எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பத்து ஆண்டுகள் பின்னர்!

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களும் ஆகிக் கொண்டிருந்தன. அரங்கனைச் சூழ்ந்திருந்த பரிவாரங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்து விட்டது. ஒரு சிலர் முதுமை, உடல்நிலை காரணமாக உயிரிழக்க நேர்ந்தது. இன்னும் சிலர் பிழைப்பைத் தேடியும், குடும்பங்களைத் தேடியும் சென்று விட்டனர். சென்றவர் திரும்பவில்லை.  தமிழக வரலாற்றில் இந்தப் பத்து வருடங்கள் எவ்வித மாற்றங்களும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தது. தென்காசி, திருநெல்வேலிப் பகுதியில் இருந்து அடிக்கடிப் பாண்டியச் சிற்றரசர்கள் மதுரையிலிருந்து துருக்கியரை விரட்டத் தங்களால் ஆன மட்டும் இயன்றார்கள், ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஹொய்சளர்களோ எனில் வடக்கே தங்கள் கவனம் முழுமையும் செலுத்தி ஆந்திராவையும், தில்லிப் பேரரசில் நடப்பதையும் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடுவே மதுரையில் மட்டும் சிறிய மாற்றம்.

தில்லிக்குத் தளபதியாக  தென்னாடு வந்த அஸன்ஷா என்பவன் தில்லிப் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தவன் தில்லி ஆட்சியினரைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னை மதுரைக்கும் அதைச் சேர்ந்த பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட இடங்களுக்கும் சுல்தானாக அறிவிப்புச் செய்து கொண்டான். ஆக மொத்தம் இதன் மூலம் மதுரையில் ஒரு சுல்தான் பரம்பரை ஆட்சி தொடங்கியது. ஆனால் ஆட்சி நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றில் கவனக்குறைவாகவே இருந்தார்கள். அவர்கள் கவனமெல்லாம் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கையில் இருந்தது. இருந்தாலும் தங்கள் வலிமையை விட்டுக்கொடுக்காமல் யாரையும் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டனர்.  ஆகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் பத்தாண்டுகள் கடந்து விட்டன.
*********************************************************************************

திருவண்ணாமலை! ஓர் நாள் மாலை!

ஓர் வாலிப வீரன் பித்துப் பிடித்தாற்போல் வீதியில் நடந்து கொண்டிருந்தான். இளமையுடனும், வீரத்துடனும் காணப்பட்ட அவன் முகத்தைக் கவலை மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. நீண்ட காலம் சென்று அன்று அவன் இந்த ஊருக்கு வந்திருந்தான். நீண்ட நேரம் நடந்த அவன் அந்த மாலை நேரத்தில் அங்கே உள்ள ஓர் வைணவக் கோயில் முன்பாகப் போய் நின்றான்.  பெருமாள் சந்நிதி திறந்திருந்தாலும் உள்ளே செல்ல மனமின்றிக் கண்கள் கலங்க அவன் கை கூப்பியவண்ணம், "பெருமாளே! நான் பதிதன்! உள்ளே வந்து உன்னைச் சேவிக்கும் அருகதை அற்றவன்! ஐயோ! போனமுறை கூட உள்ளே வந்து உன்னைச் சேவித்தேனே! இம்முறை என்னால் அது இயலாது போயிற்றே!" எனப் புலம்பிய வண்ணம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அப்போது அங்கே திடீரென சில ஆரவாரங்கள் கேட்கவே அதனால் சிந்தை கலைக்கப்பட்டவனாய்த் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தான் அந்த இளைஞன். அங்கே ராணி கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள்.  அவனை அங்கே கண்டதும் சிறு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் சேடிமார் மெய்க்காப்பாளர் போலக் காவலுக்கு வந்திருந்தனர். இந்தப் பத்து வருடங்களில் அவள் எழில் அதிகரித்துப் பூரணமானதொரு மங்கையாக ஆகி இருந்தாள். கண்களில் முன்னிருந்த காமவெறி இல்லாமல் கனிவு தோன்றி இருந்தது. அவளைப் பார்த்துப் பிரமித்தக் குலசேகரனைக் கண்டு அவள், "ஸ்வாமி! என்னைத் தெரியவில்லையா?" என்று கேட்டபடி முன்னால் வந்தாள்.

Saturday, September 29, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் பிரிவும், அரங்கன் தங்கலும்!

அந்த குகையைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருந்தார்கள் அனைவரும். அப்போது அவர்களில் ஒருவர் ஆழ்வாரையும் அவருடைய ஆபரணப் பெட்டகத்தையும் சங்கிலியில் பிணைத்து மேலே இருந்து இந்தக் குகைக்குள் இறக்கி விட்டு விடலாம் என யோசனை கூறினார். இதனால் ஆழ்வார் எவ்விதமான பயமும் இன்றிப் பாதுகாப்பாக இருப்பார். கள்வர்கள் அவ்வளவு எளிதில் இந்த குகைக்குச் செல்ல முடியாது. இப்படி ஒரு குகை இருப்பதே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் தான் தெரியும்.ஆகவே பின்னால் நல்ல காலம் பிறந்ததும் ஆழ்வாரை எப்படியேனும் குகையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவர் சொன்னதன் சாராம்சம். மீண்டும் அவர்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள். பலருக்கும் அவ்வளவு ஆழத்தில் உள்ள குகையில் ஆழ்வாரை இறக்கி விடுவது சம்மதம் இல்லை.  எனினும் இப்போது கள்வர் தொடர்ந்து வரும்போது வேறு வழியில்லை.

