எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, January 16, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!


ஏகாதசி அன்று விருச்சிக லக்னத்தில் சிம்ம கதியில் பக்தர்களின் உற்சாக முழக்கங்களோடும், வாத்திய இசை முழக்கங்களோடும் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் நம்பெருமாள் மதுரையின் ராணி மங்கம்மாள் அளித்த ரத்தின அங்கியில், பாண்டியன், கொண்டை, கிளிமாலையோடு புறப்படுகிறார்.  பெருமாளின் திருமேனியில் பனி விழாவண்ணம் துணிக்கூடாரம் பிடித்துக் கொண்டு வருவார்கள்.  சந்தனு மண்டபத்துக்கு முதலில் வரும் நம்பெருமாள் அங்கே சிறிது நேரம் இருந்து பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு பின்னர் வழியெங்கும் காத்து நிற்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம் சேனை முதலியார் சந்நிதிக்கு வருவார்.  அங்கே அரங்கனின் திருவடியில் சமர்ப்பித்த மாலை சேனை முதலியாருக்குச் சமர்ப்பிக்கப் படுகிறது.  இதன் மூலம் தான் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை தன் அதிகாரத்தைச் சேனை முதலியாருக்கு மாற்றிக் கொடுக்கிறான் அரங்கன். பின்னர் பக்தர் கூட்டம் வெள்ளமாய்ப் பின் தொடரப் பரமபத வாசல் நோக்கி அரங்கன் ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்கிறது.

பரமபத வாசலை அரங்கனோடு சேர்ந்து கடப்பது அரியதான ஒன்றெனில் அவன் அந்த வாசல் வழியே வருகையில் எதிரே நின்று தரிசிப்பதும் சிறந்ததாகவே கூறப்படுகிறது.  நாழி கேட்டான் வாசல், கொடிமரம் போன்றவற்றைக் கடந்து நம்பெருமாள் திரை மண்டபம் வந்து சேர்கிறார்.  அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும்.  அதைத் தொடர்ந்து மற்றவேதங்களும் சொல்கிறார்கள்.  வேதங்களைப் பெருமாளின் சுவாசமாகச் சொல்கின்றனர்.  பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்குப் பெருமாள் வந்து சேர்கிறார்.  பரமபத வாசலைத் திறக்க, அரங்கனின் ஆணை வேண்டும்.  ஆகவே சற்று நேரம் பக்தர்களோடு சேர்ந்து பரமனும் காத்திருக்கிறான்.  சிறிது நேரத்தில், பரமனின் ஆணை பிறப்பதாக ஐதீகப்படி ஆணை பிறந்ததும் பரமபத வாசலின் மணிகள் கணீர், கணீர் என ஒலிக்கக் கதவுகள் திறந்து கொள்கின்றன.  கூடி இருக்கும் கூட்டம் ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என கோஷம் போட எட்டுத் திசைகளும் அதிரும் வண்ணம் வாத்திய முழக்கங்கள் செய்யப் பரமன் தன் அடியார் கூட்டத்தோடு பரமபத வாசலை அணுகினான்.  அந்த அதிகாலை வேளையில் குறிப்பிடப் பட்ட முஹூர்த்த நேரமான 4-45 மணி அளவில் தன் பக்தர்களுக்கு அருள வேண்டிப் பரமபத வாசல் வழியே ஆயிரங்கால் மண்டபம் அடைகிறான் நம்பெருமாள்.

அரையர் சேவையும் தொடர்ந்து நடைபெற, ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்த அரங்கன் அங்கே பரமபதத்தின் திருமாமணி மண்டபத்தை நினைவு கூரும் வண்ணம் கட்டப்பட்ட பூலோகத் திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருக்கிறான்.  மீண்டும் அரையர் சேவை நடைபெறும்.  வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு வரை அரங்கன் தரிசனம் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்குக் கிடைக்கும்.  யோக நித்திரையிலேயே என்றென்றும் இருக்கும் பரமன் தன் பக்தர்களுக்காக வேண்டி இன்று தன் நித்திரையை ஒழித்து ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் வீற்றிருந்து அரையர் சேவை, முதலானவற்றைக் கேட்டுக் கொண்டும், நடு நடுவே தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டும் ஓய்வில்லாமல் தரிசனம் தந்தருளுவான்.

