எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 24, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில் தாக்குதல்!

அழகிய மணவாளம் ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்க அங்கே மதுரையில் ஹொய்சளத்தின் நிலையை மாற்றி அமைக்கும் ஓர் சம்பவம் நடந்தது. சுல்தானாக இருந்த ஜலாலுதீனுக்கும் தளபதியாக இருந்த அலாவுதீனுக்கும் கருத்து வேறுபாடு பெருமளவில் இருந்தது. திருவண்ணாமலை மீது தாக்குதல் நடத்தி ஹொய்சளரை அழித்தால் தான் தமிழகத்தில் நிலைபெற்று ஆட்சி புரிய முடியும் என அலாவுதீன் வற்புறுத்த சுல்தான் ஜலாலுதீன் அதை ஏற்க மறுத்தான். இது சில நாட்கள் இப்படியே இருக்க திடீரென ஓர் நாள் ஜலாலுதீனைத் தளபதி அலாவுதீன் கொன்று விட்டான். ஆட்சியை அவன் கைப்பற்றினான். அவன் கொடூரத்தை அறிந்திருந்த ஏனையோர் அவன் ஆட்சிக்கும் அவன் கட்டளைக்கும் உடனே அடி பணிந்தார்கள்.  ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளே அலாவுதீன் திருவண்ணாமலை மீது போர் தொடுக்கும் அறிவிப்பைச் செய்தான். தாமதிக்காமல் உடனடியாக ஓர் பெரும்படையை ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு முதலில் கண்ணனூர் நோக்கிப் பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

மூன்று இரவுகளும், பகல்களும் போனபின்னர் நான்காம் நாளில் கண்ணனூரை அடைந்தனர். கண்ணனூர்க் கோட்டை ஹொய்சளர்களுக்குச் சொந்தமானது. அவர்களால் கட்டப்பட்டது. அங்கே ஓர் கோயிலும் இருந்தது. ஹொய்சளேஸ்வரர் என்னும் பெயரில் விளங்கி வந்தார் அவர். இப்போதும் பொய்ச்சலேஸ்வரர் என்னும் பெயரில் ஓர் கோயில் கண்ணனூரில் (இப்போதைய சமயபுரம்) இருந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.  ஆரம்பத்தில் திருவரங்கத்தைத் தாக்கிய சுல்தானியப் படைகள் அங்கேயே சில காலம் இருந்து வந்தன. பின்னர் சிங்கப்பிரானின் ஆலோசனையின் பேரில் கண்ணனூருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்தப் படை தான் இப்போது மதுரை சுல்தானிய ராஜாவின் வட எல்லைப்படையாக விளங்கி வந்தது.  இப்போது அங்கே ஏற்கெனவே ஓர் பெரும்படை திரட்டப்பட்டு சுல்தானின் வருகைக்குக் காத்திருந்தது. அலாவுதீன் வந்து சேரவும் அனைத்துப்படைகளும் ஒன்று சேர்ந்து ஓர் பெரும்படையாகத் திருவண்ணாமலை நோக்கி நகர்ந்தது. இது மிக ரகசியமாக வைக்கப்பட்டது.

ஆகவே தூதுவர்கள் மூலம் கூட ஹொய்சள அரசருக்குத் திருவண்ணாமலையை நோக்கிப் படைகள் திரண்டு வரும் விஷயம் தெரியவில்லை. திருவண்ணாமலைக்கு 2,3 காத தூரம் இருக்கையிலே தான் வழிப்போக்கர்களும், ஆங்காங்கே கிராமங்களில் குடி இருந்த மக்களும் படை திரண்டு வரும் செய்தியைத் தெரிவித்தனர். மன்னருக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னர் திகைத்துத் தான் போனார். எனினும் உடனடியாகக் கோட்டைக் கதவுகளை மூட உத்தரவிட்டார்.  இருக்கும் அனைத்துப் படைகளையும் ஒரே இடத்தில் திரட்டிக் கோட்டைக்கும் நகருக்கும் காவலாக இருக்கும்படி செய்தார். ஆனால் ஓர்  விபரீதமான செய்தி மன்னருக்கு அப்போது கிடைத்தது. அதுதான் ராணி கிருஷ்ணாயி திருக்கோயிலூர் நகரின் கோயிலுக்குச் சென்றிருக்கிறாள் என்பதே! அவள் வந்தால் கோட்டை வாயில் வழியாகத் தான் உள்ளே வந்தாக வேண்டும்! என்ன செய்வது? மன்னர் அதிர்ந்து தான் போனார்.  யாருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.

இது இப்படி இருக்கத் திருவண்ணாமலைக்குச் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டிய குலசேகரன் சம்புவராயரின் ராஜ்யத்துக்குள் ஹேமலேகா இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு திரிந்தான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றில் மிகவும் மோசமான பெண்ணாசையினால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த குலசேகரன் ஒருவழியாக ஹேமலேகா இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிராமத்தின் பெயர் கிளியார் சோலை. அங்குள்ள ஓர் சத்திரத்தில் தான் கணவனாக வரித்துக் கொண்ட கண் தெரியாத முதியவரோடு ஹேமலேகா தங்கி இருக்கும் செய்தியும் குலசேகரனுக்குக் கிட்டியது. இரவு நேரங்களில் ஹேமலேகா சத்திரத்தின் கதவுகளைச் சார்த்தி விட்டு உள்ளே இருந்த சிறு கூட்டத்திற்கு வடமொழிக் காவியங்களையும் தத்துவங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் அங்கே இருப்பது தெரிந்து அங்கே வந்து சேர்ந்த குலசேகரன் எடுத்த எடுப்பில் அவள் முன் போய் நிற்க விரும்பவில்லை. ஆகவே சத்திரத்தில் இருந்த தொழுவத்துக்குப் போனான். உள்ளிருந்து வரும் ஹேமலேகாவின் குரலை அங்கேயே அமர்ந்த வண்ணம் கேட்டு ஆனந்தம் அடைந்தான்.

சில சமயங்களில் தெளிவாகவும் பல சமயங்களில் தெளிவில்லாமலும் இருந்தது ஹேமலேகாவின் குரல். ஆனாலும் குலசேகரனுக்கு அதுவே இன்பத்தைக் கொடுத்தது. இரு நாட்கள் இப்படிப் போனபின்னர் மூன்றாம் நாள் ஹேமலேகா நம்மாழ்வாரின் பாசுரமான, "புவியும் இரு விசும்பும்" என்னும் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கையில் தன்னை மறந்து குலசேகரன், "ஆஹா! ஆஹா!" எனக் கூவி விட்டான்.  ஹேமலேகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  அவசரமாகத் தன் சொற்பொழிவை நிறுத்திவிட்டுக் கையில் ஓர் விளக்குடன் தொழுவத்துக்கு வந்தாள். அங்கே குலசேகரன் ஓர் கழுநீர்த் தவலையின் மேல் அமர்ந்த வண்ணம் அவள் பேச்சை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். "ஸ்வாமி!" என அவனை அழைத்தாள்.  அவள் தன்னை அழைப்பதைக் கண்ட குலசேகரன் கள்ளச் சிரிப்புடன், "ஹேமூ!" என்ற வண்ணம் எழுந்தான். "இங்கே எப்படி நீங்கள்" என்று கேட்டாள் ஹேமலேகா!

Sunday, December 23, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனின் தடுமாற்றம்!

சிங்கப்பிரானின் வார்த்தைகளைக் கேட்ட குலசேகரன் உடனடியாகத் திருவண்ணாமலை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இம்முறை துருக்கப்படைகள் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக மாறு வேஷம் தரித்துக் கொண்டான். ஓர் பைராகி போல வேடம் தரித்துக் கொண்ட அவன் நடந்தே தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஆரம்பத்தில் சிறிது தூரம் இவ்வாறு சென்றவன் வீதியில் ஆங்காங்கே சுதந்திரமாகவும், சுறுசுறுப்புடனும், கலகலப்புடனும் இளம்பெண்களும் நடுத்தர வயதுப் பெண்களும் நீர் சுமந்து கொண்டு செல்வதைக் கண்டு இம்மாதிரி நிலைமை யைத் திருவரங்கம் காண்பது எப்போது என ஏங்கினான். சற்று நேரம் அவர்களையே தொடர்ந்த அவன் பார்வை பின்னர் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் போகலாம் என அருகில் நீர் குடிக்கக் குளம் இருக்கா எனத் தேடியது. குளம் ஒன்றைக் கண்டதும் அங்கே சென்று தாகசாந்தி செய்து கொண்டான்.

குளத்தில் கீழே இறங்க நிறையப் படிகள் இருப்பதையும் பெண்கள் படியிலே நின்று கொண்டே குடத்தை நீரில் முக்கி நீரைக் குனிந்து எடுத்ததையும் கண்டான். அதில் ஓர் பெண் குலசேகரன் வருவதைக் கண்டதும் வெட்கத்துடன் ஒதுங்குகையில் கையிலிருந்து குடம் கீழே விழுந்து படிகளில் டமடமவென சப்தம் செய்து கொண்டு போனது. அதைக் கேட்டுக் கொண்டு நின்ற குலசேகரனிடம் அங்கிருந்த ஒருவர் இது மாதிரிக் குளத்துப் படிகளில் குடம் விழுந்த "டம்டம்" சப்தத்தை வைத்துக் காளிதாசன் எழுதிய கவிதையை நினைவு கூர்ந்தார். அவர் பேச்சைக் கேட்டக் குலசேகரன் வியந்து நின்றான். இங்கே நாம் பார்த்த காட்சி இது தானே! காளிதாசன் போஜராஜன் கூறிய டம்டம் என்னும் சப்தத்தை வைத்தே இந்த நிகழ்ச்சியைக் கண்கள் முன்னால் கவிதையாகக் கொண்டு வந்துவிட்டானே! என ரசனையுடன் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து குளத்துக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். அவருடைய வர்ணனையைக் கேட்ட குலசேகரன் இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டே அவருக்கு இவ்வளவு வடமொழி ஞானம் இருப்பதை வியந்து கூறினான். அதற்கு அவர் தான் ஹேமலேகா என்னும் வித்வாம்சினியிடம் இதை எல்லாம் கற்றதாகவும், தான் ஒரு சாதாரணச் சின்னக் கவி எனவும் ஹேமலேகாவைப் போல் புலமை வாய்ந்தவன் இல்லை எனவும் கூறினார்.  அவளிடம் கல்வி கற்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். குலசேகரன் மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டுத் தன் வழியே கிளம்பினான். ஆனாலும் அந்தக் கவிஞரின் வார்த்தைகளிலேயே அவன் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஹேமலேகாவைப் பற்றி நினைக்கையிலேயே அவன் மனம் நெகிழ்ச்சியுற்றது. எப்பேர்ப்பட்ட பெண் அவள்! அவள் புலமை தான் எம்மாத்திரம்! நானும் இந்தச் சண்டை, பூசல் எதுவும் இல்லாமல் அவளிடம் பாடம் கேட்டுக் கொண்டும்  கவிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்திருக்க வேண்டும். என நினைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

அப்போது அவன் மனம் திடீரென அவனை ஹேமலேகாவைக் காண உடனே செல் என உத்தரவிட்டது. நேற்று சம்புவராயர் எல்லையில் பிரியும்போது கூட அவளிடம் சரியாக விடைபெறவில்லை. இப்போது உடனே அவளைத் தேடிப் போ என்றது அவன் மனம். செய்வதறியாது திகைத்த குலசேகரன் கடைசியில் தன் மனம்  தன்னை வெல்ல ஹேமலேகா எங்கே இருக்கிறாள் எனக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினான். ஹேமலேகாவின் கவிதைகளைக் கேட்பதிலும் அவளுடன் உரையாடுவதிலும் உள்ள சுகத்தை நினைத்து அவன் மனம் உடனே அவளைக் காண விழைய இங்கே ஒரு முக்கியமான அவசரமான ராஜாங்கக் காரியம் தாமதமும் ஆனதோடு அல்லாமல் பாழாகவும் போகும் போல் இருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட குலசேகரன் அறிவுக்கு இதெல்லாம் எட்டவில்லை. அவன் ஹேமலேகாவைத் தேடித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

அதற்குள்ளாக அங்கே அழகிய மணவாளம் கிராமத்தை சுல்தான்களின் வீரர்கள் சூழ்ந்து கொண்டு குலசேகரனைத் தேடினார்கள். ஊரே வெறிச்சென இருக்கக் கண்டார்கள். அங்கே யாருமே இல்லை என்பது அவர்களுக்கு ஆத்திரத்தை அதிகம் ஆக்க அவர்கள் ஊரையே எரித்தனர். அனைத்து வீடுகளும், விளை நிலங்களும் பாழாகிப் போயின. குளங்கள் வெட்டப்பட்டு நீரெல்லாம் வெளியேறியது. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஊரே பற்றி எரிந்தது.

Wednesday, December 19, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகிய மணவாளத்தில்!

ஊரில் உள்ள அனைவர் வீடுகளுக்கும் சென்று கதவைத் தட்டி உடனே காலி செய்து கொண்டு போகும்படி அறிவுறுத்தினார்கள் சிங்கப்பிரானின் ஆட்கள். எல்லோரும் காரணம் புரியாமல் திகைத்ததற்கு சுல்தானியப் படைகள் அழகிய மணவாளத்தை நோக்கி வருவதைத் தெரிவித்தார்கள். ஊரில் ஒரு சின்னக் குழந்தை கூட இருக்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. ஊர் மக்கள் முதலில் திகைத்துச் செய்வதறியாமல் நின்றாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய முக்கியமான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக வெளியேற ஆரம்பித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் தங்கள் குடும்பங்களோடு வெளியேறினார்கள். வயோதிகர்கள் தட்டுத் தடுமாறிக்கொண்டும் குழந்தைகள் அரைத்தூக்கத்திலும் அழைத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் அவரவர் குடும்பத்து ஆண் மக்களோடு ஒட்டிக் கொண்டு திகிலுடனும் பயத்துடனும் சென்றனர். சில முகத்தையும் மறைத்துக் கொண்டார்கள்.

