூட்டுதல், பிரசாதங்கள் அளித்தல்,  சுவாமிக்கு உரிமையான பொன், பொருள், அணிமணிகளைப் பூட்டிப் பாதுகாக்கும் அறைகளுக்குக் கருட முத்திரை வைத்தல்  ஆகியன இவர்கள் முக்கிய வேலைகளாக இருந்து வந்தன.  பின்னர் வந்த அந்நியர் படையெடுப்பின் பின்னரும் தொடர்ந்து பொறுப்புக்களை நிர்வகித்து வந்த இவர்கள் பின்னர் நம்பிகளுக்குத் தம்முடைய உரிமைகளில் சிலவற்றைக் கொடுத்தனர்.  கருட முத்திரை பொறிக்கும் உரிமை இறுதியாக நாச்சியார் சந்நிதியை நிர்வகித்த அலுவலரிடம் போய்ச் சேர்ந்தது.  இது குறித்து நீண்ட நெடுங்காலம் வழக்குகள் நடந்தன எனவும் தெரிகிறது.

8.  அடுத்ததாக பட்டர்கள். இவர்கள் அன்றாட வழிபாடுகளின் போது கருவறையில் இருந்து வேதம் ஓதுதலும், நித்தியப்படி பூஜை, சிறப்பு நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் உடனிருந்து  கலந்து கொள்வதோடு, பரிவட்டம், சந்தனம், தனிமாலைகள், தாம்பூலம் முதலிய கௌரவங்களையும் பெறுவார்கள்.  ஶ்ரீராமாநுஜர் செய்த சீர்திருத்தங்களுக்குப் பின்னர் தலைமை அர்ச்சகரான நம்பிகள் ஒருவரே இதற்கு முன்னர் செய்து வந்த பல பணிகளில் ஒன்றாகச் செய்து வந்தார். பின்னர் இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியாகப் பிரித்து அளிக்கப்பட்டது.

9. அடுத்ததாகக் குறிப்பிடத் தக்கவர்கள் ஆரியபட்டர்கள் எனப்படும் பிராமணர்கள் ஆவார்கள்.  இவர்கலின் முக்கிய வேலை கோயிலையும், சுவாமியையும் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகப் பாதுகாத்து வருவதே ஆகும்.  மூன்றாம் பிரகாரத்தில் தென், வட வாயில் முகப்புகளில் காவலராக நியமிக்கப் பெறுவார்கள்.  முதல் இரு பிரகாரங்களில் இருந்து உள்ளே செல்பவர்கள், வெளியேறுபவர்கள் ஆகியோரைக் கூர்ந்து கவனித்துக் கண்காணிப்பதும், திருவுலாக் காலங்களில் பல்லக்கின் பின்புறத் தண்டுகளைச் சுமப்பதும் இவர்கள் முக்கியக் கடமையாகும். இரவில் கோயில் வாயில்களுக்கு அருகேயே தாழ்வாரங்களில் உறங்குவார்கள்.   விடியலில் சுவாமியை வழிபட வரும் திருப்பதியாருக்கும், யாத்ரிகர்களுக்குக் கதவைத் திறந்து விடுவார்கள்.  அரச முத்திரை இவர்கள் பொறுப்பில் இருக்கும்.   இவர்கள் தங்கள் பணியைச் செய்கையில் அது இவர்களைப் பாதுகாப்பதாக ஐதிகம்.


10. கடைசியாகக் கோயில் பணீகளில் தாசநம்பிகள் என்ப்படுவோர் முக்கியமானவர்களில் சேர்ந்தவர்கள்.  இவர்கள் ஒரு காலத்தில் அதாவது ஶ்ரீராமாநுஜரின் காலத்துக்கு முன்னால் கோயிலுக்குப் பூமாலைகள் வழங்கி வந்தவர்களின் பரம்பரையினர் ஆவார்கள்.  சுவாமிக்காக அமைக்கப் பெறும் திரு நந்தவனங்கள் இவர்களின் பொறுப்பிலேயே இருக்கும்.  சுவாமியின் திருமுன்னரும், கர்ப்பகிரஹத்தின் உள்ளேயும், வெளியேயும் திருவிளக்குகள் ஏற்றுவதும் இவர்கள் கடமை.  சுவாமி எழுந்தருளும் பல்லக்கிற்கும் பூமாலையால் அலங்காரம் செய்வது இவர்கள் பணிகளில் ஒன்றாகும்.  பல திருவுலா நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் பூமாலைகளையும் இவர்களே தொடுத்து அளித்து வந்தனர். ஆழ்வார்களின் சந்நிதிகள், உடையவர் ஶ்ரீராமாநுஜரின் சந்ந்தி ஆகியவற்றிலும் இவர்கள் பணிபுரிவார்கள்.  அதற்காகச் சிறப்பு மரியாதைகள் இவர்களுக்கு உண்டு. 

