எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 28, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 4

இங்கே ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேண்டுகோள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஏன் தாமிரபரணிக்கரையிலே சேர்த்தீங்கனு கள்ளபிரான் கேட்கிறார். எங்களோட திருநெல்வேலிப் பயணத்திலே அதுவும் அடங்கினது அவ்வளவே. மேலும் குழுமங்களில் இட ஒரே இழையாக இருப்பது வசதி, தலைப்பை மாற்றவேண்டாம் என்பதே காரணம். மேலும் ஆண்டாள் பிறந்த வீடான ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லித் திருநாள் பொங்கலன்றே நடைபெறுகிறது. அன்றே மூட நெய் பெய்து முழங்கை வழிவார அக்காரவடிசில் சமைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப் படும். (இப்போத் தெரியாதுங்கோ) இங்கே ஆண்டாள் கனுவன்று பிறந்தவீட்டுக்குச் சாப்பிடச் சென்றுவிடுவாள். :D திருமலை நாயக்கர் காலத்திலும் , ராணி மங்கம்மாள் காலத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த இவ்வூர் அப்போது மதுரைமாவட்டத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. அதற்குப் பின்னர் நெற்கட்டுச் சேவலின் ஜமீந்தாரான பூலித்தேவரிடம் இதன் பொறுப்பும், கோயிலின் பொறுப்பும் சில காலம் இருந்து பின்னர் யூசுப்கான் என்றழைக்கப் பட்ட கான்சாகிபிடம் சென்றது. அதன் பின்னர் சுதந்திரம் வரைக்கும் ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குச் சற்று முன்பாக திருவாங்கூர் அரச வம்சத்தினர் கோயிலின் பொறுப்பை மேற்கொண்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த இந்த ஊர் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப் பட்டு அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தோடு சேர்க்கப் பட்டது. இவ்விதம் பல்வகைகளிலும் அல்லாடி வந்த இந்த ஊரானது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

ரயில் மூலம் செல்வதென்றால் தென்காசிக்குச் செல்லும் ரயில்பாதையில் இந்த ஊர் வரும்னு சொல்றாங்க. நாங்க திருநெல்வேலியைத் தலைமையாகக் கொண்டே சுற்றியதால் திருநெல்வேலியில் இருந்தே சென்றோம். சாலைப்பயணத்திலும் தென்காசி செல்ல இது உகந்தது என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டே அங்கிருந்து தென்காசியும் சென்றோம். சாலைவழி இணைப்பு மதுரை,திருநெல்வேலி, சிவகாசி, சாத்தூர் போன்ற ஊர்களோடு இணைத்துள்ளதால் சாலைப்பிரயாணமும் நன்றாகவே இருக்கிறது. மதுரையில் இருந்து இங்கே தினமும் வந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். மதுரையில் இருந்து மூன்றுமணி நேரச் சாலைப்பயணம் இருக்கலாம். மேலும் நூபுரகங்கை பற்றி முத்துச்சாமி கேட்டிருக்கிறார். இங்கே தவிர நூபுரகங்கை மதுரைக்கருகே உள்ள அழகர் கோயிலில் உள்ளது. அங்கே ஓடுவது சிலம்பாறு. வாமன அவதாரத்தின்போது பெருமாள் எடுத்த திரிவிக்கிரம அவதாரத்தின் ஒரு கால் விண்ணைத் தொடவும், தேவாதிதேவர்களெல்லாம் எம்பெருமானின் திருவடிகளுக்கு நன்னீரால் அபிஷேஹ ஆராதனைகள் செய்ய, அப்போது அவர் சிலம்பில் பட்டுத் தெறித்த நீரே இங்கே உள்ள நூபுரகங்கையில் இருந்து சிலம்பாறாக மாறி வருகிறது என்றொரு புராணக்கதையும் இந்தத் தீர்த்தத்துக்கு உண்டு. நூபுரம் என்றால் சிலம்பு என்று அர்த்தம் அல்லவோ?? அப்பாடா, ஒருவழியா அழகர்கோயிலையும், ஸ்ரீவில்லிபுத்தூரையும், கீழே காட்டழகரையும் இணைத்து எழுதிட்டேன். கள்ளபிரான், இது எப்படி இருக்கு?? :P:P:P:P

இதைத் தவிர ஒரு காட்டழகரும் இருக்கிறார். இவர்தான் முதலிலே அழகர் ஆற்றிலே இறங்கும் திருவிழாவை நடத்தி வந்ததாகவும், இவர் காட்டிலே இன்னமும் இருப்பதாலும், நெருங்க முடியாமல் இருப்பதாலும் அதைத் திருமலை நாயக்கர் மாற்றி மதுரைக்குக் கொண்டு போனதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை மதுரையில் சொல்லுவதுண்டு. இந்தக் காட்டழகர் இன்னமும் காட்டிலேதான் குடி கொண்டிருக்கிறார். இங்கேயும் ஒரு நூபுரகங்கை இருப்பதாய்க் கேள்வி. ராஜபாளையம் ராஜா வம்சத்தினருக்குக் குலதெய்வம் எனக் கேள்வி. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே உள்ள ஒரு மலைத் தொடரிலே அமைந்திருக்கும் இந்தக் காட்டழகர் கோயில் உள்ள மலையை எங்கள் வண்டி ஓட்டுநர் எங்களுக்குக் காட்டினார். புரட்டாசி சனிக்கிழமைகளில் மேலே காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டமாய்ச் செல்வதுண்டு என்றும் சொன்னார். கூட்டமாய்த் தான் செல்லவேண்டும், என்றும் இன்றும் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு என்றும், அந்தக் கோயில் யானைகள் நுழையமுடியாதபடிக் கட்டப் பட்டிருக்கும் என்றும் சொன்னார். ஆசைதான் தாசில் பண்ண! ஆனால் முடியலை! அங்கே போகலை, தனியாகச் செல்லமுடியாது என்பதால்.

அடுத்து வருவதும் இதே தலைப்பில் தான், சங்கரன் கோயில். கொஞ்சம் காத்திருங்க.

Tuesday, December 22, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!


இரட்டைக் கோயில்களாக அமைந்துள்ள இந்தக் கோயில்களில் முதலில் நாம் காணப் போவது ஆண்டாள் கோயில். பெரியாழ்வாரும்,ஆண்டாளும் வாழ்ந்த வீட்டையே பின்னாட்களில் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவர் திருக்கோயிலாக மாற்றி உள்ளார். கல்வெட்டுத் தகவல் இதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றனர். இரட்டைக் கோயிலாக அமைந்துள்ள இந்தக் கோயிலின் வட கிழக்கிலேதான் வடபத்ரசாயிக்குக் கோயில் உள்ளது. மேற்கே ஆண்டாள் கோயில், இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலே பெரியாழ்வாரின் நந்தவனம் இன்னும் மலர்கள் அளித்துவருகிறது. இங்கேயும் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. இங்கே உள்ள துளசிமாடத்தில் ஆண்டாளின் சிற்பமும் வடித்திருக்கின்றனர். நந்தவனம் காலை வேளை சென்றால் மட்டுமே காணலாம் என எண்ணுகிறேன். முதலில் காணப்படுவதைப் பந்தல் மண்டபம் என்கின்றனர். அதைத் தாண்டிய கல்யாண மண்டபத்தில் நாயக்கர் காலத்திய ராமாயண ஓவியங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பார்க்கமுடியலை. ஓவியங்கள் அழியும் நிலைமையில் உள்ளன என்றும் கேள்விப் பட்டோம். மதுரைப் பொற்றாமரைக்கரையைச் சுற்றி இருந்த ஓவியங்களை அழித்தாற்போல் இவையும் அழியாமல் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. உள் பிரகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் காட்சி அளிப்பதே நம்ம மாதவிப்பந்தல்.(கேஆரெஸ்ஸோடது இல்லைங்க, நிஜமான ஆண்டாள் திருப்பாவையில் பாடின மாதவிப் பந்தல்) அடுத்து உள்ள மண்டபத்திலே தான் ஆண்டாள் முகம் பார்த்த தட்டொளி காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது. தான் அணிந்து கொண்ட பூமாலையுடன் ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. கிணறை கண்ணாடிக் கிணறு என அழைக்கின்றனர்.
முதல் பிரகாரத்தைப் பெரியாழ்வாரின் நெஞ்சாகக் கருதினால் இரண்டாம் பிரகாரத்தில் சொர்க்க வாசல் உள்ளது. இங்கே மஹாலக்ஷ்மியும் அநுமனும், கலைமகளும் அருள் பாலிக்கின்றனர். வடக்கே உள்ள கோயிலுக்கும், நந்தவனத்துக்கும் இடையே சக்கரத்தாழ்வாரும் காணப்படுகிறார். சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருந்ததாயும், ஆண்டாளால் சாந்தமடைந்ததாகவும் வரலாறு. இங்கே இருந்த ஆண்டாளும் அந்நியர் படை எடுப்பின் போது கேரளம் சென்று கொஞ்ச காலம் மறைந்து வாழ்ந்திருக்கிறாள். வடபத்ரசாயிக்கு ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமான் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலை எழுப்பியவர்கள் வில்லி என்பவனும்,கண்டன் என்பவனும் ஆவார்கள். இவர்கள் பெயராலேயே வில்லிபுத்தூர் என்னும் பெயரும் இந்த ஊருக்கு ஏற்பட்டது. இந்தத் திருக்கோயிலின் எதிரே நூபுரகங்கை உள்ளது. இதில் எந்தக் கோடையிலும் நீர் வற்றுவதில்லை என்பதோடு நீருக்கான ஆதாரமும் தெரியவில்லை.

Friday, December 18, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 2

திருநெல்வேலிக்காரங்க இணையத்திலே நிறைய இருக்காங்க. எல்லாருமே வந்து அவங்களோட மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக்கறதிலே சந்தோஷம். இங்கே ஆண்டாளை பூமாதேவினு சொன்னதுக்கு நீளாதேவினு திரு தேவ் அவர்கள் சொல்றார். இருக்கலாம். ஆனால் பொதுவாய்ச் சொல்றது பூமியில் கண்டெடுத்ததால் பூமாதேவியே தான் அவதாரம்னும் , இன்னும் சிலர் சாட்சாத் சீதையே ஆண்டாளாகப் பிறவி எடுத்ததாகவும் சொல்கின்றனர். ஆண்டாள் அவதரித்த காலம் முதற்கொண்டு மு.ராகவையங்கார் என்னும் அறிஞர் கூறி உள்ளார். ஆண்டாளின் திருப்பாவையில் வெள்ளி எழுதல் பற்றியும், வியாழன் உறங்குவதுபற்றியும் வருகிறது அல்லவா?

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

அந்த நிகழ்வு எப்போ நடந்தது என ஆராய்ந்து பார்த்து அது நடந்தது எட்டாம் நூற்றாண்டில் எனக் கண்டறிந்து. ஆண்டாள் பிறந்தது கி.பி. 716-ம் ஆண்டு ஆடிப் பூரத்தில் என்றும், அவள் திருப்பாவையைப் பாடிய அந்தக் காலம் கி.பி. 731-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் நாள் அன்று அதிகாலை 3-50 மணியில் இருந்து 4-00 மணிக்குள் இருக்கவேண்டும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள். அந்த நாள் ஒரு பெளர்ணமி நாளாகவும் இருந்திருக்கிறது என்கின்றனர். ஆண்டாளின் வயது அப்போது பதினைந்து என்றும் சொல்கின்றனர்.

இத்தனைச் சிறிய வயதில் இப்படி ஒரு அறிவா என நாம் வியக்கின்றோம். இன்னும் வியந்து கொண்டே இருக்கிறோம். ஆண்டாளின் அறிவில் ஒரு பாதியாவது நமக்கு இருந்தால் போதுமே. ஆண்டாள் என்பதே பொய்யான ஒன்று. பெரியாழ்வாரே தம்மை நாயகி பாவத்தில் வைத்துக் கற்பனை செய்து எழுதிய கவிதைகள் இவை எனவும் ஒரு கூற்று உண்டு. மூதறிஞர் என அனைவராலும் அழைக்கப் படும் ஸ்ரீராஜாஜி அவர்களுக்கு இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் வரையில் ஆண்டாள் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்பார். ஆனாலும் இந்தப் பாக்களையும், ஆண்டாளையும் தமிழ் உள்ளளவும் ந்ம்மால் மறக்க முடியாது. ஆண்டாளின் மனோ தைரியமும், அவள் கண்ணன் மேல் கொண்ட காதலும் வியக்க வைப்பது.



திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!” ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரநக்ஷத்திரத்தில். மிகச் சிறந்த விஷ்ணு பக்தர் ஆன விஷ்ணு சித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ர சாயிக்குப் பூமாலைகளோடு சேர்த்துப் பாமாலைகளும் சமர்ப்பித்து வந்தார். அதுவும் கண்ணனைச் சிறு குழந்தையாகக் கண்ணாரக் கண்டு, மனதிலே தம்மைத் தாயாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் நினைத்து உருகி, உருகிப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூற்றாண்டு” என இறைவனுக்கே பல்லாண்டு கூறும் பெருமையைப் பெற்றவர். அதனாலேயே பெரியாழ்வார் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். ஆண்டவனின் பூமாலைகளுக்கெனத் தனியே ஒரு நந்தவனம் அமைத்து அதில் பல்வேறு வண்ணங்களும், வாசமும் மிக்க மலர்ச்செடிகளை அமைத்து அதிலிருந்து சூரியோதயத்துக்கு முன்னேயே மலர்களைப் பறித்து மாலைகள் ஆக்கி வடபத்ரசாயிக்குச் சூட்டி மகிழ்ந்து வந்தார். அந்த நந்தவனத்தின் ஒரு பக்கம் துளசிச் செடிகள் பயிராக்கப் பட்டு வந்தன. துளசியின் மணம் ஊரையே தூக்கும். ஒருநாள் காலையில் துளசி பத்ரம் பறிக்கச் சென்ற பெரியாழ்வாருக்கு ஒரு குழந்தையின் இனிமையான அழுகுரல் கேட்டது. பிரமையோ என ஒரு கணம் எண்ணிய அவர், பின் தெளிந்து கீழே பார்த்தால் துளசிச் செடிகளின் ஊடே ஒரு அழகான குழந்தை அழுதுகொண்டு இருந்தது.பச்சிளம் பாலகி. அதைக் கையில் தூக்கியதுமே பெண்குழந்தை என அறிந்த பெரியாழ்வார் மனம் மகிழ்ந்து இது நமக்கு இறைவன் கொடுத்த பரிசு. பூமாதேவியே மகளாய் அவதரித்திருக்கிறாள், என எண்ணி வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

கோதை எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார் அந்தக் குழந்தையை. மிக அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்துவந்தார். பெரியாழ்வார் தம் அன்போடும், பாசத்தோடும், அந்தக் குழந்தைக்கு இறை உணர்வையும் சேர்த்தே ஊட்டி வளர்த்தார். அந்தக் குழந்தையோ தகப்பனுக்கு மிஞ்சிய பெண்ணாக வளர்ந்தது. பூமாதேவியோ எனப் பெரியாழ்வார் சந்தேகப் பட்டதை உறுதி செய்யும் வகையில் பிறந்து வளர்ந்து, விபரம் தெரிந்தது முதல் அந்தக் குழந்தை அரங்கன் மேல் இணையற்ற பக்தியும், பாசமும் கொண்டு வளர்ந்து வந்தது. தினமும் ஸ்ரீகிருஷ்ணலீலை குறித்துப் பெரியாழ்வார் அந்தப் பெண்ணிடம் பேசிவர, அவள் மனதில் அது ஆழப் பதிந்தது. அவள் விளையாட்டுத் தோழன் கண்ணன். அவள் தன்னைவிட்டுக் கண்ணன் இணைபிரியாது இருப்பதாக எண்ணினாள். இடை இடையே கண்ணன் தன்னைவிட்டுச் சென்றுவிட்டானோ எனவும் தோன்றியது அவளுக்கு. தினமும் மாலைகளைக் கட்டிக் கொண்டே பெரியாழ்வார் சொல்லும் கண்ணன் கதைகளையும், கண்ணன் மேலான பாடல்களையும் கேட்டுக் கேட்டு வளர்ந்து வந்த கோதைக்குக் கண்ணனே தன் மணாளன் என்ற எண்ணம் நாளாக நாளாக உறுதிப் பட்டு வந்தது. ஆனால் பெரியாழ்வாரோ இதை அறியவில்லை. பூக்களின் வாசம் மூக்கைத் துளைக்க, அந்த வாசம் தன் மூக்கில் ஏறினால் கூட இறைவனுக்குச் செய்யும் அபசாரம் ஆகிவிடுமோ என எண்ணும் பெரியாழ்வார் ஒரு துணியைத் தன் முகத்தில் சுற்றிக் கொண்டு பூக்களை மாலையாகத் தொடுப்பார்.

