எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, June 28, 2007

சிதம்பர ரகசியம் - கனகசபைதான் இன்னும்!

*************************************************************************************சிதம்பரம் கோவிலில் பத்து புனித தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். அதிலே கனகசபைக்குக் கிழக்கே சன்னதியின் மத்தியில் அமைந்துள்ள கிணறு ஒன்றைப் "பிரம்மானந்த கூபம்" என்று சொல்கின்றனர். (நான் வெறும் கிணறு என்ற வடிவிலே மட்டும் பார்த்துள்ளேன். அப்புறம்தான் அது ஒரு தீர்த்தக் கிணறு எனத் தெரிய வந்தது.) சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதப் படும் இது மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம் எனச் சொல்லப் படுகிறது. துலா மாதம் (ஐப்பசி) பஞ்சமி திதியில் கங்கை இந்தக் கிணற்றில் பொங்கிவருவதாயும் ஐதீகம். கங்கை மட்டுமில்லாமல் மற்றப் புண்ணிய நதிகளும் இங்கே வந்து சேர்வதாயும் ஐதீகம். தை அமாவாசையில் வரும் தீர்த்தவாரித் திருவிழாவின் போது நடராஜருக்கு இந்தப் பத்து தீர்த்தங்களில் இருந்தும் புனிதநீர் எடுத்து அபிஷேகம் செய்யப் படுகிறது.
இது சிவனின் விருப்பத்தின் பேரில் கங்கை இங்கே ஆவிர்ப்பவித்தாள் எனவும் சொல்லப் படுகிறது.

இவற்றைத் தவிர "சண்டேஸ்வர" மூர்த்தியின் சன்னதியும் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேசரைத் தரிசனம் செய்தால்தான் சிவ தரிசனம் பூர்த்தி அடையும் என்று சொல்லப் படுவதுண்டு. கடவுளுக்கும், பக்தனுக்கும் நடுவே ஒரு தபால்காரர் போல் இவர் செயல்பட்டு நம் கோரிக்கைகளையும், விண்ணப்பங்களையும் கடவுளிடம் சேர்பிக்கிறார் என்றும் சொல்வார்கள். கனகசபைக்குக் கிழக்கே பிரம்மானந்த கூபத்துக்கு அருகே இரு சண்டேஸ்வர மூர்த்திகளைப் பார்க்கலாம். ஒருவருக்கு ஒரு முகமும், மற்றவருக்கு 4 முகமும் உள்ளது. சதுர்முகச் சண்டேசர் பிரம்மா சண்டேசர் எனச் சொல்லப் படுகிறார். பிரம்மாவே சண்டேசராக அனுக்கிரகம் பெற்று இங்கே "சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்தி"யாகத் தரிசனம் கொடுக்கிறதாய்ச் சொல்கிறார்கள். பொதுவாய்ச் சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து திரும்பும் சமயம் சண்டேஸ்வரர் சன்னதிக்குப் போய் இரு கைகளையும் தட்டிக் காட்டி நான் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை எனக் கூறிவிட்டுப் போவது வழக்கம். ஆனால் இந்தக் கோவிலில் சிவன் கோவிலாக இருந்தாலும் பிரசாதங்கள் எடுத்துச் செல்லலாம் எனச் சொல்லப் படுகிறது. கோவில் வழிபாடு வைதீக முறையில் நடைபெறுவதாலும் இங்கே பிரம்மாவே சண்டேசர் பதவி பெற்று அமர்ந்திருப்பதாலும் இவ்வாறு செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். அடுத்து இங்கே பெருமாளும் கோயில் கொண்டிருக்கிறார், அல்லவா? அவர் எவ்வாறு வந்தார் எனப் பார்ப்போம்!

Monday, June 25, 2007

21. சிதம்பர ரகசியம் -இன்னும் கனகசபைதான்!

லிங்கோத்பவர் பத்தின புராணக் கதையைப் பார்த்தோம். இவரைத் தவிர வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமி சன்னதியும் உள்ளது. ஆறுமுகங்களோடு காட்சி அளிக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்குத் தினமும் கால தீபாராதனை நடராஜருக்குக் காட்டும்போது காலையிலும், மாலையிலும் இந்த இறை ஸ்வரூபங்களுக்கும் காட்டி வழிபாடு நடத்தப்படுகிறது.