Saturday, August 23, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள் - பகுதி 3




4. அடுத்து வருபவர்கள் திருவரங்கத்திலேயே பிறந்த உள்ளூரார் எனப்படும் பிராமணர்கள் ஆவார்கள். ஶ்ரீராமாநுஜரின் சீடர்களான இவர்கள் மூலவருக்கும் வீதி உலாவுக்குச் செல்லும் உற்சவருக்கும் கைங்கரியம் செய்யும் பாக்கியம் அமையப் பெற்றவர்களாவார்கள்.  வழிபாட்டுக்குரிய புனிதப் பாத்திரங்கள், சுவாமியின் பட்டாடை, பருத்தி ஆடை, பஞ்சணைகள், விசிறி, குடை போன்றவை, தோரணங்கள், உற்சவர் உலாச் செல்கையில் உடன் எடுத்துச் செல்லப்படும் வெற்றிலைப் பேழை, வளைந்த கூர்வாள் முதலியனவற்றைப் பாதுகாத்து வருவதும், உரிய சமயங்களில் அவற்றை எடுத்துச் செல்வது இவர்கள் பணியாகும்.


தினந்தோறும் அனைத்துச் சடங்குகள், விழாக்காலங்கள், வீதி உலாச் செல்லும் காலங்கள் போன்ற சம்யங்களில் இவர்கள் பொறுப்பு சுவாமிக்குச் சந்தனம், சுவை மிக்க இனிய பலவகைப் பணியாரங்கள் அளிப்பது ஆகியன ஆகும். திருமஞ்சன நீரில் நறுமணம் கலந்து வைப்பதும் இவர்கள் வேலை. ஆலவட்டம் எடுத்தல், சுவாமியின் திருவடிகளில் நீர் சொரிதல், நெற்றியில் வைணவச் சின்னமான புனித நாமத்தைத் தரிப்பதற்கு முன்னர் வெற்றிலை, தாம்பூலம் சுவாமிக்கு வழங்குதல், திருமடைப்பள்ளியிலிருந்து நிவேதனங்களைக் கொண்டு வந்து சுவாமிக்குப் படித்தல், புதிதாகத் தோய்த்த ஆடைகள் அணிவித்தல், துளசி மாலைகள், சந்தனம் சாத்துதல் ஆகியனவும் இவர்கள் வேலையே.  வேதம், திவ்யப்ரபந்தம் ஓதுவோர் முன்பாக ஒரு பாத்திரம் நிறையத் தேங்காய்ப் பாலைச் சமர்ப்பிப்பார்கள். சுவாமிக்கு நிவேதனம் ஆன பின்னர் விளக்குகளை மாற்றி அமைப்பார்கள்.

நம்பெருமாள் உறையூர் சென்று திரும்பும்போதும், மீண்டும் இங்கே ஶ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை நடைபெறும்போதும் அணிவகுத்து ஆலவட்டம் போடுவது இவர்கள் கடமை.  முக்கியமான விசேஷங்களின் போது கோயிலின் தலைமை ஆட்சியாளரைக் கௌரவித்து அவருக்காகச் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பிரசாதங்கள் அளித்து வாழ்த்துவதும் இவர்கள் பொறுப்பு.  பின்னர் வந்த காலத்தில் இந்தப் பணியைப் பலருக்கும் பகிர்ந்து அளித்தாலும் முக்கியமான பொறுப்புகளைத் தங்கள் வசமே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

5.  அடுத்து வருபவர்கள் திருப்பதிகம் பாடுவோரும், இசை வாணர்களும் ஆவார்கள்.  இவர்களை விண்ணப்பம் செய்பவர்கள் என அழைப்பார்கள்.  வீணை வாசித்தல், வேதம் ஓதுதல், பிரபந்தங்களைப் பாடுதல், இசை பாடுதல் ஆகியவற்றை இறைவன் முன்னர் எல்லாச் சமயங்களிலும் பாடுவார்கள்.  தெய்வீக காரியங்களில் இசைப்பாடல்கள் மிக முக்கியமானவை என்பதால் இவர்களின் தொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.  இசைக்கலை மட்டுமில்லாமல், சாத்திரங்களிலும் இவர்கள் தேர்ச்சியும், பயிற்சியும்  பெற்றிருந்தார்கள்.  ஆகவே கோயில் கைங்கரியங்களில் மிகவும் உயர்ந்த இடத்தை இவர்கள் பெற்றிருந்தனர். சுவாமிகளின் திருமுன்னர் நாட்டிய மங்கைகள் நடனமாடும்போது இவர்கள் பாடுவது உண்டு. இவர்களுக்குக் கோயிலில் தனியான மரியாதைகள் உண்டு.

6. அடுத்து வருபவர்கள் திருக்கரகக் கையார் என்பவர்கள்.  பெருமாளின் வழிபாடுகளில் நேரடியாகவும், நிலையாகவும் தொடர்புடையவர்கள். சுவாமிகளின் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் சரக்கறைக்குப் பக்கத்திலுள்ள சேம அறையிலிருந்து விடியற்காலையிலேயே தீர்த்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு காவிரிக்குச் சென்று இரண்டு நாட்களுக்குத் தேவையான நீரை அவற்றில் முகந்து கொண்டு கோயிலின் யானை மீது வைத்துக் கோயிலுக்குக் கொண்டு வருவது இவர்களின் முக்கியக் கடமையாகும்.  ஒவ்வொரு நாளும் ஐந்து பாத்திரங்களில் இந்த நீர் பயன்படுத்தப்படும்.  அவற்றில் கொண்டு வந்த நீரை நிரப்பி வைப்பது இவர்கள் வேலை.  விடியற்காலையில் சுவாமி முகம் கழுவி தந்தசுத்தி செய்கையிலும், பின்னர் தாம்பூலம் வழங்குகையிலும், சுவாமிக்குப் பாத பூஜை நடைபெறும்போதும் தீர்த்த பாத்திரங்களை ஏந்திய வண்ணம் இவர்கள் நிற்பார்கள்.

