எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 29, 2007

சிதம்பர ரகசியம் -11- நர்த்தன சுந்தர நடராஜா!







நடராஜர் உருவத்தைச் சிலையாகவோ படமாகவோ நாம் அனைவருமே பார்த்திருக்கோம். ஆனால் சிதம்பரம் நடராஜர் மட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தவர். அவரை நடராஜராஜர், சபாபதி, சபாநாயகர் என்றெல்லாம் அழைப்பது உண்டு. ஏனெனில் எல்லாக் கோயில் நடராஜர்களை விடச் சிதம்பரம் நடராஜர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். ஆடவல்லான் தனக்கெனக் கோயில் கட்டிக் கொண்டு வசிக்க ஆரம்பித்தது நம்மை எல்லாம் ஆட்கொள்ளத் தானே! இப்போது நடராஜரின் உருவ அமைப்பைப் பார்ப்போம். ஆடும் கோலத்தில் இடது பதத்தை மேலே தூக்கிக் கொண்டு ஆடும் இந்த நடராஜரை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் முடிந்த வரை சொல்கிறேன். நாட்டியத்தின் ஆதிகுருவான சிவன் ஆடும் இந்த ஆனந்தத் தாண்டவம் விவரிக்க முடியாத அழகுடனும், அதே சமயம் ஒரு விதமான திகிலுடனும் கூடியதாய்த் தோன்றுகிறதா? எனக்கும் அப்படித்தான். இறைவனின் இந்தப் புனிதமான அசைவுகளில் நம் உள் மனதின் பாவங்கள் பொசுங்கிப் போகும். அவன் அபிநயத்திலோ எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்ததாய் உள்ளது? ஆறு பாவங்களைக் காட்டுகிறது இந்த நாட்டியக் கோலம்.

அவை சிரு்ஷ்டி, ஸம்ஹாரம், வித்யா, அவித்யா, கதி, அகதி போன்றவையாகும். அவன் ஆடவில்லையென்றால் நாம் இயங்குவது எப்படி? உலக நன்மைக்காகவே இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் அவன் ஆடுவது எந்தப் பாடலுக்கு? "ஆகாத பூம்" என்ற தொனிக்கு இடைவிடாது ஆடுகிறான். இப்போ அவன் கோலத்தைப் பார்ப்போம்., வலது மேல் கையில் டமரூ என்று சொல்லப் படும் ஓசை எழுப்பும் கருவி, வலது கீழ்க்கையோ அபயம் காட்டுகிறது. இடது மேல் கையில் நெருப்பும், இடது கீழ்க்கை அவருடைய திருப்பாதத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய வலது கால் பாதம் முயலகனை அழுத்திக் கொண்டிருக்க, இடது காலைத் தூக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். நாகங்களை ஆபரணமாக அணிந்து கொண்டு, மண்டை ஓட்டு மாலை தரித்திருக்கிறார்.

நடராஜ ஸ்வரூபங்கள் அநேகம் இருந்தாலும் இந்த ஆனந்தத் தாண்டவ ஸ்வரூபத்தின் விசே்ஷம் தனி. இது நமக்கு சிருஷ்டியின் தத்துவத்தை உணர்த்துகிறது. சிரு்ஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்ரஹம் போன்ற ஐந்து தொழில்களையும் குறிக்கும். நடராஜர் தெற்கே பார்த்துக் கொண்டும் இருப்பார். இவரின் வடிவே "ஓம்" என்னும் ஓங்கார வடிவானது. ஓங்கார வடிவினுள் உள்ள பஞ்சாட்சர மூர்த்தியான இவரின் இந்தத் தரிசனம் நமக்கு என்ன உணர்த்துகிறது என்றால் முயலகன் போன்ற அசுர மனம் நமக்கு. அது பாம்புகள் போல் சீறிக் கொண்டு மேலெழும்பும். அந்த மனத்தை அடக்க வேண்டும். தியானம் என்ற நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கடைசியில் இறைவனை அடைய வேண்டும்.

