எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 26, 2021

கோபண்ணாவின் வருத்தம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கங்காதேவி தொடர்ந்து பண்டிதருடன் தனக்கு இருந்த சந்தேகங்கள் பற்றிக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள். அப்போது வாசலில் நிழலாட இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே கோபண்ணா வந்து கொண்டிருந்தார். உடல் இளைத்து வாட்டம் அடைந்த முகத்துடன் கையில் பட்டுத்துணி சுற்றிய ஏதோ ஒரு பொருளுடன் வந்து கொண்டிருந்தார்.  பண்டிதர் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைக்க கங்காதேவியோ அவரை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டாள். கோபண்ணாவும் வடமொழி வல்லுநராக இருந்தாலும் இப்போது அதைப் பற்றிப் பேசவில்லை. ராஜரிக காரியமாக கோபண்ணா வந்திருப்பதைப் புரிந்து கொண்ட பண்டிதர் கோபண்ணாவிடம் அவர் என்ன முடிவு எடுத்தார் எனக் கேட்டார். கோபண்ணாவோ தாம் ராஜரிகத்தைத் துறக்கும் முடிவையே எடுத்ததாய்ச் சொன்னார்.  தம் கையில் கொண்டு வந்திருந்த பட்டுத்துணியை அவிழ்த்து அதிலிருந்து இரு பொன்னால் ஆன கங்கணங்களை வெளியே எடுத்தார்.  பண்டிதர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

அந்தக் கங்கணங்கள் சாமான்யமானவை அல்ல. வீரக் கங்கணங்கள். அவற்றை புக்கராயரே கோபண்ணா கிழக்கில் நடந்த போர்களில் காட்டிய திறமைகளுக்காகத் தன் கைகளால் கோபண்ணாவுக்குப் பூட்டியவை.  அதை அவர் எடுத்ததைப் பார்த்த கங்காதேவிக்கும் திகைப்பு ஏற்பட்டது. பண்டிதரோ கோபண்ணாவைப் பார்த்து, "கோபண்ணா! மன்னர் இப்போது ஊரில் இல்லை.  ஆகவே தங்கள் முடிவைத் தள்ளிப் போட்டு மன்னர் வந்ததும் அவரிடம் பேசி முடிவெடுப்பதே சிறந்தது." என்றார்.  ஆனால் கோபண்ணாவோ திட்டவட்டமாக மறுத்தார். தன் மனதில் ஏற்பட்டிருக்கும் அவாவைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதால் மன்னர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவருக்கு அடுத்து இருக்கும் கிரியாசக்திப் பண்டிதரிடம் தன் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவதாய்ச் சொன்னார்.

பண்டிதர் கண்களில் கண்ணீர் திரண்டது. கோபண்ணாவைப் பார்த்து அவர் நாட்டில் தர்மங்களே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன/ அல்லது அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் உங்கள் ஸ்வதர்மத்தை மட்டும் காத்துப் பாதுகாக்க விரும்பலாமா? இந்த விஜயநகர சாம்ராஜ்யம் ஏன் தோன்றியது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே? புதியதாய் ஓர் ராஜவம்சம் தோன்றுவதற்கோ அல்லது புதிய ஒரு ராஜா பட்டத்துக்கு வருவதைக் கொண்டாடவோ இல்லை. நம் தர்மங்களும், நம் ஒழுக்கங்களும் பாழ்பட்டு வருகின்றன. அவற்றை மீட்டெடுத்து வருங்காலச் சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லவா? அதற்காகத் தானே இந்த சாம்ராஜ்யத்தின் உதயமே!  இப்போது குறுகிய வட்டத்தில் இருக்கும் இந்த சாம்ராஜ்யம் விரைவில் தென்னாடுகள் முழுவதையும் சேர்த்துக் கொண்டு வலிமையானதொரு பெரிய சாம்ராஜ்யமாக மாற வேண்டும். நம் தர்மங்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும். நமது விருப்பம் தேசத்தைச் சார்ந்ததாக இருக்கவேண்டுமே அல்லாது, நம் ஸ்வதர்மத்தைக் காப்பதற்கோ சமயத் துறவை மேற்கொண்டு பற்றற்ற வாழ்க்கையைக்கைக்கொள்வதற்கோ அல்ல. இது தான் தற்போதைய மிகப் பெரிய தர்மம். அதை நாம் காக்க வேண்டும்."