வழியில் எங்காவது எதிரிகள் எதிர்ப்பட்டால் என்ன செய்வது என்னும் பயமும் அதிகரித்தது. அவர்கள் எந்தத் திக்கில் இருந்து வருகின்றார்களோ அதற்கு எதிர்த் திக்கில் அனைவரும் சென்றனர்.  சிங்கப்பிரான் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். கூடியவரை வடகிழக்குத் திசையில் சென்றார்கள். நடுவில் வந்த மணவாள ஓடையை மார்பளவு தண்ணீரில் அனைவரும் கடந்தனர். குழந்தைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டனர். சாமான்கள் பலவும் வீணாகிப் போயின! உயிர் பிழைத்தால் போதும் என்னும் எண்ணமே மேலோங்கி இருந்தது. உடைகள் ஈரமாக ஆனதால் அனைவருக்கும் நடப்பதும் சிரமத்தைக் கொடுத்தது. நடை தடுக்கியது. ஆனால் குலசேகரனும், சிஙக்ப்பிரானும் அனைவரையும் அவசரப்படுத்தினார்கள். கிழக்கே சில காத தூரத்தில் சம்புவராயரின் சீமையை சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அங்கே சென்று விட்டால் ஆபத்து இல்லை என்பது அவர்கள் எண்ணம். ஆனால் அவனும் சுல்தானியருக்குக் கப்பம் கட்டி வந்தான். எனினும் ஆபத்து அதிகம் இருக்காது என்பது சிங்கப்பிரானின் கருத்து.

சம்புவராயரின் ராஜ்ஜிய எல்லைக்குள் போனதும் அனைவரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களுக்குச் செல்லுமாறு சிங்கப்பிரான் உத்தரவிட்டார். விடிய விடிய அனைவரும் அங்கே சென்று சேர்ந்தார்கள். முன் சொன்னபடி சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு கிராமங்களை நோக்கிச் சென்றனர். அதுவரை அவர்களுடன் வந்த ஹேமலேகாவும் இப்போது பிரிந்து சென்றாள். ஹேமலேகாவைப் பிரிகிறோம் என்னும் எண்ணம் குலசேகரனை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆனால் வேறு வழி தான் என்ன! இப்போது சிங்கப்பிரானும் குலசேகரனைப் பிரிந்து செல்ல ஆயத்தமானார். குலசேகரனை திருவண்ணாமலைக்குச் செய்தி சொல்ல அனுப்பிவிட்டுத் தான்  அங்கேயே இருந்து கண்ணனூரில் நடைபெறுவதை வேவு பார்த்து அறிந்து அதற்கேற்றாற்போல் ஶ்ரீரங்கத்தை மீட்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே குலசேகரனிடம் விடை பெற்றார். ஆனால் குலசேகரனோ என்னதான் சம்புவராயரின் எல்லைக்குள் சிங்கப்பிரான் இருந்தாலும் எதிரிகளுக்கு அவர் இங்கே இருப்பது தெரிந்தால் அவர் உயிருக்கே ஆபத்து என அஞ்சினான். அதை அவரிடம் சொல்லவும் செய்தான்.

ஆனால் அவரோ வேறெங்கும் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. இந்தக் காவிரி நதி தீரத்திலேயே தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதாகவும் திருவரங்கத்தைத் தொட்டுக்கொண்டு கிழக்கே ஓடிவரும் காவிரியைப் பார்த்துத் தன் மனதை ஆற்றிக்கொள்ளப் போவதாகவும் அப்படியே கண்ணனூரில் நடக்கும் விஷயங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்ள இங்கே தங்குவதே வசதி எனவும் சொன்னார். நல்லகாலம் ஒன்று பிறக்காமலா போய்விடும்! அப்போது ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அழகிய மணவாள மக்களைத் திரட்டி ஒன்று சேர்த்து மீண்டும் அங்கே கொண்டு செல்லவேண்டும் என்னும் ஆசையும் இருப்பதாய்ச் சொன்னார்.  நம்பிக்கையின் அடிப்படையிலேயே தான் இதை எல்லாம் செய்வதாகவும் சொன்னார். குலசேகரன் இதற்கெல்லாம் தயங்காமல் நாட்டின் விடுதலையை மட்டுமே நினைத்துக் கொண்டு ஹொய்சள மன்னரைக் கண்டு மதுரைப்படைகள் படை எடுத்து வரும் விபரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கண்ணனூருக்கு வந்து படைகள் தங்கி இருப்பது கிளம்பிச் செல்லும் முன்னர் அவன் அங்கே சென்று சேர்ந்து செய்தியை ஹொய்சள மன்னரிடம் சொல்லவேண்டும் என்பது அவர் எண்ணம். ஆகவே விரைவில் திருவண்ணாமலையை நோக்கிச் செல்லுமாறு குலசேகரனைப் பணித்தார்.

Sunday, December 16, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அழகிய மணவாளத்தின் கதி என்ன?

சுல்தானின் வீரர்கள் தலைவன் தன்னைப் பார்த்து விட்டதை அறிந்த குலசேகரன் முதலில் கலங்கினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு விட்டான்.  நல்லவேளையாக அந்த வீரர் தலைவனுக்குக் குலசேகரனை அவ்வளவு விரைவில் அடையாளம் புரியாததால் யோசித்துக் கொண்டு நின்றான். அதைப் புரிந்து கொண்ட குலசேகரன் ஓர் பைத்தியக்காரனைப் போல, ஓஓஓ, ஹோஹோ என்றெல்லாம் கத்தியவண்ணம் ஓட்டமாக ஓடினான். ஆனால் அவன் சிறிது தூரம் ஓடுவதற்குள்ளாக அவன் யார் எனப் புரிந்து கொண்ட வீரர் தலைவன், "ஏய், நில்!" என அதிகாரமாகக் கூறியவண்ணம் அவன் அருகே குதிரையை விரட்டினான்.  குதிரைக்குளம்பொலிகள் தன்னை நோக்கி வருவதை அறிந்த குலசேகரன் அப்போது அந்தி மயங்கத் தொடங்கி இருந்தால் கிடைத்த இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான்.

ஆனாலும் அந்த வீரர் தலைவன் விடாமல் அவனைத் துரத்தினான். தன்னை யாரெனக் கண்டு பிடித்திருப்பான் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் தான் இப்போது செய்யவேண்டியது விரைவில் சிங்கப்பிரானைப் பார்த்து இவர்கள் வருகையைத் தெரிவிக்க வேண்டும் என்பதே என நினைத்தவண்ணம் சிங்கப்பிரானின் மாளிகை இருக்கும் திசை நோக்கி ஓட ஆரம்பித்தான்.  அந்த வீரன் சுல்தானிய ராணியின் கோஷ்டிக்குத் தலைவனாக வந்திருந்தான் என்பதோடு மதுரையில் இருந்து மேலும் ஒரு சுல்தானியப் படை வரும் தகவலைத் தெரிந்து கொண்டதால் அவர்களை வரவேற்று வழிகாட்டவென அங்கே வந்து காத்திருந்தான். வந்த இடத்தில் தான் குலசேகரனைப் பார்த்து விட்டான். சாட்டை அடிகளால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தவன் இவன் தான் என்றும் அறிந்து கொண்டு விட்டான்.  குலசேகரனை எப்படியேனும் பிடித்துவிட வேண்டும் என ஓடோடி வந்தவனுக்கு அவன் ஓடி மறைந்தது தெரியவரவே கோபத்துடனும் யோசனையுடனும் என்ன செய்வது எனத் தெரியாமல் மீண்டும் காவிரிக்கரைக்கே வந்தான்.

இங்கே குலசேகரன் சிங்கப்பிரானின் மாளிகைக்குள் சென்றபோது அவர் எங்கேயோ அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார். குலசேகரனைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவராக அவனைக் காணத்தான் புறப்பட்டதாகவும் சொன்னார். படை வீரர்கள் வந்திருப்பது தெரிந்து தான் கிளம்பினாரோ என நினைத்தான் குலசேகரன். ஆனால் அவருக்கோ அவன் சொல்லும் செய்தி புதிதாகத் தெரிந்தது. ஆகவே உடனே காவிரிக்கரைக்குச் சென்று பார்க்க விரும்பினார். அவன் தான் அமர்ந்திருந்த கரைப்பக்கத்திலிருந்து இன்னும் சற்று மேற்கே சில தோப்புகளைக் கடந்து காணப்பட்ட காவிரிக்கரைக்கு அவரை அழைத்துச் சென்றான். காவிரியில் நதியின் நடுவிலும் எதிர்க்கரையிலும் பல தீவர்த்திகள் அசைந்து கொண்டிருந்தன.அதைப் பார்த்ததுமே கவலை கொண்ட சிங்கப்பிரான் குலசேகரனிடம் சுல்தானியப் படைகள் நதியைத் தாண்டிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் இங்கே வருகிறதோ அல்லது கண்ணனூர் சென்று கொண்டிருக்கிறதோ என்பதை அறியாமல் அவசரப்பட வேண்டாம் எனக் கூறினான்.

அதற்கு சிங்கப்பிரான் மதுரையிலிருந்து ஒரு பெரிய படை கண்ணனூருக்கு வருவதாய்த் தான் கேள்விப் பட்டதாயும் இது அந்தப் படையாக இருக்கலாம் என நினைப்பதையும் கூறினார். படை எதற்காக வருகிறது எனக் கேட்ட குலசேகரனிடம் அவர்," ஹொய்சளத்தைத் தாக்க நினைக்கிறார்கள் சுல்தானிய வீரர்கள். ஹொய்சளர்களின் உதவியோடு நீ சுல்தானிய வீரர்களிடையே செய்தியைச் சுமப்போர்களைக் கொன்றது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. உன்னோடு கைதான வீரர்கள் சொல்லி விட்டனர். ஆகவே அவர்கள் திட்டம் இப்போது திருவண்ணாமலையைத் தாக்குவது என்பதே! மேலும் மதுரை சுல்தான் வீர வல்லாள அரசருக்கு அவர் வீரர்களும் குலசேகரனும் இப்படிச் செய்ததன் காரணத்தைக் கேட்டு தூது அனுப்பியதற்கு இன்று வரை வல்லாளர் பதில் கொடுக்கவில்லை! அதனாலும் மதுரை சுல்தான் ஆத்திரத்தில் இருக்கிறான். என்றாலும் இப்போது படையெடுப்பு தேவை இல்லை என அவன் நினைத்திருக்கிறான். என்றாலும் அவன் தளபதியின் கையே இப்போது மதுரையில் ஓங்கி இருக்கிறது. அவன் தன் சொந்தப்படையையும் சுல்தானின் படையையும் திருவண்ணாமலையைத் தாக்குவதற்காகத் தயார் செய்து அனுப்பி இருக்கிறான் என நினைக்கிறேன்!" என்றார்.

மேலும் இந்த விஷயத்தை உடனே வீர வல்லாளருக்குத் தெரியப்படுத்தி அவரைக் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கவேண்டும் எனவும் அதற்குக் குலசேகரன் தான் தகுதி வாய்ந்தவன் என்பதாலேயே அவனைத் தேடியதாகவும் கூறினார் சிங்கப்பிரான். மேலும் தொடர்ந்து," சுல்தானிய வீரர் தலைவன் குலசேகரனைப் பார்த்து அடையாளம் புரிந்து கொண்டதால் இந்த ஊரில் தான் அவன் ஒளிந்திருக்கலாம் என வீரர்களை இங்கே அனுப்பி அவனைத் தேடச் சொல்லுவான். வீரர்கள் சாதாரணமாகத் தேட மாட்டார்கள். ஊரையே நாசம் செய்து விடுவார்கள். ஏதுமறியா அப்பாவி ஜனங்களைக் கொன்று குவிப்பார்கள். ஆகவே இரவோடு இரவாக அனைவரும் ஊரை விட்டுக் காலி செய்து கொண்டு கிளம்பியாக வேண்டும்!" என்றும் கவலையுடன் கூறினார். குலசேகரன் திகைத்தான். யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் சிங்கப்பிரானோ அவசரப்படுத்தினார். ஊரிலுள்ள அப்பாவி மக்களுக்கு வீடு வீடாகச் செய்தியைச் சொல்லி அனைவரையும் வெளியேறச் சொல்ல வேண்டும் எனப் பரபரத்தார்! 

Friday, December 14, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பொன்னாச்சியின் மனம்!

குலசேகரன் நடக்கும் நிலையிலோ குதிரையில் அமர்ந்தவண்ணம் பயணம் செய்யும் நிலையிலோ இல்லாததால் அவனை எப்படி அழைத்துச் செல்வது எனக் கலந்து ஆலோசித்தார்கள். அவன் காயங்கள் பூரணமாக ஆறவில்லை. சீழ்க்கோர்த்துக் கொண்ட புண்களுக்கு இன்னமும் சிகிச்சை தேவைப்பட்டது. ஆகவே அவனை ஓர் படகில் அமர்த்திக் கரையோரமாகவே ஓட்டிக் கொண்டு ஒரு சிலர் துணையோடு அவனை அழகிய மணவாளம் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல முடிவானது. புறப்படும் நேரம் குலசேகரன் பொன்னாச்சியிடம் விடைபெறச் சென்றான். அவளிடம் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றவன் வாசந்திகா தனக்கு அளித்திருந்த பொன் ஆபரணத்தை வைத்துக்கொள்ளும்படி அவளிடம் நீட்டினான். அவள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் கண்ணீர் சிந்தினாள்.

குலசேகரனுக்கு ஏதும் புரியாமல் வெளியே வந்து ஹேமலேகாவிடம் விஷயத்தைச் சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான். அப்போது அவள் ஹேமலேகாவிடம் தான் செய்த கைம்மாறுக்குப் பிரதிபலனைத் தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தாள். குலசேகரன் போன்றோருக்குத் தொண்டு செய்ததன் மூலம் தான் மகிழ்ச்சியை அனுபவித்ததாகவும் அதற்காகப் பணமோ பொருளோ வாங்கிக்கொள்ள மாட்டேன் எனவும் சொன்னாள். மேலும் அவள் தன் கணவன் வியாபாரம் செய்ய வேண்டித் தன்னை விட்டுப் பிரிந்து சென்று பதினைந்து வருஷம் ஆகிவிட்டதாயும் இன்னமும் அவன் திரும்பவில்லை என்பதையும் எங்கே இருக்கிறானோ என்பதே தெரியாமல் தான் வாழ்ந்து வருவதையும் கூறினாள்.  தான் இன்னொரு ஆண்பிள்ளையைப் பார்த்து நேருக்கு நேர் பேசியது கூட இல்லை எனவும் கணவன் இல்லாமல் இத்தனை வருஷங்களைக் கழித்தவளுக்குக்குலசேகரன் வருகை பெரிதாக சந்தோஷத்தைக் கொடுத்ததும் அவனைக் கவனித்துக் கொண்டதன் மூலம் தானும் தன் தாய்நாட்டிற்கும் அதற்குச் சேவை புரியும் ஒரு வீரனுக்கும் தொண்டாற்றி அதன் மூலம் தனக்குச் சிறிது நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தது எனவும் சொன்னாள்.

