எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 16, 2019

வண்டி புறப்பட்டது!

தத்தன் என்னவெல்லாமோ பேசினான். திடீரெனத் துள்ளி எழுந்து, ஆஹா, என் குடையை விட்டுவிட்டேனே! என்று குதித்தபடிக் கூடத்தின் ஓரத்திலே ஒதுங்கிக்கிடந்த அவன் தாழங்குடையை எடுத்து வந்தான். வல்லபனுக்கு எதுவும் சரியாகப் புரியாவிட்டாலும் தத்தன் எதையோ மறைக்க இப்படி வளவளவெனப் பேசுகிறான் என்றவரை புரிந்து கொண்டான். சற்று நேரம் அந்தக் கூடத்திலே ஒரே பேச்சு சப்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் ஒருங்கே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.  சேவகர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றிருக்க அவர்கள் தலைவன் கோபமாகக் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். தத்தன் அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் வல்லபன் அருகே வந்தான். பின்னர் அனைவருமே அமைதியைக் கடைப்பிடித்துக் கொண்டு அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து மெல்லப் பேசிக் கொண்டும் படுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டும் இருந்தனர்.

இதை எல்லாம் பார்த்த வல்லபன் தானும் படுக்கலாமா என எண்ணியபோது தத்தன் அவனைத் தனியாகக் கண் ஜாடை செய்து அழைத்தான். இருவரும் சற்றே மறைவாகத் தனியாகப் போய் அமர்ந்தனர். அப்போது காலதத்தன் தான் அந்தச் சத்திரத்துக் குளியல் அறையில் இருந்த புகை போக்கி மூலம் வெளியே தப்பியதாகச் சொன்னான்.பின்னர் ஓட்டமாக ஓடியதில் எதிரே வந்த யாத்ரிகர்கள் கண்களில் பட்டதாகவும் அவர்களிடம் இந்த வீரர்களையும் அவர்கள் பிடித்து வைத்திருக்கும் பெண்ணையும் பற்றிச் சொன்னதோடு அல்லாமல் தங்களுக்கும் ஆபத்து நேர்ந்திருப்பதாகவும் வல்லபன் அங்கே தனியாக மாட்டிக்கொண்டதாகவும் தான் மட்டும் தப்பி வந்து உதவி கேட்க வந்ததாகவும் தெரிவித்ததாய்ச் சொன்னான். அதைக் கேட்டே அந்த யாத்ரிகர்கள் சத்திரத்துக்குள் நுழைந்ததாகவும் சொன்னான். இதை எல்லாம் கேட்ட வல்லபனுக்கு நன்றியால் கண்களும் மனமும் நிறைந்தது. ஆனால் தத்தனோ அவனைப் பார்த்து எச்சரிக்கும் குரலில், "வல்லபா! இனியாவது இப்படி முன்பின் யோசியாமல் இது போன்ற சங்கடங்களுக்குள் மாட்டிக் கொள்ளாதே!அதோடு இல்லை தம்பி! என்னையும் என் துணையையும் நம்பித்தான் உன் தாயார் உன்னை என்னோடு அனுப்பி இருக்கிறார். ஆகவே நீ நான் சொல்லுவதைக் கேட்டு அதன்படி நடந்து கொள்! நீயாக எந்த முடிவும் எடுக்காதே! நூறு எண்ணுவதற்குள்ளாகத் திரும்பி வா என உன்னிடம் சொல்லி இருந்தேன். ஆனால் நீயோ! வராமலே இருந்ததோடு அல்லாமல் என்ன செய்து உன்னைக் காப்பாற்றுவது என்று என்னைக் கவலையில் ஆழ்த்திவிட்டாய்!" என்று குற்றம் சாட்டும் தொனியில் கூறினான்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. காலதத்தனும், வல்லபனும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துப் பிரயாணத்துக்குத் தயார் ஆனார்கள். பின்னர் வெளியே வந்தார்கள். வெளியே நேற்றுப் பார்த்தக் கூண்டு வண்டிகள் பிரயாணத்துக்குச் சித்தமாகத் தயார் செய்யப்பட்டிருப்பதையும், காவல் வீரர்கள் அனைவரும் வந்து விட்டதையும், இன்னமும் அந்த இளம்பெண்ணும், அவள் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதிய பெண்ணும் தான் வரவில்லை என்பதை இருவரும் அறிந்தார்கள். இவை எதிலும் பார்த்துத் தன் கண்களையும் மனதையும் பறி கொடுத்து வந்த காரியத்தை வல்லபன் மறந்து விடப் போகிறானே என தத்தன் கவலைப்பட்டான். அப்போது சத்திரத்துக்குள்ளிருந்து அந்தப் பெண்ணும் அவளுக்குத் துணைக்கு இருக்கும் பெண்ணும் வருவதை இருவரும் கண்டனர். அந்தப் பெண் நடந்து வருவதே ஓர் அழகான அபிநயம் போல் இருந்தது வல்லபனுக்கு. மிக அழகாக ஒசிந்து ஒசிந்து அவள் வருவதையே தன்னை மறந்து பார்த்த வல்லபனுக்குச் சட்டெனத் தூக்கிவாரிப் போட நேற்று தத்தன் சொன்னதை எல்லாம் நினைவு கூர்ந்தவனாகச் சட்டென முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு திரும்பியவாறு நின்று கொண்டான்.

அப்போது அந்தப் பெண் வல்லபனைத் திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல நினைத்தவள் போல் நின்றாள். பின்னர் வல்லபன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டவள் போல் காணப்பட்டாள். அவள் விழிகளின் காந்தியும் நீண்ட அந்த விழிகளில் தெரிந்த தன் உருவமும் பார்த்துப் பித்துப் பிடித்தவன் போல் ஆனான் வல்லபன். ஆனால் அந்தப் பெண் சட்டெனத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு வண்டிக்குப் போய் அதிலே ஏறிக்கொண்டாள். வண்டியில் அமர்ந்தவள் சற்று நேரம் பார்வையைக் கீழேயே தாழ்த்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ தன் இடக்கை விரல்களால் அபிநயம் பிடித்த வண்ணம் தன் ஒரு கண்ணைச் சுற்றி இரு கோடுகள் வரும்படி செய்து காட்டினாள். பின்னர் ஐந்து விரல்களாலும் கழுத்தையும் சுற்றி நீவி விட்டுக்கொண்டாள். கையை மடித்து நெற்றியிலே வைத்து அழுத்தியவண்ணம் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். அப்போது வீரர்களில் ஒருவன் வந்து திரைச்சீலையை எடுத்துக் கட்ட ஆரம்பித்தான், அதை முழுதும் மூடுவதற்குள்ளாக அந்தப் பெண் வல்லபனை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். சற்று நேரத்தில் திரைச்சீலை முற்றிலுமாக அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்துவிட வீரர் தலைவனும் அவர்களை அலட்சியமாகப் பார்த்த வண்ணம் குதிரையை விரட்டினான். வண்டி புறப்பட்டது!

Saturday, July 13, 2019

காலதத்தன் திரும்பி வந்தான்!