கோபண்ணாவோ அவர் பேசி முடிக்கக் காத்திருந்தவரைப் போல் அவரிடம் சமய வாழ்க்கையையே தான் மிகவும் விரும்புவதாய்க் கூறினார். கங்காதேவி அப்போது குறுக்கிட்டுத் தான், நடுவில் பேசுவதற்கு மன்னிக்கும்படி கூறிவிட்டு மேலே தொடர்ந்தாள். தான் ஓர் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினாள். அதன் பேரில் என்ன வேண்டுகோள் என கோபண்ணா கேட்டார்.  ராஜரீகத்தைத் துறந்து சமயப்பணி ஆற்றவேண்டும் என்னும் எண்ணம் கோபண்ணாவிற்குத் தானாகத் தோன்றியதா அல்லது தெய்வத்தின் ஆக்ஞையா எனக் கேட்டாள் கங்கா தேவி. கோபண்ணா அதற்கு ஒரு விதத்தில் இது தெய்வ ஆக்ஞை தான் என்றார். மேலும் தொடர்ந்த கோபண்ணா தாம் கொள்ளைக்களம் போய் வந்ததிலிருந்து தொடர்ந்து வரும் ஒரு கனவைப் பற்றிக் கூறினார். அந்தக் கனவை விவரிக்கச் சொல்லி கங்கா தேவி கேட்க அவரும் கூறினார்/

தாம் ஓர் கனத்த அந்தகாரத்தில் இருப்பதாயும் கைகளால் துழாவுவதாயும் உணர்ந்ததாய்ச் சொன்னவர் அப்படித் துழாவும்போது ஓர் தெய்வ விக்ரஹம் அவர் கைகளுக்குத் தட்டுப்பட்டதாகவும் சொன்னார். அழகான பிரசன்ன வதனத்துடன் கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டதாயும், சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தபடியால் அது விஷ்ணுவின் விக்ரஹமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.  அந்த விக்ரஹத்தைத் தாம் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்றவர் அது திருவரங்கன் விக்ரஹம் எனத் தனக்குத் தோன்றியதாயும் சொன்னார். தாம் திருவரங்கமே போனதில்லை என்றவர் அரங்கனைப் பார்த்ததே இல்லை என்றும் சொன்னார்.  ஆனால் அவர் மனதில் தாம் கனவில் கண்ட அந்த விக்ரஹம் அரங்கனுடையது தான் என்று உறுதியாய்க் கூறினார். 

அடிக்கடி கனவில் வரும் அந்த விக்ரஹம், வஸ்திரங்கள், ஆபரணங்கள் எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருப்பதாயும் அது அவர் மனதில் துக்கத்தை ஏற்படுத்தியதாயும் சொன்னார். கனவிலேயே தாம் கண்ணீர் விட்டு அழுததாயும் பின்னர் எழுந்து கொண்டால் அதே நினைவுகள் திரும்பத் திரும்ப வருவதால் தன்னால் எந்த வேலையையும் மனம் ஒருமித்துச் செய்ய முடியாமல் போவதாயும் சொன்னார். வேறு என்ன கனவில் தெரிந்தது எனக் கேட்டதற்கு கோபண்ணா, அந்தகாரமான பெரிய காடு ஒன்று கனவில் வருவதாய்ச் சொன்னார். அந்த அந்தகாரமான காட்டில் எங்கேயோ இருந்து கொண்டு தான் அரங்கன் தம்மை அழைப்பதாயும் சொன்னார். 

அப்போது கங்காதேவி," காடும், மலையும் சேர்ந்த இடம் திருமலை/திருப்பதி தான்.  தெய்வமும் அங்கே இருக்கின்றது. ஆகவே உங்கள் கனவில் வந்த க்ஷேத்திரம் திருமலையாகத் தான் இருக்க வேண்டும். தாங்கள் ஏன் திருமலைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வரக்கூடாது?. அதன் மூலம் ஏதேனும் தெளிவு பெறலாமே! " என்றாள். பண்டிதர், கோபண்ணா இருவரின் முகங்களும் மலர்ந்தன. பண்டிதர் கோபண்ணாவிடம்," தாங்கள் ஏன் இதைச் செயலாற்றக் கூடாது? ஏதேனும் ஒரு வழி கிடைக்கலாம்!" எனத் தன் கருத்தையும் சொன்னார்.