குலசேகரனுக்குப் பணிவிடைகள் செய்ததன் மூலம் தான் அனுபவித்த ஆனந்தத்திற்குப் பொருளோ, பணமோ வாங்கினால் தான் செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றாள். இது தன் கடமை எனவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். வாழ்க்கையில் தான் அனுபவித்த வறட்சிக்கு நடுவே பாலைவனச் சோலை போலக் கிடைத்த இந்த இனிமையான தினங்களைத் தான் போற்றிப் பாதுகாத்து வைக்கப் போவதாகவும் சொன்னாள்.  இந்த நினைவுகளையும் தான் செய்த தொண்டையும் குறித்து இன்னும் அதிகம் பேசினால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்றும் அது பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை என்றும் சொல்லி விட்டுக் கண்ணீர் விட ஆரம்பித்தாள். ஹேமலேகாவும் அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.  குலசேகரனிடம் அந்தப் பொன்னாச்சி என்னும் தயிர்க்காரியின் உயர்ந்த உள்ளத்தைக் குறித்து எடுத்துக் கூறினாள். குலசேகரன் உண்மையிலேயே மெய் சிலிர்த்துக் கண் கலங்கி மானசிகமாக அவளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

குலசேகரனை ஓர் படகில் ஏற்றிப் படுத்த வண்ணமாக அமரவைத்தனர். சாய்வாகப் படுத்துக் கொண்ட குலசேகரன் கண்களுக்குக் கரையில் தோப்பு மரங்களுக்கு இடையே நின்று கொண்டு அவனுக்குப் பிரியாவிடை கொடுக்கும் பொன்னாச்சியின் உருவம் தெரிந்தது. இனி இவளை நாம் எங்கே பார்க்கப் போகிறோம் என நினைத்தவண்ணம் குலசேகரன் அவளிடமிருந்து விடை பெற்றான். அழகிய மணவாளம் கிராமம் போய்ச் சேர்ந்ததும் குலசேகரனைக் கரையேற்றி ஓர் வீட்டில் ரகசியமாகத் தங்க வைத்தார்கள். அவனுக்கு வேண்டிய வைத்திய சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மற்றப் பணிவிடைகளும் செய்யப்பட்டன. குலசேகரன் மெல்ல மெல்ல உடல் தேறி வந்தான். பின்னர் அவனால் நடக்கும் நிலைமைக்கு வந்த பின்னர் வடகாவிரி எனப்படும் கொள்ளிடக் கரைக்கு அடிக்கடி சென்று உலாத்தி வந்தான்.

ஒரு நாள் மாலை நேரம்! கொள்ளிடக்கரையில் அமர்ந்த வண்ணம் எதிர்க்கரையையே பார்த்த குலசேகரன் கண்களுக்கு மறுகரையில் திடீரெனக் கறுப்பான நிழல்கள் தெரிவது கண்களில் பட்டன. கூர்ந்து கவனித்தபோது அவை யாவும் நிழல்கள் அல்ல நிஜம் என்பதும் குதிரைகளில் அமர்ந்த வீரர்கள் என்பதும் புரிந்தது. அதுவும் அவை யாரும் ஒரு மாபெரும் படையின் ஒரு பகுதி எனவும் புரிந்து கொண்டான். விஷயத்தை சிங்கப்பிரானிடம் உடனே சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் கிளர்ந்தெழ ஓட ஆரம்பித்தான் குலசேகரன். அப்படிக் கண்மண் தெரியாமல் ஓடியவன் யார் மேலோ முட்டிக் கொண்டான். யார் எனப் பார்த்தவனுக்கு அவன் ஓர் சுல்தானிய வீரன் என்பதும் வேறு யாரும் இல்லை, தன்னைச் சிறைப்பிடித்த வீரர்களின் தலைவனாக இருந்தவனே என்பதும் தெரியவரக் குலசேகரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கலாயிற்று  . 

Wednesday, December 12, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவின் கதை!

ஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். "ஸ்வாமி! உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர்.  இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கின்றனர். (இது எப்படி சாத்தியம் என்பது எனக்குப் புரியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.) புலன்களால் அனுபவிக்கப்படும் சுகங்களை அனுபவித்து வாழ்பவர்கள் வாழ்க்கை ஒரு மாதிரி எனில் என்னைப் போல் மனதில்வாழ்பவர்கள் காவியங்களிலும் இதிஹாசங்களிலும் மனதைப் பறி கொடுத்து அதிலேயே மூழ்கிப் போகிறோம். ஆன்மாவில் வாழ்பவர்களோ பிரம்மத்தைப் பற்றிய விசாரங்களிலே மூழ்கிப் போகின்றனர்.  அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ப அவரவர் சுகத்தையும் இம்மாதிரி அனுபவங்களையும் பெற்று இன்புறுகின்றனர். "

"ஆர்ய! நான் மனதாலேயே வாழ்கிறேன். கிட்டத்தட்ட நீங்களும் அப்படித்தான். என்னை மனதால் நினைந்து வாழ்கிறீர்கள். நமக்கு இந்தப் போலியான சடங்குகளான திருமணம், இல்வாழ்க்கை போன்றவை தேவையே இல்லை. நாம் மனதில் ஒருவரை ஒருவர் நினைப்பதாலேயே அந்த இனிமையிலேயே வாழ்ந்து வருகிறோம். நாம் ஒருவரை ஒருவர் நினைக்கும் இன்பம் தான் நம் வாழ்க்கை! அத்தகைய வாழ்க்கையைத் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்." என்று சொன்னாள் ஹேமலேகா. குலசேகரன் வாயே திறக்காமல் அவள் பேசும் அழகை ரசித்தான்.  அவள் அளவுக்கு அவன் ஏதும் படித்தது இல்லை. ஆகவே அவனுக்கு அவள் பேச்சு ஓர் சுகமான கானமாகத் தெரிந்தது. அவன் மனமும் திறந்து கொண்டது போல் உணர்ந்தான்.  மனதுக்கு அவள் பேச்சு நிறைவாக அமைந்தது. சிறிது நேரம் இந்த உணர்வுகளில் மயங்கி நின்ற குலசேகரன் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வந்தான்.

"அதெல்லாம் சரி! ஹேமூ! நீ எப்படி என்னைத் தேடினாய்? உனக்கு எப்படித் தெரியும் என்னைப் பற்றி? யார் சொன்னார்கள்?" என்று கேட்டான். அப்போது ஹேமலேகா, வாசந்திகாவைப் பற்றி அவனுக்கு நினைவூட்டினாள். குலசேகரனுக்கும் வாசந்திகாவைப் பற்றிய நினைவு வந்தது. அவள் இப்போது சுல்தானின் ராணியின் அந்தப்புரச் சேடியாக வாழ்க்கை நடத்துவதை ஹேமலேகா தெரிவித்தாள்.  இதைக் கேட்ட குலசேகரன் திகைப்புடன் வாசந்திகாவுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு ஹேமலேகா, அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றாள். மேலும் சுல்தானிய ராணியின் கோஷ்டி அழகிய மணவாளம் கிராமம் வந்ததும். அப்போது ராணியை மகிழ்விக்க வேண்டி நடந்த நாட்டிய நிகழ்ச்சி பற்றியும் கூறினாள். அப்போது ஹேமலேகாவின் தாயாரைத் தான் அங்கே அழைத்துச் சென்றதையும் வாசந்திகா தாயை அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசியதையும் கூறினாள்.

கூடவே வாசந்திகா அவளைத் தனியாக அழைத்துக் குலசேகரன் தாழியில் இடப்பட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடப்பதையும் தாழி காவிரியில் மிதந்து கொண்டு செல்வதையும் அவனைக் காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டதைத் தெரிவித்தான். தான் பின்னர் அதை சிங்கப்பிரானிடம் அதைத் தெரிவித்ததாகவும் அவர் படகுக்காரர்களையும் வீரர்களையும் ஏவி விட்டு அவனைத் தேடச் சொன்னதாகவும் கூறினாள். கிழக்கே சென்ற வீரர்கள் பல காதம் தேடிவிட்டு அவன் கிடைக்காமல் திரும்பியதையும் சொன்னாள். பின்னர் அதனால் கவலை அடைந்த சிங்கப்பிரான் தானே ஒரு குழுவைச் சேர்த்துக் கொண்டு தேட முற்பட்டதும், அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டதாகவும் சொன்னாள். குழுவினர் கரையில் இறங்கி அங்குள்ள கிராமத்து மக்களையும் மற்றவர்களையும் விசாரித்துக் கொண்டு வர தான் மட்டும் தயிர்க்காரி பொன்னாச்சியின் குடிசையைப் பார்த்துவிட்டு இங்கே வந்ததாய்ச் சொன்னாள்.

இதை எல்லாம் கேட்ட குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். தான் தப்புவதற்கு வாசந்திகா செய்திருக்கும் பெரிய உதவியை நினைத்துக் கொண்டு வியந்ததோடு அல்லாமல் அவன் வைத்தியத்திற்கும், வழிச்செலவுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலே பொன்னாரத்தைத் தன் கழுத்தில் போட்டிருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டான். இத்தகைய மாசு மருவற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்புக்குத் தான் செய்யப் போகும் கைம்மாறு தான் என்ன? குலசேகான் கண்கள் கலங்கின. அதற்குள் சிங்கப்பிரானின் குழுவினர் ஹேமலேகா அவர்களை விட்டுப் போய் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னமும் காணவில்லையே எனத் தேடிக் கொண்டு வந்தார்கள். குலசேகரனோடு பேசிக் கொண்டிருந்த ஹேமலேகாவைக் கண்டதும் மனம் மகிழ்ந்தனர். அவனைத் தேடிக் கொண்டு போன மற்றக் குழுக்களுக்கு அவன் கிடைத்துவிட்ட செய்தியை அனுப்பி விட்டு மற்றவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசிப்பதற்காக அன்று மாலை ஒன்று கூடினார்கள். 

Tuesday, December 11, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகா வந்தாள்!

பொன்னாச்சியால் அந்த ஆபரணம் வந்த விதம் சொல்ல முடியவில்லை. அவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தாள் பொன்னாச்சி. அவன் உடலில் உள்ள ரணங்களால் பல இடங்களிலும் சீழ் கோர்த்துக் கொண்டு வலியும், வீக்கமும் அதிகம் இருந்ததால் குலசேகரன் உடல் வேதனையில் மிகவும் நொந்து போனான். பொன்னாச்சி அவனுக்குப் பச்சிலைகளை அரைத்துத் தடவி பல மூலிகைச்சாறுகளைக் கஷாயம் செய்து குடிக்கச் செய்து அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.அவள் கவனிப்புக்குக் கொஞ்சம் பலன் இருந்தது.  ஆனால் குலசேகரன் அங்கே வந்து சேர்ந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஓர் காலைவேளையில் குலசேகரன் தன் நிலைமையை நினைத்து வருந்திய வண்ணம் மெள்ள எழுந்து நடந்து ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான்.

ரணங்கள் ஆறி இருந்தாலும் தழும்புகள் பெரிதாகத் தெரிந்தன. ஆற்றங்கரையில் நிழல் பரப்பிக் கொண்டிருந்த ஓர் மரத்தின் அடியில் அமர்ந்த வண்ணம் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் குலசேகரன். அப்படியே உட்கார்ந்திருந்தவன் காதுகளில் திடீரென, "ஆர்ய!" என ஒரு தீங்குரல் கேட்டது. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டிருப்பதால் இதுவும் பிரமை என நினைத்த குலசேகரன் அவ்வளவாய் கவனம் செலுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நிஜமாகவே ஹேமலேகா தான் கூப்பிடுகிறாளோ என்ற சந்தேகத்துடன் திரும்பிய குலசேகரன் கண்ணெதிரில் கனிவு ததும்பிய கண்களுடன் ஹேமலேகாவே நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் குலசேகரனுக்கு ஆனந்தம் பீறிட்டது. ஆர்வமுடன் "ஹேமலேகா! ஹேமூ!" என்ற வண்ணம் எழுந்தான். "எப்படி இருக்கிறீர்கள் ஐயா?" என ஹேமலேகா அவனைக் கேட்டாள்.

"இருக்கிறேன். நீ தான் பார்க்கிறாயே!" என்றான் குலசேகரன் தழுதழுத்த குரலில். தான் கனவு காண்கிறோமோ என சந்தேகம் கொண்ட ஹேமலேகா அதை அவனிடம் கேட்கவும் கேட்டாள். இல்லை அவள் கனவு காணவில்லை; இது நனவே எனக் குலசேகரன் கூறினான். அவன் உடலில் உள்ள தழும்புகளைக் கண்ட ஹேமலேகா அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனை அமரச் சொன்னாள். பலஹீனமான உடல்நிலையில் வெகு நேரம் அவன் நிற்க வேண்டாம் என்பதே அவள் எண்ணம். ஹேமலேகாவை அங்கே எப்படி வந்தாள் என அறிவதற்காகக் குலசேகரன்,"ஹேமூ, நீ எப்படி இங்கே?" என்று வினவினான். ஹேமலேகா அவன் இதயத்தில் தானும் தன் இதயத்தில் அவனும் இருப்பதால் அவனைக் கண்டு பிடிப்பது அவளுக்கு எளிதாயிற்று என்றாள்.  அவனையே நினைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறினாள். பின்னர் அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கேட்டறிந்தாள். குலசேகரனும் தான் அடிபட்டு விழுந்தவரையில் கூறினான். பின்னர் தாழியில் கிடந்ததையும் பொன்னாச்சி எடுத்துக் காப்பாற்றியதையும் சொன்னான்.

