எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, February 24, 2007

33. ஓம் நமச்சிவாயா - முடிவுரை!

கைலைப் பயணம் என்பது என்னோட சின்ன வயசிலே இருந்தே ஆசை. முதல் முதல் எம்.என். நம்பியார் போனதைப்பத்தி ஆனந்த விகடனில் வந்திருந்தது,. அப்போ எல்லாம் போகமுடியும்னு நினைக்கவில்லை.
இப்போப் போயிட்டு வந்தாச்சு. எழுதியும் முடிச்சாச்சு. நடுவில் என்னோட உடல்நிலை காரணமாயும் கணினி பிரச்னையாலும் தொய்வு ஏற்பட்டாலும் ஓரளவு சீராக நினைவு இருந்தவற்றைத் தொகுத்திருக்கிறேன்.

திரு எஸ்.கே. அவர்கள் அவசரம் அவசரமாய் முடித்து விட்டேன் என்கிறார்.
பொற்கொடியோ என்றால் ரொம்பவே கஷ்டப்பட்டு, ஏன் போனோம்னு
நினைக்கிறாப்பலே இருந்தது போலிருக்கு என்று கேட்கிறாள். முக்திநாத் தரிசனத்தைப் பற்றி எழுதும்போது அதற்கு மேல் எழுத விஷயம் இல்லை. ஏனெனில் நாங்கள் அவசரம் அவசரமாய்த் தான் பார்த்தோம். திரும்பினோம். இன்னும் சொல்லப் போனால் விமான நிலையத்தில் 3 மணி நேரம் ஹெலிகாப்டர் வராமல் காத்துக் கிடந்தோம். அந்த நேரம் கூட அங்கே
செலவழிக்கவில்லை. ஆகவே கட்டுரையிலும் என் மனத்தில் உள்ள அந்த
அவசரத் தன்மை வெளிப்பட்டு விட்டது. இருந்தாலும் எழுதும்போதும் நினைத்துக் கொண்டேன். இதை ஏன் சீக்கிரம் முடிச்சுட்டீங்கன்னு யாராவது
கேட்பாங்களோன்னு. கொஞ்சம் சந்தோஷம் தான், இந்த மட்டும் நல்லா இல்லைன்னு சொல்லாமல் இப்படிக் கேட்டது. எஸ்.கே. அவர்களுக்கு என்னோட நன்றிகள். போர்க்கொடிக்கு (ஹிஹிஹி, பொற்கொடிக்கு) பயம் எல்லாம் ஒண்ணும் வேணாம். தைரியமாப் போகலாம். போயிட்டு வாங்க, வாழ்த்துக்கள்!

நாங்கள் குழுவோடு பயணமே செய்யாத காரணத்தால் எங்களுக்குக் குறைகள் அதிகமாய்த் தெரிந்திருக்கலாம். ஆனால் கைலைப் பயணம் குழுவாய்த் தான் போக முடியும். இந்தியா வழி போனால் கொஞ்சம்
கஷ்டமாய் இருந்தாலும், பிரயாண நேரம் அதிகமாய் இருந்தாலும், அது தான்
சரியானது. ஏனெனில் எங்களுக்கு மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவ உதவி
ஏதும் கிட்டாமல் காயம் பட்டுக் கொண்டவரும் சரி,. மற்ற உபாதைகளில்
தவித்தவர்களும் சரி, ரொம்பவே தவித்தார்கள். ஒரு மருத்துவர் இருந்தால்
குறைந்த பட்சமாய் உதவியாவது கிட்டுமே என,ஸ்ரீலட்சுமியின் மறைவுக்குப் பின் அது எல்லாருக்கும் ரொம்பவே குறையாகவே இருந்தது. நேபாளம் வழி செல்பவர்கள் நேபாளத்தில் இருந்தாவது மருத்துவர் யாரையாவது அழைத்துச் செல்லவேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்களிடம்வாக்குறுதி வாங்கிக் கொள்ள வேண்டும் அதே மாதிரி மானசரோவரில் பூஜைகள், ஹோமங்கள் செய்யவும் நேபாளத்தில் இருந்தாவது அழைத்துச் செல்ல வேண்டும். இதையும் "எக்கோ ட்ரக்" ட்ராவல்ஸ்காரரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவ உதவியும் கேட்கவேண்டும். நான் இதில் உள்ள குறைகளைத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவதின் நோக்கமே நாங்கள் செய்த
தவறு மற்றவர்கள் செய்யக் கூடாது என்றுதான்.