பள்ளி அறை: எல்லாச் சிவன் கோவில்களிலும் பள்ளி அறை உண்டு. அவற்றில் சிவனின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டு பள்ளி அறை மூர்த்தம் தனியாக இருக்கும். ஆனால் இந்தக் கோவில் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்களுக்கு எல்லாம் தலையாய கோயிலாகக் கருதப் படுவதால் இங்கே நடராஜரின் ரத்தினம் பதித்த தங்கப் பாதுகைகள் தான் தினசரி பள்ளி அறைக்கு எடுத்து வரப் படும். மிக மிக உன்னதமான வேலைப்பாடுடன் கூடிய இந்த அறையில் ஒரு வெள்ளி ஊஞ்சல் இருக்கும். அதில் தான் சிவகாமசுந்தரியோடு நடராஜரின் பிரதிநிதியான தங்கப் பாதுகைகளும் ஒவ்வொரு இரவிலும் கடைசி கால பூஜைக்குப் பின்னர் கொண்டுவரப் படும். தினமும் காலையில் ஒரு தங்கப் பல்லாக்கில் திரும்ப சித்சபைக்கு எடுத்துச் செல்லப் படும்.

ஆகாசலிங்கம்: பள்ளி அறைக்கு மேலே படிகள் ஏறிப் போய்ப் பார்க்கவேண்டும். (நான் இன்னும் பார்க்கவில்லை.)

ஜைமினி:ஜைமினி ரிஷியும் சிதம்பரத்துடன் நேரடியாகச் சம்மந்தப் பட்டவர். பதஞ்சலியையும், வியாக்ரமபாதரையும்போல அவரும் நடராஜரின் "ஆனந்தத் தாண்டவம்" தரிசனத்தைச் சிதம்பரத்தில் கண்டவர். ஆனந்த நடேசனின் தாண்டவம் பற்றி அவர் எழுதிய துதி "வேதபாத ஸ்தவம்" எனப்படும்.

பிக்ஷாடான மூர்த்தி: சிவனின் ஒரு ஸ்வரூபமான இவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். ரிஷி, முனிவர்களின் பல்வேறுவிதமான கோரிக்கைகளுக்காகவும், செயல்களுக்ககவும் பல்வேறு ரூபங்களில் அவ்வப் போது சிவன் எடுத்த ஸ்வரூபங்களில் ஒன்று தாருகா வனத்து ரிஷிகளுக்கக அவர் எடுத்த பிக்ஷாடன ஸ்வரூபம். தாருகாவனத்து ரிஷிகளுக்காக சிவன் பிக்ஷாடனக் கோலத்திலும், விஷ்ணு மோகினிக் கோலத்திலும் நடனம் ஆடி ரிஷிகளின் அகம்பாவத்தைத் தகர்த்தனர். முதன்முதல் சிவன் பிக்ஷாடனக் கோலத்தில் தான் நடனம் ஆடியதாயும் அதுவும் தாருக்கவன ரிஷிகளுக்கு முக்தி கொடுப்பதற்காகவும், அதன் பின்னரே சிதம்பரம் சித்சபையில் பதஞ்சலி முனிவர், வ்யாக்ரபாதர் போன்றவருக்காக ஆடியதாயும் சொல்லப் படுகிறது. தெற்கே பார்த்து பிக்ஷாடனர் கோயில் கொண்டிருக்கிறார்.

கால பைரவர்: எல்லாச் சிவன் கோவிலிலும் வெளிப்பிரகாரத்தில் இருப்பார், காவல் தெய்வம். கோவிலையும், கோவிலின் சொத்துக்களும் இவர் பொறுப்பு என்று சொல்லும் வண்ணம் முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியை இவர் சன்னதியில் வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. இவர் சன்னதியில் இருக்கும் சாவியை யாரும் எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இவர் கூட இருக்கும் இவரின் வாகனம் ஆன நாயை இவர் ஏவி விட்டு அது வந்து பழிவாங்கும் என்றும் சொல்லப் படுவது உண்டு. காலப் போக்கில் இது மறைந்தாலும் இவரை வணங்குபவர்களுக்கு இவர் எல்லாவிதமான கஷ்டங்களையும் போக்குவார் என்றும், அஷ்டமி நாட்களில் இவரை வணங்குவது விசேஷமாகச் சொல்லப் படுவதும் உண்டு. அதுவும் பெளர்ணமிக்குப் பின்னர் வரும் அஷ்டமி நாளைத் திருமணம் ஆகாத வாலிபர்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்யப் படுகிறது. மேற்கே பார்த்து இவர் இருக்கிறார்.

