எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 26, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருவாரூர்

விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். அவருடைய பக்தி அப்போது வீரமாக மாறிவிடும். இவருடைய இந்த வீரத்தின் காரணமாகவே விறல்மிண்டர் என்ற பெயரும் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள். விறல் என்றால் வீரம் என அர்த்தம். அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடித் தொழுது வழிபாடுகள் செய்துவருவார். ஆனால் ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிக்கும் முன்பு, முதலில் ஆலயத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டுவிட்டுப் பின்னரே ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.

அப்போது ஒருநாள் திருவாரூருக்கு வந்திருந்த இவர், அங்கே இருந்த சிவனடியார்களைக்கண்டு மகிழ்ந்து வணங்கி அவர்களைப் போற்றி நின்றார். அவர் வந்த சமயமே சுந்தரமூர்த்தி நாயனாரும், வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாதனைத் தரிசிக்க வந்தார். அடியார்களை மனதால் வணங்கும் பேறு படைத்த சுந்தரர், பக்குவம் மிகுந்திருந்த காரணத்தால் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களைக் கண்டும், அவர் வன்மீகநாதரைத் தரிசிக்கவெனச் சென்றார். அடியார்கள் எவரையும் (விறல்மிண்ட நாயனார் உட்பட) வணங்கவில்லை. ஆனால் விறல்மிண்டருக்கு இது மாபெரும் குற்றமாய்ப் பட்டது. சுந்தரருக்கு அகம்பாவம் மிகுந்துவிட்டது எனவும், அதனால் தான் அடியார்களை மதிக்கவில்லை என்றும் நினைத்துக்கொண்டுவிட்டார். ஏற்கெனவே கோபக்காரர் ஆன விறல்மிண்டருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. “முதலில் வணங்கத் தக்க அடியார்கள் தேவாதிதேவர்களுக்கும் மேலானவர்கள். இவர்களை வணங்காமல் இவன் நேரே உள்ளே செல்கின்றானே? இவன் ஒரு வன் தொண்டனோ? அடியார்களுக்குப் புறம்பானவனோ? ஆம், ஆம் இவன் வன் தொண்டனே, அடியார்களுக்குப் புறம்பானவனே. இவன் மட்டுமில்லை, இவனை வலிய வந்து ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனுமே அடியார்களுக்குப் புறம்பானவனாகிவிட்டான்.” என்று கோபத்துடனும், கடுமை தொனிக்கவும் சொன்னார்.

ஆனால் மனப்பக்குவம் பெற்றிருந்த சுந்தரருக்கோ விறல்மிண்டரின் இந்தச் செய்கையினால் கோபம் வரவில்லை. மாறாக அடியார்களிடம் பக்தி பூண்டிருக்கும் விறல்மிண்டரின் பக்தியை உயர்வாகவும், உன்னதமாகவும் எண்ணி மனம் மகிழ்ந்து பெருமையுற்றார். எம்பெருமானின் சரணங்களில் விழுந்து வணங்கினார். “இந்த அடியார்களுக்கு எல்லாம் நான் அடியானாக ஆகும் பேற்றை எனக்குத் தந்தருளவேண்டும்.” என்று ஈசனிடம் வேண்டினார். ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை. திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடிப் புகழும் அந்தப் பதிகங்களைக் கேட்டு விறல்மிண்டரின் மனமும் மகிழ்ந்தது. சுந்தரரின் பக்தி பக்குவமடைந்த பக்தி என்பதையும் புரிந்துகொண்டார்.

விறல்மிண்டரைப் பற்றிய வேறு மாதிரிக் கதையில் சுந்தரரின் மீது கோபம் அடங்காநிலையிலேயே விறல்மிண்டர் திருவாரூரை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருவாரூரை மிதிக்கவே மாட்டேன். அந்த எல்லைக்கு அருகிலே கூட வரமாட்டேன் என்று திட சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார். அவர் அடியார்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து வந்தார். தம் இல்லத்திற்கு வரும் அடியார்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால் அவர்கள் காலைத் துண்டித்துவிடுவாராம். இப்படி ஒரு கொடூரமான காரியத்தைச் சுந்தரர் மேல் கொண்ட கோபத்தினால் செய்து வந்ததாகச் சொல்கின்றனர்.

இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய ஈசன் சிவனடியாராக வந்து உணவுண்ண அமர்ந்தார். முன்னரே அவரின் ஊரைக் கேட்டு அறிந்த விறல்மிண்டரின் மனைவியார் சிவனடியாரான ஈசனிடம் திருவாரூர் என்ற பெயரைச் சொல்லவேண்டாம் எனக் கூறி இருந்தார். ஆனால் ஈசன் தாம் பார்த்துக்கொள்வதாகவும் விறல்மிண்டரின் கொடுவாளை வலப்பக்கமே அது வரை வைத்திருந்ததை அன்று மட்டும் இடப்பக்கம் வைக்குமாறும் மற்றதைத் தாம் பார்த்துக்கொள்வதாயும் சொல்லிவிடுகிறார். உணவுண்ண அமரும்போது தாம் திருவாரூரைச் சேர்ந்தவன் என சிவனடியாரான ஈசன் கூற, கோபம் கொண்ட விறல்மிண்டர் வலப்பக்கம் கை வாளை எடுக்கச் சென்றது. அங்கே வாள் இல்லாமல் தேட மனைவி இடப்பக்கம் வைத்திருப்பதைக் காட்ட அதை எடுப்பதற்குள் சிவனடியாரான ஈசன் எழுந்து ஓட்டம் பிடித்தார்.

விடாமல் அவரைத் துரத்தின விறல்மிண்டரைத் திருவாரூர்க்குள்ளேயே இழுத்துவிட்டார் ஈசன். பின்னர் சிரித்துக் கொண்டே ,”இது திருவாரூர், நீர் உள்ளே வந்துவிட்டீரே?” என்று வினவ, அதிர்ச்சி அடைந்து சுற்றும் முற்றும் பார்த்த விறல்மிண்டர் தம் காலைத் தாமே துண்டித்துக்கொள்கிறார். அவரைத் தேற்றிய ஈசன் தம் சுய உருவைக் காட்டுகிறார். சுந்தரரின் பக்தியைப் பற்றியும் அவரை உணரச் செய்த ஈசன் அவருக்கு முக்தி கொடுத்து அருளிச் செய்கிறார். கைலையிலே சிவகணங்களுக்குத் தலைவனாகும் பேறும் பெறுகின்றார்.

Tuesday, February 23, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருவாரூரின் அவலநிலை!

//திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா
ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி
விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்
இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.//

திருவாரூர்த் தலபுராணத்தில் மேற்கண்ட பாடல் காணப்படுகிறது. இந்த நகரில் ஏழடி நடந்தாலே காசிக்கு ஒப்பாகும் என்கின்றது. ஏழு கோபுரங்கள், ஐந்து ப்ராஹாரங்கள், பனிரண்டு மண்டபங்கள், தீர்த்தங்கள், நூற்றுக்கணக்கான சந்நிதிகள் என அனைத்தும் உள்ள பெரிய கோயிலாகும் இது. நிதானமாய்ப் பார்த்தால் காலை ஆறு மணிக்குப் போனால் பனிரண்டு மணி வரையிலும் நேரம் சரியாய் இருக்கும். செங்கல் திருப்பணியில் இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றிய பெருமை செம்பியன்மாதேவிக்கு உண்டு. இந்தக் கோயில் பிராஹாரத்திலேயே தனிக் கோயிலாக ஆரூர் அறநெறி என்னும் கோயிலும் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இந்தக் கோயிலையும் செம்பியன் மாதேவி அவர்களே திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தின் வரலாறு தனியானதொரு கதையாகும். பார்ப்பதற்குத் தஞ்சைக் கோயிலின் சிறிய மாதிரிக் கோயில் மாதிரி இருந்தாலும், இது அதற்கும் முன்னே கட்டப்பட்ட கோயில் என்கின்றனர்.
திருவாரூருக்குத் தெற்கே திருநெய்ப்பேர் என்னும் ஊரில் அவதரித்த நமிநந்தி அடிகள் என்பார் சிவ வழிபாட்டில் மிகச் சிறந்து விளங்கி வந்தா. நாள் தோறும் திருஆரூரில் ஆரூர் அரநெறி அசலேசசுவரருக்கு திருவிளக்கேற்றித் திருப்பணி புரிந்து வந்தார். ஒருநாள் மழைக்காலத்தில் விளக்கேற்ற நெய் தேடி நெடுந்தூரம் செல்லவேண்டி முடியாமல் போகவே பக்கத்து வீடுகளில் கேட்க, சமணர்களான அவர்கள் நமிநந்தி அடிகளையும் ஐயனையும் கேலி செய்ததோடு அல்லாமல், “உம் ஈசன் தான் கையிலேயே நெருப்பை வைத்திருப்பானே? அவனுக்கு எதற்குத் தனியாக விளக்கு?” என்று கேட்டனர். நமிநந்திஅடிகள் நொந்து போன மனதோடு திரும்பக் கோயிலுக்கு வந்து ஈசனை வேண்டி அழுது, அரற்ற, குளத்து நீரை முகந்து வந்து விளக்கிலிட்டு தீபம் ஏற்றுமாறு திருவருள் கூற, அவ்வாறே கமலாலயத்து நீரை எடுத்து வந்து விளக்குகளில் விட்டு ஏற்றினார். என்ன ஆச்சரியம் விட்ட நீரெல்லாம் நெய்யாக மாறி விளக்குகள் ஆயிரம் கோடி சூரியனைப் போல் பிரகாசித்தன.

அவரின் புகழையும், பக்தியையும் கூறும் கோயில் இந்த ஆரூர் அரநெறிக்கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு அசலேசுவரர் எனப் பெயர். தனி நந்தி, தனிக்கொடிமரம், தனி பலிபீடம் என அனைத்தும் தனியாக அமைந்த தனிக்கோயில் இது. இங்கே அக்னிஸ்தம்பமும், கையில் அழலேந்தி ஆடும் நடராஜர் சந்நிதியும் சிறப்பு. இங்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த செருத்துணை நாயனார் என்பவருக்கு சிவனுக்குச் செய்யும் அவமரியாதையைப் பொறுக்கமாட்டாதவராம். இந்தக் கோயிலுக்குப் பல்லவர்கோன் கழற்சிங்கனும், அவர் மனைவியான சங்கவையும் அசலேசுவரரைத் தரிசிக்க வந்தனர். பிராஹாரத்தில் செருத்துணை நாயனால் ஈசனுக்காக “திருப்பள்ளித் தாமம்” என்னும் மாலை கட்டிக் கொண்டிருந்தார். அங்கே வந்த அரசி, கீழே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்துமுகர்ந்து பார்க்க, மனம் பொறுக்காத செருத்துணை நாயனார் அரசியின் மூக்கை அரிந்துவிடுகிறார். அரச கோபத்துக்கு ஆளாகிவிட்டாரே என அனைவரும் கதிகலங்கி நிற்க, கழற்சிங்க அரசனோ, செருத்துணை நாயனார் செய்தது சரியே எனச் சொல்லி, பூவை முகர்ந்த மூக்கை மட்டும் அரிந்தால் போதுமா, எடுத்த கையையும் வெட்டவேண்டும் என்று சொல்லிக் கையையும் வெட்ட, அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். ஆனால் ஈசனோ அவர்கள் பக்தியின் திறத்துக்கு வைத்த சோதனை எனச் சொல்லி, அரசியின் மூக்கையும், கையையும் சரிசெய்து முன்போல் ஊனமற்றவளாக்கி விடுகிறார்.

இந்த லிங்கத்தை இங்கே ஸ்தாபித்தது நானூறு ஆண்டுகள் தவமிருந்து வழிபட்ட சமத்காரன் என்னும் அரசன் என்கின்றனர். சமத்காரன் ஈசனைத் தான் தவமிருந்து ஸ்தாபித்து வழிபடும் இந்தத் தலத்து லிங்கத் திருமேனியில் ஈசனின் ஜீவசக்தியோடு எழுந்தருளவேண்டும் என வேண்ட அவ்வண்ணமே ஈசன் எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. அன்னையின் பெயர் வண்டார்குழலி அம்மை. இந்தக் கோயில் விமானத்தின் நிழல் கிழக்குத் திசையில் மட்டுமே விழும் என்றும் சொல்கின்றனர்.

முசுகுந்தனுக்குத் தியாகேசரைக் கொடுத்த தேவேந்திரன் ஈசனிடமே மீண்டும் தேவருலகு வருமாறு வேண்ட, அவரோ, கிழக்குக் கோபுர வாயிலில் காத்திருக்குமாறு சொல்கின்றார். அவ்வழியே ஈசன் வரும்போது அழைத்துச் செல்லலாம் என்று காத்திருக்கின்றானாம். ஆனால் ஈசனோ, “விட்டவாசல்” என அழைக்கப் படும் வேறொரு வாயில் வழியே வெளியே சென்று, இங்கே காத்திருக்கும் தேவேந்திரனைப்பல யுகங்களாய்க் காத்திருக்க வைத்திருக்கிறார்./
இந்த ராஜ கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் பிள்ளையார். வீதிவிடங்க விநாயகர் என்ற பெயரில் காட்சி கொடுக்கிறார். பிள்ளையாருக்குப் பின்னே நந்தி! இங்கே பிரம்மநந்தி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். மழை வேண்டுமென்றால் சுற்றிலும் சுவர் எழுப்பி நீரை நிரப்பி வேண்டிக்கொண்டால் மழை கொட்டித் தீர்க்கும் என்கின்றார்கள். பசுக்கள் பால் கறப்பதற்கும் இந்த பிரம்ம நந்திக்கு அருகு சார்த்தி அதையே பிரசாதமாக எடுத்துச் சென்று பசுக்களுக்குக் கொடுக்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் மொட்டைத் தூண்கள் காட்சி அளிக்கும். இருநூறிலிருந்து ஐநூறு இருக்கலாமோ??

