எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 26, 2006

ஓம் நமச்சிவாயா-20

அந்தக் குதிரைக்கு நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லைனு தெரிஞ்சிருக்கணும். வளையத்தைக் காலில் நானாக மாட்டிக் கொள்ள முயன்றதும் அது என்னைக் கீழே தள்ளி விட்டது.குதிரையின் விலாப் பக்கத்தில் வளையத்தை மாட்டிக்கொள்ள முயன்றபோது நான் கொடுத்த அழுத்தத்தினால் அது ஓட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதெல்லாம் அப்புறம் தான் தெரிந்து கொண்டேன். இப்போக் கீழே விழறதுன்னா எப்படி விழறது? அது ஒரு பெரிய விஷயம். ஒரு பக்கம் நதிக் கரை. நல்ல வேளையா உயர்ந்த கரைப் பக்கத்தில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி ஆச்சு. இன்னொரு பக்கம் நெடிது உயர்ந்த மலைகள். இடது பக்கமாய் விழுந்தால் நதியில் விழுந்து அங்கே இருந்து நேரே கைலை தான் போகணும். வலது பக்கமாய் விழுந்தால் மலைப் பாறை மண்டை உடையும். எது தேவலை. யோசிக்கவே நேரம் இல்லை. உடம்பைக் குறுக்கிக் கொண்டேன். என்னோட யோகா பயிற்சி கை கொடுத்தது. நல்லவேளையாக நான் விழுந்தது வலது பக்கமாய்த் தான். அப்படியே உட்கார்ந்த வாறு விழுந்தேன். தலையில் அடி படாமல் இருக்கக் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டபடி விழுந்தேன். அதற்குள் சத்தம் கேட்டுக் குதிரைக்காரி ஓடி வந்தாள். என்னோட உதவி ஆளைக் கூப்பிட்டாள். அது மட்டும் நதியின் உயர்ந்த கரையாக இருந்திருந்தால் அந்தக் குறுகிய இடத்தில் நான் விழுந்திருந்தால் பின்னால் வந்த குதிரைகள் எல்லாம் தமிழ் சினிமா, இந்தி சினிமா வில்லன், வில்லியை மிதிக்கிற மாதிரி மிதித்துக் கொண்டு போக வேண்டி இருக்கும் அல்லது எனக்கு நல்ல அடி பட்டிருக்கும். இப்போதும் அடி பட்டது. ஆனால் இடுப்பில் அடி பட்டது. மண்டை உடைந்து ரத்தம் வராமல் போச்சே என்று சந்தோஷப்பட்டேன்.

ஏற்கெனவே வலது பக்க இடுப்பில் ஏணியில் இருந்து கீழே விழுந்து, மாடு முட்டிக் கீழே விழுந்து, வீட்டிலேயே நடக்கும்போது விழுந்து என்று மேலே மேலே அடி பட்டுக் கொண்டிருந்தது. அதே இடத்தில் இப்போதும் நல்ல அடி. என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை.அசையக் கூட முடியவில்லை. குதிரைக் காரியானால் எழுந்திரு என்கிறாள். இவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. ஒரே ஆத்திரமும், அழுகையுமாக வந்தது. அதற்குள் தாண்டிப் போனவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். அதற்கு இவங்க விட்டால்தானே. இரண்டு பேருமாக என்னை மறுபடி குதிரை மேல் ஏற்றி விட்டார்கள். இத்தனை நேரம் உட்காரக் கஷ்டமாக இல்லை. இப்போ உட்காரவே முடியலை. காலைத் தொங்கப் போடவும் முடியலை. குதிரை நடக்கும் போது எல்லாம் அதன் முதுகெலும்பு பட்டு இன்னும் வலி ஜாஸ்தி ஆகிறது. ரொம்பவே வேதனையாக இருந்தது. ரத்தம் கட்டி வீங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். சற்றுத் தூரம் போனதும் சாப்பாடு சாப்பிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அங்கே இறங்கச் சொன்னார்கள். எங்கே இறங்கறது? முடியலைன்னு சொன்னேன். உடனேயே பிடித்து இழுத்து இறக்கி விட்டார்கள். வலது காலை ஊன்ற முடியாமல் கால் மடிந்து மறுபடி கீழே விழுந்தேன். (இந்தக் குதிரைக்காரர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாய்த் தான் நடந்து கொள்கிறார்கள். மேலும் நாம் குதிரையில் இருந்து கீழே விழுவது அவர்களுக்கு உற்சாகமாய்ச் சிரிப்பு வருகிற விஷயமாய் இருக்கிறது. இது பற்றி ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி அவர்கள் என்ன சொன்னாலும் பேசாமல் இருக்கவேண்டும், அவர்களிடம் கோபமாய்ப் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தோம்.)நான் மறுபடி கீழே விழுந்த சமயம் எங்கோ இருந்து வந்த என் கணவர், "பார்த்து இறங்கக் கூடாது?" என்றார். உடனேயே கோபமும், அழுகையுமாய் வழியிலேயே கீழே விழுந்ததைச் சொன்னேன். அடி பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அதற்குள் திரு ராமச்சந்திரன் சில வலி நிவாரணி மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். பக்க விளைவுகள் இல்லாதது என்றும், தைரியமாய்ச் சாப்பிடலாம் என்றும் சொன்னார். என் கணவர் எங்கள் இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு திரு மனோகரனிடமும், கிருஷ்ணாவிடமும் எனக்கு அடிபட்டு வலி அதிகம் இருப்பதைச் சொன்னார். அவர்கள் இங்கே தங்க இடம் ஏதும் இல்லை என்றும் இன்னும் ஒரு 3 மணி நேரம் போனதும்தான் இரவு தங்கப் போகும் கேம்ப் வரும் என்றும் அங்கே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சாப்பிடும் போதே பனிமழை பொழிய ஆரம்பித்தது. கூரை எதுவும் இல்லாத திறந்த வெளி தான். ஆகவே எல்லாரும் ரெயின்கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கும்போதே காற்று அடிக்க ஆரம்பித்தது. ஒருவழியாகச் சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டுக் கிளம்பினோம். குதிரைக்காரியிடமும், என்னோட உதவி ஆளிடமும் என் கணவர் எவ்வளவோ சொல்லிப் புரியவைக்க முயன்றார். என்ன புரிஞ்சிண்டாங்களோ தெரியலை.