அதன் பின்னரே மூலஸ்தானம் சென்று சேர்வான். வைகுண்ட ஏகாதசி முழுநாளும் அதிகாலை நான்கு மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் பரமபத வாசலும் பக்தர்கள் கடப்பதற்காக வேண்டித் திறந்திருக்கும்.  அதன் பின்னர் அடுத்த பத்து நாட்களுக்கு இராப்பத்து உற்சவம் நடைபெறும்.  அதன் நிறைவு நாளன்று நம்மாழ்வாருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.  அதைக் குறித்து அடுத்துப் பார்ப்போம்.



Thursday, January 03, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!





அர்ச்சுன மண்டபத்தில் அன்று முழுதும் ஆஸ்தானம் இருக்கும் நம்பெருமாளுக்கு அரையர்கள் இரு முறை தங்கள் சேவையைக் காணிக்கையாக்குவார்கள்.  இந்த அரையர் சேவை இன்றும், இந்த வருடமும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஒன்று.  இதைப் புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. :(    அனுமதி கொடுப்பதில்லை.  அரங்கனுக்கு மட்டுமே உரித்தானது என்று சொல்கின்றனர்.  ஒரு நாளைக்குக் குறைந்தது 212 பாசுரங்கள் வீதம் பகல் பத்து பத்து நாட்களிலும் இராப்பத்தில் கடைசிநாளான நம்மாழ்வார் மோக்ஷ தினத்துக்கு முதல்நாள் நடைபெறும் தீர்த்தவாரி வரை தினமும் பாசுரங்கள் பாடி அரையர்களால் அபிநயம் பிடித்துக் காட்டப் படுகிறது. கொடியேற்றத்தன்று திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் திருவிழாவின் பகல் பத்து முதல் நாளன்று பெரியாழ்வாரின் திருமொழி வியாக்யானம், அபிநயத்தோடு ஆரம்பித்து நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் கண்டருளும் நம்பெருமாள் பகல்பத்தின் கடைசி நாள் அன்று அதாவது வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி அலங்காரம் அன்று நடைபெறுவதற்கான காரணம் பின் வருமாறு:

ஏற்கெனவே சென்ற இடமெல்லாம் பக்தர்களைப் பைத்தியமாய் அடித்துத் தன் பக்கம் இழுத்த அழகிய மணவாளன் ஆன நம்பெருமாளுக்குத் தனியாக மோகினி அலங்காரம் என்று வேண்டுமா?  இல்லை; இல்லை.  அதனால் எல்லாம் இவன் அனைவரையும் கவர்ந்தான் எனச் சொல்வதற்கு இல்லை. ஆனால் தில்லையம்பலத்து ஆனந்த நடராஜரை எவ்வாறு ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசிப்பது ஆனந்தம் அளிக்கிறதோ அவ்வாறே நம்பெருமாளையும் மோகினி அலங்காரத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உண்மையில் மக்களுக்குப் பித்தே ஏற்பட்டு விடும். அப்படியொரு பிரகாசமான பேரழகு. காணக் கண் கோடி வேண்டும்.  இதன் தாத்பர்யம் என்னவெனில் மார்கழிமாதம் தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப் பட்டு அமிர்தம் வந்ததாகச் சொல்வார்கள்.  துர்வாசரின் சாபத்தினால் தேவலோகத்தை இழந்த இந்திரன், தன் சக்தியையும் இழக்கவே திருமாலின் ஆலோசனைப் படி அசுரர்களின் உதவியோடு, தேவர்களும் கூடிப்  பாற்கடலைக் கடைந்தனர்.