சூரிய சந்திரர்: நவக்ரஹங்களுக்கு எனத் தனி சன்னதி இருந்தாலும், சூரிய, சந்திரர்க்கு கால பைரவருக்கு அடுத்தாற்போல் உள் பிரகாரத்தில் தனித் தனி சன்னதிகள் இருக்கின்றன.

இவர்களுக்கு அடுத்தாற்போல் வடக்கே பார்த்து தேவார மூவரின் சன்னதி இருக்கின்றது. முறையே அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

Friday, June 22, 2007

சிதம்பர ரகசியம்- கனகசபைக்குப் போவோமா?

ரொம்ப நாளா எல்லாரையும் காக்க வச்சதுக்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். மத்தப் பதிவுகள் மாதிரி ஆதாரங்களைச் சரி பார்க்காமல் இதை எழுத முடியாது. அதனாலும், வேலை மிகுதியாலும் எழுத முடியவில்லை.
*************************************************************************************
சித் சபையில் மேற்குறிப்பிட்ட இறை ரூபங்கள் தவிர "முக லிங்கம்" என்றொரு லிங்கமும் "சிதம்பர ரகசியம்" அருகே உள்ளது. எப்போது என்று சொல்ல முடியாத காலத்தால் முந்தைய இந்த லிங்கம் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தின் பிரதிநிதியாகவும் சொல்லப் படுகிறது. பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவன் அவருடைய ஐந்தாவது முகத்தைக் கிள்ளி எடுத்து இங்கே லிங்க ஸ்வரூபத்தில் வைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. (இந்த லிங்கம் நான் இன்னும் பார்த்ததில்லை.)மதுரையம்பதி "பலிநாதர்" பற்றி எழுப்பிய சந்தேகத்துக்கு நான் சொன்ன விடை தவறு என்றும் என் கணவர் கூறுகிறார். பலிநாதர் சூல வடிவத்தில் இருப்பதாயும் கூருகிறார். பிரகாரங்கள் சுற்றி வரும்போது பார்த்திருக்கிறேன் என்றாலும் என்ன ஸ்வரூபம் என்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதையும் எங்கள் குருவான ராமலிங்க தீட்சிதரிடம் கேட்டுவிட்டே உறுதி செய்கிறேன்.
*************************************************************************************