மூன்று மணி நேரம் கழித்து ஒரு நதிக்கரையில் மறுபடி இறக்கி விட்டார்கள். நதி இப்போது குறுக்காகப் போய்க் கொண்டிருந்தது. நதியின் மறு கரையில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இடத்தில் கரை குதிரை போகிற மாதிரி இல்லை. நாம் தான் இறங்கிப் போக வேண்டும். நதியைக் கடந்து மறு கரை போய் மேட்டில் ஏறிக் கேம்பிற்குப் போகவேண்டும். எல்லாரும் இறங்கிக் கடந்து கொண்டிருந்தார்கள். என்னோட ஹெல்ப்பரை உதவிக்குத் தேடினேன். கையில் ஒரு தடி கொடுத்து விடுகிறார்கள். எல்லாருக்குமே. எங்கெல்லாம் வழுக்குமோ அங்கெல்லாம் தடியின் உதவியுடன் நடக்க வேண்டும். பனியாக இருந்தாலும் தடியை ஊன்றிக் கொண்டு நடக்கலாம். இருந்தாலும் பாறை வழுக்குப் பாறையாக இருந்தால் என்ன செய்வது? அதனால் ஆளைத் தேடினேன். அவன் முன்னாலே போய்விட்டான். எனக்கு ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. எனக்கு முன்னாலே தெலுங்கு எழுத்தாளப் பெண்மணி ஸ்ரீலட்சுமி போய்க் கொண்டிருந்தார். அவரும் தடுமாறிக் கொண்டிருந்தார். ஒரு அடி எடுத்து வைப்பதும், நிற்பதுமாக ரொம்பவே சிரமப்பட்டார். அதற்குள் என் கணவரும் அவருடைய உதவிப் பெண்மணியும் வரவே அந்தப் பெண்மணி முதலில் அவரைக் கொண்டு அக்கரையில் விட்டு விட்டுப் பின் திரும்பி வந்து என்னை அழைத்துக் கொண்டு போனாள். அங்கே கேம்பில் எல்லா இடமும் பூர்த்தி ஆகிக் கொண்டிருந்தது. சற்றுக் கீழே உள்ள ஒரு "மட் ஹவுஸில்" எங்களைப் போய்ப் படுக்குமாறு மனோகரன் கூறவே, சற்றுப் படுக்கை உறுத்தாமல் இருந்தால் பரவாயில்லை. அடி பட்டிருக்கிறது என்று என் கணவர் கூறினார். ஆனால் அவர் நடந்து வருகிறவர்களுக்குத் தான் இந்த இடம்னு சொல்கிற மாதிரிப் பேசாமல் போய்விட்டார். வேறு வழியில்லாமல் அந்த அறைக்கு வந்தோம். கிட்டத் தட்ட 10 பேருக்குப் படுக்கை போட்டிருந்தது. எனக்கு முன்னாலே செந்திலின் நண்பர் ரமேஷ், ஸ்ரீலட்சுமி, அவரின் கூட வந்த செளமினி, கண்ணம்மா, திருமதி லலிதா மற்றும் மதுரையில் இருந்து வந்த அலமேலு ஆகியோர் இருந்தார்கள். ஒரு இரட்டைப்படுக்கையில் எங்களுக்கு இடம் கிடைத்தது. கற்களால் மேடை போல அடுக்கி வைத்து அதன் மேல் விரிப்பை விரித்திருந்தார்கள். போர்த்திக் கொள்ள நல்ல வேளையாக ரஜாய் இருந்தது. எல்லாரும் அதில் படுக்கவே முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலே எங்கள் படுக்கையின் கால்மாட்டில் திருமதி லலிதாவின் படுக்கை, தலைமாட்டில் இன்னும் இரண்டுபேர், பக்கவாட்டில் திருமதி அலமேலு. நாங்கள் இறங்குவது என்றால் யார் காலையோ தலையையோ மிதிக்காமல் இருக்கிறோமா என்று பார்க்கவேண்டும். என் கணவர் போய்ப் படுத்தது தான் இறங்கவே இல்லை மறுநாள் காலை வரை.