மத்தாக இருந்த மந்த்ர மலை சாய்ந்துவிழுந்துவிடும் நிலையில் கூர்மமாக மாறி அந்த மலையைத் தன் மேல் தாங்கினார் திருமால்.  வாசுகியான பாம்பரசனைக் கயிறாகக் கொண்டு கடைந்ததால் அதன் வாய் வழி வந்த விஷமும், பாற்கடலின் மேலே இருந்த ஆலகால விஷமும் ஒன்று சேர்ந்து வெளிவரவே அதைத் திரட்டி ஒரு உருண்டையாக்கி உட்கொண்டு ஈசன் திருநீலகண்டராக ஆக, பின்னர் ஒவ்வொன்றாக வெளிவந்து கடைசியில் தங்கக் கலசத்தில் அமுதமும் வெளிவந்தது.  அசுரர்கள் அதைப் பறித்துக்கொள்ள எப்போதும் போல் ஏமாந்த தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர்.  திருமாலும் ஒரு அழகிய பெண்ணாக மாறி தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அமுதம் கொடுப்பதற்கு முன் வந்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுதம் கிட்டச் செய்தார்.  இந்த சுக்லபக்ஷ தசமியின் மறுநாளே தேவர்கள் வைகுண்ட வாசியான மஹாவிஷ்ணுவான திருமாலைப் போற்றி வணங்கித் தங்களுக்குத் தரிசனம் கொடுத்தருள வேண்ட மஹாவிஷ்ணுவும், வைகுண்ட வாசலான பரமபத வாசலைத் திறந்து வெளி வந்து பரமபதத்தில் ஆஸ்தானமாக வீற்றிருந்து தேவாதி தேவர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.  இதுவே வைகுண்ட ஏகாதசித் திருநாளின் முதல்நாளன்று மோகினி அலங்காரத்திற்கான காரணமும், மறுநாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழி வெளி வந்து (அன்றொரு நாள் விரஜா நதிக்கரையில் உள்ள பரமபதத்தில்  காட்சி அளித்தவாறு) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருந்து காட்சி அளிக்கிறார்.

அரங்கன் ஆஸ்தானமிருந்து கட்டளையிடும் அழகைப்  பார்க்கும் முன்னர் அரங்கனின் திவ்ய அலங்காரம் குறித்த ஒரு வர்ணனை.  தோளில் கிளி மாலையுடனும், தலையில் பாண்டியன் கொண்டையுடனும் காட்சி அளிக்கும் நம்பெருமாளுக்கு ரத்தின அங்கியால் அலங்கரிக்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் முழுதும் ரத்தினங்களால் ஆன அங்கி அணிந்திருப்பார்.  இந்த ரத்தின அங்கியை சூரியனின் கதிர் வீச்சுக்குச் சமமாகச் சொல்கின்றனர்.  இந்தக் கதிர்வீச்சு மருத்துவ மற்றும் தெய்வீக குணம் உள்ளது. என்றாலும் இதுவும் ஒரு அளவுக்கு மேல் போனால் ஆகாது என்பதால் அந்த ரத்தின அங்கியில் அவரைப் பாதி வரை தான் பார்க்க இயலும். இடுப்புக்குக் கீழே சல்லாத்துணியால் மறைத்திருப்பார்கள்.  இவ்வாறு ஒளி மிகுந்த ரத்தினங்களின் கிரணங்கள் சூரிய கிரணங்கள் போல் பக்தர்கள் மேல் படுவதால் அதன் பாதிப்பைக் குறைக்கவே பெரிய பெருமாளை முத்தங்கியால் அலங்கரிக்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் பரமபத வாசல் காணுவதே முக்கியம் என்பதால் அதை முதலில் கண்ட பக்தர்கள் பின்னர் மூலவரான பெரிய பெருமாளைக் காண வரும்போது சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் போன்ற சந்திரனின் கதிர்வீச்சின் குணம் கொண்ட முத்துக்களால் ஆன அங்கி அணிவிக்கப் படுகிறது.  சூரிய கிரணங்களின் வீரியத்தை ஈடு செய்யும் வகையிலேயே இந்த அங்கி பெரிய பெருமாளுக்கு அணிவிக்கப் படுகிறது.