அந்தப் பெண் படுத்திருந்த கோலத்தைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அனைவரும் உள்ளே சென்ற சப்தத்தில் கூட அவள் கண் விழிக்கவோ எழுந்து பார்க்கவோ இல்லை. கூட வந்த சேவகன் அந்தப் பெண்ணின் அருகே சென்று மெள்ளக் குரல் கொடுத்தான். "அம்மா! அம்மா!" என இரு முறை அவன் விளித்தும் அந்தப் பெண்ணின் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. இன்னமும் அருகே சென்று கொஞ்சம் குரலை உயர்த்திக் கூப்பிட்டான். ம்ஹூம்! அப்போதும் அவள் கண் விழிக்கவில்லை. இளம்பெண்ணை எப்படித் தொட்டு உலுக்கி எழுப்புவது? அதுவும் உயர்குலத்துப் பெண்ணாக வேறே தெரிகிறாளே! அனைவரும் யோசிக்கையிலேயே அந்த வீரன் மேலும் குரலை உயர்த்திப் பல முறை அவளை எழுப்பினான். ஒரு வழியாக அந்தப் பெண் மெல்லத் தன் கண்களைத் திறந்தாள். என்றாலும் அவளால் முழுதும் திறக்க முடியவில்லை. கண்களை மெல்ல மெல்ல உயர்த்தி அவர்களைப் பார்த்தாள்.  அப்போது அந்த வீரர் தலைவன் அவளிடம், "அம்மணி! நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள இவர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். தாங்கள் யார் என்பதைத் தயவு செய்து இவர்களீடம் சொல்லுங்கள்." என வீரர் தலைவன் அவளிடம் சொன்னான்.  அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ பேசவே இஷ்டமில்லாதவள் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டாள். கண்களை வேறே மூடி மூடித் திறந்தாள். பின்னர் ஒருவாறு வாயைக் கூட்டிக்கொண்டு, "நா" என்றாள். பின்னர் "ஹாகு" "தேமு" என்றெல்லாம் ஏதேதோ புரியாத மொழியில் சொன்னாள். சேவகத் தலைவன் அவளிடம் அவள் சொல்லுவது அவர்களுக்குப் புரியவில்லை என்பதால் விளக்கமாகச் சொல்லும்படி மீண்டும் கேட்டான். அப்போதும் அந்தப் பெண் ஏதும் விபரமாகப் பேசாமல் துண்டு துண்டாக வார்த்தை, வார்த்தைகளாகவே ஏதேதோ புரியாத மொழியில் சொன்னாள். வீரர் தலைவன் முகத்தில் நிம்மதி தெரிந்தாற்போலிருந்தது வல்லபனுக்கு. அனைவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தான் வீரர் தலைவன். "நான் சொன்னேனே! கேட்டீர்களா? அந்தப் பெண்ணிற்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது! கண்டபடி உளறுகிறாள் பாருங்கள்!" என்று சொன்னான் வீரர் தலைவன். வல்லபன் எதுவுமே புரியாமல் விழித்தான். வந்திருந்த புது யாத்ரிகனோ, "ஆம், ஆம், பைத்தியம் தான் பிடித்திருக்கிறது! உன்மத்தம்!" என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு ராஜவல்லபனை நோக்கிச் சிரித்தான்.

"தம்பி, இப்படியாத் தவறாக நினைப்பது? ஒரு நிமிடத்தில் எங்கள் எல்லோரையுமே குழப்பி விட்டாயே! ஓர் பைத்தியக்காரப் பெண்ணை இவர்கள் விலங்கு பூட்டி ஜாக்கிரதையாக எவருக்கும் தீங்கு நேராமல் சிவிகையினுள்ளே அமர்த்திக் காவலுக்கு ஒரு பெண்மணியையும் போட்டு அழைத்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு கண்டாய், இளைஞனே! அநியாயமாகச் சந்தேகப்பட்டு விட்டாய்!" என்று சொன்னான் அந்தப் புதியவன். பின்னர் வீரர் தலைவனிடம், "ஐயா! உம்மையும் உமது காரியத்தையும் குறித்து இவன் கொண்ட சந்தேகம் தவறானதே! அதனால் தான் இத்தனை விபரீதங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆனாலும் இவனை நீங்கள் நியாயப்படி பார்த்தால் தண்டிக்கக் கூடாது! சந்தேகத்தின் பேரில் செய்த தவறு அல்லவா? அதற்கு மன்னிப்பும் உண்டே!" என்றான். ஆனால் வீரர் தலைவன் அதை ஒத்துக்கொள்ளவில்லை. ஆவேசமாக மறுக்க புதியவனும் வீரர் தலைவனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடைசியில் அலுத்துப் போன புதிய யாத்ரிகன் வீரர் தலைவனைப் பார்த்து, "நீர் எந்த நாட்டவர் ஐயா?" என வினவ, தான் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன் என வீரர் தலைவன் கூறினான். அதற்குப் புதியவன், "சரிதான்! சம்புவராயரின் நாட்டிலிருந்து வருகிறீர்கள் போலும்! ஆனால் இது கொங்கு நாடு! தெரியுமா? இதை ஆள்வது யாரென்று அறிவீர்களா? " என்று புதியவன் வீரர் தலைவனிடம் கேட்டான். அதற்கு வீரர் தலைவன், "ஏன், மதுரை சுல்தானின் ஆட்சி தான் இங்கு வரை நீண்டு விட்டதே!" என மறுமொழி கொடுத்தான். உடனே புதியவன், "ஆஹா! வீரரே! அதை நீர் நினைவில் வைத்துக் கொள்ளும்! உம் தொண்டைமண்டலத்தின் சட்டதிட்டங்கள், நியாய அநியாங்கள் இங்கே செல்லாது. நீர் நிற்பது உம் தொண்டை நாடல்ல. மதுரை சுல்தானுக்கு உட்பட்ட ராஜ்ஜியம்! இங்கே நீங்களாக ஏதேதோ முடிவு செய்து நியாயம் என நினைத்துச் சொல்லும் தீர்ப்புக்கள் செல்லாது. அதன்படி நீங்கள் இந்த இளைஞனுக்கு தண்டனை கொடுக்க முடியாது. அது முற்றிலும் தவறு!" என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தான்.

உடனேயே அந்தப் புதியவனுடன் வந்தவர்களும் சேர்ந்து, "ஆம், அது முற்றிலும் தவறு, தவறு, தவறு!" என்று கோஷமிட்டார்கள். அதைக் கேட்ட வீரர் தலைவன் இத்தனை பேர் எதிர்க்கையில் தான் என்ன செய்யலாம் என  யோசித்த வண்ணம் மௌனமாகச் சிறிது நேரம் இருந்தான். பின்னர் அந்தப் புதியவனிடம் அவன் சொல்லுவதைத் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிவிட்டு உத்திரத்தின் மேல் கட்டிய சுருக்குக் கயிறைத் தன் வாளாலேயே அறுத்துத் தள்ளினான். பின்னர் அந்தப் பெண் இருக்கும் அறைக்குச் சமீபமாகக் கூடத்தின் ஓர் ஓரமாகப் போய் நின்று விட்டான்.  அப்போது வாசலில் யாரோ கைகளைத் தட்டும் சப்தம் கேட்கவே அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். வந்தவன் காலதத்தன். வல்லபனுக்கு மகிழ்ச்சி பொங்கி வர உடனே எழுந்து சென்று காலதத்தனைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான். இங்கே நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லித் தான் மிகக் கடுமையானதொரு தண்டனையிலிருந்து தப்பி இருப்பதையும் சொல்லிக் காலதத்தன் எங்கே போனான், என்னவானான் என்று கேட்டான்.

