எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 28, 2019

சுல்தானியர்கள் சமாதானத்துக்கு வருகிறார்களா?

குலசேகரன் அந்தக் கோட்டையில் தான் வாசந்திகா இருக்க வேண்டும் என நினைத்தான். உயிருடன் இருப்பாளா? அல்லது பட்டினிச்சாவில் இறந்துவிட்டாளா?தெரியவில்லை! அவள் உடலும் தூக்கி எறியப் பட்டிருந்தால்? இந்த எண்ணமே அவனை வேதனை செய்தது. அவள் மட்டும் உயிருடன் இருந்தால் ஹொய்சளர்கள் முற்றுகை குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்திருப்பாளே! நானும் இங்கே வந்து போரில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்திருப்பாளே! ஆகவே அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு நம்பிக்கையும் வந்திருக்க வேண்டும். கவலைப்படாமல் அடுத்து ஆகவேண்டியதைப் பார்ப்போம் எனநினைத்தான் குலசேகரன். மறு தினத்தில் இருந்து மறுபடி சடலங்கள் வந்து விழ ஆரம்பித்தன. 

அங்கே கோட்டைக்குள்ளே! பதினான்கு நாட்களுக்கான உணவு மட்டுமே இருக்க சுல்தானியர்கள் மக்களைக் கொன்று எறிந்து கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இதைக் கண்ட ஹொய்சளர்கள் பரபரப்புடன் பீதியும் அடைந்தனர். குலசேகரனுக்குக் கோட்டையைத் தாக்குவதில் ஆவல் அதிகம் ஆயிற்று. மறுபடி போய் மன்னனைக் கெஞ்சினான். ஆனாலும் மன்னர் அவசரப்படக் கூடாது, இன்னும் இரு நாட்கள் போகட்டும், பொறுத்திருப்போம் என்றே சொன்னார். அதன்படி இரண்டு நாட்கள் சென்று மூன்றாம் நாள் காலை ஹொய்சளப்படை மாபெரும் புயல் போல் கிளம்பியது.  போர் முரசுகள், "தம், தம், தம், " என்று போட்ட சப்தம், எங்கும் நிரம்பி, "யுத்தம், யுத்தம், யுத்தம்" என்று எதிரொலித்தது. ஹொய்சளப்படை கண்ணனூர்க் கோட்டையை நோக்கி முன்னேறியது.

ஹொய்சள வீரர்கள் உணவு கிடைத்தமையால் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தனர் என்பதோடு அதிகச் சேதமும் கடந்த இரண்டு தாக்குதல்களில் நிகழவில்லை. ஆகவே இன்னமும் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். அவர்கள் எழுப்பிய ஜெய கோஷங்களால் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. கோட்டை வாயிலை நோக்கிப் படைகள் வேகம் வேகமாகச் சென்றன. அதுவும் இல்லாமல் இத்தனை கால முற்றுகையில் கோட்டைக்குச்  சுற்றிலும் செல்லும் அகழிகளைத் தூர்த்திருந்தனர் ஹொய்சள வீரர்கள். ஆகவே கோட்டைக்கு அருகே போவதற்கு அதிகம் கஷ்டப்படவில்லை.  சுல்தானிய வீரர்கள் வெளியே வருவதற்கு முன்னரே ஹொய்சள வீரர்கள் போரை ஆரம்பித்து விட்டனர். அம்புகளை மழையாகக் கோட்டைச் சுவர் மேல் பொழிந்தார்கள். ஹொய்சள வீரர்களின் அடுத்தடுத்த இடைவெளி காணாத அம்புச் சரங்களால் கோட்டை மறைக்கப்பட்டது. அம்புகள் அனைத்தும் கூடு போல் சென்று மறைத்துக் கொண்டன.  கோட்டை முகடுகள் மீதெல்லாம் அம்புச் சரங்கள்.

ஒரு சிலரின் அம்புகள் கோட்டைக்கு உள்ளேயே போய்ப் பாய்ந்தன. வெளியே வந்த சுல்தானிய வீரர்கள் அரை நாழிகையில் எதிர்த்து நிற்க முடியாமல் கோட்டைக்கு உள்ளே மறைந்து விட்டனர். உடனே ஹொய்சள வீரர்கள் கயிற்றால் ஏணிகள் கட்டி அவற்றின் உதவியோடு கோட்டைச் சுவர் மேல் ஏறி உள்ளே குதிக்க ஆரம்பித்தனர். கோட்டைச் சுவரில் ஆப்புகளைச் சிலர் அறைந்தனர். கோட்டை வாசலை யானைப்படைகள் வந்து வெகு வேகமாகவும் வலிவாகவும் தாக்கியது. யானைகள் கோட்டைக் கதவுகளை மடேர் மடேர் என முட்டின. அன்று பகலுக்குள்ளாகக் கோட்டை ஹொய்சளர் வசம் வந்துவிடுமோ என்று இருந்தது. அனைவரும் உற்சாகத்துடன் போரிட்டார்கள்.  வீர வல்லாளருக்குப் பெருமிதம் தாங்க வில்லை. ஆங்காங்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தானும் எதிரிட்டு வருபவனை வீழ்த்திக் கொண்டும் இருந்தார். அந்த வயதிலும் அவர் உற்சாகம் வீரர்களுக்கு வியப்பையும் அதே சமயம் மேலும் உற்சாகத்தையும் ஊட்டியது. அப்போது பார்த்துக் கோட்டைக்குள்ளிருந்து, "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்!" என்னும் கூக்குரல் வருவது தெரிந்தது.

வீர வல்லாளர் கூக்குரல் வந்த இடத்தைப் பார்த்தார். கோட்டைச்சுவர் எங்கும் வெள்ளைக் கொடிகள் முளைத்திருந்தன சுல்தானியர் சமாதானம் வேண்டிக் கொள்கிறார்கள் என்பதை மன்னர் புரிந்து கொண்டார். ஹொய்சள வீரர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தளபதிகளும், தண்டநாயகர்களும் வீர வல்லாளரைச் சூழ்ந்து கொண்டார்கள். சமாதானத்துக்கு அவர்கள் மசியவில்லை. போரைத் தொடர வேண்டும். சுல்தானியரை வீழ்த்த வேண்டும் என்று ஆவேசத்துடன் கூவினார்கள். மன்னர் யோசித்தார். குலசேகரனைப் பார்த்தார். குலசேகரனும் போர் புரியவே விரும்பினான். ஆனால் மன்னரோ சரண் அடைந்தால் என்ன செய்வது என யோசித்தார். சரண் அடைவதாகத் தெரிவிக்கட்டும், ஏற்போம். இல்லை எனில் போர்தான் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு அப்படியே கோட்டைக்குள் செய்தியும் அனுப்பப் பட்டது. அனைவரும் சரண் அடைய வேண்டும். இல்லையேல் போர் தான் என்பதே அந்தச் செய்தி.

Saturday, April 27, 2019

சிங்கப்பிரானின் முடிவும், ஹொய்சளர்களின் தாக்குதலும்!

கோட்டை முற்றுகை தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே ராஜகம்பீர நாட்டிலிருந்து குலசேகரனுக்குச் செய்தி வந்தது. அதில் சிங்கப்பிரான் மிகவும் உடல் நலம் மெலிந்து நலிந்திருப்பதாகவும் அவர் அவனைக் காண விரும்புவதாகவும் செய்தி வரவே குலசேகரன் உடனே அங்கே கிளம்பிச் சென்றான் . நோயினால் மெலிந்திருந்த சிங்கப்பிரானின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.அரங்கனின் அடியார்கள் அனைவருமே இப்படி நோயினாலும் வேறு விதமான காரணங்களினாலும் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.இப்படியே சென்றால் அரங்கனைப் பாதுகாக்கக் கூட ஆட்கள் இருப்பது சந்தேகமே! இதை எண்ணிக் குலசேகரன் கலக்கம் அடைந்தான். சிங்கப்பிரானோ கண்ணீருடன் தான் இனி அதிக நாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் அதற்குள் அரங்கனை ஒரு முறை கண்ணாரக் காண வேண்டும் எனவும் கூறினார். அதன் பேரில் குலசேகரன் ஓர் சிவிகையை ஏற்பாடு செய்து அதன் உள்ளே படுக்கை போன்ற இருக்கையை அமைத்து அதில் சிங்கப்பிரானைக் கிடத்தித் திருவரங்கத்துக்குத் தக்க துணையுடன் அழைத்துச் சென்றான்.

சந்நிதியை அடைந்த சிங்கப்பிரான் மூடிக் கிடக்கும் சந்நிதியையும் அதன் முன் எழுப்பப்பட்டிருந்த கற்சுவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். அரங்கா! அரங்கா! இதுவும் உன் லீலையோ? இன்னும் எத்தனை நாட்கள் அப்பா உன் கோயில் திறக்காமல் உனக்கு வழிபாடு நடத்தாமல் செல்லப் போகிறதோ! தெரியவில்லையே! உன் திருச்சந்நிதி மூடிக்கிடந்தே நான் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில் இப்படிப் பதினெட்டு ஆண்டுகளாக மூடிக் கிடப்பதையும் அதைத் திறக்கும் வழி தெரியாமலும் தவித்துக்கொண்டு இருக்கிறேனே! இப்படி ஓர் அநியாயமும் நடந்து விட்டதே! இனி இவ்வுலகில் நான் இருந்து என்ன பயன்? எனப் பலவாறெல்லாம் புலம்பிக் கொண்டு கீழே இறங்கி அரங்கன் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்தார். அவரைத்தேற்றி மறுபடியும் சிவிகையில் கிடத்தி அழைத்துச் செல்வதற்குள் குலசேகரனுக்கு என் பாடு உன் பாடு என்றாகி விட்டது. அரங்கன் கோயில் திறக்காமல் மூடியே கிடந்ததைப் பார்த்ததாலோ என்னவோ அடுத்த ஒரு வாரத்திலேயே சிங்கப்பிரான் திருநாடு எழுந்தருளி விட்டார்.

அடுத்தடுத்து அரங்கன் அடியார்கள் திருநாடு எழுந்தருளுவதையும் அவர்களைப் பிரிந்த சோகம் தன்னை மேலே மேலே வந்து தாக்குவதையும் பார்த்த குலசேகரன் இம்முறை செய்வதறியாது தவித்தான். முதலில் பஞ்சு கொண்டான். பின்னர் பிள்ளை உலகாரியர்! இப்போது சிங்கப்பிரான். இப்படித் தனக்கு வழிகாட்டித் தன்னை நடத்தி வந்தவர்கள் ஒவ்வொருவராக மறைவது கண்டு அவன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதிலும் இப்போது கோட்டை முற்றுகை நீடித்திருப்பதால் விரைவில் வெற்றி கிட்டும் என்னும் நிலை. இந்தச் சமயம் பார்த்து இப்படி எல்லாம் நேருகிறதே என எண்ணினான். அடுத்த ஒரு மாதமும் முற்றுகை நீடித்து ஆறு மாதங்களும் முடிந்தன. குலசேகரன் உடனே கோட்டையின் மேல் தாக்குதலை ஆரம்பிப்போம் என மன்னரிடம் வற்புறுத்தினான். கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு உணவு இருக்காது! ஆகவே இப்போது நாம் தாக்கினால் கோட்டை நம் வசம் என்றான். ஆனால் மன்னர் அதற்குச் சம்மதிக்கவில்லை.

கோட்டைக்குள் படை வீரர்களை அனுப்பி அவர்களை இழக்க விரும்பாத மன்னர் முதலில் அம்புச்சுருள்களை அனுப்பிப் பார்க்கலாம் என்று கூறி அதன்படியே கோட்டையின் வெளிப்பக்கச் சுவர்களில் காணப்பட்ட மாடங்களில், உடனே சரணடையும்படியான செய்தியை எழுதிய ஓலைகளை அம்புகளில் கட்டி அங்கே எறிந்தார்கள். அதற்கு மறுமொழியாக அன்று மாலையே அந்திப் பொழுதில் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நர்த்தகிகள் ஆடல், பாடலுடன் ஆட ஆரம்பித்தனர். இதன் பொருள் தாங்கள் அனைவரும் கோட்டைக்குள் ஆரோக்கியமாகவும் எவ்விதமான கஷ்டமும் இல்லாமல் ஆடல், பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் என்பதைப் புரிந்து கொண்டனர் ஹொய்சள வீரர்கள். இதை அடுத்துச் சில நாட்கள் தினம் தினம் மாலை வேளைகளில் நாட்டிய நங்கைகள் கோட்டையின் மதில் சுவரில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் இன்னும் சில நாட்கள் கழிந்தன. நடன மங்கைகள் ஒவ்வொருவராகக் குறைந்து போய்க் கடைசியில் எவரும் வரவே இல்லை.