மற்றபடி கைலைப் பயணத்திற்கு வண்டி ஏறியதில் இருந்து சாப்பாடோ, டீ,
காப்பியோ, பாலோ குறைவில்லை. ரொம்பவே நன்றாகவும், தாராளமாயும்
கொடுக்கிறார்கள். மானசரோவரில் புனித நீர்அவரவர் நல்ல கேனாய்க்கொண்டு போய் எடுத்து வைத்துக் கொள்வதே நலம்.
அவர்கள் சேமித்து வைத்துக் கொடுக்கிற புனித நீருக்கு ரூ.50/ம், கேனுக்கு ரூ.50/ம் கொடுக்க வேண்டி உள்ளது. அப்படியும் அநேகரோட
கேன் உடைந்து தண்ணீர் கொட்டி விட்டது. ஆகவே இதையும் தெளிவாக்கிக்
கொள்ளவும். தங்குமிடங்கள் எங்களுக்குக் கூடியவரை மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணாலாகிய வீடுகள் கிடைத்தன. சில சமயங்களில் அதுவும் கிடைக்காது. அப்போது டெண்டில் படுக்கவும், ஸ்லீப்பிங்
பாகில் படுக்கவும் தயாராக இருக்கவேண்டும். ஜெர்கின் போன்றவை
சொந்தமாய் வாங்கிக் கொள்வதே நல்லது. ஏனெனில் அவர்கள் கொடுப்பது
வாடகையும் அதிகம். தொலைந்து போனால் அபராதமும் அதிகம்.
சொந்தமாய் வாங்கினால் மிஞ்சிப் போனால் 1,000/-ரூ அல்லது 1,500/-க்குள் வட இந்தியாவில் அதுவும் டெல்லியில் தாராளமாய்க் கிடைக்கும். வட இந்திய திருத்தலங்களில் யாத்திரை செய்யும்போதும் பயன் படும். அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத் இவற்றுக்கு மே மாதம் சென்றால் கூட இவை எல்லாம் தேவைப் படும். பெண்கள் இயற்கை உபாதைக்குக் கூடியவரை குழுவாகப் போவதே நல்லது. மறைவிடங்களோ, கழிப்பிடங்களோ, தண்ணீர் வசதியோ கிடையாது. ஆகையால் எல்லாம் எதிர்பார்த்தே போகவேண்டும்.


இந்தத் திருக்கைலைப் பயணத்தைக் கேலி செய்தவர்களும் உண்டு. ஒரு
பனிமலையைப் போய் சிவன் என்று சொல்கிறாளே என்றவர்களும் உண்டு.அது நாம் பார்க்கும் கோணத்தில் தான் உள்ளது. இறை உணர்வு நம்பிக்கையோடு சேர்ந்தது. அதை உணரத் தான் முடியுமே தவிரப்
புரிந்து கொள்ளவோ புரிய வைக்கவோ முடியாது. பொதுவாக நம் முன்னோர்கள் இயற்கையோடு இசைந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நாமும் அப்படித்தான் வாழ்கிறோம். ஆகவே இயற்கையின் ஒரு
அதிசயமான கைலை மலையை இறை வடிவில் காண்பது எவ்வாறு தவறு? மேலும் சங்க காலத்திலேயே சிவன், முருகன், திருமால் வழிபாடு இருந்து வந்துள்ளது. ஆகையால் இது ஒன்றும் புதுமை அல்ல. எங்களோடு வந்த வெளிநாட்டுக் காரர்கள் எங்களுடன் பூஜையிலும் கலந்து கொண்டு,
ரட்சைக் கயிறு கட்டிவிடச் சொல்லிக் கட்டிக் கொண்டு, எங்களைப் போலவே
"ஓம் நமச்சிவாயா" சொல்லிக் கொண்டு எங்களில் ஒருவராகவே இருந்தனர்.

இந்தக் கைலைப் பயணத்திற்குச் செலவு நிறையவே ஆகிறது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும். கர்நாடக அரசும், குஜராத் அரசும், இப்போது புதிதாக பாண்டிச்சேரி அரசும் இந்தக் கைலைப் பயணம் மேற்கொள்ளும்
யாத்திரீகர்களுக்குப் பண உதவி செய்கிறது. அம்மாதிரி மத்திய அரசும் செய்யலாம், செய்ய முடியும் என்பதே என் வேண்டுகோள். தற்சமயம் இந்தியச் சீன எல்லையில் கைலைப் பயணத்திற்கு உள்ள சாலையைச் செப்பனிடப் போவதாய் அறிவித்திருக்கும் இந்திய அரசு, சீன அரசுடன் பேசிச் சீனாவில் கைலைப் பயணம் மேற்கொள்ளும் நீண்ட மலைச் சாலைகளையும் இரண்டு அரசும் சேர்ந்து செப்பனிட்டு யாத்திரீகர்கள் வந்து தங்க வசதியும், கழிப்பிடங்களும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள். ஏனெனில் அதிகம் கைலைப் பயணம் மேற்கொள்ளுவது இந்தியர்கள் தான்.