Wednesday, March 24, 2021

கங்கா தேவியின் ஆசை! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

 கலுவத்தை எடுத்து அதில் மருந்தைப் போட்டுப் பொடி செய்து கொண்டு தேனில் குழைக்க ஆரம்பித்தாள் மஞ்சரி. கூடவே வாய் தானாகப் புலம்ப ஆரம்பித்தது. தன் தாத்தா வெகுளியாய்ப் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், தான் தான் அதைக் கேட்காமல் இப்போது அவமானப் படுவதாயும், நஷ்டப்படுவதாயும் புலம்பினாள். ஓரிரு முறை திரும்பி ஓரக்கண்களால் தத்தனையும் பார்த்துக் கொண்டாள். மருந்து கலக்கும் நெடி அறை முழுவதும் பரவ தத்தன் யோசனையில் ஆழ்ந்தான். தான் உடல் ரீதியாகப் பலவீனமாய் இருப்பதை உணர்ந்து கொண்டிருந்தாலும் தனக்கு நேர்ந்தது என்னவென அவனுக்குப் புரியவில்லை. கை,கால்கள் குச்சியைப் போல் இருந்ததும் எழுந்திருக்கக் கூட முடியாமல் சக்தியற்றுத் தான் இருப்பதையும் உணர்ந்து கொண்டான். மஞ்சரிக்குக் கோபம் காரணமாக ஏற்பட்ட விரக்தியுடன் அவள் கலுவத்திலிருந்த மருந்தை ஓர் கிண்ணத்திற்கு மாற்றி தத்தனிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள். அவனுடன் பேசும் மனோநிலையில் அவள் இல்லை என்பதையும் வெளிக்காட்டிக் கொண்டாள். தத்தன் அவளைப் பார்த்த வண்ணமே அந்த மருந்தை வாங்கிக் கொண்டான். அவள் கண்களின் ஆழத்தையும் அதில் தெரிந்த இனம் புரியாப் பாசத்துடன் கலந்த சோகத்தையும் பார்த்தவனுக்கு இந்த மனோநிலை ஆச்சரியத்தைக் கொடுத்தது. அப்போது அவளை வேறு யாரோ அழைக்கவே மஞ்சரி அங்கிருந்து ஓட்டமாய் ஓடினாள்.

இங்கே முள்வாய் நகரில்! கிரியாசக்திப் பண்டிதர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டார். புக்கராயர் குலத்தின் குரு என்னும் உரிமையில் அவர் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாமே! க்ஷேத்திராடனத்திற்காக விஜயநகரத்தை விட்டுக் கிளம்பி இருந்தவர் இங்கே வந்ததும் இங்கேயே தங்கிவிட்டார்.  மேலும் எப்படியும் கம்பணர் முள்வாய் நகருக்கு வந்தே தீர வேண்டும் என்பதால் அவரை எதிர்பார்த்தும் அங்கே தங்கி இருந்தார்.  நல்ல மழைக்காலம்! ஐப்பசி மாதம் அடை மழை பொழியும் காலங்கள்! விண்ணில் எங்கெங்கும் மழை மேகங்கள் மூடிக் கிடந்தன. விரைவில் திரண்டு மழை கொட்டும் என எதிர்பார்க்கலாம் என்பது போல் இருந்த ஒரு மாலை நேரம். கங்காதேவி/கம்பணனின் மனைவி கிரியாசக்திப் பண்டிதர் தங்கி இருந்த மாளிகையினுள் நுழைந்தாள். அவள் கைகளில் பட்டுத்துணியால் மூடப்பட்டப் பல ஏட்டுச் சுவடிகள்! கிரியாசக்திப் பண்டிதர் மாலை வழிபாடுகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வில் இருக்கலாம் என இருந்த நேரம் அது.

கங்காதேவி உள்ளே நுழைந்ததும் பண்டிதர் இருந்த இடத்திற்கு வந்து அவரை நமஸ்கரித்துவிட்டுப் பின் அவர் சுட்டிக் காட்டிய ஓர் ஆசனத்தில் அமர்ந்தாள். பாணன் எழுதிய காதம்பரியில் பண்டிதரிடம் சில சந்தேகங்கள் கேட்டுத் தெளிவடைய வேண்டி வந்திருந்தாள். பாணருக்கு அக்காலத்தில் மிகவும் ரசிகர்கள் பலர் இருந்தனர். மேலும் அவர் மருத்துவம், பூமி சாஸ்திரம், வான சாத்திரம், ராஜாங்க சாத்திரம், புராண இதிகாசங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு என அனைத்திலும் தேர்ந்தவராக இருந்தார். அதோடு மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றிலும் அவருக்குத் தெளிந்த அறிவு இருந்தது. இலக்கியத்தில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்னும்படி இலக்கியகர்த்தாவாக விளங்கி இருந்தார்.  கங்கா தேவி பண்டிதரைப் பார்த்து பாணரைப் பற்றிப் புகழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தாள்.