ஆகவே ஒரு நீண்ட சங்கிலித் தொடரை அங்கிருந்த காட்டுக்கயிறுகளால் பிணைத்துக் கட்டினார்கள். அது அந்தக் குகையைப் போய் எட்டும் அளவுக்கு நீளமானதா என்பதைச் சோதித்தும் பார்த்துக் கொண்டார்கள். கயிற்றுத் தொடர் உறுதியாக ஆழ்வாரையும் ஆபரணப் பெட்டியையும் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் ஆபரணப் பெட்டகத்தைத் திறந்து ஆபரணங்களை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி விட்டு ஆழ்வாரை அந்தப் பெட்டிக்குள் அமர வைத்தார்கள். அவருக்குப் பின்னால் எளிதில் தெரியாதபடிக்கு ஆபரணங்கள் அடங்கிய முடிச்சை மறைத்து வைத்தார்கள். பெட்டகத்தை நன்கு மூடி பத்திரமாய் உள்ளதா எனச் சோதித்துக் கொண்டு  சங்கிலியில் இறுகக் கட்டிச் செங்குத்தான அந்தச் சரிவு வழியே கிணற்றில் கயிறு கட்டி நீர் இழுப்பதற்கு இறக்குவது  போல் மெல்ல மெல்ல இறக்கி விட்டார்கள்.

ஆழ்வாரது பெட்டகம் கீழே போகப் போக ஆட்டம் ஆடத் தொடங்கியது. அனைவருக்கும் அது குகைக்குள் போகாமல் அந்தப் பாதாளத்திலேயே விழுந்து விடுமோ என்னும் கவலை! அதோடு இல்லாமல் சரிவுகளில் ஆங்காங்கே பாறைகள் வேறே சிறிதும், பெரிதுமாய் நீட்டிக் கொண்டிருந்தது. பெட்டகம் அவற்றில் இடித்ததும் ஒரே ஆட்டமாக ஆடியது. எப்படியோ சமாளித்து ஒரு வழியாகக் குகை வாய்க்குக் கொண்டு சென்று விட்டார்கள். மெல்ல மெல்ல அதன் வாய்க்குள் இருட்டில் அந்தப் பெட்டகத்தை உள்ளே விட்டார்கள். குகைப் பகுதியின் தரையைப் பெட்டகம் அடைந்து விட்டதற்கான அடையாளமாகப் பெட்டகம் தரை தட்டியது. உடனே கையில் பிடித்திருந்த நீளமான சங்கிலியையும் நழுவ விட்டனர். அந்தச் சங்கிலியும் பெரிய சப்தம் போட்டுக் கொண்டு குகையில் போய் விழுந்து விட்டது. பின்னர் அனைவரும் மிகுந்த துக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கே இருந்து கீழே இறங்கினார்கள். இவ்வளவும் செய்து முடிப்பதற்குள்ளாகக் கள்வர் கூட்டத்தார் மலை அடிவாரத்தை நெருங்கி இருந்தார்கள்.

இவர்களைக் கண்டதும் கள்வர் கூட்டத்தார் சுற்றிக் கொண்டனர். ஆழ்வாரின் பரிவாரங்கள் ஆழ்வாருக்கு அரங்கன் கூட்டத்தார் அளித்த வட்டமனையை ஆழ்வாருடன் சேர்த்து உள்ளே வைக்காமல் கையில் வைத்திருந்தனர். தங்கத்தால் ஆன அதைப் பார்த்த கள்வர் உடனே அதைக் கைப்பற்றிக் கொண்டதோடு அல்லாமல் "சித்தை" என அழைக்கப்படும் எண்ணெய்த் துருத்தியையும் பிடுங்கிக் கொண்டனர். அவர்களில் சிலரது உடைகளையும் கவர்ந்து கொண்டார்கள். நல்லவேளையாக ஆழ்வாரை மறைத்து வைத்தோமே என ஊர்வலத்தார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். கள்வர் கூட்டத்தார் அங்கிருந்து அகன்றதும் திசைக்குச் சிலராகப் பிரிந்து சென்று ஆங்காங்கே இருக்கும் ஊர்களுக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கியவர் சிலர். சொந்த ஊருக்கே சென்றவரும் சிலர். ஆழ்வாரோ நிம்மதியாக மலைக்குகையில் தன் அஞ்ஞாத வாசத்தைத் தொடர்ந்தார்.
*******************************************************************************

அரங்கன் கூட்டத்தாரின் ஊர்வலம் புங்கனூரை விட்டுக் கிளம்பித் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையைப் போய்ச் சேர்ந்தது. ஹொய்சள ராஜ்யத்தின் கீழ் வந்த இந்த ஊர் ஓர் வைணவத் தலம். இந்தச் சம்பவம் நிகழ்வதற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஶ்ரீராமாநுஜர் சோழ அரசனின் தொந்திரவைத் தாங்க முடியாமல் திருவரங்கத்தில் இருந்து கிளம்பித் திருநாராயணபுரம் சென்று அங்கே வசித்து வந்தார். ராமானுஜரின் வருகையினால் அந்தத் திருத்தலம் மேலும் புகழும் பெருமையும், புனிதமும் அடைந்திருந்தது.  இத்தகையதோர் ஊரிலே தான் திருவரங்கன் சரண் அடைந்தான். ஊர் வைணவர்கள் அனைவருக்கும் இது குறித்து மிக்க மகிழ்ச்சி. அரங்கனே அவர்களைத் தேடி வந்திருப்பது தாங்கள் செய்த புண்ணியமே என நம்பிய அவர்கள் அனைவரும் மிகவும் ஆதரவுடனும், மேள, தாளத்துடனும் அரங்கன் ஊர்வலத்தாரை எதிர்கொண்டு அழைத்தனர்.

வரவேற்பு முடிந்ததும் செலுவப் பிள்ளையின் கோயிலில் அரங்கனின் அர்ச்சாவதாரத்தை எழுந்தருளச் செய்தார்கள்  அரங்கத்தை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் அவர்கள் தயவில் இருக்கிறோமே என்னும் சோகத்தையே அனைவரும் சில நாட்களில் மறந்து போனார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்குத் திருநாராயணபுரத்தில் உபசாரங்கள் நடந்தன. அரங்கனுக்கும் தினப்படி, வாராந்தரி, மாதாந்தரி, வருட உற்சவங்களைக் குறைவின்றி நிகழ்த்தினார்கள். நீண்ட நாட்கள் கழித்து அரங்கத்தை விட்டு வந்த அரங்கன் இங்கே கொஞ்சம் நிம்மதியுடன் நீண்ட காலம் தங்க ஆரம்பித்தார்.