அனைவரின் ஆதரவாலும், கைலை நாதனின் அருளாலும் இந்தத் தொடரை
ஒரு மாதிரியாக முடித்து விட்டேன். அடுத்துச் "சிதம்பரம்" பற்றிப் படித்துக்
கொண்டிருக்கிறேன். நேரம் வந்தால் ஆரம்பிக்கவேண்டும். தொடராகத் தான்
எழுத முடியும். விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அதற்கு வேண்டிய உடல் நலத்தையும், மனோநலத்தையும் கொடுக்கும்படி அந்தக் கைலை நாதனை வேண்டிக் கொண்டு இதை முடிக்கிறேன்.

ஓம் நமச்சிவாயா!

Friday, February 23, 2007

32. ஓம் நமச்சிவாயா

கண்டகி நதிக்கரையில் உள்ள "முக்திநாத்" க்ஷேத்திரம் இமயமலைத் தொடரான தவளகிரிப் பிராந்தியத்தில் உள்ளது. கண்டகி உற்பத்தி ஆகும் தாமோதர் குண்டத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் இருக்கும் இது கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ளது. எங்கள் விமானம் கோவிலுக்குச் சற்றுக் கிட்டேயே இறங்கியது. அங்கிருந்து முக்திநாத் ஊர் கீழே ஒரு ஆயிரம் அடி தள்ளி இருக்கிறது. ஊரில் இருந்து வரும் வழியில் கூட ஒரு ஹெலிகாப்டர் விமானத் தளம் இருக்கிறது. அங்கேயும் ஒரு
ஹெலிகாப்டர் வந்து நின்று அதில் இருந்து சிலர் இறங்கி மேலே வந்தார்கள். அந்த ஹெலிகாப்டரில் ஐந்து பேர்தான் பயணம் செய்யலாம் எங்களுடையது பெரியது என்பதால் சற்று மேலேயே வந்து கிட்டத்திலே உள்ள இறங்கும் தளத்தில் இறங்கியது.இன்னும் சிலர் இன்னும் கீழே
இருந்து குதிரையின் மூலமும் வந்து கொண்டிருந்தார்கள். முக்திநாத் ஊருக்கு மேலே சுமார் 500 அடி உயரத்தில் அமைந்த இந்தத் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் போன்றோர் மங்களாசாஸனம் செய்திருக்கும் இந்தக் கோயிலில் கருவறையில் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அமர்ந்திருக்கும் பெருமாளின் அழகைக்
காணக் கண் கோடி வேண்டும். பக்கத்திலேயே கையைக் கூப்பிக் கொண்டு
ஆழ்வார் ஒருத்தர். யார் அவர் என்று நாம் கேட்பது அங்கே பூஜை செய்யும் நேபாளிப் பெண்ணிற்குப் புரியவில்லை. ஆம், அங்கே பூஜை செய்வது நேபாளப் பெண்கள்தான். ராமானுஜர் என்று ஒருத்தரும் இல்லை நம்மாழ்வார் என்று ஒருத்தரும் கூறினார்கள். கடைசியில் அது யார் என்று தெரியாமலேயே தரிசனம் செய்தோம். இங்கே தமிழ்நாட்டுப் பெருமாள் கோவில் போல் அங்கேயும் தீர்த்தம், சடாரி உண்டு. எல்லாரும் தாங்கள் வாங்கிய முத்து, மணி, பவள மாலைகளைப் பெருமாள் பாதத்தில்
வைத்துத் தரச்சொல்ல அந்தப் பெண்ணும் அப்படியே வைத்துக் கொடுத்தார்.

குளிப்பவர்கள் குளித்ததும் உடை மாற்ற வசதியாக அறைகள் உள்ளன. ஆனால் அந்த நடுக்கும் குளிரில் குளிப்பது எப்படி? அதுவும் நாங்கள் தரிசனம் செய்யும்போதே திடீரென மழை வரவே எங்கள் ஹெலிகாப்டரில் கூடவே வரும் உதவியாளர் எங்களை அவசரப் படுத்த ஆரம்பித்தார். ஆகவே தரிசனமே முண்டி அடித்துக் கொண்டு பார்க்க வேண்டி வந்தது. கோவில் புத்த மதப் படி "பகோடா' என்னும் முறையில் கட்டப் பட்டிருந்தது. இதன் ஸ்தல வரலாறு ;தெரியவில்லை, கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருந்தது.