சுவாமிக்குப் பூமாலைகள் தொடுத்து அளிப்பவரின் கைகளில் இந்த நீரை விட்டு சுத்தி செய்வதும் இவர்கள் வேலை.  முன்னால் ஒரு காலத்தில் இவர்களே பூமாலைகளைக் கட்டி, நறுமணம் உள்ள ஆரங்களைப் புனைவதும் இவர்கள் கடமையாக இருந்து வந்திருக்கிறது.  பின்னர்  நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் இந்த வேலைகள் பிராமணர் அல்லாத ஊழியர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.

Friday, August 22, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள்! - பகுதி 2

நேற்றைய பதிவுக்கு ஹிட் லிஸ்ட் பயங்கரமா எகிறி இருக்கு.  ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. :) அதனால் என்ன?  நம்ம வேலையைத் தொடர்வோம்.




2. இரண்டாம் வகையினர் திருமஞ்சனத்திற்காகத் தண்ணீர் கொண்டு வருபவர்கள் ஆகும்.  இவர்கள் திருப்பணி செய்வோர் என அழைக்கப் படுவார்கள்.  பெருமாளின் வழிபாட்டுச் சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீரை இவர்களே எடுத்து வருவார்கள்.  ஆன்மிகத் தலைவர்களாக இருந்து பின்னர் துறவிகளாக ஆகிய ஞானாசிரியர்களின் பரம்பரையில் வழிவழியாக வந்த சந்ததிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  பரம்பரை முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் ஐந்து பேர்கள் மட்டுமே இருப்பார்கள்.  புனித இடங்களில் நீர் தெளித்துச் சுத்தம் செய்வது, திருவிழாக்கள், ஊர்வலங்கள், இறைவனுக்குக் குடைபிடிக்கும்போது ஆகிய நேரங்களில் பரிமள வாசனை கொண்ட நீரை இறைவனுக்கு நறுமணம் கமழும் பொருட்டு உயரச் சிதறுவிப்பது இவர்கள் வேலையாகும்.


 இதைத் தவிர திருவுலாக் காலங்களில் திருவுலா செல்லும் தெருக்களில் நீர் தெளிக்கும் ஆட்களை மேற்பார்வை பார்த்து அவர்கள் வேலையைச் சரிவரச் செய்கிறார்களா எனக் கண்காணிப்பதும் இவர்கள் வேலை ஆகும்.  ஊர்வலங்களை இவர்களே முன்னின்று நடத்துவார்கள். வேதம் ஓதும் பிராமணர்கள், ப்ரபந்தம் ஓதும் பிராமணர்கள் ஆகியோரு முன்னால் குடை பிடித்தல் பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கைப் பொருட்களைக் கோயிலின் சார்பில் பெற்றுப் பல்வேறு வகையான கோயில் அலுவலர்க்கு அவற்றைப் பிரித்துக் கொடுப்பதும் இவர்கள் முக்கிய உரிமையாகும்.  கோயில் தொடர்பான எந்தச் செய்தியையும் ஆராய்ந்து உணர பக்தர்கள் குழுவைக்கூட்டுவது, விவாதங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பது ஆகிய முக்கியமான வேலைகளும் இவர்களுக்கு உண்டு. கோயில் யானைகளின் மீது வீதிகளை மேற்பார்வையிடும் உரிமையை ராமாநுஜர் காலத்தில் இவர்கள் பெற்றிருந்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் பின்னர் இந்த உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.

3.  இதில் மூன்றாவதாக வருபவர்கள் ராமாநுஜரால் ஒரு தொகுதியாக மாற்றி அமைக்கப்பட்ட பிராமணர்கள்.  இவர்களை நம்பிகள் என அழைக்கின்றனர்.  நேரடியாக பெருமாளை வழிபடுவதற்கும், மூன்றாம் பிரகாரத்திலுள்ள சின்னச் சின்ன சந்நிதிகளிலுள்ள  தெய்வங்களை வழிபடவும் உரிமை பெற்றவர்கள்.  இவர்கள் இதற்கென்றே நியமிக்கப்பட்டவர்கள்.  தினம் தினம் கருவறையில் செய்யும் வழிபாட்டில் தூப, தீபங்கள் ஏந்தியும் இறைவனுக்கு ஆடை, அணிகலன்களைக் கழற்றியும், மீண்டும் மாற்றி அணிவித்தும் அழகு பார்க்கும் உரிமை இவர்களுக்கே உரித்தானது.  இறைவனுக்காகக் கொண்டு வரப்படும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பாயசம் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வார்கள்.  ஆனால் இந்தக் கோயிலில் பெருமாள் யோக நித்திரையில் இருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.