Friday, September 28, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அடுத்து என்ன?

குலசேகரன் சொன்னதைக் கேட்டு முதலில் வியந்தாலும் பின்னர் அவர்கள் அனைவரும் சென்று நம்மாழ்வார் விக்ரஹத்தைக் கொண்டு வந்தார்கள். ஆழ்வாரை எப்படித் தண்ணீருக்குள் இருந்து எடுத்தார்கள் என்பதைப் பலமுறை குலசேகரனும் மற்ற முக்குளவர்களும் சொல்லக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். இது நிச்சயம் இறைவன் செயலன்றி வேறேதும் இல்லை என்னும் தீர்மானத்துக்கு வந்தார்கள். அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வாருக்கு "வட்டமனை" என்னும் பெயரில் ஓர் வாகனத்தைத் தங்கத்திலேயும், வெள்ளியினால் ஆன திருமுன் பந்தம் (தீவர்த்தி) ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார்கள். சிறிது தூரம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமலே சென்றார்கள். "திருக்கிணாம்பி" என்னும் வைணவத்தலம் ஒன்று கர்நாடகத்தில் உள்ளது. அங்கே சென்று சிறிது காலம் அங்கே எந்தவிதமான பிரச்னையும் இன்றித் தங்கினார்கள். பின்னர் அரங்கன் ஊர்வலத்தாருக்குத் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்குச் செல்ல ஆவல் உண்டாக அங்கே செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஆழ்வார் ஊர்வலத்தாருக்குத் திருக்கிணாம்பியை விட்டுச் செல்ல விருப்பமில்லை.

இதைப் பற்றி இருவரும் விவாதித்தனர். அபிப்பிராய பேதங்கள் அதிகம் ஆகவே அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வார் ஊர்வலத்தார் வராவிட்டாலும் தாங்கள் செல்வது என முடிவு செய்தனர்.  ஆழ்வார் ஊர்வலத்தாரிடம் அவர்கள் விருப்பம் போல் செய்யும்படி சொல்லிவிட்டுத் திருநாராயணபுரம் செல்லும் வழியில் புங்கனூர் சென்று அடைந்தார்கள் அரங்கன் ஊர்வலத்தார். இங்கே ஆழ்வார் ஊர்வலத்தார் தனித்து விடப்பட்டதால் அவர்களுக்கு அங்கிருக்க மனமில்லாமல் அவர்களும் கிளம்பினார்கள்.  அரங்கன் ஊர்வலத்தார் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சென்று ஓர் கிராமத்தைச் சென்று அடைந்தனர்.  பின்னர் சிறிது வாத, விவாதங்களுக்குப் பின்னர் மேற்கே பயணிக்க முடிவு செய்து கொண்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு கிளம்பினார்கள். அப்போது கிராமத்தார் இது பற்றிக் கேள்விப் பட்டு ஓடோடி வந்து மேற்கே கள்வர் கூட்டம் அதிகம் என்பதால் அவ்வழி செல்லவேண்டாம் என்றனர். கிழக்கே போகிறோம் என ஊர்வலத்துப் பரிசனங்கள் சொன்னதுக்குக் கிராமத்தார் அங்கேயும் கள்வர் உண்டு. ஆழ்வாருடன் கூடவே நகைகள், பொக்கிஷங்கள் எடுத்துச் செல்வதால் தனிவழி செல்வது உசிதம் இல்லை என்றனர். மேலும் வடக்கே துருக்கியர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாயும் போதாதற்குக் கடலோரமாகக் கடற்கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

மிகவும் யோசனைக்கு இடையில் ஆழ்வாரின் ஊர்வலத்தார் ஆழ்வாரைத் தூக்கிக் கொண்டு தென்மேற்கே செல்ல முடிவு செய்தார்கள்.  அதிகாலையில் கிளம்பினார்கள். முன்னே சிலர் செல்லப் பின்னே சிலர் தொடர்ந்து வர நடுவில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆழ்வாரின் பரிவாரங்கள் தக்க இடைவெளி விட்டுப் பயணம் செய்தார்கள். அப்படியும் சிறிது தூரத்திலேயே பின்னால் வந்த எச்சரிக்கையாளர்கள் கள்வர்கள் வேவு மூலம் இவர்கள் பயணம் செய்வதைத் தெரிந்து கொண்டு விட்டதாகச் சொன்னார்கள். பின்னாலேயே பெரும் கூட்டமாக அவர்கள் வந்து கொண்டிருப்பதாயும் தனிமையான இடம் பார்த்து அனைவரையும் மடக்கிவிடுவார்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். பரிவாரங்கள் குழம்பிப் போய் நிற்க மீண்டும் வாத, விவாதங்கள் தொடர்ந்தன.

சிலர் எழுந்து அரங்கன்  ஊர்வலத்தாரோடேயே அவர்களும்  போயிருக்க வேண்டும் எனவும் அது தவறு எனவும் கூறினார்கள். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். ஆபத்து நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டிருப்பதால் எங்கே சென்றாலும் எந்தத் தரப்பில் சென்றாலும் ஆபத்து அவர்களைச் சூழ்ந்து கொள்வதோடு ஆழ்வாரின் கதி என்ன என்பதை நிரணயம் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள். அப்போது சிலர் ஆழ்வாரை மறைத்து விட்டுத் தாங்களும் பிரிந்து தனித்தனியாக நடந்தே சென்று வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விடுவது தான் சரியான வழி எனக் கூறினார்கள். எல்லோரும் இதற்கு ஒரு மாதிரியாக ஒத்துக் கொள்ள ஆழ்வாரை மறைத்து வைக்க என்ன வழி என யோசித்தனர்.

