எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 23, 2008

சிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்


சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப் பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760-ம் ஆண்டில் இருந்து 1780-ம் ஆண்டு வரையிலும், கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும், அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753-ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.

1749-ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும், அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும், அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது.இரண்டாம் மைசூர் சண்டையின் போது, கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.

Saturday, November 01, 2008

சிதம்பர ரகசியம் - சரித்திரத் தகவல்கள் தொடர்ச்சி!

தில்லை அம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் நடராஜர் சர்வதாரி வருடம் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல் அட்சய வருடம் கார்த்திகை மாதம் பதினான்காம் தேதி வரையிலும் அதாவது ஆங்கில வருடம் கி.பி. 1648 டிசம்பர் 24 தேதி முதல், 1686-ம் வருடம் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரையிலும், கிட்டத் தட்ட 37 ஆண்டுகள், 10 மாதங்கள், 20 நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றார். மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் பற்பல இடங்களுக்கும் தில்லையாண்டவரை எடுத்துச் சென்றிருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாய் ஒரு இடம் எனச் சொல்ல முடியாமல் முடிந்தவரையில் எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்கே எல்லாம் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று புலனாகின்றது. பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டு குடுமியான் மலையில் 40 மாதங்களும், பின்னர் மதுரையில் சில காலமும் வைக்கப் பட்டிருக்கின்றார். இந்தச் செய்திகள் 46-ம் எண்ணுள்ள செப்பேட்டில் குறிக்கப் பட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது. சாம்போஜி மன்னர் 1684-ம் ஆண்டு ஆரம்பித்து, 1686-ம் வருடம் வரையிலும் தில்லைக் கோயிலில் திருப்பணிகள் செய்து வந்ததாயும் தெரிய வருகின்றது. மேலும் அந்தக் கால கட்டத்தில் அம்பலவாணனுக்கு "ஊருடைய முதலியார்" என்ற பெயரும் வழங்கப் பட்டிருக்கின்றது.

"மருவிய சகாத்தமாயிரமும் ஐநூற்றெழுப
துக்கு மேல் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதியின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்
தில்லைமா னகர் வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே!"

இதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696-ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன்பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்துச் செல்லப் பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்குத் திரும்பும்போது திருவாரூரிலேயே தங்கிவிட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது.

அடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டுமின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில்விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது.

எல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ்ப் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால், திருவெம்பாவையும் ஓதப் படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப் படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்கின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர்.

தற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும், சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப் பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும், ராகமும் அமையாவிட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும், அன்பும், தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு காலபூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும், ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது.மேலும் பாலபிஷேகம் செய்யும்போது பெரிய அண்டாக்களில் நிரப்பி வைத்து அபிஷேகம் செய்யப் படும் பாலை உள்ளூர் பக்தர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு பாத்திரங்கள் கொண்டுவந்து அங்கே உள்ள தீட்சிதர்களிடம் கொடுத்து அந்தப் பாலை அபிஷேகம் செய்யும்போதே நிரப்பித் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அநேகமாய் ஒரு லிட்டர் பாலுக்குக் குறையாமல் ஒருவருக்குக் கிடைக்கின்றது. அதே போல் இறைவனின் அபிஷேகத்துக்குப் பாலைக் கொண்டு வந்து கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தச் சமயம் எந்த தீட்சிதர் வழிபாடுகள் நடத்த வேண்டிய முறையில் இருக்கின்றாரோ அவரைத் தவிர மற்றவர்கள் செய்வதில்லை. மற்றவர்கள் அவருக்கு உதவியாக அபிஷேகப் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதிலும், பொதுமக்களுக்குப் பிரசாத விநியோகங்கள் செய்வதிலும், ஈடுபடுவதோடு ருத்ரம், சமகம் போன்ற வேத கோஷங்களையும், ஓதுவார்களோடு சேர்ந்து அவர்களும் தேவார, திருவாசகப் பண்களை இசைப்பதிலும் ஈடுபடுகின்றனர். இறைவனைச் சிந்தையில் நிறுத்துவது தவிர வேறொன்று இருக்கக் கூடாது என்பதால் அந்த நேரம் இவை சொல்லப் படுகின்றன.கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர்(தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்றவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்துக் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது முன்னும், பின்னும் அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும்போது கூட்டம் பித்துப் பிடித்தாற்போல் "தென்னாடுடைய சிவனே போற்றி!" "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" நடராஜா! திருச்சிற்றம்பலம்!" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புகின்றனர். இங்கே இவை எல்லாம் முடிந்த பின்னரே மூலஸ்தானத்தில் நடராஜருக்கு கற்பூர தீபாராதனை காட்டப் படுகின்றது. நடராஜருக்குச் செய்யப் படும் அர்ச்சனைகளின்போது சொல்லப் படும் அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் மற்றும் மந்திரபுஷ்பங்கள் என்று சொல்லப் படுபவை தவிர வேறு எந்தவிதமான ஸ்தோத்திரங்களோ, பாடல்களோ, வேத கோஷங்களோ மூலஸ்தானத்தில் சொல்லுவதில்லை என்பதை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.