சில வாரங்களில் கோட்டை மதில் சுவருக்கு மேலே இருந்து இரு மனித சடலங்கள் உள்ளிருந்து தூக்கி எறியப்பட்டு வெளியே கீழே விழுந்தன. அதைக் கண்ட வெளியில் இருந்த வீரர்கள் கோட்டைக்குள் பட்டினிச்சாவு ஆரம்பித்து விட்டதை அறிந்து கொண்டனர். அதன் பின்னர் தினமும் சடலங்கள் கோட்டைக்கு வெளியே வந்து விழ ஆரம்பித்தன.சிறிது நாட்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனக் கோட்டைக்குள் குடி இருந்த மக்களின் சடலங்கள் வெளியே வந்து விழ ஆரம்பித்தன.எங்கும் முடை நாற்றம் நாற ஆரம்பிக்கவே கோட்டைக்குள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதை உணர்ந்தனர் ஹொய்சள வீரர்கள்.  கோட்டைக்கதவு திறந்து கொண்டு எந்த நிமிஷமும் சுல்தானிய வீரர்கள் தாக்குதலுக்கு வரலாம் என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அதே போல் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு சுல்தானிய வீரர்கள் ஹொய்சள வீரர்களை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்கள். வீரர்கள் பட்டினி, அதுவும் வெகு நாளாகப் பட்டினி என்பது பார்த்ததுமே தெரிந்தது. ஊட்டம் இல்லாமல் பட்டினி கிடக்கிறோமே என்னும் ஆத்திரம் மேலோங்க வெறியோடு பாய்ந்தனர். காலையில் முதல் முஹூர்த்தத்தில் ஆரம்பித்தது சண்டை. சுல்தானியரின் முரட்டுத் தனத்துக்கு ஈடு கொடுத்து ஹொய்சள வீரர்கள் சளைக்காமல் போர் புரிந்தனர். அரை நாழிகைச் சண்டையிலேயே சுல்தானிய வீரர்கள் களைத்துப் போய்விட்டனர். பின்வாங்கிக் கோட்டைக்குள் போய்ப் பதுங்கலாம் என நினைப்பதற்குள்ளாகக் குலசேகரன் மறைத்து வைத்திருந்த தன் படையைக் கோட்டை வாசலுக்குக் கொண்டு சேர்த்திருந்தான். இதை சுல்தானியர்கள் எதிர்பார்க்கவே இல்லை.  கோட்டைக்குள் இப்போது முதலில் நுழையப் போவது ஹொய்சளர்களா, சுல்தானியர்களா என்னும் சண்டை ஆரம்பித்தது.

இந்தச் சண்டையில் சுல்தானியர் பலர் இறந்து நடுப்பகலுக்குள் கிழக்கு வாசல் எல்லாம் ஓய்ந்து போய்க் காணப்பட்டது. குலசேகரன் கோட்டையைத் தாக்க இது தான் சமயம் என நினைக்க மன்னரோ அவசரப்பட வேண்டாம் என்றார்.ஆட்களைப் பலி கொடுக்காமல் காத்திருந்தால் சில நாட்களில் கோட்டையில் இருப்பவர்கள் தாங்களாகவே சரணடைவார்கள் என்றார் மன்னர்.

Friday, April 26, 2019

நீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்!

முற்றுகையைத் திடமாக நடத்தினார்கள் ஹொய்சளர்கள். நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. என்றாலும் மனம் தளரவில்லை. நான்காம் மாதம் கியாசுதீன் ஓர் படையுடன் கண்ணனூர் நோக்கி வருவதாக மதுரையிலிருந்து வந்த ஒற்றர்கள் மூலம் தகவல்கள் கசிந்தன.  வடகாவேரிக்கரையில் ஹொய்சளர்கள் அவர்களை எதிர்கொண்டனர். கியாசுதீனின் வலுவற்ற படையால் ஹொய்சளர்களின் அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. ஒரே நாள் சண்டையில் கியாசுதீன் தப்பித்தோம், பிழைத்தோம் என மதுரைக்கு ஓடி ஒளிந்து விட்டார். இந்த வெற்றி ஹொய்சளர்களிடையே புதியதொரு தெம்பைக் கொடுத்தது. விரைவில் மதுரையிலிருந்தும் சுல்தானியர்களைத் துரத்திவிடலாம் என மகிழ்ந்தார்கள். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இப்போது கண்ணனூர்க் கோட்டை முற்றுகையை முடிக்கும் முன்னே மதுரைக்குச் செல்லக் கூடாது என்பதிலும் திண்ணமாக இருந்தார்கள்.

அப்போது குலசேகரனுக்கு ஓர் யோசனை தோன்றிற்று. உடனே வீர வல்லாளரிடம் சென்று, அரங்கன் கிருபையால் வெற்றி கிட்டும்  எனத் தோன்றுவதால் விரைவில் அரங்கன் கோயிலைத் திறக்கும் நாட்கள் வந்துவிடும். அதற்குள் போய்த் தான் அரங்கன் கோயிலைச் சற்று சீரமைக்க எண்ணுவதாகத் தெரிவித்தான். கோயில் பாழ்பட்டிருக்கும் என்றும் அதைச் சீராக அமைத்து வைத்தால் அரங்கன் கோயிலுக்குள் வந்த உடனே வழிபாடுகளைத் தொடங்கி விடலாம் என எண்ணுவதாகவும் சொன்னான். அதற்கு வல்லாளர் தானும் கூட வருவதாகச் சொல்லிவிட்டு ஓர் வெள்ளிக்கிழமை நல்ல நாளாகப் பார்த்து, நல்லவேளையும் பார்த்து, நிழலை அளந்து நாழிகைக் கணக்குப் பார்த்து சுப முஹூர்த்தத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு குலசேகரனுடன் வல்லாளரும் தக்க பாதுகாப்புப் படைகளுடன் திருவரங்கம் நோக்கிப் பயணப்பட்டார்கள். திருவரங்கத்து மண்ணை மிதித்ததுமே குலசேகரன் உடல் சிலிர்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்து மண்ணை வணங்கினான். வீர வல்லாளரும் அரங்கன் கோயில் இருக்கும் திசை நோக்கித் தானும் கீழே விழுந்து வணங்கினார்.

பதினெட்டு ஆண்டுகளாக ஊரில் யாருமே குடி இருக்கவில்லை என்பதைக் குலசேகரன் போகும் வழியெங்கும் மண்டிக்கிடந்த செடி, கொடிகளில் இருந்தும் தூர்ந்து போயிருந்த சாலைகளில் இருந்தும் புரிந்து கொண்டான். அவன் கண்களில் நீர் ததும்பியது.  கண்ணீர் பெருக நகருக்குள் நுழைந்தான். தெருத்தெருவாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான்.  எங்கெங்கு பார்த்தாலும் எரிந்த அல்லது இடிந்த, அல்லது இடிக்கப்பட்ட வீடுகளின் மிச்சங்கள். ஆங்காங்கே கிடந்த சில எலும்புக்கூடுகள், கபாலங்கள்! ஊரே பாழ்பட்டது போல் தன் அழகு இழந்து காட்சி அளித்தது. தேர் ஓடும் வீதிகளுக்குள் நுழைந்தவன் மனம் பரபரக்கத் தன் வீட்டு வாசலைத் தேடிப் போனான். அங்கிருந்த யாளி முகப்பைத் தடவித் தடவிப் பார்த்தான். வீடு கூரை இல்லாமல் சிதிலமாகக் கிடந்ததையும் ஒரு காலத்தின் தானும், தன் தாயாரும் இங்கே வாழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான்.  துக்கம் பொங்கி வந்தது. வீட்டின் வாசற்படியில் அமர்ந்து, "அம்மா! அம்மா!" எனத் தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டு தன் தாயை நினைவு கூர்ந்தான்.

இந்த வீட்டை விட்டுச் செல்லும்போது திரும்பியே வரமாட்டோம் என்றா நினைத்தோம். திரும்பி மறுபடி வரப் போகிறோம் என்று தானே பத்திரமாகப் பூட்டிச் சென்றோம். எத்தனை வருடங்கள். ஆயிற்று. பத்தொன்பது வருடங்கள் முடியப் போகிறது. இத்தனை காலம் இங்கே வரவே போவதில்லை என நினைத்தோமா? வீடு தான் அதுவரை இருக்கிறதா? சிதிலமாகி விட்டதே! அப்போது இதெல்லாம் தெரியவே இல்லையே! குலசேகரன் விம்மத் தொடங்கினான். முன்னே சற்று தூரம் சென்றுவிட்ட வீர வல்லாளர் குலசேகரனைக் காணோம் எனத் திரும்பிப் பார்த்தவர் அவன் அங்கே வீட்டு வாசலில் நிலை குலைந்து அமர்ந்திருப்பதைக் கண்டு ஓரளவு விஷயம் புரிந்தவராய்த்திரும்பி வந்தார். மெல்ல அவனைத் தொட்டு எழுப்பி ஆசுவாசப்படுத்தி மேலே அழைத்துச் சென்றார்.

ஆயிற்று! இதோ கோயில்! இதோ கோபுரங்கள்! ஆஹா! இதோ ஆரியபடாள் வாயில்!  குலசேகரன் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. இங்கே தானே பஞ்சு கொண்டானோடு சேர்ந்து எதிரிகளைத் துவம்சம் செய்யச் சண்டை போட்டோம். பஞ்சு கொண்டான் நமக்கு எத்தனை எத்தனை யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  அவரை மனதில் நினைத்தவாறு உள்ளே சென்ற குலசேகரனுக்கு உள்ளே உள்ள எல்லாப் பகுதிகளும் இடிந்தும், பொடிந்தும் கிடந்ததைப் பார்த்தான்.  தன்னுடன் வந்த வீரர்களிடம் சொல்லிச் செடி, கொடிகளை அகற்றச் செய்தான். வீரவல்லாளரும், குலசேகரனும் நாழிகை வாசலைக் கடந்து சந்நிதிக்குள் சென்றனர். சந்நிதி மண்டபத்தில் ஏறியதும் அங்கே புழுதியும், கல்லும் குவிந்திருப்பதைக்கண்ட குலசேகரன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கீழே விழுந்து நமஸ்கரித்தான். மன்னரும் மண்டி இட்டு வணங்கினார். அவர் கண்களும் கண்ணீரைப் பொழிந்தன.

உள்ளே மூலவரை மறைத்து மூடி இருந்த கற்சுவர் அப்படியே இருந்தது. அதன் மீது அரங்கனைச் சித்திரமாக எழுதப்பட்டிருந்தது ஆங்காங்கே சிதிலமாகிக் கிடந்தது. ஆனாலும் அரங்கன் குலசேகரன் கண்களுக்கு விஸ்வரூபமாகத் தெரிந்து கொண்டிருந்தான்.  குலசேகரன் மனம் உருக அரங்கனைப் பிரார்த்தித்தான். வல்லாளரும் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிய வணங்கிக் கொண்டிருந்தார்.  குலசேகரன் அப்போதே அந்தக் கற்சுவரைப் பெயர்க்க வேண்டும் என ஆசைப்பட வீர வல்லாளரோ எக்காரணத்தினாலோ அவசரப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பின்னர் யோசனையுடன் தாம் இன்னமும் இந்த பூமிக்குச் சொந்தக்காரனாக ஆகவில்லை என்பதோடு முழு வெற்றியும் இன்னமும் கிடைக்கவில்லை. மேலும் இந்தக் கற்சுவரை எழுப்பியவர் வேதாந்த தேசிகர் எனச் சொல்லி இருக்கிறபடியால் அவரே வந்து இந்தக் கற்சுவரைத் திறப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார் மன்னர். அவ்வளவில் இருவரும் வீரர்களைக் கொண்டு சந்நிதியை மட்டும் சுத்தமாக்கும் வேலையைச் செய்தார்கள். சித்திர உருவத்தில் காணப்பட்ட அரங்கனுக்கு வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான உத்தரவை வீர வல்லாளர் வழங்கினார்.