இந்தத் தூண்களின் மேல் பெரிய பந்தல்களாகப் போட்டுக் கூரை வேய்ந்து திருவிழாக்காலங்களில் தியாகேசரை எழுந்தருளச் செய்யும் மண்டபமாக மாற்றுவார்களாம். அதனால் மொட்டைத் தூண்களாகவே பல நூற்றாண்டுகளாய் இருக்கின்றன என்று கேள்வி. அடுத்து நாம் காண்பது தேவாஸ்ரய மண்டபம் அல்லது தேவாசிரிய மண்டபம். இந்த மண்டபத்திற்கு ஆயிரக்கால் மண்டபம் என்றும் சொல்லலாம். இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களுமே சிவனடியார்கள் என்றும், இவர்களை வணங்காமல் போனால் அடியார் கூட்டத்திலிருந்தே விலக்கப் படுவார்கள் என்றும் ஐதீகம். இதைத் தான் விறன் மிண்டர் சுந்தரருக்குச் செய்து காட்டினார். அது நாளை பார்ப்போமா?????

Saturday, February 20, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!

முதலில் இந்தக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா?? பலருக்கும் தெரிந்த கதையாகவே இருந்தாலும் நினைவு படுத்துக்கொள்ளலாமே?? திருமால் எந்நேரமும் தன் மனமாகிய தாமரையில் ஈசனை இருத்திப் பூஜித்து வந்தார். ஈசனைத் தனியாகப் பூஜிக்கவில்லை. கூடவே அன்னையையும், அவர்கள் அம்சமான சிவகுமாரனையும் சேர்த்தே வழிபட்டு வந்தார். பூசலார் நாயனால் தன் நெஞ்சிலே ஈசனுக்குக் கோயில் கட்டியதற்கு இப்போ திருமாலே முன்னோடி எனலாம். தன் மனதுக்குள்ளாகவே நெஞ்சே கோயிலாக சோமாஸ்கந்தரை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடலானார் காக்கும் கடவுளான விஷ்ணு. தேவேந்திரனுக்கு வழக்கம்போல் துன்பம் வந்திட சிவ வழிபாடு சிறந்தது என நினைத்து அவன் திருமாலிடம் வழிபடும் விதம் கேட்டான். தன் நெஞ்சிலே வைத்துப் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரை அவனிடம் கொடுத்து அந்தத் தியாகேசரை வழிபடச் சொன்னார் திருமால். தேவேந்திரனும் முறைப்படி வழிபட்டு வந்தான். அசுரர்கள் தொல்லை தாங்கவில்லை. இந்திரலோகத்தை வலன் என்னும் அசுரன் தாக்கிக் கடும்போர் புரிந்தான். பூவுலகில் அப்போது முசுகுந்தன் என்னும் சக்கரவர்த்தியின் ஆட்சி நடந்து வந்தது. முன் பிறவியில் ஒரு குரங்காய்ப் பிறந்திருந்த அவன், சிவ பூஜை செய்து வந்ததன் பலனாக இப்பிறவியில் மன்னனாய்ப் பிறந்து ஆண்டு வந்தான். ஆயினும் முன்பிறவியில் கேட்டிருந்த வரத்தின்பலனாகத் தன் முன்பிறவியை மறவா வண்ணம் அதே குரங்கு முகத்தோடேயே பிறந்திருந்தான். இந்திரனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இப்போது நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றதும், வலனைத் தோற்கடிக்க உதவி செய்தான். தேவேந்திரனும் அவன் உதவியை வேண்டிப் பெற்றுக்கொண்டான். வலன் தோற்கடிக்கப் பட்டான்.

தேவேந்திரன் வெற்றி கிட்டியதைக் கொண்டாடும் வண்ணம் தியாகேசப் பெருமானின் எதிரே நின்று, தன் நண்பனாகிய முசுகுந்தனை மார்போடணைத்து நன்றி கூறி, “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருவேன்.” என்று சொல்ல, முசுகுந்தன் அந்தத் தியாகேசரே வேண்டுமென்றான். தியாகேசரும் ஜீவசக்தியோடு இருந்தமையால் முசுகுந்தனைப் பார்த்துத் தன் கண்ணசைவால் பூவுலகம் கொண்டு செல்லுமாறு ஜாடை காட்ட, முசுகுந்தனும் மகிழ்ந்தான். தியாகேசரே வருகிறேன் என்றுவிட்டாரே?? முசுகுந்தன் கேட்ட பரிசை தேவேந்திரனுக்குக் கொடுக்க மனமில்லை. அவன் திகைத்துத் திடுக்கிட்டு, “இந்த விக்கிரஹம் திருமாலே வழிபட்டது. அவர் அனுமதி வேண்டும்” என்று சமாளிக்கப் பார்த்தான். ஆனால் திருமாலோ முழுமனதோடு அநுமதி கொடுத்துவிட்டார். ஆனால் இந்திரனுக்கோ தான் ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்த மூர்த்தியைக் கொடுக்க மனமே வரவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தான். பின்னர் இந்தத் தியாகேசரைப் போலவே இன்னும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்தான். எல்லாம் ஒன்று போலவே இருந்தது. அவற்றோடு மஹாவிஷ்ணு கொடுத்த தியாகேசரையும் வைத்தான். இவற்றில் எது உனக்குப் பிடிக்கிறதோ எடுத்துக்கொள் என்று சொல்ல, முசுகுந்தனோ இறை அருளால், மஹாவிஷ்ணு பூஜித்த தியாகேசர் தான் வேண்டும் என அடையாளம் காட்டினான்.

தேவேந்திரனுக்கு இப்போது மீண்டும் திகைப்பு. எனினும் முசுகுந்தனும் பக்தன். தன் நெருங்கிய நண்பன். அவனுக்கோ நாம் வாக்களித்துவிட்டோம். ஆகவே மறுக்கக் கூடாது என எண்ணி, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஏழு மூர்த்தங்களையுமே அவனுக்குக் கொடுத்துவிட்டான். பூலோகத்தில் வைத்து பூஜித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அந்த ஏழு மூர்த்தங்களே சப்த விடங்கர்கள் எனப்படுவார்கள். திருவாரூரில் தியாகேசர் மாசி மாசம் ரிஷபக் கொடியோட எழுந்தருளியதாக ஐதீகம்.

மற்றத் தலங்கள்: சப்த விடங்கர்கள் என்பது உளி கொண்டு செதுக்கப் படாத மூர்த்தங்களையே விடங்கம் அல்லது விடங்கர் என்று சொல்வார்கள். டங்கர் என்றால் உளியால் செதுக்கியது. இந்த ஏழு மூர்த்தங்களும் உளியால் செதுக்கப்படாத மூர்த்தங்கள்.

“சீரார் திருவாரூர் சென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில் பேரான
ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம் “

திருவாரூரில் வீதி விடங்கர்= ஆடியது அஜபா நடனம். மனதுக்குள்ளேயே ஜபித்துக்கொண்டு ஆடுவது. இது நம் சுழுமுனை சுவாசம் போல என்ற தத்துவமும் குறிப்பிடப் படுகிறது.

திருக்குவளை = அவனி விடங்கர். பிருங்க நடனம். மலருக்குள்ளே வண்டு சென்று ரீங்காரமிட்டுக் குடைவதைக் குறிக்கும் நடனம்.

திருநள்ளாறு= நக விடங்கர்- உன்மத்த நடனம். பித்தன், பிறைசூடியவன் அருளாளன் ஆடிய உன்மத்த நடனம், பித்துப் பிடித்தவன் போல் ஆடியதாம்.

திருநாகை = சுந்தரவிடங்கர்= தரங்க நடனம். கடல் அலைகள் எப்படி ஆடுகின்றன?? மேலேயும், கீழேயும், சுற்றிச் சுழன்றும், கரைக்கு வந்து மோதியும், திரும்பக் கடலுக்குள் சென்றும் ஆடிய ஆட்டமென்ன?? கடல் அலைகளைப் போன்ற நடனம்.

திருக்காராயில்= ஆதி விடங்கர்= குக்குட நடனம். கோழியின் நடை எப்படி இருக்கும்?? அதைப் போல். அனைத்தையும் படைத்தவன் ஆடும் ஆட்டமென்ன???

திருவாய் மூர்= நீல விடங்கர். கமல நடனம். பொய்கையில் பூத்திருக்கும் தாமரை மலர்போன்ற நடனம். தண்டு மட்டும் இருக்கும், மேலே பூ சுற்றுவது ஒற்றைக்காலில் நின்றாடுவது போல் இருக்குமல்லாவா??? அந்த நடனம்.

திருமறைக்காடு= புவனி விடங்கர் . ஹம்ச பாத நடனம். சொல்லவே வேண்டாம், அன்னப் பறவையின் நடனம் போல.

செங்கழுநீர்ப் பூவை வைத்துச் சரியாகக் கணித்தானாம் முசுகுந்தன் வீதி விடங்கரை. ஆகையால் அவருக்குச் செங்கழுநீர்ப் பூ சாற்றுவது விசேஷமாகச் சொல்லப் படுகிறது. மேலும் தேவேந்திரன் தியாகராஜ மூர்த்தங்களை அளிக்கும்போது, கூடவே திமிரி நாகஸ்வரம், பாரி நாகஸ்வரம், முகவீணை, யாழ், தவில், மத்தளம், ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தானாம். பாரி நாயனம் திருவாரூரில் மட்டுமே வாசிக்கப் பட்டு வந்தது. தற்போதும் இந்த வாத்தியங்கள் எல்லாம் தேவலோக கந்தருது என்னும் குறிப்பிட்ட மரபினரால் வாசிக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இதைத் தவிர பஞ்சமுக வாத்தியம் என்னும் ஐந்து முகங்களைக் கொண்டதொரு அபூர்வமான வாத்தியமும் இங்கே உண்டு. ஐமுக முழவம் எனப்படும் இதை சங்கரமூர்த்தி என்னும் கலைஞர் வாசித்து வந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாத்தியம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது. சுமார் நான்கடி க்கு மேல் சுற்றளவு கொண்ட இதன் ஒரு முகம் பாம்பு சுற்றியது போலவும், மற்றொரு முகம் ஸ்வஸ்திக் சின்னத்தோடும், மூன்றாம் முகம் தாமரைப் பூ போலும், நான்காம் முகம் அடையாளமில்லாமலும் இருக்கும். ஐந்தாம் முகம் நடுவில் உள்ளது, பெரியதாக இருக்கும் என்றார்கள். மான் தோலால் கட்டப் பட்டிருக்கும் இந்த வாத்தியத்தை நந்தி தேவர் ஈசனின் நடனத்தின்போது வாசித்து வந்ததாகவும், இப்போது வாசிக்கும் பரம்பரையினரை “பாரசைவர்கள்” என்று அழைக்கப் படுவதாகவும் தெரிய வருகிறது. இந்த வாத்தியத்தின் ஒவ்வொரு முகத்தையும் தனியாகவும், அனைத்தையும் சேர்த்தும் வாசிக்கலாம் என்கின்றார்கள். தனியாக வாசிக்கும்போது ஏழு முறையும், சேர்த்து வாசிக்கும்போது ஐந்து முறையும் வாசிக்கப் படுமாம். இந்த வாத்தியம் வாசிக்கவென்றே விதிமுறைகள் இருப்பதாகவும், அதைக்குறிப்பிடும் நூல் இருப்பதாகவும் சொல்கின்றனர். இது தவிரப் பாரி நாயனத்தைத் திருவிழாக் காலங்களில் வீதிகளில் வாசிப்பதாகவும், அதற்கும் எந்த எந்த இடங்களில் எந்தப் பண் வாசிக்கவேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் சொல்கின்றனர். இங்கே உள்ள விளக்கை விருடி விளக்கு என்கின்றனர். தேர் போன்ற அமைப்பில் மர வடிவ அமைப்பில் உள்ளது இது.

திருவாரூர்ப் பயணம் தொடரும்.

Wednesday, February 17, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவல நிலை!

தேவாரப் பாடல்கள் கிட்டத்தட்ட 350, திருவாசகப் பாடல்கள் 7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். இது தவிர, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சேக்கிழாரின் பெரிய புராணப்பாடல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழில் 11 பாடல்கள், வள்ளலாரின் திருஅருட்பாவில் திருவாரூர்ப் பதிகம் என்ற தலைப்பிலேயும் இடம்பெற்றுள்ளது திருவாரூர். வள்ளலார்,
“எந்தாய் ஒருநாள் அருள் வடிவின்
எளியேன் கண்டு களிப்படைய
வந்தாய் அந்தோ கடைநாயேன்
மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
செந்தாமரைத்தாள் இணை அன்றே
சிக்கென்றிறுகப் பிடித்தேனேல்
இந்தார் சடையாய் திரு ஆரூர்
இறைவா துயரற்றிருப்பேனே!” என்று கூறுகிறார். இதைத் தவிர பதினோராம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக்கோவை என்ற தலைப்பில் சேரமான் பெருமான் நாயனாரும் திருவாரூரைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார். திருஆரூர் புராணம், கமலாலயச் சிறப்பு, தியாகராஜலீலை, தேவாசிரிய மஹாத்மியம், திருவாரூர் நான்மணிமாலை, திருவாரூர் குறவஞ்சி, திருவாரூர் உலா, தியாகப் பள்ளு, திருவாரூர்க் கோவை, அஜபா நடேசர் பதிகம், திருவாரூர் வெண்பா அந்தாதி, கமலாம்பிகைத் தமிழ், தியாகராஜர் கழிநெடில், கந்தபுராணம், திருவாரூர் அந்தாதி, பரவைத் திருமணம், கமலாம்பிகை பதிகம் போன்ற பல தமிழ் நூல்களும், வடமொழியில் அஜபா ரகசியம், ஆடகேசுவர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், தியாகராஜலீலை, சமற்காரபுர மான்மியம், ஸ்ரீபுர மான்மியம், ஸ்கந்த புராணம், முகுந்த சஹஸ்ரநாமம், தியாகராஜாஷ்டகம், கமராம்பிகாஷ்டகம் போன்றவைகள் உள்ளன.