அவன் தான் வாங்கிய சாட்டை அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டினான். அவனிடம் அவள் அவன் ரணங்களுக்குத்தான் ஓர் அருமருந்தாக விளங்க விரும்புவதாயும் ஆனால் அவனை ஸ்பரிசித்து சிகிச்சை செய்யும் பாக்கியம் அவளுக்கு இல்லை எனவும் கூறினாள். ஆனாலும் அவன் மேல் அவள் கொண்ட பிரேமை காலத்துக்கும் அழியாது எனவும் இந்தப் பிரேமை வெறும் உடல் ஸ்பரிசத்தால் மட்டுமே ஆனந்தம் அடையாது எனவும் மனங்களிலேயே தாங்கள் வாழ்வதாகவும், அது தொடரும் எனவும் கூறினாள்.

Sunday, December 09, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் காப்பாற்றப்பட்டான்!

இப்படி யோசனையில் சுமார் ஒரு நாழிகை நேரம் சென்றுவிட்டது. குலசேகரன் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருந்தான். அப்போது தூரத்துக்கரையில் யாரோ இருப்பது போல் தெரியவே மெல்ல எழுந்து அமர்ந்த நிலையில் உற்றுக் கவனித்தான். யாரோ ஓர் பெண் குளிக்கக் காவிரிக்கு வந்திருக்கிறாள்.  உடனே குலசேகரன் மெதுவாக எழுந்து நின்றான். கால்கள் தள்ளாடின! எனினும் விடாமல் எழுந்து நின்று கைகளை ஆட்டினான். வேகமாகத் தான் ஆட்ட நினைத்தான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் முயற்சிகள் பலமுறை தோல்வி கண்ட பின்னர் ஒருவழியாக அந்தப் பெண்மணி அவன் நடு நதிப் பிரவாகத்தில் தத்தளிப்பதைக் கண்டாள். உடனே தன் குடத்தையும் நீரில் அமிழ்த்தித் தானும் குதித்தாள். குடத்தின் வாயைக் கீழே திருப்பி அதை ஓர் தெப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு குலசேகரனை நோக்கி நீந்தி வர ஆரம்பித்தாள். அவள் நீச்சலில் தேர்ந்தவள் என்பதைக் குலசேகரன் சில விநாடிகளிலேயே புரிந்து கொண்டான். மூச்சு இரைய இரையக் களைத்துப் போனவள் ஒரு வழியாக அவன் அருகே வந்தாள்.

அங்கே ஓர் தாழி இருப்பதையும் அதில் சோர்ந்து வாடிய நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் ஓர் வாலிபன் நிற்க முடியாமல் நிற்பதைக் கண்டாள். சற்றுத் தயங்கினாள். அவள் தயக்கத்தைக் கண்டதும் குலசேகரன், "அம்மா! ஆபத்து எனக்குத் தலைக்கு மேல் காத்திருக்கிறது! என்னைச் சாட்டையால் அடித்துக் குற்றுயிராக்கி விட்டார்கள். என்னைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்தத் தாழிக்குள் எப்படி வந்தேன் எனத் தெரியவில்லை. நிற்கக் கூட முடியாதவனாக இருக்கிறேன். என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள்!" என்றான்.  இதைக் கேட்ட அந்தப் பெண் மெல்லத் தாழியின் அருகே வந்து அதை அசைத்துப் பார்த்தாள். தாழி மெல்ல நகர்ந்து கொடுத்தது.  மகிழ்ச்சியுற்ற அவள் ஒரு கையால் குடத்தைப் பிடித்துக் கொண்டு நீந்திக்கொண்டே மறுகையால் தாழியைக் கரையை நோக்கித் தள்ளி விட ஆரம்பித்தாள்.  சிறிதும் சலிக்காமல் எப்படியேனும் தாழியைக் கரைக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் முயற்சியில்கடைசியில் அவள் வெற்றி பெற்றாள்.

கரைக்கு அருகே வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தவளாக வேகமாகத் தாழியைத் தள்ளிவிட்டதும் அது சற்று தூரம் மிதந்து போய் தரை தட்டி நின்றது. அப்படியே குலசேகரனைக் கரைக்கு அருகே விட்டுவிட்டு அவள் நீந்திக்கொண்டே இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்று ஓர் புதர் மறைவில் கரை ஏறினாள். அவள் அரை உடையில் குளிக்க வந்தவள் தன் துணிகளைப் பிழிந்து மாற்றிக்கொள்ளவே சென்றிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் அந்தப் பக்கம் திரும்பாமல் அவனும் கண்ணியம் காத்தவனாக மெதுவாகத் தாழியில் இருந்து இறங்க முயன்றான். ஒருவழியாக அதில் வெற்றியும் கண்டான். ஆனால் அவன் காயங்களின் ஆழமும் கடுமையும் அவனை நிற்கவிடவில்லை. நிற்க முடியாமலும் மேல்கொண்டு நடக்க முடியாமலும் நடுங்கியவன் கீழே அப்படியே சாய்ந்து விட்டான். அதற்குள்ளாக அந்தப் பெண் தன் உடையை நன்கு பிழிந்து கட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டாள்.

குலசேகரன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, "ஐயா, ஐயா!" என அழைத்த வண்ணம் அவனை எழுப்ப முயன்றாள். அவனால் கண்களையும் திறக்க முடியவில்லை. எழுந்தும் நிற்க முடியவில்லை என்பதைக் கண்டு அவனை மெல்ல எடுத்துத் தன் தோளில் நிறுத்திய நிலையில் சாய்த்துக் கொண்டு நடந்தாள். ஓர் அடர்த்தியான தோப்பைக் கடந்து பின்னர் அவள் குடிசை வந்தது. அவனை ஓர் நல்ல படுக்கை தயாரித்துப் படுக்க வைத்துவிட்டு அவன் காயங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். அந்தக் குடிசைக்காரியின் உதவியினாலும் பணிவிடைகளிலும் குலசேகரன் நன்றியும் மகிழ்ச்சியும் கொண்டான். அவனுக்கு ஓரளவு நினைவும் திரும்பவே அவளை யாரென்று கேட்டான். பொன்னாச்சி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண்மணியின் கணவன் கப்பலில் ஏறி வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யச் சென்றதாகவும்  இன்னமும் திரும்பவில்லை என்றும் கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டே குலசேகரன் தன் உடலைத்தடவிப் பார்த்தபோது கழுத்தில் பொன்னாலான ஓர் ஆபரணம் இருந்ததைக் கண்டான்.இது ஏது எனப் பொன்னாச்சியைக் கேட்க அந்த ஆபரணம் தான் அவனை மீட்கும்போதே அவன் கழுத்தில் இருந்ததாகப் பொன்னாச்சி கூறினாள். குலசேகரன் குழப்பம் அடைந்தான். தாழியில் தள்ளித் தன்னைக் கொல்லப்பார்த்திருக்கிறார்கள் எனத் தான் நினைத்தது தவறு எனப் புரிந்து கொண்டான். யாரோ அவனைக் காப்பாற்றப் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றனர்! யாராக இருக்கும்!

Friday, December 07, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் நிலைமை!

ராணி தன்னை அழைப்பதைக் கண்ட வாசந்திகா பதைப்புடன், ஹேமலேகாவின் கைகளைப் பிடித்து அழுத்தினாள். பின்னர் மெல்லிய குரலில் குலசேகரன் ஓர் தாழியில் மிதந்தவண்ணம் காவிரிப் பிரவாகத்தில் போய்க் கொண்டிருப்பதைத் தெரியப்படுத்தினாள். எப்படியேனும் அவனைக்காப்பாற்றும்படியும் மிகவும் ஆபத்தான நிலையில் அவன் இருப்பதையும் தெரியப்படுத்தினாள். ஹேமலேகா ஏதும் புரியாமல் நிற்கையிலேயே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள். எல்லாம் இரு நாழிகைகளில் முடிய அனைவரும் படுக்கச் சென்றனர். வாசந்திகாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் மனம் கவர்ந்த குலசேகரன் நிலைமையும், தன்னைப் பெற்ற தாய்க்கு தன்னையே அடையாளம் தெரியாமல் இருப்பதையும் நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். இங்கே குலசேகரன் சென்ற தாழியின் நிலைமை என்ன ஆனது எனப் பார்ப்போம்.

தாழி ஓடையோடு மிதந்து கொண்டு காவிரியில் கலக்கும் இடத்துக்கு அருகே வந்திருந்தது.  நதி பூரணப்பிரவாகத்தில் போய்க் கொண்டிருந்தபடியால் அந்த இடத்தில் ஓடை நீர் தேங்கி இருந்ததால் தாழியின் பயணம் தடைப்பட்டது. தாழி அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலைவரை அப்படிச் சுற்றிய தாழிக்கு ஓடைநீரோடு காவிரியில் பயணிக்கும் நேரமும் வந்தது. நதி கொஞ்சம் இடம்கொடுக்க ஓடை நீர் காவிரியில் வேகமாகப் பாய்ந்தது. ஓடை நீர் தன்னோடு கொண்டு வந்திருந்த சருகுகள், இலைகள், தழைகள் ஆகியவற்றோடு தாழியும் அடித்துக் கொண்டு போய்க் காவிரியில் இறங்கி வேகமாய் ஒரு சுற்றுச் சுற்றிப் பின்னர் நதியின் வெள்ளத்தோடு பயணப்படலாயிற்று.  அது காலை வேளை. இளம் சூரியன் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சூரிய ஒளி தாழியிலும் பட்டது.  நதிக்கரை ஓரம் இருந்த கிராமத்துவாசிகள் எல்லோரும் ஆங்காங்கே நதியில் குளித்துத் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தனர். தாழி ஒன்று நீரில் மிதந்து செல்வதைக் கண்டாலும் அதற்குள் ஓர் மனிதன் இருப்பான் என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை. நதிப் பிரவாகத்தில் வெள்ளத்தோடு எத்தனையோ அடித்துக் கொண்டு வருவதைப் போல இதுவும் ஒன்று என நினைத்தார்கள்.

அன்று பகல் முழுவதும் தாழி பயணித்துக் கொண்டிருந்தது. மாலையில் அதன் திசை மாற ஆரம்பித்தது. கிழக்கே போகப் போகத் தெரிந்த உயரமான நாணல் புதர்களில் நதியே ஓர் ஏரி போல் சில இடங்களில் காட்சி அளித்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தகைய நாணல் புதர்களில் ஒன்றில் குலசேகரன் இருந்த தாழியும் அகப்பட்டுக் கொண்டு நின்றது. அப்போது இருட்டும் சமயமாக இருந்தது. குலசேகரனுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது சற்றே நினைவு வந்தது. உடம்பில் பட்டிருந்த சாட்டை அடிகளால் ஏற்பட்ட காயங்கள் அந்த நீர் பட்டதும் நெருப்பாய்க் காந்தத் தொடங்கியது. எங்கே இருக்கிறோம் என்பதே அவனுக்குப் புலப்படவில்லை. ஏதோ ஓர் இடுக்கான அறைக்குள் தன்னைத் தள்ளி இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். ஆனால் நதியின் மீன்கள் எல்லாம் அவன் மேல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அவனுக்கு ஏதும் புரியவில்லை.

மெல்ல மெல்ல தன்னை ஓர் நிலைக்குக் கொண்டு வந்து நடந்தவைகளை நினைவு கூர முயற்சித்தான். இது இரவா, பகலா என்றே தெரியவில்லை. ஒருவேளை என் கண் பார்வை பறி போய் விட்டதோ?  இப்படி எல்லாம் நினைத்தவண்ணம் கண்களைத் திறந்து மெல்ல மேலே பார்த்தவனுக்கு மேலே ஆயிரம் ஆயிரம் விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாடி! இத்தனை விளக்குகளா? ஒரே நேரத்தில் இத்தனை விளக்குகளை யார் ஏற்றி இருப்பார்கள்? இல்லை, இல்லை, இவை விளக்குகள் இல்லை. நக்ஷத்திரங்களைப் போல் அல்லவா இருக்கிறது. சுற்றும் முற்றும் மீண்டும் பார்த்த குலசேகரன் மேலே தெரிவது ஆகாயம் என்றும் விண்ணில் ஒளிரும் நக்ஷத்திரக் கூட்டங்களைத் தான் தான் பார்ப்பதையும் அறிந்து கொண்டான். மெல்ல எழுந்து உட்கார முயன்றான். அவனால் முடியவில்லை.

ஏதோ ஓர் அறையில் கூரை இல்லா இடத்தில் தன்னைப் போட்டிருப்பதாக நினைத்தான். ஆனால் இதென்ன? அவன் படுத்திருக்கும் அந்த அறை நகர்கிறதே! இது என்ன மாயா ஜாலம்! ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து தப்புவது எப்படி? கவலையும், பீதியும் அவனைச் சூழ்ந்து கொள்ள மறுபடியும் நினைவிழந்தான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை.  இரவு முழுவதும் அப்படியே கிடந்த குலசேகரன் மறுநாள் காலை கொஞ்சம் சுய உணர்வைப் பெற்றான். அவனால் உடம்பைத் தான் நகர்த்த முடியவில்லை. ஆனால் நினைவு பூரணமாக வந்து விட்டது. தன்னைத் துருக்கிய வீரர்கள் அடித்தது எல்லாம் நினைவில் வந்தது. ஆனால் தான் இருப்பது எதில்? கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவுக்கு வந்து அவன் சுற்றிலும் ஆராய்ந்து தான் ஓர் தாழிக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டான். தன்னை இந்தத் தாழிக்குள் போட்டவர்கள் யார்? எப்படி இங்கே வந்தோம்? இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

மெள்ள மெள்ள மறுபடியும் பார்த்தபோது ஓர் நதியின் பிரவாகத்தில் தான் இருந்த தாழி இருப்பதையும் நதிப் பிரவாகத்தோடு அது நகர்வதையும் உணர்ந்து கொண்டான். தான் நதியின் நடுவில் இருப்பதையும் வெகு தூரத்தில் நதிக்கரை தென்படுவதையும் கண்டு கொண்டான். இந்தத் தாழியைக் கரை நோக்கி இயக்கத் தன்னால் இயலாதே! என்ன செய்ய முடியும்? கலங்கினான் குலசேகரன். 

Thursday, December 06, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவும் அவள் தாயும்!