Friday, July 12, 2019

அந்த இளம்பெண் யார்?

"ஆஹா,தம்பி, நீ விளக்கை அணைத்தாயா? அப்படி எனில் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனை நியாயமானது தான்!" என்றான் வந்தவன். அவன் முகத்தில் வல்லபன் மேல் சிறிது கூடப் பரிதாபம் தோன்றவில்லை. தூக்குத் தண்டனை வெகு சகஜம் என்பது போல் அவன் சாதாரணமாகக் கூற அதைக் கேட்டு வெகுண்டான் வல்லபன். புதிதாக வந்தவனைப் பார்த்து, "ஐயா, நீங்கள் உண்மை என்னவென்று அறியாமல் பேசுகிறீர்கள். இதோ இருக்கிறானே இவனும் இவன் ஆட்களுமாகச் சேர்ந்து என்ன காரியம் பண்ணி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓர் இளம்பெண்ணைக் கையில்,காலில் சங்கிலி போட்டுக் கட்டிப் பிணைத்து எங்கேயோ கடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதை நானும் என் நண்பனும் பார்த்துவிட்டோம் என்பதால் இப்போது என்னைக் கொல்ல நினைக்கிறான் இவன். என் நண்பன் எங்கே போனான் என்றே தெரியவில்லை." என்று கூறினான்.

ஆனால் வந்தவன் இதைக் கேட்டுப் பதறினதாகத் தெரியவில்லை. மாறாக அவன் முகத்தில் மகிழ்ச்சியே தாண்டவம் ஆடியது. பெண் என்றதும் எல்லோருக்கும் தோன்றும் எண்ணம் அவனுக்குள்ளும் தோன்றியது போல் கொஞ்சம் அசட்டுக்களையும் ஏற்பட்டது. முகத்தில் இருந்த மகிழ்ச்சி நன்றாகவே தெரிய அந்தப் புதியவன் வீரர் தலைவனிடம், "பெண்ணா? அதுவும் இளம்பெண்ணா? நல்லது! நல்லது! யாருடைய பெண்? எதற்குக் கடத்தினீர்கள்? நீங்களே சொந்தமாக வைத்துக்கொள்ளும் உத்தேசம் உண்டா? அல்லது வேறு யாருக்கானும் இந்தப் பெண் போகிறாளா?" என்றெல்லாம் ஆவலுடன் கேட்டான்.  இப்போது வீரர் தலைவனுக்கு வந்தவனிடம் ஏற்பட்டிருந்த மரியாதை சுத்தமாகப் போய்விட்டது.  ஏளனமாக அவனைப் பார்த்தான்.  அதற்குள்ளாக அந்த ஆடவனுடன் வந்த இதர ஏழு நபர்கள் தங்கள் கைகளில் மூட்டைகளை ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தனர். வீரர் தலைவன் அவர்களைப் பார்த்தான். அனைவரும் நெடுந்தூரப் பயணத்தில் களைத்திருப்பது புரிந்தது அவனுக்கு. ஆனாலும் அவர்கள் அனைவருமே கட்டுமஸ்தான தேகத்துடன் காணப்பட்டனர்.

உடனேயே தன் முகத்தில் வலிய ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டான் அந்த வீரர் தலைவன். "ஹாஹாஹாஹா! இந்தப் பையன் விபரம் தெரியாமல் பேசுகிறான்! தம்பி! இதோ பார்! நீ நினைப்பது போல் எல்லாம் அல்ல! அந்தப் பெண்ணை யாரென்று நீ நினைத்தாய்? எங்கள் தலைவர் காளிங்க மர்த்தனரின் பெண் தான் அவள். அவளுக்குச் சித்தப்பிரமை! ஒரு வருடமாக இப்படித் தான் இருக்கிறாள். கொங்கு நாட்டுக்குச் சென்று அங்கே ஓர் சாமியாரிடம் இவளுக்கு வைத்தியம் பண்ணிக் கொண்டு நாங்கள் திரும்புகிறோம். சங்கிலியைக் கழட்டி விட்டால் எங்கானும் ஓடி விட்டால்? எங்கள் தலைவருக்கு யார் பதில் சொல்வது? அதனால் தான் நாங்கள் அவளைச் சங்கிலியால் பிணைத்து இருக்கிறோம்! இது வழக்கமாக எல்லோரும் செய்வது தானே அப்பா!" என்று குரலைக் குழைத்துக் கொண்டு பேசினான் வீரர் தலைவன்.

வல்லபன் திகைத்து நிற்க, அந்தப் புதியவனோ வல்லபனைப் பார்த்து, "சரிதான்! நீ இதை எல்லாம் கவனிக்கவில்லை போலும்! என்ன பையனப்பா நீ!" என்ற வண்ணம் மறுபடி கொஞ்சம் அசட்டுச் சிரிப்பாகச் சிரித்தான்.  வல்லபன் தடுமாறிவிட்டான். ஆனாலும் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு யோசித்துப் பார்த்தவனுக்கு உண்மை புலப்பட்டது. உடனே புதியவன் பக்கம் திரும்பி, "ஐயா! இவர் சொல்லுவதெல்லாம் பொய்! நிச்சயமாய் அந்தப் பெண் பைத்தியமே அல்ல. ஏதோ ஓர் நாட்டின் அரசகுமாரி அவள். அவளைப் பார்த்தால் ராஜ லட்சணங்கள் தெரிகின்றன.  ஐயா, புதியவரே! நீங்களே அந்தப் பெண்ணை நேரில் கண்டு அவளிடம் விசாரியுங்கள்!" என வேண்டுகோளையும் விடுத்தான் வல்லபன்.  உடனேயே வந்தவனும் வல்லபன் சொன்னதை ஆதரித்து வீரர் தலைவனிடம், அந்தப் பெண்ணையே தான் நேரில் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதாகச் சொன்னான். வீரர் தலைவனுக்கு முகம் கறுத்தது. உள்ளூரக் கோபமும் கொந்தளித்தது. வல்லபனைக் கடுமையாகப் பார்த்தான்,

புதியவரைப் பார்த்து, "ஐயா! பெரிய மனிதரே! நீர் உண்மையிலேயே ஓர் பெரிய மனிதர் என எண்ணியே நான் இத்தனை நேரமாய் உங்களுக்கு பதில் கூறி வருகிறேன். இப்போது இப்படிச் சொல்கிறீரா? நான் கூறுவது உண்மையா, பொய்யா என உமக்குத் தெரியவேண்டும்! அது தானே! வாரும் ஐயா!  அந்தப் பெண்ணிடம் அழைத்துச் செல்கிறேன். நீரே அந்தப் பெண்ணிடம் எல்லா விபரங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்." என்று சொல்லிய வண்ணம் அங்கிருந்து ஒரு சேவகனுக்குக் கண் ஜாடை காட்ட, அவனும் தீவர்த்தியைத் தூக்கிக் கொண்டு முன்னே சென்றான். அனைவரும் அந்தப் பெண் இருந்த அறைக்குள் சென்றனர். அங்கே அந்தப் பெண் மஞ்சத்தில் சோர்ந்து போய்ப் படுத்திருக்க அவளைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவள் உடல் மீது தாறுமாறாய்க் கிடந்தது.