அதன் பின்னரும் கண்ணனூர் முற்றுகை ஐந்தாவது மாதமாக நீடித்தது.

Tuesday, April 23, 2019

சுல்தானியர் அழிவும் தொடரும் முற்றுகையும்!

இருட்டில் காத்திருந்தது வீண் போகவில்லை. அரை நாழிகையில் சுல்தானிய வீரர்கள் தங்கள் திடீர்த் தாக்குதலை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். சுமார் ஆயிரம் பேர் இருக்கலாம் எனக் கணக்குப் போட்டான் குலசேகரன். அவர்களுக்கு மிக்கவும் மகிழ்ச்சி! எத்தனை எத்தனை ஹொய்சளர்களை அழிக்க நேர்ந்தது என்பது பற்றி உல்லாசமாகவும் கேலியாகவும் பேசிக் கொண்டு கொஞ்சம் அலட்சியமாகவே வந்தனர். அட்டகாசமாய்ச் சிரித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மேல் திடீரென அம்புகள் மழையாகப் பொழிந்தன. அதை எதிர்பார்க்காத சுல்தானிய வீரர்கள் தாக்குவது யார் எனப் பார்த்து எதிர்த்தாக்குதல் நடத்துவதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். யாருமே கண்களுக்குத் தென்படவில்லை. எங்கிருந்து தாக்குதல் வருகிறது என்பதையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய திடீர்த் தாக்குதலுக்கு இது பழிவாங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் ஓர் முடிவுக்கு வரும் முன்னர் வீரர்கள் பலர், "ஐயோ! ஐயோ!" எனக் கதறிக் கொண்டு கீழே விழுந்தனர்.  மற்றவர்கள் திக்பிரமித்துப் போய் நின்றனர். உணர்வுள்ள சிலர் மட்டும் தொங்கு பாலத்தை உடனே இறக்கும்படி கத்தினார்கள்.

ஆனால் பாலம் விழுவதற்கெல்லாம் குலசேகரன் இடம் கொடுக்கவே இல்லை. திடீரெனக் குதிரைகளைப் பாய்ந்து வீரர்கள் மேல் செலுத்தும்படி கட்டளை இட்டுக் கொண்டே சுல்தானிய வீரர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். சுல்தானிய வீரர்கள் அப்போது தான் ஓர் சிறிய போரை முடித்துவிட்டுச் சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். மீண்டும் இப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பலரும் ஹொய்சளர்களின் அம்புகளுக்கு இரையாகிக் கீழே விழுந்து இறந்தனர். சிறிது நேரத்திலேயே மொத்தப் படையும் அழிக்கப்பட்டு எஞ்சிய ஒன்றிரண்டு வீரர்களும் அகழியிலே விழுந்து இறந்தனர்.  நடு ஜாமத்தில் அங்குமிங்குமாகச் சிதறிப் போன ஹொய்சளப்படை மீண்டும் ஒன்று கூடியது. அவர்களைக் கணக்கெடுத்ததில் நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் சுல்தானியர்களின் தாக்குதலில் இறந்திருந்தார்கள்.

அப்போது எங்கோ மறைந்திருந்த மன்னரும் அங்கே வந்து விட்டார். குலசேகரனைப் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டவர், "குலசேகரா! நமக்கு இது ஒரு பாடம். இனி இவ்வாறு கவனக்குறைவாக இருக்கக் கூடாது. நல்லவேளையாக நம் அந்தப்புரத்து மகளிரும், இளவரசனும் தொலைவில் உள்ள மணல்வெளிக்குச் சென்றிருந்தார்கள். இல்லை எனில் சுல்தானியர் வைத்த தீயில் அகப்பட்டு மாண்டு போயிருப்பார்கள். ஹொய்சள வம்சமே புல், பூண்டு இல்லாமல் அடியோடு அழிந்து போயிருக்கும்." என்று கவலையுடன் சொன்னார். பின்னர் அடுத்து நடக்க வேண்டியதைக் குறித்துச் சிந்திக்கலானார்கள். ஆலோசனைகள் செய்துவிட்டுப் பின்னர் படுக்கச் சென்றனர். எங்கும் நிசப்தம்.

குலசேகரன் மனதிலோ தொலைவில் தெரிந்த கோட்டையில் கரிய உருவம் தெரிவது போலவும், "சுவாமி!" எனத் தன்னை அழைப்பது போலவும் இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டான். வாசந்திகாவை முதல் முதல் பார்த்ததில் இருந்து அவள் தனக்குச் செய்த சேவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தான். அரங்கனைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்ததாலும் அவளும் அரங்கன் கூட்டத்தாரோடு சேர்ந்து வந்ததாலும் தன்னைக் கவனித்தாள் என்றே அவன் நினைத்திருக்க அவளோ அவனையே தன் மனதால் நினைத்து நினைத்து வருந்தி இருக்கிறாள். அவள் கால்களில் கட்டிய சலங்கைகளின் ஒலி கேட்பது போலவும், மீண்டும் மீண்டும் அவள் தன்னை அழைப்பது போலவும் இருந்தது குலசேகரனுக்கு.

என்னுடனேயே அவள் வந்ததெல்லாம் என் மேல் கொண்ட மாளாத அன்பினாலா என எண்ணி வருந்தினான். என்னை முக்கியமாகக் கருதியதெல்லாம் என்னை அவள் ஒரு காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தினால் தான் என்பதை நினைக்கவும் குலசேகரனுக்கு மாளாத் துயரம் ஏற்பட்டது. தான் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என எண்ணி வருந்தினான். இப்போது இந்தக் கோட்டையிலோ அல்லது மதுரைக் கோட்டையிலோ அவள் அந்தப்புரச் சிறையில் அடிமையாக இருந்து வருகிறாள். தன்னை வந்து மீட்கச் சொல்லிக் கேட்டிருக்கிறாள். அவளை நான் மீட்பேனா? என்னால் இயலுமா? குலசேகரன் யோசனையில் ஆழ்ந்தான். அப்போதைய அரசியல் நிலவரத்தை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.

திருவண்ணாமலையில் அவனால் கொல்லப்பட்ட சுல்தான் உத்தௌஜிக்குப் பின்னர் குதுபுதீன் மதுரை மன்னனாகப் பட்டம் சூட்டிக் கொள்ள அது பிடிக்காத மற்றப் பிரபுக்கள் நாற்பது நாட்களிலேயே அவரைக் கொன்றுவிட, பின்னர் கியாசுதீன் என்பவன் பட்டத்திற்கு வந்திருந்தான். இவன் எத்தனை நாட்களோ? தாக்குப்பிடிப்பானா தெரியவில்லை. மதுரைச் சிம்மாதனத்திற்கு சுல்தானியர்கள் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதே சமயம் ராஜ வம்சத்தினர் பலரும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் விவகாரங்களைச் சரிவரக் கவனிக்காமலும் இருக்கின்றனர். ஆகவே கண்ணனூர் முற்றுகைச் செய்தி மதுரையை எட்டினாலும் உடனடியாக யாரும் வந்து அவர்களுக்கு உதவவில்லை. கியாசுதீன் கோபத்தில் கத்தியதோடு சரி! இதெல்லாம் குலசேகரன் காதுகளுக்கு எட்டியது. கண்னனூர் முற்றுகையும் நீடித்து இப்போது 3 மாதங்கள் ஆகிவிட்டன.

Sunday, April 21, 2019

திடீர்த் தாக்குதல்! குலைந்த ஹொய்சளர்கள்!

இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. படை வீரர்கள் யாவரும் அன்றாட வேலைகளின் முடிவில் ஓய்வாக அமர்ந்து கொண்டு இரவு உணவுக்காகக் காத்திருக்கும் நேரம். இரவு உணவு ஆங்காங்கே தயாராகிக் கொண்டிருந்தது. பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எதிரிகள் தாக்குதல் எல்லாம் இருக்காது. தொடங்கவே மாட்டார்கள். நீட்டிக்கவும் மாட்டார்கள். ஆனால் இப்போதோ? கிழக்கு வாசல் அருகே தீவர்த்திகளின் ஒளி பிரகாசமாய்த் தெரிய அவை ஓர் இடத்தில் நில்லாமல் மெல்ல மெல்ல முன்னேறி வருவதும் தெரிந்தது. ஆகவே அதைக் கண்ட குலசேகரனுக்கும், மன்னருக்கும் ஏதோ ஆபத்து நெருங்குகிறது என்பது புலப்படவே உடனே தங்கள் குதிரைகளில் பாய்ந்து ஏறிக் கிழக்கு வாசலை நோக்கிக் குதிரைகளை விரட்டினார்கள். அவர்கள் அங்கே வந்து சேரவும் உள்ளிருந்து திடீரென வெளியே வந்த துருக்கியப் படைகள் கிழக்கு வாசலில் சற்றும் தயாராக இல்லாத வீரர்களைத் தாக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

குதிரைகள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து வீரர்களுக்கென அமைத்திருந்த கூடாரங்களுக்கு இடையில் புகுந்து வேகமாகச் சென்று கையில் வைத்திருந்த தீப்பந்தங்களால் கூடாரங்களுக்குத் தீ வைத்த வண்ணம் முன்னேறினார்கள். இந்தத் தாக்குதல் போதாது எனப் பின்னால் வந்த வீரர்கள் கைகளில் விற்களை வைத்துக் கொண்டு அம்பு மழை பொழிந்த வண்ணம் வந்தனர். ஹொய்சள வீரர்களோ அப்போது தாக்குதலைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதைக் கூட நினையாமல் ஆங்காங்கே சிதறி ஓடத்தொடங்கினார்கள். ஆனால் என்ன பரிதாபம்! அவர்கள் ஓட முடியாமல் கூடாரங்களும் அவற்றில் வைத்த தீயும் அவர்களைத் தடுக்க எங்கும் கூக்குரல்கள், ஓலங்கள் எழுந்தன. எங்கெங்கும் அபயக்குரல்கள். வீரர்கள் நிலை தடுமாறிப் போய்விட்டனர் என்பதையும் எப்படி இது ஆரம்பித்திருக்கும் என்பதையும் ஓரளவுக்கு ஊகித்து விட்ட குலசேகரன் அடுத்துச் செய்ய வேண்டியதை யோசித்தான். உடனே மன்னரைப் பார்த்துப் பாசறைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி அவரை அனுப்பி விட்டுக் கிழக்குக் கோட்டை வாசலுக்குக் குதிரையை விரட்டிக் கொண்டு சென்றான்.

செல்லும் வழியெங்கும் ஹொய்சள வீரர்கள் சிதறிக்கொண்டு பின் வாங்கி ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்களைச் சமாதானம் செய்து கொண்டு அவன் போட்ட கூப்பாடுகளை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.  குதிரையுடன் வேகமாக வந்து கொண்டிருந்த அவனைக் கவனிக்காமலேயே அவனைத் தாண்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். நிலைமை மிகவும் மோசமாகி விட்டதை உணர்ந்த குலசேகரன் தன்னால் இப்போது செய்ய முடிந்தது மன்னரையும் ராணி கிருஷ்ணாயியையும் காப்பாற்ற வேண்டியது ஒன்றே என்பதை உணர்ந்தான். விருட்டெனக் குதிரையைத் திருப்பிக் கொண்டு சிதறி ஓடிக் கொண்டிருந்தவர்கள் இடையே பாய்ந்து மன்னரின் பாசறை நோக்கிக் குதிரையை ஓட்டினான். ஆனால் அந்தோ! பரிதாபம். துருக்கியர்கள் முந்தி விட்டனர். வழியெங்கும் கூடாரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.  பாதை முழுவதும் தீயால் மூடப்பட்டிருந்தது. செல்லவே முடியவில்லை.