அன்றைக்குச் சுமார் ஐநூறுஆறு நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த மக்கள்/ அரசாங்கம்/அது நடந்த விதம் என என்னென்ன உண்டோ அனைத்தையும் பாணர் தன் நூல்கள் மூலம் தெளிவாகத் தெரிவித்து விட்டார் எனவும் அதுவும் காதம்பரி ஒன்றின் மூலமே அனைத்தும் தெரிந்து கொள்ள முடிகிறது எனவும் மஹாராஹா ஹர்ஷர் வாழ்ந்த காலத்தைக் கூர்ந்து கவனித்து அப்போதிருந்த ராஜாங்க நடைமுறைகளைத் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பதையும் எடுத்துக் கூறி இவற்றைப் படிக்கும் சமயங்களில் தானும் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜனங்களிடையே வாழ்ந்த மாதிரியான உணர்வைப் பெறுவதாகவும் கூறினாள். ஆனால் பண்டிதரோ மென்மையாக அதை மறுத்தார். இளமை ததும்பிய கங்காதேவி தன் வயது, இளமை இவற்றின் காரணமாகவே சிங்காரம் நிறைந்த ஒரு காதல் காவியமான காதம்பரியைப் பாராட்டுவதாயும் இது வெறும் தோற்றம் எனவும் உடலுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் இது போதையைக் கொடுக்கும் எனவும் உடலுக்குப் போதை வேண்டி அருந்து மதுவைக் காட்டிலும் இது கொடியது எனவும் கூறினார்.

ஆனாலும் கங்காதேவி அவர் எழுதி இருக்கும் விதத்தைப் பாராட்டும் முறையாக மேலும் பேசினாள். சங்கிலித்தொடர் போன்ற நீண்ட வாக்கியங்களில் எழுதி இருப்பதை அவள் சுட்டிக்காட்டவும் பண்டிதர் அவற்றின் இடையே வந்திருக்கும் சிறு வாக்கியங்கள் இன்னமும் லளிதமாக அமைந்திருப்பதைக் காட்டினார். கங்காதேவி இதனாலேயே பாணரின் எழுத்தின் மேல் தனக்கு ஏற்பட்டிருக்கும் மோகத்தைப் பற்றியும் தான் அது வரையிலும் சுமார் 20 முறைகளுக்கும் மேல் காதம்பரியைப் படித்திருப்பதாகவும் ஒவ்வொரு தரமும் புதுமையாகத் தென்படுவதாயும் கூறினாள். அதைக் கேட்ட பண்டிதர் இதனால் தவறேதும் இல்லை எனவும் வடமொழி வார்த்தைகளில் கங்காதேவிக்கு ஆழ்ந்த ஞானம் ஏற்படும் என்றும் கூறினார். அதைக் கேட்ட கங்கா தேவி தனக்கும் இயன்றால் இப்படி ஒரு சரிதம் எழுத ஆவலாய் இருப்பதாய்க் கூறினாள். 

அதற்குப் பண்டிதர் பாணர் சரிதம் எழுதினார் எனில் அவருக்கு அது குறித்த ஞானம் நிறைய இருந்ததாகவும், அனுபவங்கள் அவருக்கு அதிகம் எனவும் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து அவரின் சிறு வயதிலேயே தாய் இறந்துவிட்டாள் எனவும் தந்தையும் அவருடைய பதின்ம வயதில் இறக்கவே அதன் பின்னர் பாணர் போகாத இடமில்லை எனவும் சுற்றாத இடம் இல்லை எனவும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சிநேகிதம் வைத்துக் கொண்டதால் அவருக்குப் பரந்து பட்ட அறிவு ஏற்பட்டதாயும் கூறினார். அதன் பின்னரே திருந்தி மீண்டும் குடும்பத்திற்குள் வந்து ஹர்ஷரின் சரிதத்தை எழுதினதாகவும், அதன் பின்னர் காதம்பரியை எழுதியதாகவும் கூறினார். அவர் பட்ட அனுபவங்களின் துணை கொண்டே அவரால் இதெல்லாம் எழுதி முடிக்க முடிந்தது எனவும் கூறினார். மேலும் கங்காதேவியிடம் அத்தகைய அனுபவங்கள் உனக்கு இருக்கின்றனவா என்றும் கேட்க கங்காதேவி திகைத்தாள்.

பின்னர் தனக்கு சொந்த அனுபவம் இல்லை எனினும் கேள்வி ஞானம் இருப்பதாயும் அதுவும் ஓர் அனுபவம் தானே எனவும் கேட்டவள் தன் கணவர் தான் செல்லுமிடமெல்லாம் தன்னையும் அழைத்துச் செல்வதையும் சொன்னாள். இந்த யாத்திரைகளெல்லாம் கொடுக்கும் அனுபவம் போதாதா என்றும் கேட்டாள். பண்டிதர் சிரித்த வண்ணம், "சரிதான் கங்கா! பாணரைப் போல் அலைந்து திரிந்து அனுபவம் பெறாவிட்டாலும் உனக்கேற்பட்ட அனுபவங்களை வைத்தே உனக்குத் தெரிந்ததை நீயும் எழுது! உனக்கு என் ஆசிகள்!" என்றார்.