மாலைகளின் வண்ண விசித்திரமான பூக்களின் அழகும், அவை ஒன்றுக்கொன்று பொருந்தும்படி வண்ணக்கலவை அமைக்கப் பட்டு மாலையான அழகையும் பார்க்கப்பார்க்க கோதையின் மனம் அந்த மாலையின் வசப்பட்டது. மாலையின் வசம் மட்டுமா? அதை அணியும் ரங்கனின் அழகிலும் அவள் மனம் வசப்பட்டது. இவ்வளவு அழகான மாலையை அணியும் ரங்கன் எத்தனை அழகு? ஆஹா, இந்த மாலையை ரங்கன் மட்டும் அணியாமல் நாமும் அணிய நேர்ந்தால், நாமும் அந்த அழகு ரங்கனும் இந்த மாலையை ஒருவர் கழுத்தில் ஒருவர் போட்டுக் கொண்டால்? கோதையால் ஆசையை அடக்கமுடியவில்லை. அங்கு இருந்த மாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்.பெரியாழ்வார் தன் அநுஷ்டானங்களைச் செய்யச் சென்றிருப்பதை உணர்ந்தாள். அங்கு இருந்த ஒரு கண்ணாடியின் முன் போய் நின்று தன் அழகைத் தானே ரசித்தாள். ஆஹா, எத்தனை அழகாய் இருக்கிறது இந்த மாலை நமக்கு? இதே போல் ரங்கனுக்கும் இருக்குமோ? நான் அணிந்த மாலையை அவன் அணிவானா? சட்டெனக் கழற்றிப் பூக்குடலையில் அந்த மாலையை வைத்தாள் கோதை. ஏதும் அறியாத பெரியாழ்வார் அந்த மாலையை எடுத்துச் சென்றுவிட்டார். ரங்கனுக்கு அன்று அந்த மாலைதான் அணிவிக்கப் பட்டது. அன்று மட்டுமா? இது தொடர்ந்தது. தினம் மாலைகளைக் கட்டிவைத்த பெரியாழ்வார் அநுஷ்டானங்களுக்குச் செல்வதும், கோதை மாலையை அணிந்து அழகு பார்த்துக் கொள்வதும், பின்னர் அதே மாலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று ரங்கனுக்கு அணிவிப்பதும் தொடர ஆரம்பித்தது. ஆனந்தத்தில் ஆழ்ந்த கோதைக் கண்ணன் மேல் பல பாடல்களைப் புனைந்து பாடினாள். ஊர்ப் பெண்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாவை நோன்பு நூற்றாள். கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆகப் போவதாயும் எண்ணி எண்ணி உவந்தாள். வாரணமாயிரம் புடைசூழ மதுசூதனன் நம்பி வந்து மாலையிடப் போவதாய் உறுதியாய் நம்பினாள். ஆனால் அவள் மன மகிழ்வைப் பொசுக்கும் வண்ணமாய் ஒருநாள்……

என்றும்போல் அன்றும் மாலையை எடுத்துச் சென்ற பெரியாழ்வார் பூக்குடலையில் இருந்து மாலையை எடுக்கும்போது அதிலிருந்து பெண்ணின் நீண்ட தலைமயிர் கூடவே வந்தது. அதைக் கண்ட பெரியாழ்வார் திடுக்கிட்டார். அன்று ரங்கனுக்கு மாலை இல்லை. மறுநாள் மனதில் ஏதோ சந்தேகம் ஜனிக்க, மாலையைக் கட்டிவைத்துவிட்டு ஒளிந்திருந்து கவனித்தார். கோதை வந்து திருட்டுத் தனமாய்ப் பார்த்துக் கொண்டே மாலையை எடுப்பதையும் தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்துக் கொள்வதையும் கண்டார். உடனேயே மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். கோதையின் செயலைக் கண்டித்தார். கடுமையான வார்த்தைகளால் அவளைக் கடிந்து கொண்டார். அன்றும் ரங்கனுக்கு மாலை இல்லை. ரங்கனோ தவித்தான். என்ன ஆயிற்று? கோதையின் மாலைகள் ஏன் நமக்கு வரவில்லை? அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் ரங்கன் வந்தான். மாலை ஏன் வரவில்லை எனக் கேட்டான். கோதை சூடிய மாலையை ரங்கனுக்கு அணிவிப்பது எங்கனம்? எனப் பெரியாழ்வார் நினைத்ததாகவும், அதனாலேயே ரங்கனுக்கு மாலை இல்லை எனவும், துக்கத்துடன் சொன்னார். தூங்கினாலும், கனவின் தாக்கத்தினால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. அரங்கன் அவரைத் தேற்றினான். கோதை நமக்கு உகந்தவள் அன்றோ? அவள் இருக்குமிடம் நம்மிடம் அன்றோ? உமக்குக் கோதையின் பிறப்பைப் பற்றி ஏதும் தெரியவில்லை போலும்? சாக்ஷாத் பூதேவி அன்றோ அவள்? அவள் நமக்கு உகந்தவளே. அவள் சூடிக்கொடுக்கும் மாலைகள் நமக்கு மிகவும் உகந்தவை. கோதை சூடிக் கொடுத்த மாலைகளன்றி வேறு மாலைகள் நமக்கு வேண்டாம். எனத் திட்டவட்டமாய்ச் சொன்னான் ரங்கன்.

கனவு கலைந்து எழுந்த பெரியாழ்வார் நடந்தது கனவா, நனவா என்ற கலக்கத்தில் சற்று நேரம் இருந்துவிட்டுப் பின் தன் பெண்ணை அழைத்துக் கனவில் வந்த ரங்கன் சொன்னதை அவளிடம் சொன்னார். ஆண்டவனையே ஆளும் பேறு பெற்ற நீ இன்று முதல் “ஆண்டாள்” என்னும் பெயரால் அழைக்கப் படுவாய் என்றார். ஆண்டவனுக்கே மாலைகளைச் சூடிக் கொடுத்த நீ “சூடிக் கொடுத்த நாச்சியாரா”கவும் ஆவாய் என வாழ்த்தினார். மகள் ஏதோ பைத்தியமாய் இருக்கிறாள் ரங்கனைத் தான் மணப்பேன் என்கிறாள் என்று நினைத்த பெரியாழ்வார் அன்று முதல் ரங்கனிடம் அவளைச் சேர்ப்பது எங்கனம்? எனக் குழம்பினார். அப்போது ரங்கன் மீண்டும் அவர் கனவில் வந்து, ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை அழைத்து வரும்படி சொல்ல, அவ்விதமே அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். செல்லும்போது காவிரிக்கரையிலேயே கோதை காணாமல் போக, கலங்கினார் பெரியாழ்வார். கோதை தன்னிடம் இருப்பதையும் அவள் தனக்குத் திருவடிச் சேவை புரிவதையும் பெரியாழ்வாருக்குச் சூசகமாய்த் தெரிவித்தார் ரங்கநாதர். ஆனால் ஏற்கெனவே அப்பா ஒரு கிறுக்கு, பெண்ணோ பெரிய பைத்தியம் என்று சொல்லும் ஊர் என்ன சொல்லும்?? ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆண்டவனை இறைஞ்சினார் பெரியாழ்வார். அதன்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ரங்கமன்னார் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாளைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம்.


இனி கோயில் பற்றிய சில செய்திகள் நாளை!

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பல விஷயங்களுக்குப் பேர் போனது. முக்கியமாய் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. எல்லா இடத்துப் பால்கோவாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப் படும் பால்கோவாவுக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. சுத்தமான பசும்பாலில் தயாரிக்கப் படும். இதை அடுத்துக் கண்ணன் பிறந்த மதுராவிலும், அவன் குடித்தனம் நடத்திய துவாரகையிலும் கிடைக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் சுத்தமான பசும்பால் தான். அதுவும் குஜராத் பூராவுமே அநேகமாய்ப் பசும்பால் தான். நாங்க இருந்த ஐந்து, ஆறு வருடங்களில் எருமையே பார்க்கலை. அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை. சக்கைனதும் ஏதோ சக்கையாய் இருக்கும்னு நினைக்காதீங்க. அருமையான வாசனைத் தைல மூலிகைகளின் வேர்கள், பூக்கள், மொட்டுகள், இலைகள் எல்லாம் சேர்ந்த ஒன்று. இடித்துச் சூரணம் மாதிரி இருக்கும். பொதுவாகவே மதுரைப்பக்கம் பெருமாள் கோயில்களில் தாயார் சந்நிதியில் மஞ்சளும், ஆண்டாள் சந்நிதியில் இந்தத் தைலச் சக்கையும் தான் பிரசாதம். அதுவும் மதுரை வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் வருஷா வருஷம், ராப்பத்து, பகல் பத்து உற்சவத்தின்போது ஸ்வாமி வீதி உலா வரும்போது கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. ஒருதரம், இரண்டு தரம்னு வாங்கிட்டு, அம்மா வாங்கினதையும் சேர்த்து வெந்நீரில் ஊறவைச்சு, அம்மியில் அரைச்சுக் காலம்பர குளிக்கும்போது தலையில் தடவிக் கொண்டு ஊற வைச்சுக் குளிச்சால் மணமோ மணம்! பல நாட்கள் மணம் வீசும். சண்பகப் பாண்டியனுக்குச் சந்தேகமே வந்திருக்காது. ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை மணம் தான் தேவியின் கூந்தலில்னு அடிச்சுச் சொல்லி இருப்பான் அவனே. தருமிக்கும் பொற்கிழி கிடைச்சிருக்காது.

அருமை தெரியலை, போகட்டும். இப்போப் போயிருந்தப்போ பால்கோவா வாங்கினீங்களானு கேட்கிறீங்களா? ஆமாம், வாங்கினோம், வாங்கினோம், ஆனால் சுவை??? அதேபோல் தைலச் சக்கை கிடைக்கலை, ஆண்டாள் ஸ்நாநப் பவுடர்னு பாக்கெட்டுகளில் விற்கிறாங்க. அரை மனசோடு வாங்கிட்டு வந்தது இன்னும் இருக்கு தேய்ச்சுக்காமல். எல்லாம் அது ஒரு கனாக்காலமாயிட்டது. போகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையை இன்றைக்கும் மாறாமல் வைத்திருக்க ஆண்டாளின் பெயர் ஒண்ணே போதுமே? வேறே என்ன வேண்டும்?? பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் புகழ் என்றைக்கும் மங்காது. அதே போல் நம் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட அரசுச் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான். இதை அரசுச்சின்னமாக அறிவித்தவர் ஓமந்தூரார்னு நினைக்கிறேன். யாருப்பா அங்கே? ஓமந்தூரார் தானே அல்லது வேறே யாருமானு வந்து சொல்லுங்க கொஞ்சம். ஆனால் அப்போது பிரதமராய் இருந்த நேருவிற்கு சமயச் சின்னத்தை ஏற்க மனமில்லை என்றும், ஓமந்தூரார் இதை சமயச் சின்னமாய்ப் பார்க்கவேண்டாம் எனவும், திராவிடக் கட்டடக் கலையின் சின்னமாய்ப் பார்க்கும்படியும் சொன்னதாகக் கேள்விப்பட்டுப்படிச்சு இருக்கேன். இத்தனை புகழ் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் அடுத்ததாய்ப் புகழ் பெற்றவர் வில்லி பாரதம் எழுதிய வில்லிபுத்தூரார். மேலும் தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் சொந்த ஊர் எனத் தெரிய வருகிறது.

வைணவ திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒரு திவ்ய தேசம் தான். கடைசித் தலமான இது ஆண்டாளின் பிறந்த வீடு. ஸ்ரீரங்கமோ ஆண்டாளின் புகுந்த வீடு. அதோடயா?? மதுரையின் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு வருஷமும் ஆண்டள் சூடிக் கொடுத்த மாலையையும், அவள் அனுப்பி வைக்கும் பரிவட்டங்களையும் அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குவார். இவருக்காக ஆண்டாள் நூறுதடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாய் நேர்ந்து கொண்டாள். ஆனால் ஆண்டாளால் அதைச் செய்ய முடியவில்லைபோலும். ஆண்டாளின் இந்த விருப்பத்தைப் பின்னால் வந்த ஸ்ரீராமநுஜர் நிறைவேற்றி வைத்துவிட்டு ஸ்ரீவில்லி புத்தூர் சென்றால் என்ன ஆச்சரியம்??? அங்கே இருந்த ஆண்டாள் விக்ரஹம், “என் அண்ணாரே!” என அழைத்துக் கொண்டு முன் வந்து ஸ்ரீராமாநுஜரை வரவேற்றது. “பெரும்புத்தூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்ற வாழ்த்தையும் பெற்றாள் ஆண்டாள். இனி கோயிலுக்கு உள்ளே நுழையுமுன் சற்றே ஆண்டாளின் அவதாரக் கதையைத் தெரிந்து கொள்வோமா?? அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிகச் சிறந்த சில கதைகளில் இதுவும் ஒன்று.

Thursday, December 17, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்- நெல்லையப்பர்!


திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை தூக்கியது. இவர் நிஜமாகவே பால் கொண்டுவருகிறாரா என சந்தேகப் பட்டான். மறுநாளும் மன்னனின் ஆட்கள் தொடரப் பால் கொண்டு வந்த கோனாரின் கையில் இருந்து பானையில் இருந்த பால் முழுதும் இடறிய கல்லின் மேலேயே கொட்ட மீண்டும் அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்து பார்த்தான்.

கல் கண்களில் பட அந்தக் கல்லை அகற்ற முயன்றார்கள் அனைவரும். கோடாரியால் ஓங்கி ஒரு போடு போட அந்தக் கல்லில் பட்டு உடனே ரத்தம் பீறிட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க விண்ணில் இருந்து அசரீரி கேட்டு அந்தக் கல்லைத் தோண்டிப் பார்த்தால் அது சிவலிங்கம். அப்போது போட்ட கோடரி அடி லிங்கத்தின் இடப்பக்கம் பட்டு ரத்தக் காயம் தெரிந்தது. மன்னன் கையை வைக்க ரத்தம் வருவது நின்றது. சுயம்புவாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை வைத்துக் கோயில் உருவானது. இப்போதும் மூலவரின் தலையில் வெட்டுக் காயம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். இந்த வேணுவனம் திருநெல்வேலியானது இன்னொரு பக்தராலே.

அவரும் வேதசர்மா என்ற பெயரோடு தினமும் வேணுவனநாதருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அவரைச் சோதிக்க எண்ணிய ஈசன் நாளடைவில் அவருக்குச் செல்வம் குறையும்படி செய்ய, அக்கம்பக்கம் சென்று இறைஞ்சிப் பணமோ நெல்லோ பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்துவந்தார். ஒருநாள் அக்கம் பக்கம் வீடு வீடாய்ச் சென்று நெல்லை வாங்கிச் சேகரித்து சந்நிதி முன்னால் காயப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார். திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதசர்மா மழை நீரில் நெல் நனைந்து அடித்துச் சென்றுவிடுமே என எண்ணி வேகமாய் ஓடி வந்தார். என்ன ஆச்சரியம்?? நெல்லைச் சுற்றிக் கொண்டு மழை நீர் ஓடியது. நடுவே உள்ள காய்ந்த இடத்தில் மட்டும் வெயில் அடிக்க நெல் அங்கே காய்ந்து கொண்டிருந்தது. அசந்து போனார் வேதசர்மா. மன்னனுக்கு விஷயம் போக மன்னனும் வந்து பார்த்து அசந்து போனான். உலகிற்குப் பெய்த மழை வேதசர்மாவின் நெல்லைக் காத்த அதிசயம் ஊரெங்கும் பரவியது. நெல் நனையாது காத்த ஈசனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என அழைக்கலானான் மன்னன். வேணுவனம் என்றிருந்த அப்பகுதியும் திருநெல்வேலி என அழைக்கப் பட்டது.

