எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 29, 2008

சிதம்பர ரகசியம்- இது தான் சிதம்பர ரகசியம்!

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

இங்கு மாணிக்கவாசகர் ஆண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளும், பெண்களின் கூந்தலும், அந்தக் கூந்தலின் மணத்துக்காக நுகர வந்த வண்டினங்களும் அனைத்துமே இந்த மார்கழிச் சில்லென்ற மெல்லிய குளிரில் நீராடி, திருச்சிற்றம்பல நாதனின் புகழைப் பாடவேண்டும் என்று சொல்லுகின்றார். அதுவும் எவ்வாறு சிற்றம்பல நாதனே வேதங்களுக்கெல்லாம் பொருளானவன் என்றும் அப்பொருளைப் பற்றிப் பாடவேண்டும் என்றும், அடிமுடி காணா சோதி வடிவாய் ஈசனின் பெருமைத் திறத்தைப் பாட வேண்டும், எனவும் அவன் சூடிக் கொள்ளும் கொன்றை மலரின் சிறப்பைப் பாடவேண்டும் எனவும் சொல்லுகின்றார். ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான இறைவனின் புகழைப் பாடுவதின் மூலம், நம்மைப் பந்த பாசங்களில் இருந்து பிரித்துத் தாய் போல் விளங்கும் ஈசனின் கங்கணங்கள் அணிந்த அந்த அபய ஹஸ்தங்களையும், எந்நேரமும் நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத் திறன் பற்றியுமே பேசவேண்டும் என்கின்றார் மாணிக்கவாசகர்.

ஈசனே முத்தமிழ். முத்தமிழே ஈசன். இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் இந்த மேற்கண்ட பாடலுக்கு உரை கூறிய பெண்மணி ஒரு முக்கியமான அதே சமயம் அதிசயமான விஷயத்தைக் கூறினார். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் போது இதன் மையப் புள்ளி எங்கே இருக்கின்றது எனத் தேடிக் கொண்டே வந்தாராம். கடைசியில் இந்தியாவில் தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து, இந்தியாவுக்கு வந்தாராம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தவர், அது சிதம்பரத்தில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தாராம். சிதம்பரம் கோயிலுக்குள் ஈசன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றார் அல்லவா?? அந்த ஊன்றிய காலின் கீழே தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்றும், அது தான் உண்மையான சிதம்பர ரகசியம் எனவும் கூறினார் அந்தப் பெண்மணி.

சிதம்பரத்தில் மூலவரும் ஒருவரே, உற்சவரும் ஒருவரே. மூலஸ்தானத்தில் சதா ஓயாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனே உற்சவ காலங்களில் வெளியே வருகின்றார். அதற்குக் காரணமாய் அவர் கூறியதும் இந்த மையப் புள்ளி விஷயமே. மையப் புள்ளியில் நடனம் ஆடிக் கொண்டு ஒரு ஈசனும், உற்சவத்துக்கு எனத் தனியாக ஒரு திருமேனியும் இருக்க முடியாது என்பதாலேயே , ஈசன் தன் ஜீவசக்தியோடு அங்கே உறைந்திருப்பதாயும் கூறினார். மேலும் தற்காலத்தில் இயல், இசை, நடனம் என்று நாம் சொல்லுவது போல் முன்காலத்தில் அமையவில்லை என்றும் சொன்னார். நமக்கு இசையும், நாடகம் என்னும் நடனமும் கஷ்டமாய் இருப்பதால் பின்னுக்குத் தள்ளிவிட்டதாயும், ஆதியில் முதல் முதல் மனிதன் சைகைகள் மூலமும், உடல் மொழி மூலமுமே பேசிக் கொண்டிருந்தான், பின்னரே ஒவ்வொரு வார்த்தைகளும் வந்தன. அதை நீட்டி, முழக்கி இசை உருவில் கொண்டு வந்தான், பின்னரே பேச்சு வந்தது. என்றும் கூறினார். ஆனால் இப்போது பெரும்பாலும் பேச்சு மட்டுமே முதன்மை நிலையில் இருப்பதால் பேச்சுத் தமிழான இயல் முதலிடத்தில் வந்துள்ளது எனவும், கஷ்டப்பட்டு கற்கவேண்டிய இசை இரண்டாமிடத்திலும், அதைவிடக் கஷ்டமான நாடகமும், நடனமும் கடைசியாகவும் போய்விட்டது என்றும் கூறினார். இதையே சுருக்கமாய் மாணிக்க வாசகர் இந்தப் பாடலில் “ஆதித் திறம்பாடி, அந்தமா மாபாடி” என்று சொல்லி இருப்பதாயும் கூறினார்.

Friday, December 19, 2008

சிதம்பர ரகசியத்தில் அறிவியல் விஞ்ஞானம்!

அக்னி ஏந்திய மேல் இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில் காணப்படும் இது அழித்தலைக்குறிக்கின்றது. பிரபஞ்சம் தோன்றியபோதே பல நுண் துகள்களும் தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க் கூறுகின்றனர். வலது கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டுகின்றதல்லவா? இது நான் உன்னைக் காக்கின்றேன் என்னும் காத்தல் தொழிலைக் குரிப்பிடுவதோடல்லாமல், பெரு வெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்து விடாமல் காக்கப் பட்டுப் பின்னர் அவை ஒன்றோடொன்ரு சேர்ந்து பெரும் துகள்களாய் மாறி, பின்னர் அவையே கோள்களாயும் உருமாறியதாய்க் கூறுகின்றனர். இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதையும் இந்தக் காக்கும் கரம் கூறுவதாய்ச் சொல்லுகின்றனர்.

இடக்கை யானையின் தும்பிக்கையைப் போல் காணப்படும் இது கஜஹஸ்த முத்திரை காட்டுகின்றது. இறைவனின் இந்த நான்கு திருக்கைகளும் நான்கு திசைகளையும் சுட்டுகின்றன. தீ ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர்? அந்தப் பேரொளியைத் தானே திருவாசியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் திருவாசி பிரகிருதியைக் குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் இறப்பையும், பிறப்பையும் அதிலேயே நாம் உழலும் சம்சார சாகரம் என்னும் பெரும் சக்கரத்தையும் குறிக்கின்றது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவம் இதைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர்.

நடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும், அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே, திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப் படுகின்றது. இறைவனின் பல்வேறுவிதமான கோட்பாடுகளையும் இது காட்டுவதாய்ச் சொல்லப் படுகின்றது. வலச் செவியில் ஆண் அணியும் தோடும், இடச் செவியில் பெண்கள் அணியும் தோடும் காணப்படுவதால் உலகியல் தத்துவத்தில் உள்ள ஆண், பெண் கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாவது நெற்றிக் கண்ணானது ஞானத்தையும், வளர்பிறை, மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் மூலம் காலச் சக்கரத்தையும், நடராஜர் ஆடி, ஆடிச் சுழன்று வருவது ஆக்கலையும், அழித்தலையும் குறிக்கின்றது. சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவேண்டும் என்பதையும் காட்டுகின்றது.

இந்து சாஸ்திரங்களின்படி இந்த அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, அக்னி, மற்றும் ஆகாசம் ஆகியவற்றின் வடிவமாகவே நடராஜத் திருமேனியின் அங்கங்கள் குறிக்கப் படுகின்றன. ஊன்றிய வலப்பாதம் பூமியையும், மேலிருக்கும் இடக்கை அக்னியையும், மெய்ம்மறந்த ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த ஜடாமுடியின் மூலம் காற்றையும், சிரத்தில் உள்ள கங்கை நீரையும், கையிலுள்ள டமரு, ஆகாயத்தையும் குறிக்கின்றது. பஞ்சபூதங்களும் நடராஜத் திருமேனிக்குள் அடக்கம். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ தாண்டவம் ஆகும். இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய கோள்கள் வரை அனைத்துப் பொருட்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன.

கல வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த குமாரசாமி எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்தும் தத்துவமே நடராஜத் திருமேனி என்கின்றார். "Tao of Physics"என்னும் நில்லாசிரியர் ஆன இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப் காப்ரா என்பவர் நவீன இயற்பியலுக்கும், கிழக்கத்திய ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாய்க் கூறுகின்றார். 1975-ம் ஆண்டு வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பதிப்பிக்கப் பட்டு விற்பனையாவதோடு அல்லாமல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது.

காப்ரா அவர்கள்" நவீன இயற்பியலின்படி ஆக்கல், அழித்தலின் தாளம், -Rhythm என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம், பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர்பொருள் சார்பில்லாத மூலக் கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித் தாண்டவத்தின் ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது. நவீன இயற்பியல் அறிஞர்கலுக்கு சிவ தாண்டவன் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ, இந்தத் தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும் ஒரு பகுதியாகக் கருதப் படும் ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்கலுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம். பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய் உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ, அதி நவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம், மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது."

அமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர் காரல் சேகன் "பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள் சிலையாக வடித்தனர்" என்கின்றார். quantum physics and the Dance of Nataraja என்ற கட்டுரையில் ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத் தத்துவத்தைப் பாராட்டி எழுதி இருக்கின்றார். சுவாமி விவேகானந்தர் "எண்ணற்ற பெருமைகளையும், வானம் போல் தெளிவையும், அனைத்திற்கும் தலைவனான, தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும்" என்று பிரார்த்திக்கின்றார்.

பிரம்மா படைப்பார், விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும் செய்வார். ருத்ரரோ அழித்தலுக்கான கடவுளாய் இருந்தாலும் படைத்தலும், காத்தலும் செய்வார். மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார் ஆனலும், அவரும் படைத்தல், காத்தல் அழித்தலையும் மேற்கொள்கின்றார். சதாசிவர் மட்டுமே உலக பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர். சதாசிவர் நடராஜ வடிவத்தில் பஞ்சகிருதி எனப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றார். இந்த ஐந்தொழில்களுமே நடராஜர் வடிவில் அமைக்கப் பட்டிருக்கின்றது நாம் உணருகின்றோம் என ஸ்வாமி விபுலானந்தர் "நடராஜ வடிவம்" என்ற நூலில் எழுதி இருக்கின்றார்.

நடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம். நடராஜ தத்துவதை விட மர்மமாக இன்று நடராஜர் படம் போட முடியாமல் ரொம்பவே சிரமமாகப் போய்விட்டது. பல நடராஜ வடிவங்களையும் ப்ளாகர் ஏத்துக்காமல் இந்த வடிவத்தையும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது.

நடராஜர் திருவடிகளே போற்றி!