Monday, July 08, 2019

சத்திரத்தில் புது வரவு! நண்பனா? துரோகியா?

விசித்திரமான குரல் ஒலியைக் கேட்டுத்திகைத்திருந்த வீரர் தலைவனும் சேவகர்களும் வெளியே சாலையை நோக்கிப் பார்வையைத் திருப்பினார்கள். வெகு தூரத்தில் கருங்கும்மென்றிருந்த இருட்டில் ஏதோ பிரகாசமாக ஜொலிப்பது தெரிந்தது. வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்று நேரத்தில் அது ஐந்தாறு தீவர்த்திகள் ஒளி காட்டிக்கொண்டு வரும் வெளிச்சம் என்பதைப் புரிந்து கொண்டனர். எனவே வீரர்களில் ஒருவன் சற்றே குதூகலத்தோடு தலைவனைப் பார்த்துத் தங்கள் படையாட்கள் தான் வருகின்றனர் எனத் தான் நினைப்பதாய்க் கூறினான். வீரர் தலைவனும் அப்படியே நினைத்துத் தலையை ஆட்டிக் கொண்டு, "வரட்டும், வரட்டும்! வந்து அவர்களும் இந்த இளைஞனின் இறுதி நேரத்தைப் பார்க்கட்டும்!" என்று கூறிக் கொண்டே தன் தலையையும் ஆட்டிக் கொண்டான். உன்னிப்பாகப் பார்த்தவண்ணம் அங்கேயே நின்று கொண்டிருந்த வீரர் தலைவனுக்கு ஏதோ சந்தேகம் மனதில் ஜனித்தது. தீவர்த்திகள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. குதிரைகளும் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஓர் படைவீரர்களின் குதிரைகள் போல் நடக்கவில்லை எவையும். ஒரே தாளகதியில் வரவேண்டிய குதிரைகள் சோர்ந்து போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இது வீரர் படையே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டான் வீரர் தலைவன்.

வல்லபனுக்கு இவ்வளவு தூரம் யோசித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. ஆனாலும் வருபவர்கள் மூலம் தனக்கு விமோசனம் கிட்டுமோ என எதிர்பார்த்துக் காத்திருந்தான்.  வீரர் தலைவனுக்குச் சற்று நேரத்திலேயே வருவது தன் ஆட்கள் இல்லை என்பது புரிந்து விட்டது. உடனேயே தன் வீரர்களுக்கு எச்சரிக்கை செய்தான். அவர்களுக்கும் இதற்குள்ளாக சந்தேகம் வந்துவிடவே எச்சரிக்கையுடனேயே காத்திருந்தனர். அதற்குள்ளாக எட்டு ஆட்கள் பரிவாரமாக வர அங்கே வந்து சேர்ந்த அந்தக்கூட்டம் சத்திரத்து வாசலில் வந்ததும் நின்றது. குதிரைகள் சோர்வுடன் நின்றன. மனிதர்கள் அவற்றின் மீதிருந்து குதித்துக் குதிரைகள் மேல் இருந்த பெரிய பெரிய மூட்டைகளையும் கீழே இறக்கினார்கள். தலையில் பாகையை வரிந்து கட்டி இருந்தான் ஆஹானுபாகுவான ஒருவன். அவன் நீளமானதொரு அங்கியைப் பட்டினால் தயாரிக்கப்பட்டுக் கட்டி இருந்தான். கையிலும் ஒரு பட்டுப் பையை வைத்துக் கொண்டிருந்தான். அவன் பாதரட்சைகள் வளைந்து காணப்பட்டன.  சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் வந்த அவன், பொதுவாக யாரையும் கேட்காமல், "ஹே, ஹே! யாரது அங்கே! சத்திரம் இது தானா? நாம் தங்க வேண்டிய இடம் இது தானா?" என்று கேட்டவண்ணம் உரத்துச் சிரித்தபடி சத்திரத்துக்குள் நுழைந்தான்.

கூடத்திற்கு வந்தவன் மேலிருந்து தொங்கும் தூக்குக்கயிறையும் அதில் வல்லபனை ஏற்றிவிடத் தயாராக இருந்த கணபதி என்னும் வீரனையும், அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வீரர் தலைவனையும் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டவன் போல் பாசாங்கு செய்து கொண்டு, "இதென்ன, இந்தச் சிறுவனைத் தூக்கில் போடப் போகிறீர்களா? இப்படி ஒரு காரியத்தை நீங்கள் செய்யலாமா?" என்று வீரர் தலைவனை ஏற்கெனவே அறிந்தவன் போல் மிக உரிமை எடுத்துக் கொண்டு கேட்டான். வீரர் தலைவனுக்கு அவன் வந்ததே பிடிக்கவில்லை. அதோடு இல்லாமல் சத்திரத்துக்குள்ளும் தங்க வந்தது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. இப்போது இந்தக் கேள்வியை எல்லாம் கேட்க இவன் யார் என நினைத்தவண்ணம், முகத்தில் வெற்றுச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வல்லபனும் அவன் நண்பன் காலதத்தன் என்பவனும் அவர்களுடைய உடைமைகள், விலைபெற்ற பொருட்களை எல்லாம் திருடிவிட்டதாகச் சொன்னான். உடனேயே அந்த ஆஜானுபாகுவான மனிதன் வீரர் தலைவன் பக்கம் சேர்ந்து கொண்டான். "ஆம், ஆம்! இப்படியான திருடர்களுக்கெல்லாம் இதுதான் தண்டனை. தக்க தண்டனை கொடுத்தீர்கள்!" என்று வீரர் தலைவன் பக்கம் பேசினான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த வல்லபனுக்குக் கோபம் கொந்தளித்தது. "இல்லை, இல்லை! நாங்கள் எதையும் திருடவே இல்லை. இந்த வீரர் தலைவர் பொய் சொல்கிறார். உங்களை எல்லாம் போல் நாங்களும் இங்கே சத்திரத்தில் இரவைக் கழிக்கத் தான் வந்தோம். ஆனால் இவர் எங்கள் மேல் அநியாயமாய்ப் பழி போடுவதோடு இல்லாமல் என்னைக் கொலை செய்யவும் துணிந்து விட்டார். என் நண்பன் போன இடமும் தெரியவில்லை!" என்று ஆவேசமாகக் கூறினான். உடனே புதிதாக வந்த அந்த ஆள் வல்லபன் பக்கம் சேர்ந்து விட்டான். "ஆஹா! இவன் திருடவே இல்லையா? அநியாயம்! அநியாயம்! நீங்கள் எப்படி இவனைத் தூக்கில் போடலாம்? இவன் தான் திருடவே இல்லையே!" என வீரர் தலைவன் மேல் பாய்ந்தான். வீரர் தலைவனுக்கு ஆத்திரம் மேலிட்டது. முதலில் தன் பக்கம் பேசியவன் இப்போது வல்லபன் பக்கம் பேசுகிறானே என நினைத்தவண்ணம், "ஐயா, நீதிமானே! இந்த இளைஞன் சொல்வதைக் கேட்டதும் அவன் பக்கம் சாய்ந்து விட்டீரே! இவன் எதையும் திருடவில்லை எனில் ஏன் கூடத்தில் இருந்த விளக்கை அணைக்கவேண்டும்? அதைக் கேளுங்கள் இவனிடம்!" என்று கோபமாகக் கூறினான்.