இவருடைய நாட்டியம் இவ்வுலகையே ஆட்டுவிக்கிறது. எப்படி என்றால் நம்முடைய மனம் எவ்வளவு வேகமாய்ச் சிந்திக்கிறது? வாயுவேக மனோவேகம் எல்லாம் போதாஅது அல்லவா மனோவேகத்துக்கு. அந்த மனோவேகத்திலும், உடல் உணர்வுகளிலும், சிரிப்புலும், அழுகையிலும், பசியிலும், உணவு உண்ட திருப்தியிலும், ஆடலிலும், பாடலிலும், மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நடராஜர் இருக்கின்றார். இன்னும் கடல் அலைகள் சீறுவதிலும், சூரிய சந்திரர்கள் தோன்றுவதிலும், கிரஹங்களின் சுழற்சியிலும், பூமியின் இடைவிடாத சுற்றுக்களிலும், மஹா ப்ரளயத்திலும், கொடிய தொற்று நோய்கள் தோன்றும்போதும், பூகம்பத்திலும், எரிமலைகளிலும், சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளிலும், புயல் காற்றிலும், அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கும் இடிகளிலும், கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியிலும், பெருமழையிலும், சூறைக் காற்றிலும், பட்சிகளின் கிளுகிளுப்பிலும், விலங்குகளின் சப்தங்களிலும், பூக்கள் பூப்பதிலும், காய், கனிகளிலும், இன்னும் நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்திலும் நிறைந்திருப்பது அவரே!
(இன்னும் வரும்)














Thursday, April 26, 2007

சிதம்பர ரகசியம்-10 - சித்சபையின் வர்ணனை!

சிதம்பரம் கோவில் எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும், காலப் போக்கில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு மானியங்கள் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோயில் இருந்த சமயம் தெரியாவிட்டாலும் முதலில் மூலநாதர் என்ற சிவலிங்கம் வழிபாட்டில் இருந்ததாய்த் தெரிய வருகிறது. சிவலிங்க வழிபாடு தான் சிவனை வழிபடுவோரின் முக்கிய வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வந்தது. இந்த லிங்கத்தைத் தான் முதலில் வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு போன்றோரும் பின்னர் இந்தக் கோயிலுக்கு முதன் முதல் விஜயம் செய்த சூரிய வம்சத்தைச் சேர்ந்த வங்க நாட்டு கெளட அரசன் ஹிரண்யவர்மனும் வழி பட்டு வந்திருக்கிறார்கள். இந்த மன்னனின் திருப்பணிகள் பற்றிச் "சிதம்பர மஹாத்மியம்" புத்தகத்தில் காண முடிகிறது.

இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது. பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள மற்றக் கோயில்களில் உள்ள லிங்கத் திருமேனிகளை விட இந்த லிங்கத் திருமேனி மிகப் பழமை வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த மூலநாதரையும், உமை அன்னையையும் தரிசித்த பின் நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா? நேரே சித்சபைக்குத் தான். இங்கே கொஞ்சம் அதிக நேரம் செலவிடுவோம். தயாராய் இருக்கணும்.

இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் "ஆனந்தத் தாண்டவம்" ஆடக் கட்டப் பட்டது இந்த சித்சபை என்னும் மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால் "பொன்னம்பலம்" என்று உருகி உருகிப் பாடப் பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப் பட்டது. இந்தச் சித்சபை வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாய்க் கையால் எழுதப் பட்ட சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. தெற்கே பார்த்து இருக்கும் இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசம்" என்றும் பொருள். அந்தச் சிதம்பரத்தின் "சித்சபை" பற்றிய வர்ணனையைச் சற்றுப் பார்ப்போமா?

சிதம்பரத்திலேயே நடராஜர் தரிசனம் தான் முக்கியமானது. அந்த நடராஜர, சிவகாம சுந்தரியுடன் ் கோயில் கொண்டிருக்கும் சித்சபையை என்னால் முடிந்த வரை சொல்கிறேன்.இந்தச் சபைக்குச் செல்ல ஐந்து வெள்ளியில் ஆன படிகள் இருக்கின்றன. இவை "நம சிவாய" என்னும் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின் ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம், சதாசிவ பீடம். இந்த ஐந்து பீடங்களும் உள்ள இடங்கள் இனி வரிசையாய் வரும். படிக்கிற வசதிக்கும் புரிந்து கொள்ள வசதிக்கும் ஏற்றவாறு எழுதி வருகிறேன். புரியாத இடத்தில் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இப்போ முதலில் பிரம்ம பீடம் என்று சொல்லப் படும் பகுதிக்குப் போகலாம்.