அவற்றில் மன்னரின் பாசறையும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் குலசேகரன் கண்டு பதறினான். ஆனால் என்ன செய்ய முடியும்? சுற்றும் முற்றும் பார்த்தவனுக்குப் பாசறையிலோ அல்லது சுற்றுவட்டாரங்களிலோ யாரும் கண்களில் படவில்லை என்பதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். தீப்பற்றுவதற்குள் மன்னரும், ராணியும் தப்பி இருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? இல்லை எனில் நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ? அனைவரும் தீயில் மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார்களோ? யோசனை செய்த குலசேகரனுக்கு உள்ளுக்குள் துருக்கியர் மேல் இனம் காணா வெறி மூண்டது. இப்படி திடீர்த் தாக்குதல் நடத்தி அனைவரையும் சிதறச் செய்த துருக்கியர்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்படியான பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்தான்.

குதிரையைத் தட்டிவிட்டுத் தெற்குக் கோட்டை வாசல் பக்கம் சென்றான். அவன் நினைத்தது சரியாக இருந்தது. இரவுக் காவல் படையினர் இரவுக்காவலில் சுற்றி வருவதற்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விரைவாக அவர்களிடம் சென்று கிழக்குக் கோட்டை வாசல் பற்றிக் கூறி ஆபத்து என்பதைச் சுட்டிக் காட்டி அவர்களையும் அழைத்துக் கொண்டு கிழக்குக் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தான்.கோட்டையை விட்டு வெளியே வந்து தாக்குதல் நடத்திய சுல்தானிய வீரர்கள் இன்னமும் அங்கே இருந்ததைக் கண்டு தங்களை மறைத்துக் கொண்டு அனைவரும் அந்த இருட்டில் காத்திருந்தார்கள்.

Saturday, April 20, 2019

வீர வல்லாளரின் வீரமும், குலசேகரன் கவலையும்!

வீர வல்லாளர் மொத்தப் படையும் கண்ணனூர்க் கோட்டைக்கு அருகே வந்து சேர்ந்ததும் முற்றுகையை ஆரம்பித்தார். பெரும்பாலான முக்கியப் படைகளைக் கோட்டையைச் சுற்றிலும் நிற்க வைத்தார். நான்கு திசைகளிலும் முக்கிய வீரர்களை நிறுத்தினார். தண்டநாயகர்களை அழைத்து முற்றுகையின் போது கோட்டைக்குள் இருப்பவர்களோடு வெளியே உள்ள வியாபாரிகள் தொடர்பு கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும்படி கட்டளை இட்டார். தம் முன்னோர்கள் கட்டிய இந்தக் கோட்டை, ஹொய்சளர் வசம் இருந்த இந்தக் கோட்டை இப்போது சுல்தானியர் வசம் போய்விட்டதே என மனம் வருந்தினார். அந்தக் கண்ணனூர்க்கோட்டையின் ஒவ்வொரு மூலை முடுக்கும் வீர வல்லாளர் நன்கு அறிவார். ஆனால் அவற்றை எல்லாம் நினைத்து வருந்த இது நேரம் அல்ல.

படையின் ஒரு பகுதியைப் பிரித்துத் தெற்கே அனுப்பி வடகாவிரிக்கரையில் தண்டு இறங்கிக்கொண்டு மதுரையிலிருந்து உதவிப் படைகள் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தும்படி ஏற்பாடு செய்தார்.  தானே நேரில் சென்று பல்லக்கில் இருந்த வண்ணம் எல்லா ஏற்பாடுகளையும் சரி பார்த்துக் கொண்டும் மேற்கொண்டு ஆலோசனைகள் கூறிக் கொண்டும் வயதைப் பாராட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் மன்னர். முற்றுகை ஆரம்பித்து ஒரு வாரம் ஆனபின்னரும் கோட்டைக்குள்ளிருந்து எவ்விதமான மாறுபாடுகளும் தெரியவில்லை. கோட்டை மூடப்பட்டு எவ்விதமான இயக்கமும் இல்லாமல் இருந்தது. இது மன்னர் மனதை மிகவும் உறுத்தியது. நம் எல்லோரையும் பயமுறுத்தி வந்த சுல்தானியர்களா இப்போது பயந்து நடுங்கி ஒடுங்கிக் கோட்டைக்குள் இருக்கின்றனர் என ஆச்சரியம் அடைந்தார்.  அந்தி சாயும் நேரம் வழக்கம் போல் மாலை உலா வந்து கொண்டிருந்த  வல்லாளருக்கு அங்கிருந்த ஓர் பாறையின் மேல் அமர்ந்திருந்த குலசேகரன் கண்களில் பட்டான்.

அவனைக் கண்டதும் அவனை அருகில் அழைத்தார் மன்னர். ஏதேதோ யோசனைகளில் ஆழ்ந்திருந்த குலசேகரன் மன்னர் தன்னை அழைப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து வந்தான்.  அவனிடம் என்ன விஷயம் எனக்கேட்கத் தான் அரங்கனைப் பற்றியே யோசிப்பதாகவும், அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து திருவரங்கத்தைப் பழையபடி பொலிவுறச் செய்வதே தன் லட்சியம் எனவும் அதற்கான யோசனைகளையே தான் செய்து வருவதாகவும் தெரிவித்தான்.ஆனால் அதற்கு ஏற்பட்டிருக்கும் தடங்கல்களையும் இன்னமும் தங்களால் கண்ணனூரைப் பிடிக்கமுடியவில்லையே என வருந்துவதாகவும் கூறினான். கண்ணனூரையும் மதுரையையும் பிடித்தால் தான் தான் நினைக்கும் காரியம் நடக்கும் என்பதால் அதற்காக ஏற்பட்டு வரும் தாமதங்களையும் தடங்கல்களையும் பற்றித்தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தான்.

சிரித்த மன்னர் நம்பிக்கையை முழுதாக வைக்க வேண்டும் எனவும் எந்நேரமும் மனதைத் தளர விடக் கூடாது எனவும் கூறினார். எண்பது பிராயத்தைக் கடந்த தான் இன்னமும் இந்தக் கிழ வயதில் கண்ணனூர் மேல் படை எடுத்து வந்திருப்பதன் காரணமே நம்பிக்கை தானே என்று கேட்டார்.  முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்னர் மாலிக்காபூர் படை எடுத்து வந்தபோதில் இருந்தே தான் இனிமேல் தென்னாட்டில் சுல்தானியர்களைத் தலை எடுக்க விடக்கூடாது என சபதம் செய்திருப்பதாகவும், அதற்கெனவே இந்த வயோதிகத்திலும் அதை நிறைவேற்ற வேண்டி இந்த முற்றுகையை ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். இதில் கிடைக்கப்போவது வெற்றியா தோல்வியா என்பதே தெரியாத நிலையில் தான் இருப்பதையும் வெற்றிக்கு அந்த அரங்கன் துணையையே நம்பி இருப்பதையும் தெரிவித்தார்.

இந்தக் கோட்டையைக் கட்டி முடித்த தம் மூதாதையர்கள் இப்படி ஒரு காலம் வரும் எனஎதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள் என்றும், இப்போது சுல்தானியர் வசம் இருக்கும் இந்தக் கோட்டையைத் தான் எப்படியேனும் மீட்க எண்ணுவதாகவும் கூறினார். துருக்கியர் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தக் கோட்டையை மீட்டு மீண்டும் ஹொய்சளர் வசம்கொண்டு வந்து அரங்கனையும் திருவரங்கத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தன் லட்சியமும் என்றார் மன்னர். எதிரிகள் உள்ளே நுழைய முடியாவண்ணம் வலுவாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையின் வலுவே இன்று தமக்கு எதிராக இருப்பதாகவும் தம் முன்னோர்கள் நன்மையை நினைத்துக் கட்டிய இந்தக் கோட்டையே இன்று தனக்கே எதிராக இருப்பதையும் எடுத்துக் கூறினார்.

இது தான் விதி என்பது என்றார் மன்னர். இதற்கெல்லாம் மனம் தளராமால் மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனிக்க வேண்டியது ஒன்றே இப்போதிருக்கும் ஒரே வழி என்றார். குலசேகரன் தொடர்ந்து மௌனம் சாதிக்க மன்னர் தொடர்ந்தார். உத்தௌஜியைக் கொன்று ஹொய்சளத்திற்கும் தமிழ் பேசும் நல்லுலகுக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்த குலசேகரன் இப்போது சோர்வுற்று இருப்பது சரியல்ல என்றார். உத்தௌஜியின் மருமகன் குதுப்புதீன் பட்டத்திற்கு வந்ததும் நாற்பது நாட்களிலேயே உள்நாட்டுச் சதியால் கொல்லப்பட்டதையும் இப்போது கியாசுதீன் பட்டத்திற்கு வந்திருப்பதையும் குலசேகரனிடம் கூறினார். இன்னும் எத்தனை நாட்களுக்கு கியாசுதீனை விட்டு வைப்பார்கள் எனத் தெரியாத நிலையில் பட்டத்திற்கான போட்டி, பூசல்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் சுல்தானியர்களை எளிதில் வெற்றி கொள்ள ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும் என்றார் மன்னர்.அவர்களிடம் இப்போது முன்னிருந்த பலம் இல்லை என்றும் நாம் இனி யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து போரிட்டு இவர்களை வெல்ல வேண்டும் என்றும் கூறினார். அப்போது கோட்டையின் கிழக்குப் பகுதியிலிருந்து பெருத்த சப்தம் எழுந்தது.

Friday, April 19, 2019

சிங்கப்பிரானின் நிலைமை!

சென்ற பதிவில் பாதி எழுதும்போதே சேமித்துவிட்டு வேறே வேலை வந்ததால் பார்க்கப் போனேன். அப்புறம் பார்த்தால் சேமிப்பதற்குப் பதில் பப்ளிஷ் கொடுத்திருக்கேன் போல. பாதிப் பதிவு வந்துவிட்டது.இனி அதன் தொடர்ச்சி!
*********************************************************************************
குதிரையை ஓட்டிக் கொண்டு மெதுவாகவே சென்று கொண்டிருந்த குலசேகரனுக்குக் கழுத்தில் ஏதோ கனப்பது தெரியத் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அது தாழியில் அவனை வைத்துக் காவிரியில் விடும்போது வாசந்திகா அவனைக் காப்பாற்றுபவர்களின் செலவுக்கென வைத்திருந்த ஆரம் எனப் புரிந்து கொண்டான். சிங்கப்பிரானால் காப்பாற்றப் பட்டதால் அந்த ஆரத்தை விற்க வேண்டிய அவசியமே நேரிடவில்லை. அது குலசேகரனிடமே தங்கி இருந்தது. அதைத் தான் வெகு நாட்களாகக் கழுத்தில் போட்டிருந்த போதும் அதன் நினைவே இல்லாமல் இருந்தவனுக்கு இன்று வாசந்திகாவின் லிகிதத்தைப் படித்ததும் அது தன் கழுத்தில் இருப்பது தெரிந்து கனக்கவும் செய்தது. உண்மையில் அது ஆரத்தின் கனமா என்ன? இல்லை; இல்லை. வாசந்திகாவின் நினைவுகள் அவன் மனதில் ஏற்படுத்திய கனம். இருக்கும் இடமே தெரியாமல் கிட்டத்தட்ட அவளை அவன் மறந்து விட்ட நிலையில் அவள் லிகிதம் வந்து அவளைப் பற்றிய நினைவுகளைக் கிளப்பியதோடு அல்லாமல் அவன் மனமே கனத்து பாரமாகி விட்டதே! "வாசந்திகா! வாசந்திகா! நீயுமா என்னை நினைத்தாய்? " இப்படி எத்தனை பெண்கள் நினைத்தார்களோ! இதை எண்ணி மறுபடி குலசேகரன் மனம் கனத்தது.