Saturday, July 06, 2019

இருளில் ஓர் சப்தம்!

வல்லபனுக்குக் கண்ணீர் ததும்பியது. இந்த நேரம் பார்த்து தத்தன் போன இடம் தெரியவில்லையே! நாம் ஒன்றுமே சொல்லாதபோது, எதுவுமே செய்யாத போது தூக்குத் தண்டனை வழங்குகிறானே இந்த வீரர் தலைவன். இதை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லையா? என்றெல்லாம் யோசித்து மனதைக் குழப்பிக் கொண்டான். கணபதி என்னும் அந்த வீரனோ உத்திரத்தில் இருந்து கயிற்றைக் கட்டித் தொங்கவிடும் பணியில் மும்முரமாக இருந்தான். அதைப் பார்த்த வல்லபனின் நெஞ்சம் மேலும் கலங்கியது. தத்தனை மீண்டும் காணாமலேயே தான் இறக்கப் போகிறோம் என்பதை நினைத்து அவன் மனம் விம்மியது. இனி என்ன செய்வோம் என்று குழப்பத்தில் ஆழ்ந்தான். அவன் மனக்கண்ணில் வாசந்திகாவின் சோகமான முகம் நினைவில் வந்தது. ஆஹா! தன் தாய் தான் தன்னிடம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள்? தகப்பன் விட்டுச் சென்ற பணியை முடிக்கத் தானே என்னை அனுப்பி வைத்தாள். ஆனால் நானோ பாதி தூரம் கூடச் செல்லவில்லை. அதற்குள்ளாக உயிரை இழக்கப் போகிறேன். அம்மா, அம்மா! என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையை எல்லாம் நான் மோசம் செய்துவிட்டேனே! நீங்கள் எனக்குக் கொடுத்திருந்த எச்சரிக்கைகளையும் மீறி விட்டேனே! உங்கள் புத்திமதியைப் பின்பற்றி இருந்தேனானால் இத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டிருக்காதே! என்றெல்லாம் மனதுக்குள்ளேயே புலம்பினான் வல்லபன்.

அதற்குள்ளாக எங்கிருந்தோ ஓர் ஏணியைக் கொண்டு வந்த அந்த வீரன் உத்திரத்தில் கெட்டியான ஒரு கயிற்றைக் கட்டி அதில் கீழே தொங்கும் இடத்தில் நல்ல கனமான சுருக்கையும் போட்டு முடித்தான். வல்லபன் அருகே வந்து அவனைப் பார்த்து, "ம், நட முன்னால்!" என்று சொல்லியவண்ணம் அவனை நடத்தினான். அவனைப் பிணைத்திருந்த கயிற்றையும் அவிழ்த்துவிட்டான். வல்லபன் தன் நிலையை நினைத்துக் கண்ணீர் சொரிந்தான். தலையை நிமிர்த்தி எங்கானும் தத்தன் தென்படுகிறானா என அங்குமிங்கும் பார்த்தபோது முன்னர் பார்த்த சாளரத்தின் வழியாக அந்த இளம்பெண்ணின் முகம் பயத்தில் வெளிறிக் காணப்பட்டது. ஆஹா! இத்தகையதொரு பெண்ணின் முன்னால் அல்லவோ எனக்கு இந்த துர்க்கதி ஏற்பட்டு விட்டது வீரமில்லாதவன் என்றல்லவோ அந்தப் பெண் என்னை நினைத்திருப்பாள்? இதிலிருந்து தப்ப வழி தெரியாமல் மரணத்தை அல்லவோ நாம் இப்போது ஏற்கப் போகிறோம். இவ்வாறெல்லாம் எண்ணிய வல்லபன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பின்னர் ஏதோ தோன்றியவனாக வீரர் தலைவனைப் பார்த்தான்.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம், தான் எந்தத் தவறும் செய்யாதிருக்கையில் தனக்கு இத்தகைய மரண தண்டனை விதிப்பது அபாண்டம் என்றும் தன்னை விடுவிக்குமாறும் கேட்டான். அதற்கு அந்த வீரர் தலைவன் அவன் ஒரு குற்றம் மட்டும் செய்யவில்லை. பல குற்றங்கள் செய்திருப்பதாகச் சொன்னான். சத்திரத்துக்குள் வந்ததே தப்பு என்றும் அப்படி வந்ததும் அல்லாமல் விளக்கையும் அணைத்துவிட்டு அவர்களுடன் போரிட முயன்றது இன்னொரு குற்றம் என வரிசையாக அவன் குற்றங்களை அடுக்கினான். இதற்காகத் தனக்கு மரண தண்டனையா கொடுக்க வேண்டும் என வல்லபன் மீண்டும் கேட்டான். அவனை வெறுப்புடன் பார்த்தான் வீரர் தலைவன். இங்கே நீதி, நியாயம், நேர்மைக்கு எல்லாம் இடமும் இல்லை. அது பேசும் சமயமும் இதுவல்ல என்ற வீரர் தலைவன் கணபதி என்னும் அந்த வீரனுக்கு மீண்டும் ஜாடை காட்டி வல்லபனை இழுத்துப் போகச் சொன்னான். வல்லபன் என்ன நினைத்தானோ தான் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுக் கீழே அமர்ந்து கொண்டு கூரத்தாழ்வார் அருளிச் செய்த சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான்.

வீரர் தலைவனுக்கு ஆத்திரம் பொங்கியது. இதெல்லாம் என்ன நாடகம் எனக் கூறிக்கொண்டு அவன் வல்லபன் மேல் பாய்ந்தான். அவன் தலைமுடியைப் பிடித்து உலுக்கி அவனை எழுப்பப் பார்த்தான். அப்போது வாயிலுக்குச் சற்றுத் தொலைவில் இருந்து ஏதோ விசித்திரமான சப்தம் எழுந்தது. "கூவேகூ" என்று ஏதோ கூவிய மாதிரிக் கேட்டது. ஆனால் குரல் மனிதக் குரல் மாதிரி இல்லாமல் அமானுஷ்யமாகத் தொனித்தது. வீரர் தலைவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதுவும் அந்தக் குரல், அந்தச் சப்தம் அந்தப் பிரதேசம் முழுதும் பரவி எதிரொலிக்கவும் செய்தது. என்ன விபரீதமோ எனக் கலங்கிவிட்டான் வீரர் தலைவன். மற்ற வீரர்களும் அந்த சப்தத்தைக் கேட்டுவிட்டு அங்கே வர அனைவரும் வெளி வாயிலையே பார்த்தார்கள்.

Friday, July 05, 2019

வல்லபனுக்குத் தூக்கு!

திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் அரண்டு போன வல்லபன் தான் இருந்த அறையின் சாளரத்தின் வழியாக வந்த வெளிச்சமே அது என்பதையும் அவர்கள் கூடத்திலே தான் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் சற்றுத் தாமதமாகவே புரிந்து கொண்டான். கூடத்தில் வீரர் தலைவன் அவர்கள் இருவரையும் பிடிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டு அந்தச் சுளுந்துகளின் வெளிச்சத்தில் தங்களைத் தேடியதையும் வீரர் தலைவனின் கூவலில் இருந்து வல்லபனுக்குப் புரிந்தது. தத்தன் எந்தப் பக்கம் போனானோ தெரியவில்லை. தனக்குத் தெரிந்த அரைகுறை வெளிச்சத்தில் அறைக்குள் நோட்டம் விட்ட வல்லபன் தான் இரும்புச் சங்கிலி ஒன்று நீளமாகப் பிணைத்திருப்பதைத் தொடர்ந்து வந்திருப்பதை உணர்ந்தான். அது பிணைத்திருந்தது ஓர் அழகான பாதத்தில் என்பதை உணர்ந்து கொண்டு தரையில் மண்டியிட்ட வண்ணம் அமர்ந்திருந்த வல்லபன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முன்னே மஞ்சத்தில் அபலையாக ஓர் இளம்பெண் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளது பாதத்தைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியைத் தான் தொட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதையும் உணர்ந்து கொண்டான்.

அவன் பார்வை அந்தப் பெண்ணின் முகத்தையே ஆராயும் நோக்கத்தில் பார்த்தது. ஆனால் அவள் அழகில் வல்லபன் நிலை குலைந்து போய்விட்டான். நீண்ட அவள் விழிகளில் அவனை எதிர்பாராமல் அங்கே கண்டதனால் ஏற்பட்ட திகைப்பு, பிரமிப்பு ஆகியவற்றோடு தலைவன் கண்களில் பட்டுவிட்டால் அவன் கதி என்னவோ என்னும் இரக்கமும் ததும்பிக் கொண்டிருந்தது. வல்லபன் அப்படியே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணும் ஏதும் பேசவில்லை. அவனைப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஏற்பட்ட மந்தகாசம் சற்றும் மறையவில்லை. அதற்குள்ளாக அந்த அறைக்குள்ளும் ஓர் சேவகன்  சுளுந்தை எடுத்துக் கொண்டு நுழைந்துவிட்டான். அவனுடனேயே வீரர் தலைவனும் நுழைந்து விட்டான். வல்லபனை அங்கே கண்டதும், "அற்பப் பதரே! எழுந்திரு!" என்று கூவிக் கொண்டே வீரர் தலைவன் வாளை உருவி ஓங்கினான். வல்லபன் கழுத்தைக் குறி பார்த்தது அந்த வாள்.

அந்தப் பெண்ணின் வதனமோ சற்றும் எந்தவிதமான மாறுபாட்டையும் காட்டாமல் இருந்தது. அவள் தன் நீண்ட கண்களினால் வீரர் தலைவனைப் பார்த்துவிட்டுப் பின்னர் வல்லபனையும் பார்த்தாள். எல்லையற்ற கருணையும் இரக்கமும் அவள் கண்களில் தெரிந்தன. வல்லபன் தன்னை இழந்தான். அவன் மனதில் ஏனோ இனம் தெரியாததொரு குதூகலம் தோன்றியது. இவளிடம் பேசி என்னவெல்லாமோ தெரிந்து கொள்ள வேண்டும்; இவளை இந்த வீரர் தலைவன் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என என்னவெல்லாமோ யோசித்த வல்லபன் திடுக்கிடும்படியாக வீரர் தலைவன் மீண்டும் கூவினான்.  "அற்பப் பதரே! தப்பவா பார்த்தாய்? என்னிடமிருந்து தப்ப முடியுமா?" என்றுகூவிக் கொண்டே வல்லபனைத் தன் வாள் நுனியால் தொட்டுத் தள்ளிக் கொண்டே கூடத்துக்கு இழுத்துச் சென்று அங்கே ஒரு தூணில் வல்லபனைப் பிணைத்துக் கட்டினான்.

"எங்கேயடா அந்த இன்னொருவன்? வாசாலகமாகப் பேசுவானே! இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டான்? தேடுங்கள் அவனையும்! பிடித்து இழுத்து வாருங்கள்!"என்று வீரர் தலைவன் தன்னுடன் இருந்த வீரர்களிடம் ஆணையிட இரு சேவகர்கள் தத்தனைத் தேடிச் சென்றனர். சத்திரம் முழுமையும் தேடினார்கள். சமையலறை, மச்சில்,கூடம், பாவுள் (உள்பக்கம் உள்ள அறை), உக்கிராண அறை (மளிகை சாமான்கள், காய்கறிகள், பால் போன்றவை வைத்திருக்கும் அறை), மேலே உள்ள பரண்கள், நெல் குதிர்கள் என ஒன்றையும் விடவில்லை. தத்தன் போன இடம் தெரியவில்லை.  தலைவனுக்குக் கோபம் அதிகம் ஆனது. வல்லபனிடம், "எங்கே சென்றான் உன் நண்பன்?" எனக்கோபமாகக் கேட்க வல்லபன் தனக்குத் தெரியாது என்று சொன்னான். ஆனால் வீரர் தலைவன் அதை நம்பவில்லை. வல்லபனை ஏசினான். பின்னர் மீண்டும் அந்த கணபதி என்பவனைக் கூப்பிட்டான். வல்லபனைத் துண்டாக வெட்டிப் போடச் சொன்னான். "இந்த இளைஞனைச் சிரச்சேதம் செய்து விடு!" என்று கோபமாக ஆணையிட்டான். 

அதைச் சத்திரத்து அறையினுள் இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த பெண் கேட்டிருக்க வேண்டும். சற்றே அசைந்து கொடுத்தாள் போலும். அந்த இரும்புச் சங்கிலிகள் அசைந்து சப்தம் கொடுத்தன. அதே சமயம் மழைக்காலத்தின் ஊதல் காற்றும் சத்திரத்துக் கூடத்துக்குள் புகுந்தது. வீரர் தலைவன் கணபதியைப் பார்த்து, "சீக்கிரம்!" என்றவன் என்ன நினைத்தானோ, "இரு! கணபதி! இவனை இப்படியே இரண்டு துண்டாக வெட்டி விட்டால் சரியாக வராது! அதோ அவனை அங்கே தூக்கில் போடு! தூக்கில் தொங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக இவன் இறக்கட்டும். அவன் நண்பன் எங்கிருந்தாவது வந்து இதைப் பார்த்துக் கொஞ்சமானும் விவேகமும், புத்தியும் அடைவான்! இது தான் இவனுக்குச் சரி!" என்று சொல்லிவிட்டு உத்திரத்தை ஆராய்ந்து ஓர் இடத்தைக் காட்டி அங்கே கயிற்றைக் கட்டுமாறு ஆணையிட்டான்.

Thursday, July 04, 2019

வல்லபன் நிலை என்ன?