தஞ்சையை ஆண்ட ஷஹஜீ என்னும் மன்னன் தியாகேச பதமுலு, பஞ்சரத்ன பிரபந்தம், சங்கரபல்லக்கீ சேவா பிரபந்தம், சங்கர காளி நடன சம்வாதம் போன்ற தெலுங்கு மொழி நூல்களும், மராட்டியில் ராமபண்டிதர் என்பவர் தியாகேச மகாத்மிய, கமலாலய மகாத்மிய, தியாகராஜ விலாச, தியாகராஜ தியான, தியாகேசுவர ஆகமோத்தியான என்ற நூல்களும் திருஆரூரின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்கின்றது. எல்லாவற்றுக்கும் மேல் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகச் சிறப்பித்துச் சொல்லப் படும், சத்குரு தியாகையர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் அவதரித்தது இங்கே தான். சங்கீதம் தன் உச்சிக்குப் போய் இவர்களால் பெருமை பெற்றாற்போல் திருஆரூரும் இவர்களால் பெருமை பெற்றுள்ளது. முத்துசாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள் இன்றளவும் அனைத்து சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகளால் பாடப்படுவது திருவாரூரின் பெருமையைச் சுட்டுகிறது.

தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பலம் என்றால் திருஆரூர் பூவம்பலம் என்பார்கள். திருவாரூர் நான்மணிமாலையில் ஒரு பாடல்,
“காவாய் எனச் சிறு தெய்வந்தனைத் தினம் கை தொழுது
நாவாய் தழும்பப் புகழ்ந்து என் பயன் கதிநாடின், மும்மைத்
தேவாயத் தேவுக்கும் கோவாய் மணிப்பொற்சிங்காதனம் சேர்
பூவாய் மதிக்கண்ணி ஆரூர்ப் பிரான் பதம் போற்றுமினே!” என்று சொல்கிறது. திருவாரூர் தியாகராஜருக்குப் பலவகைப் பூக்களினால் அலங்காரம் செய்வார்கள். செங்கழுநீர்ப் பூ மிகவும் விசேஷம். மல்லிகை, முல்லை, இருவாட்சி, செங்குவளை, செவ்வந்தி ஆகிய மலர்களும் மருவு, மருக்கொழுந்து, வெட்டிவேர் போன்றவற்றையும் வைத்துச் சிறப்பான அலங்காரம் செய்யப் படும். இவை யாவும் உதிரிப் பூக்களாலேயே செய்யப் படுவதாய்ச் சொல்கின்றனர். அப்பர் பெருமான் இந்த அலங்காரத்தைப் பார்த்துவிட்டு” ஐயைஞ்சின் அப்புறத்தான்” என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். திருவாரூர் தியாகேசரைக் குறித்த இன்னொரு பாடலில் நாவுக்கரசர்,

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.
ஆறாம் திருமுறை திருவாரூர்த்தேவாரம் 26 பாடல் எண் 4

என்றும் சொல்லுகிறார். ஈசனின் வடிவங்கள் 25 எனச் சொல்லப் படுகிறது. அந்த 25 வடிவங்களில் இருந்தும் மாறுபட்ட வடிவம் இது. ஆகையால் இவரை “என்ன தன்மையன்றறிவொண்ணா எம்மானை” என்று சுந்தரரும் குறிப்பிடுகிறார். மேலும் திருவாரூர் ஈசனை நினைக்கும்போது,
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை 37 பாடல் எண் 2

கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே

சுந்தரர் பாடல் எண் 10

திருவாரூர் தியாகேசருக்குச் சுமார் அறுபது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலேசர், கம்பிக்காதழகர், கருணாகரத் தொண்டைமான், கருணாநிதி, சிந்தாமணி, செங்கழுநீர் அழகர், செம்பொன் தியாகர், செல்வத் தியாகர், செவ்வந்தித் தோடழகர், தியாக சிந்தாமணி, தியாகப் பெருமான், தியாக விநோதர், திருந்து இறைக்கோலர், திருவாரூர் உடையார், தேவ சிந்தாமணி, தேவர் கண்ட பெருமான், கனகமணித் தியாகர், தியாகராஜர், ரத்தின சிம்மாசனாதிபதி, செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், வேத சிந்தாமணி, அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், அணி வீதியழகர், ஆடவரக்கிண்கிணிக் கால் அழகர், உன்ன இனியார் என்ற பல பெயர்கள் இருந்தாலும் வீதி விடங்கர் என்ற பெயரே அனைத்திலும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இந்த வீதி விடங்கன் பற்றிய கதையும் அறிவோமல்லவா???

Monday, February 15, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருஆரூரின் அவல நிலை!

"தேரூரார் மாவூரார் திங்களூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
கார் ஊரா நின்ற கழனிச்சாயல்
கண்ணார்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர் தம் பெருமானே எங்குற்றாயே!"


திரு ஆரூர். இதன் பெருமையைச் சொல்லித் தெரியவேண்டுவதில்லை. பன்னிரு திருமுறைகளிலே அநேகமாய் எல்லாத் திருமுறைகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரே தலம் திருஆரூர். எப்போது எனத் தெரியாத காலத்தில் இருந்தே, நம் சிற்றறிவால் யோசித்துப் பார்க்கமுடியாத காலந்தொட்டே இங்கே ஈசனும், அம்பிகையும் குடி கொண்டிருக்கின்றனர். எப்போது எனத் தெரியாத காலத்தே முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளாய் ஐயனும், அம்மையும் வீற்றிருப்பதால் அந்தரகேசபுரம் எனவும், இந்தத் தலத்து ஈசன்,அம்மையோடு மட்டுமில்லாமல், தன் அருமை மகனான ஸ்கந்தனோடு காட்சி அளிப்பதால் ஸோமாஸ்கந்தர் என்னும் பெயர் பெற்று அந்தத் தத்துவத்தை விளக்குவதால் இவ்வூருக்கு ஸ்கந்தபுரம் என்னும் பெயரும் உண்டு. அம்பிகை இங்கே யோக மாதாவாக யோக சாத்திரத்தின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் விளக்கும் வண்ணம் யோகசக்தியாக வீற்றிருக்கிறாள். மூன்று தேவியரும் ஒன்றாகக் குடி இருக்கும் அந்தக் கமலாம்பிகையே இங்கே யோகசக்தியாக இருப்பதால் கமலாயபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. க என்னும் எழுத்து கலைமகளையும், ம என்னும் எழுத்து மலைமகளையும், ல என்னும் எழுத்து மகாலக்ஷ்மியையும் குறிக்கும்.

இம்முன்று தேவியரும் ஒருங்கே இந்தக் கோயிலில் வடமேற்குத் திசையில் ஈசான்யதிசையை நோக்கியவண்ணம், தலையில் பிறை சூடி, கங்கையும் கொண்டு யோகசக்தியாக விளங்குகிறாள் அன்னை. அம்பிகையின் அனைத்து சக்திகளும் ஒருங்கே இங்கே குடி கொண்டிருப்பதால் ஸ்ரீபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. ஆயிற்று, இவ்வளவு பெருமையுடனே அன்னையும், ஈசனும் குடி வந்தாயிற்று. குடிமக்கள் வரவேண்டாமா?? ஆடல்வல்லானின் சிவகணங்களே இங்கே குடி வந்தனராம். சிவகணங்களாக இவ்வூர்மக்களே விளங்குகின்றனராம். அதனால் இவ்வூரைக் கலிசெலா நகரம் எனவும் அழைக்கின்றனர். இந்த ஊரை ஒரு தட்டிலும், மற்ற தலங்களை இன்னொரு தட்டிலும் வைத்துத் தராசில் நிறுத்துப் பார்த்தபோது இவ்வூரின் பக்கமே தட்டு நிறை மிகுந்து காணப்பட்டதாக ஐதீகம். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரவரபுரம் எனவும் பெயர் உண்டு. திரு வாகிய திருமகளே இந்தத் தலத்தில் வழிபட்டு வரம் பெற்றதாலும் திருஆரூர் எனப் பெயர் வந்ததாகவும் சொல்கின்றனர். தேவாதிதேவர்கள் எந்நேரமும் கூடி வழிபட்டுக்கொண்டே இருப்பதாலும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த சிவனடியார்கள் குழுமி ஈசனைத் தொழுவதாலும் தேவாசிரியபுரம் எனவும் பெயர் பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் இது நிலம் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது. ப்ருத்வித் தலம் எனப் படுகிறது. உடலின் ஆறு ஆதாரங்களில் மூலாதாரத் தத்துவத்தை இது உணர்த்துகிறது. மூலட்டானமாக விளங்குவதால் மூலாதாரபுரம் எனவும், தேவேந்திரன் புற்று அமைத்து ஈசனை வழிபட்டதால் வன்மீகநாதபுரம் எனவும், முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு உதவி செய்து கிடைத்த ஈசனின் திருவடிவைப் பிரதிஷ்டை செய்திருப்பதால் முசுகுந்தபுரம் எனவும் அழைக்கப் படுகிறது.

இந்நகரம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானது. சப்தவிடங்கம் என்றால் என்ன என்பவர்களுக்கு. ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். கோயில் ஐந்துவேலியாம், தீர்த்தக்குளம் ஐந்துவேலியாம், செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்துவேலியாம், என்று சொல்லுவதுண்டு. திருவாரூர் கோயில் இந்த நிலப்பரப்பைப் பற்றி அப்பர் பெருமான் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோயில் என அழைக்கப் படும் தில்லைச் சிற்றம்பலத்தை விட அதிகமான பாடல்கள் பெற்றதி திருஆரூரே ஆகும். மூவர் பாடிய பாடல்களில் கிட்டத் தட்ட இருநூறு பாடல்களுக்கு மேல் திருவாரூர் பற்றிய பாடல்கள் உள்ளன. திருஞாநசம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில்,


சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே.
பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே. “
என்றும், திருநாவுக்கரசர்,

பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.

எனவும் பாடியுள்ளார். இதைத் தவிரவும் திருவாரூர் அறநெறி என்னும் பாடல்களையும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருவாரூர்க் கோயிலின் நில அளவைக் குறிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. பாடல் தேடினேன். தட்டச்சுத் தேடலில் கிடைக்கவில்லை. “அஞ்சணைவேலி” என ஆரம்பிக்கும் பாடல். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தில்

பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர்குவிமுலையாள் கூறாவெண் நீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் பகழேனே!”

என்கின்றார். இது தவிர திருமூலர் தம் திருமந்திரத்திலும் திருவாரூர் பற்றி அஜபா மந்திரம் என்னும் பகுதியில் சொல்கிறார்என்று தெரியவருகிறது.

Friday, February 12, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! சார்ங்கபாணி கோயில்!

மற்றப் பாடல்கள் பற்றி அந்த பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. மனம் வருந்திய நாதமுனிகள் பெருமாளை வேண்டிக் கொண்டு மற்றப் பாடல்களை எவ்விதம் கண்டறிவோம் என வருந்தினார். அவர் கனவில் தோன்றிய பெருமாள் திருநெல்வேலி மாவட்டம் (இப்போ தூத்துக்குடி மாவட்டத்தில்) ஆழ்வார் திருநகரிக்குச் சென்று பார்க்கும்படி சொல்ல அவ்வண்ணமே அங்கே சென்று நம்மாழ்வாரை வேண்ட அவரும், "ஓராயிரம் என்ன, நாலாயிரமும் தருவோம்" எனச் சொல்லி ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்துப் பாடல்களையும் தந்தருளினார். இவற்றை நாதமுனிகள் தொகுத்து உலகுக்கு அளித்தார். இப்பாடல்களின் தொகுப்பே நாலாயிர திய்வ பிரபந்தம் என்ற பெயரில் இன்றும் விளங்குவதோடு வைணவ குலத்தின் அரும்பெரும் பொக்கிஷமாகவும் கருதப் படுகிறது. இப்படி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுக்க இந்தத் தலத்து சார்ங்கபாணியே காரணமாக இருந்ததால் இவருக்கு "ஆராவமுதாழ்வார்" என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்தத் தலத்தை உபய ப்ரதான திவ்யதேசம் என்றும் கூறுவார்கள். பொதுவாக திவ்ய தேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே வழிபாடுகள் அனைத்தும், அலங்காரங்கள் அனைத்தும் செய்யப் படும். ஆனால் இந்தக் கோயிலில் மூலவருக்கான மரியாதைகள் அனைத்தும் உற்சவருக்குச் செய்யப் படுகிறது. மூலவருக்குப் பிரதிநிதியாக அவரின் பொறுப்பில் இருந்து உற்சவர் செயல்படுவதாக ஐதீகம். அதனால் இந்தத் தலம் உபய ப்ரதான திவ்ய தேசம் எனப்படுகிறது.


பெருமாள் தாயாரைத் திருமணம் செய்த தேரில் வந்ததால் கருவறையின் அமைப்பு தேரைப் போலவே உள்ளது. விமானத்தை வைதீக விமானம் என்கின்றனர். உற்சவர் ஆன உபய ப்ரதான மூர்த்திக்கு அருகேயே ஒரு சின்னஞ்சிறு தொட்டிலில் சந்தான கோபாலகிருஷ்ணன் சிலை வைக்கப் பட்டுள்ளது. அநேகமாய் எல்லா விஷ்ணு கோயிலிலும் காணமுடியும். என்றாலும் இங்கே குழந்தை பாக்கியம் இல்லாதோர் சந்தானகோபாலகிருஷ்ணனுக்கு விசேஷ வழிபாடுகள் செய்து பிரார்த்தித்துக்கொண்டு போய், கோரிக்கை நிறைவேறியதும் திரும்ப வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். நாங்க போன அன்றும் இரண்டு, மூன்று தம்பதிகள் பிரார்த்தித்துக்கொண்டு சென்றனர். மூலவர் மட்டுமில்லாமல் உற்சவரும் வில்லை வைத்திருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம். சார்ங்கம் என்றால் வில், அதனால் இவர் சார்ங்கபாணி, சாரங்கபாணி என்றால் அது(சிவன்) ஈசனைக் குறிக்கும். சிவன் கையிலிருக்கும் சாரங்கம் என்றால் மானைக் குறிக்கும் என நினைக்கிறேன். மூலவர் கையில் இருக்கும்சார்ங்கம் பார்க்கமுடிவதில்லை. (கேட்டுப் பார்த்துட்டேன், தரமாட்டேனுட்டார்) மகாமகம் கும்பகோணத்தில் பிரபலம் என்பதால் மகாமகத்தன்று நீராட வரும் நதி தேவதைகளும், தேவாதிதேவர்களும் சார்ங்கபாணியையும் வந்து வணங்குவதாக ஐதீகம். மாமனார் வீட்டோடு இருக்கும் இந்த மாப்பிள்ளைக்கு முதலில் பூஜை இல்லை. தாயார் சந்நிதியில் நடத்தப்பட்ட பிறகே பெருமாள் சந்நிதியில் நடக்கும்.