தன் நிலையை நினைத்து நொந்துகொண்ட வாசந்திகா, "அம்மா! அம்மா! இங்கே வா!" என அழைக்க ஹேமலேகாவுடன் சில பெண்கள் அந்த மூதாட்டியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வாசந்திகா முன்னால் நிறுத்தினார்கள். தன் தாயின் நிலையைப்பார்த்த வாசந்திகா கண்ணீர் பெருக்கினாள். பிச்சைக்காரி போல ஓர் பித்தாகக் காட்சி அளித்தாள் அவள் தாய்! திருக்கரம்பனூர் அம்மங்கிவல்லி என்னும் பெயர் கொண்ட தன் தாய் இன்று தன்னிலை இழந்து தன்னைப் பற்றிய அனைத்தையும் மறந்து தான் பெற்ற மகளான வாசந்திகாவைப் பற்றிய நினைவு ஒன்றில் மட்டும் வாழ்வதைக் கண்டு அவள் மனம் புண்ணானது.  கூடு போல் காட்சி அளித்த அந்த உடலில் உயிர் இருப்பது அவள் கண்களின் அசைவினால் மட்டுமே தெரிந்தது.

அவளிடம் வாசந்திகா, "அம்மா, அம்மா, இதோ நான் வாசந்திகா! என்னைப் பார் அம்மா! உன் வாசந்திகா நான் தான்!" என்று சொல்லியவண்ணம் தாயின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கேவினாள். ஆனால் அவளோ வாசந்திகாவையே கூர்ந்து பார்த்துத் தலையை  ஆட்டினாள். "இல்லை! இல்லை! நீ என் வாசந்திகா இல்லை! அவள் இப்படி இருக்க மாட்டாள். நீ வேறு யாரோ! எவரோ! என் மனச்சாந்திக்காகப் பொய் கூறாதே!" என்ற வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "வாசந்திகா! மகளே! வாசந்திகா!" என்று கூச்சலிட்டாள். வாசந்திகா அழுத வண்ணம், " அம்மா, அம்மா! நான் வாசந்திகா தான் அம்மா! என்னை நன்றாகப் பாரம்மா!" என்று மீண்டும் மீண்டும் கூறினாள்.

"நீயா வாசந்திகா! இல்லவே இல்லை! எனக்குத் தெரியும். அதோ, அங்கே ஆடுகிறாள் என் வாசந்திகா!" என்று தொலைவில் மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்களைக் காட்டினாள் அம்மங்கிவல்லி.  வாசந்திகாவின் இதயமே வெடித்து விடும்போல் இருந்தது. தன் தாய்க்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இனி தன்னை அவளுக்கு அடையாளமும் தெரியாது என்பது புரியவர மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். அப்போது அந்த மூதாட்டி அனைவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.  ஹேமலேகா அவளைப் பார்த்து, "நீங்கள் தான் வாசந்திகாவா? அது உங்கள் தாய்தானா? " என்று கேட்க வாசந்திகா ஆமோதித்தாள். பின்னர் மெல்லிய குரலில் தான் தில்லிப் படைவீரர்களிடம் சிக்கிக் கொண்டு நாசமானது குறித்துச் சொன்னாள்.

ஹேமலேகா அவளிடம் வாசந்திகாவின் தாயாரைத் தான் தான் பார்த்துக் கொள்வதாகவும், தாயார் இல்லாத தான் அவளைத் தன் சொந்தத் தாயாக நினைத்துக் கொண்டு அவளைக்கவனித்துக்கொள்வதாகவும் எடுத்துச் சொன்னாள்.  வாசந்திகா உடனே தன்னிடம் இருந்த பொன்னாபரணங்களில் சிறந்த பெறுமானம் பெறும் ஒன்றை எடுத்து ஹேமலேகாவிடம் கொடுத்தாள். தன் தாயை நன்கு கவனித்துக் கொள்ளுமாறும் கடவுள் அருள் இருந்தால் தனக்கு விடுதலை கிடைக்கும் எனவும், அப்படி விடுதலை கிடைத்தால் தான் அவளை வந்து கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.  பின்னர் திரும்பியவளுக்குக் குலசேகரன் புலம்பல் நினைவில் வரவே அவளிடம் மீண்டும் சென்று, "உன் பெயர் ஹேமலேகா தானே?" எனக் கேட்டாள். ஹேமலேகா ஆமோதித்தாள்.

"ஓஹோ! அப்போது நீ குலசேகரனை அறிவாயோ?" என்று வாசந்திகா வினவ ஹேமலேகா திடுக்கிட்டாள்.  ஆனாலும் அவன் பெயரைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டுகொண்ட வாசந்திகா இவளைக் குறித்துத் தான் குலசேகரன் புலம்பி இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள். ஹேமலேகா வாசந்திகா கேட்பதன் காரணத்தைக் கேட்க, வாசந்திகா அவளை அருகே அழைத்து, மிகவும் ரகசியமாக, "அவர் இந்தத் துருக்க வீரர்களால் குற்றுயிராக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்!" என்றாள். ஹேமலேகா திகைக்க சுல்தானிய ராணி வாசந்திகாவைக் கைதட்டித் தன்னிடம் அழைத்தாள். 

Wednesday, December 05, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மாயமா, மர்மமா?

மறுநாள் காலை சுல்தானிய ராணியுடன் வந்தவர்களும் ராணியும் எழுந்து பார்த்தபோது தாங்கள் சிறைப்பிடித்து வைத்தவர்களில் முக்கியமான ஒருவனைக் காணோம் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படி சாத்தியம் என நினைத்தார்கள்.  அந்தக் காலகட்டங்களில் மாயாவித்தைகள், யோக வித்தைகள் தெரிந்தவர்கள் நிறைய இருந்ததால் அப்படி ஏதோ நடந்திருக்கும் எனச் சந்தேகித்தார்கள். எதற்கும் இந்த மண்டபத்தில் இருந்து உடனடியாகக் கிளம்பாவிட்டால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து சம்பவிக்குமோ எனக் கவலைப்பட்டார்கள். ஆகவே அனைவரும் குதிரைகளைக் கிளப்பி விட்டுப் பல்லக்குத் தூக்கிகளைப் பல்லக்குகளைச் சுமக்கச் செய்து பயணத்தை வடக்கு நோக்கித்தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்குக் காவிரியின் தென் கரை கண்ணில் பட்டது. நதியில் அப்போது நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. ஆகவே அவர்கள் படகுகளை அமர்த்திக் கொண்டு அதன் மூலம் நதியைக் கடக்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் படகுகளில் ஒன்று அமர்ந்தவண்ணம் அவர்களுடன் கூடப் பயணித்த வாசந்திகாவுக்கு நதியில் நீர்ப்பிரவாகம் சுழித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டதும் உள்ளூரத் திகிலே ஏற்பட்டது! தான் செய்தது சரியா என்னும் எண்ணமும் தோன்றியது! தாழியில் தான் இறக்கி வைத்த குலசேகரன் இது நேரம் எங்கே பயணித்திருப்பானோ! இந்த வேகத்தில் வெள்ளத்தின் நடுவே தாழி சென்றால் சமுத்திரத்தில் போய்ச் சேருமே! என்ன செய்வது?  குலை உயிரும் குற்றுயிருமாகக் கிடக்கும் அவர் சரியான மருத்துவ உதவி கிட்டாமல் என்ன ஆவாரோ தெரியவில்லையே! நேற்றிரவு இத்தனை வெள்ளம் போவது தெரிந்திருக்கவில்லை! அவள் மனம் பதைபதைத்தது. அதை அவள் முகமும் வெளிக்காட்டியது. தான் செய்தது தவறானதோ என்னும் எண்ணம் மேலும் மேலும் தோன்றக் குலசேகரனைத் தான் பெரியதொரு ஆபத்தில் சிக்க வைத்துவிட்டோம் என அவள் நினைத்தாள்.

அவர்கள் படகு திருச்சிராப்பள்ளியை அடையாமல் அதற்குக் கிழக்கே சிறிது தூரத்தில் தென்காவிரியைக் கடந்தது. அப்போது வாசந்திகாவுக்குத் திருவரங்கக் கரை கண்ணில் படம் உள்ளமும், உடலும் சிலிர்த்தது. எத்தனை வருடங்கள்! இதை மீண்டும் பார்க்க மாட்டோம் என்றே நினைத்திருக்க இன்று பார்க்க நேர்ந்ததே! அரங்கன் கதி என்னவாயிற்றோ! அவள் கண்கள் குளமாகின.  காவிரிக்கரையில் அவர்கள் அமர்ந்து சிறிது இளைப்பாறினார்கள். பின்னர் மேற்கே பயணித்து அழகிய மணவாளம் கிராமத்தை அடைந்தனர்.  அங்கே ஏற்கெனவே சிங்கப்பிரானுக்கு சுல்தானிய ராணி வரப்போது தெரிந்திருந்தமையால் அவளை முறைப்படி வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்.  ஊரில் உள்ள முக்கியமான விருந்தினர்கள் வந்தால் தங்கும் சத்திரத்தில் தங்க வைத்து அவர்களுக்கு மது மற்றும் சிறப்பான விருந்து அளித்து மனம் குளிர வைத்தார். பின்னர் அவர்களை அன்றிரவு அங்கேயே கழிக்கும்படி சொல்லி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இரவில் அவர்கள் பொழுதைக் கழிக்கப் பாட்டும், கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதற்கெனத் தயாராக இருந்த தேவதாசிகள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்து நின்றனர். சிறிது நேரத்தில் ராணி தன் பரிவாரங்களுடன் அங்கே வந்து சேர்ந்தாள். வந்தவர்கள் அனைவரும் அவர்களையே பார்க்க ஆட வந்த தேவதாசிகள் வாசந்திகாவைப் பார்த்துத் திகைத்தனர். ஒருவருக்கொருவர் சுட்டிப் பேசிக் கொண்டார்கள். திருக்கரம்பனூர் வாசந்திகாவைப் போலவே இவள் இருக்கிறாளே! அவள் தானோ அல்லது வேறு யாருமோ என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள். பின்னர் பாட்டும், கூத்தும் தொடங்கின.  சிங்கப்பிரானுக்கு வாசந்திகாவை அடையாளம் தெரிந்து விட்டது. வாசந்திகாவும் அவரைத் தெரிந்து கொண்டாள் என்பது அவள் பார்வையில் இருந்து அவர் அறிந்தார். வாசந்திகா எங்கேயோ போய்விட்டாள் அல்லது இறந்திருக்கலாம் என நாம் நினைக்க இந்தக் கொடுமைக்காரர்களிடமா மாட்டிக்கொண்டாள் என சிங்கப்பிரான் பரிதாபம் அடைந்தார்.

கூத்து நடக்கும்போது ஓர் வயதான அம்மா, வாசந்திகாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆடுபவர்கள் நடுவில் வந்து நின்று கொண்டு, "வாசந்திகா! ஆடு! ஆடு! ஆடு அம்மா!" என்று கூறினாள்.  அந்த மூதாட்டியைத் தொடர்ந்து ஹேமலேகா ஓடி வந்தாள். "அம்மா, அம்மா, அங்கெல்லாம் போகாதீர்கள்! வாசந்திகா அங்கே இல்லை! இங்கே வாருங்கள்!" என்று அழைத்தவண்ணம் அந்த மூதாட்டியை ஓடிப் போய்ப் பிடித்தாள். ஆனால் அந்த மூதாட்டியோ நேராக தேவதாசிகளுக்கிடையே வந்து, "வாசந்திகா! வாசந்திகா!" என்று கூவிக்கொண்டு "ஆடு! ஆடு" எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை இழுத்துச் செல்லுமாறு அனைவரும் கூவ வாசந்திகா தன் தாயைப் புரிந்து கொண்டாள். ஆஹா, அம்மா உயிருடன் இருக்கிறாளா?உடனே அங்கே செல்லக் கால்கள் எழும்பினாலும் அவள் நிலை அவளைத் தயங்க வைத்தது. ராணியைப் பார்த்து, "ராணி! அது என்னைப் பெற்ற தாய்! நான் அவளிடம் பேசவேண்டும். உங்கள் அனுமதி அதற்கு வேண்டும்." என்று கூட ராணி சற்று யோசித்து விட்டு அரைமனதோடு அனுமதி தந்தாள். ஆனால் அவளை இங்கே அழைத்து வந்து தனக்கு எதிரே பேசவேண்டும் என்று சொன்னாள். 

Sunday, December 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவின் கலக்கம்!

குலசேகரனைத்தாழிக்குள் வைத்து ஓடையில் மிதக்க விட்ட வாசந்திகா மறுபடியும் தாங்கள் தங்கிய இடத்துக்கு வந்தாள். அவள் நிலையை எண்ணி எண்ணி மனம் வருந்தினாள். சுல்தானிய ராணிகளுள் ஒருத்திக்கு அவள் சேடிப்பெண்ணாகப் பணி புரிந்து வந்தாள். அவள் வலுக்கட்டாயமாக மதுரை கொண்டு செல்லப்பட்டதும் அங்கே அவள் போற்றிப்பாதுகாத்த பெண்மையைப் பறி கொடுத்துப் பின்னர் மதுரை அரண்மனையிலேயே நடைப்பிணமாக உயிர் வாழ ஆரம்பித்தது எல்லாவற்றையும் நினைவு கூர்ந்து கண் கலங்கினாள்.  இப்போது அவள் வந்திருப்பதும் சுல்தானிய ராணி ஒருத்தியுடன் தான். அந்த ராணியின் தந்தை கண்ணனூரில் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரைப் பார்க்க மதுரையில் இருந்து கிளம்பிக் கண்ணனூர் சென்று கொண்டிருந்தாள் அவள். அவளுக்குத் துணையாகவே மற்ற வீரர்களும் சேடிப் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். சேடிப் பெண்களில் ஒருத்தியாகக் கிட்டத்தட்டப் பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் வாசந்திகா தான் வாழ்ந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

இந்தப் பதினைந்து வருஷங்களில் தமிழகம் அதுவரை முற்றிலும் காணாத அளவுக்கு அந்நியர் ஆட்சியில் மாட்டிக் கொண்டிருந்தது. தில்லியிலிருந்து கோயில் சொத்துக்களையும் நகைகளையும் கொள்ளை அடிக்க வந்த சுல்தானிய வீரர்களில் சிலர் அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருந்ததில் அவர்களில் பலருக்கும் கண்ணனூரிலும் மதுரையிலும் குடும்பங்கள் கிளைவிட்டுப் பரவி விட்டன. அவர்கள் தமிழகத்தை மதுரையிலிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தும் 15 வருடங்கள் ஆகி இருந்தன. ஆட்சிப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தி வந்தார்கள்.வீரர்கள் படையில் சேர்ந்தாலும் அவர்கள் மதம்மாற்றப்பட்டே சேர்க்கப்பட்டனர்.  இந்த ஆட்சியில் அவர்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவ, வைணவக் கோயில்களில் வழிபாடுகள் முற்றிலும் நின்று விட்டன. கோயில் உற்சவங்களை நடத்தியே பத்து வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டன. கோயிலில் உள்ள உற்சவ விக்ரஹங்கள் பலவும் அந்த அந்தக் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு அருகேஇருந்த மலையாள நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அல்லது பூமிக்குக் கீழ் வெகு ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.