ஒன்றும் புரியாமல் விழித்த வல்லபனை ஜாடை காட்டிக் கீழே அமர்த்திய காலதத்தன் தன் கால் விரல்களால் வல்லபன் பாதத்தைத் தொடும்படி அமர்ந்து கொண்டு வல்லபனை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினான். பின்னர் தன்னுடைய மூட்டையிலிருந்து ஏட்டுக்கட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு விளக்கடியில் வைத்துக் கொண்டு அதைப் படிக்க ஆரம்பித்தான். வீரர் தலைவன் நக்கலாகச் சிரித்தான். "என்ன மந்திரம் அது தம்பி?" என்று கேட்டுக்கொண்டு வீரர் தலைவன் காலதத்தன் அருகே வந்தான். அதற்குக் காலதத்தன் வீரர் தலைவனைப் பார்த்துத் தாங்கள் இருவரும் ஜோசியர்கள் எனவும் ஆரூடம் பார்த்துச் சொல்லுவார்கள் எனவும் இன்றிரவு அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று சாத்திர ரீதியாகத் தெரிந்து கொள்ளப் பார்ப்பதாகவும் சொன்னான். ஆனால் வீரர் தலைவன் மிகவும் கெட்டிக்காரனாகவும் தந்திரக்காரனாகவும் இருந்தான்.அதைப் புரிந்து கொண்ட காலதத்தன் அருகே இருந்த குத்துவிளக்கைத் தன் காலால் இடறுவது போல் போக்குக் காட்டி விளக்கைக் கீழே தள்ளி அணைத்து அறையை முற்றிலும் இருட்டாக்கி விட்டான்.

எங்கும் இருள் படர்ந்தது. அவ்வளவு பெரிய சத்திரத்தில் ஒளி கொடுத்துக் கொண்டிருந்த ஒரே விளக்கு அணைந்ததும் தடுமாறிய வீரர் தலைவனைப் பிடித்துத் தள்ளினான் காலதத்தன். வல்லபனின் கைகளைப் பற்றி இழுத்த வண்ணம் சத்திரத்து வாயிலை நோக்கி ஓடினான். கீழே விழுந்த வீரர் தலைவன் செய்வதறியாது திகைத்தாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு கதவருகில் காவலாக நின்றிருந்த கணபதி என்னும் வீரனைக் கதவைத் திறக்க விடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் இருவரையும் பிடிக்கும்படியும் ஆணையிட்டான். கணபதி என்ற அந்த வீரன் தன் வாளை வெகு வேகமாகச் சுழற்றினான். அதற்குள்ளாகத் தலைவன் எழுந்து கொண்டு தன் வாளை அங்கும் இங்குமாகச் சுழற்றிக்கொண்டு கூடத்தில் அங்குமிங்கும் ஓடி இளைஞர்களைத் தேடினான். எவரும் கிடைக்காமல் சோர்ந்து போனவன் வெளியே வெளிச்சத்தில் இருக்கும் காவலனை அழைத்துச் சுளுந்து கொளுத்திக் கொண்டு வரும்படி ஆணை இட்டான். 

வெளியே இருந்தவன் தன் கைகளில் வன்னிக்கட்டையை எடுத்துக் கொண்டு கடைந்து நெருப்பை உண்டாக்க ஆரம்பித்தான். ஐப்பசி மாத மழை நாள் என்பதால் அந்தக் கட்டை எளிதில் தீப்பொறியை உண்டாக்கவில்லை. ஆகவே ஊருக்குள் சென்று யார் வீட்டிலானும் நெருப்பை வாங்கி வரலாம்னு அந்தக் காவலன் ஓடினான். இதற்குள்ளாகத் தடுமாறித் தடுமாறி வெளியே வந்திருந்த வீரர் தலைவன் அந்த இளைஞர்களை உடனே இங்கே வந்துவிடுங்கள். கொன்றுவிடுகிறேன் உங்களை என்றெல்லாம் கத்த ஆரம்பித்தான். இங்கே வல்லபனும் தத்தனும் கூடியவரை மூச்சுக்காற்றுக் கூட வெளிவராமல் நடந்தனர். வாயில் கதவருகே ஒருவருக்கு இருவர் இப்போது நிற்பதால் அந்த வழியே வெளியேறுவது ஆபத்து என்பது புரிந்து விட்டது. ஆகவே புழக்கடைப்பக்கம் சென்றால் அங்கே வெளியேறும் கதவு ஏதேனும் இருக்கும் என்னும் எண்ணத்துடன் பின்புறம் செல்லும் வழியைக் குறி வைத்து நடந்தார்கள். ஆனால் அவர்கள் நடக்க நடக்க வழி நீண்டுகொண்டே போனது. எங்கே போனாலும் கும்மிருட்டுத் தான்! வெளிச்சக்கீற்றே காண முடியவில்லை.எந்தத் திசையில் செல்கிறார்கள் என்பதையும் அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. 

சீக்கிரம் ஏதேனும் செய்தால் தான் அந்த வீரர் தலைவன் பிடியிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே மெல்ல மெல்ல நகர்ந்து சுவரைக் கண்டு பிடித்து அதைத் துழாவிக் கொண்டு சென்றனர். சுவர் நடுவே ஓர் இடைவெளி காணப்படவே அதன் வழியே இருவரும் வெளியேறினார்கள். ஆனால் அது போகும் இடம் புரியவில்லை.  இது என்ன தாழ்வாரமா? அருகே எங்கானும் அறைகள் இருக்குமா? ஒன்றுமே புரியவில்லை.  கொஞ்ச தூரத்தில் சுவர் இரண்டாகப் பிரிந்தது. இருவரும் தயங்கி நின்றார்கள்.  இருவரும் அவசரமாக ஆலோசனை செய்து விட்டு நூறு எண்ணிக் கொண்டே ஆளுக்கு ஒரு திசையில் செல்ல வேண்டும் எனவும், மறுபடி நூறு எண்ணும்போது திரும்பி இதே இடத்துக்கு இருவரும் வர வேண்டும் எனவும் பேசிக் கொண்டார்கள்.  நூறு எண்ணிக் கொண்டே இருவரும் தத்தம் திசைகளில் சென்றனர்.  வல்லபன் சென்ற திசையில் அவன் தொண்ணூற்று எட்டு எண்ணும்போது அவன் நாசியில் மகிழம்பூ மணத்தது. அவன் மனம் சிலிர்த்தது. கூண்டு வண்டியில் இருந்த இளம்பெண்ணிடம் கூட இந்த வாசனை தானே வந்தது என நினைத்தான். அதற்குள்ளாக அவனுக்கு எண்ணிக்கை விட்டுப் போய் விட்டது.