Thursday, December 18, 2008

சிதம்பர ர்கசியமும், நவீன விஞ்ஞானமும்

தற்செயலாக ராமகிருஷ்ண விஜயம் புத்தகம் நவம்பர் மாதத்திய இதழ் கிடைத்தது. சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த கடவுள் அணுவிற்கான ஆய்வு என்னும் பிரபஞ்சத் தத்துவத்திற்கான அறிவியல் தத்துவத்திற்கான சோதனை நடத்தப் பட்ட ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிலில் வைக்கப் பட்டிருக்கும் நடராஜர் சிலை பற்றிச் சொல்லி ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் நடராஜரின் தலைமையிலேயே இந்த ஆய்வு நடக்கிறது என்றும் சொல்லலாம். ஜெனிவாவில் உள்ள European Center for Particle Physics Research-CERN, தலைமையகத்தின் முகப்பில் கிட்டத் தட்ட ஆறு அடி உயரம் ஆன நடராஜர் சிலை உள்ளது எனவும். அந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு பொறிக்கப் பட்டுள்ளதாயும் கூறுகின்றனர்.

"எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம் சிவானந்த லஹர், சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி, இந்திய அணுசக்தித் துறை, இந்திய அரசாங்கம்). இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தரவேண்டும்? நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்??

கிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும், அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும், சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது.

பன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப் பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும், மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும், இயங்குவதும், பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.

நடராஜ வடிவின் உட்பொருள்: ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது.

நடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும்போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல்,அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும்போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் , ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.


(இன்னும் தொடரும்)

Wednesday, December 03, 2008

சிதம்பர ர்கசியம். கோயிலின் கட்டடக் கலைகள்.

இந்தக் கோயில் அவ்வப்போது பல்வேறு கட்டடக் கலைகளுக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. இந்தியாவின் கலாசாரத்துக்கும் வரலாற்றுக்கும் இந்தியக் கோயில்களே பெருமளவும் உதவி வந்திருக்கின்றன. முக்கியமாய்த் தென்னிந்தியாவில் உள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களின் கட்டுமானங்கள் வரலாற்றுச் சான்றுகளாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் சிதம்பரம் கோயிலும் பல்வேறு அரசியல் காலத்திலும் அந்த அந்த அரசியல் சூழ்நிலைக்கேற்றக் கட்டிடக் கலையைக் கொண்டு விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.

முதலில் சரித்திரபூர்வமாய்ப் பார்த்தால் சிதம்பரம் கோயில் பல்லவர்கள் காலத்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பனிரண்டாம் நூற்றாண்டு வரையிலும், பாண்டியர்கள் பனிரண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து வந்திருப்பதாய்ச் சரித்திரப் பூர்வத் தகவல்கள் இருக்கின்றன. அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும், அவர்களுக்குப் பின்னர் வந்த நாயக்கர்களும் சிதம்பரம் கோயிலுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்து வந்திருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம்.
கோயிலின் அளவு கிழக்கு, மேற்காய் அளந்தால் குறைவாயும், வடக்கு, தெற்காய் அதிகமாயும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். மற்றக் கோயில்களுக்கும் இதற்கும் உள்ள இந்த வேறுபாட்டினால் இந்தக் கோயில் செவ்வக வடிவில் அமைந்திருப்பதாயும் சொல்லப் படுகின்றது. பொதுவாய்ப் புராணங்களின்படி இந்தக்கோயில் விஸ்வகர்மாவால் கட்டப் பட்டது எனவும், ஈசன் தானே கோயிலின் அமைப்பையும், கோபுரங்களின் அமைப்பையும் வடிவமைத்தான் எனவும் சொல்லப் படுகின்றது. மேலும் பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்ற முனிவர்களும் விஸ்வகர்மாவாலேயே இந்தக் கோயில் கட்டப் பட்டது எனச் சொல்லி இருக்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் நாம் பார்க்கும் கட்டிட அமைப்பு பிற்காலச் சோழர்காலத்தைச் சேர்ந்தவையே என வரலாற்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். கோவிந்தராஜரின் கோயில் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்லுகின்றது.

இரு பெரும் நதிகளுக்கு இடையில் உள்ள வண்டல் மண்ணால் நிறைந்த பூமியில் கட்டப் பட்டிருக்கும் இந்தக் கோயிலுக்குக் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப் பட்டன என்பதை நினைத்து ஆய்வாளர்கள் வியக்கின்றனர். சுற்று வட்டாரம் 40 மைலுக்கு எங்கேயும் மலைகளோ அல்லது கற்கள் கிடைக்கக் கூடிய எந்த விதத் தடயமோ இல்லாத சூழ்நிலையில், சுற்றுச் சுவர்களில் ஆங்காங்கே சிற்பங்கள் செதுக்கப் பட்டும், உள்ளே தளங்கள் கற்கள் பதிக்கப் பட்டும் விளங்குவதோடு, ஒரே கல்லினால் செய்யப் பட்ட ஆயிரம் தூண்களைக் கொண்ட பெரிய ஆயிரக்கால் மண்டபத்தையும் கொண்டிருக்கின்றது. கோயிலின் குளமோ 150 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டு மிகுந்த ஆழத்தோடு பெரிய கற்களால் ஆன நீளப் படிகளையும் கொண்டு விளங்குகின்றது.

Sunday, November 23, 2008

சிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்


சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப் பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760-ம் ஆண்டில் இருந்து 1780-ம் ஆண்டு வரையிலும், கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும், அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753-ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.

1749-ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும், அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும், அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது.இரண்டாம் மைசூர் சண்டையின் போது, கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.

Saturday, November 01, 2008

சிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்ச்சி!

தில்லை அம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் நடராஜர் சர்வதாரி வருடம் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல் அட்சய வருடம் கார்த்திகை மாதம் பதினான்காம் தேதி வரையிலும் அதாவது ஆங்கில வருடம் கி.பி. 1648 டிசம்பர் 24 தேதி முதல், 1686-ம் வருடம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரையிலும், கிட்டத் தட்ட 37 ஆண்டுகள், 10 மாதங்கள், 20 நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றார். மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் பற்பல இடங்களுக்கும் தில்லையாண்டவரை எடுத்துச் சென்றிருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாய் ஒரு இடம் எனச் சொல்ல முடியாமல் முடிந்தவரையில் எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்கே எல்லாம் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று புலனாகின்றது. பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டு குடுமியான் மலையில் 40 மாதங்களும், பின்னர் மதுரையில் சில காலமும் வைக்கப் பட்டிருக்கின்றார். இந்தச் செய்திகள் 46-ம் எண்ணுள்ள செப்பேட்டில் குறிக்கப் பட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது. சாம்போஜி மன்னர் 1684-ம் ஆண்டு ஆரம்பித்து, 1686-ம் வருடம் வரையிலும் தில்லைக் கோயிலில் திருப்பணிகள் செய்து வந்ததாயும் தெரிய வருகின்றது. மேலும் அந்தக் கால கட்டத்தில் அம்பலவாணனுக்கு "ஊருடைய முதலியார்" என்ற பெயரும் வழங்கப் பட்டிருக்கின்றது.

"மருவிய சகாத்தமாயிரமும் ஐநூற்றெழுப
துக்கு மேல் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதியின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்
தில்லைமா னகர் வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே!"

இதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696-ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன்பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்துச் செல்லப் பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்குத் திரும்பும்போது திருவாரூரிலேயே தங்கிவிட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது.

அடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டுமின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில்விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது.

எல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ்ப் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால், திருவெம்பாவையும் ஓதப் படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப் படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்கின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர்.

தற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும், சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப் பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும், ராகமும் அமையாவிட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும், அன்பும், தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு காலபூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது.மேலும் பாலபிஷேகம் செய்யும்போது பெரிய அண்டாக்களில் நிரப்பி வைத்து அபிஷேகம் செய்யப் படும் பாலை உள்ளூர் பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு பாத்திரங்கள் கொண்டுவந்து அங்கே உள்ள தீட்சிதர்களிடம் கொடுத்து அந்தப் பாலை அபிஷேகம் செய்யும்போதே நிரப்பித் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அநேகமாய் ஒரு லிட்டர் பாலுக்குக் குறையாமல் ஒருவருக்குக் கிடைக்கின்றது. அதே போல் இறைவனின் அபிஷேகத்துக்குப் பாலைக் கொண்டு வந்து கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தச் சமயம் எந்த தீட்சிதர் வழிபாடுகள் நடத்த வேண்டிய முறையில் இருக்கின்றாரோ அவரைத் தவிர மற்றவர்கள் செய்வதில்லை. மற்றவர்கள் அவருக்கு உதவியாக அபிஷேகப் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதிலும், பொதுமக்களுக்குப் பிரசாத விநியோகங்கள் செய்வதிலும், ஈடுபடுவதோடு ருத்ரம், சமகம் போன்ற வேத கோஷங்களையும், ஓதுவார்களோடு சேர்ந்து அவர்களும் தேவார, திருவாசகப் பண்களை இசைப்பதிலும் ஈடுபடுகின்றனர். இறைவனைச் சிந்தையில் நிறுத்துவது தவிர வேறொன்று இருக்கக் கூடாது என்பதால் அந்த நேரம் இவை சொல்லப் படுகின்றன.கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர்(தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்றவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்துக் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது முன்னும், பின்னும் அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும்போது கூட்டம் பித்துப் பிடித்தாற்போல் "தென்னாடுடைய சிவனே போற்றி!" "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" நடராஜா! திருச்சிற்றம்பலம்!" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புகின்றனர். இங்கே இவை எல்லாம் முடிந்த பின்னரே மூலஸ்தானத்தில் நடராஜருக்கு கற்பூர தீபாராதனை காட்டப் படுகின்றது. நடராஜருக்குச் செய்யப் படும் அர்ச்சனைகளின்போது சொல்லப் படும் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் மற்றும் மந்திரபுஷ்பங்கள் என்று சொல்லப் படுபவை தவிர வேறு எந்தவிதமான ஸ்தோத்திரங்களோ, பாடல்களோ, வேத கோஷங்களோ மூலஸ்தானத்தில் சொல்லுவதில்லை என்பதை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.

Saturday, October 25, 2008

சிதம்பர ரகசியம்- சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன.

தில்லைக் கூத்தனை ஹைதர் அலி காலத்தில் மறைத்து வைத்த இடம் பற்றிப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அனைத்துமே செவி வழிச் செய்திகள் ஆகவே காணப்படுகின்றன. புளியந்தோப்புப் பொந்தில் கூத்தனை ஒளித்து வைத்த இடம் சோழமண்டலத்தைச் சார்ந்த புளியங்குடி என்னும் சிற்றூர் என உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி 2-ம் பகுதி சொல்லுவதாய்த் தெரியவருகின்றது. ஆனால் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகரின் "சிதம்பரம்" என்னும் நூலிலோ மலைநாட்டில் ஒளித்து வைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆனால் பாண்டியநாடு மட்டும் சும்மா இருக்குமா என்ன? தங்கள் பங்குக்கு அவங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமம் தான் அந்த ஊர் என்றும் கூத்தன் ஒளிந்திருந்த இடம் இதுவே என்றும் அதற்குச் சான்றாக ராஜபாளையம் கடைவீதியை "அம்பலப் புளி பஜார்" என அழைப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்தப் பல்வேறுவிதமான தகவல்களும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கின்றன. அது கூத்தன் தன்னிருப்பிடத்தை விட்டு மறைந்து இருந்தார் என்பதே!