அப்போது ஒருவர் எதிரே தெரிந்த முந்திரிப்பு மலை என்னும் மலையில் எங்காவது ஆழ்வாரை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லலாம் என்று கூறினார். அனைவரும் மீண்டும் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு ஒத்துக் கொண்டார்கள். எல்லோரும் உடனே அதி விரைவாக மலையை நோக்கிப் பிரயாணம் செய்தனர். கொடி, செடிகள் நிறைந்த மலையில் மெல்ல மெல்ல மேலே ஏறினார்கள். அத்அன் விளிம்பில் இருந்து எட்டிப் பார்த்தால் கீழே அதலபாதாளம். அங்கே ஒரு குகை! அந்தக் குகைக்குச் செல்ல வழி தேடினால் கிடைக்கவில்லை. குகைக்குச் செல்ல வழியில்லை. கூர்ந்து கவனித்துப் பார்த்ததில் குகைக்கு அடுத்தாற்போல் கீழேயும் ஓர் செங்குத்தான சரிவு காணப்பட மலைகளுக்கு நடுவில் அந்தரத்தில் தொங்குவது போல் அந்தக் குகை காணப்பட்டது. 

Wednesday, September 26, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் மீட்பு!

கருடன் வட்டமிட்ட இடத்திலும் அது கொத்திச் சென்ற இடத்திலும் காணப்பட்ட ஜவந்திப்பூமாலை நம்மாழ்வாரின் திருமேனியில் சார்த்தப்பட்டது தான் என்பது குலசேகரனுக்கு நிச்சயமாயிற்று. ஆகவே இந்த இடத்தில் தான் நம்மாழ்வார் விக்ரகம் மூழ்கி இருக்க வேண்டும் என நினைத்தான். மாலை நீரில் ஊறிப் போய்க் கழுத்தில் இருந்து அகன்று மேலே வந்து மிதந்திருக்க வேண்டும். உடனே முக்குளவர்களை அழைத்து அங்கே 3 இடங்களைக் காட்டி அங்கே மூழ்கிப் பார்க்கச் சொன்னான்.  குலசேகரன் வெளியே தவிப்புடன் காத்திருந்தான். கணங்கள் சென்றன. ஆனால் ஒவ்வொரு கணமும் குலசேகரனுக்கு ஒரு யுகமாகத் தோற்றியது. முதலில் வந்தவன் எதுவும் கிட்டவில்லை எனக் கை விரித்தான். மேலே ஓடத்துக்கு வந்து மூச்சு வாங்கிக் கொண்டு இளைப்பாறினான். அடுத்து வந்தவனும் கை விரிக்க மூன்றாமவன் மேலே வந்து, "ஸ்வாமி, இங்கே ஏதோ தட்டுப்படுகிறது!" என்று சொன்னான். குலசேகரன் ஆர்வத்துடன் துள்ளிக் குதித்து அது நம்மாழ்வாராகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தான். அந்த முக்குளவனை நோக்கி ஓடம் சென்றது. உள்ளே இருக்கும் பொருள், அதன் அளவு, பரிமாணம் எதுவும் தெரியாததால் குலசேகரன் அவன் கையில் சுருக்குப் போட்ட ஓர் நீளக் கயிறைக் கொடுத்து மறுபடி உள்ளே முக்குளிக்கச் சொன்னான்.

சிறிது வெளியே வருவதும் மறுபடி நீரில் மூழ்குவதுமாக இருந்த அவன் கடைசியில் மேலே வந்து சுருக்கை நன்றாகக் கட்டி விட்டதாகத் தெரிவித்தான். இனி வெளியில் இழுக்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் மெல்ல மெல்ல இழுக்க ஆரம்பித்தான். நல்ல கனமான ஒரு பொருள் சுருக்குப் போட்டுக் கட்டப்பட்டிருந்தது என்பது புரிந்தது. குலசேகரனால் தனியாய் இழுக்க முடியாமல் போகவே அனைவரும் சேர்ந்து மெல்ல மெல்ல அங்குலம் அங்குலமாக மேலே இழுத்தார்கள். குலசேகரன் இதயம் படபடக்கக் காத்திருந்தான். நீர்ப்பரப்பின் மேலே ஒரு பெரிய பொருள் மேலே எழுந்து வெளிப்பட்டது.  மேலே வந்த பொருளை மனம் படபடக்கக் குலசேகரன் கவனித்தான். அவன் பார்வையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அது நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்திருந்த வாகனம் தான். ஆனால் வாகனம் உடைந்து இருந்தது. மேலும் அது தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கவனமுடன் பார்த்த குலசேகரன் நம்மாழ்வார் அந்த வாகனத்துடன் பிணைக்கப்பட்டிருந்த கயிறுகள் அறுபடாமல் இருந்ததையும் விக்ரகம் பாதிப்பில்லாமல் இருந்ததையும் கண்டு கொண்டான். போகிறது. வாகனம் தானே! போனால் போகட்டும். நம்மாழ்வாருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே! குலசேகரன் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

நம்மாழ்வார் ஆழ்வார் க்கான பட முடிவு

முக்குளவர்களும் உதவி செய்ய அனைவரும் சேர்ந்து பாதி உடைந்திருந்த வாகனத்தோடு பிணைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரை ஓடத்தில் ஏற்றினார்கள். குலசேகரனுக்கு அருகில் சென்று பார்க்கத் தயக்கம். ஆனால் எப்படி வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் உத்தரவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து நம்மாழ்வாரைப் பிணைத்திருந்த கயிறுகளை விலக்கி அவிழ்த்து விட்டு அவரை மட்டும் தனியாகத் தூக்கி ஓடத்தில் அமர்த்தினார்கள். கூப்பிய கரங்களுடன் ஒரு யோகி போல் நிற்கும் நம்மாழ்வார் விக்ரகத்தைக் கண்ட குலசேகரன் அவரை நேரிலேயே பார்த்தாற்போல் மனம் மகிழ்ந்தான். கண்களில் கண்ணீர் சுரக்க நம்மாழ்வாரை வணங்கினான். பின்னர் கரையை நோக்கி ஓட்டச் சொல்ல ஓடமும் கரைக்குச் சென்றது.