தினம் தினம் நடைபெறும் திருமஞ்சனங்கள், விசேஷங்களின் போது நடைபெறும் சிறப்புத் திருமஞ்சனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுப்பதும் இவர்கள் வேலை. தினம் காலை சுவாமிக்கு தந்த சுத்தி நடைபெற்றதும் கண்ணாடி எடுத்துக் கொடுப்பது இவர்கள் வேலை. கொடிக்கம்பத்தில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றுவதும், கதாயுதம், சங்கு, சக்கரம், விருதுக் கொடி போன்றவற்றைப் பாதுகாத்து எடுத்து அளிப்பதும் இவர்கள்  கடமை.



சுவாமி திருவுலாச் செல்லும் காலங்களில் அவரை வாகனங்களில் ஏற்றி அமர்த்தும் உரிமை இவர்களுக்கே உண்டு.  சுவாமிக்கு மேலே குடை பிடித்துச் செல்லும் உரிமை கொண்ட இவர்கள் சுவாமிக்குப் பூமாலைகள் சாற்றுவதோடு, பழைய மாலைகளைக் கோயிலின் பிரசாதமாகக் கோயில் ஆட்சித் தலைவருக்கு அளிப்பார்கள்.  மாலை வேளைகளிலும், சுவாமி கருவறை திரும்புகையிலும் காவலர்கள் சென்ற பின்னர் இவர்கள் உள்ளூர் மக்களோடு சேர்ந்து பூட்டி முத்திரை இடப்பட்ட பொற்கதவத்தைக் காவல் இருந்து காப்பார்கள்.  சுவாமியின் ஆபரணப் பேழைகளைப் பத்திரமாக வாங்கி வைத்திருப்பதோடு அவற்றிற்கெனச் சிறப்புப் பொறுப்பில் இருக்கும் அணிகல அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைப்பதும் இவர்கள் வேலை.

சுவாமி புறப்பாடாகி வருகையில் வேதங்களில் இருந்து சில பகுதிகளை ஓதுவதும் இவர்கள் வேலை என்பதோடு வாகனத்தைக் குறித்துப் புகழ்ந்து பாடல்களைப் பாடுவதும் இவர்கள் உரிமை.  இவர்களில் வயதானவர், அறிவுள்ளவர் பரமேஸ்வர சம்ஹிதையின் நுண்பொருளை இளைஞர்களுக்குக் கூறிப் பயிற்சி அளிப்பார்.

Thursday, August 21, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயிலின் வழிபாட்டு முறைகள்!

இப்போது சில நாட்களாக மின் தமிழ்க் குழுமத்தில் கோயில்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் கருத்தை ஆதரித்துப் பலரும் பேசினார்கள்.  அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.  என்றாலும் ஶ்ரீரங்கம் பெருமாள் கோயில், மதுரை மீனாக்ஷி கோயில், திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி கோயில், சிதம்பரம் நடராஜா கோயில் போன்ற ஆகம, வைதிக(சிதம்பரம் கோயிலில் வைதிக முறை) முறைப்படி பரம்பரை பரம்பரையாகக் கடவுளுக்கு சேவை செய்து வரும் குடும்பங்கள் இருக்கையில் இப்போது புதிதாக ஆகமங்கள், வழிபாட்டு நியமங்கள் கற்றவர் அங்கெல்லாம் கருவறை சென்று வழிபாடு நடத்த முடியாது என்பது என் கருத்தாக இருந்தது.  இதன் மூலம் புதிதாக அர்ச்சகர்களாக வருபவர்களை நான் எதிர்க்கிறேன் என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.


உண்மையில் ஶ்ரீராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட நியமங்களையே ஶ்ரீரங்கம் கோயிலில் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.  ஆரம்பத்தில் வைகானச முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வந்த கோயிலில் ஶ்ரீராமாநுஜர் காலத்தில் தான் பாஞ்சராத்திர ஆகம முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது.  ஶ்ரீராமாநுஜர் காலத்திலே கோயிலை நிர்வகிக்கக் கோயில் பணிகளைப் பத்துத் தொகுதிகளாகப் பிரித்து அதற்குரிய தொண்டர்களை ஏற்படுத்தினதோடன்றி கோயிலின் நிர்வாகத்திலும், பெரிய பெருமாளிடத்திலும் ஈடுபாடும் பக்தியும் கொண்ட பொதுமக்களையும் பல விதங்களிலும் பங்கேற்கும்படி செய்து இருக்கிறார்.  ஶ்ரீவைஷ்ணவர்களின் தலைநகரமாகவே ஶ்ரீரங்கம் விளங்கி வந்தது.


கோயில் பல்வேறுவிதமான சமுதாயப் பணிகளையும் கொண்டிருந்தது. கோயில் அர்ச்ச்கர்கள், கருவூலர்கள், கணக்கர்கள், திவ்யப்ரபந்தம் ஓதுவோர், மற்றப் பணிகளைச் செய்யும் கோயில் அலுவலர்கள், இசைவாணர்கள், கூத்தர்கள், நடன மகளிர் போன்றோரும் கோயில் பணியாளர்களில் அடங்குவார்கள்.  இத்தொகுதியில் வடமொழியில் வேதம் ஓதுவோர், கோயில் நந்தவனங்களை நிர்வகித்துப் பூமாலைகள் கட்டுபவர்கள், வாத்தியங்களை வாசிப்பவர்கள். நாள் தோறும் நிவேதனங்களுக்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைச் செய்யும் குயவர்கள், செப்புப்பாத்திரங்களைச் செய்து தரும் கன்னார்கள், கடவுளின் ஆடைகளைத் தூய்மை செய்யும் வண்ணார்கள், தையற்காரர்கள், நாவிதர்கள், பொற்கொல்லர்கள், வாகனங்களும், தேரும் செய்யும் தச்சர்கள், கோயிலிலேயே இருந்து காவல்காக்கும் பணியாளர்கள், போன்றோரும் அடங்குவார்கள்.


