எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 14, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்.



அரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? "



"ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "



அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும்.

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு?

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான்.

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்

Friday, November 09, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 13


கோயிலில் இருந்தவர்களை வெளியேற்ற நினைத்தால் எவரும் வெளியேற மறுத்தனர்.  கோயிலிலேயே தங்குவதாய்க் கூறினார்கள்.  அரங்கன் முன்னிலையில் அவனுக்காக நாட்டியம் ஆடும் பெண்மணிகளும் கோயிலுக்குள்ளேயே தங்கினார்கள்.   சற்றும் பயமே இல்லாமல் அனைத்தையும் அரங்கனிடம் ஒப்படைத்துவிட்ட அந்தப் பெண்கள் போரிடச் செல்லும் ஆண்களுக்காக உணவு தயாரிப்பதில் முனைந்தனர்.  கோயிலின் அந்தணர்கள் அனைவரும் வாளும், கத்தியும், கதையும் ஏந்தி யுத்தத்துக்குத் தயாரானார்கள்.  உல்லுகான் அனுப்பிய செய்தியில் அனைத்துச் சொத்துக்களையும் சுல்தானிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்ததை மறுத்த அவர்கள், தாங்கள் அனைவரும், இந்த ஸ்ரீரங்கமும், கோயிலும் அதன் சொத்துக்களும் ரங்கநாதனுக்கே அடிமை எனவும், அவர்களுக்கு ராஜா ரங்கராஜாதான் எனவும் கூறி அடிபணிய மறுத்தனர்.  இன்னொரு பக்கம் ஒரு அரசனுக்கு ஐந்து அரசனாகப் பாண்டியர்கள் பிரிந்து நிற்பதையும் அவர்கள் ஒற்றுமையின்மையால் நேரிட்ட இந்தத் துன்பத்தை எண்ணியும் மனம் கலங்கினார்.   தாங்கள் அனுப்பி வைத்த அழகிய மணவாளர் எங்கே இருக்கிறாரோ என நினைத்து வருந்தினார்கள்.

  கோயிலின் தலைமை அதிகாரியான  ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில் 12,000 வைணவர்கள்  அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர்.  ஒரு பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை. இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே நம்பிய மக்கள்.  எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர்.  எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து உள்ளே புகுந்தனர்.  இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது.  வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக் கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர் என்கிறார்கள். 

வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும் கொன்று குவித்தனர்.   பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார்.  குலசேகரன் எவ்வாறோ தப்பி விட்டான்.  அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில்  சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும் ஒருவர்.   இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம் பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார். 

மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர், ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார்.  அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார்.  அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள் தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக் கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில் தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.  சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும் மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து  கிளம்பினார்.  கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.


அரங்கன் சென்ற வழிதெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த தேசிகருக்குத் துளசிக் கொத்துகளை வைத்து அடையாளம் கண்டு செல்லும்படி கூறப்பட்டது.  ஆனால் திடீரென அடித்த காற்றில் அவை பறந்து வேறு திசைகளில் வியாபித்து இருக்க தேசிகரோ நிலைமை தெரியாமல் அவற்றைத் தொடர்ந்தே சென்றார்.  ஆனால்  அவருக்குச் சற்றே முன்னால் சென்ற வில்லிதாசரின் மகன் குலசேகரனும் இவ்விதம் தவித்தபோது ஒய்சள ராஜகுமாரியுடன் இருந்த ஒரு பெண் தொண்டைமான் காட்டுக்குள் அரங்கன் ஊர்வலம் புகுந்து செல்வதாகக் கூறி அடையாளமும் காட்ட குலசேகரன் அரங்கனைத் தொடர்ந்து சென்றான்.  ஸ்ரீதேசிகருக்காகக் காத்திருந்த பிள்ளை லோகாச்சாரியார் ஊர்வலத்தைக் கிளப்பிக் கொண்டு மேலும் தெற்கே சென்றார்.  தேசிகரோ வழி தப்பிப் போய் உறையூரை அடைந்தார்.  அரங்கன் ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்ல எண்ணிய மக்களைத் தடுத்து நிறுத்தினார். பாண்டிய அரசர்கள் போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர்.  ஆகவே இங்கே ஸ்ரீரங்கத்தில் அவர்களை எதிர்ப்பார் இல்லாத டில்லிப் படை கோயிலுக்குள் புகுந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தித் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டு எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச்  சென்றனர்.