தங்கள் சமய வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுமோ என அஞ்சிய பலரும் அங்கிருந்து மலையாள நாட்டிற்கும் ஹொய்சள நாட்டிற்கும் சென்று வாழ ஆரம்பித்து விட்டனர்.  வழிபாடுகள் மட்டுமின்றித் தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த திருவிழாக்கள், பண்டிகைகள், சமூக விழாக்கள் போன்றவையும் நிறுத்தப்பட்டு மீறிக்கொண்டாடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மக்கள் யாரால் தங்களுக்கு விடிவு காலம் வருமோ என ஆவலுடன் காத்திருந்தார்கள். வாசந்திகாவும் அப்படி விடிவு காலத்தை எதிர்நோக்கி இருந்தவர்களில் ஒருத்தி. ஆனாலும் அவள் வாழ்வில் மீண்டும் குலசேகரன் குறுக்கிடுவான் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் இந்தச் சிறையிலிருந்து தான் விடுவிக்கப்படுவோம் எனக்காத்திருந்தாள். அவள் அழகர்மலையில் அரங்கனைக்காப்பாற்றியது நினைவில் வந்தது.  அரங்கனைக் காப்பாற்றி ஒளித்து வைக்க உதவிபுரிந்த தன்னால்யாருக்கேனும் ஏதேனும் நன்மை விளையும், அதனால் தான் தான் இன்னமும் உயிர் தரித்திருக்கிறோம் எனத் தீவிரமாக நம்பினாள்.

இப்போது அந்த நம்பிக்கை வீண் போகாமல் குலசேகரனைக் காப்பாற்ற நேர்ந்தது குறித்து அவள் மகிழ்ச்சியே அடைந்தாள்.  அவன் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் வாழ்க்கையையும் காப்பாற்றி இருக்கிறாள் வாசந்திகா. அவன் வாழ்க்கை எவ்வளவு முக்கியமானது. நாட்டு விடுதலைக்காகப்பாடு படும் ஓர் வீரன் அவன். அதுவும் இப்போது ஹொய்சள வீரர்களுடன் வந்து சிறைப்பட்டிருப்பதா ஹொய்சள அரசருடன் சேர்ந்து ஏதோதிட்டம் போட்டு அதை நிறைவேற்றக் காத்திருக்கிறான் என்றே அவள் நினைத்தாள். ஆகவே அவன் விடுதலை மிக முக்கியம். இப்படி எல்லாம் நினைத்தவளுக்கு அவன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் தோன்றின. அவருக்குத் திருமணம் ஆகி இருக்குமோ என எண்ணினாள். ஆம் ஆகி இருக்கும்! அது தான் மனைவி பெயரைச் சொல்லிப் புலம்பினாரோ!  ஹேமலேகா அவர் மனைவி போல் தெரிகிறது. அல்லது அல்லது அவரால் விரும்பப்பட்ட பெண்ணாக இருக்கலாம். எதுவானால் என்ன! வாசந்திகாவின் கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருகியது. 

Friday, November 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவின் முயற்சி!

குலசேகரனும் அவன் சகாக்களும் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து குலசேகரன் ஹேமலேகாவை நினைத்துப் போட்ட சப்தம் அந்தத் தங்குமிடத்தின் விசாலமான முன்னறையில் தங்கி இருந்த சுல்தானிய ராணிக்கும் அவளுடன் வந்த தோழியருக்கும் நன்கு கேட்டது. அவர்களில் ஒருத்தி சுல்தானிய ராணிக்கு மயில்தோகையால் விசிறி வீசிக் கொண்டிருந்தாள். நல்ல அழகான பெண்ணாக இருந்த அவள் கண்கள் எப்போதும் சோகக் கடலில் மூழ்கி இருந்தன. அவள் காதுகளில் குலசேகரன் குரல் விழுந்ததும் திடுக்கிட்டாள் அவள்.  உற்றுக் கவனித்தவளுக்கு அந்தக் குரல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் நன்கு பழகிக் கேட்டவரின் குரல். அவள் உயிராக நினைத்தவரின் குரல்! இங்கே எப்படி? அந்தப் பெண் உடனே அருகில் இருந்த மற்றொரு சேடியிடம் விசிறியைக் கொடுத்துவிட்டுத் தான்கொல்லைப்புறம் ஒதுங்குவது போல் பின்னால் சென்றாள். மெல்ல மெல்லப்பின்கட்டையும் தாண்டி அந்த வீரர்கள் அடைபட்டிருந்த அறைக்கு அருகே வந்தவளுக்கு அந்தக் குரல் நன்கு கேட்டது.

ஆஹா! இது அவர் குரலே தான்! எந்த மனிதனைப் பார்த்தும் அவன் குரலைக் கேட்டும் பரவசம் அடைந்து வந்தாளோ அந்த மனிதனின் குரல் தான்! ஆனால் இங்கே எப்படி? மேலும் இந்தக் குரல் உருத்தெரியாத புலம்பலாக அன்றோ இருக்கிறது. மெல்ல அறைக்கு அருகே வந்தவள் அங்கே சுவரில் மாட்டி இருந்த தீவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அறைக்குள்ளாக அந்தத் தீவர்த்தி வெளிச்சத்தில் நன்கு உற்றுக் கவனித்தாள். அரங்கா! அரங்கா! இது என்ன?என் உள்ளக் கோயிலில் குடி இருக்கும் தெய்வம் அன்றோ இங்கு குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக் கொண்டு கிடக்கிறது! இது எப்படி சாத்தியம்? இதன் பின்னணி என்ன? சில கணங்கள் குலசேகரனையே உற்றுக் கவனித்த வண்ணம் நின்றவள் பின்னர் தீவர்த்தியைச் சுவரில் மறுபடி சொருகி விட்டுத் தன் இருப்பிடம் சென்றாள். அவள் மனதில் கலக்கம். வேறு வேலை ஏதும் ஓடவில்லை அவளுக்கு. சிந்தனையே செய்ய முடியாதது போன்ற குழப்பம் வேறு அவளை ஆட்கொண்டிருந்தது.

அன்றிரவு சுல்தானிய ராணி  இரவு உணவை முடித்துக் கொண்டு தூங்கச் செல்வதற்காகக் காத்திருந்தாள் அந்தப் பெண். அவள் வேறு யாருமல்ல. இந்த வரலாற்றின் ஆரம்பத்தில் நாம் பார்த்த வாசந்திகாவே தான். துருக்கப்படை வீரர்களால் மதுரைக்குச் சிறை எடுக்கப் பட்டுச் சென்றவளே தான். அங்கே தன்னைக்காப்பாற்றிக் கொள்ள இயலாமல் வேறு வழியின்றி நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பவளே தான். இப்போது இங்கே குலசேகரனைக் கண்ட அவள் மனம் துடித்தது. அவனை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படிக் காப்பாற்றுவது? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. எல்லோரும் உறங்கக் காத்திருந்தாள். பின்னர் மெல்ல வெளியே வந்தாள். சுற்றும் முற்றும் கவனித்த வண்ணம் மெல்ல மெல்லக்காலடி எடுத்து வைத்துக் குலசேகரன் இருக்கும் அறைக்கு அருகே வந்து அவன் அருகே போய் அமர்ந்தாள். அவனை எழுப்பி நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தாள்.

"ஸ்வாமி! ஸ்வாமி! என்னைப் பாருங்கள்! இதோ நான் வாசந்திகா வந்திருக்கிறேன்!" என்றாள். குலசேகரனிடம் அசைவே இல்லை. பலமுறை அவன் தோளைப் பற்றிக் குலுக்கிக் கொண்டு திரும்பத் திரும்ப இதையே சொன்னாள் அவள். நினைவின்றிக் கிடக்கும் அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் நினைவு திரும்பாது போல் தெரிகிறதே என யோசித்தவளாய் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். இந்தக் குழுவினர் கண்ணனூரை நோக்கிச் செல்கின்றனர். அங்கே இந்த வீரர்களோடு குலசேகரனும் சென்றால் கட்டாயம் அந்த உபதளபதி குலசேகரனைக் கொன்றுவிடுவான். தப்ப முடியாது. ஆனால் என் அரசரை என் தெய்வத்தை நான் காப்பாற்றியே ஆகவேண்டும். அது எப்படி நிறைவேறும்?" யோசித்து யோசித்து வாசந்திகாவின் மனம் குழப்பம் அடைந்தது.


நினைவே இல்லாத ஒருவனைக் காப்பாற்றுவது சிரமம்.நினைவு இருந்தால் அவனைத் தப்பி ஓடும்படி செய்துவிட்டுத் துணையாக இருந்திருக்கலாம். வலுவான கரங்களால் முரட்டுத்தனமாக அடிபட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் இவனைக் காப்பது எப்படி?  நம்மாலும் அவனைத் தூக்கிச் சென்று காப்பாற்றி அழைத்துச் செல்ல இயலாது. யாரேனும் ஒருவர் துணை வேண்டும். தீவிரமாக யோசித்தவளுக்கு அங்கிருந்த ஓடையின் சலசலப்புக் கேட்டது. உடனே அவள் இந்த ஓடை காவிரியில் கலப்பதால் இந்த ஓடையின் உதவியுடன் குலசேகரனை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என முடிவு செய்தாள். உடனே அங்குமிங்கும் சுற்றி அலைந்து மண்டபத்துச் சமையலறையில் இருந்து ஓர் பெரிய தாழியை எடுத்து வந்தாள். பரிசல் போல் வட்டமாகக் காணப்பட்ட அதை உருட்டிக் கொண்டே போய் ஓடைக்கரையில் ஓர் இடத்தில் நிறுத்தினாள்.

பின்னர் அறைக்குள்ளே சென்று குலசேகரனைத் தூக்கி நிறுத்தி அவன் தோள்மேல் கையைப் போட்டு நிற்க வைத்துத் தன்னுடன் அவனை நடக்க வைத்துக் கொண்டு சென்றாள்.  ஓடைக்கரையை அடைந்தவள் அந்தத் தாழிக்குள்ளாக அவனைப் படுக்க வைத்தாள். முதலில் தானும் இறங்க நினைத்தவள் பின்னர் என்ன காரணத்தாலோ மனதை மாற்றிக் கொண்டு குலசேகரனைத் தொட்டு வணங்கி அவன் பாதங்களில் தன் தலையை வைத்து வணங்கித் தாழியை மெல்ல ஓடை நீரில் செல்ல விட்டாள். தாழி முதலில் மெதுவாக நகர்ந்தது. பின்னர் நீரின் வேகம் அதிகரிக்கும் இடம் வந்ததும் நீரோட்டத்துடன் செல்ல ஆரம்பித்தது. சுற்றிச்சுற்றிக் கொண்டு அது வேகமாகச் சென்றது. வாசந்திகா அது காவிரியோடு கலக்கும் இடத்துக்குத் தான் செல்லும் என்பதை யூகித்துக் கொண்டு தன் மனதிற்குள் காவிரித் தாயைப் பிரார்த்தித்தாள். பத்திரமான கரையில் அவனை ஒதுக்கும்படி காவிரித்தாயை வேண்டினாள். நல்லவேளையாகக் காவலுக்கென வெளியே நின்று கொண்டிருந்த வீரர்கள் கண்களுக்கு அந்தத் தாழி படவில்லை. தாழி வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. 

Wednesday, November 28, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் சிறைப்பட்டான்!

குலசேகரன் எதிரே வந்து கொண்டிருந்த குழுவை உற்றுக் கவனித்தான்.  இரு பல்லக்குகள் வந்தன. அவற்றோடு நூறு வீரர்கள் பல்லக்குகளுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தனர். வீரர்கள் அனைவரும் துருக்கர்கள் அல்ல. பாதிப்பேர் துருக்கர்களாக இருக்கலாம். மற்றவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட தமிழர், கன்னடியர் ஆகியோர். அனைவருமாகப் பல்லக்குகளுக்குப் பாதுகாவலாக வருகிறார்கள் போலும். ஆனால் வருவது யார் எனத் தெரியவில்லை. சுல்தானின் ஆட்களில் யாரோ, எவரோ வடக்கே பயணப்படுகிறார்கள் எனத் தோன்றியது குலசேகரனுக்கு. இன்னும் சிறிது நேரத்தில் இந்தத் தங்கும் மண்டபத்துக்கு வந்து அவர்களும் தங்க வேண்டும். ஏனெனில் ஏற்கெனவே இருட்டி விட்டது. இனி பயணம் செய்ய மாட்டார்கள். இங்கே தங்கி விட்டு அதிகாலையில் பயணத்தைத் தொடரலாம்.

இங்கே வந்து அவர்கள் இங்குள்ள சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு விட்டால் என்ன செய்வது? இங்குள்ள செய்திப் பரிமாற்றம் செய்யும் வீரர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதையும் பார்த்தார்களானால் உடனடியாக மதுரைக்குத் தகவல் போய்விடும். பின்னர் நாம் போட்டிருக்கும் திட்டமெல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும். அதற்குள் நிலைமையைப்புரிந்து கொண்ட மற்ற வீரர்களும் குலசேகரன் அருகே வந்தனர். அவர்களில் ஒருவன், "ஸ்வாமி! நாம் மறைந்து கொள்வதே நல்லது. தாக்கினாலும் நேரிடையாகத் தாக்குவதை விட மறைந்திருந்து தாக்குவோம்!" என்றான். மற்றவர்களும் அதை ஆமோதிக்கக் குலசேகரன் கடைசியில் தாங்கள் அதிகம் பேர் இல்லை என்பதால் நேருக்கு நேர் மோதினால் தங்கள் பக்கமே அதிகம் பாதிப்பு ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே மற்ற வீரர்களிடம் மறைந்து தாக்குவதற்கு ஒத்துக் கொண்டான். மேலும் குதிரைகளை இங்கேயே விட்டு வைத்தால் அவர்களுக்குத் தெரிந்து விடும் என்பதால் அவற்றைப் பின்னால் கட்டிவிட்டு மறைந்து கொள்ளுமாறு கூறினான். குலசேகரன் மட்டும் அங்கேயே தங்கி நடப்பனவற்றைப் பார்த்து சமயத்துக்கு ஏற்றாற்போல் எச்சரிக்கைக் குரல் கொடுத்ததும் தாக்க ஆரம்பிக்கலாம் என்றும் கூறினான்.