இறைவன் திருவீதி உலாவருகையில் ஒவ்வொரு தரமும் எந்த, எந்த வீதியில் அரங்கன் உலா வருவானோ அங்கெல்லாம் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்பவர்கள், கூட கோயில் பணியாளர்களாகவே கருதப்பட்டனர். கோயிலைச் சார்ந்து ஒரு கல்லூரியும், மருத்துவப் பணியமைப்பும் கூட இருந்ததாகத் தெரியவருகிறது.  கோயிலைச் சார்ந்த கல்லூரிகளின் ஆசிரியர்கள் அங்கேயே தங்கி இருந்து பாடங்களைக் கற்பிக்கும் வண்ணம் கோயிலைச் சுற்றிய பிராகாரங்கள் எனப்படும் வீதிகளிலே தங்கி இருந்தனர்.  அவர்களுக்கும், கோயிலின் நித்திய வழிபாடுகள் செய்து வரும் அர்ச்சகர்களுக்கும் பயன்படும்படியாக மருத்துவமனை மருத்துவப் பொருட்களால் நிரப்பப்பட்டு  பயன்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. பெரும்பாலான இப்பதவிகள் பரம்பரையாகவே வந்தன. ஆனால் தண்ணீர் தெளிப்போர், திரு அலகிடுவோர், காவல் புரிவோர் போன்ற பணிகளுக்குத் திறமையோ தனிப்பயிற்சியோ தேவையில்லை என்பதால் மற்ற பதவிகளில் இருப்பவர்கள் தமக்கு உரிய துறைகளில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டது.  வழிபாட்டுக் கிரியைகள் புரிவதற்கு நம்பிகள் என்போர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  இவர்கள் பலகாலமாகத் தொன்று தொட்டு வரும் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவராகவும், வைணவ சம்ஹிதைகள், தாந்திரிகத் திறன்கள் போன்றவற்றில் தேர்ச்சி உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.


புதிதாக ஒரு வைணவக் கோயில் எழுப்பப்பட்டால் இந்தக் கோயிலின் திறமை வாய்ந்த நம்பி அங்கே அழைக்கப்படுவார்.  இதே போல் மற்றத் தொழில்களுக்கும் புதிய கோயில்களுக்கு இம்மாதிரிப் பழமையான கோயில்களின் தேர்ந்த தொழிலாளிகளே சென்று தங்கள் சேவையைத் தொடருவார்கள்.  இனி கோயில் அலுவலர்கள் எப்படிப் பத்துவகைப்பட்டனர் என்பதையும், அவரவர் அலுவல் முறைகளையும் தொடர்ந்து காணலாம். இது கோயிலொழுகு என்னும் ஶ்ரீரங்கம் திருக்கோயில் வரலாற்றைக் கூறும் நூலில் இருந்து எடுக்கப்பட்ட சிறு தொகுப்பு.  இது அரசின் அறநிலையத் துறையால் வெளியிடப்படும் நூலில் காணப்படுகிறது.


1. கோயில் அலுவலர்களுள் முதன்மையானவர்கள் "திருப்பதியார்".  இவர்களின் ஆன்மிக குரு ஶ்ரீராமாநுஜர். இவர்களே மூலஸ்தானம் எனப்படும் கருவறை ஊழியத்துக்குப் பொறுப்பானவர்கள்.  இவர்களின் தலைமை பட்டாசாரியார் கையில் தண்டு என்னும் முத்திரைக் கோல் ஏந்திச் செல்வார். கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை  இவர்கள் கட்டாயமாய் அறிந்திருக்க வேண்டும். தினம் காலை முறைப்படி நீராடியபின்னர் வைகறையில் இருந்து இவர்கள் கடமைகள் தொடங்கும்.  கோயிலின் மூலஸ்தானக் கதவு திறந்ததுமே முகப்பு மண்டபம், பித்தளை பதித்தக் குலசேகரன் படிவாயில் ஆகிய இடங்களையும் பிரதக்ஷிணம் செய்யும் பிரகாரத்தையும் சுத்தம் செய்து தூய்மை செய்வார்கள்.  திருவிளக்குகள் அனைத்தும் இவர்களால் செய்வார்க்கப்பட்டுத் திரியைப் புதிதாகப் போட்டோ அல்லது பழைய திரி இருந்தால் அவற்றைத் துடைத்தும் சுத்தம் செய்து வழிபடத் தயாராக வைப்பதும் இவர்கள் பணி. இவர்களுடைய உதவியாளர்கள் ஏகாங்களிகள் என அழைக்கப்படுகின்றனர். வழிபாட்டுக்காலங்களில் இவர்கள் ஒவ்வொரு விளக்குகளையும் ஏற்றி வழிபாடு நடத்தும் அர்ச்சகர்களிடம் எடுத்துக் கொடுப்பதும், அவர்கள் ஹோமங்கள் செய்கையில் விளக்கு ஏந்துவதும் இவர்கள் பணி. தூபங்கள் போடுவது, பக்தர்களுக்குப் பிரசாதங்கள் தருதல் இவர்கள் பணியாகும்.