நம்மாழ்வார் ஆழ்வார் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

ஓடம் கரையை நெருங்க நெருங்க அங்கே ஏராளமான உள்ளூர் ஜனங்களும் கூடி இருந்தது தெரிய வந்தது. அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க ஓடம் கரையை அடைந்தது. கரையில் குதித்த குலசேகரன் அவர்களைப் பார்த்து, " பரிசனங்களே! நம்மாழ்வார் கிடைத்து விட்டார். போய் அவரை அழைத்துக் கொண்டு சென்று ஆராதியுங்கள்!" என வேண்டுகோள் விடுக்க அவர்களில் ஒருவர் அவனைப் பார்த்து, "ஐயன்மீர், தாங்களே நம்மாழ்வாரை அழைத்து வரலாமே!" எனச் சொல்ல, "ஐயா, எனக்கு அதற்குத் தகுதி இல்லை. நான் பதிதன்!" என்று கண்கள் நீரைப் பெருக்கிய வண்ணம் கூறினான் குலசேகரன்.

Tuesday, September 25, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வாரைத் தேடி!

அவரவர் வழியில் அவரவர் செல்ல வேண்டியது தான் எனப் பரிவாரங்களில் ஒருவர் கூறியதை ஏற்காத குலசேகரன் நம்மாழ்வார் கிடைக்கும் வரை அங்கிருந்து தான் நகரப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தான். அதற்கு ஒருத்தர் அவர் திரும்பவெல்லாம் வரப்போவதில்லை! உள்ளே அமிழ்ந்து விட்டார் எனக் கூற அங்கிருந்தே தான் மீட்டு வரப்போவதாகக் குலசேகரனும் உறுதியாகக் கூறினான். அனைவரும் அவனைக் கேலியாகப் பார்த்தனர். அந்த இடத்திலிருந்து நம்மாழ்வாரை மீட்டு வருவது எளிதான வேலையா என்றும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு குலசேகரனையும் ஏளனமாகப் பார்த்தனர். குலசேகரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. முயன்றே பார்க்காமல் எவ்விதத் தீர்மானத்துக்கும் வரக் கூடாது எனவும் அப்படி நம்மால் முடியவில்லை எனில் நம் பக்திக்கு அர்த்தமே இல்லை என்றும் தெளிவாகக் கூறினான். உடனே ஒருத்தர் அவனையே நம்மாழ்வாரைக் கண்டுபிடிக்கும்படி கிண்டலாய்க் கூற குலசேகரனோ தன் முடிவும் அதுதான் எனக் கூறி அங்கிருப்பவர்களில் யாரை அழைக்கலாம் எனப் பார்க்கலானான்.

அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே அமர்ந்திருந்த ஒருவர் விம்மி விம்மி அழுது கொண்டிருக்கவே குலசேகரன் அவரைப் பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டான். தண்ணீரில் தத்தளித்தவரை முழுகும் தருணம் தான் காப்பாற்றி ஏற்றிக் கொண்டதும் அவன் நினைவில் வந்தது. அவர் திருவரங்கத்துக்காரர். அரங்கன் ஊர்வலத்தோடு தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் குடும்பம் எங்கே எனவும் எப்படி இருக்கின்றது என்பதையும் அறியாமல் தினம் தினம் கலங்கிக் கொண்டிருந்தார். எனினும் விரைவில் தானும் அரங்கனோடு திருவரங்கம் சென்று விடலாம் என்றும் குடும்பத்தாரையும் கண்டு பிடிக்கலாம் எனவும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் இப்போது நடந்த நிகழ்வுகள் அவரைப் பித்துப் பிடிக்க வைத்து விட்டன. குலசேகரனைக் கண்டு," உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? ஆண்டனைக் கண்டு பிடிப்பாயா? கண்டு பிடி, கண்டு பிடி. ஆனால் அவர் உனக்குக்கிடைக்க மாட்டார்! ஏனெனில் அப்படி ஒருத்தர் இல்லவே இல்லை. இருந்திருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா? நாமெல்லாம் இத்தனை துன்பங்களை அனுபவிப்போமா? இல்லாத ஒருவரைத் தேடிச் செல்லப் போகிறாயா? போ! போ! எல்லாம் பொய், பொய்!", என்று கத்திவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அங்கிருந்தவர்கள் அவரைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தி அழைத்து வர முயன்றதை வேண்டாம் எனத் தடுத்து விட்டான்.

பின்னர் மிகவும் யோசனையுடன் பக்கத்து கிராமத்துக்குச் சென்று முக்குளவர்கள் சிலரை நீரில் மூழ்கித் தேடுவதற்கான சாமக்கிரியைகளுடன் அழைத்து வந்தான். உப்பங்கழியின் கரைக்கு வந்தான். அங்கிருந்த ஓடங்களில் ஒன்றை அமர்த்திக் கொண்டு முக்குளவர்களோடு தானும் ஏறிக் கொண்டு நம்மாழ்வார் மூழ்கி இருப்பார் என நினைக்கும் இடத்தை உத்தேசமாகத் தேடிக் கொண்டு சென்றான்.புயல் ஓய்ந்து அமைதியாக இருந்த நீர்ப்பரப்பில் சிறு சிறு அலைகள் மேலெழுந்து கொண்டிருந்தன. அது ஓடத்தைத் தாலாட்டுவது போல் இருந்தது. அந்தக் காயலின் நடுப்பகுதியில் நம்மாழ்வார் விழுந்திருக்கக் கூடும் என நினைத்த இடத்தை நோக்கிச் சென்றவர்கள் அங்கே ஓடத்தை நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தனர். எந்த இடத்தில் ஓடம் கவிழ்ந்திருக்கலாம் என்பதை அவர்களால் சரியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. வெகு நேரம் அங்குமிங்குமாக அலைந்து சில இடங்களைத் தேர்ந்தெடுத்து முக்குளவர்களை நீரில் மூழ்கித் தேடச் சொன்னான்.