இந்த ஊரைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயண சாமி என்னும் பக்தர் தம் வாழ்நாளில் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்த சார்ங்கபாணி கோயிலின் திருப்பணிகளிலேயே செலவிட்டு வந்தார். பெருமாளின் பேரில் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் மிகவும் கஷ்டப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பணம் சேர்த்து இந்தக் கோயிலின் கோபுரத்தைக் கட்டி முடித்தார். ஒரு தீபாவளி தினத்தன்று மரணம் அடைந்த அவருக்கு ஈமச் சடங்குகள் செய்யக் குழந்தைகள் இல்லை. தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைப் பெருமாளே செய்தார். ஆனால் யாருக்குமே இது தெரியாது. அன்றைய நாள் கோயில் நடை அடைக்கப் பட்டு மறுநாள் கோயிலைத் திறந்து பார்த்தபோது பெருமாள் ஈரவேட்டியுடன், மாற்றிப் போடப் பட்ட பூணூலுடன், தர்ப்பைகள் அங்குமிங்கும் கிடக்க ஈமச் சடங்குகள் செய்து முடித்த கோலத்தில் காட்சி அளித்தார். திகைத்த பட்டர்மார்களுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. இப்போதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று உச்சிக்காலத்தில் பெருமாள் தன் பக்தருக்காக சிராத்தம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் இதை பக்தர்கள் காணமுடியாது. தன் உண்மையான பக்தனுக்காகக் கடவுள் எவ்வளவு தூரமானாலும் இறங்கி வந்து சேவை சாதிப்பார் எனப்புரிய வைக்கும் அரிய நிகழ்வு இது.

அடுத்து நாம் பார்க்கப் போவது மிக மிக முக்கியமான கோயில். ஆயிரம் வேலி நிலம் உள்ள பணக்கார சுவாமியையும், அம்மனையும் பார்க்கப் போகிறோம். அதோடு அவர்கள் இப்போது பிச்சைக்காரர்களை விட மோசமான கோலத்தில், மோசமான ஸ்திதியில், திருப்பணி என்பதையே கண்டு பல்லாண்டுகளான ஒரு கோயிலில் குடி இருப்பதையும் பார்க்கப்போகிறோம். தமிழ்நாட்டிலே நீதி நெறி தவறா அரசர்கள் பலர் ஆண்டு வந்தாலும் இந்த ஊரின் மன்னன் மிகவும் பிரசித்தி பெற்றவன். ஒரு பசுங்கன்றுக்காகத் தன் அருமை மகனையே பலியிடத் துணிந்தவன். அத்தகைய மன்னர்கள் ஆண்ட நகரிலே உள்ள கோயிலின் நிலைமை இன்று பரிதாபமாக இருக்கிறது. கண்ணில் ரத்தம் வருகிறது.

Thursday, February 11, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! குடந்தை சார்ங்கபாணி!

பிருகு மஹரிஷி(பிருங்கி முனிவர் இல்லை) மும்மூர்த்திகளிலும் பொறுமையும், சாந்தமும், அன்பும் கலந்து பக்தனுக்கு அருள் பாலிப்பதில் மஹாவிஷ்ணுவிற்கு நிகரில்லை எனச் சொல்ல, அதை ஏற்காத மற்ற ரிஷிகள் அவரிடம் அதை நிரூபிக்கச் சொன்னார்கள். வைகுந்தம் சென்ற பிருகு மஹரிஷி, திருமாலின் மார்பில் எட்டி உதைக்கிறார். தன் பக்தன் ஆன பிருகு தன்னுடைய மார்பில் உதைத்ததால் ரிஷியின் கால்கள் நோகுமோ என எண்ணிய மஹாவிஷ்ணு அந்தக் கால்களைப் பற்றி அன்போடு பிடித்துவிட்டார். ஆனால் அவர் மார்பில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீயின் மேல் அவர் பாதம் பட இருந்தது. அதை மஹாவிஷ்ணு தடுக்கவில்லை. அனைத்து வளங்களையும் அளிக்கவல்ல ஸ்ரீயின் மேலே பாதம் பட இருந்ததால்/ ஒருவேளை பட்டிருந்தாலோ அவருக்கு வறுமை ஏற்படும், அதைத் தடுக்கவில்லையே என மஹாவிஷ்ணுவை ஸ்ரீ கேட்க, அவர் மெளனம் சாதித்தார்.

பிருகு ரிஷியோ தன் தவறை உணர்ந்து ஸ்ரீயிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், "தாயே. எம்பிராட்டி, யாகத்தின் பலனை தெய்வங்களில் சாத்வீகமானவருக்கே அளிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்திருந்தனர். அதை அறியும்பொருட்டே நான் நடிப்பிற்காகவே விஷ்ணுவை உதைத்தேன். நீ கோபம் கொள்ளாதே! என்னை விட்டுப் பிரிய எண்ணும் நீ என் மகளாக பிறந்து வளர்ந்து வரும் பலனை எனக்கு அளிப்பாய். உன்னை இந்த மஹாவிஷ்ணுவிற்கே மணமுடித்து அவருக்கே நான் மாமனாராக ஆகவும் விரும்புகிறேன். தயவு செய்து பொறுத்துக்கொள்வாய்!" என வேண்டினார். ஏற்கெனவே விஷ்ணுவிடம் கோபம் கொண்டிருந்த ஸ்ரீயும் இப்போது நல்ல தருணம் என நினைத்து பிருகுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஸ்ரீ மகளாகப் பிறக்கவேண்டுமெனில் பிருகு முனிவர் இன்னும் தவம் செய்யவேண்டும் என்றும் கும்பகோணம் பகுதியில் போய்த் தவமிருக்குமாறும் கூற, அவ்வாறே பிருகு தவம் இருந்தார்.

இங்கே இருந்த ஹேம புஷ்கரிணி என்னும் தீர்த்தத்தில் தினம் பூத்துக்கொண்டிருந்த தாமரை மலர்கள் ஒன்றில் ஸ்ரீ அவதாரம் செய்தாள். பூஜைக்கு மலர் பறிக்க வந்த பிருகு ரிஷி அந்த மலரில் ஸ்ரீயைக் கண்டதும் எடுத்துத் தன் அருமை மகளாக வளர்த்து வந்தார். கோமளவல்லி என்ற பெயரையும் சூட்டினார். திருமாலையே மணம் முடிக்க ஆசைப்பட்ட அவளுக்குத் தேடிப்பிடித்துத் திருமாலையே மணமகனாகவும் கொண்டு வந்தார். திருமால் சார்ங்கம் என்னும் வில்லேந்தி ரதத்தில் வந்தார். விளையாட்டிற்குப் பாதாளத்தில் ஒளிந்து கொள்ள, ஸ்ரீக்குக் கலக்கம் ஏற்பட்டது. பின்னர் அவள் முன் தோன்றிய சார்ங்கபாணி அவளை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் "பாதாள ஸ்ரீநிவாசர் சந்நிதி" என அழைக்கப் படுகிறது. திருமணம் ஆனதும் மேட்டுப் பகுதியில் மேட்டு ஸ்ரீநிவாசராக இரு தாயார்களுடன் தனி சந்நிதியில் இருக்கிறார்.
இந்தத் தலம் தாயாரின் அவதாரத் தலம். தாயாருக்கே இங்கே முக்கியத்துவம். முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைப் பார்க்கச் செல்லவேண்டும் என்பதும் ஐதீகம்.

நாம் தரிசனத்துக்குச் செல்லும் அமைப்பே அவ்வாறு அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பும், சொர்க்கவாசலும் கிடையாது. பெருமாள் நேரே வைகுந்தத்தில் இருந்தே இங்கே வந்துவிட்டதால் இவரை வணங்கினாலே பரமபதம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இரு வாசல்கள் உள்ளன. உத்தராயண வாசல், தக்ஷிணாயண வாசல். தற்சமயம் தை மாசம் முதல் ஆனி வரை உத்தராயண வாசலும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயண வாசலும் திறந்திருக்கும். மூலவர், உற்சவர் இருவரும் சார்ங்கம் என்னும் வில்லை வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆராவமுதன் என்னும் அழகிய தமிழ்ப்பெயராலும் பெருமாள் அழைக்கப் படுகிறார். திருமழிசையாழ்வார் இந்தத் தலத்திற்கு வது பெருமாளை வணங்கி. "நடந்து, நடந்து உன் கால்கள் வலிக்கிறதோ? பள்ளி கொண்டுள்ளாய்?" என்ற பொருள் தரும் பாசுரம் ஒன்றைப் பாட, சுவாமி எழுந்து அவர் பாடலைக் கேட்டார்.

சுவாமியின் அருளைக் கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், இனி அனைத்து பக்தர்களுக்கும் இந்தக் கோலத்திலேயே காட்சி கொடுக்குமாறு பெருமாளை வேண்ட, பெருமாளும் அவ்வாறே அருளினார். முழுமையாகப் பள்ளி கொண்டிராமல் சற்றே எழுந்த கோலத்தில் பெருமாள் காணப்படுவார். இதை உத்தான சயனம் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்தப் பெருமாளைக் காணவந்த நாதமுனிகள் அங்கே இருந்த பக்தர்கள் பாடிய நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்டார். ஒரு பாசுரத்தில், "ஓராயிரத்துள் இப்பத்தும்" என வரவே, இதைக் கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளனவா?" என வியந்தார்.

Tuesday, February 09, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! சார்ங்கபாணி கோயில்!

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. ஆழ்வார்கள் அதிகமான பாடல்கள் பாடி மங்களாசாஸனம் செய்த கோயில்களிலும் இது முக்கியமானது. மற்ற இரு கோயில்கள் முதலில் கோயில் என அழைக்கப் படும் ஸ்ரீரங்கம் பதினோரு ஆழ்வார்களாலும், திருப்பதி பத்து ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்டது. இந்தக் கோயிலை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்திருக்கின்றனர். முதல் மூன்று ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வாரும், பின்னர் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் போன்றவர்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்டுள்ளது.

இது ஒரு மாடக்கோயில். சக்கரபாணி கோயிலும் ஒரு மாடக்கோயிலே. இதுவும் கும்பகோணத்திலேயே உள்ளது. இந்த சார்ங்கபாணி கோயிலில் பெருமாள் கையில் வில்லுடன் காணப்படுவதால் சார்ங்கபாணி என அழைக்கப் படுகிறார்.கோயில் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது. காவேரியில் நீராடலும், அரிசிலாற்றில் நீராடலும் விசேஷமான சிறப்பாய்ச் சொல்லப் படுகிறது. அரி சொல் ஆறு என்பதே அரிசிலாறு என வழங்கப்படுகிறதாய்க் கேள்விப் பட்டேன். கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். பெரிய கடைத்தெருவிலிருந்து நடந்தே செல்லலாம். தேரின் அமைப்பில் சுவாமி சந்நிதி இருக்கும். இங்கேயும் சக்கரபாணி கோயிலைப் போலவே உத்தராயண, தக்ஷிணாயண வாசல்கள் உள்ளன. இந்த வாயில்கள் தேரின் அமைப்பின் இருபுறமும் காணப்படும். உத்தராயணம் நடக்கும்போது உத்தராயண வாயில் வழியாகவே செல்லவேண்டும். தக்ஷிணாயண வாயில் அடைத்திருக்கும். தக்ஷிணாயணம் ஆரம்பித்ததும் உத்தராயண வாயில் அடைக்கப்பட்டு தக்ஷிணாயண வாயில் திறக்கப் படும். தேரின் சுற்றுப்புறச் சுவரில் அழகான சிலைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மிகப் பெரிய கல் சக்கரங்களும் காணப்படுகின்றன. அவற்றிற்குக் கல்லிலேயே கடையாணியும் செதுக்கப் பட்டிருக்கும். ம்ம்ம்ம் படம் எடுக்க முடியாது. கண்டிப்பாக அநுமதி கொடுக்கவில்லை. :(

இந்தக் கோயிலின் கோபுரம் தமிழ்நாட்டின் உயரமான கோபுரங்களில் மூன்றாவதாய்ச் சொல்லப் படுகிறது. முதலில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சுமார் 240 அடியும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் சுமார் 170 அடியும் எனச் சொல்வார்கள். இந்தக் கோயில் கோபுரம் 150 அடிக்குக் குறையாமல் இருக்கும். சந்நிதித் தெருவில் நுழையும்போதே தேர்முட்டி எனப்படும் ஸ்வாமி தேர் வைக்கப் பட்டிருக்கும் இடம் காணப்படும். இந்தத் தேரையும் மிகவும் சிறப்பித்துச் சொல்கின்றனர். சித்திரத் தேர் என அழைப்பார்களாம். திருமங்கை ஆழ்வார் ரத பந்தம் என்னும் பாடல் அமைப்பில் இந்தத் தேரின் அமைப்பைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாடல் பாடி இருப்பதாகவும் சொல்கின்றனர்.

பெருமாளுக்கு எக்கச்சக்கமான சிறப்புகள் உண்டு. முதலில் தலவரலாற்றைப் பார்ப்போமா??

Sunday, February 07, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 7 சிக்கல் சிங்காரவேலர்!