மாலிக்காஃபூர் படையெடுப்பிற்குப் பின்னர் இவர்கள் பணிகளில் மாறுதல்கள் ஏற்பட்டதாகக் கோயிலொழுகு கூறுகிறது.  இதன் பிற்பட்ட காலத்தில் வேதம் ஓதுதல், பிரபந்தம் பாடுதல் ஆகியனவும் இவர்கள் அன்றாடக் கடமைகளில் சேர்ந்தவையாயிற்று.  

Monday, July 28, 2014

துலுக்க நாச்சியார் யார்?

நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊர் சுத்தப் போறதுக்கு முன்னாடி ஒருதரம் அவரை முகமதியப் படைகள் தூக்கிக் கொண்டு டெல்லிக்கே போயிட்டாங்க.  இன்னும் சிலர் மாலிக்காஃபூர் படை எடுப்பின் முதல் முறை நடந்ததாகவும் சொல்கின்றனர்.  கி.பி 1311 ஆம் ஆண்டு இது நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போ நம்பெருமாளின் பெயர் அழகிய மணவாளர் என்று தான் இருந்திருக்கிறது.  உண்மையிலேயே அவ்வளவு அழகு தான் இவர். ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பார்த்துக் கண்ணன் சிரித்தான்; கண்ணன் ஒவ்வொருத்தரையும் விசாரித்தான் என்று கண்ணன் கதையில் எழுதும்போதெல்லாம் இவர் தான் நினைவில் வருவார்.  அப்படித் தான் இவரும்.  வீதி வலம் வந்தால் கூட நம்மைத் தனியாப் பார்த்துப் பேசறாப்போல் இருக்கும். கண்ணில் தண்ணீர் வந்துடும்.  அதிலும் அந்தச் சிரிப்பு அதில் மயங்காதவர் யார் இருக்காங்க?

அப்படித் தான் மயங்கிட்டா சுல்தானின் பெண்ணும்.  சுரதாணி/சுரதானி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் அரங்கனைத் தினமும் குளிப்பாட்டி, ஆடை, அலங்காரங்கள் செய்து தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். விக்ரஹத்தின் உண்மையான மதிப்பு அவளுக்குத் தெரியாவிட்டாலும் அதன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள்.  ஒரு கணமும் தன்னை விட்டுப்பிரியாத வண்ணம் எப்போதும் அதனோடு இருந்து வந்தாள். இங்கே அரங்கன் இல்லாமல் தவித்த மக்கள் செய்வது என்னவெனத் தெரியாமல் திகைத்து இருந்தனர்.  அரங்கன் இல்லாததால் விழாக்கள் நடைபெறவில்லை.  ஊரே வெறிச்சோடி இருந்தது.

அருகிலுள்ள பிக்ஷாண்டார் கோயிலில் நம்பெருமாளிடம் பக்தி பூண்ட அடியாள் ஒருத்தி இருந்தாள்.  அவள் தினம் தினம் அரங்கன் முன்னிலையில் ஆடிப் பாடி மகிழ்வித்து வந்தாள்.  இப்போது அரங்கனைக் காணாமல் அவளுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.  மாலிக்காஃபூரின் படைகள் சென்ற வழியை விசாரித்துக் கொண்டு சென்றவள் டெல்லியை அடைந்தாள். அங்கே சுல்தானின் மகள் சுரதானியிடம் விக்ரஹம் இருப்பதையும், அவள் அதை ஒருகணமும் பிரியாமல் இருப்பதையும் தெரிந்து கொண்டாள்.  சுல்தானிடம் நேரடியாகப் போய்க் கேட்காமல் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து சுல்தானுக்கு ஆடல், பாடல் கேளிக்கைகளில் விருப்பம் அதிகம் எனப் புரிந்து கொண்டாள்.

திரும்பவும் ஶ்ரீரங்கம் வந்து கோயில் மேலாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு நாட்டியக் குழுவைத் தயார் செய்தாள்.  கிட்டத்தட்ட 60 பேர்கள் இருந்த அந்தக் குழுவும் டெல்லியை அடைந்தது.  அங்கே சுல்தானைக் கண்டு ஆடல், பாடல்களால் மகிழ்வித்தது.  இந்த ஆட்டத்தை "ஜக்கிந்தி" என்று சொல்கின்றனர். பாதுஷா அவர்களுக்குப் பரிசில்கள் பலவும் அளிக்க, நாட்டியக் குழுவினரோ எங்கள் அரங்கன் தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்ல.  விசாரித்த சுல்தான் தன் மகளிடம் இருப்பதை அறிந்து கொண்டான்.  மகள் அதை விட்டுப் பிரிய மாட்டாள் என்றும், அவளுக்குத் தெரியாமல் அதை எடுத்துச் செல்லும்படியாகவும் கூறினான். அவள் தூங்குகையில் அதை எடுத்து வந்தார்கள் என்றும், அவளை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு எடுத்தார்கள் என்றும் இருவிதமான கூற்றுகள் நிலவுகின்றன.  எப்படியோ அரங்கன் ஶ்ரீரங்கத்துக்குக் கிளம்பி விட்டார்.