பின் அங்கிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு எல்லாரும் போனார்கள். என்னவென்று விசாரித்தால் அன்னை இங்கே ஜ்வாலமுகி"யாகக் காட்சி அளிப்பதாய்ச் சொன்னார்கள். அதற்குள் எங்கள் உதவியாளரும் ரொம்பவே அவசரப் படுத்தினார். அங்கே உள்ள விநாயகர், அனுமன் எல்லாரையும் அவசரமாய்ப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு நாங்களும் அங்கே போனோம். நிறையப் பேருக்கு இங்கே இந்தக் கோயில் இருப்பது தெரியாதாம். நாங்கள் ஏற்கெனவே தெரிந்து இருந்ததால் போனோம்.

முக்திநாத் மலைப்பாதையில் இருந்து சற்று விலகி இருந்தாலும்
திரும்பவும் அங்கேயும் வர முடியும். நேபாளிகள் இந்தத் தேவியைப்
"பகுளாமுகி" என்று சொல்கிறார்கள். இங்கேயும் பெண்கள்தான் பூஜை
செய்கிறார்கள். குகை போன்ற அமைப்புள்ள பகுதியில் சற்றுக் கீழே
இறங்கினோமானால் மேலே ஒரு பெரிய மேடையில் அன்னையின் திரு உருவம் காட்சி அளிக்கக் கீழே வலைக் கதவு போட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு. அதன் அருகில் உட்கார்ந்து கீழே குனிந்து பார்த்தோமானால் காதில் அருவியாகப் பாய்ந்து ஓடும் நதியின் ஓசையும் அதற்கு நடுவில் ஒரு நீல நிற ஜ்வாலையும் தென்படுகிறது. அந்த ஜ்வாலையைத் தான் ஜ்வாலாமுகி என்றும், அருவியின் சத்தம் கேட்பதால் பகுளாமுகி என்றும் சொல்கிறார்கள். அன்னைக்குப் பூஜை செய்யும் தகுதி படைத்த பெண்கள் சிவப்பு வண்ண உடையில் காட்சி அளிக்கிறார்கள். செந்தூரம்தான் பிரசாதம். நாங்கள் சிலர்
கொண்டு போயிருந்த தீபத்தை ஏற்றினோம். சிலர் அங்கேயே தீபம் வாங்கி
ஏற்றினார்கள். அங்கேயும் தீபம் வாங்கி ஏற்றலாம். மற்றபடி பூஜை என்று ஏதும் அங்கே நடக்கவில்லை.

தரிசனம் முடிந்ததும் எல்லாரும் ஒவ்வொருத்தராய்க் கீழே இறங்கினோம்.
தயாராய் நின்றிருந்த ஹெலிகாப்டரில் ஏறியதும் புறப்பட்டது. எல்லாருக்கும் நல்ல பசி என்பதால் அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். மறுபடி மேகங்களின் ஊடே பயணம். இப்போது நல்ல வெயில் தெரிந்தது. கையை நீட்டினால் தொட்டுவிடலாம் போல் சூரியன்
பிரகாசித்தான். ஒரு மணி நேரத்தில் காட்மாண்டு ஊர் தெரிய ஆரம்பித்தது.
இறங்க இன்னும் பத்து நிமிஷமே இருந்தபோது விமான நிலையம் நெருங்கும் சமயம் விமான ஓட்டிக்கு அவசரமாய் சிக்னல் கொடுத்து விமானத்தை நடுக்காட்டில் இறக்கினார்கள். முதலில் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் இங்கேதான் இறங்குகிறது. இங்கே இருந்து பேருந்தோ, சிற்றுந்தோ வந்து அழைத்துப் போகும் என நினைத்தோம்.
எங்களை இறங்க வேண்டாம் எனச் சொல்லி விட்டு உதவியாளரும், விமான
ஓட்டிகளும் இறங்கினார்கள். ராணுவ உடையில் பெண்களும், ஆண்களும்,
போலீஸ் உடையிலும் அதிகாரிகளும் வந்தனர். கூடவே 2 பெரிய நாய்கள்.
எல்லாரும் வந்ததும் அவர்களில் ஒருத்தர் கதவைத் திறந்து உள்ளே வந்து எங்கள் எல்லாரையும் பார்த்தார். பின் இறங்கச் சொன்னார். நாங்களும் இறங்கினோம். எல்லாரையும் எடுத்து வந்த பொருட்களைக் காட்டச் சொன்னார்கள். நாங்கள் கண்டகியில் நீர்தான் எடுத்திருந்தோம்.
அதைக் காட்டினோம். முகர்ந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டுச்
சிலர் இடுப்பில் கட்டி இருக்கும் கைத் தொலைபேசி வைக்கும் பெல்ட்டை
அவிழ்த்துப் பார்த்தார்கள். நாய்கள் வந்து முகர்ந்து பார்த்தன. வண்டியிலும் ஏறிப் பார்த்தன. அலமேலு என்பவரின் உடைமைகள் சோதனை போடப் பட்டன. பின் எங்களை விடுவித்தனர். எங்களுடன் வந்திருந்த பெரியவர் சங்கரன் கோபம் வந்து யாத்திரீகர்களை அதுவும் புனிதப் பயணம் வந்திருப்பவர்களை இப்படி நடத்தலாமா எனக்கேட்டதற்கு இது மாமூலான ஒன்று என்று சொல்லிவிட்டுப் போகச் சொன்னார்கள். பின் நாங்கள்
அனைவரும் காட்மாண்டு விமான நிலையம் வந்து எங்களுக்குத் தயாராக
இருந்த ட்ராவல்ஸ்காரரின் வண்டியில் ஏறி ஹோட்டலுக்கு வந்தோம்.