அதன்படி அனைவருமாகச் சேர்ந்து இறந்த வீரர்களின் உடல்களைக் கிணற்றில் தள்ளினார்கள். சுற்றிலும் காணப்பட்ட உயரமான மரங்கள் மீது சிலரும், தங்கும் மண்டபத்தின் பரண், கூரை போன்றவற்றில் சிலரும் ஏறி மறைந்து கொண்டனர். குதிரைக்கொட்டடியில் சிலர் ஆயத்தமான நிலையில் மறைந்து கொண்டனர். குலசேகரன் மட்டும் ஓர் வழிப்போக்கன் போல் அங்கேயே நின்றிருந்தான். மெல்ல மெல்லக் கூட்டம் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. பல்லக்குகள் மண்டபத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த பெண்கள் இறங்கி நேரே மண்டபத்தினுள் நுழைந்து கொண்டார்கள். மற்றவர்கள் அங்கிருந்த மண்பானைகளின் நீரை எடுத்து தாகசாந்தி செய்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அந்த கோஷ்டி வீரர்களின் தலைவனாகக் காணப்பட்டவன் அங்கே சுல்தானிய வீரர்களின் உடையில் இருந்த குலசேகரனிடம் போய்ச் சில வார்த்தைகள் பேசினான். பின்னர் மண்டபத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டு இளைப்பாற ஆரம்பித்தான்.

அனைவருமே ஆயுதங்களை எடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட குலசேகரன் இதுதான் சரியான தருணம் என நினைத்து, "ஹோ! ஹோ!" என்று கூக்குரலிட்டான். ஒளிந்திருந்த வீரர்கள் அனைவரும் ஓடோடி வந்து வீராவேசமாய் கோஷங்களை முழக்கிக் கொண்டு எதிரிகள் மேல் பாய்ந்தார்கள். சட் சட்டென்று சுல்தானிய வீரர்கள் சிலர் கீழே விழுந்து மடிந்தனர். முதலில் திகைத்த சுல்தானிய வீரர்கள் சடுதியில் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாங்களும் தாக்க ஆரம்பித்தனர்.  வாள்களும், கத்திகளும் ஒன்றோடொன்று உராயும் சப்தம் பலமாகக் கேட்டது. பயங்கரமான யுத்தம் நடந்தது.  சுல்தானிய வீரர்கள் வெறியுடன் தாக்கினார்கள். ஆகவே ஆரம்பத்தில் சுல்தானிய வீரர்கள் பலர் இறந்தாலும் யுத்தம் முடிவடையும்போது முற்றிலும் நிலைமை மாறி விட்டது. ஹொய்சள வீரர்கள் பனிரண்டு பேர் இறந்துவிட மீதி எட்டுப்பேரையும் குலசேகரனோடு சேர்த்து சுல்தானிய வீரர்கள் சிறைப்பிடித்தார்கள். அவர்கள் கையையும் காலையும் கட்டிப்போட்டு ஓர் அறையில் அடைத்தனர். அவர்களைக் காலையில் கண்ணனூர் அரண்மனையில் தளபதிக்கு முன்னால் நிறுத்தித் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் நடந்தது வேறே!

அந்தத் தங்குமிடத்தில் இருந்து கண்ணனூர் நோக்கிப் பயணப்பட்ட அந்தக் குழுவில் சுல்தானிய ராணி ஒருத்தியும் அவளுக்குச் சேடிகளான மூவரும் பயணித்து வந்தார்கள். அவர்களுக்கு யாரோ எதிரிகள் தாக்கியதும் சுல்தானின் வீரர்கள் அவர்களை முறியடித்துச் சிறைப்படுத்தியது வரை தான் தெரியும். மறுநாள் பயணம் மேலே தொடர்ந்தது. அன்று மாலைக்குள்ளாக அவர்கள் கடந்த இரண்டு தங்குமிடங்களிலும் செய்திப் பரிமாற்றம் செய்யும் வீரர்கள் இறந்து கிடப்பதைக்கண்டனர் சுல்தானிய வீரர்கள். இத்தகைய கொடிய செயலைச் செய்தது குலசேகரனும் அவன் தலைமையில் வந்த வீரர்களும் தான் என்பதைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு வெகு நேரம் ஆகவில்லை. ஆகவே சுல்தானிய வீரர்களின் தலைவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. ஆத்திரப்பட்ட அவன் சிறைப்பிடித்த வீரர்களைக் கீழே தள்ளி மண்ணில் புரட்டித் தள்ளி அவர்களைச் சவுக்குகள் அல்லது விளாறுகளால் அடித்துத் துன்புறுத்தும்படி ஆணையிட்டான்.

அவ்வாறே அந்த வீரர்கள் குலசேகரனையும் எஞ்சி இருந்த ஹொய்சள வீரர்களையும் கீழே தள்ளிப் புரட்டிப் போட்டு விட்டு விளாறுகளால் கண்மண் தெரியாதபடி அடித்து விளாசினார்கள். வெகு விரைவில் அவர்கள் அனைவரும் குற்றுயிரும் குலை உயிருமாக ஆனார்கள். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரோ, உண்ண உணவோ கொடுக்கப்படவில்லை. அப்படியே விழுந்து கிடந்தார்கள். மறுநாள் காலையில் அவர்களை மீண்டும் குதிரைகளில் தூக்கிப் போட்டுக் கட்டி விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அன்று இருட்டும் நேரம் ஆனபோது அவர்கள் காவிரிக்கரையை அடந்திருந்தனர். அன்றிரவை அங்கே கழிக்க எண்ணம் கொண்டனர். அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த தங்குமிடமும் நல்ல விஸ்தாரமாகக் காணப்பட்டது. அங்கே ஓர் அறைக்குள் குலசேகரனையும் மற்ற வீரர்களையும் அடைத்தார்கள். அந்த வீரர்கள் அனைவருக்குமே நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே குலசேகரன் குரல் மட்டும், "ஹேமலேகா! ஹேமலேகா!" என்று புலம்பிக் கொண்டிருந்தது வெளியே இருந்தவர்களுக்குக் கேட்டது. 

Monday, November 26, 2018

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! பயணத்தில் குலசேகரன்

தெற்கே பயணப்பட்ட குலசேகரன் தான் முதலில் செய்ய வேண்டியது செய்திப்பரிமாற்றங்கள் செய்ய வசதியாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் வீரர்களை அழிப்பது தான் என்பதை உணர்ந்திருந்தான். இவர்கள் இருபக்கங்களிலும் சில காத தூரங்களுக்கு இருவர் என்னும் வரிசையில் நியமிக்கப்பட்டிருந்தனர். கண்ணனூர் அரண்மனைச் செய்தி எனில் அரண்மனைத் தூதுவர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் செய்திப் பரிமாற்றச் சேவகர்களிடம் அரண்மனைச் செய்தியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் செய்தியை எங்கே கொண்டு செல்லவேண்டும் எனக் கண்டு கொண்டு அந்த ஊருக்கு அருகே இருக்கும் வீரர்களிடம் அந்தச் செய்தியைச் சமர்ப்பிப்பார்கள். இப்படியே செய்திப் பரிமாற்றம் நடந்து கடைசியில் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும். இதை எப்படியேனும் தடுத்து கண்ணனூரில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கண்ணனூர், மற்ற இடங்களுக்கும் செய்திகள் போய்ச் சேராவண்ணம் பார்த்துக் கொள்வதே தன் முக்கிய வேலை என்பதை உணர்ந்து குலசேகரன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

இந்தச் செய்தி சுமப்போர் வசதியாகத் தங்குவதற்காக ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி விடப்பட்டு குடிநீருக்காகக் கிணறுகளும் வெட்டப்பட்டிருந்தன. இதை எல்லாம் யோசித்தவண்ணம் சில காத தூரம் பயணித்து வந்த குலசேகரன் தான் கிளம்பிய பின்னர் வந்த முதல் செய்தி சுமப்போர் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்குள்ள இரு வீரர்கள் அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர்களை அழிப்பது இவர்களுக்கு எளிதாக இருந்தது. இதன் பின்னர் அடுத்த தங்குமிடம், மூன்றாம் தங்குமிடம் எனத் தொடர்ந்து சென்று அழித்தனர். யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமையால் அழிப்பது எளிதாகவே இருந்தது. ஆனாலும் குலசேகரனுக்குள்ளே இந்தத் தாக்குதல் மூலம் தான் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது என ஒரு குரல் கூறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் இது அவசியமான ஒன்றே என்பதால் வேறு வழியின்றித் தொடர்ந்தான். அன்று இரவுக்குள் இம்மாதிரித் தங்குமிடங்களில் எட்டு தங்குமிடங்களையும் அவற்றில் தங்கி இருந்த செய்தி சுமப்போரையும் கொன்று தீர்த்தார்கள் குலசேகரனும் அவனுடன் வந்தவர்களும்.

ஒவ்வொரு வீரர்களும் வைத்திருந்த குதிரைகளும் அவர்களோடு சேர்க்கப்பட்டுக் குதிரைகள் நிறைய ஆகி விட்டன. இருட்டும் முன்னர் கடைசியாக வந்த இடத்தில் இருந்த இருவரைக் கொன்று அங்கிருந்த கிணற்றில் இருந்து நீர் இறைத்து தாகசாந்தி செய்து கொண்டனர் அனைவரும். சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறலாம் என நினைக்கையில் திடீரென தடதடவெனப் பலர் வரும் சப்தம். இருக்க இருக்கப் பெரிதாகக் கேட்டது. உற்றுக் கேட்டவர்களுக்குக் குதிரை வீரர்கள் வரும் சப்தம், கால்நடையாகவே மனிதர்கள் வரும் சப்தம் எனக் கலந்து கேட்டது. அப்போது உடன் வந்த வீரர்களில் சிலர் வருவது யாராக  இருக்கும் எனக் கவனித்துவிட்டு, குலசேகரனிடம் ஓடி வந்து, "ஐயா, எதிரிகள் போல் தெரிகிறது!" என்றனர். உடனே அனைவரும் எச்சரிக்கையோடு தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு குதிரைகள் மீதும் ஏறிக் கொண்டனர்.

வருபவர்கள் எத்தனை பேர் எனத் தெரியாததால் எதிர்ப்பதா வேண்டாமா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தவர்களுக்கு இங்கிருந்து இப்போதைக்குத் தப்புவதே சரி எனத் தோன்றியது. அப்போது ஒருவன் குதிரைகள் மீது தப்பி ஓடினால் சப்தம் மூலம் தங்களைக் கண்டு பிடித்துப் பின் தொடர்ந்து தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் குதிரைகளை அப்படியே விட்டு விட்டுப் போகலாம் என்று சொன்னான். குலசேகரன் எதற்கும் இணங்காமல் எதிரிகள் வரும் திசையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.சற்று நேரத்தில் அவர்கள் குழு கண்களுக்குப் புலன் ஆனது.

Sunday, November 25, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவுக்கு நேர்ந்தது!

ஹேமலேகா தொடர்ந்தாள். அவன் சென்றதும் நடந்தவற்றை விவரித்தாள். அவள் கூறியதாவது:-

"ஸ்வாமி! திருவண்ணாமலையில் கிருஷ்ணாயியின் அந்தப்புரத்தில் ராணி வாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகவே கழிந்து கொண்டிருந்தது. இங்கிருந்து எப்படியேனும் வெளியேறினால் போதும் என்று இருந்தேன். இந்த நாட்டை விட்டுத் தெற்கே எங்கே சென்றாலும் துருக்கர்கள் தொந்திரவு இல்லாமல் இல்லை. ஆகையால் என் பிறந்த ஊரான ஜம்புகேஸ்வரத்துக்குச் செல்ல நினைத்தேன். ஆனால் அங்கே போனால் ஊரே பாழாகி விட்டிருந்தது. அதன் பின்னரே இந்த அழகிய மணவாளம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அநாதையும் இளம்பெண்ணுமான நான் எவ்வாறு தனித்துக் குடி இருப்பேன்? அதுவும் கண்ணனூரில் தங்கி இருந்த தில்லித் தளபதி திருமணம் ஆகாத கன்னிப் பெண்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துத் தன் ஆசைக்கு உட்படுத்திக் கொள்கிறான் என்பதையும் நன்கு அறிந்திருந்தேன். அப்போது சிங்கப்பிரானுக்கும் மற்றப் பெரியோர்களுக்கும் நான் வந்திருப்பது தெரிந்தது. உடனே என்னிடம் வந்து யாரையானும் மணந்து கொண்டால் நீ தப்பிக்கலாம். இல்லை எனில் சுல்தானின் தளபதி உன்னைக் கவர்ந்து வரச் சொல்லிவிடுவான் என எச்சரித்தனர்."

"என் மனதிலோ ஆயிரம் ஆயிரம் கனவுகள்! யாரேனும் என் வயதுக்கேற்ற இளைஞனை மணந்தால் அத்தகைய கனவுகளுக்குப் பாதகம் உண்டாகிவிடுமோ எனக் கவலைப் பட்டேன். அதே சமயம் என் கனவுகளை எல்லாம் கலைத்துக் கொண்டு ஓர் இளைஞனுக்கு வாழ்க்கைப்பட்டு என்னை நானே ஒப்புக் கொடுக்கவும் மனம் வரவில்லை. ஆகவே வயதான ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என நினைத்த போது இவரைப் பற்றி அறிய வந்தது. அதுவும் இரு கண்களும் குருடு என்பதும் எனக்கு வசதியாக இருந்தது. இல்லை எனில் என் அழகைப் பார்த்துவிட்டு இவரும் தடுமாறினார் எனில்! என்ன செய்வது ஸ்வாமி! கடவுள் எனக்கு அளித்திருக்கும் மனமாகிய வரப் பிரசாதத்தில் தோன்றிய, தோன்றிக்கொண்டிருக்கும் என் கனவுகளை நான் எப்படி அழிப்பது? அவற்றின் மூலம் நான் மாளிகை கூடக் கட்டுகிறேன். கோயில்கள், பிருந்தாவனங்கள் கட்டுகிறேன். அவற்றில் ஆனந்தமாக ஆடிப்பாடி உலாத்துகிறேன். யார் தடை சொல்ல இயலும்! ஆனால் இவை எதையும் இன்று வரை நான் வெளியே சொன்னதில்லை ஸ்வாமி! வெளிப்பார்வைக்கு நான் ஓர் எழுபது வயதுக் கிழவரின் மனைவி! ஆனால் என் மனதுக்குள்ளே நான் அதற்குரிய கனவுகளோடும் ஆசைகளோடும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணங்களோடு வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இத்தகைய இரட்டை வாழ்க்கையை எவரும் இன்று வரை அறிந்ததில்லை ஸ்வாமி! இன்று தான் முதல் முறையாக உங்களிடம் கூறுகிறேன்."