ஆனால் சுரதானி மயக்கம் தெளிந்து எழுந்தவள் அரங்கனைக் காணாமல் பித்துப் பிடித்தவள் போல் புலம்ப ஆரம்பித்தாள்.  நாளுக்கு நாள் மோசம் ஆகும் மகளின் நிலை கண்டு வருந்திய சுல்தான் அரங்கனைத் திரும்பக் கொண்டு வரும்படி ஒரு படையை அனுப்பினான்.  படை வீரர்கள் செல்வதைத் தெரிந்து கொண்ட சுரதாணி தானும் அவர்களுடன் சென்றாள்.  படை வீரர்கள் தொடர்வதைத் தெரிந்து கொண்ட நாட்டியக் குழுவினர் மூன்றாகப் பிரிந்து ஒரு குழுவினர் அரங்கனைத் திருமலைக் காட்டில் ஒளித்து வைத்ததாகவும் சொல்கின்றனர்.  ஶ்ரீரங்கம் வந்த சுரதானி அங்கே அரங்கன் இல்லாமையால் மனம் வருந்தி மயங்கி விழுந்தவள் அங்கேயே உயிரை விட்டு விட்டாள்.  அவள் உடலில் இருந்து கிளம்பிய ஜோதியை அரங்கன் விஸ்வரூபமாக காட்சி கொடுத்து அவளைத் தன்னுடன் ஐக்கியம் ஆக்கிக் கொண்டான்.


பின்னர் ஒரு சோழமன்னன் கனவில் தோன்றிய அரங்கன் சுரதானிக்கு ஒரு சந்நிதி அமைக்கும்படி சொன்னான்.  அதன்படியே கருவறைக்கு வடகிழக்கு மூலையில் அர்ஜுன மண்டபத்தில் ஒரு சித்திரம் எழுதி வைத்து சந்நிதியை ஏற்படுத்தினான்.  தினமும் முகலாயர் வழக்கப்படி அரங்கனுக்குக் கைலி உடுத்தப்பட்டு, ரொட்டி, வெண்ணை, காய்ச்சாத பால் போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர்.  அகில், சந்தனம் தூவி புகை போடப்படும். வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தில் அர்ஜுன மண்டபத்தில் அரங்கன் எழுந்தருளுகையில் சுரதானிக்கு நன்கு தெரியும்படி, "படியேற்ற சேவை"  என்னும் சேவை தோளுக்கு இனியானை நன்கு தூக்கிப் பிடித்து சுரதானிக்குக் காட்டிப் பின்னரே அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். 

Saturday, July 26, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரங்கனைக் கவனித்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன.  கோயிலுக்குப் போயும் பல மாதங்கள் ஆகிவிட்டன. :( கடைசியாய்ப்போனது  மார்ச் மாதத்தில் என நினைக்கிறேன். ஆனாலும் அரங்கன் குறித்த சிறு குறிப்புக் கிடைத்தாலும் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.  சமீபத்தில் அப்படிக் கிடைத்த சில தகவல்களின் தொகுப்புக்களை இங்கே வழங்குகிறேன்.  அரங்கன் பயணமும் பாதியில் நிற்கிறது.  அரங்கன் செல்லும் வழியில் துளசிதளங்களைப் போட்டுச் சென்றார்கள் என்று படித்தோம்.  அதை விரைவில் தொடர்கிறேன். இப்போது சில ஶ்ரீரங்க அதிசயங்கள் குறித்துப் பார்க்கலாம்.  கோயிலில் ரங்கா கோபுரம் வழியாக நுழைபவர்கள் முதலில் காண்பது ஒரு பெரிய மண்டபம்.  அதை ரங்க விலாச மண்டபம் என்பார்கள்.  அதன் நடுவேயே ஒரு சின்ன மண்டபமும் உண்டு.  அதற்கு மேற்கே உள் ஆண்டாள் சந்நிதி உள்ளது.  இந்த உள் ஆண்டாள் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்றும், இவளிடம் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டால் கேட்டது கிடைக்கும் என்றும் சொல்கின்றனர்.