ஈசன் பெயர் நெல்லையப்பர் என்றிருந்தாலும் வேணுநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார். அம்பாள் வடிவுடை அம்மை என்றாலும் காந்திமதி என்ற பெயரிலேயே அறியப் படுகிறாள். இதைத் தவிர அம்பாள் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் எனவும் அழைக்கப் படுகிறாள். மிக மிகப் பெரிய கோயிலாக பிரமிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆயிரம், இரண்டாயிரம் வருஷங்கள் பழமையான கோயில் என்று சொல்லப் படுகிறது. நிறைய இதிகாச, புராணத் தகவல்களோடு அதி அழகான சிற்பக் கலை வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் உள்ளது. ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித் தனிக் கோயில். தனித் தனி ராஜ கோபுரங்கள். ஸ்வாமி கோயிலையும் அம்மன் கோயிலையும் இணைக்கும் மண்டபத்தைக் கல் மண்டபம் என்று சொல்கின்றார்கள்.

மிகப் பெரிய தெப்பக்குளம் ஒன்று கோயிலின் உள்ளேயே இருக்கிறது. சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் பாதுகாக்கப் படுகிறது. வேண்டுமானால் உள்ளே சென்றும் பார்க்கலாம். ஆனால் கீழே இறங்க முடியாது. கோயிலின் பிரம்மாண்டம் அசத்துகிறது. மூலஸ்தானத்தில் நெல்லையப்பருக்கு அருகேயே பெருமாளும் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். முக்கியமான ஐந்து சபைகளில் இரண்டு சபைகள் இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. குற்றாலத்தில் நாம் கண்டது சித்திர சபை. இங்கே நாம் காண்பது தாமிர சபை. இந்தத் தாமிர சபை இரண்டாம் பிரஹாரத்தில் அமைந்துள்ளது.

கோயில் மட்டுமில்லை. இங்குள்ள நந்தியும் பெரியதாய் உள்ளது. நந்தி வெள்ளை நிறத்தில் உள்ளது. விநாயகரும் பெரிய விநாயகர். ஒன்பது அல்லது பத்தடிக்குக் குறையமாட்டார். தக்ஷிணா மூர்த்தி, சண்டேஸ்வரர், துர்கை, பைரவர் போன்ற பரிவார மூர்த்திகள் உண்டு. இரண்டாம் பிரஹாரத்தில் தான் இசைத் தூண்கள் உள்ளன. மூன்றாம் பிரஹாரம் மிகப் பெரியது என்றும், 3 யானைகளுக்கு மேல் சேர்ந்து நடக்கலாம் என்றும் சொல்கின்றனர். இந்தப் பிரஹாரத்தில் இருந்தே அம்மன் கோயிலுக்குச் செல்லும் மண்டபம் உள்ளது. மிகப் பெரிய இவை பார்க்கவே பிரமிப்பை ஊட்டுகிறது. இந்தப் பிரஹாரத்தில் தான் மேலே சொன்ன தெப்பம் உள்ளது. இதைத் தவிர வெளித் தெப்பமும் ஒன்று உண்டெனச் சொல்கிறார்கள். பார்க்கவில்லை.

நாங்க தங்கி இருந்த அறையிலிருந்து நடந்தே போகலாம் என்று சொன்னாலும் பேருந்தில் போனோம். ஊர் மிக அழகும் சுத்தமுமாய் உள்ளது. கோயில் ராஜ கோபுரங்களை அடுத்த வீதிகளைச் சுற்றிக் கடைகள்,கடைகள், கடைகள். திருநெல்வேலியின் பாரம்பரிய போத்தீஸுக்கும், ஆரெம்கேவிக்கும் நடுவே சென்னையின் நல்லியும் இடம் பெற்றுள்ளது. திரும்பிப் பேருந்தில் வர வேறு வழி. என்றாலும் குழப்பம் இல்லை. கோபுர வாசலுக்கு நேரே இருட்டுக்கடை அல்வாக்கடை. போகும்போது தான் கடை திறந்து சிறிது நேரம் என்றார்கள். திரும்பி வந்துதான் எப்படியும் அல்வா வாங்கணும். ஆகவே திரும்பி வேறே வழியில் கடைக்குச் சுத்திண்டு வந்தோம். ஒரே அதிர்ச்சி. பெரிய வரிசை அல்வாவுக்கு. அல்வாவுக்கே அல்வா கொடுக்கவெல்லாம் முடியலை. பெண்கள் வரிசை நல்லவேளையாக(?) தனியே இருந்தது. நான் அதில் போய் நின்றேன். திருநெல்வேலிக்குப் போறோம்னதும், அல்வாவுக்கான முன்பதிவுகளும், கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கான முன்பதிவுகளும் நிறையவே இருந்தன. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நின்னதும் அல்வா கிடைத்தது. நாம வாங்கற ஒரு கிலோ, அரை கிலோவெல்லாம் அவங்களுக்கு பிசாத்து போலிருக்கு. அலக்ஷியமாப் பார்த்தாங்க. சரிதான்னு நினைச்சுட்டு வாங்க வேண்டியவங்களுக்கு எல்லாம் வாங்கிக் கொண்டோம். வரும் வழியிலே கல்லிடைக்குறிச்சியிலே இறங்கி அம்பி வீட்டுக்குப் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு அப்பளப் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தோம். அல்வாவை முடிச்சுட்டு அறைக்குத்திரும்பினோம். அடுத்த பதிவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், அதன் பின்னர் சங்கரன் கோயிலும். காத்திருங்கள். ஆண்டாளையும், வடபத்ரசாயியையும் பார்க்க.


திருநெல்வேலி அல்வாக்கடை படம் உதவி: நன்றி, துளசி.

Wednesday, December 16, 2009

வளம் தரும் வியதீபாத தரிசனம்

(மார்கழி 9, வியாழக் கிழமை, 24.01.2010, அதிகாலை 04.30 மணி)

சிதம்பரம். கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலம¡க விளங்குவது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன. பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்,) பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி). சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் (சித்தாந்தம்) ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம்.

அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அலகிலாத உருவம் உடையவர். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெண¡தபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. இயங்கு சக்திகளை தாள கதியுடன் ஆட்டுவிப்பவர். அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலம¡க நிகழ்ந்து வருவது.

நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

1. திதி : திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர்.
2. வாரம் : கிழமைகளுக்கு ந¡யகராகிய சூர்யனை குண்டலமாக அணிந்தவர்.
3. நக்ஷத்திரங்கள் : இவற்றை மாலையாக அணிந்தவர்
4. யோகம் : வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர்.
5. கரணம் : கரணங்களை தன்னுள் கொண்டவர்.

மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும்.

பஞ்சாங்கத்தின் யோகம் என்பது சிறப்பு வாய்ந்த ஒரு அம்சம். சூர்யனுக்கும், சந்திரனுக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவும் அம்சம்.

யோகங்கள் என்பது மூன்று வகைப்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் கிரஹங்கள் இணைவதால் உண்டாகும் யோகம். (கஜகேசரி யோகம், சகடயோகம்)

நக்ஷத்திரமும், தினமும் இணைவதால் உண்டாகும் யோகம் (அமிர்த, சித்த மற்றும் மரண யோகம்). அஸ்வினி நக்ஷத்திரம் திங்கட்கிழமையில் அமைந்தால் அது சித்த யோகம்.

சூர்யனும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் யோகங்கள் 27. (விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை) இந்த 27 யே¡கங்களுள் ஒன்றுதான் வியதீபாத யோகம், யோக நாயகர்களுக்கு அதிபதியாக விளங்குவது.

மார்கழி மாதம் & வியதீபாத யோகம் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லது.

புராண விளக்கம் :

ஒரு சமயம், சந்திரன் குரு பகவானின் மனைவியான தாரையின் அழகில் மயங்குகிறார். இதை அறிந்த சூர்ய பகவான், சந்திர பகவானிடம் இது தகாத செயல் என எச்சரிக்கிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப் பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப்படுத்திய சூர்ய சந்திரர்கள், யோகங்களில் ஒருவராக, வியதீபாதம் என்று பயர் அளித்து, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப்படுத்தியதால், பூலோக மக்கள் உன் யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்யமாட்டார்கள் எனவும் கூறினர்.

மக்கள் புனித செயல்கள் செய்யாத திதிகளான, அஷ்டமி, நவமி திதிகள் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டு, அவரின் அவதார தினப் பெருமையைப் பெற்றனர்.

அதுபோல, வியதீபாத யோகம், தன் நாட்களில் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே என்று எண்ணி, நடராஜப் பெருமானின் குஞ்சிதப¡தத்தை (தூக்கிய திருவடியை) சரணடைய, பக்தர்களுக்கு வேண்டியதை உடனடியாக வரமளிக்கும் நடேசர், மார்கழி மாதமும், வியதீபாதம் யோகம் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வே¡ருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்று, அந்த யோகத்திற்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார்.

வல்லமை வாய்ந்த இந்த யோகத்தில் தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெரு வாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி, மார்கழி மாதம் தனுர் அல்லது தனுசு மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூர்யனுக்கு முன்பு வரும்போது, வியதீபாதம் யோகம் ஏற்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலில் (வியதீபாத யோகம் தோன்றக் காரணமான) சந்திரன், குரு பகவானின் மனைவியான தாரையை மோகித்ததால் ஏற்பட்ட தோஷத்தினை சிதம்பரத்தில் நடராஜரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ அப்பைய தீVதர் தனது சிவார்ச்சனா சந்திரிகையில் (தந்த சுத்தி படலம்), வியதீபாத யோகம் வரும் நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் சிவனை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

வியதீபாத யோக நன்னாளில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம், நல்யோகங்கள் மற்றும் வளங்கள் அனைத்தயும் பெறுவோம்.

* நி.த. நடராஜ தீட்சிதர், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
* செல் : 94434 79572, 93456 43077.//

இந்தப் பதிவை எழுதிய தீக்ஷிதருக்குச் சொந்த வலைத்தளம் இல்லாததால் என்னுடைய தளத்தில் போடச் சொல்லி இருக்கார். இது பற்றிய சந்தேகங்கள் இருப்பவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி.

Monday, December 14, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - தென்காசி விஸ்வநாதர்!

குலசேகரபாண்டியனுக்குப் பின்னர் பல ஆண்டுகள், அல்லது நூற்றாண்டுகள் கழித்து வந்த பராக்கிரம பாண்டியன் வடநாட்டின் காசி விஸ்வநாதரின் மேல் அபார பக்தி பூண்டு மனதுக்குள் வழிபட்டு வந்தான். காசி நகரத்து விஸ்வநாதர் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டு அதே போல் இங்கும் ஒரு கோயில் கட்டி அதில் விஸ்வநாதரைப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணினான். அதே நினைப்போடு இருந்த மன்னன் கனவில் காசி விஸ்வநாதரே தோன்றி, அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த லிங்கம் அந்த ஊரின் செண்பக வனத்தில் இருப்பதாகவும். கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்பின் தொடர்ந்து செல்லுமாறும் பணித்தார். அவ்விதமே செய்த மன்னன் குலசேகரனால் வழிபட்டு வந்த லிங்கத்தைக் கண்டு பிடித்தான். அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயரிட்டு கோயிலையும் கட்டினான். வடக்கே இருக்கும் காசி விஸ்வநாதர் தெற்கேயும் வந்து அருளுவதால் இந்த ஊரின் பெயரே அதன் பின்னர் தென்காசி என அழைக்கப் பட்டது. இவனுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவ ஈசனே சிவனடியார் உருவில் வந்து உதவியதாகவும், பின்னர் அந்த அடியார் இந்தக் கோயிலிலேயே தங்கியதாகவும் கூறுகின்றனர். அவருக்கெனத் தனிச் சந்நிதியும் உள்ளது. அந்தச் சந்நிதியில் விக்ரஹம் எதுவும் இல்லாமல் சதுர பீட உருவில் அமைக்கப் பட்டு, அங்கே அடியாரை வணங்கி வருகின்றனர்.

அம்பிகை குழல்வாய்மொழிநாயகி என்னும் உலகம்மை கோயிலுக்குப் பெயரை வழங்கி அருளாட்சி புரிகின்றாள். கோயில் பிராகாரத்தில் ஸ்ரீசக்ர அமைப்புடன் கூடிய பராசக்தி பீடம் உள்ளது. இதையும் தரணி பீடம் என்றே அழைக்கின்றனர். அம்பிகை பூமியில் தோன்றியதால் அவ்விதம் அழைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. 40 முக்கோணங்களுடன்கூடிய இந்தப் பீடத்திற்குப் பச்சைப் புடைவை சார்த்தி வழிபடுகின்றனர். ஸ்ரீசக்ர சந்நிதிக்கு எதிரேயே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இங்கே நவகிரஹங்களும் மண்டபத்தினுள் ஒவ்வொரு திக்கையும் பார்த்தவண்ணமும், மண்டபத்துக்கு வெளியே நேர் வரிசையாகவும் காணப்படுகின்றனர். இதன் தாத்பரியம் புரியவில்லை. ஒருவேளை இடைக்காட்டுச் சித்தர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று இங்கே நடந்திருக்கலாமோ? அவர் தாம் நேரே ஒன்றாக இருந்த நவகிரஹங்களையும் ஒவ்வொரு திசைக்குத் திருப்பினார் என்பார்கள். அதை நினைவு கூரும் விதத்தில் அமைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

தில்லையில் நடராஜருக்குக் கணக்குகளை ஒப்பிப்பது போன்றதொரு நிகழ்ச்சி இங்கேயும் நடை பெறுகிறது. இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஈசனே நேரே கண்காணிப்பதாக ஐதீகம். ஈசனுக்குத் தனி அரியாசனம் உண்டு. ஆவணிமாதம் முதல் தேதி அன்று சொக்கநாதர் என்ற பெயரோடே அரியாசனம் ஏறும் உற்சவர் முன்னே ஒரு வருஷத்துக் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படுகின்றன. கங்கை நீரால் விஸ்வநாதருக்கு அபிஷேஹம் செய்யவேண்டும் என விரும்பிய மன்னனின் விருப்பத்துக்காக ஈசனே இங்கே கிணறு வடிவில் கங்கையை வரவழைத்தார் என்கின்றனர். இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்த பராக்கிரம பாண்டியன் கோயில் சரிவர நிர்வகிக்கப் படவேண்டும் என்பதிலும், கோயிலின் பராமரிப்புப் பணிகள் செம்மையாக நடைபெறவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறான் என்பதை இங்கே உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலினுள் நுழையும் ராஜகோபுரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “ காலத்தால் இந்தக் கோயில் சிதைவடையுமானால், அதைச் சரி செய்பவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்.” என எழுதப் பட்டுள்ளது. இது தவிரவும், கோயிலுக்கு வரும் பக்தர்களை வணங்கும்விதமாய் மன்னன் கீழே விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பம் அம்மன் கோயிலின் நுழைவு வாயிலிலும் அமைத்திருக்கின்றனர். அப்படியும் காலப் போக்கில் இந்தக் கோயில் கோபுரம் இரண்டாய்ப் பிளந்து காட்சி அளித்ததாகவும், பின்னர் 1990=ம் ஆண்டு வாக்கில் புதிய கோபுரம் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். இந்தக் கோபுர வாசல் காற்றின் விசேஷம் என்னவென்றால் கோபுரத்துக்குள் நுழையும்போதே காற்று நம்மை முன்னோக்கித் தள்ளி உள்ளே கொண்டு சேர்க்கும் வண்ணம் கட்டப் பட்டிருப்பது தான். நுழையும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று கோபுரத்தைக் கடந்ததும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதையும் உணரும் விதம் கட்டப் பட்டுள்ளது.

அருமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் பாலமுருகன் சந்நிதி ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே அமைந்துள்ளது. சோமாஸ்கந்த அமைப்புக் கோயிலாகச் சொல்லப் படுகிறது. தல விருக்ஷங்கள் இரண்டு உள்ளன. ஏற்கெனவே இருந்த செண்பகம் தவிர, பலா மரமும் இங்கே தலவிருக்ஷம் ஆகும்.

Sunday, December 13, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - இலஞ்சி முருகன்.