சித்சபைக்கு வெளியே சில முக்கியமான நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, சிறப்பு வழிபாடு செய்பவர்கள் நிற்கும் சிறிய மேடை உள்ளது. இங்கே வைத்துத் தான் "ஸ்வர்ணாகர்ஷண பைரவர்" அபிஷேகம் செய்யப் படுவார். இங்கே நடராஜர் சன்னிதிக்கு நேரேயே நந்தியெம்பெருமான் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். சிவனின் அந்தரங்கக் காரியதரிசியாகச் சொல்லப் படும் இவர் கைலை மலையிலும் முக்கியமாகக் காணப்படுகிறார், ஒரு மலை உருவத்திலேயே. நடராஜரின் ஆட்டத்துக்கு நந்தி தான் தாளங்கள் போட்டு மேளம் வாசிப்பார் என்று ஐதீகம். ஆகவே நடராஜரின் ஆட்டம் நந்தியின் பக்கவாத்தியம் இல்லாமல் நிறைபெறாது. அதிலும் பிரதோஷ காலங்களில் இவருக்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இவரைத் தவிர நர்த்தன விநாயகர், இங்கே நடனம் ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அடுத்து லிங்கோத்பவ மூர்த்தி, சிவனின் வழிபாட்டில் லிங்கொத்பவர் வழிபாடும் ஒன்று. இவரைப் பற்றிய புராணக் கதை அருணாசலம் மலையுடன் தொடர்பு கொண்டது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததே!
***********************************************************************************
ஒரு சமயம் விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. இருவரும் தாங்களே பெரியவர் எனச் சொல்லிக் கொண்டிருக்க, இறைவன் அவர்கள் முன்னால் நெருப்பால் எழுப்பப் பட்ட ஒரு லிங்கச் சுவர் போல் எழுந்தருளினார். சூடு தாங்கவில்லை இருவருக்கும், என்ன செய்ய முடியும்? ஊழித்தீயோ எனப் பயந்தனர்.அப்போது அங்கே எழுந்தது அசரீரியாக இறைவன் குரல். "என்னுடைய முடியையும், அடியையும் உங்கள் இருவரில் யார் கண்டுபிடிக்கிறீர்களோ அவர்களே பெரியவர்." இதுதான் இறைவன் சொன்னது. இருவரும் இது என்ன பிரமாதம் என ஒத்துக் கொண்டனர். முதலில் விஷ்ணு போய்ப் பார்த்துவிட்டு வர, என்னால் முடியவில்லை எனத் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பின்னர் ஒரு அன்ன ரூபத்தில் கிளம்பும் பிரம்மாவும் தேடுகிறார், தேடுகிறார். அவராலும் முடியவில்லை. அப்போது இறைவனுக்கு அர்ச்சிக்கப் பட்ட ஒரு மலரின் இதழ், தாழம்பூ எனச் சொல்வதுண்டு, கீழே வருகிறது. பிரம்மா அந்தப் பூவை எடுத்துக் கொண்டுபோய் சாட்சியாக வைத்துத் தான் "கண்டுகொண்டேன், கண்டு கொண்டேன்", எனச் சொல்ல இறைவன் கோபம் அடைகிறார். "அனைவருக்கும் முதல்வன் நீ, உன்னால் தான் சிருஷ்டியே, நீ இப்படிப் பொய் சொல்லலாமா" எனக்கேட்டு "இன்று முதல் உனக்குத் தனியாகக் கோயில்களோ, ஆராதனையோ கிடையாது, பொய்சாட்சி சொன்ன இந்த மலரும் இனிமேல் என்னுடைய வழிபாட்டுக்கு உதவாது!" எனச் சொல்லுகிறார். இந்த ஸ்வரூபம் தான் லிங்கோத்பவர் எனச் சொல்லப் படுகிறது. அவர் மேல் பிரணவம் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்த விஷ்ணுவும், பிரம்மாவும் இவரே ஆதியாம் முதல்வன், அனைத்துக்கும் காரணன் எனவும் ஒத்துக்கொண்டனர்.

Tuesday, June 12, 2007

20. சிதம்பர ரகசியம் - சித் சபையின் உள்ளே - 3

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.

எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்
வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான் இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.

சந்திரசேகரர்: இவரும் சித்சபையின் உள்ளேயே பைரவருக்கு அடுத்து அதே மேற்குத் திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரை "நித்யோத்சவ மூர்த்தி" என்று கூறுகிறார்கள். ஏனெனில் நடராஜர் தினமும் அல்லது அடிக்கடி வீதி உலாவோ, அல்லது கோவிலின் உள்ளே வரும் உலவோ மேற்கொள்ளுவது இல்லை. ஆண்டுக்கு இருமுறைதான் நடராஜர் கோவிலை விட்டு வெளியே வருவார். மற்றச் சமயங்களில் நடராஜருக்குப் பதில் இந்த மூர்த்தியின் திரு உருவம்தான் பிரகாரங்களில் உலா வர எடுத்துச் செல்லப் படும். தீர்த்தவாரி, பிரதோஷம், சோமவாரம் போன்ற சமயங்களில் இவர்தான் கோவில் பிரகாரங்களை வலம் வருவார்.