பிரம்ம பீடம்:இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.

விஷ்ணு பீடம்: இங்கே உள்ள ஐந்து தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.

ருத்ரபீடம்: இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம், வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.

மஹேஸ்வர பீடம்: கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம், வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

சதாசிவ பீடம்: 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான் "சிதம்பர ரகசியம்" தரிசனம் கிடைக்கும்.

மேலே உள்ளவை எல்லாம் தத்துவங்கள். சில பாடங்கள் பெயர் நாம் கேட்டிருப்போம். மற்றவை எல்லாம் தத்துவம் படிப்பவர்களுக்குப் புரியும். ஆகமங்கள் 28-ம் பெயர் வேணாம்னு தான் எழுதலை. இம்மாதிரியான மொத்தம் 96 தத்துவங்களை உள்ளடக்கியது சித்சபை.

சித்சபையின் மேற்கூரையைப் பார்ப்போமா? சற்றே வெளியே வந்து சித்சபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் பார்க்கலாம். நவசக்தியும் ஒன்பது கலசங்களாய்ப் பிரதி்ஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவை வாம சக்தி, ஜ்யே்ஷ்ட சக்தி, ரெளத்த்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி.

64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.

72,000 ஆணிகள் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும் அவை.

நாளை நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?

Monday, April 23, 2007

சிதம்பர ரகசியம் -9 - ஜெயிக்கப் போறது யாரு?!!!

ஆட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆடப் போவது யாரு? இந்த அகில உலகங்களையும் படைக்கும், காக்கும், அழித்துத் திரும்பப் படைக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனும், நாயகியும். இவங்க ஆடினதைப் பார்க்கப் போவது நாம் எல்லாருமே! ரெண்டு பேருக்கும் போட்டி வேறே யார் பெரியவங்க யார் சின்னவங்கன்னு! ஒண்ணிலே ஒண்ணாக இருக்கும் இவங்களிலே யாரைப் பெரியவங்க யாரைச் சின்னவங்கனு சொல்றது? அதுவும் புரியலை. நடுவர்களோ என்றால் சிவனை மட்டுமல்லாது அன்னையையும் போற்றித் துதிக்கும ்ரிஷி முனிவர்கள். சிவனின் தாண்டவத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பவர்கள். ம்ம்ம்ம், செருமிக் கொண்டு வருகிறாள் காளி யன்னை. இவள் எப்படிப் பட்டவள்? இதோ பாரதி சொல்கிறார்:
"காலமாம் வனத்திலண்டக் கோல மாமரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவு மொரு வண்டு-தழல்
காலும் வழி நீலவன்ன மூல அத்து வாக்கனெனனும்
கால்களாறுடையதெனக் கண்டு- மறை
காணு முனிவோருரைத்தார் பண்டு."
ஆட்டம் ஆரமபி்க்கிறது. திக்குகள் எட்டும் அதிருகின்றது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்! இறைவன் பதில் கொடுக்கிறார். "தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்!" அகில உலகும் குலுங்குகிறது. அண்டமே குலுங்க ஆடிய இந்த ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார். காளியவளோ கலங்காமல் ஆடுகிறாள். இறைவனின் ஒவ்வொரு அபிநயத்துக்கும், பாவங்களுக்கும் சரியான பதில் கொடுக்கிறாள். ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையோ என அனைவரும் எண்ணும் வேளையில் இறைவன் செய்த ஒரு காரியத்தில் காளியன்னை வெட்கித் தலை குனிகிறாள். அவளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்படி என்ன செய்தார் ஈசன், சர்வேசன்? ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக் குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க் குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். ஆட்டத்தில் தேர்ச்சி இருந்தாலும் பெண்ணால் இவ்வாறு செய்ய முடியாது அல்லவா? பெண்கள் போன, போகும், போகப் போகிற தூரம் இவ்வளவு என்று வரையறுக்கப் பட்டிருக்கிறதல்லவா? அனைவரையும் படைத்த அன்னையானாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா? அவள் பெண்மை அவளைத் தடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனைப் பார்க்கிறார்கள். அப்போது இறைவன் அவர்களைத் திருவள்ளுவரிடம் போய்க் கேட்கச் சொன்னதாயும் அவர்கள் வள்ளுவரிடம் போய் இறைவன் ஏன் அவ்வாறு பாதி நாட்டியத்தில் செய்தார் எனக் கேட்க அவர் உடனேயே காதுக் குழையைப் போட்டுக் கொண்டாரே அதையா கேட்கிறீர்கள்?எனக் கேட்டதாயும் வள்ளுவரின் பக்தியையும் அவர் இருந்த இடத்திலேயே இறை தரிசனம் கிடைக்கப் பெற்றதில் இருந்து அவருடைய தனித் தன்மை வெளிப்பட்டதாயும் அவர் ஒரு சித்தர் என்றும் செவி வழிச் செய்திகள்.

காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். உடலில் ஒரு பாகம் ஆனவள் இந்த இடத்துக்குச் சண்டை போடுவாளா? எல்லாம் ஒரு நாடகம். நமக்காக. நாம் நம் எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் இறைவன் அவ்வாறு விட்டு விடுவாரா? நீ இந்த ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச் செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான்.
அவனுக்குத் தெரியாதா?
"ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்கு முளவாகும்- ஒன்றே
யாகினாலுகனைத்தும் சாகும்வை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -இந்த
ாறிவுதான் பரமஞானமாகும்."
இவ்வாறு இறைவனுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விட்டுக் காளி போனதும் இறைவன் அங்கே குடி கொள்கிறான். தேவ சிற்பியான விஸ்வக்ரமா வந்து நடன அரங்கம் எழுப்பித் தருகிறார் இறைவன் ஆட. அதற்கு முதலில் இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியவேண்டும் அல்லவா? அதன் படி தானே நடன அரங்கம் எழும்ப முடியும்? முனிவர்கள் விஸ்வகர்மாவுக்குப் போதிக்க அதைக் கருத்தில் கொண்டு எழுப்புகிறார் "சித் சபை". ஆனால் நாம் முதலில் பார்க்கப் போவது "மூலநாதரை"த் தான். ஆதியில் குடி கொண்ட அவரை விட்டு விட்டு முன்னே போகக் கூடாது அல்லவா?

Sunday, April 22, 2007

சிதம்பர ரகசியம்-8 - ஆடும் கூத்தனும், கூத்தியும்!

பதஞ்சலியும், வியாக்ரமபாதரும் செய்த இடைவிடாத தவத்தினால் மனம் மகிழ்ந்தார் ஈசன். ஈசனுக்கு அவர்களுக்கு அருளப் பிரசன்னம் ஆனபோது அவர்கள் இறைவனின் ஆனந்தக் கூத்தைப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என இறைஞ்சவே அந்த ஆதிசிவனும் மனம் இரங்கினார். ஆடத் தயார் ஆனார். ஆனால் இந்தக் காட்டிலா ஆடுவது? ஆட ஒரு மண்டபம் வேண்டுமே? குறைந்த பட்சமாய் ஒரு மேடையாவது இருக்கணுமே? என்ன செய்வது என யோசித்தார்.ாங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் நினைவு வந்தது. அவள் வேலை என்னமோ முடிந்து விட்டது. ஆனாலும் இங்கே கோயில் கொண்டு மற்றவர்களைத் த்டுத்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் கோபம் தீரவில்லையோ. என்ன செய்யலாம். ஆடவேண்டுமாமே முனிவர்களுக்கு! "ம்ம்ம்ம்ம் இதோ ஒரு வழி! நிருத்த சபை இல்லாமல் என்னால் ஆட முடியாதே"
என முனிவர்களிடம் சொல்லும் அந்த மூலப் பரம்பொருளின் முகத்தில் கள்ளப்புன்னகை. முனிவர்கள் இருவரும் தில்லை வனத்தில் வந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் காளியின் இடத்தில் ஆடுமாறு வேண்ட இறைவனும் வருகிறார். அப்போது ஒரு ஹூங்காரம்.