பத்து இடங்களில் தேடியும் எதுவும் கிடைக்கவே இல்லை. குலசேகரன் கண்களில் நீர் பெருகியது. அனைவரிடமும் தான் உறுதியாக நம்மாழ்வாருடன் தான் திரும்புவதாகக் கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும்போது வெறும் கையோடு எப்படித் திரும்புவது எனக் கலங்கினான். ஏற்கெனவே தேடுவதையே கேலி பேசியவர்கள் இப்போது வெறும் கையோடு போனால் மேலும் கேலி பேசுவார்கள் என வருந்தினான்.. அரங்கனையும் நம்மாழ்வாரையும் மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டான். சுவாமியே தான் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். பின்னர் முக்குளவர்களை மேலும் மூன்று இடங்களைக் குறிப்பிட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னான். அவர்களும் அரைமனதாகத் தேடினார்கள். இன்னும் ஒரு இடம் பாக்கி.

அப்போது திடீரென அந்த இடத்துக்கு நேர்மேலாக ஓர் கருடன் வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டான் குலசேகரன். குறிப்பாக இங்கே மட்டும் கருடன் வலம் வருவானேன் என சந்தேகம் எழுந்தது அவனுக்குள். அப்போது அந்த கருட பக்ஷி வேகமாய்க்கீழிறங்கி நீரில் ஓர் குறிப்பிட்ட இடத்தைக் கொத்தியது. பின் மேலே விர்ரெனப் பறந்தது. அது கொத்திய இடத்தை நெருங்கிப் போய்ப் பார்க்கலாம் என ஓடத்தை அந்த இடம் நோக்கிச் செலுத்தச் சொன்னான் குலசேகரன். கிட்டே நெருங்க நெருங்க அவன் மனம் படபடத்தது. அங்கே மேலே ஏதோ மிதக்கவும் மனதில் கலக்கத்துடன் நெருங்கிப் பார்த்தவனுக்கு ஓர் பெரிய ஜவ்வந்திப் பூமாலை நீரில் மிதப்பது தெரிந்தது. அது நம்மாழ்வார் விக்ரஹத்தில் அணிவிக்கப்பட்ட மாலையே என்பது குலசேகரனுக்கு உறுதியாகத் தெரியும். கடைசியாக வழிபாடுகள் செய்தபோது அந்த மாலை தான் அவருக்கு அணிவிக்கப்பட்டது. 

Sunday, September 23, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் கிடைப்பாரா?

நம்மாழ்வார் விக்ரஹம் மெல்ல மெல்ல நீருக்குள் மூழ்குவது தெரிந்து அங்கிருந்தோர் அலறினார்கள். செய்வதறியாது துடித்தார்கள்.  "இனி என்ன செய்வோம்!" எனப் பதறினார்கள். அவர்கள் கூக்குரலைக் கேட்டுவிட்டு அங்கே நீந்தி வந்த குலசேகரன் விஷயத்தைத் தெரிந்து கொண்டு நீருக்குள் ஓடம் மூழ்கிய இடத்தைக் கேட்டறிந்து கொண்டு அங்கே போய் அவனும் நீருக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு மூழ்கிப் போய் நம்மாழ்வாரைத் தேடினான். பலரும் அவனைத் தடுத்தனர். ஏனெனில் புயலின் வேகம் அதிகரித்திருந்தது. அலைகள் இரைச்சல், காற்றின் ஊளைச் சப்தம் ஆகியவை சுற்றிலும் இருப்பவர்களைத் தெரியாமல் அடித்ததோடு அவர்கள் இருக்குமிடத்தையும் காண முடியாமல் செய்தது. ஆனாலும் பலரும் குலசேகரனை நீரில் மூழ்கித் தேட வேண்டாம் என்றே கூக்குரல் இட்டார்கள் என்பதைக் குலசேகரன் புரிந்து கொண்டான். அலைகள் அவனை மேலும், கீழுமாகப் புரட்டித் தள்ளியது. அதைக் கூடப் பொருட்படுத்தாமல் உள்ளே அமிழ்ந்து போய் விக்ரஹத்தைத் தேட நினைத்த குலசேகரனை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கு அங்கே ஒரு பெரிய சுழி இருப்பதையும் அதன் வேகம் அவனை உள்ளே இழுப்பதையும் புரிந்து கொண்டான். அதை எதிர்த்துப் போராடி அதில் இருந்து வெளியேற முயன்றான். சுழி அவனை உள்ளே இழுக்க அவன் மேலே வரப் போராட இருவருக்கும் ஒரு துவந்த யுத்தமே அங்கே நடந்தது.  ஒரு கணத்தில் அந்த சுழியால் அவன் உள்ளே இழுக்கப்பட இருந்த சமயம் சட்டென்று கைகளைத் துடுப்புப் போல் மாற்றிப் போட்டு நீந்த முயன்றான் குலசேகரன். என்றாலும் அந்தச் சுழலுக்குள் அவன் மாட்டிக் கொண்டுவிடுவானோ என அஞ்சும்படியே இருந்தது.  அந்தச் சுழலுக்கும் அவனுக்கும் இடையே ஒரு பெரிய போராட்டமே நடந்தது. கடைசியில் குலசேகரன் வென்றான். என்றாலும் சுழலுடன் போராடியதில் மிகவும் களைத்துச் சோர்ந்து விட்டான். அவனால் அதிகம் நீந்த முடியவில்லை. நம்மாழ்வார் விக்ரஹத்தைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் ஓடங்களில் இருந்து கீழே விழுந்து தத்தளிக்கும் மற்றவர்களையாவது காப்பாற்றலாம் என முயன்றான். கவிழ்ந்த ஓர் ஓடத்தின் மரப்பலகைகள் நீரின் வேகத்தில் அடித்துக் கொண்டு வந்தன. அவற்றில் ஒரு பெரிய பலகையைப் பிடித்துக்கொண்டு அதன் மேல் ஏறி அதைத் தெப்பம் போல் பயன்படுத்திய குலசேகரன் இன்னொரு சிறிய பலகையைத் துடுப்புப் போல் பயன்படுத்தி அதைச் செலுத்திக் கொண்டு நீரில் தத்தளித்தவர்களைத் தேடிச் சென்றான்.