மெல்ல மெல்லப்பொழுது புலர ஆரம்பிக்கக் குலசேகரன் வேறொரு கிராமத்தை அடைந்திருந்தான். அங்குள்ள சிதிலமாகக் கிடந்த ஒரு வீட்டினுள் நுழைந்தான். அதன் கூடத்திற்குள் நுழைந்து சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு, "சுவாமி! சுவாமி" என அழைத்தான். மெல்லிய குரலில் பதில் வரவே திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கூ அந்தக் கூடத்தின் ஓரமாய்க் கீழே பாயை விரித்துக் கொண்டு சிங்கப்பிரான் படுத்து இருப்பதைக் காண நேர்ந்தது. கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, "சுவாமி, நான், குலசேகரன் வந்திருக்கிறேன்!" என அவர் அருகே போய்ச் சொன்னான். பலத்த இருமலுடன் எழுந்த சிங்கப்பிரான் அவனைப் பார்த்துத் தாம் ஒரு மாசமாய்ப் படுக்கையில் வீழ்ந்து விட்டதாய்ச் சொன்னார். இதைச் சொல்லுவதற்குள்ளாக இருமல் அவரை உலுக்கக் குலசேகரன் மீண்டும் அவரைப் படுக்க வைத்தான். நோயால் மெலிந்து நலிந்திருந்த அவர் தேகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது!  இப்பேர்ப்பட்ட மஹானுக்குமா நோய் வந்துவிட்டது என நினைத்து நொந்து கொண்டே சிங்கப்பிரானிடம் வீர வல்லாளர் படை எடுத்து வரும் விஷயத்தையும் கண்ணனூரை நெருங்கிவிட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.

ஆனால் சிங்கப்பிரானோ அதனால் மகிழவில்லை. குலசேகரனிடம், தான் வெகு காலம் இருக்கப் போவதில்லை எனவும், அந்திம காலம் நெருங்கிவிட்டதாய் உணர்வதாயும் கூறியவர் அதற்குள்ளாக ஶ்ரீரங்கம் கோயில் திறக்கப்பட்டு அரங்கனும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்குவதைப்பார்க்க ஆசைப்படுவதாய்த் தெரிவித்தார்.  அதை நேரில் கண்ட பின்னரே தான் உயிர் துறக்க விரும்புவதாயும் கூறினார். குலசேகரன் மிகுந்த மனவருத்தத்துடன்  அவரை மீண்டும் படுக்க வைத்துவிட்டு அவரைப் பார்த்துக்கொள்ளும் பெண்மணியிடம் செலவுக்காகச் சில பொற்காசுகளையும் கொடுத்தான். பின்னர் சிங்கப்பிரானிடம் விடை பெற்றுக் கொண்டு தான் கண்ணனூர் நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் கூறி அங்கிருந்து கிளம்பினான். காலை வெளிச்சத்தில் குதிரையை வேகமாக விரட்டிக் கொண்டு கண்ணனூர்க் கோட்டையை அடைந்த அவன் கண்களில் ஹொய்சளர்களின் முக்கியப் படை பெருத்த ஆரவாரத்துடன் அந்தக் கோட்டையின் வெளிவாசலில் வந்து கூடிக் கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தான்.

அதற்குள்ளாக இங்கே மேல் கோட்டையிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய கோஷ்டி வேதாந்த தேசிகரைப் பின் தொடர்ந்து சென்று சத்தியமங்கலத்தை அடைந்தது. அது கொங்கு நாட்டுப் பிரதேசமாக இருந்தாலும் ஹொய்சள ஆட்சியின் கீழ் வந்ததால் யாரும் எவ்விதமான பயமும் இல்லாமல் இருந்து வந்தார்கள். அந்த ஊர்க் கோயில் மண்டபத்தில் அரங்கனுக்காகத் தனி இருக்கை ஏற்படுத்தி அவனை அங்கே அமரச் செய்துவிட்டு வேண்டிய உபசரணைகளை எல்லாம் நித்தியப்படி செய்வதற்கும் பாரிசாரகர்கள் சித்தமானார்கள்.  சிறிது காலம் வரை தெற்கே இருந்து எவ்விதத் தகவலும் இல்லாததால் யாரேனும் யாத்ரிகர்கள் தெற்கே இருந்து வந்தால் அவர்களிடன் அங்கே உள்ள நிலவரம் பற்றிக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் ஹொய்சள மன்னரின் முற்றுகை வெற்றி பெற்று அரங்கனை திருவரங்கத்தில் போய்க் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.

இந்த நிகழ்வு நடந்த சமயம், அதாவது ஹொய்சள மன்னர் கண்ணனூர்க் கோட்டையின் முற்றுகையை ஆரம்பித்த வருடம் கி.பி.1342 ஆம் ஆண்டு.

Wednesday, April 17, 2019

குலசேகரன் வருத்தமும், சிங்கப்பிரான் நிலையும்!

வாசந்திகாவின் லிகிதத்தைப் படித்த குலசேகரன் மீண்டும் கண்ணீர் பெருக்கினான். அவள் மனம் அவனுக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்த போதும் அப்போதிருந்த மனநிலையில் அவன் மனம் அவள் பால் ஒன்றவில்லை.அரங்கன் நிலை ஒன்றே அவன் கவனம் முழுவதும் ஈர்த்திருந்தது. அரங்கனைக் காப்பாற்றி எங்கே எடுத்துச் சென்று மறைவாக வைப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதிலேயே அவன் முழு மனதோடு ஈடுபட்டிருந்தான். இத்தகைய உல்லாச எண்ணங்களில் அவன் மனம் அப்போதெல்லாம் ஈடுபடவே இல்லை. ஆனால் அவனை நினைத்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருகிறாள். துரோகிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்த பின்னரும் அவன் வந்து காப்பாற்றி அழைத்துச் செல்வான் என்னும் நம்பிக்கையில் உயிர் வாழ்கிறாள். கடவுளே! கடவுளே!ரங்கா! ரங்கா! இத்தகைய பாசத்துக்கும் அன்புக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன்? இத்தகைய நிலைமை எனக்கு ஏன் ஏற்பட்டு வருகிறது? திரும்பத் திரும்ப என் வாழ்வில் இத்தகைய அபலைப் பெண்கள் ஏன் குறுக்கிடுகின்றனர்?

குலசேகரன் தலை நிமிர்ந்து ஹேமலேகாவிடம், "இந்த ஓலை உன்னிடம் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள்? வாசந்திகாவை நீ பார்த்தாயா?" என வினவினான். அதற்கு அவள், "இல்லை, ஸ்வாமி! ஓர் யோகி கண்ணனூரில் இருந்து வந்தார். அவர் தான் இதை எடுத்து வந்தார். அழகிய மணவாளபுரத்தில் வசித்து வரும் ஹேமலேகாவிடம் இதைச் சேர்ப்பியுங்கள் எனச் சொல்லி அனுப்பினாளாம்!" என்றாள் ஹேமலேகா!  குலசேகரனுக்கு யோகி மூலம் ஓலை வந்தது அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ இல்லை. ஏனெனில் அந்த நாட்களில் யோகிகள் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வந்தனர். ஆகவே சுல்தானியர்களும் கூட அவர்களிடம் அதிகம் கடுமை காட்டாமல் பக்தியுடனேயே நடந்து கொண்டார்கள். ஆகவே அவர்கள் நாடு முழுவதும் தாராளமாக நடமாட முடிந்தது. இதை எல்லாம் யோசித்த குலசேகரன் ஹேமலேகாவைப் பார்க்க அவள் அவனிடம் , "வாசந்திகாவை நீங்கள் அறிவீர்களா?அவளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டாள்.  குலசேகரன் அவளிடம், "ஆமாம், ஹேமு! திருவரங்க முற்றுகை முதல் முதல் ஆரம்பித்த போது அவளுடன் பழக்கம். இவளைக் காப்பாற்றி அரங்கன் ஊர்வலத்துடன் செல்லும் ஒருத்தியாகக் கூட்டிச் சென்றேன்.  ஆனால் மதுரை அருகே எங்களை சுல்தானிய வீரர்கள் தாக்கிய சமயம் இவள் அந்தக் கூட்டத்தில் இருந்து காணாமல் போய் விட்டாள். பின்னர் அவள் என்ன ஆனாள் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை!" என்றான்.

அதற்கு ஹேமலேகா, "ஸ்வாமி! அவள் மறைந்தெல்லாம் போகவில்லை. சுல்தானிய வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு சித்திரவதை அனுபவித்திருக்கிறாள். " என்று வருத்தத்துடன் கூறினாள். "ஹேமூ! முன்னர் ஒரு முறை அந்தக் கோஷ்டியில் இவளைப் பார்த்ததாக நீ ஏற்கெனவே சொல்லி இருக்கிறாய். நான் அப்போதெல்லாம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவளைக் குறித்து நினைக்கக் கூட இல்லை. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எத்தனையோ பெண்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் துன்பத்துக்கு ஆளாகிப் பெரும் துக்கம் அனுபவித்து வருகின்றனர். இவள் அவர்களில் ஒருத்தி தானே என்னும் அலட்சிய மனோபாவத்தில் இருந்து விட்டேன். இப்போது இவள் லிகிதத்தைப் பார்க்கையில் நான்செய்தது தவறோ எனத் தோன்றுகிறது! ஆனால் இனி என்ன செய்ய முடியும்? பார்க்கலாம்!" என்றவன் சற்று மௌனமாக இருந்தான்.

பின்னர் அவளைப் பார்த்து, "ஹேமூ, சமீப காலங்களாகவே எனக்கு நாலாபக்கமிருந்தும் துன்பச் செய்திகளும் துயரச் செய்திகளுமாகவே வருகின்றன. என்னை இவை மிகவும் வருத்துகின்றன. எனக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக் கொண்டு விடுவேன். ஆனால் என்னைச் சேர்ந்தவர்களுக்கும், என்னை நம்பியவர்களுக்கும் துன்பம் நேரிட்டால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்க்கை இன்பமயமாக அமையாதா என அந்த அரங்கனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.  பின்னர் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஹேமலேகா கண்களில் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுத்தாள். குலசேகரன் மனதிலும் துன்பமே நிரவி இருந்தது.  நாட்டின் காரணமாகத் தன் திருமண வாழ்க்கையைப் பறி கொடுத்த ஹேமலேகாவையும் அவளுடன் இருந்த சின்னஞ்சிறு பெண்களையும், இளம்பெண்களையும் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது. அவள் கைம்பெண் என்பது உலகறிய நடந்து விட்டதால் இனி ஹேமலேகாவுடன் அவனால் உலகறிய சேர்ந்து வாழ முடியாது. அவளை அவன் இழந்து விட்டான். இனி திரும்பக் கிடைக்க மாட்டாள்.

இதை எண்ணி எண்ணி மனம் நொந்த குலசேகரன் அவளைப் பார்த்துத் தலையை ஆட்டி, "வருகிறேன்!" என்று ஈனஸ்வரத்தில் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். "வெற்றி உங்களுக்கே!" என வாழ்த்தி வழி அனுப்பினாள் ஹேமலேகா.  தலை குனிந்த வண்ணம் குதிரையின் மேலேறிக் குதிரையை விரட்டினான் குலசேகரன். டக், டக் என ஒலி எழுப்பிய வண்ணம் குதிரை கிளம்பியது. குதிரை கண்ணுக்கு மறையும் வரை அதைப் பார்த்த வண்ணம் அங்கே நின்றிருந்தாள் ஹேமலேகா.

Tuesday, April 16, 2019

வாசந்திகாவின் கடிதம்!

அது வாசந்திகாவின் மடல். குலசேகரன் அந்த ஓலைச் சுருளை ஹேமலேகாவிடமிருந்து வாங்கியதுமே புரிந்து கொண்டு விட்டான்.
குலசேகரன் இத்தனை வருடங்களில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் கிட்டத்தட்ட அவளை மறந்தே போயிருந்தான். இப்போது அவளிடம் இருந்து கடிதம் அதுவும் ஹேமலேகாவிடம் கொடுத்திருப்பதை அறிந்ததும் அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அந்த ஓலைச் சுருளை ஹேமலேகாவிடமிருந்து வாங்கினவன் அதைப் படிக்க ஆரம்பித்தான். வாசந்திகாவே தன் கைப்பட எழுதி இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஒரு கணம் நிமிர்ந்து ஹேமலேகாவைப் பார்த்தவன் மீண்டும் தலை குனிந்து ஓலையில் ஆழ்ந்தான்.