அப்போது திரு கிருஷ்ணா வந்து எல்லார் உடல் நலமும் தினசரி கேட்கிற மாதிரி விசாரித்து விட்டு என்னிடம் நீங்கள் தொடர்ந்து வருகிறீர்களா? என்று கேட்டார்.நான் யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் மறுநாள் கிட்டத்தட்ட 7 கி.மீ. முதலில் நடக்கவேண்டும் என்றும், அதன் பின் குதிரையில் போகவேண்டும் என்றும், பின் மறுபடி நடக்கவேண்டும். அது ரொம்பவே கஷ்டமான ஒன்று. எங்கேயும் நடுவில் நிற்க முடியாது. ஒரே செங்குத்துப் பாதை. துணை இல்லாமல் முடியாது யோசித்துச் சொல்லுங்கள். என்று சொன்னார்.

Tuesday, November 21, 2006

ஓம் நமச்சிவாயா-19

குதிரை கனைக்கவும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. குதிரை நல்ல உயரம். என் கணவரின் கணிப்பிலே அது 7 முதல் 8 அடிக்குக் குறையாது. எனக்கோ இமயமலை அளவு உயரமாய்த் தெரிஞ்சது. நல்ல வெள்ளை நிறம். நல்ல அடர்த்தியான வால் நேர்த்தியான அலங்காரம். குதிரைக்கு முகத்திலும் அலங்காரம். உட்காருமிடத்திலும் நல்ல மெத்தென்று தான் துணிகள் போடப் பட்டிருந்தன. உட்காரக் கால் வைத்து ஏறும் சேணம்? சேணம் என்ற வார்த்தை சரியா இது? தெரியலை. ஏறும் வளையம் தரையில் இருந்து மூன்று அடி உயரத்தில் .இருந்தது.என் வலது கால் ஏற்கெனவே சரியில்லை. நடக்கும்போதே மடிந்து விடும். வலது காலைத் தூக்கி வைத்து ஏறமுடியாது. இடது காலைத் தூக்கி ஏற வசதியாக இல்லை.என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தேன். குதிரைக்காரியோ அவசரப் படுத்திக் கொண்டிருந்தாள். நான் என் கணவர் வரட்டும் இரு என்று அவளிடம் எவ்வளவோ ஜாடை செய்து சொல்லியும் அவள் புரிந்து கொள்ளவே இல்லை. ஏதோ நான் பிறந்தது முதல் குதிரையிலேயே சவாரி செய்து வந்தவள் என்று எண்ணிக் கொண்டாள் போல் இருக்கிறது. இவர் எங்கே போனார் என்று பார்த்தால் ஆள் விலாசமே தெரியவில்லை. அதுக்குள்ஏறிப் பார்க்கலாம்னு முயற்சி செய்தால் என்னால் காலைத் தூக்கி வைக்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. நான் தயங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பெண் திடீரென திபெத்திய மொழியில் ஏதோ கத்தினாள். என்னவென்று புரிந்து கொள்வதற்குள் நான் குதிரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி ஆட்கள். அப்புறம் ஒரு வழியாகப் புரிந்தது. அந்தப் பெண் கூட வந்தவர்கள் உதவியுடன் என்னைக் குதிரையில் ஏற்றி இருக்கிறாள் என்று. நான் சுதாரித்துக் கொள்வதற்குள் குதிரை கிளம்பி விட்டது. அப்பவும் என் கணவரைத் தேடினேன். அந்த நீண்ட, வளைந்த மலைப்பாதையில் அவர் வருகிறாரா இல்லையா எனவே தெரியவில்லை. குதிரை வேக நடை போட்டது. கூடவே அந்தப் பெண்ணும் வேக நடை போட்டாள். அவளுடைய சிறிய பாதங்கள் அந்தக் கல்லிலும், பாறையிலும் சற்றும் தடுமாறாமல் போய்க் கொண்டிருந்தது.

குதிரைக்காரர்களில் ஒருத்தர் நடந்து போகும் அலுப்புத் தெரியாமல் இருக்க ஏதோ ஒரு நாட்டுப் புறப்பாடலை ஆரம்பிக்கப் பின் அந்தப் பெண்களும் கூடவே அதற்குத் தகுந்தாற்போல பாட ஊர்வலம் போல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எனக்கு உள்ளூறத் திகில். பாதை சரியான மலைப்பாதை. பாறைகளும், கற்களும் நிறைந்தது. பாறைகள் என்றால் பாறைகள். குதிரை அவற்றை எப்படித்தான் மிதித்துக் கொண்டு போனதோ தெரியவில்லை. மிகக் குறுகலான பாதை. குதிரையின் காலடியும், அந்தப் பெண்களின் காலடியும் மட்டும் வைக்கலாம். அவ்வளவு குறுகலான பாதை. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலைச் சிகரங்கள். இடது பக்கமாய்க் கரைக்குக் கீழே பல அடி ஆழத்தில் "வைதருணி நதி" கிட்டத் தட்ட 200 முதல் 250 அடி வரை அகலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆழம் என்னவோ தெரியாது. நதி வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. நதியின் மறு கரையில் மலைச் சிகரங்கள் காலை வெயிலில் பள பளக்கின்றன. அவற்றின் பிரதிபலிப்பின் வேகத்தைப் பார்த்ததும் கண்கள் கூசும். ஆகவே தான் கறுப்புக் கண்ணாடி அவசியம்.