யார் எங்கே தத்தளிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. என்றாலும் குரல்கள் கேட்ட திக்கை வைத்து யூகத்தின் பேரில் தெப்பத்தை ஓட்டிச் சென்று முடிந்தவர்களைக் காப்பாற்றித் தன் தெப்பத்தில் ஏற்றிக் கொண்டான் குலசேகரன். குரல் கேட்டுச் சென்றால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் நீரில் அமிழ்ந்து போயிருப்பார்களோ என்பதை நினைத்துக் குலசேகரன் மனம் திடுக்கிட்டுப் போய் விடும். குலசேகரனுக்குச் சோர்வு ஏற்பட்டு விடும். என்றாலும் சமாளித்துக் கொண்டு இயன்றவரை மற்றவர்களுக்கு உதவி செய்தான்.  இரு நாழிகை இப்படி அனைவரையும் கலங்க அடித்த புயல் காற்று மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பெரிய மழை குறைந்து சிறு தூற்றல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது. புயல் அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து சென்றது. ஆனால் அங்கே இருநாழிகை நேரம் வீசிய புயலால் அந்த நீர்ப்பரப்பே அல்லோலகல்லோலமாகி விட்டது. மெல்ல மெல்ல வெளிச்சமும் வர ஆரம்பித்தது.

வெளிச்சம் சரிவர வரவில்லை. எனினும் அது தண்ணீரில் பட்டுப் பிரதிபலித்தபோது சுற்றிலும் நடந்திருக்கும் கோரங்கள் கண்களில் பட்டன. அனைத்து ஓடங்களும் ஓர் சீரான வரிசையில் ஒன்றாகச் சென்று கொண்டிருந்தன. ஆனால் இப்போது திக்குக்கு ஒன்றாகப் பிரிந்து சென்றுவிட்டன. சில ஓடங்கள் கவிழ்ந்து கிடக்கச் சில ஓடங்கள் பாதை மாறி எங்கேயோ போய் விட்டன. சில வெகுதூரம் காற்றில் தள்ளிக் கொண்டு போய் விட்டன. குலசேகரனுக்கு அருகில் இருந்த ஓடம் ஓட்டி ஓடத்தை நிறுத்திக் குலசேகரனையும் அவனுடன் தெப்பத்தில் இருந்தவர்களையும் ஏற்றிக் கொண்டான். ஓடங்கள் கரையை நோக்கிச் சென்றன. மெதுவாகக் கரையையும் அடைந்தன. இறந்தவர்களை நினைத்து அவர்களின் உறவினர்கள் எழுப்பிய கூக்குரல் மனதைப் பிசைந்தது. என்ன செய்ய முடியும்! தங்கள் பரிதாபமான நிலையை நினைத்துப் புலம்பிக் கொண்டே தங்களைத் தாங்களே சமாதானம் கொள்ளவும் ஆரம்பித்தனர்.  என்றாலும் அனைவர் மனதிலும் இத்தனை துக்கத்திலும் நம்மாழ்வார் விக்ரஹத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆழ்வார் திருநகரியில் இருந்து இத்தனை மாசங்கள் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த விக்ரஹம் இன்று ஒரு சில நிமிடங்களில் நீருக்குள் அமிழ்ந்து போனதை எண்ணி எண்ணிப் புலம்பினார்கள். திரும்ப ஊருக்குச் சென்றால் ஊர் மக்களிடமும் கோயில் அதிகாரிகளிடமும் என்ன சொல்வது?ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா? பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தெய்வாம்சம் பொருந்திய விக்ரஹம் அல்லவோ! நீரில் விட்டு விட்டோமே எனப் புலம்பினார்கள். இனி என்ன செய்வது என்றெல்லாம் யோசித்துக் கலங்கினார்கள். நம்மாழ்வார் விக்ரஹத்தை மீட்டுக் கொண்டு பயணத்தைத்தொடரலாமா, இல்லை எனில் அப்படியே செல்லலாமா என அவர்களுக்குள் ஓர் விவாதம் நடந்தது.

Wednesday, September 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் எங்கே?

பாண்டியர்களின் தோல்விக்குப் பின்னர் நாஞ்சில் நாட்டில் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை எனப் புரிந்து கொண்ட அரங்கனின் அடியார்கள் அரங்கனை வேறே எங்காவது தொலைவில் எடுத்துச் செல்ல முடிவெடுத்துக் கர்நாடகத்தில் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்கு எடுத்துச் செல்ல முடிவும் செய்தார்கள். அதன்படி கிளம்பியும் விட்டார்கள். அங்கே அவர்களுடன் அத்தனை நாட்கள் நெருங்கிப் பழகி வந்த நம்மாழ்வாரின் ஊர்வலத்தார் அரங்கன் ஊர்வலத்தாரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர்களுடனேயே சென்றனர். பல நாழிகை தூரம் ஒன்றாகவே சென்றார்கள். வழியில் பெரிய உப்பங்கழி எதிர்ப்பட்டது. அதன் மறுகரை கண்ணுக்குத் தெரியவே இல்லை. இவ்வளவு பெரிய உப்பங்கழியா என அதிசயப்பட்ட ஊர்வலத்தினர் இதை ஓடங்களில் தான் கடக்க வேண்டும் என முடிவு செய்து நம்மாழ்வார் விக்ரஹத்தை ஓர் ஓடத்திலும், அரங்கன் விக்ரஹத்தை மற்றொரு ஓடத்திலும் ஏற்றிவிட்டு அதில் ஏற முடிந்த அளவுக்கு ஏறிக் கொண்டார்கள். மற்றவர்கள் வேறு ஓடங்களை அமர்த்திக் கொண்டு சாமான்களுடன் பயணித்தார்கள்.