ஆனால் மராட்டியர் செப்பேடுகளோ இதைப் பற்றிய தெளிவான குறிப்புகளைக் கொடுக்கின்றன. திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் படும் இவை எழுதிய காலம் சாம்போஜி மன்னன் காலம் ஆகும். மூன்று செப்பேடுகளிலும், வடமொழியிலும், தமிழிலும் எழுதப் பட்டிருக்கின்றது. செப்பேடுகள் எழுதப் பட்ட காலந்தொட்டே வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதப் பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இதுவும் அதைப் பின்பற்றியே எழுதப் பட்டிருக்கலாம். ஒரு செப்பேடு மட்டும் முழுதும் வடமொழியில் எழுதியிருக்கின்றது என்று சொல்கின்றார். செப்பேட்டின் ஒரு பகுதியில் வடமொழியும், மற்றொரு பகுதியில் தமிழிலும் எழுதி இருக்கின்றது.

கி.பி. 1684- எழுதப் பட்ட இந்தச் செப்பேட்டில் கூத்தனின் பெருமையைக் குறித்தும், மன்னனின் குருவான முத்தைய தீட்சிதரால் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்யப் பட்ட விபரமும் காணக் கிடைக்கின்றது. இந்தச் செப்பேட்டை அளித்ததோ சேரநாட்டுச் சிற்பி எனவும் தெரிய வருகின்றதாம். இதில் வடமொழிப் பகுதியில் காணப் படும் சில சொற்களால் கூத்தன் மறைந்திருந்த இடம் சேரநாடு எனவும் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. எவ்வாறிருந்தாலும் கூத்தபிரான் சில காலம் தலைமறைவாய் இருக்க வேண்டி இருந்தது என்பது தெளிவு. மேற்கூறிய செப்பேட்டில் கண்டிருக்கும் பாடல் பின்வருமாறு உள்ளதாய்த் தெரிவிக்கின்றார்.

"இயல்வாம சகாத்தம் ஆயிரமோடறு நூற்றாறின்
இனிய ரத்தாட்சி வருடம்
இலகு கார்த்திகை மாதம் இருபத்திரண்டாந்
தேதி சுக்கிரவாரமும்
செயமான தசமியும் அத்த நட்சேத்திரமும்
திகழ்கும்ப லெக்கினமுமே
திருந்துபவ கரணமும் ஆயிஷ்யமான யோகமும்
தினமும் வந்தே சிறப்ப

உயர் ஆகமப் படியின் ஆனந்த நடராசர்
ஒளிபெற நிருத்தமிடவே
ஓங்கு சிற்சபைதனைச் செம்பினால் மேய்ந்திடும்
உண்மையை யுரைக்க வெளிதோ
வயலாரும் வாவிசூழ் புலிசையழகிய திருச்
சிற்றம்பலத் தவமுனி
வையகம் துதி செயக் கும்ப அபிஷேகமும்
மகிழுற முடித்த நாளே"
இந்தப் பாடலின் படி சாலிவாகன சகாப்தம் 1606-ம் ஆண்டு, கி.பி. 1684-ம் ஆண்டு, தமிழ் ரத்தாட்சி வருடம், கார்த்திகை மாதம், இருபத்திரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதியும் ஹஸ்த நட்சத்திரமும் கும்ப லக்கினமும் சேர்ந்த சுபதினத்தில் தில்லையாண்டவர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்த்திய செய்தி செப்புத் தகட்டில் குறிக்கப் பட்டது எனச் சொல்லப் பட்டுள்ளது. மேலும் வடமொழிப் பகுதியில், கேரள தேசத்தில் மலைகளுக்கருகில் உள்ளவரும், மரங்களின் நிழலில் இருப்பவரும், மக்களின் அரசரும், ஆடுபவரும், அருந்தும் குடிநீருக்கருகில் இருப்பவரும் அம்பலம் என்ற சொல்லின் இலக்கணமாய் அமைந்தவரும் ஆன சிவபெருமானுக்குக் கேரளத்தைச் சேர்ந்த சிற்பி கொடுத்த செப்பேடு இது என்று சொல்லப் பட்டிருப்பதாய்த் தெரிவிக்கின்றார்.

இந்த மேற்கண்ட தகவல்களின் படி தில்லைக் கூத்தனைக் கேரளத்தில் சிலகாலம் மலைகளுக்கிடையே மர நிழலில் மறைத்து வைக்கப் பட்டிருக்கவேண்டும் எனவும், தில்லையில் வாழ்ந்து வந்த திருச்சிற்றம்பல முனிவர் என்பவரின் பெரு முயற்சியால் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடத்தப் பட்டிருக்கின்றது என்பதும் புலனாகின்றது. "சிற்சபையினைச் செம்பினால் மேய்ந்திடும் உண்மையினை" என்பதில் இருந்து பொன்னோடுகள் ஒருவேளை அகற்றப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்.
இதனை அடுத்து வந்த ஒரு செப்பேடும் உறுதி செய்வதாய் அவர் சொல்லுவதாவது:
சர்வதாரி ஆண்டு மார்கழி மாதம் வெளியே சென்ற நடராஜருக்கு சாம்போஜி மன்னனின் ஆணையின் பேரில் கோபால் தாதாஜி என்பவர் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியதாகவும் இரத்தாட்சி ஆண்டு கார்த்திகையில் இருந்து ஆடவல்லான் தன் நடனத்தைப் பொன்னம்பலத்தில் தொடர்ந்ததாயும் சொல்லுகின்றார். விபவ ஆண்டு தை மாதம் 27-ம் நாள் வியாழக்கிழமை பெளர்ணமி திதியில், இந்தக் கனகசபை மீண்டும் முழுக்க முழுக்கப் பொன்னால் வேயப் பெற்றுப் புதுப் பொலிவோடு குடமுழுக்கு நடத்தப் பெற்றதாயும் கூறுகின்றார். இது பற்றிய மேலதிக விளக்கங்கள் நாளை காண்போம்.

Friday, September 26, 2008

சிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றன!

சிவகாமி அம்மனின் சன்னதிக்கு நேரே பாண்டிய நாயகர் கோயிலுக்குக் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கே ஒன்பது சிவலிங்கங்கள் எழுந்தருளி யுள்ள நவலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் திருத்தொண்டத்தொகையில் சுந்தரர் பாடியுள்ள 63 நாயன்மார்கள் தவிர, ஒன்பது தொகையடியார்களும் இருக்கின்றனர். இந்தத் தொகையடியார்களைக் குறித்து, அவர்களைப் போற்றும் விதத்திலேயே இந்தக் கோயில் ஒன்பது சிவலிங்கங்களும் எழுப்பப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. கல்வெட்டுக்களில் திருத்தொண்டத்தொகையீஸ்வரம் என இது குறிக்கப் பட்டிருப்பதாயும் தெரிய வருகின்றது. இப்போது சமீபத்தில் சென்ற போதும், அதற்கு முன்னால் ஜூலை மாதம் சென்ற போதுமே இந்தக் கோயிலைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையில் முடியவில்லை.

மேலும் சில சரித்திரத் தகவல்கள் வெள்ளை வாரணனார் கொடுத்தவற்றில் இருந்து மேற்கோள் காட்டுகின்றேன். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரத்து அரசர்கள், நாயக்க வம்சத்தவர் தவிர திருப்பணி செய்தவர்களில் மராட்டிய மன்னர்களும் இடம் பெறுகின்றனர் என்று இவர் தெரிவிக்கின்றார். சத்ரபதி சிவாஜியின் முதல் மகன் ஆன சாம்போஜி என்பவர் காலத்தில் தில்லை நடராஜர், சிதம்பரத்தை விட்டு வெளியே சென்று மறைத்து வைக்கப் பட்டிருந்தவர் வெளியே வந்ததாயும், இவர் காலத்திலேயே சிற்றம்பலத்திற்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடைபெற்றதாயும் தெரிவிக்கின்றார். இவரின் அதிகாரியான கோபால்தாதாஜி என்பவர் இவருக்காக இந்தப் பணிகளை நிறைவேற்றித் தந்ததாயும் அரசரின் குருவான முத்தையா தீட்சிதர் குடமுழுக்கை முன்னின்று நடத்தி வைத்ததாயும் சொல்லுகின்றார். இவரின் இந்தத் திருப்பணிகள் பற்றிய குறிப்புகள் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட, “தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50” என்னும் நூலில் சொல்லி இருப்பதாயும் சொல்லுகின்றார். அந்தக் குறிப்புகள் திருவாரூர்ச் செப்பேடுகளில் இருந்து எடுக்கப் பட்டதாயும், ஆரம்பத்தில் தில்லையிலே இருந்த இந்தச் செப்பேடுகள், நடராஜர் மறைந்து வாழச் சென்றபோது அவருடன் திருவாரூருக்கு எடுத்துச் செல்லப் பட்டு, காலப்போக்கில் திருவாரூர்ச் செப்பேடுகள் என அழைக்கப் பட்டிருப்பதாயும் இவர் கூறுகின்றார். நடராஜர் மறைத்து வைக்கப் பட்ட வரலாறு பற்றிச் சில குறிப்புக்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் சமகாலத் திருப்பணிகள் பற்றியும் பார்த்துவிட்டு இதை முடிக்கலாம் என எண்ணம்.

மகமதியர் படை எடுப்பின் போது தென்னாட்டிற்கு வந்த ஒளரங்கசீபின் படைகள் செஞ்சியில் தங்கி இருந்ததாயும், அப்போது நடராஜருக்கும் கோயிலுக்கும் ஆபத்து நேருமோ என எண்ணிய தில்லை தீட்சிதர்கள் நடராஜரை இடம் பெயர்த்துத் திருவாரூருக்கு எடுத்துச் சென்றதாய் ஒரு குறிப்பும், ஹைதர் அலி காலத்திலும், ஒரு முறை நடராஜர் இடம் பெயர்ந்ததாயும் சொல்லுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுக்களில் இருப்பதாயும் கூறுகின்றார்.

இது தவிர, மராட்டிய மன்னன் சாம்பாஜி காலத்துச் செப்பேடுகளிலும் இந்த விஷயம் வடமொழி, தமிழ் இரண்டிலும் பொறிக்கப் பட்டிருப்பதாயும் கூறுகின்றார். அவை பற்றிய விபரங்கள் நாளை!