இந்த மோகினி அல்ங்காரத்துடன் பராங்குசநாயகியான நம்மாழ்வாரைப் பார்த்து, நம்பெருமாள் கேட்டாராம்: "என்ன எப்படி என் அலங்காரம்?  அதோ அங்கே பார், ஶ்ரீயை விட என் அலங்காரம் பிரமாதமில்லை?  அவளை விட நான் அழகு இல்லை?  என்னைப் பார் என் அலங்காரத்தைப் பார்!"

நம்மாழ்வார்: தேவரீர் அடியேனை க்ஷமிக்க வேண்டும்.  ஒரே ஒரு குறை உள்ளது!

நம்பெருமாள்:  குறையைச் சொல்லும் சடகோபரே, நிவர்த்திக்கிறேன்.

நம்மாழ்வார்: தேவரீரால் இயலுமா?

நம்பெருமாள்: அதென்ன அப்படிக் கேட்டுவிட்டாய்?

நம்மாழ்வார்: தேவரீருக்கு எல்லா அலங்காரமும் பொருந்தியே வருகிறது.  அதே போல் இந்த மோகினி அலங்காரத்திலும் ஜொலிக்கிறீர் தான்!

நம்பெருமாள்:  அப்புறமென்ன?

நம்மாழ்வார்:  ஆனால் ஸ்ரீஎனப்படும் மஹாலக்ஷ்மித் தாயாரின் கடைக்கண்களில் இருந்து கிளம்பும் கருணை ஒளியான ஜோதியை இங்கே காண முடியவில்லையே ஸ்வாமி!

நம்பெருமாளின் முகத்தில் குறுநகை.  படிதாண்டாப் பத்தினியான ரங்கநாயகியைப் பார்த்து, இப்போது சந்தோஷமா என்னும் பாவனையில் பார்க்கிறார்.

Tuesday, January 01, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


கிட்டத்தட்ட மற்ற ஊர்களின் பிரம்மோற்சவம் போல ஸ்ரீரங்கத்தின் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகும்.  இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிக்கிறார்.  இப்போதைய காலகட்டத்தில் தான் இது வைகுண்ட ஏகாதசி உற்சவம் என அழைக்கப் படுகிறது.  ஆனால் இதன் பெயர் உண்மையில் திரு அத்யயன உற்சவம் என்றே அழைத்து வந்தனர்.  விஷ்ணு ஆலயங்களின் ஆகம முறைகளை முறையே பாஞ்சாராத்ரம், வைகானஸம் என இரண்டாகப் பிரித்துள்ளனர்.  அவற்றில் பாஞ்சராத்ர ஆகமத்தில், ப்ரசின ஸம்ஹிதையில் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை தொடங்கி இருபது நாட்கள் ஸ்ரீமஹா விஷ்ணுவான பெரிய பெருமாளுக்கு உற்சவம் செய்ய வேண்டும் எனச் சொல்லப் பட்டிருப்பதாக அறிகிறோம்.  அதன் படி மார்கழி மாத சுக்லபக்ஷத்தின் பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக அமைந்துள்ளது.  இதன் முதல் பத்து நாட்கள் பகல் பத்து எனவும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் அழைக்கப் படுகிறது.

பகல் பத்து என்ற முதல் பத்து நாட்கள் நடைபெறுவதே திரு அத்யயன உற்சவம் ஆகும்.  இந்தப் பத்து நாட்களிலும் பெருமாளின் முன்பு பன்னிரு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுதுமாகப் பாடப்பட்டு, அரையர்களால் அபிநயமும் பிடித்துக் காட்டப்படும்.  இந்தப் பகல் பத்து உற்சவம் தொடங்குவதற்கு முன்னர் முதன் முதல் திருமங்கை ஆழ்வார் பாடியருளிய திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  இதுவே வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் ஆரம்பக் கொடியேற்றம் எனலாம்.  இதைத் தொடர்ந்து நடப்பதுதான் புகழ் பெற்ற அரையர் சேவை.  அரையர்கள் என்றால் அரசர்கள் என்னும் சொல்லின் திரிபு எனச் சொல்கின்றனர்.  இவர்களும் அரசர்கள் மகுடம் சூட்டிக் கொள்வதைப் போல் தலையில் பட்டுக்குல்லாய் அணியும் உரிமை பெற்றிருக்கின்றனர்.  அந்தக் குல்லாய்களை அணிந்து கொண்டே அபிநயம் பிடிப்பார்கள்.  அதோடு மட்டுமா?  இந்தப் பட்டுக்குல்லாய், நாம் குலசேகரன் படியில் நுழையும் இடத்தில் உள்ள ஜய, விஜயர்கள் தலையிலும் காணலாம்.  பெருமாளுக்கும் பட்டுக்குல்லாய் அணிவிக்கப்படுவது உண்டு.  கம்பளி போர்த்துவார்கள்.  மழை பெயதால் பெருமாள் நனையாமல் இருக்கத் துணிக்கூடாரம் குடை போல் விரிந்து அவரை மழையிலிருந்து பாதுகாக்கும்.  பெரிய பெருமாளுக்கும் குல்லாய் உண்டு. தாயாருக்கும் குளிரிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கின்றனர்.