ஹூம், என்று கேட்கிறது.

யாரது? என்கிறார் இறைவன்.

அன்னை மகாகாளி தன் வேலைகள் எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்த களைப்பில் அங்கே குடி கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் போலும். அவள் தன்னிலை மறந்து, தான் யார் என்பதை மறந்து ஈசனைத் தடுத்தாள்.

"யாரது அங்கே, இது என்னுடைய இடம். உள்ளே நுழையாதே!" என்கிறாள்.

சொல்வது யாரை என்று அவளுக்குத் தெரியாதா என்ன? கேட்டவருக்குத் தெரியாதா என்ன? அவர் நோக்கமே தனியாய் காளி உருவில் இருக்கும் அன்னையை மாற்றித் தன்னுடன் கோவில் கொள்ளச் செய்ய வேண்டும் என்பது தானே. பிரிவாற்றாமை தாங்கவில்லை போல் இருக்கிறது. ஒரு உடலில் குடி இருந்தவர்கள் தனித்தனியாய்ப் பிரிந்ததும் உலக நன்மைக்கே. இப்போது ஆடப் போவதும் உலக நன்மைக்கே. ஆனால் அதையே ஒரு நாட்டிய நாடகமாக்கிக் காட்டுகிறார்கள் இருவரும். ஏன் அதுவும் நமக்குப் பாடம் புகட்டத் தான்.

காளி தடுத்ததும் இறைவன் என்ன செய்வது என்பது புரியாது போல் நடிக்க, காளி கேட்கிறாள்:"ஏன் வந்தீர் இங்கே?" என.
புன்முறுவல் பூத்த ஐயன சொல்கிறார்: " ஆடவும், ஆட்டுவிக்கவும் தான்."
ஆவ்வளவு தான். என்னைப் போல் கோபக் காரியான அந்தக் காளிக்குக் கேட்கவா வேண்டும்? கோபத்தில் குதிக்கிறாள். "என்ன ஆட்டுவிப்பீரா நீர்? எங்கே என்னை ஆட்டுவியும், பார்க்கலாம். அல்லது என்னுடன் இணைந்து ஆடவாவது முடியுமா உம்மால்?"

இறைவனுக்கு வேண்டியதும் இது தானே. "அதற்கு என்ன? இருவரும் இணைந்து ஆடலாம். போட்டி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்." என்று சிரிக்கவேக் காளி கூத்தாடுகிறாள்.
"என்னுடன் போட்டியா? எங்கே பார்க்கலாம்." அவ்வளவு தான்.

ரிஷி, முனிவர்கள் பார்த்திருக்கப் போட்டி ஆரம்பிக்கிறது. நடுவர்கள் அந்த முனிவர்களும், தேவர்களும் தான். இருவரும் ஆட வேண்டியது. யார் ஆடுவதை யாரால் திருப்பி ஆட முடியவில்லையோ அவர்கள் தோற்றதாய் வச்சுக்க வேண்டியது. இதான் பந்தயம். அந்த உலகையே ஆட்டுவிக்கும் இருவரும் ஆடுகிறார்கள். நடந்தது என்ன?

"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியிலிரத்தக் களியொடு பூதம் பாடப்- பாட்டின
அ்டிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடடக்-களித்
தாடுங்காளீ! சாமுண்டீகங்காளீ!
அன்னை! அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை!"

"மூலப் பரம்பொருளின் நாட்டம்ிந்த
மூன்று புவியும் தன் ஆட்டம்:
காலப் பெருங்கள்த்தின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்."

இரண்டு பேரும் ஆடுகிறார்கள். ஆடட்டும். நாளைக்குப் பார்ப்போம் ஆட்டத்தின் முடிவை. இப்போது ஒரு விஷயம். ஆதியில் தில்லையில் இந்த முனிவர்கள் பூஜித்த மூலநாத லிங்கத் திருமேனிக்கான கோயிலும், காளி குடி கொண்டிருந்த கோயிலும் தான் நடராஜர் வரும் முன் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் காளி இருந்த இடம் தான் தற்சமயம் "நிருத்த சபை" என அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் காளிக்குச் சொந்தமாய் இருந்த இந்த இடம் தற்சமயம் கோவிலினுள் உள்ளது. அதற்க்குப் பின்னால் வருவோம்.