Thursday, September 11, 2008

சிதம்பர ரகசியம்- சில தகவல்கள்

சீக்கிரம் முடிக்கணும்னு நினைச்சாலும், சில பல தகவல்களுக்குக் காத்திருப்பதால் நேரமும் ஆகி விடுகிறது. அநேகமாய் இன்னொரு பயணம் சிதம்பரம் போனால்தான் சரியா இருக்குமோ என்னமோ?? இப்போ அடுத்துப் பார்க்கலாம்:

பொதுவாக சிவன் கோயில்களில் விஷ்ணு ஒரு பரிவாரதேவதையாகவோ அல்லது தனி சன்னதியிலோ குடி இருப்பார். ஆனால் விஷ்ணு கோயில்களில் அப்படி சிவன் இருப்பதில்லை. ஒரு சில கோயில்கள் தவிர, அதில் திருமலையிலும், கடல்மல்லையிலும் சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து இருந்ததாய்த் தெரிய வருகின்றது. சில ஆழ்வார்களின் பாடல்களின் மூலமும் சிவ, விஷ்ணு சன்னதிகள் ஒரே கோயிலில் இருந்து வந்திருப்பதை அறிய முடிகின்றது. அத்தகைய கோயில்கள் மிகப் பழமையானவை என்றும், அத்தகைய பழமையான கோயில்களில் சிதம்பரமும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. இதன் மூலம் மூலப் பரம்பொருள் ஒன்றுதான் என்றும், அந்த மூலப்பரம்பொருளிடம் இருந்தே சிவனும், விஷ்ணுவும் தனியாகத் தோற்றுவிக்கப் பட்டு, இறை அன்பர்களால் வணங்கப் படுகின்றனர் என்பதும் புலனாகின்றது.

புராணங்களில் தான் கடவுளர்களின் பல்வேறு வடிவங்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அதன் முன்னால் பிரம்மம் என்ற ஒரே தத்துவமே இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. அந்த ஒரே சக்தியை பரமேஸ்வரன் என்று எடுத்துக் கொண்டால் அவரால் தோற்றுவிக்கப் பட்டவர்களே மும்மூர்த்திகள் என்று சொல்லப் படும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர். இவர்கள் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வருகின்றனர் என்பதும் முறையே முக்குணங்களின் சொரூபம் என்றும் (சத்வம், ரஜஸம், தமஸம்) சொல்லப் படுகின்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மூவருக்குள் வேற்றுமையோ அல்லது ஒருவர் உயர்ந்தவர் மற்ற இருவர் தாழ்ந்தவர் என்றோ இல்லை எனினும் அந்த அந்தப் புராணங்களுக்கு ஏற்ப விஷ்ணு சில இடங்களில் உயர்ந்தவராயும், சிவன் சில இடங்களில் பிரம்மனையும், விஷ்ணுவையும் விட உயர்ந்தவராயும், இருந்து வந்திருக்கின்றனர். பிரம்மாவும் உயர்ந்தவராய் வெகு சில சமயங்களில் இருந்து வந்திருப்பதாயும், அவரின் வழிபாடு அவருக்கு ஏற்பட்ட சாபம் காரணமாய் நிறுத்தப் பட்டது என்றும் புராணங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

சிதம்பரம் கோயில் அத்தகைய சிவ, விஷ்ணு சேர்ந்து இருந்து வழிபடும் முறைக்கு ஒரு முக்கிய சான்று ஆகும். நடராஜர் எங்கே இருந்து ஆடுகின்றாரோ அதைத் தினமும் பார்க்கும் வண்ணம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் கோவிந்தராஜரின் சன்னதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரே சமயத்தில் தில்லை கோவிந்தராஜரின் தரிசனமும், தில்லை நடராஜரின் தரிசனமும் கிடைக்கும் வண்ணம் கோயிலின் சன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளன. மாணிக்க வாசகர் தம் திருக்கோவையாரில்,
புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.
என்று சிவனின் அடி, முடி கண்டதைக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றார். மேலும் சிவ புராணத்திலும், பத்ம புராணத்திலும் சிவனும், விஷ்ணுவும் ஒருவரே என்றும் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இருவரும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத சக்திகள் என்றும் குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியம் வேரூன்றப் பட்ட சமயங்களுக்குப் பின்னரே தனித்தனியாய்ப் பிரிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. ஆகவே அதற்கு ஏற்ப பின்னர் வந்த அரசர்களும் ஒரு சமயம் தீவிர சைவர்களாயும், ஒரு சமயம் தீவிர வைஷ்ணவர்களாயும் மாறி, மாறி இருந்து வந்திருக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு அரசர்களும் ஒவ்வொரு வகையில் சிதம்பரம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை மறுக்கவே முடியாது.மேலும் பொய்கையாழ்வார்(???) தம் முதலாம்/மூன்றாம் திருவந்தாதி(???)யில், கீழ்க்கண்டவாறு ஹரியோடு ஹரனையும் கண்டதாயும் சொல்லுகின்றார்.
"தாழ் சடையும், நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னானுந்தோன்று மால் - சூழத்
திரண்டருவி பாயுந் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து!"

Friday, August 29, 2008

நடராஜரும், தியாகராஜரும் - சில விளக்கங்கள்!

தில்லை நடராஜர் ஆடியது ஆனந்தக் கூத்து என்றால் திருவாரூர் தியாகராஜர் ஆடியதோ, தாளத்தை மறைத்துச் சொல்லப் பட்ட அஜபா நடனம். ஆனால் இருவருக்குமே ஆதிரைத் திருநாளே விசேஷ நாளாகச் சொல்லப் படுகின்றது. திருவாதிரைத் திருநாளில் இருவரின் தேர் உலா மிக மிகப் பிரசித்தி பெற்றது. நடராஜரும், தியாகராஜரும் தேரில் மட்டுமே உலா வருவார்கள். அதன் பின்னர் பெரிய அளவிலான அபிஷேகங்கள் இருவருக்கும் நடைபெறும். ஆண்டுக்கு ஆறு முறைகள் மட்டுமே இருவருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. தில்லையில் ரகசியம் என்று சொல்லப் படும் சிதம்பர ரகசியம் காண 96 கண்கள் உள்ள சாளரம் மூலமே பார்க்க வேண்டும். ஆனால் திருவாரூரிலோ, அப்பனின் திருமேனியே ரகசியம். இது சோமகுல ரகசியம் என்று சொல்லப் படும்.தில்லை அம்பலத்தைப் பொன்னம்பலம் என்று சொன்னால், திருவாரூரை பூவம்பலம் என்று சொல்லுவார்கள். தில்லையில் நம சிவாய ஓதப் பட்டால் திருவாரூரில் தியாகேசா, ஆரூரா என்றே சொல்லுவார்கள். இருவருக்குமே செங்கழுநீர் மாலை விசேஷமாய்ச் சொல்லப் படுகின்றது. இரு கோயில்களும் ஆயிரங்கால் மண்டபம் கொண்டது. தில்லைக் கோயிலை ஆகாச ரூபமாய்ப் பார்த்தால், திருவாரூரோ, பூமி வடிவாய்ப் பார்க்கப் படுகின்றது. ஈசன் இரு இடங்களிலுமே விண்ணாகி, மண்ணாகி, எல்லாமாய்த் தான் இருப்பதைத் தெரிவிக்கின்றான். இந்த இரு கோயில்களிலும் இருந்த பழைய மூலஸ்தான லிங்கத் திருமேனி, மூலட்டானேஸ்வரர் என்றே அழைக்கப் படுகின்றது. தில்லைக் கூத்தனின் பாத தரிசனமும் விசேஷம், அதே போல் திருவாரூர் தியாகராஜாவின் பாத தரிசனமும் விசேஷம். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருமே இந்த இரு இடங்களிலுமே பாத தரிசனம் கண்டதாய்ச் சொல்லப் படுகின்றது. தில்லையிலே அதிர வீசி ஆடிய இடப் பாதத்தைக் கண்டால், திருவாரூரில் இருந்து ஆடிய கூத்தைக் கண்டனர். இன்று நாமும் காண முடிகின்றது. திருவாரூரில் கமலாம்பிகையும், நீலோற்பலாம்பிகையும் தேவியர். தில்லையிலே சிவகாமி அம்மையும், மூலட்டான நாயகியும் தேவியர்.

நடராஜர் சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று துவங்கும் அடியை எடுத்துக் கொடுத்துப் பெரிய புராணத்தைப் பாடச் சொல்லும் முன்னரே திருவாரூரில் சுந்தரருக்கு, "தில்லை" என்று அடி எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இப்படி விண் தத்துவத்தையும், மண் தத்துவத்தையும் அடியார்கள் மூலம் இருவருமே பாமர மக்களுக்கு உணர்த்துகின்றனர்.

Tuesday, August 26, 2008

சிதம்பர ரகசியம் - திருக்குறிப்புத் தொண்டர் தொடர்ச்சி!

குளிர் தாங்காமல் நடுங்கிக் கொண்டிருந்த அடியார், திருக்குறிப்புத் தொண்டர் தன் துணியைத் துவைத்துத் தருவதாய்ச் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்துவிட்டு, மேலும் சொல்லுவார்" ஆஹா, இந்த ஒரு கந்தல் தான் என்னிடம் மீதி உள்ளது. இதையும் தங்களிடம் கொடுத்துவிட்டு நான் செய்வது என்னவோ??? ஏற்கெனவே குளிர் தாங்க மாட்டாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றேனே!" என்று சொல்கின்றார். மன வேதனை திருக்குறிப்புத் தொண்டர் முகத்தில் தெரிய, தன் பக்தன் மனம் வாடுவது பொறுக்காத அந்த கைலைவாசன், சற்று நேரம் சிந்திப்பது போல் பாவனை செய்துவிட்டுப் பின்னர், மாலைக்குள் துணியைத் துவைத்துச் சுத்தமாய் உலர்த்தித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் துணியைக் கொடுக்கின்றார். அப்படியே ஒத்துக் கொண்டு திருக்குறிப்புத் தொண்டர் துணியைப் பெற்றுக் கொள்கின்றார்.

குளிர் தன்னால் பொறுக்க முடியாது என்று அந்தக் கூத்தன் சொன்னதைக் கேட்டுக் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், நீர்த்துறைக்கு வந்து துணியைத் துவைக்கத் தொடங்கினார். ஆரம்பம் ஆயிற்று ஈசனின் திருவிளையாடல். வருணனுக்குக் கட்டளை இட, திடீரென சூரிய ஒளியால் பிரகாசமாய் இருந்த வானம் கார்மேகங்களால் மூடிக் கொண்டது. கும்மிருட்டு சூழ்ந்தது அந்தப் பகல் வேளையிலேயே. தொண்டரின் மனமும் இருள் சூழ்ந்து கலங்கியது. எவ்வாறு துவைப்பது? எங்கே காய வைப்பது??? கலங்கும் வேளையிலேயே திடீரெனக் காற்று, இடி, மின்னல், பெருமழை! பேய்க் காற்று என்பது இதுதானோ??? ஊழிப் பெரும் மழையோ?? அண்டசராசரமும் குலுங்கும் வண்ணம் இடி இடிக்க, மின்னல் கண்ணைப் பறித்தது. மழையோ நிற்கக் காணோமே?? என்ன செய்வது? கலங்கினார் தொண்டர்.