திருக்குற்றாலத்தில் மெயின் அருவி எனப்படும் கூட்டம் மிகுந்த அருவியையும், மேலே சென்று அங்கே உள்ள அருவியையும் பார்த்துவிட்டோம். இன்னும் மேலேயும் செல்லவேண்டும்தான். ஆனால் மதியம் இரண்டு மணி அப்போவே ஆகி இருந்தது. இன்னும் சித்திர சபை வேறே போகவில்லை. குற்றாலநாதர் கோயிலும் திறக்கவில்லை. இருந்து கோயில் திறந்ததும் தான் தரிசனம் செய்து கொண்டோம். கோயிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசுத்தம் செய்து வைத்திருந்தார்கள். சித்திர சபை போகும் வழியும் கரடு, முரடாக, மலைப்பாதை தானே? முன் யோசனை இல்லாமல் செருப்பு அணியாமல் சென்றுவிட்டோம். போகப் போகப் போயிட்டே இருக்கு. அங்கேயும் சித்திரநடராஜரைப் பார்த்து மனம் நொந்து கொண்டு திரும்பினோம். கீழே இறங்கலாமா எனக் கேட்ட வண்டியோட்டியிடம் இலஞ்சிக்குப் போகச் சொன்னோம். இலஞ்சிக்குக் கூட்டிச் சென்றார். அருமையான சுகமான மலைப்பாதை. மிக மிக அழகான சாலை. இயற்கையின் வண்ண விசித்திரங்களோடு, பக்ஷிகளின் கூச்சலும் சேர்ந்து அந்த மாலை நேரத்தையே அழகானதாய் மாற்றிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சாலை. இருபுறமும் அடர்ந்த மரங்கள். மர நிழலைப் பார்த்தாலே ஒரு துணியை விரித்துப் படுத்துடலாமானு எண்ணம். அவ்வளவு தண்மை.

கோயிலில் தீபாராதனை நடக்கும் சமயம். மாலை வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாமனைத் தள்ளிவிட்டு அங்கே தந்தையைக் கொண்டு வந்த சாமர்த்தியசாலியான முருகனைக் கண்ணாரப் பார்க்க முடிந்தது. அநேகமாய் எல்லாக் கோயில்களிலுமே நெரிசல் இல்லாமையால் அருமையான தரிசனம். இந்த இலஞ்சிக் கோயிலையும், ஜாத்திரையையும் பற்றிக் கலைமகளில் பள்ளி நாட்களிலேயே படித்திருக்கிறேன். எல்லார்வி என்னும் எழுத்தாளர் எழுதுவார். இலஞ்சியைப் பற்றி அவர் வர்ணித்திருந்த அழகு இப்போது இருக்காதுதான். என்றாலும் இன்னும் ஒன்றும் மோசம் ஆகவில்லை. கோயிலும் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது. எதிரே மலைகள், மலைகள், பள்ளத் தாக்குகள். அங்கே நின்று படம் எடுக்கணும்னு தான் ஆசை. ஆனால் எடுக்க விடவில்லை.


ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப்படுகிறது இலஞ்சி. இங்கு ஓடும் நதியே தீர்த்தமும் ஆகும். நதியின் பெயர் சித்ராநதி ஆகும். மகிழமரத்தைத் தலவிருக்ஷமாய்க் கொண்ட இந்த ஊரின் ஈசன் அகத்தியரால் மணலால் பிடிக்கப் பட்டு வணங்கப் பெற்றவர். குற்றால நாதரைத் தரிசிக்க வந்த அகத்தியருக்கு அங்கே பெருமாளே காட்சி கொடுத்ததையும், முருகனின் ஆலோசனையின் பெயரில் வைணவச் சின்னங்கள் தரித்துச் சென்றதையும் குற்றாலம் பற்றிய பதிவில் பார்த்தோம். குற்றாலத்தில் தரிசனம் கிடைக்காத அகத்தியர் இலஞ்சி வந்து முருகனை வேண்ட, முருகனும் அருள் புரிகிறார். அங்குள்ள சிற்றாற்றின் கரையிலேயே குமரனுக்கு அருகேயே அவர் தந்தைக்கும் வெண்மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டார் அகத்தியர். அகத்தியர் அவ்வாறு பூஜை செய்த லிங்கமே இன்றும் இருவாலுக நாயகர் என்னும் பெயருடன் வழங்கப் படுகிறார். இங்கே ஈசனின் அருள் கிடைத்ததுமே அகத்தியர் திரும்பக் குற்றாலம் செல்கிறார்.

இங்குள்ள குமரன் இளமை பொருந்தியவனாகச் சொல்கின்றனர். கட்டிளம் காளையாகக் காட்சி அளிக்கும் தமிழ்க் கடவுள் இவ்விதம் இங்கே தோன்றியமைக்கும் காரணம் சொல்கின்றனர். திரிகூடமலையின் வடகீழ்த்திசையில் காசியபர், கபிலர், துர்வாசர் மூன்று முனிவர்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். பலவேறு தத்துவங்களையும், அதன் நுணுக்கங்களையும் ஆய்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு சந்தேகம். இவ்வுலகம் இல் பொருளா? உள் பொருளா என்பதே! கபிலர் இல் பொருள் எனத் தன் வாதத்தை நிலைநாட்ட, காசியபரும், துர்வாசரும் முத்தொழில்களையும் செய்யும் ஈசன் இல்லாது இல் பொருள் தோன்றுவது எங்கனம் எனக் கேள்வி எழுப்பினர். உலகம் உள் பொருளே எனச் சொல்ல, கபிலரும் நன்கு யோசித்து அவர்கள் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் மூவருக்கும் மீண்டும் வாதம் ஆரமபித்தது. உள் பொருளான உலகின் உண்மைப் பொருள் யார் என்று வாதம் புரிந்து கபிலர் திருமாலே எனச் சொல்ல பிரம்மபுத்திரனான காசியபரோ, பிரம்மனே எனச் சொல்ல , ருத்ராம்சமான துர்வாசரோ ருத்ரரே எனச் சொல்ல குழப்பம் ஏற்பட்டது.

குழப்பத்தைத் தீர்க்கவேண்டும், அதற்கென நடுநிலை வகிக்கும் ஆள் வேண்டுமே. யாரைக் கூப்பிடுவது என யோசித்து, யாரேனும் ஒரு இளைஞனே தகுதியானவன் என்று எண்ணுகின்றனர். அப்போது குமரக் கடவுள் ஓர் கட்டிளம் காளையாக அவர்கள் முன் தோன்றினான். (சிலர் கபிலரும், துர்வாசரும் முருகனை வேண்டியதாகவும் கூறுவார்கள்). அவன் தன் உண்மை உருவை அவர்கள் மூவருக்கும் காட்டி ஆதிப்பரம்பொருள் தாமே என்றும், மூவினையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் தன்னை மூன்று முனிவர்களிடமும் காட்டியும் யாமே படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலையும் செய்பவர் என உணர்த்தினார். அவரை வணங்கிய முனிவர்கள் வழிபட்ட இடத்திலேயே அதே கட்டிளம் காளைக் கோலத்தில் இன்றளவும் நின்றுகொண்டு வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளுகின்றான் முருகன்.

இலஞ்சியில் இருந்து வரும் வழியில் தான் மற்றொரு முருகன் கோயிலும் அருகிலிருந்த இன்னொரு மலையில் இருப்பது தெரிய வந்தது. நேரமின்மையால் செல்லவில்லை. தென்காசி போயிட்டுத் திருநெல்வேலி திரும்பவேண்டும். அங்கே இன்னும் நெல்லையப்பரைப் போய்ப் பார்க்கவில்லை. ஆகையால் நேரமும் கிடையாது. மறுநாள் விட்டுப் போன கோயில்களைப் பார்த்துக் கொண்டு ஊர் திரும்பும் திட்டம்.

வண்டியைத் தென் காசிக்கு விடச் சொன்னோம். தென்காசி திருநெல்வேலியில் இருந்து அறுபது அல்லது எழுபது கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர்கள், (பழைய???) ஆண்டு வந்தபோது கட்டிய கோயில் இது. முதலில் இந்தக் கோயிலை எழுப்பும் முன்னர் இங்கே செண்பகவனமாக இருந்திருக்கிறது. குலசேகரபாண்டியன் என்னும் மன்னன் காலத்தில் முதன்முதல் இந்தக் கோயில் கட்டப் பட்டுள்ளது. எந்தக் குலசேகரபாண்டியன் எனச் சரியாய்த் தெரியவில்லை. பெரிய அளவில் கோயில் இல்லாமல் செண்பக வனத்தில் லிங்கத்தை அமைத்து மன்னன் வழிபட்டிருக்கிறான். மக்கட்பேறு இல்லாத மன்னனுக்கு இங்கே இருந்த ஒரு மகிழமரத்தடியில் குழந்தை ஒன்று கிடைத்தது. பெண் குழந்தை. குழல்வாய்மொழி எனப் பெயரிட்டுத் தன் மகளாகவே அந்தக் குழந்தையை வளர்த்து வந்த மன்னன், நாளாவட்டத்தில் குழந்தையாகத் தன்னிடம் வளருவது சாக்ஷாத் அம்பிகையே எனத் தெரிந்து கொள்கிறான். ஈசனுக்கே வாழ்க்கைப் படுவேன் என அந்தப் பெண் தவமிருந்து சிவ வழிபாடுகள் செய்து ஈசனை மணாளனாக அடைந்தாள். மன்னனுக்கு உலகை ஆளும் அம்மையே தனக்குப் பெண்ணாக வந்திருப்பதை எண்ணி எண்ணி வியப்பு அடங்கவில்லை. உலகம்மா, நீயே எனக்கு மகளாய் வந்தனையோ” என உணர்ச்சிப் பெருக்கீட்டில் மன்னன் மனம் உருகினான். நாளாவட்டத்தில் உலகம்மன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உள்ளூர் மக்களுக்கு உலகம்மன் கோயில் என்றால் தான் புரியும். கோயிலின் மற்ற வரலாறுகள் நாளை.

Sunday, December 06, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! -குற்றாலம் தந்த ஏமாற்றம்!


வடநாட்டு முனியான அகத்தியர் இறைவன் கட்டளைப்படி தென்னாடு வருகிறார். வடமொழியில் எல்லை தேர்ந்தவர் ஆன அவர் தமிழ் மொழியின் பால் பற்று உள்ளவர். அம்மொழியைச் சிறப்பித்தவர். இவர் வரும் காலை இக்குற்றால மலையில் மஹாவிஷ்ணுவே கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி வடக்கே இருந்து தெற்கே வந்த அகத்தியர் கோயிலில் தரிசனம் செய்யப் போகச் சிவனடியாரான அவரை கோயிலின் உள்ளே விட அர்ச்சகர் மறுக்கிறார். மனவருத்தத்தோடு நடந்த அகத்தியர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள இலஞ்சியை அடைகிறார். அங்கே தமிழ்க்கடவுளாம் முருகனின் தாள் பணிகிறார். முருகனோ எனில் விளையாட்டுப் பிள்ளை!அர்ச்சகர்களை ஏமாற்றி விட்டு உள்ளே போகுமாறு அகத்தியருக்கு அறிவுரை கூறி மறைய, அகத்தியரும் துவாதச நாமம் தரித்து பரம வைஷ்ணவராய் மாறிவருகிறார். அவருக்கு அனுமதி கிடைக்கிறது. உள்ளே சென்ற அகத்தியர் தாமே தனியாகப் பூஜை செய்ய வேண்டும்என்று வேண்டிக் கொண்டு கருவறைக்கதவைச் சார்த்திக் கொண்டு, "நின்ற சீர் நெடுமாலாய்க்" காட்சி அளித்த திருமாலைக் கையால் தலையில் அழுத்திக் "குறுகிக் குறுகுக" என்று கைலாச நாதனை வேண்டி நினைக்க குறுகிப் போன திருமால் சிவலிங்க வடிவில் குற்றால நாதன் ஆகிறார்.


இப்படி மாறிய இறைவனைக் குறித்துஅகத்தியரே பாடியது:
"முத்தனே முளரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்பத்தியின் எல்லை காக்கும்பகவனே!
திகிரியாளா!சுத்தனே! அருள் சூல் கொண்டசுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோலநாடுதற்கரிய நம்பி!" என்று இருவருக்கும் பொருத்தமாகப் பாடித் துதிக்கிறார்.
குற்றால நாதரின் வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் "குழல்வாய் மொழி அம்மை"கோயில் கொண்டிருக்கிறாள். தலவிருட்சமான குறும்பலா நான்கு வேதங்களும் தவம் செய்து பலா மரரூபமாய் அங்கே இருப்பாதாய் ஐதீகம்.அங்கே ஒரு லிங்கம். இம்மரத்துப் பழத்தை வானரங்கள் தவிர வேறு யாரும் பறித்து உண்ணுவது இல்லை. இறைவன் "குற்றாலம், சமருகம்" என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே குடிகொண்டதால் குற்றாலம் என்ற பெயர்
உண்டாயிற்று என்று சொல்கிறார்கள். மலை அதிக உயரம் இல்லை. 3,000 அடியில்இருந்து 5,000 அடிக்குள் தான் இருக்கும்.மூன்று சிகரங்கள் உள்ளதால் "திரிகூடம்"என்ற பெயரும் உண்டு.

மலைக்காடுகளுக்குச் செண்பகக்காடு எனப்பெயர் உண்டு. நிறைய மூலிகைகள் அடங்கிய மலை என்றும் சொல்கிறார்கள். இம்மலையின் உச்சியில் இருந்து குதித்துவருவது தான் சிற்றாறு. மிக்க உயரத்தில் தேனருவி இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.அதற்கு அடுத்து செண்பக தேவி அருவி.

இங்கே செல்லவும் காடுகளின் வழியாய்த்தான் போக வேண்டி இருக்கிறது.குற்றாலத்தில் சாரல் காலம் மக்கள் கூட்டம் கூடுவதால் அப்போது போய் வருவதுசற்றுப் பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்.

அதற்குப் பின் தான் தற்சமயம் நாம் பார்க்கும் முக்கிய அருவி என்று சொல்லப்படும் அருவி. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் இடையில் உள்ள பாறைகளிலும் விழுந்து கீழே விழுவதால் வேகம் குறைவாக இருப்பதால் குளிக்க ஏற்றவாறு உள்ளது. அதுவும் முதலில்
பொங்குமாங்கடலில் விழுந்து பின்னே கீழே விழுகிறது.

"வானரங்கள் கனி கொடுத்து
மந்தியோடு கொஞ்சும்மந்திசிந்து
கனிகளுக்குவான்கவிகள் கெஞ்சும்தேனருவித்
திரை எழும்பிவானின் வழி ஒழுகும்செங்கதிரோன்
பரிக்காலும்தேர்க்காலும் வழுகும்"

குற்றாலக் குறவஞ்சியின் இந்தப் பாட்டைப் படித்த பள்ளி நாட்களில் இருந்தே குற்றாலத்தைப் பற்றிய கனவுகளில் இருந்த எனக்கு இப்போதைய குற்றாலம் ஏமாற்றத்தையேஅளித்தது. சுட்டுப் பொசுக்குகிற வெயிலில் முக்கிய அருவியில் குளித்துக்கொண்டிருந்த மக்களின் கூச்சல் அருவியின் ஓசையை அமுக்குகிறது. இருக்கிறது, இப்போதும் இருக்கிறது பலாவும், மாமரங்களும், நெல்லிக்கனிகளும்,அதை உண்ணும் வானரங்களும். என்றாலும் அதை எல்லாம் அழுத்திக் கொண்டு இப்போது வந்திருக்கும் கட்டிடங்கள் அந்த அழகை மங்கச்செய்கின்றது.
குற்றால நாதரோ என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீக ஐதீகப்படிக் "கு" என்பதை ஒரு பக்கம் இந்தப் பூமியாகவும், இன்னொரு பக்கம் பிறவிப்பிணியாகவும் கொண்டால் "தாலம்"என்ற சொல்லானது அதைத் தீர்க்கும் என்று குறிக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.இங்கே உள்ள பராசக்தி யோகத்தில் இருக்கிறாள். இவளே மூவரையும் பயந்தாள்எனவும் சொல்கிறார்கள். அதனாலும்இதற்குத் திரிகூடம் என்னும் பெயர்வந்ததாயும் கூறுகிறார்கள். இவ்வுலகம் தோன்ற மூல காரணமாயிருந்த காரணத்தால் "தரணி பீடம்" எனவும் சொல்கிறார்கள். அதைக் குறிக்க ஒரு தொட்டில் இந்தப் பராசக்தி பீடத்தின் சன்னதியில் ஆடுகிறது.
இப்படிப்பட்டகோயில் இன்று இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் மன வருத்தம் மேலிடுகிறது. என்ன தான் முன் மண்டபம் யாத்திரீகர் தங்க ஏற்பாடு செய்து கட்டி இருந்தாலும் சாப்பாட்டு இலைகளில் இருந்து எல்லா அசுத்தங்களையும் அங்கே பொதுமக்கள் செய்கிறார்கள். கண்டும் காணாத கோயில் சிப்பந்திகள்.

கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் மேலே கொஞ்சம் ஏறிப் போனால் வருகிறது பிரசித்தி பெற்ற "சித்திர சபை". கோயிலின் வடக்கே உள்ள இந்தச் சித்திர சபை அழியும் நிலையில் உள்ளது. அரசின் பாதுகாப்பில் உள்ள இதற்கு உள்ளே செல்லக் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலின் எதிரே உள்ள குளமும் சரி, அதன் நடுவில் உள்ள வசந்த மண்டபமும் சரி பாழடைந்த நிலையில்உள்ளது. முழுதும் சித்திரங்களால் நிறைந்த இந்தக் கோயிலில் "நடராஜர்" சித்திர உருவில் காட்சி அளிக்கிறார்.மூலிகைகளைக் குழைத்துத் தீட்டிய வண்ணங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இவற்றில் நம் மக்கள் கைவண்ணம் வேறே! அவர்களின் அன்பைக் காட்டிக் கொள்ள இந்தச் சித்திரங்கள் தான் கிடைத்ததா புரியவில்லை. இப்போது சற்றுத் தடுப்புப்போட்டிருந்தாலும் பெரும்பாலான சித்திரங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. 64 திருவிளையாடல்களைக் காட்டும் சித்திரங்கள் பாதி அழிந்து உள்ளது. நடராஜர் மட்டும் பிழைத்தார். எதோ விட்டு வைத்திருக்கிறார்கள். அரசுமனது வைத்தால் தான் நடராஜரோடுசேர்ந்து எல்லாருக்கும் வழி பிறக்கும். மிகுந்த மனவேதனையோடு திரும்ப
வேண்டியதாயிற்று.

Wednesday, November 25, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம் நிறைவு!


அடுத்ததாய் ராகுவுக்கான கோயில். இந்த நவகைலாயக் கோயில்களும் முக்கியமான ஊர்களில் இருக்கும் ஒரு சில கோயில்களைத் தவிர மற்றவை பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அதற்கு முந்தைய பதிவில் திரு குப்பன் யாஹூ கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம். கோயில்களையும், கோயில் சார்ந்த நிலங்களையும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு இம்மாதிரி நலிந்த கோயில்களை மீண்டும் புனருத்தாரணம் செய்து வழிபடப் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த நிலைமை மாறவேண்டும். திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலே குன்றுகள் சூழ்ந்த பகுதியான குன்றத்தூர் என்னும் ஊரிலே தான் ராகுவுக்கான கோயில் உள்ளது. ரோமசமுனிவர் தாமிரபரணியில் விட்ட தாமரை மலர்களில் ஒன்று ஒதுங்கிய இடமும் இதுவாகும். இந்த ஊர்க்கோயிலைப் பார்க்கும் முன்பு இந்தக் கோயில் பற்றிய வரலாற்றைப் பார்ப்போமா???

அநேகமாய்ப் பள்ளிப் பாடங்களில் இந்தக் கதையை நாம் படித்திருப்போம். அதே கதைதான். என்றாலும் திரும்ப ஒரு முறை சொல்லுகிறேன். திருநெல்வேலிக்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் ஒரு அதிசய மாமரம் இருந்தது. அந்த மாமரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு பழம் தான் பழுக்கும். அந்தப் பழத்தை வேறு யாரும் உண்ணமுடியாது. மன்னன் மட்டுமே உண்ணுவான். ஒரு வருஷம் இப்படிப் பழுத்திருந்த பழம் மன்னன் பறிப்பதற்காகக் காத்திருந்தது. அப்போது தாமிரபரணியில் நீர் எடுத்துச் செல்ல ஓர் இளம்பெண் வந்தாள். அவள் நீர் எடுக்கும்போது பழுத்துக் கனிந்திருந்த அந்தப் பழம் நீரில் விழுந்து,நீரோடு குடத்தினுள் சென்றுவிட்டது. அதை அந்தப் பெண் அறியமாட்டாள். அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மன்னன் பழத்தைப் பறிக்க வந்தான். பழம் மரத்தில் இல்லை. யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என யோசித்த மன்னன் அன்று நதிக்கரைக்கு வந்தவர்கள் வீட்டையும், நதியில் நீராடி, நீர் எடுத்துச் சென்றவர்கள் வீட்டையும் கேட்டறிந்து பரிசோதனை செய்யச் சொன்னான்.

அப்போது நீர் எடுத்துச் சென்ற பெண்ணின் வீட்டில் சோதிக்கும்போது நீர்ப்பானைக்குள் பழம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மன்னன் பெண்ணென்றும் பாராமல் அவளை விசாரித்தும் அறிந்துகொள்ள முயலாமல் அவளுக்கு மரணதண்டனை கொடுத்தான். அப்பாவியும், ஏழையும் ஆன அந்தப் பெண் இறக்கும் தருவாயில் மன்னனுக்கு சாபம் கொடுத்தாள். மன்னனின் ஆணையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்களுக்கும் சாபம் கொடுத்தாள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக, நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. திருமணத்திற்குக் காத்திருந்த பெண்களை மணக்கவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய, ஈசனும் அவர்களுக்காக அந்தப் பாம்புகளைப் பிடித்துத் தன் கழுத்தில் ஆபரணங்களாகப் போட்டுக் கொண்டார். மன்னன் தவறு செய்தால் அதற்கு மக்கள் தான் பொறுப்பாளிகள் எனவும், மன்னனைத் திருத்தி நல்லாட்சி செய்யச் செய்திருக்கவேண்டிய மக்கள் அவ்விதம் நடந்து கொள்ளாததையும் சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டு நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்து வாழ அருள் புரிந்தார்.

பாம்புகளைச் சூடிக் கொண்டதால் இவ்வூரின் மூலவரான லிங்கத்தின் மேலேயே நாகங்கள் சூழ்ந்து கொண்டு காணப்படுவதைத் தரிசிக்கமுடியும். ராகு ஸ்தலமான இந்த ஊர் மூலவரின் பெயர் கோதபரமேஸ்வரர் ஆகும். அம்பாள் சிவகாமி அம்மை. லிங்கத்திற்கு நீல வஸ்திரம் சார்த்தி வழிபாடுகள் நடத்தினால் ராகுதோஷம் நீங்கும் என்கிறார்கள். ராகுகாலத்திலும் ஈசனுக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. இங்கு லிங்கத்தில் மட்டுமில்லாமல் பைரவரின் இடுப்பு, மார்பு, மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் மீதும் பாம்பு காணப்படுகிறது. ஆறுமுக நயினார் என்னும் நாகசுப்ரமணியர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பதோடு அவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப் பட்டுள்ளது. அருகிலேயே தென் திருப்பதி என அழைக்கப் படும் திருவேங்கடநாத ஸ்வாமி கோயிலும் உள்ளது. பேருந்துகள் திருவேங்கடநாதபுரம் செல்கின்றன. அந்தப் பேருந்துகளில் சென்றாலே இந்த்க் கோயிலுக்கும் சென்று வரமுடியும்.

அடுத்தது மிகவும் மனதை வருத்தும் ஒரு செய்தியாகும். இந்தக் கோயிலுக்கு நாங்கள் செல்லவில்லை. கேதுவுக்கான இந்தத் தலம் இப்போது அழியும் நிலைமையில் உள்ளதாம். தூத்துக்குடிக்கு அருகே ராஜபதி கைலாசநாதர் கோயில் என அழைக்கப் படும் இந்தத் தலத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். லிங்கத்தின் நாலு பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் உள்ளதாகவும், லிங்கத்திற்குக் கீழே தோண்டினால் பழைய கோயில் கிடைக்கலாம் என்றும் சொல்கின்ற்னர். இந்தத் தலம் பற்றி மிகவும் நன்கு தெரிந்த பக்தர்களே இங்கு செல்கின்றனர். பக்தர்கள் இந்த லிங்கத்திற்குப் பலவர்ண வஸ்திரம் சார்த்தி, அங்கே இருக்கும் மண்ணையே பிரசாதமாய் எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தென் திருப்பேரையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் ரோட்டோரத்திலேயே கேட்பாரற்று இந்த லிங்கம் உள்ளது. பேருந்து வசதி இல்லை. தீரவிசாரித்துத் தெரிந்துகொண்டு தென் திருப்பேரையில் இருந்து ஆட்டோ அல்லது கார் ஏற்பாட்டில் சென்றால் காரிலோ இந்த இடத்தைக் கேட்டுக் கொண்டு அடையவேண்டும். அறநிலையத் துறைஎப்போது மனசு வைக்குமோ அப்போது இந்தக் கோயில் எழும்பும் என்று எதிர்பார்ப்போம்.


இத்துடன் நவகைலாய யாத்திரை முடிவடைந்தது. அடுத்தது தென்காசிக் கோயில், திருக்குற்றாலம், திருநெல்வேலி நெல்லையப்பர் தரிசனம், சங்கரன்கோயில் கோமதி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்றவர்கள் தரிசனத்துடன் திருநெல்வேலி யாத்திரை நிறையும்.

Tuesday, November 24, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் 7


அடுத்த க்ஷேத்திரம் சனிக்கானது. இந்த க்ஷேத்திரம் ஏற்கெனவே நாம் நவதிருப்பதியில் பார்த்தது தான். ஸ்ரீவைகுண்டம் க்ஷேத்திரம் இப்போ நாம்போக வேண்டியது. போகிற வழியெல்லாம் முன்னாடியே பார்த்துட்டோம் இல்லையா? இந்தக் கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப் படுகிறது. இந்தக் கோயிலில் தான் நவ கைலாயக் கோயில்கள் உருவாக காரணமாய் இருந்த உரோமச முனிவருக்குச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாய்த் தெரிய வருகிறது. (சிற்பத்தைப் பார்க்கவில்லை) மேலும் எல்லாக் கோயில்களிலும் இருப்பது போல் நடராஜர், வீரபத்திரர் போன்றோரின் சிற்பங்களும் உள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மனும் காட்சி கொடுக்கிறார். இந்தக் கோயிலின் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். நடராஜர் இங்கே சந்தன சபாபதி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார்.

மூலவர் காசிவிஸ்வநாதர், சிவகாமி அம்மனுடன் உள்ளார். இந்தக் கோயிலில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ வழிபாடு செய்கின்றனர். தடைப்பட்ட திருமணங்கள், இழந்த சொத்துக்களைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கு இங்கே பரிகாரம் செய்து கொள்ளுதல் நலம் எனச் சொல்லப் படுகிறது. ஸ்ரீயும், வைகுண்ட வாசனும் இந்தத் தலத்தில் தங்கி இருப்பதாலேயே இது ஸ்ரீவைகுண்டம் என அழைக்கப் படுவதாயும், நவதிருப்பதிகளிலும், 108 திவ்ய தேசங்களிலும் ஒன்றான கள்ளர்பிரான் கோயிலான நவதிருப்பதிக் கோயிலும் இங்கேயே அமைந்துள்ளதும் விசேஷமாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகிறது. நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகவும், நவ கைலாயத்தின் சனிக்குரிய தலமாகவும் இருப்பதும் தனிச்சிறப்பு எனச் சொல்லப் படுகிறது. எல்லாவற்றையும் விட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்னவெனில் குமரகுருபர ஸ்வாமிகளின் அவதாரத் திருத்தலம் இது. அன்னை மீனாக்ஷியின் அருளைப் பெற்றவரும், வடநாடான காசிக்குச் சென்று திரும்பி வந்து காசிமடத்தைத் திருப்பனந்தாளில் ஸ்தாபித்தவரும் , சகலகலாவல்லி மாலையைப் பாடி மொழித்திறனைப் பெற்றவரும் ஆன குமரகுருபரரின் அவதாரத் தலம் ஸ்ரீவைகுண்டம் ஆகும்.

இந்தக் கோயிலின் நந்தியைச் சுற்றிலும் `108 விளக்குகள் ஏற்ற அமைக்கப் பட்டுள்ளது. இவற்றில் விளக்கு ஏற்றிப் பிரார்த்தித்துக் கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும் எனச் சொல்லுகின்றனர். இங்கே காவல் காப்பது பூதநாதர் ஆகும். பூதநாதருக்குத் தனிச் சிறப்புடன் சித்திரைத் திருநாளில் முதல் மரியாதை செய்யப் படுகிறது. சாஸ்தாவின் அம்சமான பூதநாதருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனத் தைலம் மட்டுமே தடவி வடைமாலை சார்த்துவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. மற்றக் கோயில்களில் பைரவர் சந்நிதியில் கோயிலின் சாவியை வைப்பது போல் இங்கே பூதநாதர் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்து வந்ததாகவும், பூதநாதரை மிஞ்சி எவரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரியவருகிறது. சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்சவமும், ஆறாட்டுவிழாவும் நடக்கிறது. ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம், கந்த சஷ்டி, சிவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டம் கொஞ்சம் பெரிய ஊராக இருப்பதால் இரவு ஒன்பது மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

Wednesday, November 18, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் - 6

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது சுக்கிரனுக்கான தலம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து ஆத்தூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து புன்னைக்காயல் என்னும் ஊர் செல்லும் பேருந்தில் சென்றால் நடுவில் இரண்டு அல்லது மூன்றாம் கிலோமீட்டரில் சேர்ந்தபூமங்கலம் என்னும் பெயருடைய இந்த ஊர் வரும். இந்த ஊரில் தான் ஆறாம் நவ கைலாயம் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து வந்தால் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூரை அடைந்தும் இங்கே செல்லலாம். வழியை நன்கு தெரிந்தவர்கள் துணையோடு சென்றால் ஒரே நாளில் நவ திருப்பதிகளிலேயே அமைந்துள்ள நவ கைலாயங்களையும், நவதிருப்பதி/நவ கைலாயம் செல்லும் வழியில் உள்ள திருப்பதி/கைலாய தரிசனங்களையும் இரண்டு நாட்களில் தரிசிக்க முடியும். சிற்ப விநோதங்களையும் மற்ற இயற்கைக் காட்சிகளையும் காணவேண்டுமானால் நவ திருப்பதி இரு நாட்கள், நவ கைலாயம் தனியாக இரு நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரின் சிற்ப விநோதங்களே பெருமளவு பேசப்படக் கூடியதாகவும், சிற்பக் கலை வல்லுநர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாகவும் அமைந்துள்ளதாய்க் கூறுவார்கள். நாங்க கிருஷ்ணாபுரம் போகவில்லை. இன்னொரு முறைதான் போகணும்.