வலி இருந்தாலும் பயணத்தைத் தொடரலாம் என்று என் கணவர் சொன்னதால் அரை மனதோடு சிக்கலுக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். திரும்பிவிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அவர் தோள்பட்டையில் வலி மட்டும் தான் வேறே ஒண்ணும் இல்லைனு சொன்னார். சரினு நம்பிட்டேன். ஆனால் நேரமாக நேரமாக வலி ஜாஸ்தியாகி இருக்கிறது. வண்டி போய்க்கொண்டிருந்தது. சிக்கலில் வலி நிவாரணிகளை வாங்கிக்கொண்டு போகலாம் என்ற முடிவு எடுத்தோம். மாத்திரைகள் எதுவும் சாப்பிடமுடியாது. ஆகையால் வலிக்கான தைலமோ, அல்லது லோஷனோ, ஆயிண்ட்மெண்டோ வாங்கிக்க முடிவு செய்துகொண்டு சிக்கலுக்கு வந்து சேர்ந்தோம். கோச்செங்கணான் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிக்கல் சிங்காரவேலன் என்றே கேள்விப்பட்டுச் சென்ற எனக்கு அங்கே மூலவர் ஈசன் என்பதும், அம்பிகையும் இருக்கிறாள், சிங்காரவேலர் வேலை மட்டும் வாங்கிக்கொள்ள இங்கே வந்தார், என்பதும் புதிய விஷயமாய் இருந்தது. மூலவரே சிங்காரவேலர் என நினைத்திருந்தேன். என்றாலும் குமரன் இருப்பதாலோ என்னமோ மலை போன்ற உயரமான அமைப்பிலேயே கோயில் இருந்தது. ராஜகோபுரம் உள்ளது. நுழைந்ததுமே கல்யாணமண்டபம், கார்த்திகை மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயிலும் சுத்தமான பராமரிப்பில் காணப்பட்டது. இங்கேயும் சனைசரர் தனியாகவும், நவகிரஹ சந்நிதியும் காணப்பட்டது. இவை கீழேயே இருந்தன. வசதியாகப் போய்ச் சுற்றி இருக்கலாம். நேரம் இப்படி இருக்கையில் யாரை என்ன சொல்ல முடியும்?? இனி சிக்கல் தலவரலாற்றைப் பார்ப்போமா??

மல்லிகை தான் இங்கே தலவிருக்ஷம் என்றார்கள். ஒரு காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடமாம். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான கோயில். வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. ஈசனைத் தினமும் வழிபட்டு வந்தாராம் வசிஷ்டர். அப்போது காமதேனு ஒரு சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்து இந்தத் தலத்திற்கு வந்தது. இங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடியது. நீராடும்போது காமதேனு பாலைச் சொரிய, அந்தப் பால் பெருகிக் குளமே பாற்குளமாக மாறியது. க்ஷீரபுஷ்கரணி என அழைக்கின்றனர். பெருகி வந்த பாலில் இருந்து உருண்டு, திரண்டு வந்த வெண்ணெயை எடுத்து வசிஷ்டர் சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முனைந்தார். அது அவரால் முடியாமல் வெண்ணெய் லிங்கம் அவர் கையிலேயே சிக்கிக் கொண்டது. சிக்கிக்கொண்ட இடமாதலால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்று சொல்கின்றனர். ஈசனின் திருமேனி வெண்ணெய்த் திருமேனி என்றும் நவநீதேஸ்வரர், திருவெண்ணெய்நாதர் என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார்.

அன்னையின் பெயர் வேல்நெடுங்கண்ணி. இங்கே தான் சூரபத்மனை வதம் செய்வதற்காக வந்த சிங்காரவேலனுக்கு அன்னை வேல் கொடுத்து ஆசிகள் வழங்குகிறாள். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சஷ்டித் திருவிழா நடைபெறும்போது வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் கோயிலுக்கு வந்து அமர்ந்த பின்னால், வேலின் வீரியம் தாங்காமல் சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சி இன்றளவும் நடைபெறுகிறது. பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று சொல்கின்றார்கள். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற வழக்குச் சொல்லும் இருக்கிறது என்றனர்.

இதைக் கட்டுமலைக்கோயில் என அழைக்கின்றனர். கோயிலின் மையத்தில் உள்ள சில படிகள் மூலம் மேலே ஏறிச் சென்று திருவெண்ணெய் நாதரைத் தரிசனம் செய்யவேண்டும். அப்பாவிற்கு அருகேயே பிள்ளையின் சந்நிதியும் காணப்படுகிறது. சிக்கல் சிங்காரவேலர் மிக மிக அழகர். பார்க்கக் கண் கோடி வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்கலாம். உற்சவ விக்கிரஹம். சில்பா சிற்பி செய்த சிலை ஷண்முகர் வடிவம் வெளிப்பிரஹாரத்தில் பரிவார தேவதைகளில் ஒன்றாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். இந்தக் கட்டுமலையின் கீழேயே அன்னை வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி உள்ளது. அன்னை பிள்ளைக்கு வேல் தருவது போன்றதொரு சிற்பம் சந்நிதியின் மேல் பாகம் காணப்படுகிறது. பெருமாள் தனிச் சந்நிதி கொண்டு கோலவாமனப் பெருமாள் என்ற பெயரில் காணப்படுகிறார்.

இம்மாதிரியாக ஈசனும், திருமாலும் ஒரே கூரையின் கீழ் குடிகொண்டு அருள் பாலிக்கும் கோயில்கள் பத்தோ, பனிரண்டோ தான் இருப்பதாயும், சிக்கல் அதில் மிக மிக முக்கியமான ஒன்று எனவும் கூறினார்கள். இரு தேவியருடனும் காட்சி தருகின்றார் பெருமாள். ஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. வாமன அவதாரம் எடுத்தபோது பெருமாள் இந்தத் தலம் வந்து ஈசனை வழிபட்டு மஹாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாய்க் கூறப்படுகிறது. இங்கே திருமாலைத் தவிர, விஸ்வாமித்திரர் பெண்ணிடம் சபலம் கொண்டு இழந்த தவவலிமையைத் திரும்பப் பெற்றிருக்கிறார் எனச் சொல்கின்றனர். மேலும் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷமும், இங்கே தான் நீங்கியது எனச் சொல்கின்றனர். அகத்தியரும் வந்து வழிபட்டதாய்க் கூறுகின்றனர். இந்தத் தலத்தில் ஈசன் மட்டுமில்லாமல், முருகன், திருமால், அநுமன் என நால்வருமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை இங்கேதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. அம்மனின் சக்தியே வேலாக மாறி முருகனுக்குக் கொடுக்கப் பட்டதால் இந்த அர்ச்சனையை இங்கே சஷ்டி விழா நடக்கும்போது மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அன்னைக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. சக்தி பீடங்களில் இதுவும் மிக முக்கியமானதாய்ச் சொல்லப் படுகிறது. முருகனுக்கு வேல் வழங்கும் முன் அன்னை தவமிருந்ததாகவும், அப்போது அஞ்சு வட்டத்து அம்மன் என்ற பெயரில் வழங்கப்பட்டாள் எனவும், அந்த அஞ்சு வட்டத்து அம்மன் கோயில் அருகிலுள்ள கீவளூர் எனப்படும் கீழ்வேளூரில் இருக்கிறது எனவும் தெரிய வருகிறது. அந்தக் கோயிலுக்குப் போகமுடியவில்லை. இங்கேயே அவரால் நடக்கமுடியலை. ஆகவே நேரே திருவாரூர் போனோம்.

திருவாரூர் கோயிலைப் பற்றி எழுதும் முன்னர் கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் பற்றிய சிறு குறிப்பு. திருவாரூர் கோயில் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்ததும் சிறு வயதிலிருந்து அங்கே அடிக்கடி சென்று வந்த என் கணவருக்குக் கண்ணீரே வந்துவிட்டது. ஒரு பதிவில் எழுதி முடிக்கவேண்டிய விஷயமும் இல்லை. திருவாரூர் பத்தி சிதம்பரம் அளவுக்கு எழுத உதவிகள் கிட்டவில்லை எனினும் தெரிந்த விஷயங்களே நாலைந்து பதிவுக்கு மேல் வரும். ஆகவே கடைசியில் திருவாரூர். அடுத்து கும்பகோணம் சார்ங்கபாணி கோயில். இதுவும் ஒரு மாடக்கோயிலே. நாளை பார்ப்போம்.

Friday, February 05, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 6 எட்டுக்குடி!


மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ஆறேகால் மணிக்கெல்லாம் வண்டி ஓட்டுநர் வந்துவிட்டார். எட்டுக்குடி, சிக்கல் ஆகிய இடங்கள் கொஞ்சம் தொலைவில் இருப்பதால் காரே வசதி என ஒருநாள் வாடகைக்குப் பேசிக்கொண்டிருந்தோம். வண்டி திருவாரூர் நோக்கிச் சென்றது. குடவாசல் வரைக்கும் சாலை மோசம். குடவாசல் தாண்டியதும் கண்ணாடிப் பளபளப்பில் சாலை. அருமையாக இருந்தது. வளைந்து வளைந்து செல்லும் தஞ்சை மாவட்டச் சாலைகளில் பிரயாணம் செய்வதே தனி அநுபவம் என்றால் சாலையும் அற்புதமாக அமைந்துவிட்டால் கேட்கவா வேண்டும்?? பயணத்தின் அலுப்பே தெரியவில்லை. இந்தச் சாலையை தேசீய நெடுஞ்சாலையில் சேர்த்திருப்பாங்க என என் கணவர் சொல்ல, வண்டியின் சாளரம் வழியே வெளியே உள்ள அறிவிப்புப் பலகைகளைப் பார்த்துக்கொண்டே செல்லும் வழக்கமுள்ள நான் ஒரு இடத்தில் இது மாநில அரசின் சாலைதான் என்பதைச் சுட்டிக் காட்டினேன். அப்புறம் ஓட்டுநர் சொன்னார். திருக்குவளை வரையிலும் சாலை நன்றாக இருக்குமென்று. ஒரு மணிநேரம் ஆகுமெனச் சொன்ன திருவாரூருக்கு நாற்பத்தைந்து நிமிடத்தில் நெருங்கிவிட்டோம். போகும் வழியிலேயே எண்கண். சாலை பிரிந்து சென்றது. நாங்கள் அங்கே முதலில் செல்ல ஆசைப்பட, ஓட்டுநரோ அங்கே கோயில் திறந்திருக்குமா சந்தேகம் என்று சொன்னார். சில சமயங்களில் இம்மாதிரியான இடங்களில் ஓட்டுநர்கள் சொல்வதே சரியாகவும் இருக்கும்.

ஆகவே திருவாரூர் சென்று பசியாறிவிட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். திருக்குவளையும் தாண்டிச் செல்லவேண்டும் எட்டுக்குடிக்கு. இந்த எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், சிக்கல் சிங்காரவேலன் ஆகியோரை ஒரே சிற்பி செதுக்கிய கதையை நான் எழுதி உள்ளேன். நீங்களும் படித்திருப்பீர்கள். படிக்காதவங்களுக்குச் சுட்டி இதோ இங்கே!

முதலாவது


இரண்டாவது


மூன்றாவது


நான்காவது


ஆகவே இந்தச் சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என இயல்பாகவே ஆசை மிகுந்திருந்தது. எட்டுக்குடியும் வந்தது. உள்ளே சென்றோம். கோயில் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகிறது. காலை வேளையாகையால் அதிகமாய்க் கூட்டம் இல்லை. சொல்லப் போனால் சந்நிதியில் நாங்கள் மட்டுமே. சந்நிதிக்கு எதிரே மக்கள் தரிசனம் செய்யக் கம்பிக்கிராதியால் தடுப்புப் போட்டிருந்தது. தடுப்பு ஒரு மேடையில் இருக்க, அந்த மேடை நாலாபக்கமும் சறுக்கினாற்போல் கீழே இறங்கி இருந்தது. புதிதாக வருபவர்கள் அத்தனை உயர மேடையில் ஏறும்போது கொஞ்சம் தடுமாறித்தான் போகணும்.

வழவழவென்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான் தடுமாறுவேன் என நினைத்த அவர் கொஞ்சம் தடுமாறிவிட்டார். ஏறும்போது சறுக்கிவிடுகிறது. எனக்கும் கொஞ்சம் சறுக்கத் தான் செய்தது. அத்தனை உயர மேடையில் ஏறும் இடம் சறுக்கலாய்ப் போட்டிருக்கவேண்டாமோ?? அங்கேயே விழுந்திருக்கவேண்டியது. தூண் எதிலாவது மோதி இருக்கணும். எதிரே கம்பிக்கிராதியைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொண்டுவிட்டார். முருகனுக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. எப்படி நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அப்படிக் காட்சி அளிப்பானாம் எட்டுக்குடி முருகன். அன்றைக்கு எங்களுக்கு ஆசிகள் தரும் முதியவராகவே எனக்குத் தோன்றினார். கந்த சஷ்டி கவசம் சொல்லணும்னு கூடத் தோணலை. முருகனைப் பார்த்த கண் எடுக்கமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். தீப ஆராதனை காட்டி விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டும், முருகனைப் பார்த்துக்கொண்டே இருக்கணும்போல் இருந்தது. ஒருவழியாய் தரிசனம் முடித்துக்கொண்டு பிரஹாரம் சுற்றிக்கொண்டே வந்தோம்.

இந்தக் கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என்று சொல்கின்றனர். வான்மீகர் என்னும் சித்தர் இங்கே சமாதியானதாகவும், கோயிலின் தல விருக்ஷமான வன்னிமரத்தடியில் இவர் சமாதி இருக்கிறது என்றும் காட்டினார்கள். முருகனின் ஆறுமுகங்களுக்கும் அபிஷேஹம், அலங்காரம், நைவேத்தியம் செய்யப் படுகிறது. சத்ரு சம்ஹார திரிசதை என்னும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. எதிரிகளால் துன்பம் நீங்க இந்த வழிபாடுகள் பிரார்த்தித்துக்கொண்டு பிரார்த்தனை செய்பவர்களால் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிக் கோயிலில் நடத்துகின்றனர். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்கு மட்டுமே பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிரி அழியப் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தால் பலன்கள் எதிர் விளைவை உண்டாக்குகிறது என்றும் சொன்னார்கள். தேய்பிறை சஷ்டி விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது.