இந்த சந்திரசேகரர் இங்கே சித்சபையின் உள்ளே சிறிய வடிவில் இருக்கிறார். இன்னொரு சந்திரசேகரர் பெரிய மூர்த்தம் அவரும் சோமாஸ்கந்த மூர்த்தியும் தேவசபையில் குடி கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரிய சந்திரசேகரர் முக்கியமான தீர்த்தவாரி உற்சவங்களிலும், சோமாஸ்கந்த மூர்த்தி ப்ரம்மோற்சவங்களிலும் சிதம்பரத்தின் நான்கு ரதவீதிகளையும் வலம் வருவார்கள். இந்த சோமாஸ்கந்த மூர்த்தி பஞ்சமூர்த்திகளில் ஒருவராய்ச் சொல்லப் படுகிறார். இவர்களைத் தவிர நடராஜரின் பிரதிநிதிகளாய் இன்னும் இருவர் இந்த சித்சபையின் உள்ளே இருக்கிறார்கள். ஒருத்தர் "பலிநாதர்". இவர் ப்ரம்மோத்சவங்களில் நடராஜரின் பிரதிநிதியாக ரதவீதிகளை வலம் வருவதோடு அல்லாமல் (அஷ்டத் திக்பாலகர்கள்) எட்டுத்திக்குப் பாலகர்களுக்கும் "பலி" விநியோகம் செய்யும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இவரை ஹஸ்தராஜா என்றும் அழைக்கிறார்கள். அடுத்த முக்கியமான பிரதிநிதி நடராஜரின் தங்கப் பாதுகைகள் இரண்டு. நடராஜரின் அருகேயே சித்சபையின் உள்ளேயே இவை இடம் பெற்றிருக்கும். நவரத்தினங்கள் பதித்த ஒரு தட்டில் வைக்கப்ப்பட்டிருக்கும் இவை ஒவ்வொருநாள் இரவும் நடராஜரின் பிரதிநிதியாகக் கடைசி கால பூஜைக்குப் பின்னர் "பள்ளி அறைக்கு" எடுத்துச் செல்லப் படுகிறார். இவர் கால்களில் சூட்டப் படும் பூமாலைக்குக் "குஞ்சிதபாதம்" என்று சொல்லப்ப்படுகிறது.

Sunday, June 10, 2007

சிதம்பர ரகசியம் - 19 சித்சபையின் உள்ளே - 2

இந்த ரத்னசபாபதியைப் பற்றியும் அவர் எவ்வாறு சிதம்பரம் வந்தார் என்பதும் கீழ்க்காணும் சிதம்பர மகாத்மியம் தல புராணத் தகவல் தெரிவிக்கிறது.

"ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில், காசி நகரில் "அந்தர்வேதி" என்னும் இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே சிதம்பரம் தீட்சிதர்களை நாடினார். அவர்களை வரவழைத்தார். அவர்களும் அவர்களின் குருவான வியாக்ரபாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர். யாகமும் இனிதே முடிந்தது. நடு மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை உபசரித்து "வைஸ்வதேவம்" என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார் பிரம்மா. ஒவ்வொரு பெரிய யாகத்துக்குப் பின்னும் யாகம் செய்ய உதவும் அந்தணர்களை உபசரிக்கும் முறை அது.

ஆனால் தீட்சிதர்களோ எனில் தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்டே பின் தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல் தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறியாத பிரம்மா சிவபெருமானின் உதவியை நாடினார். சிதம்பரம் தீட்சிதர்களோ என்றால் நாங்கள் திரும்பச் சிதம்பரத்துகே போகிறோம். என்று கூறுகிறார்கள். யாகத்தின் பலனே இல்லாமல் போய்விடுமே என்று கலங்கிய பிரம்மாவின் உதவிக்கு அந்தப் பரம்பொருள் செவி சாய்க்காமல் இருப்பாரா? திடீரென ஒரு ஒளி வெள்ளம். யாகத் தீ குபுகுபுவென எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து அந்த ஆதிசிவனே நடராஜ ஸ்வரூபத்தில் தோன்றினார் . திகைத்துப் போன தீட்சிதர்களும், மற்றவர்களும் அந்த நடராஜரைத் துதி செய்து சந்தனம், தேன், பால் போன்றவற்றால் அபிஷேஹ ஆராதனைகள் செய்து அந்த நடராஜரை வழிபட்டனர்.அவர்கள் வழிபட்ட அந்த நடராஜர் அப்படியே ரத்தின சபாபதியாக மாறினார். தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. தீட்சிதர்கள் திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். அன்று முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது. நடராஜர் "மாணிக்ய மூர்த்தி" என்ற பெயரையும் பெற்றார்.