குளிருக்கான ஆடை அணிகள், இவற்றோடு நடப்பதே சிரமமாக இருக்கும் அந்த மலைப்பாதையில். இதிலே குதிரை மேலே வேறே போவது என்றால் கேட்கவே வேண்டாம். எனக்கு முன்னால் தெலுங்கு எழுத்தாளப் பெண்மணி ஸ்ரீலட்சுமி போய்க் கொண்டிருந்தார். அவருடைய தோழிகளும் முன்னால் போனார்கள். எனக்குப் பின்னால் திரு வெங்கடேசன், திரு ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். என்னோட உதவிக்கு வரும் ஆள் எங்கேயோ முன்னால் போய்க் கொண்டிருந்தான். எல்லாரும் அவனைக் கூப்பிட்டுக் கிட்ட வைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அவன் வந்தால் தானே. குதிரை போகும் திசைக்கு நேர்மாறாக ஆறு ஓடுகிறது. குதிரையில் போய்க் கொண்டே ஆற்றைப் பார்க்கும்போது அந்தக் கரையில் இருக்கும் பெரிய பெரிய மலைகளும் கூடவே நகர்கிற மாதிரி ஒரு பிரமை. எனக்குத் தானா எல்லாருக்குமா தெரியவில்லை. முன்னால் பார்த்தால் மலை ஏறும் பாதை. பின்னால் பார்த்தாலோ மலை ஏறி வந்த பாதை ஆழத்தில் தெரியும். பக்கவாட்டில் வலது பக்கமாய்ப் பெரிய பெரிய மலைகள். இடது பக்கமாய் ஓடும் நதி. எங்கே பார்ப்பது? இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த மனக்குரங்கானது பயத்தையே ரசித்து வர ஆரம்பித்தது.

சில கி.மீ தூரம் போனதும் நதி அங்கே ஒரு சிறு கிளையாக இரண்டு மலைகளுக்கிடையில் பிரிகிறது. அங்கே இறங்கி ஒரு கி.மீ. வரை நதியில் போய்ப் பின் மறுபக்க மலையில் மேலே ஏற வேண்டும். குதிரை இறங்க ஆரம்பித்தது.குதிரை இறங்கும்போது நாம் பின்னால் சாய்ந்து கொள்ளவேண்டும் என்றும் குதிரை ஏறும்போது முன்னால் சாய வேண்டும் என்றும் ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். பின்னால் சாயும் என் முயற்சியில் கால் வளையத்தில் இருந்து விடுபட்டது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. என்னுடைய உதவி ஆளைக் கூப்பிடுமாறுக் கூட வந்தவர்களிடம் சொல்ல அவர்களும் அப்படியே செய்தார்கள். அவன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலை ஆட்டி விட்டுப் பின் போய் விட்டான். என்ன செய்வது என்றே புரியவில்லை. நாமாகச் சரி செய்து கொள்வோம் என்று குனிந்து பார்த்தேன். வளையத்தில் காலை மாட்டிக் கொள்ள முயற்சி செய்தேன். அடுத்த நிமிஷம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தேன்.

Monday, November 13, 2006

ஓம் நமச்சிவாயா -18

மானசரோவரில் பூஜை, யாகம் நடத்த நாங்கள் எல்லாரும் தயார் ஆனாலும் யார் செய்யப்

போகிறார்கள் என்பதே ஒரு பெரிய விஷயமாக விவாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. என் கணவரும்,எங்களோட காரில் பிரயாணம் செய்யும் திரு சங்கரனும் முன்னோர் வழிபாட்டை முதலில் முடிக்க வேண்டும் என்று முடித்துக் கொள்ள திரு சங்கரனிடம் எல்லாரும் வந்து தங்களுக்கும் உதவும்படிக் கேட்க அவரும் தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். அவரையே ஹோமம் செய்யச் சொல்லலாம் என்று நாங்கள் விரும்பியபோது தனக்கு அதன் சட்ட திட்டங்கள் சரிவரத் தெரியாது என்பதால் முடியாது என்று அவர் மறுத்தார். பின் எங்களுடன் வந்திருந்த சமையல் குழுவில் உள்ள "அர்ஜுன்" என்ற நபர் தான் ஹோமம் செய்வதாகக் கூறி முன் வந்தார். அவருக்கும் முறைப்படிச் செய்யத் தெரியவில்லை. பிறகு எல்லாரும்சேர்ந்து ம்ருத்யுஞ்சய ஸ்தோத்திரத்தை உரக்க 108 முறை கூறி ஹோமத்துக்கு என்று கொண்டு போன பொருட்களை அதில் போட்டு ஒரு வழியாக ஒப்பேற்றினோம். பின்னர் தம்பதி பூஜையும் செய்ய ஆள் இல்லாத காரணத்தால் நாங்கள் தேர்ந்தெடுத்த தம்பதிக்குக் கால் அலம்பி நமஸ்கரித்துக் கொண்டு போன பொருட்களை வைத்துக் கொடுத்தோம். மற்றவர்களும்

அப்படியே செய்தார்கள். தம்பதி பூஜைக்குக் கிட்டத் தட்டக் கல்யாணம் போலவே திருமாங்கல்ய

தாரணம் செய்து, மெட்டி அணிவித்து எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும். அப்படி