இப்போ சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதரைத் தரிசிக்கலாமா? இங்கே குபேரனுக்கு மூலவரின் கருவறை விமானத்தின் மேல் சிலை உள்ளது. இரு தேவியருடன் காட்சி அளிக்கின்றான் குபேரன். யானை வாகனத்தில் நடுவில் குபேரனும், இருபக்கமும் இரு தேவியரும் காட்சி அளிக்கின்றனர். இது தவிர சதுரமான பீடம் கொண்ட ஒரே லிங்கமும், தன்னுடன் ஒரு பக்கம் அம்பிகையும் இருவருக்கும் நடுவே விநாயகரும் இருக்கக் காட்சி கொடுக்கும் அற்புதமும் காணலாம். மூலவரின் பெயர் கைலாச நாதர். ரோமசமுனிவர் ஸ்தாபித்த கோயில்களுள் ஆறாவது கோயில் இது. இங்கே மூலவரே சுக்கிர அம்சத்தோடு காட்சி கொடுக்கிறார் என்பது ஐதீகம். அம்பாள் பெயர் அழகிய பொன்னம்மை தெற்கு நோக்கிக் காட்சி கொடுக்கிறாள். கைலாசநாதரை கருவறையில் வணங்கிய பின்னர் விமானத்தில் தரிசனம் கொடுக்கும் குபேரனையும் வணங்குவது மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. சுக்கிரனின் தோஷம் உள்ளவர்களும், செல்வம் வேண்டும் என நினைப்பவர்களும் இங்கே வந்து சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சார்த்தி, மொச்சைப் பொடிசேர்த்த சாதமும், தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுகின்றனர். வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரை இருக்கும் நேரம் வழிபடவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

இரண்டு வாசல்களுடன் கூடிய இந்தக் கோயிலின் தல விருக்ஷம் வில்வம். இங்கே உள்ள பிரகாரத்தில் சொக்கநாதர், மீனாக்ஷி அம்மையுடனும், சனீஸ்வரர், பைரவர் போன்றோரும் பரிவார தேவதைகளாக இடம் பெற்றிருக்கின்றனர். முருகன் மட்டும் தன்னைத் தனியாய்க் கவனிக்கவேண்டுமென்றோ என்னமோ, ஒரு பக்கமாய்த் திரும்பி மயில் வாகனத்தில் நின்று கொண்டிருக்கிறார். வள்ளி, தெய்வானை கூட இருந்தாலும் மயில் வலப்புறம் திரும்பி இருப்பதன் காரணம் தெரியவில்லை. கந்தனுக்குரிய சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இந்தக் கோயில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப் பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மதுரைச் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையும் இடம் பெற்றிருப்பதால் பாண்டிய காலத்துக் கோயிலாக இருக்கலாமென்றே நம்பவேண்டி உள்ளது. தாமிரபரணிதான் இங்கே தீர்த்தம். மேலும் சிறப்பு என்னவென்றால் பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி பாபநாசத்தில் தரை இறங்கி வந்து எல்லா ஊர்களையும் கடந்து இந்த ஊர் அருகே உள்ள புன்னைக்காயலில் தான் கடலில் சங்கமம் ஆகின்றாள். திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்கள் இந்தப் புன்னைக்காயலின் தாமிரபரணியில் நீராடிச் சென்ற பின்னரே திருச்செந்தூரில் கடலாடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றார்கள். இங்கேயும் மார்கழியில் திருவாதிரைத் திருநாளும், சித்திரை மாசம் பிரம்மோற்சவமும் சிறப்பாய்க் கொண்டாடப் படுகிறது. இந்தக் கோயிலும் குறிப்பிட்ட நேரமே திறந்திருக்குமென்பதால் காலை ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாகவும், மாலை ஐந்தரை மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவும் சென்று தரிசிப்பது நல்லது.

Sunday, November 15, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவகைலாயம் 5

அடுத்ததாக நாம் காணப் போவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோயிலாகும். நவ கைலாயங்களில் இது ஐந்தாவது கோயில். குருபகவானுக்கான க்ஷேத்திரம் எனச் சொல்லப் படுகிறது. மற்ற நவகைலாயக் கோயில்களுக்கு நடுவே இது அமைந்திருப்பதால் இதை நடுக்கைலாயம் என்றும் அழைக்கின்றனர். மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூடப் படுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் படுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்லப் படுகிறது. ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்படுகிறது.

சோழமன்னன் ஒருவனுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் முகம் குதிரை முகமாக இருந்தது. பெண்குழந்தைக்குக் குதிரை முகமா என வருந்திய மன்னன், முகம் மாறவேண்டி சிவனை எண்ணிப் பிரார்த்தித்தான். சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி தாமிரபரணியின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நீராடி வழிபாடுகள் செய்யச் சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். நாளா வட்டத்தில் குழந்தையின் முகமும் மனித முகமாக மாறியது. தான் வழிபட்ட உரோமச லிங்கரால் ஸ்தாபிக்கப் பட்ட லிங்கம் இருந்த இடத்தில் மன்னன் ஒரு கோயிலைக்கட்டியதாகவும், அதுவே இந்தக் கோயில் எனவும் கூறுகின்றனர். ஆச்சரியமான செய்தி என்னவெனில் இங்கே உள்ள நந்தியெம்பருமானுக்கும் குதிரை முகமாய் இருக்கிறது.

அதற்குக் காரணம் முன் பிறவியில் செய்த பாவத்தால் குதிரை முகத்தோடு பிறந்த மன்னன் மகளின் பாவத்தை ஈசன் நந்தியை ஏற்க வைத்ததாகவும், அதன் காரணமாகவே நந்திக்குக் குதிரை முகம் என்றும் சொல்லுகின்றனர். இந்தக் கோயிலின் காவலுக்கு இரு பைரவர்கள் இருக்கின்றனர். கால பைரவர் வழக்கமான நாய் வாகனத்தோடும், வீர பைரவர் வாகனம் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர். கைலாய நாதர் இங்கே குரு அம்சமாக வழிபடப் படுகின்றார். அதனால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை நிவேதனம் செய்யப் படும் வழக்கம் இருக்கிறது. அம்பாள் பெயர் சிவகாமி அம்மை. அம்பாளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார். இந்த ஊரில் தான் சூரனின் கொடுமை தாங்கமுடியாமல் ரிஷி முனிவர்கள் ஈசனிடம் முறையிட்டதாகவும் அதனாலேயே இந்த ஊருக்கு முறப்பநாடு எனப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிமீட்டருக்குள் இருக்கும். பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் படுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.

Wednesday, November 04, 2009

மன்னிப்பு

தவிர்க்கமுடியாத காரணங்களினால் பதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்.

Tuesday, October 27, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவ கைலாயம் 4


அடுத்துக் காண இருப்பது புதனுக்கான க்ஷேத்திரம். இது வேறே எங்கேயும் இல்லை. மகரநெடுங்குழைக்காதரைப் பார்த்தோமே, தென் திருப்பேரை, அங்கேயேதான் இந்தக் கோயிலும் உள்ளது. முதல்நாளே அது சரியாத் தெரியலை. அன்னிக்கே பார்த்திருந்தால், நவ கைலாயப் பயணத்தன்று வேறு சில கோயில்களைப் பார்த்திருக்கலாம். தெரியலை. அதோட பலரும் பிரம்மதேசம், திருப்புடை மருதூர், கடையம், கடையநல்லூர் போன்ற ஊர்கள் சென்றீர்களா என்றும் கேட்கின்றனர். கடையம், கடைய நல்லூர் வழியாத் தொட்டுக் கொண்டு சென்றோமே தவிர ஊர்களுக்குள் நுழையவில்லை. பிரம்மதேசம், திருப்புடை மருதூர் போகமுடியலை, நேரம் இல்லாமையால். இனி புதனுக்கான க்ஷேத்திரமான தென் திருப்பேரை கைலாசநாதரைக் காணலாம்.

உரோமச முனிவர் மிதக்கவிட்ட தாமரை மலர்களில் ஏழாவது மலர் ஒதுங்கிய இடமாய்க் கூறப்படும் இந்தத் தலத்தில் கைலாசநாதர் லிங்க வடிவில் தாமரை பீடத்தின் மேல் காட்சி கொடுக்கிறார். தாமரை போன்ற வடிவமைப்புடன் கூடிய பீடம். அம்பிகையின் பெயர் அழகிய பொன்னம்மை. அம்மன் சந்நிதி தனியாக இருக்கிறது. வள்ளி, தெய்வானையோடு கூடிய சுப்ரமணியரும் இங்கே காட்சி கொடுக்கிறார். நவகிரஹங்கள் வாகனங்களில் காட்சி கொடுக்கின்றனர். சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரஹங்கள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் காட்சியைக் காணலாம்.

இந்தக் கோயிலுக்கு ஒரு முறை ஆங்கிலேயே கலெக்டர் துரை என்பவர் இப்பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். இங்கே உள்ள சாவடியில் தங்கி இருந்த அவர் தாகம் தீர்க்க ஒரு இளநீர் கொண்டுவரச் சொல்லுமாறு சேவகனைப் பணித்தார். அருகிலுள்ள தென்னந்தோப்பிற்குச் சென்று கலெக்டருக்காக இளநீர் கேட்ட சேவகனிடம் அங்கிருந்த விவசாயி, கைலாசநாதருக்காக வளர்க்கப் படும் தென்னை மரங்கள் இவை. இந்த இளநீரை ஸ்வாமியின் அபிஷேஹத்துக்குப் பயன்படுத்துவதால் மனிதர் குடிக்கக் கொடுக்கமுடியாது என மறுத்துவிட்டார். துரையிடம் வந்து நடந்ததைச் சொன்ன சேவகனையும் அழைத்துக் கொண்டு தோப்பிற்குச் சென்ற கலெக்டர், விவசாயியிடம், “இந்தத் தோப்பிலுள்ள தென்னை மரத்தின் தேங்காய்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?? சும்மாப் பறிச்சுப் போடு!” என்று கடுமையாக உத்தரவிட, பணிய நேர்ந்தது விவசாயிக்கு. ஒரு இளநீரைப் பறித்துக் கொடுக்க யத்தனித்த போது என்ன ஆச்சரியம்???

உண்மையாகவே அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. கலெக்டரிடம் அதை நீட்டப் பயந்து போனார் கலெக்டர். உடனேயே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தினசரி வழிபாட்டுக்காக அப்போது இருந்த பண மதிப்பில் ஆறரை துட்டு காணிக்கையாக வழங்கினார். இந்தத் தேங்காய் இப்போதும் உடைந்த ஒரு கொம்பு தவிர மற்ற இரு கொம்புகளோடு இந்தக் கோயிலில் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். நந்திக்குத் தலைப்பாகை கட்டி அலங்கரிப்பது இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். இவ்வூரில் உள்ள நவதிருப்பதிக் கோயிலான மகரநெடுங்குழைக்காதர் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்பவர் என்பார்கள். இந்தக் கைலாச நாதரோ புத தோஷத்துக்கு நிவர்த்தி செய்பவர். ஆகவே மாணாக்கர்கள் பெருமாளையும், ஈசனையும் ஒருசேர இங்கே வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இங்கே உள்ள பைரவர் ஆறு கைகளோடு காணப்படுகிறார். வேதத்தின் அம்சம் எனச் சொல்லப் படுகிறார். ஆகையால் இங்கே நாய் வாகனம் இல்லாமலேயே பைரவர் காட்சி அளிக்கிறார். எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இங்கேயும் மார்கழி திருவாதிரையும், சிவராத்திரியும் சிறப்பாக நடைபெறும்.

படம் நன்றி:http://www.shaivam.org

Saturday, October 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 3

அடுத்து கோடகநல்லூர். இதுக்குத் தான் முதல்லே போனோம். நாங்க போனபோது காலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அபிஷேஹம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்தியம் காட்டி தீப ஆராதனைகளும் பார்க்க முடிந்தது. தீப ஆராதனையின் போது அங்கே நின்றிருந்த ஓதுவார் நன்றாகப் பாடினார். கோயிலுக்கென நியமிக்கப் பட்ட ஓதுவார் அவர். பரம்பரையா என்னனு கேட்டுக்கலை. மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்தார். கோயில் சுத்தமாக இருந்தது. ஆனாலும் ஏழைக் கோயில் தான். சேரன்மஹாதேவிக்குச் செல்லும்வழியிலேயே இருக்கிறது. நாங்க வாடகைக் காரில் போனதால் போக முடிந்தது. இந்தக் கோயிலுக்கு அதிகம் பேருந்து வசதி இல்லை. நடுக்கல்லூர் என்னும் ஊருக்கு அருகே நடுவழியில் இறக்கிவிட்டுடுவாங்க. அங்கிருந்து இந்த ஊருக்கு நடந்தே வரணும். அர்ச்சகர் இந்த ஊர்க்காரர். ஓதுவாரும் இதே ஊர். அதனால் வழிபாடுகள் நேரத்துக்கு நடக்கிறது. அரசின் கவனம் திரும்பினால் இன்னும் கொஞ்சம் வசதியாய் இருக்கும்னு குருக்களும், ஓதுவாரும் சொன்னார்கள். இனி கோயில் வரலாற்றைப் பார்ப்போம்.

நவ கைலாயக் கோயில்களிலேயே இந்தக் கோயிலின் மூர்த்திதான் மிகப் பெரிய திருவுருவம் கொண்டவர். இவருக்குக் கட்ட குறைந்த பட்சமாக எட்டு வேட்டிகளாவது தேவைப்படும் எனச் சொன்னார்கள். அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் வழிபட்ட தலம் இது என்பதால் செவ்வாய் தோஷத்துக்கான பரிகார தலமும் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் மகனும் இருந்தான். ஒரு நாள் காட்டில் விறகு பொறுக்க மகன் காட்டினுள் செல்ல, அங்கே ஒரு ராஜகுமாரன் வந்தான். அவனுக்கு முனிவரைப் பார்த்ததும் தன் ராஜ்யத்தை விஸ்தரிக்க என்ன செய்யலாம்?? ஏதானும் யாகம் செய்யலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆகவே முனிவரை எழுப்பிக் கேட்டான். ஆனால் பரிபூரண நிஷ்டையில் இருந்த அந்த முனிவரோ எவ்வளவு எழுப்பியும் எழவே இல்லை. கோபம் வந்த ராஜகுமாரன் ஒரு செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டுவிட்டுப் போய் விட்டான். பாம்பு கழுத்தில் போடப் பட்டது கூடத் தெரியாமல் முனிவரோ நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

முனிகுமாரன் திரும்பி வந்து பார்த்தபோது தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைக் கண்டான். யார் செய்தது என்பதும் தெரிய வந்தது. உடனேயே அரண்மனைக்குச் சென்று ராஜகுமாரனிடம் உன் தந்தை ஒரு பாம்பினாலேயே இறப்பார் என்ரு சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான். பயம் அடைந்த ராஜா தன் விதி என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி அரண்மனை ஜோதிடர்களை வரவழைத்துத் தன் ஜாதகத்தைப் பார்க்க, சர்ப்ப தோஷம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே பாம்பிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய அரசன் ஒரு மறைவிடத்தில் சென்று ஒளிந்து வசிக்கலானான். எறும்பு கூடப் புகமுடியாதபடிக்குக் கட்டப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் வசித்த அரசன் ஒருநாள் மாம்பழம் சாப்பிட்டான். மாம்பழத்தில் இருந்த சிறு புழு ஒன்று பழத்திலிருந்து வெளிப்பட்டு பாம்பாக மாறி அரசனைத் தீண்டியது. அரசன் இறந்து போனான். தப்பு செய்த ராஜகுமாரனை விட்டுவிட்டு அரசனைத் தீண்டிய பாம்புக்குத் தோஷம் பீடிக்க அது தியானம் மூலம் பரம்பொருளைத் துதிப்போம் எனத் துதிக்க ஆரம்பித்தது. மஹாவிஷ்ணு அந்தப் பாம்பிடம் சிவபெருமானை வழிபடச் சொல்ல, அதுவும் மனமுருகிப் பிரார்த்திக்க கைலைமலை வாசனும் பாம்பிற்கு முக்தி கொடுத்தார். பரிக்ஷித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்புக்கும் இங்கே முக்தி கிடைத்ததால் கோடகநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். இங்கே இப்போவும் கருநாகங்கள் அதிகம் உலாவும் எனவும் சொல்லுகின்றனர்.

இங்கே அம்பாள் பெயர் சிவகாமி அம்மன். இவளைத் தவிர அநந்த கெளரி என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அம்மனும் இருக்கிறாள். இவளைச் சர்ப்பயட்சி என்றும் நாகாம்பிகை என்றும் சொல்கின்றனர். ஈசனுக்குத் துவரம்பருப்பு நைவேத்யம் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சிவப்பு வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நந்திக்குத் தாலி கட்டும் அதிசய வழக்கமும் இங்கே உண்டு. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இங்கே 58 விரலி மஞ்சளால் கோர்க்கப் பட்ட தாலியை நந்தியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கின்றனர். இப்படிச் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரி, திருவாதிரை, போன்றநாட்களில் உற்சவம் உண்டு. மற்றபடி கொடிமரமோ, பலிபீடமோ, பரிவார மூர்த்திகளோ இந்தக் கோயிலில் காணமுடியாது.