உள்ளே நுழைந்தபோது மணி மூன்று. பசியுடன் சாப்பிடப் போனால் மனோகரன் வந்து 5 மணிக்கு விமானம் உங்களுக்கு. இப்போச் சாப்பிட நேரம் இல்லை. உடனேயே விமான நிலையம் கிளம்புங்கள் எனச் சொல்ல நானும், என் கணவரும் அறைக்குப் போய் மற்ற உடைமைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு கீழே வந்தோம். சிலர் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு நாங்களும் போய் ஒரு சப்பாத்தியும், கொஞ்சம் தயிர்சாதமும் சாப்பிட்டோம். பின் அவசர அவசரமாய் விமானநிலையம் பயணம் மறுபடி. அங்கே போய் விமானத்தில் நுழையச் சீட்டு வாங்கி விட்டுப் பின் எங்கள் பொருட்களை விமானத்தில் ஏற்றக் கொடுத்தால் அதிக எடைப் பிரச்னை. திரு மனோகரனை உதவிக்குக் கூப்பிட்டு குழுவாக வந்திருப்பதால் எடை போடும்போது குழுவினர் எல்லாருடைய உடைமைகளையும் சேர்த்து அப்படியே போடவேண்டும் என்று கூப்பிடத் தேடினால் அவர் எங்களை விமான நிலையத்தில் விட்டு விட்டுப் போய்விட்டார். அவர் மறுநாள்தான் திரும்புகிறார். பின் நாங்களே பேசிக் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒருமாதிரியாக எல்லாருடைய சாமான்களையும் ஏற்றத் தயார் செய்தோம்.

பின் விமானம் கிளம்பும் வாயிலுக்குப் போகும் வழியில் மறுமுறை செக்கிங்.
இம்முறை நாங்கள் கையிலேயே வைத்திருந்த மானசரோவர் தண்ணீரில்
இருந்து சோதனை செய்யப் பட்டது. மற்ற எல்லாரும் அந்த ப்ளாஸ்டிக் கேனை லக்கேஜில் போட நாங்கள் மட்டும் பிடிவாதமாய்க் கையில் வைத்திருந்தோம். சிலருடைய கேன் உடைந்து தண்ணீர் எல்லாம் கொட்டி விட்டது. நல்லவேளையாக நாங்கள் எங்களுடைய சொந்தக் கேனிலேயே தண்ணீர் பிடித்து வந்திருந்ததால் எங்களுடையது காப்பாற்றப் பட்டது. எஸ்கலேட்டரில் நானும், இன்னும் சிலரும் ஏற முடியாமல் படிக்கட்டு எங்கே
என்று தேடினால் உதவ ஆளே இல்லை. ஒருமாதிரியாகத் தேடிக் கண்டுபிடித்து படி ஏறி மேலே வந்தால் மறுபடி ஒரு சோதனை. எல்லாம் முடிந்து வந்தால் விமானம் தாமதமாய் வந்தது. ஒரே கூட்டம் விமானத்தில். இந்தியா வரும்போது நெரிசலாய் இருக்கும் விமானம். சிலசமயம்
இடமே கிடைக்காது. இந்தியாவில் இருந்து நேபாளம் போகும்போது படுத்துக்
கொண்டே போகலாம். அவ்வளவு இடம் இருக்கிறது. விமானம் ஏறியதுமே அனைவருக்கும் இந்தியா வந்த உணர்வு. 2 மணி நேரத்தில் டெல்லி தெரிந்தது,. இந்தியா வந்தோம். எங்கள் லக்கேஜ் வரத் தாமதம் ஆனதால்
என்னுடைய மைத்துனனுக்குத் தொலைபேசித் தெரிவித்து விட்டு
சாமானுக்காகக் காத்திருந்தோம். அந்த ஏ.சி. குளிரிலும் எனக்கு வியர்த்தது.
மனதிலோ இனம் புரியாத நிம்மதி. வெளியே வந்து டெல்லியின் புழுக்கத்தை
அனுபவித்ததும் தோன்றியது இது தான்.

"ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்து ஸிதா ஹமாரா, ஹமாரா!" என்ற வரிகள். எத்தனை உண்மை!

HOME SWEET HOME!

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!"

Monday, February 19, 2007

62. ஓம் நமச்சிவாயா- கண்டகி நதியின் கதை

இப்போ நாம் "கண்டகி நதி" பற்றிய வரலாறு பார்க்கலாம். இது என்னுடைய புத்தகக்குறிப்புக்களில் இருந்து கொடுக்கிறேன். ஏனெனில் நாங்கள் முக்திநாத் போனபோது ட்ராவல்ஸ்காரர்கள் யாரும் வரவில்லை. ஹெலிகாப்டரில் இருந்தும் எங்களை இறக்கிவிட்டு விட்டு அங்கேயே விமான ஓட்டிகள் இருக்கத் துணைக்கு வந்த உதவியாளர் எங்களை ஒருங்கிணைத்துக்
கூட்டிச் செல்லும் வேலையில் இருந்ததால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. இதில் தவறு ஏதும் இருந்தால் நான் தான் பொறுப்பு. இது ஒரு செவிவழிக் கதை.

நேபாளத்தில் உள்ள "மஸ்டாங்" என்னும் மாவட்டத்தில் சுமார் 5,000 மீட்டர்
உயரத்தில் உள்ள "தாமோதர் பீடபூமி"யில் 60-க்கும் மேற்பட்ட பனிச்சிகரங்கள் உள்ளன. அன்னை தாட்சாயணியின் வலது கன்னம் துண்டு துண்டாக வீழ்ந்ததாயும், அப்படி வீழ்ந்த இடங்கள் பள்ளங்கள்
ஆனதாயும், அந்தப் பள்ளங்களில் இந்தப்பனிச்சிகரங்களில் இருந்து உருகி
ஓடிய நீர் வழிந்து ஏரிகளாய் மாறினதாயும் சொல்கிறார்கள். இந்த ஏரிகள் "தாமோதர் குண்டங்கள்" என்று அழைக்கப் படுகின்றன. திபெத் நாட்டின் எல்லைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் குண்டத்தில் இருந்து உற்பத்தி ஆகும் நதிகளில் ஒன்றுதான் கண்டகி நதி. இந்த நதியின் வேறு பெயர்கள் ஸம்ட கண்டகி, நாராயணி, காளி கண்டகி என்பது ஆகும். இதன் அருகில் தான் பிரசித்தி பெற்ற "சாளக்கிராம மலை"யும் அதன் அருகிலே உள்ள கிராமம் "சாளக்கிராமம்" எனவும் அழைக்கப் படுகிறது. கண்டகி நதியைப்
பற்றிய ஒரு செவிவழிக் கதையை இப்போது பார்ப்போம்.

வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு
விசித்திரமான குணம் இருந்தது. அது என்ன வென்றால், தன்னை நாடி வரும்
ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம
பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத்
தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை
ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். வருந்திய கண்டகி செய்வதறியாது
திகைக்க,அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.
உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய
யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.
அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி.

அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. என்ன பரிதாபம்! வாலிபன் உயிரோடு இல்லை. இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின்
அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.
திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்
அற்புதம் நிகழ்கிறது. இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு,சக்ர
கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார். கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய்ச்
சொல்கிறார். கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் என்ன? எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் இருக்க வேண்டும்
என்பது தான் அது. அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார்" ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு
சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று
சொல்லுகிறார். சாபம் பெற்ற நாராயணன் சாளக்கிராம மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடுவதாய்ச் சொல்கிறார்கள். இதே கதை ஒரு ஜெர்மன் புத்தகத்திலும் இருப்பதாய்ப் படித்தேன்.