Saturday, April 21, 2007

சிதம்பர ரகசியம்-7 - கோயில் வந்த கதை!

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே, அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக் காடாக இருந்தது. "தில்லை" என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான ஒன்று எனப் புராணங்களின் வாயிலாகத் தெரிய வருகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவின் படியும் இது தில்லை வனங்கள் சூழ்ந்து இருப்பதால் "தில்லை" எனப் பெயர் பெற்றதாய்ச் சொல்கிறார்கள். இதற்கு நான் இன்னும் ஆதாரங்களைப் பார்க்கவில்லை. நேரம் இல்லை. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்வதன் படி முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லை எனவும் பின்னால் சாதாரண மக்களுக்கு இறை நம்பிக்கை ஊட்டும் பொருட்டு உருவ வழிபாடு ஏற்பட்ட காலத்தில் மரங்கள் சூழ்ந்த வனங்களில் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் தங்கள் தங்கள் இஷட தெய்வத்தின் உருவத்தை அமைத்து வழிபட்டனர் என்றும் பின்னால் அந்தக்குறிப்பிட்ட மரமே அந்த ஊரின் ஸ்தல விரு்ஷமாக மாறியது என்றும் சொல்கிறார்கள். அப்படி ஏற்பட்டது தான் காஞ்சியில் -மாமரம்., நாகப்பழ மரம்-திருவானைக்காவல்., கடம்ப மரம்-மதுரை., தில்லை மரம்- சிதம்பரம் என்று ஏற்பட்டதாய்ச் சொல்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையின் படியும் புராணங்களின் வாயிலாகவும் தில்லையில் உள்ள நடராஜர் கோயில் கடவுள் தனக்காக ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்கள். தேவலோகச் சிற்பியான "விஸ்வகர்மா"வால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயிலில் உள்ள "சிதம்பர ரகசியம்" என்பதன் உள் அர்த்தததைத் தெரிந்து கொண்டதும் கட்டப் பட்டது என்பார்கள். இதை விஸ்வகர்மா "பதஞ்சலி" முனிவரிடம் இருந்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பக் கட்டியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோயிலில் நடராஜர் வருமுன்னேயே வியாக்ரம பாதர் ஆசிரமமும், பதஞ்சலி முனிவரின் ஆசிரமமும் இருந்து வந்ததாயும் அவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. இதில் வியாக்ரமபாதரைப் பற்றி அதிகம் அறிய முடியவில்லை. சிவனுக்குப் பூஜை செய்யப் பூக்கள் பறிக்கவும், மற்ற வேலைகளுக்கு உதவியாக இருக்கவும் அவர் புலிக்கையும், காலும் வேண்டிப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்வார்கள். பதஞ்சலியோ என்றால் ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். முன் பதிவில் பார்த்தோம்.

பதஞ்சலி முனிவரும், வ்யாக்ரமபாதரும் இங்கே தவம் செய்யும் காலத்தில் சிவனின் ஆனந்த தாண்டவத்தின் காட்சியைக் காண விரும்பினார்கள். எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளும் அவர்களுக்குத் தன் ஆன்ந்த தாண்டவத்தைக் காட்டி அருளினார். அப்போது அவர் தன்னுடன் காசி நகரில் இருந்து 3,000/- வேத விற்பன்னர்களை வரவழைத்தார். இந்த வேத விற்பன்னர்கள் தான் சிதம்பரம் தீட்சிதர்கள். இதைப் பின்னால் பார்ப்போம். முதன் முதல் இந்தக் கோவில் இருந்த இடத்தில் தில்லை வனங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் காளி தான் கோயில் கொண்டு இருந்திருக்கிறாள். பதஞ்சலி முனிவரும், வ்யாக்ரமபாதரும் மற்ற ரி்ஷி முனிவர்களும் முதலில் தானாக உருவான ஒரு சிவலிங்கத்தைத் தான் வணங்கி வழிபட்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காணுவதற்கு முன்னால் நடந்தது இது. இவர்கள் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வேண்டித் தவம் செய்து இறைவன் காட்சி கொடுத்து தாண்டவம் ஆடத் தயாராக இருக்கும் வேளையில் அன்னையவள் அங்கே வந்து வழி மறித்தாள்.