இல்லாமல் போனது கொஞ்சம் வருத்தம் தந்தது. பின் மானசரோவரில் தண்ணீர் எடுத்துக்

கொள்ள வேண்டி எல்லாரும் செல்லலாம் என்ற போது "கைலை பரிக்ரமா" முடித்துப் பின் திரும்பி வரும்போது மறுபடி மானசரோவர் வருவோம். அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ச ரினு எல்லாரும் சாப்பிடப் போனோம். அன்று பெரிய விருந்து

கொடுக்க வேண்டும் என்று விதவிதமான தித்திப்பு வகைகள், சாத வகைகள், காய், கனி

வகைகள் என்று நிரம்பி இருந்தது, மானசரோவரில் தொலைபேசி வசதி கிடையாது. ஆகவே

வீட்டுக்குத் தொலைபேச விரும்புபவர்கள் தார்ச்சனில் போய்ப் பேசலாம் என்று

சொன்னார்கள். சாப்பிட்டு விட்டு உடனேயே எல்லாரும் கைலாஷ் பரிக்ரமாவிற்குத் தயார் ஆனோம்.

அங்கிருந்து சுமார் 40 மைல் தூரத்தில் உள்ள "தார்ச்சன்" என்ற Base Camp ற்குப் போய்ச்

சேர்ந்தோம். அவரவர் வந்த காரிலேயே அந்தப் பிரயாணம் நடைபெற்றது. தார்ச்சனில்

அறைகள் நன்றாகவே இருந்தன. என்றாலும் இங்கேயும் கழிப்பிடம் என்பது மிக மோசமான

ஒன்றாகவே இருந்தது. பொதுவாகவே நியாலம் தாண்டி சாகா வந்ததில் இருந்தே இந்தத்

தொல்லை இருக்கிறது.அநேகமாய்த் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் தான். பெண்கள்

தனியாக வந்தால் கூட்டமாகப் போய் வருவது நலம். தார்ச்சன் காம்ப்பிற்கு மாலை 5-30 அளவில் போய்ச் சேர்ந்தோம். போய் அறையில் சாமான்களை வைத்து விட்டுத் தொலைபேசி இருக்கும் இடம் தேடிப்போனோம். அப்போது எங்களுடன் பிரயாணம் செய்யும்

திரு வெங்கடேசன் தன் மனைவியிடம் தெரிவிக்காமல் வெளியே எங்கேயோ இன்னொரு

நண்பருடன் போய் வர நேரம் ஆகவே சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் தொலைபேசச் செல்லும்போது அவர்களை வழியில் பார்த்து விவரம் சொல்லிச் சீக்கிரம் போகும்படி சொல்லிவிட்டுத் தொலை பேசினோம். இது சீன அரசால் நியமிக்கப்பட்ட தொலைபேசியகம் என்பதால் கட்டணம் ஒரு நிமிஷத்திற்கு 5 யுவான் மட்டும் வாங்கிக் கொண்டு பேச அனுமதித்தார்கள். இந்தியாவுக்கு என்றால் 6 யுவான் வாங்குகிறார்கள். பிறகு அறைக்கு

வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்து மறுநாள் காலை நாங்கள் எல்லாரும் காலை உணவு முடித்து

முதல் நாள் "பரிக்ரமா"விற்குத் தயார் ஆனோம். தார்ச்சன் காம்பில் இருந்து சற்றுத் தூரம் வரை காரில் போய் எங்கே பரிக்ரமா ஆரம்பிக்குமோ அங்கே இறங்கிக் கொள்ளும்படி ஏற்பாடு

செய்யப்பட்டிருந்தது. எல்லாரும் காரில் ஏறிக்கொண்டோம். போகும்வழியில் ஒரு இடத்தில் இருந்து கூட்டமாகச் சில குதிரைகளும், காட்டெருமைகளும், அவற்றோடு சில ஆட்களும் வந்து

கொண்டிருந்தார்கள்,. அவர்கள் எங்களுக்காகத் தான் வருகிறார்கள் என்று புரிந்து கொண்டோம்.

அரை மணி நேரத்தில் ஒரு பெரிய ஆறு தெரிந்தது. அதுதான் "வைதருணி நதி" என்றும் இதைக் கடந்து தான் செல்லவேண்டி இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். ஆற்றங்கரையில்

ஒரு இடத்தில் முக்கோணமாகக் கோபுரம் போல் கட்டி இருந்தது. கற்களாலும்,தோரணங்களாலும்

திபெத்திய முறைப்படி அலங்கரிக்கப் பட்ட அதற்கு முன்னால் எல்லா வண்டிகளும்

நிற்கவே எல்லாரும் இறங்கினார்கள். நாங்களும் இறங்கினோம். அந்தக் கோபுரத்தின் நடுவில் சிறிய ஒரு துவாரம் தெரிந்தது. எல்லாரையும் அதற்குள் போய் வருமாறு கூறினார்கள். எல்லாரும் அதற்குள் போய் வந்தோம். அது "யமத்துவாரம்" என்றும் இந்த இடத்திற்கு "யமஸ்தல்" என்று பெயர் என்றும் தெரிந்து கொண்டோம். அந்தத் துவாரத்திற்குள் போய் வருவது யமலோகத்திற்குள் போய் வருவது போல் இருக்குமோ என்னமோ