இதைத் தவிர வெளி ஆண்டாள் சந்நிதியும் உண்டு.  இது "தோப்பு ராமன் சந்நிதி" என்னும் பெயரில் முன்னர் இருந்ததாகச் சொல்கின்றனர். இந்த வெளி ஆண்டாள் சந்நிதியில் நம்பெருமாள் ஆடிப்பெருக்கன்று காவிரிக்குச் சீர் கொடுத்துத் திரும்பும்போதும், பங்குனி உற்சவத்தில் உறையூர் சோழகுலவல்லியை மணமுடித்துக் கோயிலுக்குத் திரும்புகையிலும் ஶ்ரீரங்கநாதர் மாலை மாற்றிக் கொண்டே உள்ளே செல்லுவார்.  உள் ஆண்டாள் சந்நிதியில் ஆடிப்பூரம் சமயம் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் முடிந்ததும். உள் ஆண்டாள் சந்நிதி முன் நின்று மாலை மாற்றிக் கொள்வார்.  இந்தச் சிறப்பு ஆடிப்புரத்தின் ஏழாம் திருநாளான திருக்கல்யாணம், யானை ஏற்றம் அன்றும் ஆறாம் உற்சவத்தின் முதல் நாட்களிலும் நடைபெற்று வருகிறது. வெளி ஆண்டாள் சந்நிதி  பல வருடங்கள் முன்னர் காவிரிக்கரைக்கு அருகே இருந்ததாகவும், (அல்லது காவிரி இதுவரை ஓடி இருக்கிறது.) காலப்போக்கில் திருட்டு பயம் காரணமாக இங்கிருந்த உற்சவ விக்ரஹம் மட்டும் ரங்கவிலாச மண்டபத்தில் இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்றப்பட்டு இப்போது உள் ஆண்டாள் சந்நிதி என அழைக்கப்படுகிறது.




இதைத் தவிர தாயார் சந்நிதிக்கு அருகே கோதண்டராமர் சந்நிதிக்குப் பக்கத்தில் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதி இருக்கிறது.  சில முக்கிய உற்சவங்களின் போது நம்பெருமாள் வீதிவலம் முடிந்தோ அல்லது சந்தனு மண்டபம் அல்லது அர்ஜுன மண்டபத்தில் காட்சி கொடுத்த பின்னரோ  இங்கே வந்து தங்குவார்.  இங்கே இருந்தே மறுநாள் உற்சவத்திற்குக் கிளம்புவார்.  திரு ஆடிப் பூரத்தின் போது தினமும் இங்கே ஒவ்வொரு அலங்காரமாகச் செய்திருப்பார்கள்.  பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  ஒரே ஒரு முறை சென்று பார்த்தோம்.  மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவைக் காட்சிகளைக் காண முடியும்.



கிழக்கே வெள்ளைக்கோபுரம் என அழைக்கப்படும் கோபுரம் காணப்படுகிறது.  இதை வெள்ளைக் கோபுரம் என அழைப்பதாலோ என்னமோ இதிலே வெள்ளை மட்டும் அடித்திருப்பார்கள்.  ஆனால் உண்மைக்காரணம் என்னவெனில் கோயிலை ஆக்கிரமிக்க வந்த துலுக்கப் படைகளில் ஒரு தளபதி மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்தான்.  கோயிலையே அழித்துவிடுவானோ என அனைவரும் அஞ்சி இருந்தனர்.  அப்போது வெள்ளையம்மாள் என்னும் நாட்டிய மங்கை அவனை மயக்கி அவனுடன் அன்பாக இருப்பது போல் நடித்து அவனை ஏமாற்றி கோபுரத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.  அங்கிருந்து அவனைக் கீழே தள்ளிவிட்டுக் கொன்றாள்.  பின்னர் தானும் கீழே விழுந்து உயிர் நீத்தாள்.  இவள் நினைவாகவே வெள்ளைக்கோபுரம் என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.




முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1250) ஆம் ஆண்டு அவன் அரங்கனைச் சேவிக்க வந்தான்.  அரங்கனின் திருவாராதனம் கண்டு வணங்கிக் கொண்டிருந்த அவனுக்கு அரங்கனின் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் நீரைத் தனியாக ஒரு பாத்திரத்தில் பெய்து வைப்பதற்கான திருப்படிக்கத்தை பட்டாசாரியார்கள் கொண்டு வராமல் மறந்தது தெரிந்தது.  உடனே தன் ராஜக் கிரீடத்தைக் கழற்றி அந்தப் புண்ணிய நீரை ஏந்தினான் மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.  அனைத்து மக்களும் பட்டாசாரியார்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து அரசனின் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இன்றளவும் அவ்வாறு திருப்படிக்கத்தில் வழிபாட்டு நீரை ஏந்தும்போது, "சுந்தரபாண்டியம் பிடித்தேல்" என்றே அருளப்பாடு நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த மன்னன் கோயிலில் பல கட்டிடங்களையும் எழுப்பி பல்வேறு விதமான அலங்காரங்களையும் செய்து கொடுத்திருக்கிறான்.  அரங்கன் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவன் தான் கட்டிக் கொடுத்தான்.  ஒரிசாவில் கடக் பிரதேசத்து மன்னனை எதிர்த்துப் போரில் வென்று கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அரங்கனுக்கு மரகதமாலையாகவும், பொற்கிரீடமாகவும், முத்தாரங்களாகவும், முத்து விதானமாகவும், பொற்பாத்திரங்களாகவும் வழங்கினான்.

எல்லாவற்றையும் விட மேலாக அரங்கனின் தெப்போற்சவத்திற்காகத் தங்கத்திலேயே படகு கட்டிக் கொடுத்தான்.  அதில் தனது பட்டத்து யானையை இறக்கித் தான் ஏறி அமர்ந்த வண்ணம் அருகே இன்னொரு படகை நிறுத்தி இரு படகும் சமமான நீர்மட்டத்துக்கு வரும் வரையில் பொற்காசுகளை நிரப்பிக் கோயிலுக்கு தானமாக வழங்கினான்.


படங்களுக்கு நன்றி கூகிளார்.