ஆஹா, தவறு செய்துவிட்டோமே?? ஏற்கெனவே உடல் இளைத்து, மெலிந்து இருந்தாரே சிவனடியார்? இருந்த ஒரே மேல் துணியையும் வாங்கிக் கொண்டு துவைத்துக் காய வைக்க முடியாமல் இப்படி மழை பெய்கின்றதே? மழை ஆரம்பிக்கும்போதே வீட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவேளை இந்தக் காற்றிலே ஓரளவாவது உலர்ந்திருக்குமோ?? தவறு செய்துவிட்டோமோ? அடியாருக்கு, சிவனடியாருக்குத் துரோகம் புரிந்த நம் உயிர் உடலில் தங்கலாமா? இதோ உயிரைப் போக்கிக் கொள்ளலாம். என்று எண்ணிய வண்ணம் துவைக்கும் கல்லிலே தன் தலையைத் தானே மோதிக் கொள்ளத் துவங்கினார்.
125. கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை 1202-4

126. வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் 1203-4

127. முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் 1204-4
அப்போது ஈசன் தன் பக்தனைச் சோதிக்க விரும்பாமல், அந்தப் பாறையினின்றும் தன் மலர்க்கையை நீட்டி அவரது சிரத்தைத் தாங்கிக் காக்க, நிமிர்ந்த திருக்குறிப்புத் தொண்டரின் கண்களிலே ரிஷபவாகனன் காட்சி கொடுக்கின்றான்.

மேலும் இந்த வண்ணார் மடம் பற்றிய தகவல்களை மீண்டும் சிதம்பரம் செல்லும்போது அறிந்து வரவேண்டும்.

Friday, August 15, 2008

சிதம்பர ரகசியம்- புதிய செய்திகள்

நேற்று தினமலர் பத்திரிகையில் திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செய்த சிதம்பரம் கோயிலின் ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியது. அநேகமாய் அனைவரும் படித்திருக்கலாம். எனக்கு அந்த விஷயம் புதியது. ஆகவே பகிர்ந்து கொள்கின்றேன்.
*************************************************************************************
சிதம்பரம் கோயில் பற்றியும், அதைச் சுற்றி நகரில் உள்ள கோயிலைச் சார்ந்த பல்வேறு மடங்கள் பற்றியும் பல்வேறு விதமான சாசனங்கள் இன்னமும் தேடிக் கண்டு பிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் சிலவற்றின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை வைத்தே போன மூன்று பதிவுகள் வந்தன. இப்போது கிடைத்திருப்பது சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற "வண்ணார் மடம்" பற்றிய செப்பேடுகள். இவை இரண்டு செப்பேடுகளாய்க் கிடைத்திருக்கின்றது. மேலும் விஜயநகர அரசர் கால்த்தில் ஏற்படுத்தப் பட்டதாயும் தெரியவருகின்றது. மூன்று ஏடுகளைக் கொண்ட முதல் செப்பேடும், ஒரே ஏட்டுடன் கூடிய இரண்டாவது செப்பேடும் ஒரே காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிய வருகின்றது. இவற்றில் சிவலிங்கம், நந்தி, சூலம், சூரிய, சந்திரர், வீரமணவாளர் தேவியருடன், எல்லாவற்றுக்கும் மேல் துணி வெளுக்கும் கல் போன்றவை சிற்பங்களாய்ச் செதுக்கப் பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது.

விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் வண்ணார் மடம் புதுப்பிக்கப் பட்ட செய்தியும் இவற்றில் கிடைத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. வண்ணார் தோன்றிய விதமும், அதாவது அதற்கான புராண வரலாறும் இதில் சொல்லப் பட்டிருக்கின்றது. அது பின்வருமாறு:
*************************************************************************************

ஈசனின் மாமனார் ஆன தட்சன் ஈசனை அழைக்காமல் யாகம் செய்ய, அவனையும், அவனுக்கு உதவியாக யாகத்தில் தொண்டாற்றிய தேவர்கள் மற்றும் தேவிகளை அழிக்கவும் ஈசனால் தோற்றுவிக்கப் பட்டவர் ஈசனின் அம்சம் ஆன வீரபத்திரர்.
தேவியரை அழிக்கவேண்டி அன்னையால் தோற்றுவிக்கப் பட்டவளே காளி ஆவாள்.
இருவரும் அவ்வாறே தேவ, தேவிகளை அழித்தனர். இருவரும் அழித்த தேவ, தேவியர் பின்னர் இறைவனாலும், இறைவியாலும் உலக க்ஷேமத்தைக் கருதி மீண்டும் உயிர்ப்பிக்க, வீரபத்திரராலும், காளியாலும் ஏற்பட்ட காயங்களின் குருதி அவர்கள் மீது அழியாமல் இருந்தது. அந்தக் குருதி நீங்க வேண்டி ஈசன் வருணனை மழை பொழியும்படி ஆணை இட வருணனும் அவ்வாறே மழையாகப் பொழிகின்றான். எனினும் குருதிக் கறை ஆடைகளில் தங்கிவிட்டது. ஆகவே அந்தக் கறை நீங்கவேண்டி வீரபத்திரருக்கு ஈசன் ஆணை இட, அவர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப் பட்டார். அவருக்கு வீரன் என்னும் பெயர் சூட்டப் பட்டு தேவ, தேவியரின் ஆடைகளை வெளுக்க அவர் அனுப்பி வைக்கப் படுகின்றார். அந்த வீரபத்திரர் வழியிலும், வீரன் வழியிலும் வந்தவர்களே வண்ணார் எனப் பட்டனர். அவர்கள் பூமியில் வந்து அதே தொழிலைச் செய்தனர். இந்த மரபில் வந்த ஒருவரே திருக்குறிப்புத் தொண்டர் ஆவார்.

திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய கதை அநேகமாய் அனைவரும் அறிந்திருக்கலாம். சிவனடியார் ஒருவரின் துணி ஏதாவது ஒன்றையாவது அன்றாடம் துவைத்துக் கொடுத்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து, உணவு ஊட்டியுமே தன் உணவை உண்ணும் வழக்கம் திருக்குறிப்புத் தொண்டருக்கு. சிவனடியார்களின் துணியின் மாசு நீங்கினால் தன் பிறவிப் பிணியின் மாசு நீங்கும் என்ற எண்ணம் கொண்ட திருக்குறிப்புத் தொண்டர் முன் ஒரு குளிர் காலத்தில் நடுங்கிக் கொண்டே ஒரு சிவனடியார் தோன்றினார். நல்ல குளிர் காலத்தில் நடுக்கும் குளிரில் மெலிந்த உடலும், அழுக்கான, கந்தலான வஸ்திரமும் கொண்டு, தூய வெண்ணீறணிந்து தன் முன் தோன்றிய சிவனடியாரைப் பணிந்து வணங்கினார் திருக்குறிப்புத் தொண்டர்.

அடியாரிடம் திருக்குறிப்புத் தொண்டர் வினவுகின்றார். "ஐயா, தங்கள் திருமேனி இவ்வளவு இளைத்திருப்பதன் காரணம் என்னவோ?" என. ஆனால் வந்தவர் குறுநகை புரிய எதுவும் புரியாத திருக்குறிப்புத் தொண்டர், "ஐயா, தாங்கள் வந்தது என் பாக்கியமே. அடியாரின் ஆடையைத் தோய்த்துச் சுத்தம் செய்து தருவதை நாம் அடியாருக்குச் செய்யும் தொண்டாகக் கருதிச் செய்து வருகின்றோம். ஈசன் எனக்கிட்ட கட்டளை அதுவே எனவும் அறிந்தேன். தாங்கள் தங்கள் ஆடையை என்னிடம் தந்தால், தங்கள் வெண்ணீறு போல் தூய்மையாகத் துவைத்துத் தருவேன்." என்று சொல்லுகின்றார். அடியார் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வந்தவர் யார்?? சாமானியம் ஆனவரா?? இல்லை அல்லவா? சாட்சாத் அந்தக் கைலை வாசனே அல்லவா வந்திருக்கின்றான். அவன் ஆடாத ஆட்டமா?? போடாத வேஷமா?? நடிக்காத நாடகமா?? ஆடல்கலையில் வல்லவன் அல்லவா?? ஆட்டுவிப்பவனும் அவனே, ஆடுபவனும் அவனே அல்லவா??

Saturday, August 02, 2008

சிதம்பர ரகசியம் - தொடர்ச்சி- சரித்திரத் தகவல்கள்

நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும், அதன் பின்னரே 1597-ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப் பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643-ல் 3-ம் ஸ்ரீரங்கராயன், என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி, அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப் பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும், அதனால் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும், ஏற்பட்ட பகைமை முற்றிப் போய், அது வெகு காலம் நீடிக்கக் கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன்படி, இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், பெருமாளுக்கு எனத் தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப் படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு, வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது.

ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862-ல் வைணவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப் படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள்.

டிஸ்கி: இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய "தில்லைப் பெருங்கோயில் வரலாறு" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். நன்றி.
*************************************************************************************


மேற்கண்ட தகவல்கள், அதாவது நந்திவர்மபல்லவனால்தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப் பட்டது என்று எழுத ஆரம்பித்த
சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்துவிட்டே எழுதியதாய்ப் பலரும் நினைக்க நேரிட்டது. திவாகர் சொன்னமாதிரி சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை, அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது, கோயிலில் விஷ்ணு, சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர், தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை எனச் சொல்லவில்லை. மற்றபடி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன்.

பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும்போது, சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணுகோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ, அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால், அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.

Sunday, July 27, 2008

சிதம்பர ரகசியம்- சில தகவல்களும், பதில்களும்!

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்கமுடியவில்லைதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல், உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும், குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப் பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.
*************************************************************************************
இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இதுபற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் சரிவரப் பதிவு போடமுடியாததால் தாமதம் ஆகிவிட்டது. மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும், தெற்றியம்பலமான சித்திரகூட வழிபாட்டையும், முறைப்படிபுரிந்து வந்தவர்கள் தில்லைமூவாயிரவர் என்பது விளக்கமாம்" (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும், வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப் பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது.

கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அரசனால் நியமிக்கப் பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை, வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பின்னர் கொண்டமநாயக்கன் காலத்தில் இந்தச் சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும், போராட்டங்கள் நடத்தியும், கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும், தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும், அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரிற் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்


The Aravidu Dynasty by Father Heras (P. 553)
1. A notable instance of the struggle between the two sects is the lamentable event that took place at Chidambaram in 1597 A.D. While Krishnappa Nayaka of Jinji, himself a Staunch Vaishnava was there superintending the improvements which he had ordered at the temple of Govinda Raja within the great Saiva Temple. Father N. Pimenta, who passed through Chidambaram at this time narrates in one of his letters that on this occasion a great controversy arose as to "Whether it were lawful to place the signe of Perumal in the temple at Chidambaram. Some refused, others by their legates importunatly urged and the Naiks of Gingee decreed to erect in the temple" These last words of Pimenta indicate that after the restoration of the idol to the temple by Rama Rayan it had again been removed and its shrine probably destroyed. In order to re-install it with due honour, Krishnappa Nayaka ordered the old shrine to be repaired and even perhaps enlarged'
This was the cause of the whole trouble. "The priests of the Temple which were the Treasuries" Continues, Pimenta (were) with standing, and threatening if it were done, to cast down themselves from the top. The Brahmanes of the temple swore to do the like after they buried the former, which yet after better advice they performed not". But Krishnappa Nayaka was unmoved by any such threat when the reconstruction of the shrine was carried on with out hesitation where upon the priests climbing one of the high Gopurams of the temple started to cast themselves down while the Nayak was in the temple, "About twenty has perished in that precipitation on that day of our departure, whereat the Naichus angry, caused his gunners to shoot at the rest which killed two of them. A woman also was so shot in this Zealous quarrel that she cut her own throat". Naturally Krishnappa Nayaka accomplished his purpose in spite of this opposition.

தொடரும்.

Tuesday, July 22, 2008

சிதம்பர ரகசியம்- திவாகர் கேட்டதும், நான் சொன்னதும்!

//குழப்பத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். உங்கள் முதல் பாரா சரியானதுதான். நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பி விட்டுள்ளீர்கள்.//

குழப்பம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படியே சரியாத் தேதியைச் சொல்லணும்னு ஒவ்வொருத்தரும் கேட்டால் குழப்பம் எனக்குத் தான் வரும், வருது, வந்தது. சரித்திர ஆசிரியர்கள் கூட அனுமானமாகவே சொல்லி இருக்கின்றனர். அதை யாரும் எதுவும் சொல்லுவதில்லை, இல்லையா??


//கீதா! முதலில் ஆழ்வார்கள் கால அளவையெல்லாம் கணக்கில் எடுக்கப் பார்க்காதீர்கள். திருமங்கை மன்னனும் சரி.. குலசேகர ஆழ்வாரும் சரி.. சம காலத்தவர் என்று நீங்கள் எழுதியதற்கு என்ன ஆதாரம்? //

அப்பரும், ஞானசம்மந்தரும் மாதிரி இருவரும் ஒரே காலம் என்று சொல்லிக் கேள்வி தான் ஆதாரம் ஒவ்வொருத்தருடையதும் ஒவ்வொரு மாதிரி இருக்கு! ஆகவே சொல்ல முடியவில்லை.

//கோவிந்தராஜப் பெருமாள் ஏன் எப்படி வந்தார் என்பதெல்லாம் இனி ஆராய்வது முழுக்க முழுக்க வேஸ்ட். சிவ கதைகளைப் பற்றி எழுதிவருகிறீர்கள். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் விஷ்ணு ஆராதனைக்கும் இடம் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே. சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையிஉல் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். சிதம்பரத்திலும் விஷ்ணு வழிபாடு உண்டு. அதுவும் சிவ-விஷ்ணு வழிபாட்டில் சிறந்த பல்லவர் காலத்தில் இவை அதிகமாக போற்றப்பட்டுள்ளது. சிவனுக்குக் கோயில் எழுப்பித்த பல்லவமன்னர்களின் பெயர்கள் எல்லாமே திருமாலின் பெயர்கள்தான்.//

நான் இதை ஆராயவே இல்லை. எனினும் நண்பர் ஒருத்தரின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்துக் கடைசியில் இங்கே வந்திருக்கின்றது.

//சிவன் சன்னிதியின் பின்புறம் நிச்சயம் பெருமாள் இருந்தாக வேண்டும். எல்லா சிவன் கோயிலிலுமே விஷ்ணு இருந்தாகவேண்டும். ஏனெனில் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதி விஷ்ணுவும் கூட. அப்படிப் பார்க்கையிஉல் விஷ்ணுவும் சக்தியும் ஒன்றுதான் என்ற பொது எண்ணம் கூட தோன்றலாம். ஏன்.. அப்படித்தான் அப்பர் பார்க்கிறார். நம்மாழ்வார் பார்க்கிறார். அவர்கள் பார்ப்பதைத்தான் நாமும் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்//

நான் எப்போவுமே அப்படித் தான் பார்க்கிறேன். அம்பிகையையும், விஷ்ணுவையும் ஒன்று எனச் சொல்லும்படியான பதிவும் போட்டிருக்கிறேன். என்றாலும் சில சமயம் என்னைக் குறித்து அப்படி ஒரு நினைப்பு வந்து விடுகின்றது. ஆனாலும் இதுவும் கடந்து போகும் என நினைக்க வேண்டும். அதை மறந்துவிட்டேனோ??? சில சமயம் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு நேரம் இது! என்றாலும் இதிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொள்கின்றேன்.

//மாணிக்கவாசகரின் காலகட்டத்தில் அவர் எழுதிய மணி மணியான பாடல்கள் திருச்சாழல். இந்தப் பாடல்கள் எதற்காக பாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கை புத்த மதத்துப் பெரியவர்களுக்கும், மணிவாசகருக்கும் இடையில் எழுந்த வாக்குவாதத்தில் அந்த இலங்கை மன்னனின் ஊமை மகள் மூலமாகப் பாடச்செய்த அற்புதப் பாடல்கள் அவை. இலங்கை புத்தவம்ச சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்ற காலமாக மூன்றாம் நூற்றாண்டு கலகட்டத்தை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டார்களே என்று அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வில்லை. உலகத்துக்கு ஞானத்தை விட்டுச் சென்ற பெரியவர்கள் ஏன் அவர்கள் காலகட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அதற்கும் காரணம் உண்டு. நமக்குத் தேவை சாரம்தான்.. அது எங்கிருந்து எப்போது வந்தது என்ற ரிஷிமூலம் தேவை இல்லை.//

தெரியும், கேள்விப் பட்டிருக்கேன். மாணிக்கவாசகர் காலமும் நிச்சயம் இல்லை எது என்று. அதிலேயும் குழப்பம் தான் மிகுதி.

//இரண்டாம் குலோத்துங்கன் ஏதோ வைணவ எதிரி என்பது போல சித்தரிக்கிறார்கள். இதுவும் தவறு. இவன் திருமாலைப் போன்றவன் என்று அவன் மெய்க்கீர்த்திகள் பாடுகின்றன. விஷ்ணு திருத்தலங்களுக்கு இவன் சேவைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.//

இது தான் நான் சொல்ல வந்ததும், கல்வெட்டுக்கள் மட்டுமின்றி பாடல்களும் இருக்கின்றன என்பதே என் கருத்தும். ஆனால் இதை இப்போது நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அந்த "தசாவதாரம்" படத்தால் வந்திருக்கு! எல்லாம் நேரம்! :P

//பொதுவாக இந்த சைவ-வைணவ நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கையில் 1915 ஆம் வருடத்தில் ஆரம்பித்து 1950 வரை கிடைத்த சரித்திர செய்திகளின் ஆதாரங்களின் மீதே அனைவர் பார்வையும் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. தற்சமயம் நமக்கு ஏகப்பட்ட புதிய புதிய செய்திகள் கிடைத்துள்ளன. அவ்வப்போது இவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வந்து கொண்டே இருக்கிறது. டாக்டர் நாகசாமி, குடந்தை பாலசுப்பிரமணியம், மற்றும் டாக்டர் கலைக் கோவன், டாக்டர் நளினி இன்னும் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் சோழராஜாக்களைப் பற்றி புதிய புதிய செய்திகளை சொல்லிவருகிறார்கள். எஸ். பாலசுப்பிரமணியன் ஒரு இரண்டாயிரம் பக்கங்களுக்கு சிதம்பரம் கோயிலைப் பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.//

மு.ராகவையங்காரின் குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றேன். பாலசுப்பிரமணியனின் புத்தகம் பற்றித் தெரியவில்லை. குடவாயில்?? குடந்தை??? பாலசுப்ரமணியம் எழுதி உள்ளதும் கேள்விப் பட்டுள்ளேன்.

//கீதா அவர்களே.. உங்கள் சிதம்பரம் பற்றிய கட்டுரைகள் நன்றாக எழுதப்பட்டு வருகின்றன என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் தீட்சதர்கள் சொல்வதின் பேரிலேயே உங்கள் ஆதாரங்கள் இருந்திருக்கின்றன என்பதால் இவைகளை மற்றவர்கள் எழுதிய ஆதாரங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து நடுநிலையில் எழுதுவது நல்லது என்று எனக்குப் பட்டதால் எழுதுகிறேன். மற்றபடி ஒரு நல்ல எழுத்தாளரை மனம் புண்படுத்த அல்ல.//

தீட்சிதர்களையும் நான் கலந்து கொள்வதால் ஆதாரங்கள் அனைத்துமே அதன் பேரிலே என்று சொல்கின்றீர்கள். தீட்சிதர்களும் நன்கு படித்து ஆராய்ந்தே எழுதி இருக்கின்றனர். தவிர, கோயிலோடு அவர்களுக்குத் தானே இன்றுவரையில் நடைமுறைப் பழக்கம் அதிகம் இருக்கின்றது. மற்ற ஆதாரங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் எல்லாம் மனம் புண்படாது. அப்படிப் புண்படும் அளவுக்கு மனது பலகீனம் இல்லை. எழுதுவதே மற்றவர்கள் கருத்தையும் எதிர்பார்த்தே என்னும்போது, அனைத்துக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்.

//நன்றி..

திவாகர் //

நன்றி நான் சொல்லணும். நன்றி.

Sunday, July 20, 2008

சிதம்பர ரகசியம் - ரவிசங்கருக்கு பதில்கள்!


