எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 10, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்

இவனின் காலத்தில் தான் ஶ்ரீரங்க விமானத்தின் உட்சுவர்களுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. கோயிலின் மடைப்பள்ளியும் சீரமைக்கப்பட்டு பிரசாதங்கள் செய்யவும், எடுத்து வைக்கவும் தங்கப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.  சித்திரைத் திருவிழாவும் ஜடாவர்மன் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவனால் ஒரு தங்கப் பல்லக்குப் பெருமாளுக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சுந்தர பாண்டியனால் கோயில் விமானத்துக்கு மூன்று தங்கக் கலசங்கள் செய்து அளிக்கப்பட்டன.  இதைத் தவிரவும் அவனால் அளிக்கப்பட்ட பல பரிசுகளி, ரத்தின மாலை, கற்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட ஆதிசேஷன், கருடன், நல் முத்துக்களால் ஆன மாலை, பல்வேறு விதமான ஆபரணங்கள், முத்து விதானம், தங்கத்தினால் செய்யப்பட்ட விதவிதமான பழங்கள், தங்க ரதம், சிம்மாதனம், ஆயுதங்கள், பாத்திரங்கள் தங்கத்தினால் ஆடைகள், தங்கக் கவசங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.

இவை பாண்டியனுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரு மதிப்பைப் பெற்றுத் தந்தது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இரு கவிதைகள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் போர் வெற்றிகள் குறித்தும் அதன் மூலம் ஶ்ரீரங்கநாதருக்கு அவன் செய்த சேவைகள் குறித்தும் காணப்படுகின்றன. அவன் தான் அதிக அளவில் தங்கத்தைக் கோயிலுக்கு அளித்துக் கோயிலின் முக்கிய இடங்கள் தங்கத்தால் ஒளிரும்படி செய்தான் என்றும், அவன் காலத்திலேயே கோயில் தனிப் பெரும் புகழ் பெற்று விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படித் திடீரென கணக்கில்லாச் சொத்துக்கள் வந்து சேர்ந்ததில் கோயிலின் நிர்வாகத்துக்கு மூச்சுத் திணறியது.

தங்கத்தினால் செய்த கோயில் விமானங்கள், கலசங்கள், சந்நிதிகள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்புப் போட வேண்டி இருந்தது.  கோயிலுக்கு என அளிக்கப்பட்ட ஆபரணங்களையும் கவனத்துடன் பாதுகாத்து ஒவ்வொரு திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்கு அணிவித்துப் பாதுகாப்பாக எடுத்து வைக்கத் தனியாக ஒரு குழுவை நியமித்தனர்.  அதோடு இல்லாமல் மன்னன் நிர்வாகக் கமிட்டியை மாற்றியமைக்கும்படியும் கட்டளையிட்டிருந்தான்.  அது வரையிலும் கோயிலின் நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடமே இருந்து வந்தது.  இப்போது அது மற்றக் குழுவினரிடமும் பகிரும் வகையில் மாற்றியமைக்கச் சொல்லி மன்னனின் கட்டளை கிடைத்தது. இதன் மூலம் பொறுப்புகள் பகிரப் பட்டதோடு இல்லாமல் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதன் மூலம் பொருட்கள் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைத்தது. நிர்வாகக் கமிட்டியினரின் நடவடிக்கையும் அனைவராலும் கண்காணிக்கப்பட்டது.

ஆரியர்கள் எனப்படும் குழுவினர் மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களையும் கோயிலின் பொருட்கள் பாதுகாக்கப் படுவதில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மன்னன்கட்டளை.  மன்னனின் கட்டளையை அந்த சர்வேசனின் கட்டளையாகவே ஏற்கப்பட்டது.  எல்லாத் தரப்பு குழுவினரிடமிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலரைப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்தனர். கோயிலின் நிர்வாகக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கோவனாவர், ஶ்ரீரங்கம் அரையர், தலையிடுவார், ஆராட்டமுகி அணுக்கர், போன்றவர்களிலிருந்து இருவரும், துமரையர்கள், வாசல் ஆர்யர் ஆகியோரிலிருந்து ஒருவருமாக மொத்தம் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை அரங்கனே அப்போது இருந்த அவனுடைய அழகிய மணவாளப் பெருமாள் என்னும் பெயரில் கட்டளை பிறப்பித்ததாகவும், அந்தக் கட்டளை பிறப்பிக்கும்போது அழகிய மணவாளப் பெருமாள் (இவரே இப்போது நம்பெருமாள் என அழைக்கப்படுபவர்) பூபாலராயன் சிம்மாதனத்தில் தன் புனிதமான பள்ளியறையில் தேவியருடன்  வீற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடவுளையே அரசனாக நினைத்து ஆணைகள் அவன் பெயராலேயே பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன எனத் தெரிய வருகிறது. இதை ஜீயர்களும், ஶ்ரீகார்யக் காரர்களும் கூட ஆமோதித்திருக்கின்றனர்.



தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.