என்று நினைத்துக் கொண்டோம். பிறகு அங்கிருந்து இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு பெரிய சமவெளிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நாங்கள் போன சற்று நேரத்துக்கு எல்லாம் குதிரைகள் வந்து சேர்ந்தன. எல்லாரையும் நம்பர் படி வரிசையாக நிற்கச் சொன்னார்கள். முதலில் எல்லாருக்கும் உதவி ஆள் தேர்வு நடந்தது. ஆட்கள் பெயரை எழுதிப் போட்டுக் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. எங்கள் முறை வந்தது. என் கணவருக்கு ஒரு

பெண்ணும், எனக்கு ஒரு ஆளும் தேர்வானார்கள். எனக்கு நியமிக்கப் பட்ட ஆள்

தேர்வானதும் என்னோட பையை வாங்கிக் கொண்டு எங்கே போனான் என்றே தெரியாமல்

காணாமல் போனான். என் கணவரின் உதவிக்கு வந்த பெண்ணோ அவர் பையை வாங்கிக்

கொண்டு அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் குதிரைத் தேர்வும்

நடைப்பெற்றது. குதிரைகள் என்றால் குதிரைகள். காட்டில் இஷ்டத்துக்குச் சாப்பிட்டு வளர்ந்த

குதிரைகள். திபெத்திய மொழி மட்டுமே தெரிந்தவை. இந்தி கூடப் புரியாது. இங்கே நம் நாட்டில் கேதார்நாத் மற்றும் அமர்நாத்தில் பிரயாணத்திற்கு மட்டக் குதிரைகள் என்னும் PONY தான் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவை அப்படி இல்லை. அவற்றின் வாலிற்கே தனியாக வாரிப் பின்னி அலங்காரம் எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். குதிரையின்

வாலின் நீளம் நம்மைப் பொறாமைப் படவைக்கிறது. அவ்வளவு நீளமான வால். குதிரைத் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் ஒவ்வொருவராகக் குதிரையில் உதவி ஆளின் உதவியுடனும், குதிரைக்காரர்கள் உதவியுடனும் ஏறிக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறையும் வந்தது. என் நம்பர் முன்னால் இருந்தாலும் என் கணவர் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரணத்தால்

அவருக்கு முதலில் குதிரைத் தேர்வு நடந்தது. ஒரு பெண் குதிரைக்காரியும் அவள் குதிரையும் தேர்வானது. உடனேயே அந்தக் குதிரைக்காரி என் கண்ணெதிரிலேயே என் கணவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள். அவர், இரு, இரு, என் மனைவியும் வரட்டும்," என்று சைகை செய்கிறார். அவள் அதைக் கவனிக்காமல் எங்கேயோ அவரைக் கிட்டத் தட்ட இழுத்துக்

கொண்டு ஓடினாள். நான் திகைத்து நின்றேன். என் பக்கம் என்னோட உதவி ஆள் கூட இல்லை. எங்கே இருக்கிறானோ தேட வேண்டும். என்னோட முறையும் வந்தது,

குதிரையும் தேர்வானது. எனக்கும் ஒரு பெண் தான் வந்தாள் குதிரைச் சொந்தக்காரியாக. முகம் முழுக்க மூடிக் கொண்டு இரு கண்கள் மட்டுமே தெரிந்தன. அவளோடகண்களையும் அவள்

முகத்தை மூடிக் கொண்ட துணியின் நிறத்தையும் வைத்துத் தான் அடையாளம் கண்டு பிடிக்க

வேண்டும். அவர்கள் பெயர் எழுதின சீட்டு ஒன்று நம்மிடமும், குதிரைக்காரர்களிடமும்

கொடுக்கிறார்கள். வெறும் காகிதத்தால் ஆன அந்தச் சீட்டை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள

வேண்டும். என்னோட குதிரைக்காரி என்னை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான்

போய்க் குதிரையைக் கொண்டு வந்தாள், குதிரையின் உயரம், நீளம், அதன் நிறம், வாளிப்பு

எல்லாம் பார்த்தால் சாட்சாத் தேசிங்கு ராஜா இம்மாதிரிக் குதிரையைத் தான் அடக்கி

இருப்பானோ, ராணி லட்சுமி பாய் இம்மாதிரிக் குதிரையில் தான் சண்டை போடப் போர்க்களத்துக்குப் போயிருப்பாளோ, ராணி மங்கம்மாவிடம் இம்மாதிரிக் குதிரைப் படை இருந்திருக்குமோ என்றெல்லாம் தோன்றியது. என்னோட இந்த அபார சரித்திர அறிவைப் பத்தி ஏதும் தெரியாத அந்தப் பெண் என்னைக் குதிரையில் ஏறி உட்காரச் சொன்னாள். நானோ, " இவர் எங்கே போனார்?" என்ற கவலையில் மூழ்கி அவளிடம், "என் கணவர் வரட்டும்." என்று ஜாடை காட்டினேன். குதிரை கனைத்தது.