வாசந்திகா தன் முத்துப் போன்ற எழுத்துக்களால் நீண்ட மடல் ஒன்றை எழுதி இருந்தாள். அதில் குலசேகரனுக்கு அவள் அனந்தகோடி நமஸ்காரங்கள் செய்து எழுதியதாகச் சொல்லி இருந்தாள். மேலும் இந்தக் கடிதம் குலசேகரன் கைகளில் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அப்போது தான் எந்த நிலைமையில் இருப்பேன் எனச் சொல்ல முடியாது என்றும் எப்படியேனும் யார் மூலமாவது இதைக் குலசேகரனிடம் சேர்ப்பிக்கச் சொல்ல வேண்டும் எனத் தான் முடிவெடுத்ததையும் கூறி இருந்தாள்.  அதில் திருவரங்கன் கோயில் திருச்சுற்றில் அவனை முதல் முதலாகக் கண்ட அனுபவத்தை விவரித்திருந்தாள். அவன் அப்போது மிகவும் இளைஞனாக இருந்ததையும் துடிதுடிப்பும், படபடப்பும் மிகுந்தவனாக எவ்வித வேலையையும் உடனே செய்து முடிக்கும்படி ஆக்ரோஷமாகவும் ஆவேசத்துடனும் காணப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தாள். அரங்கன் கோயிலைக் காப்பாற்றும் முயற்சியில் பஞ்சு கொண்டானோடு அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்ததோடு அல்லாமல் தன் தாய் இறந்த துக்கத்தைக்கூடக் கைவிட்டு விட்டு அரங்கனையும் அரங்கத்தையும் காப்பாற்றுவது ஒன்றே தன் லட்சியம் என அவன் பாடுபட்டதையும் அதற்காக அரங்கன் பின்னே காவலாகக் கானகம் நோக்கி நடந்து அரங்கனைக் காப்பாற்றிக் கொண்டு சென்றதையும் அவன் வீர சாகசங்களையும் தியாகங்களையும் நினைவு கூர்ந்தாள்.

அவள் மனம் அத்தகைய வீராதி வீரனான அவனை மறக்க இயலாமல் தவிப்பதையும் உணர்த்தி இருந்தாள். அவனை மறப்பது தன்னால் இயலாத ஒன்று என்றும் எந்நேரமும் அவன் நினைவன்றி வேறு நினைவில் தான் இல்லாமல் இருப்பதையும் சொல்லி இருந்தாள்.  தான் துரதிர்ஷ்டவசமாக சுல்தானியர்கள் பிடியில் அகப்பட்டுக் கொண்டு மதுரை அரண்மனையில் சுல்தானின் மனைவிக்கு அடிமையாக வாழ்க்கை நடத்துவதையும் தன் புனிதம் கெட்டு விட்டதையும் எனினும் என்றேனும் ஓர் நாள் குலசேகரனைப் பார்க்கலாம் என்பதாலும் அவன் தன்னைப் புரிந்து கொள்வான் என்பதாலுமே தான் இன்னமும் உயிர் வாழ்வதாகவும் தெரிவித்திருந்தாள்.  தான் இத்தகைய மோசமான வாழ்க்கையை நடத்துவது குறித்து அவள் மனசாட்சி அவளைக் குத்திக் காட்டி வந்தாலும் இத்தகையதொரு வாழ்வின் காரணமாகவே சுல்தானின் மனைவியோடு கண்ணனூர் அரண்மனைக்கு வந்த சமயம் அங்கே வழியில் குலசேகரன் சிறைப்பட்டுக் கிடந்ததையும் தான் அவனைக் காப்பாற்றிக் கூடையில் வைத்து அவனை அனுப்பியதையும் நினைவு கூர்ந்தாள்.

இன்னமும் இத்தனைக்கு அப்புறமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அவளுக்கு வர வர நாட்கள் ஆக, ஆகப் பற்பல சந்தேகங்கள், பயங்கள், இனம்புரியாததொரு தவிப்பு என ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி இருந்தாள். அவள் வாழ்நாள் முழுவதுமே இந்த அரண்மனையில் அடிமையாக இருந்தே கழிந்து விடுமோ எனக் கலக்கம் வந்து விட்டதாகவும்  அந்நியரிடம் அகப்பட்டுக் கொண்டதுமே தான் உயிரை விடாதது குற்றமாகி விட்டது என்று உணர்ந்து வருவதாகவும் கூறினாள். இப்படி ஓர் தவிப்பான நிலையில் தான் தான் இந்தக் கடிதத்தைக் குலசேகரனுக்கு எழுதி இருப்பதாகவும், இது அவன் கைகளுக்குப் போய்ச் சேருமா என்னும் நிச்சயம் தன்னிடம் இல்லை எனவும் கூறி இருந்தாள் வாசந்திகா. இனி தன்னால் உயிர் தரிக்க இயலாது எனவும் குலசேகரன் எப்பாடு பட்டாவது ஏதேனும் சூழ்ச்சி செய்தோ அல்லது போரிட்டோ அல்லது தந்திரமான ஏதேனும் உபாயத்தாலோ மதுரை அரண்மனைக்கு வந்து தன்னை மீட்டுச் செல்லும்படி கெஞ்சிக் கேட்டிருந்தாள் வாசந்திகா.

அப்படி அவன் வராவிடில் தன்னால் தன் உயிரை மாய்த்துக்கொள்வது தவிர்த்து வேறு வழி ஒன்றும் தெரியவில்லை என்றும் கூறி இருந்தாள். மேலும் அவள் கூறி இருந்ததாவது:- எங்கோ ஓர் மூலையிலிருந்து நான் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறேன் ஐயா. அது தங்கள் காதுகளில் விழுமா? தாங்கள் வந்து என்னை மீட்பீர்களா? அதற்குத் தங்கள் மனம் சம்மதிக்குமா? மேலும் அதற்கான அவகாசம் தங்களிடம் உள்ளதா? எனக்கு எதுவுமே தெரியவில்லை;புரியவில்லை ஐயா! நான் தங்களையே நம்பி இருக்கும் ஓர் அபலைப் பெண்.

தங்கள் அடியாள்,
வாசந்திகா.

இவ்விதம் கடிதத்தை முடித்திருந்தாள் வாசந்திகா.

Sunday, April 14, 2019

ஹேமலேகா அளித்த அதிர்ச்சி!

ஹேமலேகாவின் நிலையைக் கண்ட குலசேகரன் வாயடைத்துப் போய் நின்றான். இளமை பரிபூரணமாய்த் ததும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் இனி கைம்பெண்ணா? இது என்ன அநியாயம்? 70 வயதுக்கிழவரை இவள் மணக்க நேரிட்டதன் காரணம் தான் என்ன? நினைக்க நினைக்கக் குலசேகரனுக்கு மனதுக்குள் வெறி மூண்டது.  ஹேமலேகாவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதான். "ஹேமூ, ஹேமூ!" எனப் பிதற்றினான். அவன் மூளையில் ஏதேதோ சிதறுண்டு போனாற்போன்று அவனுக்குள் ஓர் வெம்மை சீறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன் வேகத்தில் திக்குமுக்காடிப் போனான்.  அவன் கண்கள் கண்ணீரைப் பொழிவதை நிறுத்தவில்லை.ஹேமலேகா அவனிடம், "ஆர்ய! அழ வேண்டியவள் நான்! நானே அழவில்லையே! தாங்கள் ஏன் அழவேண்டும்?" என்றாள்.

அதற்குக் குலசேகரன், "இல்லை, ஹேமூ! எனக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை. எவ்வளவு காந்தியுடன் நீ பிரகாசித்துக் கொண்டிருந்தாய். உன் அழகு என்றென்றும் மங்காது மூப்பைத் தவிர்த்து என நான் நினைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு கோலத்தில் உன்னைப் பார்க்க நேர்ந்ததே!" எனக் குமுறினான். சற்று நேரம் இருவரும் பேசவில்லை. பின்னர் ஹேமலேகா அவனிடம், "ஸ்வாமி! இவை எல்லாம் என் உடலுக்கு நான் செய்து வந்த அலங்காரங்கள் தானே! அவை தானே மாறி விட்டன! என் புற உடலில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தான் ஸ்வாமி! இதை விடுங்கள். சற்று உள்ளே வாருங்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தைக் காட்ட வேண்டும். மிக முக்கியமான விஷயம்!" என்றாள்.

குலசேகரன் அவளுடன் உள்ளே சென்றான். அங்கே பெரிய கூடத்தில் பிரகாசமாகப் பல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அதன் வெளிச்சத்தில் அங்கே நிறையப் பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர்களில் பெரும்பாலோர் இளம்பெண்கள், சிறுமிகள்/ ஆனால் அவர்கள் நிலை! குலசேகரன் திடுக்கிட்டான். அந்தப் பெண்கள் அனைவருமே கைம்பெண்கள் என்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். இது எப்படி சாத்தியம் என நினைத்து மனம் வருந்தினான். அப்போது ஹேமலேகா அவனிடம், "ஸ்வாமி, இவர்கள் நிலையைப் பார்த்தீர்களா? இவர்கள் அனைவருமே இப்போதுள்ள சுல்தானியர்களின் ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் கொதித்து அதைத் தவிர்ப்பதற்காகத் திருமணம் என்னும் பந்தத்துக்குள் வயது வித்தியாசம் பார்க்காமல் நுழைந்து அதனால் இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே இப்போது கைம்பெண்கள்!" என்றாள்.

குலசேகரன் உள்ளம் கொதித்தது. எங்கேயோ இருந்து வந்த ஓர் அந்நியனின் ஆட்சியால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தப் பெண்கள் கடைப்பிடித்து வந்த நெறியான வாழ்க்கை இப்போது தடம் புரண்டு விட்டது. இவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமே சின்னாபின்னமாகி விட்டது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மாறுதல்கள் விரும்பத்தகாத வகையில் ஏற்பட்டு விட்டது. ஓர் வெறுமை அனைவரையும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டு செல்லும் சமயம் எப்போது வரும்? "ரங்கா! ரங்கா!" எனப் புலம்பினான் குலசேகரன்.  ஹேமலேகா அவனைச் சமாதானம் செய்து அடுத்த அறையில் சென்று அமர வைத்தாள். அவனிடம், "ஸ்வாமி! நம் நியதிகள், கோட்பாடுகள் அனைத்துமே அமைதியான காலத்துக்காக நிலைத்து நிற்கும்படி எழுதப்பட்டவை! இத்தகைய மாற்றங்களையோ, எதிர்ப்புக்களையோ நம் முன்னோர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. இப்போதைய சூழ்நிலை நம் வாழ்க்கை முறையின் ஆணி வேரையே அசைத்துள்ளது. இத்தகையதொரு நிலை வரும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அப்படி நினைத்துப் பார்த்திருந்தால் எத்தகைய பாவத்துக்கும் பரிகாரம் இருப்பதாய்க் கூறி இருப்பவர்கள் இத்தகைய எதுவுமே தெரியாத அப்பாவிப் பெண்களின் நிலைமைக்கும் மாற்றுக் கூறி இருப்பார்கள். பரிகாரம் சொல்லி இருப்பார்கள்!" என்று துக்கத்துடன் கூறினாள்.

குலசேகரன் ஒரு பெருமூச்சுடன், "ஹேமூ! என் கண் முன்னால் இந்த சமூகம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. அதை நான் என் கண்ணால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகக் கண்டு வருகிறேன். பதினெட்டு ஆண்டுகளில் எல்லாமே நலிந்து விட்டன. என் வாழ்க்கையும் வெறுமையானதாகப் போய் விட்டது ஹேமூ! முறையான வாழ்க்கை என்பதே எனக்கு இல்லாமல் போய் விட்டது. அத்தகைய வாழ்க்கையை நான் வாழவும் இல்லை. இந்த ஆட்சியின் விளைவு தான் உன்னை நான் இழக்க நேரிட்டதும். இல்லை எனில் இத்தகையதொரு நிர்க்கதி உனக்கு வந்திருக்குமா? எனக்கு எதுவும் புரியவில்லை ஹேமூ! கல்வி, கேள்விகளில் அதிகம் தேர்ச்சி பெறாததால் இந்த மாதிரியான சூழ்ச்சியான சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. என் எதிர்காலமே சூன்யமாகி விட்டது. இனி எனக்கு என்ன நேரப் போகிறது? நான் எப்படி வாழப்போகிறேன். என்பதெல்லாம் ஓர் கேள்விக்குறியாக என் கண் முன்னே தெரிகிறது. குழப்பத்துடனும், தவிப்புடனும் இருக்கிறேன் நான்!" எனக் கண்கள் கலங்கக் கூறினான்.