Wednesday, October 21, 2009

தாமிர பரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 2

அடுத்து, சந்திரனுக்குரிய தலம். சேர்மாதேவி, சேரன்மஹாதேவி என்றெல்லாம் சொல்லப் படும் ஊர். திருநெல்வேலியில் இருந்து 25 அல்லது 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்போ சொல்லும் வரிசையிலே நாங்க போகலை. நாங்க போனது முதலில் கோடகநல்லூர் தான். அது செவ்வாய்க்கான தலம்னு குறிச்சு வச்சிருக்கேன். பாபநாசம் கடைசியிலே தான் போனோம். மேலே ஏறிச் செல்லவேண்டும், அங்கேயும் பார்க்கக் கோயில்கள், தீர்த்தம், அருவி இருக்குனு தெரியலை. அதனால் போயிட்டுக் கீழே இறங்க நேரம் இன்மையால் தவற விட்டோம். மீண்டும் ஒருமுறை போகணும். பார்ப்போம். சேர்மாதேவியில் சீக்கிரமாய்ப் போனால் தான் ஸ்வாமி தரிசனம் செய்யமுடியும். கோயிலைச் சீக்கிரமே சாத்திடறாங்க. நல்லவேளையா நாங்க சீக்கிரமே போனோம். ஒன்பது மணிக்குப் போயிருந்தால் கூடப் பார்க்கிறது சிரமம் தான்.

ஏற்கெனவே சொன்ன உரோமசர் தாமரைப் பூக்களை இட்ட கதையைத் தவிர இங்கே சொல்லும் மற்றொரு கதை இரு சகோதரிகளைப் பற்றியது. உரோமசருக்குப் பின்னர் கோயில் இருந்த இடம் தெரியாமல் லிங்கம் மட்டுமே ஒரு அரசமரத்தடியில் இருக்க, அங்கே வாழ்ந்து வந்த இரு சகோதரிகள், சிவ பக்தைகள். வீட்டிலேயே நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்த அவர்கள், தினமும் இந்த லிங்கத்துக்கு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வேலையைத் தொடங்குவார்கள். அவர்கள் லட்சியமே இந்த லிங்கம் மரத்தடியில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஒரு அழகான கோயில் கட்டி அங்கே இவரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நினைத்தனர். தங்களது உழைப்பின் பயனில் வரும் லாபத்தைச் சிவன் கோயில் கட்டவெனச் சேர்த்து வைத்தனர். அவர்களைச் சோதிக்க எண்ணிய ஈசன் ஒரு சிவனடியார் உருவில் அவர்கள் வீடு வந்தார்.

வந்தவர் மிகுந்த பசியோடு இருப்பதாய்ச் சொல்ல, சகோதரிகள் அவரை வரவேற்று, பாதபூஜை செய்து, உணவு அருந்த வருமாறு அழைத்தனர். வீட்டில் விளக்கு எரியவில்லை. உடனேயே அதைச் சுட்டிக் காட்டிய சிவனடியார், வீட்டில் விளக்கு எரியவில்லை எனில் எவ்வாறு வெளிச்சம் இருக்கும்? அது போலவே மங்களமும், செல்வமும் தங்காது. எனவே இந்த வீட்டில் உணவருந்த மாட்டேன், என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார். பதறிய சகோதரிகள் விளக்கைத் தேடியும் கிடைக்காமல், ஒரு தேங்காயை எடுத்து உடைத்து, அதிலே நெய்யை ஊற்றி, விளக்கு ஏற்றி வைத்தனர். சிவனடியாரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சுயவுருவில் காட்சி அளித்தார். சிவனடியாரின் அருளால் செல்வமும் பெருகவே, சகோதரிகள் நினைத்த வண்ணமே கோயிலை எழுப்பினார்கள்.

ஈசன் பெயர் அம்மநாதர். தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது இந்தத் தலம், அம்மையப்பர் என்றும் சொல்லுகின்றனர். அம்மன் வலப்பக்கமாய்க் காட்சி கொடுக்கிறாள். அதாவது அம்மன் சந்நிதி அம்மநாதரின் சந்நதிக்கு வலப்புறமாய்க் காணப்படுகிறது. கோமதி அம்மன், ஆவுடைநாயகி என்ற பெயரில் அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கும், அம்மனுக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கும் கோயில் என்று சொல்லுகின்றனர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக சிதம்பரத்து நந்தனார் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார் போலும். கொடிமரத்துக்குக் கீழே உள்ள பீடத்தில் நந்தனார்(??) சிற்பம் காட்சி கொடுக்கிறது. நந்தியாரும் சற்றே விலகி இருக்கிறார். அதனாலேயே நந்தனார் எனத் தோன்றுகிறது.

அரிசி வியாபாரிகள் அனைவருமே இந்தக் கோயிலில் தங்கள் வியாபாரம் செழிக்கப் பிரார்த்தனை செய்து கொள்வதுண்டு என்று சொல்கின்றனர். திருமண தோஷமும் நீக்கப் படும் பரிஹார தலமாய்ச் சொல்லுகின்றனர். அம்மன் சந்நிதியில் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைக்கின்றனர். அம்மனுக்கு மாதுளம்பழச் சாறினால் அபிஷேஹம். நவகிரஹங்கள் இங்கே காணப்படவில்லை. வழக்கம்போல் நடராஜர் இருக்கிறார். பைரவருக்கு இங்கே நாய் இல்லாமல் தனியாகக் காட்சி கொடுக்கிறார். தல விருக்ஷம் பலா. கோயிலைக் கட்டிய சகோதரிகள் சிற்பம் இருக்குனு சொன்னாங்க. தேடிப் பார்க்க முடியலை. பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். படம் போடமுடியலை. மன்னிக்கவும்.

Tuesday, October 20, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம்! 1.


நவ கைலாயம்: கீழ்க்கண்ட ஒன்பது ஊர்கள் நவ கைலாயங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர நவ சமுத்திரம் என்று சமுத்திரம் என்ற பெயரில் அழைக்கப் படும் ஊர்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் போக முடியலை.


பாபநாசம்
சேரன்மாதேவி
கோடகநல்லூர்
குன்னத்தூர்
முறப்பநாடு
ஸ்ரீவைகுண்டம்
தென் திருப்பேரை
ராஜபதி,
சேந்தமங்கலம்


நவ சமுத்திரங்கள்:

அம்பாசமுத்திரம்
வீரா சமுத்திரம்
தளபதி சமுத்திரம்
கோபால சமுத்திரம்
ரத்னாகார சமுத்திரம்(திருச்செந்தூர்)
ரவண சமுத்திரம்
அரங்க சமுத்திரம்
வால சமுத்திரம்
வடமலை சமுத்திரம் (பத்மநேரி)



இந்த நவ கைலாயங்களில் சில கோயில்கள் நவதிருப்பதிகள் இருக்கும் ஊரிலேயே இருக்கின்றன. அதை முன் கூட்டியே நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு செல்லவேண்டும். எங்களுக்குத் தெரிஞ்சும், ஓரிரண்டு கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. நேரப் பற்றாக்குறைதான் காரணம். நவ திருப்பதிகளை ஒரே நாளிலேயே முடித்துவிடலாம். அப்போதே அங்கங்கே இருக்கும் நவ கைலாயக்கோயில்களையும் பார்த்திருக்க வேண்டும். முடியலை! மறுநாள் போக நினைச்சுப் போக முடியலை. நவ கைலாயங்கள் தனியாகப் பார்க்கணும்னா இரண்டு நாட்கள் தேவை. நாங்க அன்னிக்கே ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தபடியால் மத்தியானமே திருநெல்வேலி திரும்பவேண்டிய கட்டாயம். ஆகவே செல்ல நினைக்கிறவர்கள் நன்கு தெரிந்து கொண்டு செல்லவேண்டும்.

இப்போ முதலில் வருவது பாபநாசம் பாபநாசநாதர் கோயில் தான். சூரியனுக்கு உரிய பரிஹாரத் தலமாகச் சொல்லப் படுகிறது. தாமிரபரணி மலையில் இருந்து கீழே இறங்கியதும், இந்தக் கோயிலுக்கு எதிரே தான் ஊருக்குள்ளே நுழைகிறாள். மிகவும் அழகான சுற்றுச் சூழ்நிலை. இயற்கையின் அழகு கண்ணைப் பறிக்க எதிரே தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதியாகிய நதிகளுக்கெல்லாம் மூத்த தாமிரபரணி சமநிலைக்கு வந்து விட்டாள். அங்கே மதியம் உச்சிக்கால வழிபாட்டின்போது நதியின் மீன்களுக்குக் கூட உணவிடுகின்றனர். இந்த வழிபாடு வரையில் இருந்து நாங்கள் பார்க்கலை என்றாலும் சொன்னார்கள்.

திருநெல்வேலியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் பாபநாசத்துக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து செல்கிறது. என்றாலும் நாங்கள் வாடகைக்காரிலேயே பயணத்தைத் தொடர்ந்தோம். இந்தக் கோயிலின் சித்திரை விஷு மிகவும் பிரபலமானது. அன்று தான் அகத்தியருக்கு ஈசன் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளினார் என்று சொல்கின்றனர். ஈசனின் திருக்கல்யாணத்தின்போது பூமிபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, சமப்படுத்த வந்தார் அகத்தியர் பொதிகை மலைக்கு. இங்கே இருந்த அகத்தியருக்கு ஈசன் சித்திரை விஷு அன்று தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளியதாக ஐதீகம். மூலஸ்தான சந்நிதிக்குப் பின்னால் உள் பிரஹாரத்தில் அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டி அருளிய கல்யாண சுந்தரர், அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காக்ஷி அளிக்கின்றார். அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் ஈசனை வணங்கிய கோலத்தில் காணப்படுவார். அகத்தியரின் சீடர் ஆன உரோமச முனிவர் ஈசனுக்கு தாமிரபரணிக்கரை ஓரம் கோயில்கள் எழுப்ப விரும்பி குருவை ஆலோசனை கேட்க, ஈசனுக்கு வழிபாடு செய்த தாமரை மலர்கள் ஒன்பதை உரோமசரிடம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீசி எறியும்படி அகத்தியர் சொல்ல அப்படியே செய்கின்றார் உரோமசர். அவை ஒதுங்கிய ஒன்பது இடங்களிலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.

இங்கே உள்ள ஈசனுக்கு முக்களா நாதர் என்ற பெயரும் உண்டு. மூன்று வேதங்களும் மூன்று களா மரங்கள் உருவில் ஈசனை வழிபட்டதாகவும் அதர்வ வேதம் ஆகாய ரூபத்தில் வழிபட்டதாகவும் சொல்கின்றனர். கருவறையில் ருத்ராக்ஷ வடிவில் ஈசன் காணப்படுவார். ப்ராஹாரத்தில் முக்களா மரத்தின் கீழ் காணப்படுகின்றார். அசுர குருவான சுக்ராசாரியாரின் மகன் துவஷ்டாவை ஒரு சமயம் குருவாக ஏற்கவேண்டி வந்தது இந்திரனுக்கு. துவஷ்டாவோ அசுரர்களுக்கே நன்மை செய்யும் வண்ணம் யாகங்கள் செய்தான். இது அறிந்த இந்திரன், துவஷ்டாவைத் தன் குரு என்றும் பாராமல், கொல்ல, பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது இந்திரனுக்கு. தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள எல்லா இடங்களுக்கு அலைந்துவிட்டுக் கடைசியாக பாபநாசம் வந்து இங்கே உள்ள இறைவனை வழிபட்டுத் தன் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்கிறது தல வரலாறு.

அம்பாள் பெயர் உலகம்மை. இவள் சந்நிதி முன்பு உரல் ஒன்றும், உலக்கையும் உள்ளது. கோயிலிலேயே விரலி மஞ்சள் கொடுக்கின்றனர். அதை இந்த உரலில் இட்டு இடித்துவிட்டு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டு வரலாம். நல்லவேளையா இதுக்குக் காசு எதுவும் வாங்கலை! இந்த மஞ்சள் பொடியினாலேயே அன்னைக்கு அபிஷேஹமும் நடக்கும் எனச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமும் அருந்தினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்கே தைப்பூசத்தன்று நந்திக்குச் சிறப்பு வழிபாடு சந்தனக்காப்போடு நடக்கிறது. வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் தைப்பூசத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் ஆநந்த தாண்டவம் ஆடிய வண்ணம் ஈசன் காக்ஷி அளித்ததால் தைப்பூசத்துக்கு நந்திக்குச் சிறப்பு வழிபாடு. நடராஜர் தனி சந்நிதியில் ஆநந்த தாண்டவக் கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். இவருக்குப் புனுகு மட்டுமே சார்த்தப் படுகிறது. இவரைப் புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.


படங்கள் உதவி: நன்றி கூகிளார்.

Sunday, October 18, 2009

நவ கைலாயம் பற்றிய பதிவுகள் மிகவும் தாமதம் ஆவதற்கு வருந்துகிறேன். புதன் கிழமைக்குள்ளாக ஆரம்பிக்க முடியும் என நம்புகிறேன். இறை அருளை வேண்டுகிறேன். நன்றி.

Monday, September 07, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -

மூலவர் ஆதிநாதப் பெருமான் என்ற பெயரிலும் பொலிந்து நின்ற பிரான் என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்றார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. (நம்ம வல்லி சிம்ஹன் நினைவுக்கு வராங்களா? இது அவங்க ஊரே தான்! :D) கோவிந்த விமானத்தின் கீழே கிழக்கே பார்த்துக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கே மூன்று மைலில் இருக்கும் இந்த ஊருக்கெனத் தனியான ரயில்வே நிலையம் உள்ளது. இங்கே மார்கழியில் அத்யயன உற்சவத்தின் போது நம்மாழ்வாருக்கு முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாய் நடை பெறும். மேலும் நம்மாழ்வார் இங்கே தனிச்சன்னதி கொண்டும் விளங்குகின்றார். மார்கழி ராப்பத்து உற்சவத்தின்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் காதாரக் கேட்கும் எம்பிரான் நம்மாழ்வாருடன் ஒரே மண்டபத்திலே எழுந்தருளுகின்றார் எனச் சொல்கின்றனர். பத்தாம் நாள் பத்து அன்று “முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா” என்ற பாசுரம் வரும் என்கின்றனர். அப்போது நம்மாழ்வாரை மெதுவே எழுந்தருளச் செய்து பெருமமளின் பாதாரவிந்தங்களிலே நம்மாழ்வாரின் தலை படும்படியாகச் சமர்ப்பிக்கின்றனர்.

பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கிடக்கும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து, நம்மாழ்வாருக்கு முக்தி கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் சந்தோஷம் கொண்டாலும், மறுபக்கம் நம்மாழ்வாரைத் திரும்பத் தரும்படியும் வேண்டுவார்களாம். அப்போது சுவாமியும் நம்மாழ்வாரைத் "தந்தோம், தந்தோம், தந்தோம், சடகோபனைத் தந்தோம், நம் ஆழ்வானைத் தந்தோம்”, என்று சொல்லி பக்தர்களுக்கு அருள் புரிவார் என்று சொல்லுகின்றனர். ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும். கூட்டத்தை நினைச்சால் பயமா இருக்கு.

இது தவிர, வைகாசி உற்சவத்தின்போது திருக்குருகூரைச் சுற்றி அமைந்துள்ள மற்ற எட்டுத் திருப்பதிகளில் இருந்தும் பெருமாள் இங்கே வந்து நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கேட்க வருகின்றனர். நம்மாழ்வாரே முகமன் கூறி அவர்களை வரவேற்பதாக நம்மாழ்வாரின் உற்சவர் சென்று வரவேற்பு அளிக்கும் ஐதீகம் நடை பெறுகிறது. நம்மாவாரின் சந்நதியிலேயே பெருமாள்கள் அத்தனை பேரும் பாசுரங்களுக்காகக் காத்துக்கிடக்கும் அதிசயமும் நடக்கிறது. மதியம் திருமஞ்சனம் முடிந்து இரவு கருட சேவையில் ஒவ்வொரு பெருமாளும் வரிசையாக ஆழ்வாரின் சன்னதியைத் திறந்து கொண்டு வெளியே வருவார்கள். ஆஹா, நினைச்சுப் பார்த்தாலே பார்க்கணும்போல இருக்கு. இதெல்லாம் சொல்லித் தான் கேட்க முடிஞ்சது. ஒன்பது திருப்பதிகளின் பெருமாள்களும் வீதிவலம் வருவார்கள் நம்மாழ்வாரோடு. மதுரகவி ஆழ்வாரும் வீதி வலம் வருவார் என்றார்கள். இரவு பதினொரு மணிக்குக் கிளம்பும் ஊர்வலம் மறுநாள் விடியற்காலை ஐந்து, ஆறு மணி வரை நடைபெற்றுப் பின்னர் திருக்குருகூர் கோயிலின் மங்களாசாசன மண்டபத்திற்கு வந்து சேர்வார்கள். ஆழ்வார் ஒரு பல்லக்கில் இருப்பார். அப்போது ஒவ்வொரு பெருமாளுக்கும் அந்த அந்தப் பெருமாள் மீது பாடிய பாசுரங்கள் இசைக்கப் பட்டு பெருமாளுக்கு நம்மாழ்வார் விடை கொடுத்து அனுப்பும் காட்சி நடை பெறும். பாடலைப் பெற்றுக் கொண்டு பரமானந்தத்துடன் எல்லாப் பெருமாள்களும் தத்தம் இருப்பிடம் சென்றடைவார்களாம். கண்கொள்ளாக் காட்சி என்கின்றனர்.