ஒவ்வொரு வருஷமும் சித்திரா பெளர்ணமியில் முதல்நாள் திறக்கும் நடை மறுநாள் முடியும் வரை அடைக்கப் படாமல் இடைவிடாமல் பாலபிஷேஹம் நடக்கும் எனச் சொல்லுகின்றனர். பெளர்ணமிக்கு முதல்நாள் தேரோட்டம் நடக்கும். சித்திரா பெளர்ணமிக்கு முதல் நாளில் ஆரம்பிக்கும் பாலபிஷேஹத்திற்கும், மறுநாள் பாலபிஷேஹத்திற்கும் குறைந்தது முப்பதாயிரம் பால்காவடிகளாவது வருமென்று சொன்னார்கள். கந்த சஷ்டி விழாவும், வைகாசி விசாகமும் நடக்கும். மகனுக்கு இவ்வளவு திருவிழா நடக்கும்போது தந்தையைச் சும்மா விட முடியுமா? மார்கழி திருவாதிரையில் ஈசனுக்கு விழா எடுக்கப் படும்.

இங்கே பிராஹாரம் சுற்றிக்கொண்டு வரும்போது ஆங்காங்கே பரிவார தேவதைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். கோபுர வாயில், கொடிமரத்துக்குக் கிட்டே வரும்போது சுற்றிலும் இடப்பக்கம் உள்ள பெரிய திண்ணையில் பரிவார தேவதைகளின் சந்நிதிகள் இருந்தன. கோபுர வாயிலுக்கருகே நவகிரஹ சந்நிதியும், அதை ஒட்டியே சனைசரர் சந்நிதி தனியாகவும் இருந்தது. மேடை நல்ல உயரமாக இருந்தது. கீழே இருந்து இரண்டு படிகள் ஏறவேண்டும். படிகள் என்னமோ இரண்டு தான் என்றாலும் நல்ல உயரம். ஒவ்வொரு படியும் இரண்டடி உயரத்திற்குக் குறையாது. மேடையில் சுற்றிலும் இரும்புக்கிராதி போட்டுத் தடுத்திருந்தது. சனைசரருக்கு நேரே கம்பிக்கதவு. அப்போது தான் திறந்து அபிஷேஹங்கள் முடிந்து அலங்காரங்கள் செய்திருக்கின்றனர். கீழே விளக்குகள் விற்கும் கோயில் ஊழியர் பெண்மணி தைரியமாய் மேலே ஏறுங்க, சாக்குப் போட்டிருக்கிறேன் என என்னை வற்புறுத்த நான் என்னமோ மூளையில் பளிச்சென்று எச்சரிக்கை கொடுக்கத் தயங்கி நின்றேன். என் கணவரும் முதலில் பார்த்துவிட்டு இத்தனை உயரமா வேண்டாம் இங்கே இருந்தே பார்க்கலாம், வா என்று தான் சொன்னார். அந்தப் பெண்மணியோ விடாமல் விளக்குப் போடுங்க ஐயா எனத் திரும்பத் திரும்பச் சொல்ல என்னதோன்றியதோ ஒரு விளக்கை வாங்கிக்கொண்டு, வழுக்கும் படியில் கம்பிக்கதவைப் பிடித்துக்கொண்டு மிக மிகக் கவனமாக ஏறிச் சென்று சனைசரருக்கு விளக்கை ஏற்றி வைத்தார். நவகிரஹங்களைச் சுற்றி வந்தார். அங்கேயே வழுக்கி இருக்கிறது. சமாளித்துக்கொண்டிருக்கிறார். சுற்றி முடித்துக் கீழே இறங்குகையில் நல்லவேளை நீ வரலை, ரொம்பவே வழுக்கல் என்று சொல்லிக்கொண்டே முதல்படியில் இரு கால்களையும் வைத்துக்கொண்டு ஒரு விநாடி நின்றார். கை என்னமோ கம்பிக்கதவைப் பிடித்துக்கொண்டு தானிருந்தது. அடுத்த நிமிடம் என்ன ஆச்சென்று எவராலும் சொல்லமுடியவில்லை, சறுக்கியவண்ணம் கீழே விழுந்தார். நல்லவேளையாகப் படியில் மண்டை அடிபடவில்லை. சாய்ந்தாற்போல் விழுந்தார். நான் கத்தின கத்தலில் அனைவரும் கூடி அவரை மெல்ல எழுப்பினார்கள். முதுகில் கம்பிக்கதவு பட்டுத் தோல் வழன்று போயிருந்தது. தோள்பட்டையில் கதவு மோதியதில் நல்ல வலி. ஏற்கெனவே கழுத்து பிரச்னை. இப்போ இதுவும் சேர்ந்துகொள்ள கழுத்தை அசைக்கவே முடியவில்லை. அங்கே வந்த அறநிலையத் துறை ஊழியரிடம் படிகளின் கல்தளங்களை மாற்றிவிட்டு இப்படி வழுக்கும் கிரானைட் கற்களைப் போட்டிருக்கிறீர்களே, இதுவே ஒரு கர்ப்பிணிப் பெண் என்றாலோ அல்லது சிறு குழந்தை என்றாலோ பிழைத்திருப்பதே பெரிய விஷயம் என்று புகார் கொடுத்தேன். அவரால் என்ன பதில் சொல்லமுடியும்??? உண்மையில் குப்புற விழுந்திருந்தால் எதிரே உள்ள பீடத்தில் அடிபட்டிருக்கும். மல்லாந்து விழுந்திருந்தால் படியில் தலை மோதி இருக்கும். அங்கே அக்கம்பக்கம் மருத்துவமனைகளும் இல்லை. ரொம்பவே அத்துவானமான ஒரு இடம். இம்மாதிரியான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் அளவுக்கு வசதிகள் எதுவுமே இல்லை. மனம் வேதனைப்பட்டாலும் இந்த அளவுக்கு எழுந்து நடந்து வண்டிக்கு வரும் அளவு உடல்நிலை இருக்கிறதே என நினைத்துக்கொண்டு கடவுளுக்கு நன்றி சொன்னோம். வண்டி கிளம்பியது.

Thursday, February 04, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! 5 திருப்புறம்பயம்!

பொன்னியின் செல்வனில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக்கோயிலில் தான் ஆழ்வார்க்கடியான் முதன் முதல் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியைப் பற்றித் தெரிந்துகொள்வான். அது படிச்சதில் இருந்தே திருப்புறம்பயம் என்றாலே ஏதோ ஒரு சதிக்கூடம் என்ற நினைவே வரும். அடர்ந்த காடு, காட்டுக்கு நடுவிலே கோயில் என்றெல்லாம் கற்பனைக் குதிரை இஷ்டத்துக்குப் போகும். ஆனால் இங்கே இப்போ உண்மையில் அடர்ந்த காடுகள் எதுவும் இல்லை. ஆனால் நெல் வயல்கள். சுற்றிலும் சூழக் கோயில், பெரிய கோயில் என்றே சொல்லலாம். கோயிலுக்குள் நுழையக் கொஞ்சம் பயமாய்த் தான் இருந்தது. கோயிலின் நிலைமை மிகப் பரிதாபகரமாய் இருந்தது. ஆனாலும் வழிபாடுகள் ஏதோ நடந்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். மதுரை ஆதீனத்தின் கீழ் வருகிறது இந்தக் கோயில். மதுரை ஆதீனத்தைச் சார்ந்த கோயில்கள் இது தவிரவும், தஞ்சை மாவட்டத்தில் இன்னும் மூன்று இருக்கிறதாயும் சொன்னார்கள்.

மதுரை ஆதீனம் மிக மிகப் பழமையான ஆதீனமாச்சே?? அதன் கோயிலுக்குச் சொத்து இருக்கணுமே?? குருக்களைக் கேட்டதில் இருக்கிறது என்றார். நாற்பது வேலி நிலம் இருக்கிறதாம் கோயிலுக்கு. நிலத்திலிருந்து வருமானமும் வருகிறது. ஆனால் கோயிலுக்குக் கொடுப்பது என்னமோ ரேஷன் முறையில் தான். குருக்கள் சம்பளம் முன்னர் இன்னாம்பூரில் சொன்ன அதே ஐந்நூறு ரூபாய்களே. மிகக் கஷ்டத்தோடே இருப்பதாகவும், பரம்பரை குருக்கள் என்றும் ஈசனின் தொண்டை விட மனம் வரவில்லை என்றும் வருந்தினார். இப்படிப் போகுமிடமெல்லாம் மனம் வருந்தும் செய்திகளே அதிகம் காண முடிந்தது. எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டது திருவாரூர்க் கோயிலின் நிலைமை. என் கணவர் அழுதே விட்டார் கோயிலைப்பார்த்துவிட்டு. ஆயிரம் வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் திருவாரூர் தியாகேசர். எங்கே போச்சு எல்லாம்???

புறம்பயம் என்றால் பக்கத்திலே தண்ணீரை உடையது என்ற பொருளில் வருமெனச் சொல்கின்றனர். அதற்கேற்பக் கோயிலின் மேற்கே மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருப்பதாயும் காட்டினார்கள். இந்த ஊரின் விநாயகருக்குப் பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டு. பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் அழியவில்லை என்றும் சுற்றிலும் உள்ள நீரை ஊருக்குள்ளே புக விடாமல் விநாயகர் தடுத்துப் புறத்தே நிறுத்தியமையால் இவ்வூரின் பெயர் திருப்புறம்பயம் என்றும் விநாயகருக்குப் பிரளயம்காத்த விநாயகர் என்றும் பெயர் ஏற்பட்டதாய்ச் சொன்னார்கள். விநாயகரின் திருமேனி கடல்பொருட்களான சிப்பி, சங்கு இவற்றால் ஆனது என்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி அன்றும் விமரிசையாக விநாயகருக்கு அபிஷேஹ ஆராதனைகள் செய்கின்றனர். தேன் அபிஷேஹம் செய்யும்போது விநாயகருக்குச் செய்யப் படும் தேன் அபிஷேஹம் எல்லாம் அப்படியே உறிஞ்சப் படுவதாய்க் கூறுகின்றனர். அன்று கூட்டமும் அதிகம் காணப்படும் என்கின்றனர்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ள இந்த ஊருக்கு இன்னாம்பூர் வழியாகவே வரவேண்டும். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், பின்னர் சுந்தரரும் முறையே ஓர் பதிகம் இந்த ஊர் ஈசன் மேல் பாடி இருக்கின்றனர். தல விருக்ஷம் புன்னை என்றாலும் இங்கே உள்ள வன்னிமரம் சாட்சி சொல்ல மதுரைக்குப் போயிருக்கு. அது தனியா எழுதறேன். திருவிளையாடல் புராணத்தில் வரும் அந்தக் கதை. இந்தச் சாட்சி சொல்லுவதில் திருஞானசம்பந்தரும் சம்பந்தப் பட்டிருப்பார். காவிரியின் வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்று.

ஈசன் பெயர் சாட்சி நாதர் என்பதாகும். சாட்சி சொல்ல மதுரை சென்றதால் சாட்சி நாதர் ஆனார். அம்பாள் பெயர் கரும்பொடு படு சொல்லம்மை அல்லது சாட்சி நாதேஸ்வரர், இலட்சுவாணி என்பதாகும். இரு தீர்த்தங்கள் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். இந்தத் தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கியதாகவும் ஐதீகம். குளக்கரையில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி சந்நிதிக்கு மேலே இங்கேயும் சட்டைநாதர் காணப்படுகிறார். சுவாமி கிழக்கே பார்த்துக் காட்சி கொடுக்கிறார். அகஸ்தியர், புலஸ்தியர், சனகர், சநந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றதாயும் சொல்கின்றனர்.

சாட்சி சொன்ன கதை:
காவிரிப்பட்டினத்து வணிகன் ஒருவன் மதுரையைச் சேர்ந்த பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தான். அப்போது காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் தங்கை இறந்துவிட்டதாய்ச் செய்தி வர, காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட வணிகன் திரும்பி வருகையில் தன் தங்கையின் மகளையும் உடன் அழைத்து வர நேருகிறது. வரும் வழியில் இந்தத் தலத்தில் சற்றுத் தங்கினான். அப்போது பாம்பு கடித்து இறந்து போக, அவ்வழியே சென்ற திருஞான சம்பந்தரால் உயிர்ப்பிக்கப் பெற்று, அவர் அந்தப் பெண்ணை அவனுக்கே திருமணம் செய்விக்கிறார். திருமணத்தின் போது அங்கே ஒரு வன்னிமரமும், கிணறும் மட்டுமே சிவலிங்கத்தோடு இருந்தன. இவற்றைச் சாட்சியாகக் கொண்டே திருமணம் நடக்கிறது.

பின்னர் மதுரை சென்ற அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, நிஜமாகவே திருமணம் நடந்ததா என சந்தேகம் கொண்டு வழக்குத் தொடுக்க வழக்கும் மன்னன் சபைக்கு வந்தது. மன்னனோ திருமணம் நடந்ததற்கு சாட்சி கேட்கிறான். சாட்சியாக மனிதர்கள் யாருமே இல்லையே என மனம் வருந்திய அந்தப் பெண், அங்கே இருந்த சிவலிங்கமும், வன்னி மரமும், கிணறும் தான் சாட்சி என்று வருந்தினாள். அவை வந்து சாட்சி சொல்லுமா என மூத்தவள் இளையவளைக் கேலி செய்ய, நம்பிக்கையோடு ஈசனைத் தொழுதாள் இளையவள். என்ன ஆச்சரியம் மூன்றும் வந்து சாட்சி சொல்லிச் சென்றன. இன்றும் மதுரையில் ஸ்வாமி சந்நிதி வெளிப்பிரஹாரத்தில் வன்னி,கிணறு, லிங்கம் காணலாம். இவ்வாறு சாட்சி சொன்ன காரணத்தால் சாட்சிநாதர் என்ற பெயரை ஈசன் பெற்றார்.