ஹேமலேகா அவனைத் தேற்றிவிட்டு அவனுக்கு உணவு பரிமாறினாள். அவள் கரங்களால் பரிமாறப்பட்ட உணவு குலசேகரனுக்கு தேவாமிர்தமாக இருந்தது.  அந்தச் சின்னஞ்சிறிய அறையில் வைக்கப்பட்ட விளக்கு ஒளியில் தேவதை போல் காணப்பட்ட ஹேமலேகாவும் அவனுக்கு உணவு பரிமாறுவதில் அவள் கண்ட மகிழ்ச்சியையும் பார்த்த குலசேகரனுக்கு மனம் நெகிழ்ந்தது. அவனும் தன்னையும் அறியாமல் தன் துக்கத்தை எல்லாம் மறந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். இந்தப் பிரபஞ்சத்தில் தானும் அவளும் மட்டுமே தனித்து இருப்பதாகவும் உணர்ந்தான்.  பதிலுக்குப் புன்னகைத்த ஹேமலேகா தன் இடுப்பில் இருந்து ஓர் ஓலையை எடுத்துக் குலசேகரனிடம் கொடுத்து, "ஸ்வாமி! இது உங்களுக்கு!" என்றும் கூறினாள்.

Wednesday, April 03, 2019

மீண்டும் ஹேமலேகா!

ராஜகம்பீரத்துக்குள் நுழைந்த படை முதலில் மெதுவாக முன்னேறினாலும் பின்னர் வேகமாக நகர ஆரம்பித்தது.  எல்லோருமே ஓர் பதைபதைப்புடன் என்ன ஆகுமோ என எண்ணிக் கொண்டு இருக்கப் படையோ எவ்விதமான எதிர்த்தாக்குதலும் இல்லாமல் முன்னே, முன்னே சென்று கொண்டே  இருந்தது.  அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் கழிந்த ஓர் பகலுக்குப் பின்னர் இரவு ஓர் இடம் பார்த்துத் தண்டு இறங்கி இரவைக் கழித்தனர். ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி இருந்தது. இவ்வாறு கவனத்துடன் இரவைக் கழித்த பின்னர் காலையில் மீண்டும் கிளம்பி சம்புவராயரின் ராஜ்யத்தின் ஓரப்பகுதியைக் கடந்து அதன் எல்லையை முழுவதும் தாண்டியதும் பெருமூச்சு விட்டார்கள்.ஆனால் இப்போது நுழைந்திருப்பதோ சோழ ராஜ்ஜியம். சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட பகுதி!ஆனாலும் உற்சாகம் குறையாமலேயே படைகள் சென்றன. ஆங்காங்கே மக்கள் கூட்டம் நின்று எந்தப் படை, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்பதை எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டு ஆரவாரத்துடன் வீரர்களை வரவேற்று உபசரித்து வாழ்த்து மழை பொழிந்து வழி அனுப்பி வைத்தார்கள்.

இதைக் கவனித்த படை வீரர்களும் உற்சாகமாகவே முன்னேறினார்கள். பிரதானமான படை எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சற்றே பின் தங்கி வந்து கொண்டிருந்தது. குலசேகரன் தலைமையில் உள்ள படை சற்றே மற்றவர்களிடமிருந்து பிரிந்து வேகமாக முன்னேற ஆரம்பித்தது. கண்ணனூரை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான் குலசேகரன். கண்ணனுருக்கு ஐந்து காத தொலைவில் காணப்பட்ட ஓர் சுல்தானியக் காவல்படையை முறியடித்துக் கொண்டு கண்ணனூர்க் கோட்டையைச் சுற்றி வளைத்தனர் குலசேகரன் தலைமையிலான படை வீரர்கள். இதற்குள்ளாகச் செய்தி கண்ணனூரைப் போய் அடைந்திருந்தது.  ஆகவே சுல்தானியத் தளபதிகள் முன் ஜாக்கிரதையாக தொங்கு பாலங்களைத் தூக்கிவிட்டுக் கோட்டைக்குள் போய் பத்திரமாகப் புகுந்து விட்டனர். இங்கே கோட்டையை அணுகிய குலசேகரன் பிரதானப்படைக்காகக் காத்திருக்க வேண்டி வந்தது.

மாலை மயங்கி இருட்டும் வேளை. ஒற்றர்கள் மூலம் பிரதானப்படை வந்து சேரக் காலை ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொண்டான் குலசேகரன்.  அதன் பேரில் தனக்கென அமைக்கப்பட்ட கூடாரத்தை அடைந்து சற்று ஆசுவாசம் செய்து கொள்ள ஆரம்பித்தான். அலுப்புடன் மஞ்சத்தில் அப்படியும் இப்படியும் புரண்டவன் காதுகளில், "ஆர்ய!" என்னும் குரலும் அதைத் தொடர்ந்து ஹேமலேகாவின் அழகிய தோற்றமும் ஓர் மாயை போல் தோன்றவே குலசேகரன் உள்ளம் முழுவதும் உணர்ச்சிக்குவியலாகியது. தன்னை மெய்ம்மறந்து அந்த மாயத்தோற்றத்தில் மூழ்கி இருந்த குலசேகரன் தன்னிலை பெற்றவனாய்க் கூடாரத்துக்குள் படுக்கவோ அமரவோ முடியாமல் தத்தளித்தான். மெல்லக் கூடாரத்தின் வெளியே வந்தான். ஹேமலேகாவின் நினைவுகள் அவனைப் படுத்தி எடுத்தன. அங்கும் இங்குமாகச் சுற்றி வந்தவன் ஏதோ நினைத்தவனாக அங்கே கட்டப்பட்டிருந்த தன் குதிரை மீது ஏறிக் கிழக்கு நோக்கி விரைவாகப் பறந்தான்.

குதிரையை எவ்வளவு வேகமாய்ச் செலுத்த முடியுமோ அத்தனை வேகமாய்ச் செலுத்திய குலசேகரனுக்குக் கிட்டத்தட்ட ஹேமலேகாவைக் காண வேண்டும் உடனே என்னும் வெறியே வந்துவிட்டது. சாலையெங்கும் முன்னிலாக் காலம் என்பதால் மெலிதாகப் பரவி இருந்த நிலவொளியில் குதிரையை வேகமாய்ச் செல்லும்படி ஊக்குவித்துக் கொண்டு குலசேகரன் இரு நாழிகையிலேயே கிளியார் சோலை என்னும் அந்தக் கிராமத்தை அடைந்து விட்டான். அங்கே இருந்த சத்திரத்துக்கு வெளியே குதிரையைக் கட்டிவிட்டு ஹேமலேகாவைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றான். ஆனால் அங்கே யாருமே இல்லை. சத்திரத்தின் பின் பகுதி வரை சென்று பார்த்தவனுக்கு யாரும் இல்லாமல் போகவே நிர்வாகியிடம் சென்று ஹேமலேகாவைக் குறித்து விசாரிக்க அவன் அவர்கள் எல்லாம் வேறொரு மாளிகைக்குச் சென்றுவிட்டதாய்க் கூறி அந்த மாளிகையையும் அடையாளம் சொன்னார்.

அதன் பேரில் குலசேகரன் அந்த மாளிகைக்கு விரைந்தான். வாசல் கதவு சார்த்தி இருந்தது. உள்ளே இருந்து மெல்லிய குரல்களில் பேச்சுக்களும் பாடல் ஒன்றும் இழைந்து வந்து கொண்டிருந்தது. குலசேகரன் அந்த மாளிகையின் வாயில் கதவை மெல்லத் தட்டினான். உடனே வந்தவர்களிடம் ஹேமலேகா  குறித்து விசாரிக்க சில கணங்களில் ஹேமலேகா கையில் விளக்குடன் அங்கே வந்தாள். அவனைக் கண்டதும் கதவைத் திறந்தவள் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் தலை குனிந்து விளக்கைத் திண்ணையில் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றாள். அவளிடம் தென்பட்ட ஏதோ ஓர் மாற்றம் குலசேகரன் கண்ணைக் கவர்ந்தது என்றாலும் அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவளைப் பல முறை உற்று உற்றுப் பார்த்த குலசேகரன் கடைசியில் விக்கித்து நின்றான்.

ஹேமலேகா எவ்விதமான ஆபரணங்களும் அணியாமல் வெறுமையாக நின்று கொண்டிருந்தாள் என்பது அவனுக்குப் புலனாகியது. விடியற்காலை நிலவைப் போல் ஒளி குன்றிக் காட்சி அளித்த ஹேமலேகாவைப் பார்த்த குலசேகரன் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான். அவன் அடிவயிறு கலங்கி இனம் தெரியாததோர் கலக்கம் அவன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஊடுருவியது. கண்கள் மங்கிக் கொண்டு பார்வையே தெரியாதோ என்னும்படி ஆயிற்று. நிற்கக் கூட முடியாமல் தடுமாறியவன் அவளைக் கண்டு என்ன பேசுவது என்றே புரியாமல் நின்றான். அவன் கண்கள் தற்செயலாக அவள் கழுத்தைக் கவனித்தன. அதுவும் வெறுமையாக இருக்கவே அவன் ஹேமலேகாவைப் பார்த்து, "ஹேமூ!, நீ, நீ...." எனத் தடுமாறினான். ஹேமலேகா உடனே "நான் இப்போது கைம்பெண்!" என்று சொன்னாள். குலசேகரன் வாயடைத்து நின்றான்.

***************

இதன் தொடர்ச்சி இனிமேல் அடுத்த புதனன்று தான் வரும். வேலை! மீண்டும் உறவினர் வருகை! மீண்டும் பயணம்! பொறுத்து அருள்க!

Tuesday, April 02, 2019

சம்புவராயருக்கு தூது!

ஹொய்சளப்படைகள் கூடிய மட்டும் விரைவாகவே நகர்ந்து கொண்டிருந்தன. தெற்கு நோக்கிச் சென்ற அதன் குதிரைப்படையின் முன்பகுதியில் குலசேகரன் ஓர் குதிரை மீது ஆரோகணித்துக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அப்போது அந்தப் படைகள் ராஜகம்பீரம் என அந்நாட்களில் அழைக்கப்பட்ட சம்புவராயரின் எல்லைப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த ராஜகம்பீரம் என்னும் சிறு ராஜ்யமானது அந்தக் காலத்தில் சம்புவராயர்கள் என்பவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. இப்போதைய வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கொண்டு சிறுபகுதியாக உருவெடுத்து சம்புவராயர்களால் ராஜகம்பீரம் என்னும் நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இவர்கள் அவ்வப்போது ஏற்படும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பத் தனிநாடாகவும், குறுநில மன்னர்களாகவும் செயல் பட்டு வந்தனர்.  இப்போதைய நிலவரப்படி மதுரை சுல்தானை அவர்கள் ஏற்றுக் கொண்டு கப்பம் செலுத்தி வந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் இழுக்க வீர வல்லாளதேவர் பல ஆண்டுகளாக முயற்சித்தும் முடியாமலே இருந்து வந்தது.

இப்போது அந்த நாட்டின் எல்லைக்கருகே வந்ததும் வீர வல்லாளருக்கு மீண்டும் ஓர் முறை சம்புவராயரின் உதவியைக் கேட்டு யாரையாவது அனுப்பலாம் எனத் தோன்றியது. அதற்குக் குலசேகரனே ஏற்றவன் என நினைத்தார். ஏனெனில் இது வரையிலும் தென்னாட்டு மன்னர்களில் சம்புவராயர் ஒருவரே வல்லாளருடன் சேரவில்லை. நாட்டின் நன்மையை மனதில் கொண்டு அவரும் சேர்ந்தால் சுல்தானை அடியோடு ஒழிக்க வசதியாக இருக்குமே! இவ்வாறு மன்னர் நினைத்தது போலவே குதிரைப்படையின் தலைமையில் சென்று கொண்டிருந்த குலசேகரனும் நினைத்தான். அப்போது எல்லைக்கருகே வரவே படைத்தலைவர்கள் படைகளை நிற்க வேண்டிக் கொடிகளை வீசி அந்தப் பெரும்படையை அங்கேயே தண்டு இறக்கினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் முயன்று அந்தப் பெரும்படை அங்கே நிறுத்தப்பட்டது.