சாளக்கிராம மலையைப் பூச்சிகள் துளைத்தெடுத்ததால் சாளக்கிராமங்கள் உருவாகி நதியிலும், நதிக்கரையிலும் கிடைப்பதாய்ச் சொல்கிறார்கள். இமயமலையின் இந்தப் பகுதியில் முன்னால் சமுத்திரம் இருந்ததாயும், அது வற்றி போய்க் கடல்வாழ் பூச்சிகளின் ஓடாக இருக்கலாம் எனவும் சொல்லப் படுகிறது. சாளக்கிராமம் மூன்று வகைப்படுகிறது.

முதல் வகை: உடையாமல், துவாரம் இல்லாமல், கூழாங்கல் போல் இருக்கும்.
குளிர்ச்சியாக இருக்கும்.

2-ம்வகை: சரிபாதி உடைந்து உள்ளே சக்கரம் போன்ற அமைப்புடன் கூடியது

3-ம் வகை:துவாரம், சக்கரம் இவற்றுடன் ரேகைகளும் தென்படும்.

எந்தச் சாளக்கிராமமாய் இருந்தாலும் தினமும் பூஜை செய்ய வேண்டும். தினமும் சாளக்கிராம ஆராதனை செய்தால் முக்தி கிடைக்கும் என்பதாய் ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. நாங்கள் தாமோதர் பள்ளத்தாக்குப் போனோமே தவிர, கண்டகி உற்பத்தி ஆகும் இடத்துக்குப் போகவில்லை. அதற்குக் கூடுதலாய் நாட்கள் பிடிக்கும். நாங்கள் அன்றே திரும்ப வேண்டுமே? ஆகவே முக்திநாத்திலேயே நேரடியாய் இறங்கிக்
கொண்டோம். 108 திவ்ய தேசங்களில் 106-வது முக்திநாத். இது சென்று வருவது கஷ்டம் என்பதால் கடைசியில் வைத்திருக்கிறார்கள். 107-வது வைகுண்டம். 108-வது திருப்பாற்கடல்.

இங்கே எல்லாம் போய்விட்டுத் திரும்பியவர் "நம்மாழ்வார்" மட்டும் தான் என நினைக்கிறேன். நாங்க தான் கைலைப்பயணத்தின் போதே வைகுண்டம், சொர்க்கம் எல்லாம் எட்டிப் பார்த்துவிட்டுத் தானே வந்திருக்கிறோம்.
ஆகவே அடுத்ததாய் முக்தி நாதரின் தரிசனம் பார்க்கலாம்.