நம்மாழ்வார் செய்த தவம் தான் என்னே! இறைவன் அடைவதற்கு எத்தனை எளியவன் என்று சொல்லுகின்றார் நம்மாழ்வார். அவன் பெரியவன் மட்டுமல்ல, எளிதில் அவன் நம்மிடம் வருவான் என்றும் வாழ்ந்து காட்டினார்.

டிஸ்கி: இந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு நன்றி திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள். இத்துடன் நவதிருப்பதிகள் முடிந்தன. நவ கைலாயங்கள் அடுத்து ஆரம்பிக்கும். தொடர்ந்து ஆதரவை வேண்டுகிறேன். நன்றி.

Thursday, September 03, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்!

மணவாள மாமுனிகள்
ஆழ்வார்களுக்குள் நம்மாழ்வாருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது என்பதே அனைவரின் கருத்தும். அதனாலேயே மணவாளமாமுனிகளும், அவர் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து,

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள்
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்
குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்!”

என்று நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார். வேதத்தின் சாரமாய்க் கருதப் படுகின்ற இவரின் பாசுரங்களைச் சிறப்பித்து நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனே இவரை “நம்மாழ்வார்” என்று பெருமையுடன் அழைத்துப் பெருமைப் படுத்தியதாய்த் தெரிய வருகிறது.

நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளி மரம் இன்னமும் திருக்குருகூரில் காணக்கிடைக்கிறது. இந்தப் பாசுரங்கள் அனைத்துமே திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் தேய்ந்து மறைந்து போய்விட்டன. ஒன்பதாம் நூற்றாண்டில் காட்டுமன்னார்குடி எனத் தற்போது அழைக்கப் படும் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகள் என்ற பெயரில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தை பிறவியிலேயே விஷ்ணுவிடம் பக்தி பூண்டு வந்தது. அந்த ஊர்க் கோயிலுக்கு யார் வந்தாலும், அவர்கள் பாடும் பாசுரங்களில் பெருமாளின் ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு திவ்யதேசமும் சிறப்பித்துக் கூறப் பட்டிருப்பதை நாதமுனிகள் கேட்டு அநுபவித்து வந்தார். நாளாவட்டத்தில் அவருக்குப் பாசுரங்களின் மேல் அதீதக் காதல் ஏற்பட்டன. ஒரு சமயம் கும்பகோணம் ஆறாவமுதன் மேல் பாடப் பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்கள் பதினொன்றையும் கேட்டுவிட்டு, பதினோராவது பாடலில், இந்தப் பாடலை எழுதியவர் குருகூர்ச் சடகோபன் என்பவர் எனக் குறிப்பு வரவே, மேல் விபரங்கள் தேடியதில் சுமார் ஆயிரம் பாசுரங்களை குருகூர்ச் சடகோபன் பாடி இருப்பது தெரிய வந்தது.ஆயிரம் பாடல்களையும் அறிய முற்பட்ட நாதமுனிகளுக்கு அவை கிடைக்கவில்லை. பாடிக் காட்டியவர்களுக்கும் சரிவரத் தெரியவில்லை. இதன் மூலத்தை அறிய வேண்டி திருக்குருகூர் வந்தார் நாதமுனிகள். அங்கே மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சிலர் மதுர கவி ஆழ்வார் நம்மாழ்வாரைக் குறித்துப் பாடிய பதினொரு பாடல்களைத் தந்து, நாதமுனிகளை, அந்த உறங்காப்புளிய மரத்தினடியில் அமர்ந்து நம்மாழ்வாரைத் தியானித்து, இந்தப் பதினொரு பாசுரங்களையும் பனிரண்டாயிரம் முறைகள் நியமங்களை அனுசரித்துச் ஒன்னால் நம்மாழ்வாரே விரும்பியதை அருள்வார் எனச் சொல்ல, நாதமுனிகளும் அவ்வண்ணமே தாமிரபரணியில் நீராடி உறங்கப்புளிய மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். பனிரண்டாயிரம் முறைகள் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் பாடினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி, “உமக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டி நாதமுனிகள் வேண்டினார். நம்மாழ்வார் நாதமுனிகளின் பக்திக்கு மெச்சி, அந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமில்லை, மற்றப் பாசுரங்களையும், இன்னும் மற்ற ஆழ்வார்கள் பாடியதையும் சேர்த்தே தருகின்றேன் என்று சொல்லிவிட்டு அவ்வண்ணமே அனைத்துப் பாசுரங்களும் கிடைக்கும்படி அருளிச் செய்தார். இவை அனைத்துமே நம்மாழ்வார் தவமிருந்த புளிய மரத்தினடியிலேயே நடந்தது என்பது அந்தப் புளிய மரத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.

இந்த க்ஷேத்திரத்துக்குத் திருக்குருகூர் என்னும் பெயர் வரக் காரணம் பிரம்மா பல்லாண்டுகள் மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றி “அர்ப்பணம் குரு” எனச் சொன்னதால் திருக்குருவான ஆதிநாதன் கோயில் கொண்ட இடம் திருக்குருகூர் எனப் பட்டது. பின்னர் நம்மாழ்வாரின் பெருமையால் ஆழ்வார் திருநகரி எனச் சிறப்புப் பெயரும் பெற்றது. இதைத் தவிர இந்த ஊருக்கு தாந்த க்ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. வடநாட்டில் இருந்த தாந்தன் என்னும் வேதம் பயின்று கொண்டிருந்த அந்தணனை அனைவரும் மதிக்காமல் ஏசினார்கள். மனம் வருந்திய அவன் பரிஹாரம் என்ன எனத் தேட திருக்குருகூர் சென்று ஆதிநாதரைக் குறித்துத் தொழுதால் ஞானம் உண்டாவதோடு நன்மையும் ஏற்படும் எனத் தெரிய இங்கே வந்து அவ்வண்ணமே செய்தான். அவனுக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. நம்மாழ்வாருக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. இனி கோயிலின் பெருமாளையும் நம்மாழ்வாரின் முக்தியைக் குறிக்கும் நிகழ்வு பற்றிய சிறப்பையும் பற்றிக் காணலாம்.

Tuesday, September 01, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நம்மாழ்வார் தொடர்ச்சி!

நம்மாழ்வாரும் , மதுரகவியாழ்வாரும்
நாம போன பதிவிலே பார்த்த திருக்கோளூரில் ஒரு அந்தண குலத்தில் பிறந்த ஒரு குழந்தை இளமை முதலே அருமையான கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தது. அதனால் குழந்தை மதுரமான கவிகள் பாடுவதால் மதுரகவி எனப் பெயரும் பெற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து வேத, சாத்திரங்களை நன்கு பயின்று மேலும் பயிலவும் வடநாடு சென்றார். நாட்கள் செல்லச் செல்ல உலக வாழ்க்கையில் பற்று நீங்கியது. அயோத்தி, மதுரா போன்ற திவ்ய தேசங்களைத் தரிசித்தார். ஒருநாள் அவர் அயோத்தியில் தங்கி இருந்தார். மாலை மங்கி இரவுப் போதில் தங்கியிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது விண்ணில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி தென் திசை முழுதும் வியாபித்திருந்ததையும் கண்டார். என்னவெனப் புரியாமல் அன்றைய இரவைக் கழித்தார். மறுநாள் இரவு மீண்டும் அதே மாதிரி அதிசயம். தென் திசை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அத்தோடு மட்டுமா? அந்த ஒளி அவரை அழைப்பது போலவும் தோன்றியது அவருக்கு.

தெற்கே ஏதோ ஓர் அதிசயம் நடந்துள்ளது என்பதையும், அந்த ஒளியைத் தான் பின்பற்றிச் செல்லவேண்டும் என்பதையும் மதுரகவியாழ்வார் உணர்ந்தார். தென் திசை நோக்கிப் பயணப் பட்டுத் திருக்குருகூர் வந்தடைந்தார். அங்கே ஓர் புளியமரத்தடியில் அந்தப் பேரொளி நிலை பெற்றிருப்பதைக் கண்டார். புளியமரத்தடியில் ஒரு பாலகன் மோன தவத்தில் இருந்ததையும் கண்டார். மோனத் தவத்தில் இருந்த சிறுவனை எழுப்ப முயன்றுவிட்டுப் பின்னர் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு முதலில் சிறுவனின் சமாதியைக் கலைத்தார். பின்னர் அந்தச் சிறுவனிடம், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். பிறந்ததில் இருந்து அதுவரையிலும் பேசாமல், அசையாமல் இருந்த அந்தச் சிறுவன் அப்போது, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.” என்று பதில் சொன்னான். இந்தக் கேள்வியும், இதற்கான பதிலும் மேலோட்டமாய்ப் பார்க்க சாமானியமாயும், அர்த்தம் இல்லாமலும் தோன்றினாலும் இதன் உள் அர்த்தமானது மானுட வாழ்வின் தத்துவத்தையே உணரத்துவதாய்ப் பெரியோர் சொல்லுவார்கள்.

“ஜீவன் சூக்ஷ்மம் ஆனது. அது கண்ணுக்கே தெரியாத ஒன்று. அந்த ஜீவன் சூக்ஷ்மம் ஓர் மனித உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது. அப்படி சூக்ஷ்மம் ஆன ஜீவன் பிறவி எடுத்தால் அப்போது அந்தப் பிறவியின் வாழ்க்கை எப்படி அமையும்?” இதுவே மதுரகவி ஆழ்வாரின் கேள்வி. இதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதிலானது, "தன் பூர்வ ஜென்மத்தின் புண்ணிய, பாவங்களை, அவற்றின் பலாபலன்களை நுகர்வதே இந்த ஜென்மத்தின் வாழ்க்கையாய் இருக்கும்" என்பதே ஆகும். இவரின் இந்த நுண்ணிய அறிவையும், பிறக்கும்போதே சகல ஞானமும் அறிந்தே பிறந்திருப்பதையும் உணர்ந்து கொண்ட மதுரகவி ஆழ்வார் அக்கணமே அவரைத் தன் குருவாக வரித்துக் கொண்டார். மதுரகவி ஆழ்வார் இவரைப் போற்றியே பாடல்கள் புனைந்துள்ளார். அவை பதினொரு பாடல்களாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று
"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே."

நம்மாழ்வாருக்குப் பிறக்கும்போது இட்ட பெயராக "மாறன்" என்று தெரிய வருகிறது. இதைத் தவிர பராங்குசன் என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார். பக்தி என்ற அங்குசத்தைக் கொண்டு பெருமாளை வசப் படுத்தியதால் பராங்குசன் என்று சொல்லுவார்கள். மற்ற ஆழ்வார்கள் சரீரம் என்றால் அந்த சரீரத்தின் ஆன்மா நம்மாழ்வார் என்று சொல்லுவது வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. நம்மாழ்வார் எழுதிய பாடல்களை எல்லாம் "திருவாய்மொழி" என்னும் சிறப்புப் பெயராலும், "திராவிட வேதம்" என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப் படுகின்றது. இந்தப் பாடல்கள் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது.
திருவாசிரியம் - யஜுர் வேதம்
திருவிருத்தம் - ரிக்வேதம்
பெரிய திருவந்தாதி- அதர்வ வேதம்
திருவாய்மொழி- சாமவேதம்
என்று சொல்லப் படுகின்றது. கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் நம்மாழ்வார் சொல்லச் சொல்ல பட்டோலையில் மதுரகவி ஆழ்வார் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. ஆழ்வார்கள் அத்தனை பேரிலும் இவரை மட்டுமே "நம்" என்று சிறப்பித்து நம்மாழ்வார் எனவும் கொண்டாடப் படுகின்றார். பெரிய திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் பாடல் சொல்லுகின்றது.

Wednesday, August 26, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி

திருக்குருகூர் தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில் தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார் ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை பற்றிப் பார்ப்போமா??

ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும் இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில் போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும் பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்??? விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்! கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்! அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.(2832) திருவாய்மொழி

சரி, எல்லாரையும் பிறக்கச் சொல்லியாச்சு, அதற்கான இடம் வேண்டாமா? அதுக்குத் தகுந்த க்ஷேத்திரமாகத் திருக்குருகூர் தேர்வு செய்யப் பட்டது பகவானாலேயே. தாய், தகப்பன்? அதுவும் தேர்வு செய்யப் பட்டது. திருவழுதி வளநாடரின் வழித் தோன்றலான காரி என்பவருக்கும் அவர் மனைவியான உடைய நங்கைக்கும் குழந்தைகளே இல்லை. அவர்கள் இருவரும் அருகே உள்ள திருக்குறுங்குடி என்னும் திவ்ய க்ஷேத்திரத்தின் நம்பியை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். இருவரின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்த எம்பிரான் தம்பதியரிடம், “யாரைப் போன்ற பிள்ளை வேண்டும்?” என்று கேட்க, உடைய நங்கையோ யோசிக்கவே இல்லை. “பரந்தாமா! உன்னைப் போல் பிள்ளை வேண்டும்” என்று கேட்டுவிட்டார். பகவானும், “அவ்வண்ணம் நாமே உமக்கு மகனாய்த் தோன்றுவோம்” என்று சொன்னாராம். அப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், சேனை முதலியாரின் அம்சமும் சேர்ந்து தோன்றியவரே நம்மாழ்வார். குழந்தை பிறந்தாச்சு. குழந்தை அழணுமே? ஆனால் அழவே இல்லை, பால் குடிக்கணுமே? தாயிடம் பால் குடிக்கவும் இல்லை. எந்தவிதமான உணவும் எடுக்கவில்லை. இது என்ன அதிசயக் குழந்தை? இதை எவ்வாறு வளர்ப்பது? புரியாமலேயே கலங்கிப் போன காரியாரும், உடைய நங்கையும் குழந்தை பிறந்த பனிரண்டாம் நாள் குழந்தையை ஆதிநாதர் சந்நதிக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அக்குழந்தையை ஆதிசேஷனின் அவதாரமாய்த் தோன்றி இருக்கும் புளிய மரத்தடியில் விட்டுச் செல்லுமாறு தோன்ற அவ்வண்ணமே செய்தனர். குழந்தை ஏன் இவ்விதம் பிறந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை. பின்னாட்களிலேயே தெரிய வந்தது.

பிறக்கும்போது, தாயின் கர்ப்பத்தில் கூட ஒவ்வொரு குழந்தையும் ஞானம் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனால் பிறப்பின் ரகசியத்தால் இறைவன் சிலருக்கு மட்டுமே ஞானத்தோடு பிறக்க அருள் புரிகின்றான். மற்ற நம் போன்ற சாமானியருக்கு கர்ப்பத்தில் இருந்து வெளியே வரும்போதே சடம் என்னும் வாயு சூழ்ந்து கொண்டு நம்மை அஞ்ஞானம் என்னும் சாகரத்தில் தள்ளிவிடுகிறது. நம்மாழ்வாரோ தெய்வக் குழந்தை மட்டுமல்ல, பிறக்கும்போதே ஞானக் குழந்தையும் கூட அல்லவோ? ஆகையால் தம்மைச் சூழவந்த சடத்தைக் கோபித்து விலக்கிவிட்டார். அதனாலேயே அவர் பேசவில்லை, பால் அருந்தவில்லை. இப்படிச் சடத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிறக்கும்போதே ஞானத்தோடு பிறந்த குழந்தைக்குச் “சடகோபன்” என்னும் திருநாமம் சூட்டினார்கள். குழந்தை புளியமரத்தடியிலேயே வளர்ந்தது. கையிலே சின்முத்திரையைத் தாங்கிக் கொண்டு தெற்கே பார்த்து அமர்ந்திருந்தது அந்தக் குழந்தை. வரவேண்டுமே, உரிய நேரத்தில் சீடன் வரவேண்டும் அல்லவா? அதற்குத் தானே காத்திருந்தது குழந்தை? பதினாறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தை இன்னும் தவம் செய்துகொண்டு மோன நிலையிலேயே இருந்தது. அப்போது!