Monday, November 06, 2006

ஓம் நமச்சிவாயா-17

மானசரோவர் ஏரிக்கரையில் அன்று சாயங்காலம் போய்ச் சேர்ந்தோம். போகும்போதே ஒரு

பக்கக் கரையில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் கைலை மலையின் நிழல் ஏரியில் விழுந்திருந்தது. அம்மனும், அப்பனும் ஐக்கியமாகி நின்ற காட்சியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றது. உண்மையில் திருக்கைலாயம் கூட ஒரு சக்தி பீடம் தான் என்று சொல்கிறார்கள். அன்னையின் உடல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டபோது உடலின் கொழுப்புப் பூராவும் கைலைமலையில் விழுந்ததாகவும், அதனால் தான் கடும் கோடையில் கூட மற்ற மலைகளில் இருந்து பனி உருகினாலும் கைலை மலையில் பனி உருகாமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து தரிசனம் செய்தால் அர்த்த நாரீஸ்வரர் தரிசனம் என்றும் கூறு கிறார்கள். ஏரியின் அமைதியான கரையை ஒட்டிக் கட்டப் பட்டிருந்த "பரமார்த்த நிகேதன்" ஐச் சேர்ந்த ஆசிரமக் கட்டிடங்களில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

மறுநாள் காலை மானசரோவரில் குளித்துப் பூஜை முதலியன செய்யவும், பின் அன்று மதிய

உணவுக்குப் பின் தயாராகிக் கைலையின் "Base Camp" என்று சொல்லப் படும் தார்ச்சனில்

போய்த் தங்கவும் அதற்கு மறுநாள் காலை "கைலை பரிக்ரமா" செய்யப் போவது பற்றிப் பேசவும் அன்று கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எங்களுக்கு அளிக்கப் பட்ட அட்டவணையில் மானசரோவரில் நீராடி தகுந்த சன்னியாசிகளைக் கொண்டோ அல்லது சிவாச்சாரியார்களைக் கொண்டோ வேள்வி செய்து மூர்த்தங்கள் எடுத்துக் கொள்ளலாம்

என்றும், காசியில் செய்வது போலவே இங்கும் வேணி தானம், தம்பதி பூஜை, தீப வழிபாடு,

முன்னோர் வழிபாடு முதலியவை செய்து தரப்படும் என்று கொடுத்திருந்தார்கள். அது பற்றி

எந்தவிதமான ஏற்பாடும் செய்ததாய்த் தெரியவில்லை. ஏன் எனில் எங்களுடன் எந்த

சிவாச்சாரியாரோ அல்லது சன்னியாசியோ வரவில்லை. பின் என்ன செய்யப் போகிறார்கள்

ஒன்றும் புரியவில்லை. எல்லாரும் அதுபற்றிக் கேட்டதற்குப் பதிலும் இல்லை. பின் கைலை

பரிக்ரமாவிற்கு வேண்டிய குதிரைகளுக்கு அன்றே ஆள் அனுப்பி ஏற்பாடு செய்ய வேண்டும்

என்பதால் பரிக்ரமாவிற்கு யார் யார் வரப் போகிறீர்கள், யார், யார் தங்கப் போகிறீர்கள் என்று

கேட்கப் பட்டது. அநேகமாய் எல்லாரும் போவது என்று முடிவு செய்தோம். டாக்டர்

நர்மதாவையும், இன்னொரு பெண்மணி தன்னால் குதிரைச் சவாரியோ அல்லது நடந்தோ

வரமுடியாது என்றதால் அவரும் தங்கப் போவதாய் முடிவு ஆனது. ஒருத்தருக்கு ஒரு குதிரை,

அதனுடன் குதிரைச் சொந்தக்காரர், நாம் கையில் எடுத்துப் போகும் சாமான்கள் உள்ள பையைச் சுமக்கும் ஒரு பணியாள் தேவைப் படும். கையில் எடுத்துப் போகும் பையில் ஒரு மாற்று உடை, அதிகப்பட்சத் தேவைக்கான உள்ளாடைகள், குளிருக்கான ஆடைகள், மழை

பெய்தால் போட்டுக்கொள்ள ரெயின்கோட், வழியில் சாப்பிட ஏதும் சிற்றுண்டி அல்லது பிஸ்கட்,

கடலை, பாதாம் போன்ற பொருட்கள் அடங்கியது. இதைக் குதிரையில் உட்கார்ந்து போகும்

நாம் சுமக்கமுடியாது என்பதால் அதற்கு ஒரு ஆள் சுமந்து வருவார். இவர் நமக்கு நாம் பரிக்ரமாவில் நடக்கும்போதும் உதவி செய்வார். நம்முடைய உதவி ஆள் நமக்கு மட்டுமே உதவி செய்வார். கூடவே வரும் நம் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உதவ மாட்டார்.

இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒருத்தருக்கு 1,020 யுவான்கள் கணக்குப் போட்டு வாங்கினார்கள்.

எல்லாரும் குறைக்கச் சொன்னதுக்கு இதுவே குறைத்திருப்பதாயும்,,பொதுவாய் 1,200 யுவான்கள் ஆகும் என்றும் சொன்னார்கள். கிட்டத்தட்ட 12,300 இந்திய ரூபாய்கள் ஆனது இருவருக்கு. பணத்தைக் கொடுத்துவிட்டுக் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து சாப்பிட்டுவிட்டுப் பின் படுக்கப்
போனோம்.