அரையர் சேவையின் அரையர்கள் தங்கள் கைகளில் தாளங்களை ஏந்திக் கொண்டு பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.  நடிப்பு, முத்திரைகள், இசை என நுணுக்கமான இந்தக் காட்சியானது பாசுரத்தின் பொருளை அப்படியே மனக்கண்ணில் தோன்றும்படிச் செய்துவிடும்.  பார்ப்பவர்கள் மெய்ம்மறந்து பார்க்கின்றனர்.  பகல் பத்து உற்சவத்தின் பெரும் சிறப்பு இந்த அரையர் சேவை. பத்து நாட்களிலும் தினம் இருமுறை நடைபெறும்  ஒவ்வொரு முறையும் குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெறும்.  அர்ச்சுன மண்டபத்தில் பெருமாள் ஆஸ்தானம் இருந்து அரையர் சேவையைக் கண்டு களித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  பாசுரங்கள் புரியாதவர்கள் கூட மனம் ஒன்றிப் போய் ஆழ்வார்களின் உள்ளம் பெருமாளின் கருணையில் தோய்ந்திருந்ததை நன்கு உணரும்படிச் செய்வதே அரையர் சேவையின் மகத்துவம்.

அடுத்தது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அர்ச்சுன மண்டபத்துக்குப் புறப்பாடு காணுதல்.  சாதாரணமாக எல்லாம் கிளம்பமாட்டார் நம்பெருமாள்.  நல்ல லக்னமாக நிர்ணயிக்கப் பட்ட வ்ருச்சிக லக்னத்தில் தங்கக்குடை பிடித்து முன்னே தீப்பந்தம் ஒளி வீசிச் செல்ல, வாத்தியங்கள் முழங்க ஆண்டாளம்மாள் ரங்கா, ரங்கா என அழைக்க சிம்ம கதியில் செல்வார் பெருமாள்.  பெருமாளைத் தோளுக்கு இனியானில் காண இயலாது.  இதற்கெனத் தனிப் பல்லக்கு உண்டு.  அந்தப் பல்லக்கில் பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்களை "ஸ்ரீபாதம் தாங்குவார்" என அழைக்கின்றனர்.  இன்றைய நாட்களில் இது மருவி சீபாதந்தாங்கி என்றாகிவிட்டது.  நம்பெருமாளுக்குத் திரையிட்டு அலங்காரங்கள் செய்து முடித்தவுடன், "அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்" எனக் குரல் கொடுத்து அழைப்பார்கள். ஸ்ரீபாதம் தாங்கிகள் உள்ளே செல்லக் கதவுகள் மூடப்பட்டுப் பின்னர் திறக்கையில் பேரொளிப் பிழம்பாய், அழகான அலங்காரங்களுடன், முகத்தில் குறுநகை விளங்க, கைகள் அபயம் காட்ட வெளிப்படுவார் நம்பெருமாள்.  பார்ப்பவரைப் பித்துப் பிடிக்கச் செய்யும் அலங்காரம்.  மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் அர்ச்சுன மண்டபம் நோக்கிச் செல்வார்.