Wednesday, February 07, 2007

30.ஓம் நமச்சிவாயா

முக்திநாத் தலம் நேபாளத்தில் அமைந்திருந்தாலும் போகிற வழி சற்றுக்
கடினமானது. சுற்றிலும் பனி படர்ந்த மலைகளினால் சூழப் பட்ட
இந்தப்பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 4,000 மீட்டர் உயரத்தில்
இருக்கிறது. காட்மாண்டுவில் இருந்து சாலை வழியாகப் "போக்ரா" என்னும் ஊர் வந்து அங்கிருந்து குதிரை மூலமோ, நடந்தோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ மேலே போய் முக்தி நாதரைத் தரிசனம் செய்யலாம். ஆனால் நாங்கள் காட்மாண்டுவில் இருந்தே ஹெலிகாப்டர் மூலம் செல்லத் தயார் ஆனோம். ஏனெனில் சாலை வழி 3 நாள் பயணம் என்பதோடு அல்லாமல் எங்களில் விமானப் பயணம் மூலம் வந்தவர்களில் 16 பேருக்கு அன்றைய விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் தயாராக இருந்தது. ஆகவே
அன்றே போய்விட்டுத் திரும்ப வேண்டும். எதற்கு அறைச் சாவிகளைக் கொடுக்கச் சொல்கிறார்கள் என்பது தெரியாமலேயே சாவிகளைக் கொடுத்து விட்டு விமான நிலையத்திற்குக் கிளம்பினோம். வழியில் தான் தெரிந்தது ஒரு வேளை முக்திநாத்தில் இருந்து நாங்கள் திரும்பத் தாமதம் ஆனால் எங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு
ட்ராவல்ஸ்காரர்கள் வந்து ஒப்படைப்பார்கள் என்று. உடைமைகள் பரவாயில்லை, அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடலாம் தான். ஆனால் நாங்கள் பெரும்பாலான பணத்தை லாக்கரில் வைத்திருந்தோம். சாவி எங்களிடம் இருந்தது. அது இருந்தால் தான் திறக்க முடியும். இல்லாவிட்டால் டெல்லி போய் வீட்டுக்குப் போகக்கூடப் பணம் மைத்துனனைத் தயாராக வைத்திருக்கச் சொல்ல வேண்டும். ஒரே குழப்பமுடன் தான் போனோம். விமானப் பயணம் என்பதால் எல்லாருடைய பாஸ்போர்ட்டுகளும் சோதனை செய்யப் பட்டு விமானச்சீட்டும் கொடுக்கப்பட்டு நாங்கள் ஏற வேண்டிய வாசலில் காத்திருந்தோம். அவ்வளவில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் சென்று விட நாங்கள் மட்டுமே 24 பேர்கள் காத்திருந்தோம். நேரம் செல்லச் செல்ல விமானம் வரும் அறிகுறியே காணோம். நேரம் நேபாள நேரப்படி 11 ஆனதும் தான் எங்களுக்கான விமானம் வந்தது. உடனேயே அறிவிப்புக் கொடுக்க நாங்கள் எல்லாரும் ஓடிப் போய் ஏறிக் கொண்டோம். 2 விமான ஓட்டிகளைத் தவிர எங்களுக்கு உதவ ஒரு பணியாளும் இருந்தார். சாதாரண விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்லிவிட்டுக் கட்டாயமாய் சீட்பெல்ட் போட வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டுக் காதில் வைத்துக் கொள்ளப் பஞ்சு போன்றவை கொடுத்தார். ஒரே சத்தம். விமானம் கிளம்பியது. சுற்றிலும் மலைகள், மலைகள், மலைகள். அதில் மிதக்கும் மேகங்கள். நீல வண்ண மேகம், வெள்ளை வெளேரென மேகம். பழுப்பு நிற மேகம். கறுப்பு நிற மேகம்.
கறுப்பு நிற மேகத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது. ஏனெனில் மழை வந்து விட்டால் என்ன செய்வது?பணி ஆள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரம் 40 நிமிடங்கள் என அறிவித்தார். 40 நிமிடங்களுக்குள் அங்கே உள்ள 108
தீர்த்தங்களிலும் குளிக்கிறவர்கள் குளித்து விட்டு ஸ்வாமியையும் தரிசனம்
செய்துவிட்டுக் கிளம்ப வேண்டும். முடியுமா? போய்க் கொண்டிருந்தோம்.

முக்திநாத் 108 வைணவத் திருப்பதிகளில் 106-வதாகப் போற்றப்படுகிறது.
இப்பெருமானைத் திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெற்றது என்று சொல்கிறார்கள். மற்றத் திருப்பதிகளையும், பூரி, துவாரகா, அயோத்தி, பத்ரிநாத் போன்ற க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்து விட்டே கடைசியில் முக்திநாதரைத் தரிசனம் செய்ய வேண்டுமென வைணவ
சம்பிரதாயப் படி ஐதீகம். நாங்கள் பூரியும், அயோத்தியும் போனது இல்லை. அதனால் என்ன? பரவாயில்லை விடக்கூடாது என முக்தி நாதர் தரிசனத்திற்குத் தயாரானோம்.

தவளகிரி மலைப்பிராந்தியத்தில் உள்ள இந்த முக்தி நாதர் கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில் "தாமோதர் குண்டம்" எனப்படும் குண்டம் உள்ளது. முக்திநாத் தலம் "கண்டகி" நதிக்கரையில் உள்ளது. கண்டகி நதி இத்தலத்தை ஒரு மாலை போல் சுற்றிக் கொண்டு ஓடுகிறது. பக்கத்திலேயே சாளக்கிராம மலை உள்ளது. மஹாவிஷ்ணுவே இம்மலையாக அவதாரம் எடுத்ததாய்ச் சொல்கிறார்கள். கண்டகியானது முற்பிறவியில் ஒரு வேசிப் பெண்ணாக இருந்து பின் அவளுடைய வெளிப்படையான மனத்தாலும், அவள் அனுஷ்டித்த தர்மத்தாலும் ஸ்ரீமந்நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்டு எந்நாளும் அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு ஓட வரம் கேட்டதினால் "கண்டகி" நதியாக மாறி ஓடுகிறாள்.

கண்டகி நதி பற்றிய கதை தொடரும்.