துரோணர் இங்கே வந்து ஈசனை வழிபட்டே அஸ்வத்தாமாவைப் பெற்றெடுத்ததாகவும் சொல்கின்றனர். இந்தத் தலத்திற்கு எனத் தலபுராணம் இருக்கிறது என்றும் இன்றளவும் அச்சேறவில்லை என்றும் சொல்கின்றார்கள். இந்தத் திருக்கோயிலைப் பற்றிய உலாவில் சில கண்ணிகளே கிடைத்திருப்பதாகவும், புறம்பயமாலை என்னும் நூலில் பத்துப்பாடல்களே கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். கிடைத்தவற்றைத் திருவையாறு வை.சுந்தரேச வாண்டையார் என்பவர் அச்சிட்டுள்ளதாய்த் தெரியவருகிறது. ஆனால் கோயிலில் எங்கும் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பது வருந்தத் தக்கது. கோயிலில் கிட்டத்தட்ட பதினோரு கல்வெட்டுகள் இருப்பதாகவும் சொல்கின்றனர்.


ராஜகேசரி வர்மன் முதல் குலோத்துங்கன் வரையிலும் கோயிலுக்குக் கொடுத்த நிலதானங்கள், விளக்குகளுக்குக் கொடுத்த நிவந்தங்கள், பசுதானம், ஆடுதானம் போன்றவைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆலய விளக்குகளுக்குச் செய்த பொன் தானம், வெள்ளி தானம் போன்றவையும் சொல்லப் படுவதோடு ஒரு கல்வெட்டில் ஈசன் பெயர் ஆதித்தேசுவரர் என்று இருப்பதால் கோயில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றார்கள்.

பொன்னியின் செல்வனால் பிரசித்தி பெற்ற கங்க மன்னன் ப்ருதிவீபதி இங்கே நடந்த மண்ணியாற்றுச் சண்டையில் உயிர் நீத்த செய்தியும் குறிக்கப் பட்ட கல்வெட்டும் உண்டு. முதலாம் பராந்தகன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திரன் வரை உள்ள அரசர்கள் காலங்களில் செய்யப் பட்ட திருப்பணிகளைக்குறிக்கும் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன. திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார் புறம்பயத்து ஈசனுக்கு நீராட்டத்துக்குக் கொடுத்த வெள்ளிக் கலசம் பற்றியும் குறிப்புகள் சொல்கின்றன. இது தவிர, விஜயநகர வேந்தர்கள் காலத்திலும் மக விழா பற்றிய கல்வெட்டு ஒன்று எடுத்திருக்கின்றனர். பெருமாள் கோயிலை தாமோதர விண்ணகரம் என்ற பெயரில் அழைத்திருப்பதாயும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெருமாள் கோயிலுக்குப் போகமுடியவில்லை.

Tuesday, February 02, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 4 இன்னாம்பூர்!


மாயவரம் சென்று வந்ததும் மறுநாள் குலதெய்வம் கோயில் சென்றதும், பெருமாள் கோயில் பற்றிய செய்திகளும் தனியாக வரும். மின் தமிழில் சந்திரா இன்னாம்பூர் நடராஜர் ஸ்வாமிமலையில் தான் இருக்கிறார் என ஒரு ஆருத்ரா தரிசனம் போது குறிப்பிட்டதில் இருந்தே இன்னாம்பூர் போகணும்னு ஆசைதான். அதுவும் ஸ்வாமிமலைக்கு எத்தனை முறை போயிருக்கோம்?? இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டதே இல்லை. சந்திராவுக்கே தற்செயலாத் தான் தெரிஞ்சிருக்குனு நினைக்கிறேன். இம்முறை ஊர்ப்பக்கம் சென்றபோது வெள்ளியன்று 22-1-10 மாலை இன்னாம்பூருக்கும், திருப்புறம்பயத்துக்கும் சென்றோம். ஆட்டோக்காரர் ரொம்பக் கிட்டத்தான் என்று சொன்னாலும் கொஞ்சம் தூரம் போகத் தான் வேண்டி இருக்கு. காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமிமலை செல்லும் வழியில் அங்கிருந்து சற்றே வடகிழக்கே அமைந்துள்ளது. காவேரியின் வடகரைக்கோயில்களில் 45-வது கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். இந்த ஊரிலேயே பெருமாள் கோயிலும் ஒன்று உள்ளது.

சிறிது நேரத்தில் ஊரின் சிவன் கோயில் வாயிலில் கொண்டு விட்டுவிட்டார் ஓட்டுநர். கோயில் மிகப் பழமையான கோயில். திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டும். எப்போ நடக்கும்னு தெரியலை. இறைவன் பெயர் எழுத்தறிவித்த நாதர் என்று சொல்கின்றனர். இங்கே பேச்சு வராத குழந்தைகளுக்கும், பேச்சு வரும் வயதில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும், நெல் முனையாலோ, கொஞ்சம் வயது சென்ற குழந்தையானால் செம்பருத்திப் பூவின் காம்பாலோ நாக்கில் எழுதுகின்றனர். நாங்கள் செல்லும்போது ஒரு பெற்றோர் தங்கள் பெண்குழந்தைக்கு (ஐந்து, ஆறு வயதிருக்கும்) நாக்கில் எழுதப் பிரார்த்தித்துக் கொண்டு வந்திருந்தனர்.

கோயிலில் அம்மன் நித்யகல்யாணியின் (கொத்தார் பூங்குழலி என்றும் பெயர்) சந்நிதி வாயிலில் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த வைதீகர் ஒருவர் தன் குழந்தையோடு அமர்ந்து பாராயணம் செய்து கொண்டிருந்தார். முதலில் அவர்தான் குருக்கள் என நினைத்து அவரிடம் விபரங்கள் கேட்டோம். அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் குருக்களே வந்துவிட்டார். கோயிலுக்கு என நிலங்கள் இருக்கின்றன என்றும், வருமானம் சரிவர வருவதில்லை என்றும் சொன்னார். இந்த ஊர் நடராஜர் ஏன் ஸ்வாமிமலை சென்றுவிட்டார் என்று கேட்டேன். பாதுகாப்புக் கருதி சென்றிருப்பதாகவும், இந்தக் கோயிலும் ஸ்வாமிமலை தேவஸ்தானத்தின் கீழ் வருவதாகவும், குருக்களுக்கு மாதச் சம்பளம் 550ரூ என்றும் சொன்னார். வரும் பக்தர்கள் போடும் பணத்தை வைத்து மற்றச் செலவுகளைச் சரிக்கட்ட வேண்டி இருப்பதாகவும் கூறினார். பல விண்ணப்பங்கள் கொடுத்தும் அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். என்றாலும் கோயிலில் நித்திய வழிபாடுகளும், நாலு கால பூஜைகளும் ஊர்மக்கள் மற்றும் வந்து செல்லுபவ்ர்கள் ஒத்துழைப்புடன் நடந்து வருகின்றது. தஞ்சை மாவட்டத்தின் பல கோயில்களுக்கு இந்நிலைமைதான் இன்று என்பது மன வருத்தத்தைக் கொடுக்கிறது.

ஊர்மக்களும் கோயிலுக்கு வருகின்றார்கள். கோயிலின் வாயிலும் சரி, அர்த்தமண்டபத்தின் வாயிலும் சரி, கருவறையின் வாயிலும் சரி மிக மிகப் பெரியதாக இருந்தது. உள்ளே மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆவுடையார், அதன் மீது லிங்க பாணம், தழும்புகள் பாணத்தில் இருப்பதை என் கணவர் சுட்டிக் காட்டினார். சுயம்பு லிங்கம். இவ்வளவு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்கம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தான் பார்த்திருக்கிறேன். தஞ்சைக் கோயிலின் லிங்க பாணமும் பெரியது. இங்கே பாணம் அதைவிடச் சின்னது. அர்ச்சகரிடம் காரணம் கேட்டேன். வந்திருக்கும் குழந்தைக்குப் பிரார்த்தனை வழிபாட்டை முடித்துவிட்டுச் சொல்வதாய்க் கூறினார்.

இந்தக் கோயில் சூரியன் வழிபட்ட தலம் என்றும் சொன்னார்கள். அகத்தியருக்கு இங்கே தமிழ் இலக்கணம் இறைவனால் போதிக்கப் பட்டதாம். அதனாலும் எழுத்தறிவித்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டதாய்க் கூறினார். மேலும் இந்திரனின் யானையான ஐராவதம் ஈசனைத் தினமும் வந்து வணங்க வேண்டி முயன்றபோது, கருவறை சிறியதாக இருந்ததால் அதனால் உள்ளே நுழையமுடியவில்லையாம். அது மனம் வருந்தி ஈசனை வேண்ட, ஈசனும் கருவறையைச் சற்றே நெம்பினாராம், கருவறை யானை நுழையும் அளவுக்குப் பெரிதாக ஆயிற்று. ஐராவதம் உள்ளே நுழைந்து வழிபட்டு வந்ததாம். இப்போது அவ்வண்ணமே யானை நுழையும் அளவுக்குப் பெரிய வாயிலோடு கூடிய கருவறையைக் கொண்டிருக்கிறது. மேலும் ஐராவதம் வணங்கியதை நினவூட்டும் வண்ணம் விமானமும் கஜப்ருஷ்ட விமானமாக இருக்கிறது. பிராஹாரம் சுற்றி வந்து சற்றே தள்ளி நின்று பார்த்தால் யானை முதுகைப் போன்ற விமானம் கண்குளிரக் காட்சி அளிக்கிறது.

சுதன்மன் என்னும் கணக்காளன் இந்தக் கோயில் கணக்கை நிர்வகித்து வந்தபோது, சோழ மன்னனுக்கு அவன் மீது சந்தேகம். சுதன்மன் என்னமோ கணக்குகளில் ஒழுங்காகத் தான் இருந்து வந்தான். ஆனாலும் மன்னனின் சந்தேகம் தீரவில்லை. கணக்குகளைச் சரிபார்க்கும்பொருட்டு சுதன்மனை சபைக்கு வரச் சொல்லி மன்னன் உத்திரவிட, ஈசனே சுதன்மன் போல் அங்கே போய்க் கணக்குகளைக் காட்டி, முறையாக விளக்கவும் மன்னன் சந்தேகம் தீருகின்றது. சுதன்மன் கனவில் ஈசன் வந்து தான் போய்க் கணக்கைத் தீர்த்துவிட்டதாய்க் கூற, சுதன்மன் நெக்குருகிப் போனான். உண்மை தெரிந்த மன்னன் எழுத்தறிவித்த நாதரையும், சுதன்மனையும் போற்றி வணங்கினான். இதுதான் இந்தக் கோயிலின் தலவரலாறு எனச் சொல்லப் படுகிறது.

பல கல்வெட்டுக்கள் இருந்தாலும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவது சோழன் ராஜகேசரி வர்மனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டும், விஜயநகர மன்னரின் காலத்து வீர கம்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப் பட்ட இரண்டே முக்கியமாய்ச் சொல்லப் படுகிறது. அந்நியர் படை எடுப்புக் காலத்தில் இந்தக் கோயில் பூட்டப் பட்டு நாற்பதாண்டுகளுக்கு மேல் வழிபாடுகளின்றி இருந்திருக்கிறது. அது குறித்த கல்வெட்டும் இருப்பதாய்க் கூறுகின்றனர்.

அடுத்தது நம்ம இன்னாம்பூராரின் குல தெய்வமும் இஷ்ட தெய்வமுமான பெருமாள் கோயில். அது ஊருக்குள் நுழையும் இடத்திலேயே முதலிலேயே திரும்பி இருக்கணும். எங்களுக்கு முதலில் தெரியவில்லை. சிவன் கோயிலுக்கு வந்திருந்த ஓர் அம்மாள் சொன்னார் தான் அழைத்துச் செல்வதாய். அதற்குள் ஆட்டோ ஓட்டுநர் திருப்புறம்பயம் போயிட்டுத் திரும்பி வரும்போது போகலாம் என்றும் திருப்புறம்பயத்தில் சீக்கிரம் நடை சார்த்திவிடுவார்கள் என்றும் கூற திருப்புறம்பயம் சென்றுவிட்டுத் திரும்பும்போது மீண்டும் இன்னாம்பூர் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முதலில் கொஞ்சம் வழி புரியவில்லை. அப்புறமாய்க் கேட்டுக் கேட்டுக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டோம். வாயிலிலேயே பெரிய இரண்டு சக்கர வண்டி இருக்க, பட்டாசாரியார் உள்ளே தான் இருக்கிறார் என்ற நிம்மதி வந்தது. என் கணவர் உடனே வேகமாய் உள்ளே போக சந்நிதியை மூடிவிட்டு பட்டாசாரியார் வந்து கொண்டிருந்தார். முதலில் இப்போ முடியாது என்று சொல்லிவிட்டார். அப்புறம் என்ன நினைச்சாரோ, மீண்டும் போய் சந்நிதியைத் திறந்தார்.

திரு இன்னாம்பூராரைப் பற்றியும், ஹிந்து பத்திரிகைக் காரங்க செய்யும் கைங்கரியம் பற்றியும் கேட்டேன். இன்னாம்பூரார் பற்றித் தெரியவில்லை என்றாலும் ஹிந்து பத்திரிகைக்காரர்கள் கைங்கரியம் பற்றிச் சொன்னார். பட்டாசாரியார் பாபுராஜபுரத்தில் இருந்து தினமும் வந்து போகிறாராம். ஆகவே அவசரத்தில் வேறே இருந்தார். என்றாலும் பெருமாளைத் திவ்ய தரிசனம் செய்து வைத்தார். பெருமாள் விக்ரஹம் நாவலப்பாக்கம் என்னும் இடத்தில் சில வருடங்கள் இருந்ததாகவும், இந்தப் பெருமாள் ஆதியில் திருமலையில் இருந்து வந்ததாகவும் கூறினார்.