அப்போது இரு வீரர்கள் குலசேகரன் அருகில் வந்து மன்னர் அழைப்பதாகக் கூறினார்கள். இதற்குள்ளாகப் படையின் நடுவே இருந்து படைகள் தண்டு இறங்குவதைக் கவனித்துக் கொண்டிருந்த குலசேகரன் இதைக் கேட்டதும் படையின் முன் பகுதிக்கு விரைந்தான். அதற்கே அவனுக்கு வெகு நேரம் ஆனது. அதோடு அல்லாமல் படை வீரர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டார்கள். இதைக் கண்ட குலசேகரனும் மனம்மகிழ்ந்து சுல்தான் தொலைந்தான் என எண்ணிக் கொண்டே மன்னர் இருக்குமிடம் தேடிக் கண்டு பிடித்தான்.  அவனைப் பார்த்த மன்னர், "குலசேகரா! ராஜகம்பீரத்துக்குள் நுழையப் போகிறோம்! உன் கருத்து என்ன?" என்று கேட்டார். அதற்குக் குலசேகரன், மன்னரிடம் ஏற்கெனவே அவன் தென்னாடுகளுக்கு தூது சென்ற போதும் திரும்பி வரும்போதும் சம்புவராயரை இரு முறை கண்டு பேசியதாகவும் அவர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை என்றும் இப்போது போய் மீண்டும் கேட்பதில் பலன் இருக்காது என்று தான் நினைப்பதாகவும் கூறினான்.

ஆனாலும் மன்னருக்கு சம்புவராயரை விட மனசில்லை. குலசேகரனிடம் கடைசி முறையாக ஓர் சந்தர்ப்பம் அவருக்கு அளித்துப் பார்க்கலாம். நாம் இங்கே தண்டு இருப்பதை அவரிடம் போய்ச் சொல்லி நம்முடன் சேருமாறு கடைசியாக ஒரு முறை வேண்டுகோள் விடுத்துவிட்டு அவரை எப்படியாவது நம் பக்கம் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.  குலசேகரனும் அதன் பேரில் தன்னுடன் பத்து வீரர்களை அழைத்துக் கொண்டு தான் தூது வந்திருப்பதைத் தெரிவிக்கும் வண்ணம் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டுக் கொண்டு ராஜகம்பீரத்துக்குள் நுழைந்தான்.  அங்கே அவன் அரண்மனையில் சம்புவராயரைச் சந்தித்துப் பேசினான். ஹொய்சள மன்னர் கூறியதை எல்லாம் விரிவாக எடுத்து உரைத்தான்.

ஆனால் சம்புவராயர் அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. குலசேகரனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். "வீரனே! உன் மன்னரின் தந்திரம் எனக்குப் புரிகிறது. மதுரை சுல்தானை ஒழிப்பது போல் ஒழித்துவிட்டுப் பின்னர் ராஜகம்பீரம் மேலும் பாய்ந்து என்னையும் அழித்து ஒழிப்பீர்கள். பின்னர் தென்னாடு முழுவதும் வீர வல்லாளரின் ஆட்சிக்குக் கீழ் வந்து விடும். அதற்குத் தானே உங்கள் மன்னர் கனவு காண்கிறார். இது ஒருக்காலும் நடக்காது. நான் ஹொய்சள மன்னர் பக்கம் சேரப் போவதில்லை. இது நிச்சயம். உன் மன்னரிடம் போய்ச் சொல்!" என்று திட்டவட்டமாகக் கூறினார். குலசேகரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சம்புவராயர் அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால் ராஜகம்பீரத்துக்குள் நுழையாமல் மேலே செல்ல முடியாது. ஆகவே குலசேகரன் சம்புவராயரிடம் விடைபெற்றுக்கொண்டு வல்லாளரிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தான். ராஜகம்பீரத்தை மிதிக்காமல் செல்ல முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னான். எல்லோரும் கூடி ஆலோசனை செய்து சம்புவராயர் ஒருவரைத் தவிர்த்து மற்றவர் எல்லோரும் நம் பக்கம் தானே இருக்கின்றனர். நாம் ராஜகம்பீரத்தை மிதித்துக் கொண்டே செல்வோம். என்னதான் நடக்கும் என்பதையும் பார்த்துவிடலாம். நம் படைவீரர்களோ ஒரு லட்சத்துக்கும் மேல் இருப்பதால் நாம் சுற்றிக்கொண்டெல்லாம் செல்லவேண்டாம், ராஜகம்பீர்த்துக்குள் நுழைந்தே செல்லலாம் என முடிவெடுத்தனர். அவ்வளவில் தண்டு இறங்கி இருந்த படை மறுநாள் ராஜகம்பீரத்துக்குள் நுழைந்து மெல்ல மெல்ல மேலே முன்னேறியது. 

Monday, April 01, 2019

அரங்கன் பயணம் மீண்டும் ஆரம்பம்!

இத்தனை வருடங்கள் சத்திய மங்கலம் என்னும் அமைதியான ஊரில் நாட்களைக் கழித்திருந்த வேதாந்த தேசிகர் ஞானத்தில் கனிந்து வந்திருந்தார். அவர் முகமே தோத்திரங்கள் மூலமும் தத்துவ விளக்கங்கள் மூலமும் கனிந்து வந்த அவர் முகம் மேலும் மேலும் ஞான ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்ததைக் காட்டியது!  அவர் உள்ளூர இறையோடு ஒன்றிப் போயிருந்தார். விவரிக்க ஒண்ணா அந்தப் பேரானந்த உணர்வு அவர் ஒவ்வொரு செய்கையிலும் பிரதிபலித்தது.  இறையோடு ஒன்றாய்க் கலந்த அவர் வாக்கு, செயல், எண்ணம் எல்லாம் சேர்ந்து யாதவாப் யுதயம் என்னும் அருமையான காவியம் உருவாக ஆரம்பித்திருந்த நேரம். புற உலகில் இருந்து முற்றிலும் விடுபட்டுத்தம்முள் அடங்கியவராய் இருந்த அவர் இப்போது மேல்கோட்டை நோக்கி வருகிறார் என்றதுமே மக்கள் கூட்டம் அவரைக் காணக் கூடியது.

அரங்கன் இருக்குமிடம் தேடிச் சென்ற வேதாந்த தேசிகர் அவனுக்கு நித்தியப்படி வழிபாடுகள் அனைத்தும் சிறப்பாக நடை பெற்று வருகிறதா என விசாரித்துத் தெரிந்து கொண்டார். அப்படியே அரங்கன் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கண்களில் இருந்து  கண்ணீர் ஆறாகப் பெருகியது! இவன் யார்? ரங்கராஜன்! எவ்வளவு பெரிய மாளிகை இவனுடையது! இவனுக்குள்ள சொத்துக்கள் தாம் எத்தனை எத்தனை! அடியார் தம் கூட்டம் தான் எவ்வளவு! இத்தனை இருந்தும் சொந்த ஊரை விட்டு அநாதை போல் வேறோர் ஊரில் வந்து அடைக்கலம் நாடி வந்திருக்கின்றானே!  இதை நினைத்து நினைத்து அவர் மனம் கசிந்தது. பின்னர் அங்கிருந்த அனைவரிடமும்  அழகிய மணவாளனுக்கு நித்திய சேவைகள் எல்லாம் சரிவர நடக்கின்றனவா என விசாரித்து அறிந்து கொண்டார். பின்னர் அனைவரையும் கண்டு அப்போது நாடெங்கும் பேசப்பட்ட ஹொய்சள வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

"பெரியீர், மக்களே! நாட்டில் நற்செய்தி பரவி வருகிறது. இனி நமக்கு நற்காலம் உதயமாகப் போகிறது. அதோடு இல்லாமல் ஹொய்சள மன்னர் மேலும் மதுரையின் மீது படை எடுத்துப் புறப்பட்டு விட்டார் என்னும் நற்செய்தியும் கிடைத்துள்ளது. அதன் பின்னரே அடியேன் சத்தியமங்கலத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்தேன். இனி அரங்கன் இந்த தூர தேசத்தில் இருக்க வேண்டாம். அரங்கனை மெதுவாக நாம் கொங்கு நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவோம். மதுரைப் போர் முடிந்து ஹொய்சள மன்னரின் வெற்றி உறுதி ஆனதும் அரங்கனை ஶ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும். நற்காலம் பிறந்ததும் உடனே நாம் அனைவரும் திருவரங்கம் செல்ல வேண்டியது தான். இதை விண்ணப்பிக்கவே நான் இங்கே வந்தேன்!" என்று கூறினார். இதைக் கேட்ட பரிவாரங்கள் மனதினுள் மகிழ்ந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. என்றாலும் அந்த ஊர்ப் பெரியோர்களோடும் யோசனைகள் பல செய்து அரங்கனைக் கன்னட நாட்டிலிருந்து தமிழ் பேசும் கொங்கு நாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள்.  ஓர் நல்ல நாளாக விரைவில் பார்த்து இளங்காலை நேரத்தில் திருவரங்கன் மீண்டும் தன் யாத்திரையைத் தொடங்கினான். மலைப்பிரதேசங்களின் ஊடே அவரை எழுந்தருள வைத்த வண்ணம் வேதாந்த தேசிகர் தன் அடியார்களோடு கொங்கு மண்டலம் நோக்கிச் செல்லலானார்.

இங்கே ஒரு லட்சத்து இருபதினாயிரம் வீரர்களுடன் கூடிய ஓர் மாபெரும் படை பெரும் ஆரவாரத்துடன் புழுதியைக் கிளப்பி கொண்டு திருவண்ணாமலைக்குத் தெற்கே இரு காத தூரத்தில் விரைந்து கொண்டிருந்தது. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என முவ்வகைப் படைகளும் அதில் இருந்தன. ஓரு நீண்ட வால் போல் அணிவகுத்து அந்தப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரமாய்த் தெரிந்தது. குதிரைப்படை, காலாட்படை எனத் தனித்தனிக்கூட்டமாய்ப் போகாமல் அணி வகுத்துச் செல்வது அந்த நாட்களில் வழக்கம் இல்லை. அந்நியப் படை எடுப்பின் மூலம் இத்தகைய வழக்கம் நம்மிடையேயும் வந்ததாய்த் தெரிகிறது.

இந்த அணிவகுப்பின் நடுவில் ஓர் பல்லக்கில் வீர வல்லாளர் உற்சாகத்துடன் வீற்றிருந்தார். அவர் வயது எண்பது எனச் சொன்னால் தான் தெரியும். அத்தகைய உடல்வாகுடனும், உறுதி படைத்த மனதுடனும் போருக்குக் கிளம்பி இருந்தார். அவருடன் ராணி கிருஷ்ணாயியும் அந்தப்புர ஜனங்களுடன் பிரயாணம் செய்தாள். வழிச்செலவுக்காக மன்னரின்பொக்கிஷங்கள் யானைகள் மீது வந்து கொண்டிருந்தன. போகும் வழியெல்லாம் மக்கள் கூட்டமாகத் திரண்டு வரவேற்பும் பிரியா விடையும் கொடுத்தனர். யுத்த தளவாடங்கள் அடங்கிய பொருட்கள் எல்லாம் மாட்டு வண்டிகள், மற்ற கைவண்டிகள் ஆகியவற்றில் வந்து கொண்டிருந்தன. இவை அனைத்தும் மெல்ல மெல்லவே நகர முடிந்தது என்பதால் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் சென்றாலே அதிகம் என்னும்படி இருந்தது. ஆகவே வண்டிகள் எல்லாம் மெதுவாக வர விட்டு விட்டு மந்திரி, பிரதானிகள், படைத்தளபதிகள் ஆகியோர் முன்னே விரைவாகச் சென்று நல்லதோரு இடம் பார்த்து தண்டு இறங்கி ஓய்வெடுத்து விடுவார்கள்.

பின்னர் வண்டிகள் வந்து சேர்ந்ததும் அனைவரும் மறுபடி சேர்ந்து கிளம்பிச் செல்வார்கள். இப்படியே அந்த நீண்ட படை மெல்ல மெல்ல மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  இவர்களுடன் குலசேகரனும் பயணம் செய்து கொண்டிருந்தான்.