டிஸ்கி: வியாக்ரபாதர் என்பது தவறு எனவும், வ்யாக்ரமபாதர் தான் சரி எனவும் திரு ஆகிரா கூறியதன் பேரில் வ்யாக்ரமபாதர் என்றே குறிப்பிட்டு உள்ளேன். நாளை போட்டி நடனம். காண வாருங்கள். யார் ஜெயிக்கப் போறாங்க என்பது எல்லாருக்கும் தெரியும் என்றாலும் அனைவரையும் வருக வருக என அழைக்கிறேன்.

Sunday, April 15, 2007

சிதம்பர ரகசியம்-6 - பதஞ்சலி முனிவர் வரலாறு

திரு விஎஸ்கே கேட்டுக் கொண்டதுக்கு இணங்க இப்போ பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

"பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலக்குன்றுகள்" இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்."

"தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"

சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன்.


"அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப் பார்!
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது
பார், இதுவே சரியான வழி!
அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்."அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று.
குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.

டிஸ்கி: பதஞ்சலி முனிவர் பற்றி நான் கேட்ட தகவல்கள் பெற எனக்கு லிங்க் கொடுத்து உதவிய "ஆகிரா" அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வ்யாக்ரபாதர் பற்றிக் கிடைக்கவில்லை. தேடுகிறேன். கிடைத்தால் போடுகிறேன் வீஎஸ்கே, சார். ஆனால் வ்யாக்ரபாதர் ஆசிரமம் தான் மூத்ததுன்னு எங்கேயோ படிச்சிருக்கேன்.

ஸ்வாமி சிவானந்தர் சிவனைப் பற்றியும் நடராஜர் பற்றியும் எழுதி இருப்பதில் இருந்தும் தகவல்கள் திரட்டி உள்ளேன்.

Friday, April 13, 2007

சிதம்பர ரகசியம்-5 - பூகோள அமைப்பு

தென்னாற்காடு மாவட்டத்தில், கடலூருக்குத் தென்மேற்கே உள்ள சிதம்பரத்தின் எல்லைகளாய் வடக்கே வெள்ளாறும், கிழக்கே வங்கக் கடலும், தெற்கே கொள்ளிடமும், மேற்கே வீராணம் ஏரியும் அமைந்துள்ளது. -ஆன்மீகத் தத்துவங்களின் படிச் சிதம்பரம் பற்றிக் குறித்திருப்பது என்னவென்றால்:
"இந்த பூமியும், மனித உடலும் சமமாக ரிஷி முனிவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித உடம்பில் உள்ள "இட" நாடியைப் போன்றது இந்தப் பூவுலகில் உள்ள ச்ரீலங்காப் பிரதேசம். "பிங்கள" நாடி என்று இமயமலைப் பிராந்தியத்தைச் சொல்வதுண்டு. மனித உடலில் "இட" நாடிக்கும் "பிங்கள" நாடிக்கும் நடுவில் "சுக்ஷ்ம" நாடி உள்ளதைப் போல் இந்தப் பூவுலகிற்குச் சிதம்ப்ரம் அமைந்துள்ளது." இது ஆன்மீகப் பெரியார் வாக்கு.

சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ளது நடராஜர் கோயில். இந்தக் கோவிலின் பூர்வீகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்று சொல்ல முடியாது. உபந்ஷ்தங்களிலேயும், புராணங்களிலேயும் ஸ்தல மஹாத்மியங்களிலும் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் கோவில் தோன்றியது எப்படின்னே சொல்ல முடியாது. இதுவும் தவிர, மற்றச் சிவன் கோவில்களில் பூஜை வழிபாட்டு முறைகள் "சைவ ஆகமம்" முறைப்படித் தான் நடக்கும். ஆனால் சிதம்பரம் கோவிலில் தினசரி வழிபாடு வைதீக முறைப்படி சிதம்பரம் கோவிலுக்கு உரிமையாளர்களான தீட்சிதர்களால் நடை பெறுகிறது. இதுவும் எப்போது ஆரம்பித்தது எனச் சொல்லமுடியாது.