அரங்கன் இருந்த ஓடம், நம்மாழ்வார் இருந்த ஓடம் இரண்டும் ஒரே வேகத்தில் இணையாகச் சென்றன.  துடுப்புப் போடுபவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு அம்மாதிரியே செலுத்தினார்கள். அந்தக் காயலின் நடுவே அவர்கள் வந்தார்கள். திடீரென வானம் கறுத்து இடியும், மின்னலும் கொட்டி முழக்கின! அதைக்கண்டு திகைத்த ஊர்வலத்தார் அந்தக் காயலின் மேற்கேயும் வடக்கேயும் காணப்பட்ட கரை மீது தூரத்தில் இருந்த தென்னஞ்சோலைகளின் கிளைகள் யாவும் ஒரே மாதிரி வேகத்தில் இயங்கின. உடனே சூறாவளி வருகின்றது என்பதை ஓடத்தை ஓட்டியவர்கள் புரிந்து கொண்டு சூறாவளி, சூறாவளி எனக் கத்தினார்கள். படகில் இருந்தவர்கள் இம்மாதிரியான அனுபவங்களுக்குப் பழக்கப்படவில்லை. ஆகவே திகைத்துப் போனார்கள். சூறாவளி வரும் திசைக்கு எதிர்த்திசையில் ஓடங்களை ஓட்ட வேண்டி அதன் சுக்கானைத் திருப்பிக் கிழக்கே நோக்கி ஓடங்களை ஓட்ட ஆரம்பித்தனர். ஆனால் எத்தனை நேரம் தாக்குப் பிடிப்பது. விரைவில் வடக்கே இருந்து வந்த சூறாவளிக்காற்று பேரிரைச்சலோடு அவர்கள் சமீபத்தில் வருகிறதைப் புரிந்து கொண்டனர் அனைவரும்.அதற்குள்ளாகக் கரைகளில் காணப்பட்ட தென்னை மரங்கள் பேயாட்டம் ஆடின.

கரையோரத்தில் உள்ள நீர்ப் பிரதேசமும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டது.  வடக்கேயும் மேற்கேயும் தென்னஞ்சோலைகளில் ஆரம்பிக்கப்பட்ட சூறைக்காற்றானது நீர்ப்பிரதேசத்தை விரைவில் அணுகி ஓடங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. விண்ணிலோ எனில் மேகங்கள் மூடிக்கொண்டு எங்கும் இருட்டாகி விட்டது.  "அரங்கா! அரங்கா!" என ஊர்வலத்தார் கதற ஆரம்பித்தனர். ஓடங்களோ ஒரு நிலையில் இல்லாமல் திருகித் திருகிச் சுழல ஆரம்பித்தன. ஓடங்கள் சுழன்ற வேகத்தில் ஓடத்தில் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தத்தளித்தப் பரிவாரத்தினர் ஓடத்தின் மத்தியிலும் காயலிலும் விழுந்து அவதிப்பட்டனர். யார் காயலில் விழுந்தார்கள், யார் ஓடத்திலேயே விழுந்தார்கள் என்பதை எல்லாம் அவர்களால் அந்தக் கும்மிருட்டிலும், காற்றின் ஓசையிலும் காற்றடித்த வேகத்திலும் கண்டறிய முடியவில்லை. நேரம் ஆக ஆகப் புயல் வேகம் அதிகரித்தது. ஓடத்தை இணைத்திருந்த பலகைகள் கூட ஆடத் தொடங்கி விட்டன.

அரங்கனை அழைக்கும் தீனக்குரல்கள் எங்கும் கேட்டன. கட்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். அதற்குள்ளாக ஆரம்பித்த மழையானது சாட்டையால் அடிப்பது போல் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அரங்கனைத் தங்கள் உடலாலும் துணிகளாலும் மூடியவண்ணம் சிலர் ஓடத்திற்குள் தாழ்வான பகுதியில் மறைத்து வைத்து அதன் மேல் படுத்த வண்ணம் மழை அரங்கன் மேல் விழாமல் பாதுகாத்தனர். ஊழிக்காலம் தான் ஏற்பட்டு விட்டதோ என்னும்படி புயலும், மழையும், காற்றும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. ஓடங்கள் அலைகளின் வேகத்தில் மேலும், கீழும் ஆடின. தட்டாமாலை சுற்றின. பயணிகள் பயத்தில் "ஓ"வென்று அலறினார்கள். தண்ணீர் வேகத்துக்கு ஏற்ப ஓடங்கள் கீழே தாழ்ந்தன, மேலே நிமிர்ந்தன, சில நேரம் வேகமாக நீரோட்டத்துடன் சென்றன. சில சமயம் நின்ற இடத்திலேயே சக்கரவட்டமாகச் சுழன்றன.

ஒரு ஓடம் இரண்டாகப் பிளந்தே விட்டது. நீருள்  மெல்ல மெல்ல மூழ்கவும் தொடங்கியது. அதில் இருந்த பரிவாரங்கள் கண்ணுக்குத் தெரிந்த பக்கத்து ஓடங்களைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி உயிர் தப்பிக்க முயன்றனர். சிலர் உதவினர். பலரால் எதுவும் செய்ய முடியவில்லை. தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூட சக்தி இல்லாதவர்களாகப் பலரும் இருக்கையில் மற்றவருக்கு உதவுவது எங்கனம்!  அப்போது பார்த்து நம்மாழ்வார் விக்ரஹம் இருந்த ஓடம் ஓர் பெரிய அலையில் மாட்டிக் கொண்டு வெகு தூரத்துக்கு மேலே ஏறியது. பின்னர் அந்த அலை தாழ்ந்த வேகத்தில் ஓடம் வெகு விரைவில் நீருக்குள் அமிழ்ந்தும் போனது. சற்று நேரத்தில் மேலே வரும் என நினைத்த அடியார் கூட்டத்துக்கு அது மேலே வராதது மனத்தில் திகிலை ஊட்டியது. ஓடம் கவிழ்ந்ததோடு அல்லாமல் நம்மாழ்வார் விக்ரஹமும் அதனோடு கவிழ்ந்து விட்டதை அனைவரும் அறிந்து கொண்டு செய்வதறியாது திகைத்தனர்.