நாம சரியா எழுதினாலும் சில சமயம் சில கேள்விகளால் ஏற்படும் குழப்பம் இப்போது எனக்கும் ஏற்பட்டது. அதிலே முக்கியமான கேள்வியாக குலசேகர ஆழ்வார் காலமும், திருமங்கை காலமும் எப்போ என்ற கேள்வி தான். குலசேகர ஆழ்வாரும் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளைப் பத்திப் பாடி இருக்கார்னு நானே எழுதி இருக்கேன் தான் இல்லைனு சொல்லலை. திருமங்கை அதன் பின்னரா, முன்னரா என்ற தெளிவு ஏற்படவில்லை. பொதுவாக ஆழ்வார்கள் காலமோ, நாயன்மார்கள் காலமோ கொஞ்சம் குழப்பமாய்த் தான் போகின்றது எனக்கு. ஒருமுறைக்குப்பலமுறைகள் சரி பார்த்த பின்னரும், ஏழாம் நூற்றாண்டா, எட்டா என்பதிலே ஆரம்பித்து, பாடினது அவங்கதானா என்பது வரையில் குழப்பம் வந்துவிடுகின்றது. இம்முறை அப்படிக் குழப்பம் இல்லாமல் எழுதினாலும் கே ஆர் எஸ் குழப்பிவிட்டார். அவர் கேட்ட கேள்வி இதோ கீழே! என்னுடைய பதில் அடுத்து வருகின்றது. இதை
தேவாரம் தளத்தில் இருந்து எடுத்திருக்கின்றேன்.

3. முக்கியமான கேள்வி
//தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது//

குலசேகராழ்வார் காலகட்டம் வேறு!
திருமங்கை காலகட்டம் வேறு! திருமங்கை காலத்தால் பிந்தியவர்!

திருமங்கை சொல்லித் தான் பல்லவன் தனிச் சன்னிதி அமைத்தான் என்றால், அதுக்கு முன்பே குலசேகரர் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடி இருக்க முடியும்?

தீட்சிதரிடம் இதை வினவினீர்களா கீதாம்மா? :)

July 18, 2008

//திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலயத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)


கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.
"

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

தில்லைத் திருச் சித்திர கூடம்"
என்று

திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.
"

தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....."
என்று

குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.
திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன் - சிவபக்தன்:

மாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.//

ஆகவே மாணிக்கவாசகர் காலத்திலே விஷ்ணுவுக்குக் கோயில் நடராஜர் சன்னதிக்குப் பக்கத்திலே இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது அவரின் திருக்கோவையாரில் உள்ள திருச்சிற்றம்பலக் கோவையில் இருந்து.
"புரங்கடந்தானடி காண்பான் புவி விண்டு புக்கறியா
இரங்கி எடந்தாயென்றீ ரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந்தானென்று காட்ட மற்றாங்கதுங்காட்டிடு என்று
வராய் கிடந்தான் தில்லை அம்பல முன் றிலம் மாயவனே!" என்று பாடி இருக்கின்றார். இந்தப் பாடல் தேவாரத்தில் எட்டாம் திருமுறையில் உள்ளது.

அடுத்து ரவிசங்கரின் கேள்வி இது:

//பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும்//

ஏன் போனது கீதாம்மா?
தமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன? அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன?

அடுத்த பதிவுக்கு வெயிட்டீங்க்ஸ் ஆப் அம்பத்தூர் :)))//

இப்போ வைணவர்கள் கைக்குப் போனவிதம் பற்றிக் கொஞ்சம் எழுதப் போறேன். அதற்கு முன்னால் நந்திவர்ம பல்லவனை ஏதோ நான் தான் பரம வைணவன் என்று சொல்லி இருப்பதாய்க் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் மகா பயங்கரமான குற்றச்சாட்டுக்குப் பதில் இதோ! :P :P :P

தன் ஆட்சியின் முன்பகுதியில் சைவ, வைணவ சமயங்களில் சமநோக்குடையவனாகவே விளங்கிய நந்திவர்ம பல்லவன், பின்னாட்களில் திருமங்கை ஆழ்வாரின் சகவாசத்தால்தான், வைணவனாக மாறினான் என்றும், "முகுந்தன் திருவடிகளைத் தவிர மற்றொன்றிற்கு இவன் தலை வணங்கவே இல்லை." என தண்டந்தோட்டப் பட்டயம் கூறுவதாய்த் தெரியவருகின்றது. இவன் காலத்திலேயே திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் இருந்திருக்கின்றனர். இவனே முதன் முதல் விஷ்ணுவை இங்கே பிரதிஷ்டை செய்தது. பதஞ்சலி கேட்டதும், விஷ்ணு இங்கே வந்து நாட்டியம் பார்த்ததுக்குமான பதில் பின்னால் வரும். இப்போ கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்!!

பணிந்த பல்லவன் எனத் திருமங்கை ஆழ்வார் நந்திவர்ம பல்லவனையே சிறப்பித்துக் கூறி இருக்கின்றார். இந்தக் கோயிலில் தில்லை மூவாயிரவர்களாலேயே வழிபாடுகள் நடந்து வந்தாலும், காலப் போக்கில், பிற்கால வைணவர்களில் சிலர் இதனால் காழ்ப்புணர்ச்சி கொண்டார்கள். அவர்கள் செய்த தொல்லையால், தில்லையில் நடராஜருக்கு வழிபாடுகள் செய்வதோடு மட்டுமின்றி, நாளாவட்டத்தில், கோயிலின் அனைத்து நடைமுறைகளிலும் இடர்கள் நேரிட ஆரம்பித்தன. அனைத்துப் பூஜைகளும் தடைபெற அதனால் மனம் நொந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், இத்தனைக்கும் காரணம் அங்கே விஷ்ணுவின் மூர்த்தம் கோவிந்தராஜராய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதும், அந்த மூர்த்தத்திற்கு, தீட்சிதர்கள் வழிபாடுகள் செய்துவருவது வைணவர்களுக்குப் பிடிக்காததாலுமே என்று அறிந்து கொண்டே அந்த மூர்த்தத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான். இது அவன் அவைக்களப் புலவர் ஆன ஒட்டக்கூத்தரின் உலாவிலும், தக்கயாகப் பரணியிலும் குறிப்பிடப் பட்டுள்ளதாய்த் தெரியவருகின்றது. இரண்டையும் அலசணும். ஆகவே கொஞ்சம் வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்!!!!

Sunday, July 13, 2008

சிதம்பர ரகசியம் - பெருமாள் கோயில்- சில தகவல்கள்!


சிதம்பரம் கோயில், எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும், சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப் படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும், மாணிக்கவாசகர் காலத்திலேயும், இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன.

இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே:

"முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப் பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன், தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ, வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும், பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும், மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே, தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப் பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில், இவ்வாறு கூறுகின்றார்.

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)


இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும், தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ளவேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும், சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப் படுகின்றது. இந்த அரசன், பற்றிய பட்டயச் செய்திகளில், இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர, இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப் பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே, இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும், தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள், எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே!

இதுபோலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும், பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார், என்பதும், "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பட்டிருப்பதும், அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
.. தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது, பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும், அப்போது நடந்தவை பற்றியும் நாளை பார்ப்போமா??

Wednesday, July 02, 2008

சிதம்பர ரகசியம் - கேள்விகளும், பதில்களும்

//கீதாம்மா ,
கர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா ?
மேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா ?
பதில் தாருங்கள் அம்மா ,
அன்புடன்,
எ.சுகுமாரன் //

மேற்கண்ட கேள்வியைத் திரு சுகுமாரன் கேட்டிருக்கின்றார். சமீபத்தில் சிதம்பரம் சென்றபோது தீட்சிதரிடம் பேசிய வகையில் மேற்படி கேள்விக்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றே தெரிய வந்தது. காட்டு ராஜா (மராத்தியமேலும் மாலிக்காபூர் பற்றியும், அப்போது தான் தமிழ்நாடு வந்த மாலிக்காபூரிடமிருந்து நடராஜரைக் காக்க வேண்டி, தீட்சிதர்கள் போராடியதாயும் தெரிவித்தார். அதற்கான சரித்திரச் சான்றுகள் பற்றி பேராசிரியர் திரு டி.என். சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இருப்பதாயும் தெரிய வந்தது. மேலும் நந்தனாருக்கு ஒரு போதும் கொடி மரத்திற்கு எதிரே சிலை இருந்ததில்லை எனவும் சொன்னார். தீட்சிதருக்கு 70 வயதுக்குக் கிட்டத்தட்ட ஆகின்றது. ஆகவே கொடி மரத்திற்கு எதிரே நந்தனாருக்குச் சிலை இருந்தாலோ, அப்புறம் அகற்றி இருந்தாலோ, கட்டாயம் தெரிய வந்திருக்கும்.

இதே போல் விஷ்ணுவிற்குப் பிரம்மோற்சவம் நடத்த தற்சமயம் ஏற்பாடுகள் செய்தது பற்றியும் பேசினேன். அது பற்றி தீட்சிதர் கூறியது தவிரவும், வேறு சில தகவல்களும் கிடைத்தன. நண்பர் சிவசிவாவும் அதே போன்ற தகவல் ஒன்றின் குறிப்புக் கொடுத்திருக்கின்றார். அதைப் போய்ப் பார்த்துப் படித்துவிட்டு அது பற்றி எழுதுகின்றேன்.

கீழே உள்ள கேள்விகள் என்னால் கேட்கப் பட்டவை. அதற்கான பதில்கள் எங்கள் தீட்சிதர் சொன்னது:

//வணக்கங்கள் பல. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன். மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா? இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது. மற்றபடி உங்கள் மடல் கண்டு.//

//வணக்கங்கள் பல. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன்//



நந்தி குருவாகின்றார் அனைத்துச் சிவனடியார்களுக்கும். மேலும் அனைத்துச்சிவ கணங்களுக்கும் தலைவனும் ஆகின்றார். பதினெட்டுச் சித்தர்களுக்கும் அவரே குரு. அவர் ஈசனிடமிருந்து கற்றுப் பின்னர் சனகாதி முனிவர்கள், சித்தர்கள் நால்வர், அவர்களிடமிருந்து மற்றச் சித்தர்கள், அவர்களிடமிருந்து சிவனடியார்கள் என அனைவரும் வரிசைக்கிரமமாய்ப் பாடம் கற்றதாலே, நந்திக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்பதாலும் நந்திக்குக் கீழே இருந்தே தேவாரம் ஓதுவார்களால் இன்றளவும் ஓதப் பட்டு வருகின்றது. இது அனைத்துச் சிவாலயங்களிலும் காண முடியாது. சிதம்பரம் மட்டுமே கோயில் என்று அழைக்கப் படுவது. ஈசன் தன் ஜீவ சக்தியோடு இங்கே உறைவதாயும், ஈசனே நேரிடையாய்க் கோயில் கொண்டிருப்பதாலேயும், அந்தக் கைலைக்கு இது நிகர் என்று சொல்லுவதாலும் இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான். பொதுவாக இது கோயிலின் பரம்பரை ஓதுவார்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் அப்படித் தான் பாடி வருகின்றார்கள் இன்றளவும். பலமுறைகள் நேரிலே கண்டுள்ளேன்.

//மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா? இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது. மற்றபடி உங்கள் மடல் கண்டு.///

பல அந்தணர்கள் தங்கள் பெயரையோ, ஊரையோ, கொடுக்கும் பணத்தையோ பற்றி வெளியே சொல்லாமல் திருப்பணிகள் செய்து வருகின்றார்கள். தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்தெல்லாம் வரவில்லை. திருக்கைலையில் இருந்தே வந்ததாய்ச் சொல்கின்றனர். மேலும் ஈசனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராய்க் கருதுவதால் கோயிலின் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே உரியதாகவும் சொல்கின்றனர். இனி அடுத்து, விஷ்ணு கோயில் பற்றிய சில தகவல்களுடன் நாளை சந்திப்போம்.

Saturday, June 07, 2008

சிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!


தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.

பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,
"அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,
உரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று"
எனப் பொய்கை ஆழ்வாரும்,

"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.

சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!"
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,

நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,

தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,

வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,

அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????

"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!

(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)

ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்."
என்றும்,
"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!"

என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் "அலிங்கம்" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், "அமூர்த்தி" எனவும் சொல்லப் படுகின்றனர்.

Thursday, May 08, 2008

சிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார்.இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ, விபரங்கள் கொடுத்தோ எழுத முடியாவிட்டாலும் ஓரளவுக்கு அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லுகின்றேன். நமது முன்னோர்களால் இயற்கையே வணங்கப் பட்டு வந்தது. மழை பொழியச் செய்யும் வருணனும், இந்திரனும், வாயுவும், அக்னியும், நீரும் வணங்கப் பட்டது. எனினும் வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் இவை அனைத்துக்கும் மேலே ஒன்று, எல்லாவற்றிலும் சிறந்த ஒன்று படைப்புக்கும், அதைச் சேர்ந்த இருப்புக்கும், அழிவுக்கும் காரணம் என்று சொல்லி வந்தது, வருகின்றது. எவராலும் காணமுடியாத இந்தப் பரப்பிரும்மத்தைக் காண ஞானமும் தேவை, அனைவராலும் காணமுடியாது. இருந்தும் இல்லாதது. இல்லாமலும் இருப்பது போல் இருப்பது. இந்தப் பரப்பிரும்மத்தையே நாளாவட்டத்தில் மனிதர்கள் பல உருவங்களில் வணங்க ஆரம்பித்தனர். அவரவர்களின் வசதிக்கும், வணங்கும் செளகரியத்துக்கும், உணர்வுகளுக்கும் ஏற்ப இந்தக் கடவுள் பலவிதங்களில் உருவெடுக்க ஆரம்பித்தார். என்றாலும் வேதங்கள் சொல்லுவதோ ஒன்றேகடவுள் என்பது மட்டுமே.

புராண காலங்களில் கடவுள் வழிபாடு பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்தன், தேவி எனப் பல உருவங்களில் வழிபட ஆரம்பித்தனர். எனினும் அனைவருக்கும் அதிபதியும், அனைத்துக்கும் ஆதாரமும் ஆனவன் அந்தச் சர்வேஸ்வரனே என்பதில் சந்தேகம் இல்லை. அந்தப் பரமேஸ்வரனே பிரக்ருதியின் துணை கொண்டு, இம்மூவரையும் சிருஷ்டி செய்ததோடு அல்லாமல், தன்னிலிருந்து தேவையான சக்தியையும் கொடுத்து இம்மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்ய வைக்கின்றான். மனித வாழ்வின் மூன்று முக்கிய குணங்களையும் குறிக்கவல்லது அத்தொழில்கள். அம்மூன்று குணங்கள் : சத்வ குணம், ராஜச குணம், தமோ குணம் ஆகியவை ஆகும். இம்மூன்று குணங்களின் அடிப்படையிலேயே இம்மூர்த்திகளும் அமைந்தனர் என்பதும் உண்மை. இவர்களில் யார் பெரியவர், யார் சிறியவர் என்பதொன்றும் இல்லை. சில சமயம் விஷ்ணுவே பெரியவர் எனவும், சிலசமயம் பிரம்மா எனவும், சில சமயம் சிவன் எனவும் சொல்லலாம். ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே இவை.
இவற்றுக்கென்று தனி உருவம் நாமாக அமைத்துக் கொண்டது தானே தவிர இவற்றில் பேதம் ஏதும் இல்லை. முத்தொழிலைச் செய்யும் ஈசன் அந்தத் தொழிலைச் செய்யும்போது, தன் இடைவிடாத ஆட்டத்தின் மூலம் இவ்வுலகின் ஒவ்வொரு இயக்கத்துக்கும் காரணம் ஆகின்றான். ஈசன் தன் நெஞ்சத்தில் விஷ்ணுவின் மூச்சுக்காற்றைச் சக்தியாய்க் கொண்டே இயங்குகின்றான். அதே போல் விஷ்ணுவாகிய கோவிந்தராஜரோ, நடராஜனின் ஆட்டத்தின் தாளத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மூச்சு விட்டுக் கொண்டே அவனைத் தன் இதயத்தில் சுமந்து கொண்டு இவ்வுலகைக் காக்கின்றார். அந்த ஆட்டமும், தாளமும் இல்லை எனில் இவ்வுலகு இயங்குவது எங்கே? இருவரும் ஒருவரே. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை. உண்மையான சிவ-சக்தி ஐக்கியம் சிவ-விஷ்ணு சேர்ந்தே இருப்பதில் தான் உள்ளது. இந்த சிவ சக்தி ஐக்கியமே இந்தப் பிரபஞ்சத்தின் மூலகர்த்தாவும் ஆகும்.

Tuesday, April 29, 2008

கூடல் குமரனுக்காக ஒரு பதிவு!


அடிகள் காலம்:


மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

தேவாரம்

மற்றபடி நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டவைகள் பற்றிய மேல் அதிகத் தகவல்கள் தேடுகின்றேன். நன்றி.

சிதம்பர ரகசியம் - கோவிந்தராஜப் பெருமாள்!


அடுத்ததாய் நாம் காணப் போவது, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கும், கோவிந்தராஜப் பெருமாள் பற்றிய சில தகவல்கள். ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தை மனதுக்குள்ளேயே கண்டு களித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பின்னர் தான் தினமும் நேரில் கண்டு ஆனந்திக்க வேண்டியே இங்கே கோயில் கொண்டாரோ எனச் சொல்லும்படிக்கே, ஈசனின் தாண்டவக் கோலத்தைப் பார்த்தபடிக்கு கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரு கொடிமரம், கருடனுக்கு ஒரு சன்னதி, பலிபீடம் முதலியன உள்ளன. சிறிய ஒரு பிரகாரமும் உள்ளது. நிருத்த சபைக்கு அடுத்து, மகாலட்சுமிக்கு எனத் தனியாக ஒரு சன்னதி உள்ளது. இந்தக் கோயிலை ஸ்ரீவைஷ்ணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், அன்னையின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும். விஷ்ணுவின் சன்னதியையும், இந்த விஷ்ணுவின் கோயிலையும் திருச்சித்திரகூடம் என வைஷ்ணவர்கள் அழைக்கின்றனர். முதன் முதலில் இந்தக் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப் பட்டிருக்கலாம் எனச் சரித்திரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டிய இவனே இந்தக் கோயிலையும் எழுப்பியதாயும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பர், சுந்தரர், சம்மந்தர் காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கெனக் கோயில் இல்லை எனவும் சொல்லும் இந்தத் தகவல், மாணிக்கவாசகர் காலத்திலேயே இந்தக் கோயில் எழுப்பப் பட்டிருக்கவேண்டுமென்றும் சொல்கின்றது.

"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன்மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திர கூடஞ்சென்று சேர்மின்களே!" என திருமங்கை ஆழ்வாரும்,

"செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள
அந்தணர்களோடு மூவாயிரவரேத்த
வணிமணியாசனத்தமர்ந்த வம்மான்றானே!" எனக் குலசேகர ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்வித்திருக்கின்றார்கள் இந்தத் தில்லை கோவிந்த ராஜருக்கு.

ஆனால் தீவிர சைவர்கள் ஆன சோழமன்னர்கள் காலத்தில், 12-ம் நூற்றாண்டில் ஆண்ட 2-ம் குலோத்துங்கன் காலத்தில் விஷ்ணு கோயிலில் இருந்து விஷ்ணு விக்ரஹம் எடுக்கப் பட்டுக் கடலில் வீசி எறியப் பட்டதாயும் தெரியவருகின்றது. பின்னர் அந்த விக்ரஹம், வைஷ்ணவ பக்தர்களால் எடுக்கப் பட்டு, திருமலையின் கீழே திருப்பதிக்குக் கொண்டு வரப் பட்டு, அங்கே ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டுக் கோயிலும் கட்டப் பட்டதாய்ச் சரித்திரம் கூறுகின்றது. அதன் பின்னர் வந்த கிருஷ்ணதேவராயரின் குலத்தைச் சேர்ந்த அச்சுதராயன் என்பவன், மகாவிஷ்ணுவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டியதோடல்லாமல், விஷ்ணுவின் விக்ரஹத்தையும் அங்கே பிரதிஷ்டை செய்ய ஆவன செய்தான். இது தவிரவும் வைகானச முறைப்படி கோயிலில் தினசரி வழிபாடுகள் நடத்தவும், அதற்கான நிதி உதவியும் அச்சுதராயனால் செய்யப் பட்டது. பின்னர் வந்த வேலூரை ஆண்ட ரங்கராயன் என்பவனால் கோயில் மேலும் புதுப்பிக்கப் பட்டு, புண்டரீகவல்லித் தாயாருக்கு விமானமும் எழுப்பப்பட்டு, கோவிந்தராஜரின் சன்னதிக்கு முன்னால் இருக்கும் மண்டபமும் புதுப்பிக்கப் பட்டது. 5 கிராமங்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவற்றின் வருமானத்தை விஷ்ணு கோயிலின் வழிபாடுகளுக்கும் கொடுத்தான்.

தற்காலத்தில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயில் அறங்காவலர்களுக்கும் உள்ள பிரச்னை செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமுகமாய்த் தீர்த்து வைக்கப் பட்டு ராஜா சர் செட்டியார் அவர்கள் விஷ்ணு கோயிலின் திருப்பணிகளையும் செய்து கொடுத்தபின்னர், 1934-க்குப் பின்னர் விஷ்ணு கோயிலின் அறங்காவலர்களுக்கும், நடராஜர் கோயிலின் தீட்சிதர்களுக்கு சுமுகமான உறவே இருந்து வருகின்றது. விஷ்ணு கோயிலின் வழிபாட்டு விஷயங்களில் தீட்சிதர்கள் தலை இடுவதில்லை. வைகானஸ முறைப்படியே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.