"ஆகம வழிபாடு" என்பது பின்னாட்களில் வந்தது. கி.பி.யில் வந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வைதீக வழிபாடு அதற்கும் முன்னேயே தோன்றியது. சிதம்பரம் தீட்சிதர்கள் ச்ரீநடராஜராலேயே நேரடியாக அவருடைய வழிபாட்டிற்காகக் கொண்டு வரப் பட்டவர்கள் என்றும், கோவில் வழிபாட்டு முறைப் "பதஞ்சலி முனிவர்" ஏற்படுத்திக் கொடுத்த முறைப்படி நடக்கிறது என்றும் சொல்கிறார்கள். Tamilian Antiquary, Vol.1 and "The Cholas" Prof. K.A.Nilakanda Sastri, இருவரும் எழுதியுள்ள சரித்திர ஆதாரங்களின் படியும், கோவிலின் உள்ளே கிடைத்துள்ள சில கல்வெட்டுக்களில் இருந்தும், கோவிலின் பழமையில் இருந்தும் இது எந்தக் காலத்தில் ஏற்பட்டது எனச் சொல்ல முடியவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

Tuesday, April 10, 2007

சிதம்பர ரகசியம் -4 -சரித்திரக் குறிப்புக்கள் -

இன்னும் நிறையப் புத்தகங்கள் இருக்கு சிதம்பரத்தைப் பத்தி. அவை யாவன:ஹேம சபாநாத மஹாத்மியம்: இதிலே தான் முதன் முதல் "நந்தனாரை" பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப் பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக் கொள்ளலாம். "நடேச விஜயம்" வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப் பட்டது. இவர் மராட்டிய அரசரான ஷாஜி-2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப் பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால் எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி-2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர் என்பவர் எழுதிய "சங்கரவிஜயம்" என்னும் நூலும், ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச் சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும், நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும் , அனந்தாச்சாரியா எழுதிய "ப்ரபன்ன மந்திரத்திலும்" சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள் இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே இருக்கும் கோவிந்த ராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும் இருக்கின்றன.

கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயத்தில்" சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை எடுப்பின் போது சேதமடைந்ததையும், நடராஜர் காப்பாற்றி வைக்கப் பட்டது பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள், வழிபாடு முறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.

நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும், சிவகாமசுந்தரியும் பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும், பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத் தவிர,"பூஜா பதஞ்சலம்" என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில் வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகள் "வைதீக" முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும் பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி, கோவிலைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், பரிவார தேவதைகள் பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப் போகிறேன். "ரகசியம்" கேட்பவர்கள் சற்றே பொறுக்கவும்.

Monday, April 09, 2007

சிதம்பர ரகசியம்- ஒரு யோசனை தேவை!

சிதம்பரம் பத்தி எழுதறதுக்கு முன்னே எல்லார் கிட்டேயும் ஒரு யோசனை கேட்கணும். சிலபேர் வெறும் சிதம்பர ரகசியத்தைப் பத்தி மட்டும் முன்னாலே எழுதிடுன்னு சொல்றாங்க. சிலர் விவரமா இன்னும் வ்யாக்ரபாதர் பத்தியும், பதஞ்சலி பத்தியும் எழுத முடியுமா? எது முதலில் வந்ததுன்னு?ம் கேட்கறாங்க. ஆகவே விவரமா எழுதலாமா? ச்ுருக்கமா எழுதலாமான்னு ஒரு யோசனை. ஆனால் கட்டாயம் கோவிலைச் சுத்தி இருக்கும் பரிவார தேவதைகளையும், அதோட "சித்சபை" என்னும் மூலஸ்தானத்தில் இருக்கும் நடராஜரோடும், சிதம்பர ரகசியத்தோடும் இணைந்திருக்கும் மற்ற கடவுள்கலைப் பற்றியும் கட்டாயம் எழுதினால் தான் தெரியும். ஆகவே அதை எழுதாமல் முடியாது. கொஞ்சம் கிரமாப் போனால் தான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். ஆகவே உங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.