இரவில் வரும் சிவஜோதி எனப்படும் சிவசக்தி ஐக்கியத்தைக் காண எல்லாரும் ஆவலாய் இருந்தோம். இதில் எங்களுக்கு நேரம் தவறாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி 3-30 மணியில் இருந்து 6-00 மணி வரை என்றால் சீன நேரம் மணி காலை ஐந்துக்கு மேல்

ஆகி விடும். நாங்கள் இந்திய நேரமா சீன நேரமா என்ற குழப்பத்தில் இரவு பூரா

விழித்திருந்தோம். கடைசியில் சுமார் 3-30 மணி அளவில் ஒரு நட்சத்திரம் போன்ற ஒன்று

மானசரோவர் ஏரியில் விழுந்ததைச் சிலர் பார்த்தோம். சிலர் அது இல்லை என்று சொன்னார்கள்.

சிலர் அதுதான் என்றார்கள். எப்படியோ ஒரு வித்தியாசமான அனுபவமாய் அமைந்தது,அந்தக்

குளிரில் இரவில் ஏரிக்கரையில் வீசும் காற்றைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்து கொண்டு இருந்ததும், ஏரியின் நீர் பல பல வண்ணங்களைக் காட்டிப் பிரதிபலித்ததும். ஏதோ

மர்மத்தைத் தன்னுள் அடக்கி இருப்பதுபோலவும் தோன்றியது. உண்மையில் அந்த இரவில்

வானில் தொட்டுவிடும் போல் தொங்கிய நட்சத்திரங்களும் நட்சத்திர வெளிச்சத்தைப் பிரதி

பலித்த ஏரியும் ஒரு சொர்க்கம் போலக் காட்சி அளித்தது. நட்சத்திரம் மின்னி மின்னி

அடங்கும் போது எங்கே நம்மேல் வந்து விழுமோ என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.

கையால் பறிக்கலாம், பறித்து மாலை தொடுக்கலாம் போல் உள்ள நட்சத்திரங்கள் கொட்டிக்

கிடக்கிற ஆழ்ந்த கரிய நிறம் கொண்ட வானமும், நட்சத்திர ஒளியால் சற்றே மினுமினுக்கும்,

சத்தமில்லாமல் அலைகள் வந்து அடிக்கும் ஏரியும் பார்க்கப் பார்க்க அற்புதமாய் இருந்தது. எங்கே இருந்து இத்தனை நட்சத்திரங்கள் வந்தன என்றே புரியவில்லை. தொட்டு விடும் தூரத்தில் அவை தெரிவதால் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதும் புரிந்தது. ஒருவழியாக எல்லாரும் படுக்கப் போனோம்.

காலை சற்று நேரம் கழித்துத் தான் எழுப்புவோம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள்.

காலை "ப்ளாக் டீ"யுடன் எழுப்பினார்கள். சிலருக்குச் சந்தேகம். ஏன் "ப்ளாக் டீ"யுடன்

தினம் எழுப்புகிறார்கள் என்று. அதற்குக் காரணம் அவ்வளவு குளிரில் காலை கறுப்புத் தேநீர்

உடலின் ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து, சுத்தப் படுத்திக் காலை நாம் நம் வேலையைச்

சுறுசுறுப்புடன் செய்யத் தயாராக்குகிறது. இதன்பின் தான் வெந்நீர் கொடுத்துக் காலைக்கடன்கள் முடித்துக் காலை ஆகாரம் கொடுக்கிறார்கள். இன்று மானசரோவரில் குளிப்பதாய் ஏற்பாடு செய்திருப்பதால் ஏரிக்கரையில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்கெனவே இருந்ததில் கொண்டு போயிருந்த பெரிய காஸ் அடுப்பை வைத்துப் பெரிய பாத்திரத்தில் வெந்நீர் போட்டுக்

கொண்டிருந்தார்கள். சக்தி உள்ளவர்கள் முதலில் மானசரோவரில் கரைக்கு அருகேயே உள்ளே அதிகம் போகாமல் இறங்கிக் குளித்துவிட்டுப் பின் அவர்கள் கொடுக்கும் வெந்நீரை வாங்கி

ஊற்றிக் கொண்டுப் பின் அங்கே உடை மாற்றக் கட்டி இருக்கும் டெண்டில் போய் உடை

மாற்றவேண்டும். முடியாதவர்கள் வெந்நீர் மட்டும் வாங்கிக் குளிக்கலாம். என்று சொன்னார்கள். குளிர் அதிகம் என்பதாலேயே சூரியன் வந்ததும் குளிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எல்லாரும் குளித்துமுடித்துப்பின் பூஜைக்குத் தயார் ஆகும்போது மணி 12-00 ஆகி விட்டது. பூஜைக்கோ அல்லது முன்னோர் வழிபாடு செய்து கொடுப்பதற்கோ ஆள் இல்லை என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. அங்கே ஹோமம் செய்ய ஏரிக்கரையில் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய கற்களைக் கொண்டு வந்து அடுக்கி, எல்லாரும் கொண்டு வந்த சிவன் படங்கள், சிலர் சிவலிங்கம் கொண்டு வந்திருந்தனர். இவற்றை

வாங்கி அலங்காரம் செய்து எல்லாரும் கொண்டு போயிருந்த விளக்கில் நெய் கொண்டு

போயிருந்தோம்,அதில் தீபம் ஏற்றி எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்துத் தயார் ஆனோம்.