பாஸ்கர க்ஷேத்திரம் என இது அழைக்கப் படுவதாயும் கூறினார். கருவறைக்கு முன்னால் சூரியன் இருப்பது இங்கே தான் என்றும் காட்டினார். அதனாலேயே இந்த ஊருக்கு இன்னாம்பூர் என்ற பெயர் வந்ததாகவும் சொன்னார். விஜயநகரப் பேரரசின் காலத்தில் அவர்களின் உறவினர்களில் ஒருவரான வீராவலி கிருஷ்ணமாசாரியார் என்பவர் இந்த விக்ரஹத்தைத் திருமலையில் இருந்து எடுத்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்ததாகவும், இங்கே பிரதிஷ்டை செய்யும் முன்னர் சில காலம் நாவலப் பாக்கத்தில் இருந்ததாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் அந்நியப் படை எடுப்பின்போது அங்கே ஒளித்து வைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர். வீராவலி கிருஷ்ணமாசாரியாருக்கு உதவிய ராகவன் ஐயங்கார் தான் ஹிந்து பத்திரிகைக் குடும்பத்தினரின் மூதாதையர்கள் என்றும் கேள்விப்பட்டேன். மூலவரும் திருப்பதிப் பெருமாள் போலவே காட்சி கொடுக்கிறார். பட்டாசாரியாருக்கு ஊருக்குத் திரும்பவேண்டும் என்பதால் பிராஹாரங்கள் சுற்ற முடியலை. தரிசனம் முடிச்சுட்டுத் திரும்பிட்டோம். இன்னொரு முறை சென்றால் காலை வேளையில் சென்று கொஞ்சம் நிதானமாய்ப் பார்த்துக் கொண்டு வர ஆசை.


படங்கள் உதவி: கூகிளார், நன்றி.

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 3 மயூரநாதர் கோயில்!


ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து மறுபடி சத்திரம்போய்க் கல்யாணம் முடிந்து சாப்பிட்டுவிட்டு, மாயவரம் போனோம். ஏற்கெனவே அபி அப்பாவுக்குத் தகவல் தெரிவித்திருந்தோம். அவங்க வீட்டுக்குப் போயிட்டு, பின்னர் அங்கிருந்து மயூரநாதர் கோயிலுக்குப் போனோம். கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் வருகிறது என்ற செய்தியே அங்கே போய்த் தான் தெரியும். மூலவர் மயூரநாதரை வள்ளலார் என்றும் அழைக்கின்றனர். அபயாம்பிகையை அம் சொல் நாயகி என அழைக்கின்றனர். காலப்போக்கில் அது அஞ்சலாள், அஞ்சலை என்றெல்லாம் மாறி இருக்கிறது.

நாவுக்கரசர் பதிகம் ஒன்று பாடி இருக்கிறார். ஞானசம்பந்தரும் பாடியுள்ளார். ஆனாலும் கோயில் அவர்கள் இருவருக்கும் முற்பட்ட காலத்தது எனச் சொல்கின்றனர். அருணகிரியாரும் மயிலாடுதுறை பற்றிப் பாடி உள்ளார். காவிரியின் தென்கரையில் உள்ள சிவாலயங்களில் இது 39-வது தலமாக வருகிறது எனக் குறிப்புகள் சொல்கின்றன. லிங்கம் சுயம்புமூர்த்தி. மாயவரத்திற்கு ரயில் நிலையம் இருந்தாலும் சென்னையிலிருந்து செல்பவர்கள் பேருந்தைத் தான் நம்பவேண்டி இருக்கிறது. ரயில் பாதை கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்களாகச் சீரமைக்க ஆரம்பித்தது இன்னும் முடியவில்லை. ஆகையால் பேருந்திலே செல்லவேண்டுமானால் சென்னையிலிருந்து நேரடியாகப் பேருந்து உள்ளது.

மூலவருக்கு மேலே உள்ள விமானத்தைத் திரிதள விமானம் என்று சொல்கின்றார்கள். ராஜகோபுரத்திற்கு ஒன்பது நிலைகள் இருக்கின்றன. மாயவரம் காவிரியாற்றில் துலா ஸ்நாந கட்டத்தில் ஐப்பசி மாதம் ஸ்நாநம் செய்வது மிகச் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா என இந்தத் தலத்தைச் சிறப்பித்துச் சொல்லப் படுவது உண்டு.

தக்ஷ யாகத்தில் சிவனுக்குரிய அவிர்பாகத்தைக் கொடுக்காததோடு அல்லாமல், சிவனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை தக்ஷன். அம்பாள் தன் தகப்பன் ஆன தக்ஷனிடம் சென்று நியாயம் கேட்க, அவளையும் தன் மகள் என்று கூடப் பார்க்காமல் நிந்தித்து அனுப்புகிறான் தக்ஷன். ஈசனிடம் சென்று முறையிட்ட அம்பாள், தனக்கு தக்ஷனின் மகள் என்ற இந்த உடல் தேவையில்லை என்று எண்ணி அக்னியில் விழுந்து விட, கோபம் கொண்ட ஈசன், தக்ஷனைச் சம்ஹரிக்க, வீரபத்திரரை அனுப்ப, அவர் யாகத்தையும், யாகத்துக்கு வந்தவர்களையும் அழித்து, தக்ஷனின் தலையை வெட்டி ஆட்டுத் தலையைப் பொருத்துகிறார். தக்ஷன் ஆணவம் ஒழிந்தாலும் அன்னை இல்லாமல் ஈசன் கோபம் அடங்கவில்லை.

அம்மையோ, யாகத்தில் இருந்த ஓர் மயிலின் வடிவில் தன் சக்தியைச் செலுத்தித் தானும் மயிலாக மாறி இந்தத் தலத்திற்கு வந்தாள். மாஞ்சோலையாக இருந்த இந்த இடத்தில் மயில் வடிவில் தவமிருந்து ஈசனை வழிபடுகிறாள். மயில் வடிவிலேயே ஆடிப் பாடி ஈசனை வழிபட்டாள் அன்னை. ஈசனும் அவள் மேல் கருணை கொண்டு அருள் பாலிக்கிறார். அவரும் ஓர் ஆண் மயிலாகவே வ்ந்து அன்னையோடு சேர்ந்து ஆடுகிறார். ஈசனின் இந்தத் தாண்டவம் மயூர தாண்டவம் அல்லது கெளரி தாண்டவம் எனப்படும். மயிலாக வந்து அருளியதாலும் அன்னைக்குத் தன்னையே தந்ததாலும் மயூரநாதர் என்றும், வள்ளலார் என்றும் பெயர் பெற்றார்.

இந்தக் கோயிலுக்கு ஐந்து பிராஹாரங்கள் இருப்பதாய்த் தெரிகிறது. நேரப்பற்றாக்குறையால் எல்லாப் பிராஹாரங்களுக்கும் செல்லமுடியவில்லை. எனினும் அபி அப்பா முக்கியமான இடங்களைக் காட்டிச் சொல்லிக் கொண்டு வந்தார். இங்கே உள்ள விநாயகர் முதலில் பார்ப்பவர் அகத்திய விநாயகர் என்று அழைக்கப் படுகிறார். இவர் தவிர வெளிப்பிரஹாரத்தில் சந்தன விநாயகர் என்றொருவர் இருக்கிறார். அந்த இடத்திலே தான் குதம்பைச் சித்தர் ஜீவசமாதி ஆன இடம் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்கின்றனர். சந்நிதியில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவின் சிலை வைக்கப் பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் ஸ்வாமி லிங்கமாக இருக்க அருகில் மயில் வடிவில் அம்பாள் அவரை வழிபட்ட கோலத்தில் காணப்படுகிறாள். ஆதிமாயூர நாதருக்குத் தனியாகவும் சந்நிதி உள்ளது. முருகன் இங்கே ஸ்வாமியிடம் வேல் வாங்குவாராம். அருணகிரியார் திருப்புகழில் இது பற்றிக்குறிப்பு இருப்பதாய்ச் சொல்கின்றனர். ஈசனின் கெளரிதாண்டவம் ஆடும் நடராஜர் தனி சந்நிதியில் இருக்கிறார். தினமும் மாலையில் நடராஜருக்கு முதல் வழிபாடு. நடராஜருக்கு நேரே மயிலம்மனுக்குத் தனி சந்நிதி. கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்துக்கு அருகே ஜுரதேவர் இருப்பதை அபி அப்பா சுட்டிக் காட்டினார். நாங்க பதிலுக்கு துர்கை மஹிஷாசுர மர்த்தினியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அபி ஆச்சரியத்தோடு பார்த்தாள். மஹிஷனுக்கு இருபுறமும் அசுரர்களும் காணப்பட்டார்கள். ஜுரதேவருக்கு அருகே ஆலிங்கன மூர்த்தி என்று சொன்னார்கள். இவர்கள் இங்கே காணப்படுவதின் சிறப்பம்சம் என்னவென்று புரியவில்லை.

அம்பாள் பத்து வயதுப் பெண் போல் காணப்பட்டாள். அருமையான வடிவோடு வடிக்கப் பட்ட அற்புதமான விக்கிரஹம். பார்க்கப் பார்க்க அருமை. முதலில் திரை போட்டிருந்தது. அங்கேயே அமர்ந்து காத்திருந்தோம். பார்த்தால் ஒரு சின்னப் பெண் எதிரே வந்து நின்று பேசுவது போல் அம்பாள். வலக்கையில் கிளியோடு காணப்படுகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வலப்பக்கம் அநவித்யாம்பிகை என ஒரு சந்நிதி காணப்பட்டது. ஆனால் அங்கே ஒரு லிங்கம் தான் இருந்தது. இந்த லிங்கத்திற்குப் புடவைதான் சார்த்துவதாயும், அதுவும் சிவப்பு நிறப் புடவைதான் என்றும் சொன்னார்கள். நாதசர்மா என்ற அந்தணர் தன் மனைவியான அநவித்யாம்பிகையோடு ஐப்பசி மாசக் கடைமுழுக்குக்கு இந்த ஊருக்கு வந்தனர். அவர்கள் வரும்போது கடைமுழுக்கு முடிந்துவிடுகிறது. மன வருத்தத்தோடு இருந்த அவர்களுக்காக ஈசன் நாதசர்மாவின் கனவில் தோன்றி மறுநாள் அதிகாலை உதயத்திற்கு முன் நீராடினால் துலா ஸ்நாநம் செய்த புண்ணியம் கிடைக்கும் எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே செய்த தம்பதியர் ஈசனின் திருவுருவிலேயே ஐக்கியம் ஆகின்றனர்.

நாதசர்மா ஐக்கியமான லிங்கம் நாதசர்மாவின் பெயரிலேயே காணப்படுகிறது. அநவித்யாம்பிகை ஐக்கியமான லிங்கம் அம்பாள் சந்நிதிக்கு வலப்பக்கம் அநவித்யாம்பிகை பெயரிலே காணப்படுகிறது. இந்த லிங்கத்திற்கே புடைவை சார்த்துகின்றனர். தக்ஷிணாமூர்த்தி இடப்பக்கமாய்ச் சாய்ந்து காணப்படுகிறார். நவகிரஹ சந்நிதியில் இரண்டு சனைசரர்கள். ஒருவர் தலையில் அக்னியோடும், இன்னொருவர் காகத்தின் மீதும் காணப்படுகிறார். காகத்தின் மீது அமர்ந்திருப்பவர் சிவ வழிபாடு செய்வதால் இவரைத் தரிசிப்பது விசேஷம் என்கின்றார்கள். இதே போல் சண்டேஸ்வரரும் இருவர் காணப்படுகின்றார்கள். அஷ்டலக்ஷ்மி சந்நிதிக்கு மேலே ஒரு சந்நிதி தெரிந்தது. அங்கே சட்டைநாதர் இருப்பதாய்ச் சொன்ன அபி அப்பா, அங்கே செல்லும் வழியையும் காட்டினார். திறந்திருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார். இன்னொருமுறை வந்து சாவகாசமாய்ப் பார்க்கவேண்டிய கோயில் என நினைத்துக்கொண்டேன். மஹாவிஷ்ணுவும் ஈசனை வழிபடும் கோலத்தில் சிற்பமாய்க் காணப்படுகிறார்.

இந்தத் தலத்தில் தான் ஈசன் நந்தி தேவரின் கர்வத்தை அடக்கியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த நந்தி காவிரியின் நடுவில் காணப்படுகிறது. பிராஹாரத்தில் ஓர் இடத்தில் நல்ல மழைக்காலத்தில் காவிரி நீர் கீழே இருந்து குபுகுபுவென வந்து நிறைத்துவிடும் என்று காட்டினார் அபி அப்பா.திருக்கோயில் குளத்தின் நடுவில் நந்தியையும் காட்டினார். நந்தி முழ்கி முதுகு மட்டும் தெரிந்தது. கங்கையும் இங்கே வந்து துலாமாசம் நீராடித் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டதாயும் ஐப்பசி மாசம் அமாவாசை அன்று இது நடந்ததாகவும் சொல்கின்றனர். அடுத்து அன்றே கும்பகோணம் வந்துவிட்டோம்.

அன்று மாலை சுவாமிமலைக்கு அருகே இருக்கும் இன்னாம்பூர் என்னும் ஊர் சென்றிருந்தோம். அது திருப்புறம்பயம் செல்லும் வழியில் உள்ளது. அதுபற்றிய விபரங்கள் நாளை. மறுநாள் காலை எங்கள் ஊரான பரவாக்கரை சென்றோம். அங்கே காலையில் குலதெய்வம் கோயிலில் அபிஷேஹம், மாவிளக்கு முடித்துவிட்டுப் பெருமாள் கோயிலில் பாலாலயம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். மதியம் இரண்டு மணிக்கு மேல் கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம். போகும்போதே சனிக்கிழமை இரவு ரதிமீனாவில் முன்பதிவு செய்துகொண்டோம். சனிக்கிழமை காலை சீக்கிரமே கிளம்பி எண்கண், திருவாரூர், எட்டுக்குடி, சிக்கல், திருக்கண்ணமங்கை, திருச்சேறை போன்ற தலங்களைப் பார்த்துக்கொண்டு வருவதாய்த் திட்டம்.