குனிந்து கீழே தடவிப் பார்த்தால் கைகளில் இரும்புச் சங்கிலி நெருடியது. அதைத் தடவிய வண்ணம் போனான். சங்கிலியின் கண்ணிகள் மேலே மேலே போய்க் கொண்டிருந்தன. அதைத் தடவிய வண்ணம் அவன் கீழே ஊர்ந்தான். முடிவில் அவன் கைகளில் மிக மிக மிருதுவான தாமரைப் பூவின் ஸ்பரிசம் பட்டது. ஆனால் என்ன ஆச்சரியம்! அந்தத் தாமரை வாய் திறந்து பேசியது! "யாரது?" என மெல்லிய சீறலாகக் கேட்டது அந்தக் குரல். வல்லபன் மறுமொழி சொல்ல ஆரம்பிக்கையில் கூடத்தில் ஏதேதோ சப்தங்கள்! கதவு திறக்கும் சப்தங்கள், காலடி ஓசைகள்! திடீரென சத்திரம் பிரகாசமாக ஒளிர்ந்தது.அறைகள் அனைத்திலும் பளீரென வெளிச்சம் பரவிப் பாய்ந்தன. ஓர் வீரன் கையில் ஓர் சுளுந்தைத் தூக்கிக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து விட்டான்.

Tuesday, July 02, 2019

காரிகை பாடலும் காலதத்தன் புரிதலும்!

அடுத்தடுத்து இரு பாடல்களைப் பாடினாள் அந்தப் பெண். அந்த இரண்டுமே நம்மாழ்வாரின் பாசுரங்கள்.  "குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்!" என அவள் பாடி முடித்ததும் நீண்ட பெருமூச்சு விட்டான் வல்லபன். சற்று நேரம் வரை அவள் குரல் அங்கேயே ரீங்காரம் இட்ட வண்ணம் இருந்தாற்போல் தோன்றியது அவனுக்கு.  தன்னை மறந்து நின்ற அவனைத் தோளில் கைவைத்து உலுக்கி நினைவுக்குக் கொண்டு வந்தான் காலதத்தன். வல்லபன் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான். ஆகவே தத்தனிடம், "தத்தா, அந்தப் பெண்ணின் குரல் இனிமையைக் கேட்டாயா? எத்தனை அழகாய்ப் பண்ணமைத்துப் பாடினாள்! பார்த்தாய் அல்லவா? பாடலைக் கேட்டாய் அல்லவா?" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் வினவினான். தத்தனோ அவனைப் பார்த்துக் கடும் பார்வையால் விழித்தான். அவன் காதோடு நெருங்கி, "வல்லபா! பாசுரங்களின் பொருளை உணர்ந்தாயா? பாடலின் இனிமையை மட்டும் ரசித்தாயா? முதலில் பாசுரங்களின் உட்பொருளை என்னவென்று உணர்ந்து கொள்!" என்றான்.

வல்லபனுக்கு ஏதும் புரியவில்லை. "தூதுரைத்தல் செப்புமின்கள்! தூமொழிவாய் வண்டினங்காள்!" என்னும் அடியை அவள் எத்தனை முறை பாடினாள் என்பதைக் கவனித்தாயா?" என்றான் காலதத்தன். "ஆஹா! கவனித்தேன்! அதனால் என்ன! எத்தனை அழகாய்ப் பாடினாள்! என்ன இனிமை! என்ன அழகு!" என்று ரசித்தான் வல்லபன். தத்தன் அவனைப் பார்த்து மீண்டும் விழித்தான். "வல்லபா! வல்லபா! அந்தப் பெண் மீண்டும் மீண்டும் அதே அடிகளைப் பாடியதன் காரணம் இன்னமுமா உனக்குப் புரியவில்லை! அந்தக் குரலில் அழுகை கலந்த விண்ணப்பம் உனக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டான். "அழுகையா?" என்று வியப்புடன் தத்தனைப் பார்த்தான் வல்லபன். "ஆம்! வல்லபா! அந்தப் பெண் இந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை அதிலும் இந்தக் குறிப்பிட்ட அடிகளை மீண்டும், மீண்டும் பாடியதன் மூலம் நம்மிருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறாள்!" என்றான்.

வல்லபன் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். "விண்ணப்பமா? என்ன விண்ணப்பம்?" என்று கேட்டான். "தூதுரைத்தல் செப்புமின்! என்றாள் அல்லவா? நம்மை அவளுக்காக தூது போகச் சொல்லுகிறாள்!" என்றான் தத்தன். வல்லபன் ஆச்சரியம் எல்லை மீறியது!"தூது போக வேண்டுமா? நாமா? எங்கு? யாரிடம்?" எனக் கேட்க, தத்தன், "என்னாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாசுரத்தில் அதற்கான விடை இருக்கிறது. நுட்பமாக யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அதற்கு நேரம் இல்லை. ஏனெனில் நாம் இங்கிருந்து உடனே புறப்பட்டு விடவேண்டும். ஏதோ மர்மமாக நடக்கிறது இங்கு. நாம் அதில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வல்லபா, கிளம்பு சீக்கிரமாய்!" என்றான் தத்தன்.

வல்லபன் மேலே பேச இடம் கொடுக்காமல் தத்தன் அவன் கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு நடந்தான். இருவரும் வாயிலை நோக்கிச் செல்லுகையில், யாரோ, "தம்பிகளே!" என இருவரையும் கூப்பிடும் குரல் கேட்டது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கச் சத்திரத்துக்கு உள்ளே இருந்த குச்சு ஒன்றில் இருந்த அவர்கள் முன்னர் பார்த்த வீரர் தலைவன், அந்தக் கதவைத் திறந்து கொண்டு இருவரையும் பார்த்துச் சிரித்த வண்ணம் நின்றான். இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க, "தம்பிகளே! நீங்கள் இருவரும் விருந்தினர்கள் அல்லவோ? உணவு அருந்தாமல் சற்று நேரமாவது களைப்பாறாமல் நீங்கள் இங்கிருந்து செல்ல முடியுமா?" என்று கேட்டுக் கொண்டு அவர்களை நெருங்க எங்கிருந்தோ வந்த இன்னொரு வீரன் அவர்களுக்குப் பின்னால் தெரிந்த வாயில் கதவை இழுத்து மூடித் தாளிட்டு விட்டுக் காவலாக நின்றும் கொண்டான்.

உள்ளூரக் கலக்கம் அடைந்தாலும் காலதத்தன் முகத்தில் அதைக் காட்டவில்லை. சிரிப்புடன் வீரர் தலைவனைப் பார்த்தான். "அடடா! நீங்கள் இங்கே தான் இன்னமும் இருக்கிறீர்களா? மிக நல்லதாய்ப் போயிற்று! இங்கே யாரையுமே காணோமே! ஏதேனும் பேய் வீடோ எனப் பயந்து விட்டோம்! ஒருத்தரையுமே இங்கே காணோமே! சத்திரத்தில் மடப்பள்ளி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லையே! என்றெல்லாம் குழம்பி விட்டோம். சத்திரத்து மணியக்காரர் இருக்கிறாரா இங்கே? இங்கே கட்டளை போஜனம் கிடைக்குமா? அல்லது பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டுமா? எதுவுமே தெரியவில்லையே?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளைக் கேட்டு வீரர் தலைவனைத் திணற அடித்தான் காலதத்தன். பிறகு வல்லபனையும் பார்த்து, "நான் சொன்னேன் அல்லவா? இங்கே எப்படியேனும் உணவு கிடைக்கும் என்று. சற்று இப்படி உட்கார்! சற்று நேரத்தில் பசியாறலாம்." என்று சொல்லியவண்ணம் வல்லபனை வலுக்கட்டாயமாகக் கீழே உட்கார்த்தினான்.