குலசேகரன் மனம் உருகியது. அவளுக்காக அவன் மனம் நெகிழ்ந்து கொடுத்தது. ஆனால் சுதந்திரமாக இருந்து இவள் எதையும் சாதிக்கவில்லையே! நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு எவரையோ திருமணம் அல்லவா செய்து கொள்ள நேர்ந்திருக்கிறது! அதை விட இவள் ராணி வாசத்திலேயே இருந்திருக்கலாமோ!  இந்த எண்ணங்கள் குலசேகரன் மனதில் விரைவாக ஓடி மறைந்தன. ஆனால் அவன் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஹேமலேகாவை சமாதானம் செய்தான். அவளும் அவனை சமாதானம் செய்தாள். பின்னர் ஹேமலேகா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளம் கிராமத்துக்கு அடிக்கடி வந்து தன்னைப் பார்க்குமாறு குலசேகரனிடம் கேட்டுவிட்டு எழுந்து குடத்தில் நீர் எடுத்துக் கொண்டு கரையின் மேல் ஏறிச் சென்றாள்.

அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த குலசேகரன் சிறிது நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சிங்கப்பிரானின் வீட்டை நோக்கி நடந்தான்.  சிங்கப்பிரான் அவனைப் பார்த்து மகிழ்ந்தார். தான் அறிந்தவரை சுல்தானிய ராஜ்யத்தின் நிலை பற்றியும் கண்ணனூர்க் கோட்டையில் இருக்கும் தளபதி பற்றியும் விபரங்களைச் சொன்னார்.  ஹொய்சள மன்னர் சொன்னபடி மதுரையிலிருந்து  கண்ணனூருக்கோ கண்ணனூரில் இருந்து மதுரைக்கோ செய்திகள் போகாமல் தடுத்து விட்டால் பின்னர் வெற்றி நிச்சயம் என்று உறுதிபடக் கூறினார். அவருடைய ஆசிகளுடன் அங்கிருந்து கிளம்பிய குலசேகரன் தன்னுடன் வந்த 20 ஹொய்சள வீரர்களையும் அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

Thursday, November 22, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவின் துன்பம்!

குலசேகரனைப்பார்த்து, "ஸ்வாமி! என அழைத்த ஹேமலேகா கொஞ்ச நேரம் ஏதும் பேச முடியாமல் தவித்தாள். பின்னர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஸ்வாமி, உலகிலுள்ள அறிவை எல்லாம் ஒன்றாக்கித் திரட்டியதற்கு "மகத்" என்னும் பெயர் இருப்பதைப் போல் இவ்வுலகிலுள்ள துக்கங்களையெல்லாம் கூட்டினால் அதன் பெயர் என்ன? இப்போது நாம் இருவரும் அனுபவிப்பத்து அத்தகையதொரு துன்பமே!" என்று கண்ணீர் விட்டாள். குலசேகரன் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. மேலும் ஹேமலேகா மனம் விட்டுப் பேசலானாள். "ஸ்வாமி, நம்மிருவர் துன்பமும் ஒரே வகையானதே! ஒருவருக்கொருவர் நாம் தான் ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும். எனக்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் ஸ்வாமி!" என்று சொல்லிவிட்டு உடல் குலுங்க அழுதாள்.

அவள் வெளிப்படையாகச் சொல்வதைக் கேட்டுக் கொஞ்சம் அதிர்ந்தான் குலசேகரன். "ஹேமூ! ஹேமூ!" என்று தடுமாறியவன், "உங்கள் வார்த்தைகள் என் நெஞ்சைத் தொட்டதோடு அல்லாமல் கலக்கியும் விட்டது ஹேமு. நான் என்ன செய்வேன்! உங்களுடன் சிறிது காலமே பழகி இருந்தாலும் எத்தனையோ ஜென்மங்களாக இருந்து வந்த உறவின் மிச்சமே என்றே எனக்குத் தோன்றியது; இப்போதும் தோன்றுகிறது! என் மனம் முழுவதும் அறிந்தவாறே நீங்கள் பேசுவது எனக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம்  இதில் என்ன ஆச்சரியம் என்னும் எண்ணமும் தோன்றுகிறது." என்றான்.

"ஸ்வாமி! வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பாராமல் ஆனால் இன்னொருவரைப் பற்றிக் கேள்வி ஞானம் மூலம் தெரிந்து வைத்துக் கொண்டு இருவரும் ஒரே நினைவாக இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் நீண்ட நாட்கள் பழகினாற்போல் ஆகிவிடுகிறார்கள். நாமும் அப்படித் தானே ஸ்வாமி! இந்தப் பத்துவருடப் பிரிவினால் நம் அந்நியோன்னியத்தைப் பிரிக்க முடியாது ஸ்வாமி!தங்கள் மனம் நான் அறிவேன்! என்னைப் பற்றிய சிந்தனைகளை உங்களால் தவிர்க்க இயலாது! அதே போல் தான் ஸ்வாமி எனக்கும்!  இந்த நினைவு தான் ஆதார சுருதியாக, ஜீவ கீதமாக வெகு இனிமையாய் சுகமாய் மனதுக்கு இதமாய் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதில் இந்தப் பத்துவருடக் கால இடைவெளி என்பது ஒன்றுமே இல்லை. நாம் எங்கே பிரிந்தோம்! இல்லை, ஸ்வாமி, இல்லை! ஒரு காரியமாக வெளியே சென்றிருப்பவர் மறுநாளே வீட்டுக்கு வருவதைப்போல் தான் இருந்தது எனக்கு!" என்றாள்.

குலசேகரனுக்கு அவள் பேசும் விதம்மிகவும் பிடித்திருந்தது.  அவள் பேச்சைக் கண்களை மூடியவண்ணம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவன் உள்ளத்தில் இவள் தன்னை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாளா என்னும் சந்தேகம். அவளைப் பார்த்து, "ஹேமு! உங்களுக்கு எப்படித் தெரியும் என் மனதிலும் உன் மனதிலும் ஓடியது ஒரே நினைவு தான் என! அதை எப்படி ஊகித்து அறிந்தீர்களா?" என்று கேட்டான். "ஸ்வாமி! ஊகம் செய்ய வேண்டுமா என்ன?  சூரியனைக் கண்டு தாமரை மலர்வதைப் போல் சந்திரனைக் கண்டு சக்ரவாகப் பக்ஷி தத்தளிப்பது போல், மழை மேகங்களைக் கண்டு மயில்கள் ஆடுவது போல் இதெல்லாம் இயற்கை ஸ்வாமி! அதோடு இல்லாமல் என்னைப் பார்க்கும் தோறும் விகசிக்கும் உங்கள் முகம்! கனிவு ததும்பும் கண்கள்!இங்குமங்கும் அலை பாயும் பார்வுகள். மௌனமான உங்கள் தவிப்பு! இவை போதாதா உங்களை அறிய!" என்றாள்.

"ஹேமூ! ஹேமூ! என் உள்ளத்தின் தாபங்களை எல்லாம் நீ அறிந்து கொண்டு விட்டாயா?" குலசேகரன் அறியாமல் அவளை ஒருமையில் அழைக்கத் தொடங்கி விட்டான். "ஸ்வாமி! என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனில் வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்!" என்ற வண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கண்களில் காதல் ததும்பி வழிந்தது. "ஆம், ஹேமூ! ஆம், என் மனதில் நீண்ட நெடுங்காலமாக நிலைத்து நிற்கும் கனவு இது! அதை நீ புரிந்து கொண்டாய் அல்லவா?  இது போதும் எனக்கு!" என்றான்.  ஹேமலதா அதற்கு சம்ஸ்கிருதக் காவியங்களிலும் அவற்றின் உள்ளார்ந்த பொருட்சுவையிலும் ஊறிய தனக்குப் புரியாமல் போகுமா எனக் கேட்டாள். ஆனால் குலசேகரன் அப்போது உடல் எங்கும் நடுக்கம் கண்டது. உணர்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டே, "ஹேமலேகா, அப்படி எனில், அப்படி எனில், ஏன் இந்த விஷப் பரிக்ஷை? இது எவ்வளவு தூரம் உண்மை?" என்று கேட்டான்."எது ஸ்வாமி?"  என ஹேமலேகா கேட்க, "உன் இல்லற வாழ்வு!" என்றான் குலசேகரன் பெரும் துக்கத்துடன். அப்போது ஹேமலேகா அடுத்த இடியை அவன் மேல் இறக்கினாள். "ஸ்வாமி! இந்த நாட்டுக்கு ஏற்பட்ட விபத்து என் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது!" என்றாள்.

Wednesday, November 21, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரனின் கண்ணீர்!

ஹேமலேகா தன் கணவர் என அந்த வயதானவரைப் பார்த்துச் சொன்னதற்கே திடுக்கிட்ட குலசேகரன் அடுத்து அறிந்தது அவருக்கு இரு கண்களும் தெரியாது என்பது தான். எனினும் அவர் அவனை முகமலர்ந்து வரவேற்றதோடு எங்கிருந்து வருகிறீர்கள் எனவும் விசாரித்தார். மேலும் ஹேமலேகாவிடம் அதிதிக்கு உணவு அளிக்கும்படியும் கூறினார். குலசேகரன் மனதில் துக்கம் கனன்று கொண்டிருந்தது. கிருஷ்ணாயி மேல் அவன் கொண்டிருந்த வெறுப்பு அதிகரித்தது. எப்படிப் பட்ட பெண்! இப்படி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் எனில் என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லையே! மனம் உருகினான் குலசேகரன். அதற்குள்ளாக அவர் அவனைக் கை, கால் கழுவிக்கொண்டு சாப்பிட வரும்படி அழைக்கக் குலசேகரனும் தான் ஹொய்சள நாட்டில் இருந்து வருவதாய்க் கூறிவிட்டுத் தெற்கே ஓர் அவசர வேலையாகச் செல்வதாயும் கூறிவிட்டுக் கை, கால் கழுவிக்கொள்ளச் சென்றான்.

திரும்பி வரும்போது ஹேமலேகா ஒரு வாழை இலையில் வெள்ளை வெளேர் என்ற அன்னத்தை இட்டுக் கையில் ஓர் பாத்திரத்தில் தயிரும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். குலசேகரன் இலைக்கு முன் அமர்ந்து கொண்டு ஹேமலேகா செய்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. அவனின் மௌன சோகத்தைக் கண்ட ஹேமலேகா குறிப்பால் அவனைச் சமாதானம் செய்தாள். குலசேகரன் சமாளித்துக் கொண்டு பெயருக்கு உணவு உண்டு முடித்தான். பின்னர் பெரியவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் சினேகிதர்களோடு தெற்கே செல்ல வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டு வாசலுக்குப் போனான். அவனை வழி அனுப்பி வைக்க வந்த ஹேமலேகா அங்கேயே நின்ற வண்ணம் அவன் செல்வதையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச தூரம் வந்த குலசேகரன் துக்கம் தாங்க முடியாமல் அங்கிருந்த ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டான். வாழ்க்கையில் பற்றே வைக்காமல் வாழ நினைத்தும் முடியாமல் ஹேமலேகா மேல் மட்டும் இத்தனை பற்று வைத்துவிட்டுத் தவிக்கிறானே! தன்னை நினைந்து நினைந்து மனம் நொந்தான் குலசேகரன். ஹேமலேகா மேல் தான் கொண்டிருந்த பற்றுதலைக் குலசேகரன் மேல் அவளும் வைத்திருந்தால்! இப்படி ஓர் திருமணமே செய்து கொள்ளாமல் தனக்காகக் காத்திருக்கலாமே! அவளுக்கு என் மேல் எவ்விதமான ஆசையும் இருந்ததில்லை. நான் தான் அவள் மேல் ஆசைப்பட்டிருக்கிறேன். ஒரு கிழவனைப் போய்த் திருமணம் செய்து கொண்டு விட்டாளே! இது என்ன நியாயம்?

ஆனால் அவள் எந்தச் சூழ்நிலையில் இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டாளோ! தவிரத் தான் திருவண்ணாமலையை விட்டுக் கிருஷ்ணாயியின் கொடுமையிலிருந்து விலகிச் சென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டன. பத்து வருடங்கள் ஒருத்தி தனக்காகக் காத்திருக்க முடியுமா? அதுவும் அழகும், அறிவும் வாய்ந்த பெண். அவளைக் குறை ஏதும் சொல்வதற்கில்லை! அவள் செய்தது சரியே! இவ்விதமெல்லாம் யோசித்துத் தன்னைச் சமாதானப் படுத்க்டிக் கொண்ட குலசேகரன் அப்படியே படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்தான். அவன் மனம் கட்டுக்கு அடங்காமல் தவித்தது.

காலையில் எழுந்தவனுக்கு எந்த வேலையும் செய்யத் தோன்றவில்லை. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டு படுத்திருந்ததால் தூக்கம் இல்லாமல் கண்கள் எரிச்சல் அடைந்திருந்தன. அவன் சிங்கப்பிரானைத் தான் பார்க்க வந்திருந்தான். எதிர்பாராதவிதமாக ஹேமலேகாவைக் கண்டதில் அவன் மனம் எதிலும் பதியவில்லை. சிங்கப்பிரானைப் பார்க்கவும் மனம் இல்லாமல் கொள்ளிடக்கரையை நோக்கி நடந்தான். கீழ்வானம் அப்போது தான் சிவப்பு வண்ணச் சிதறல்களைக் காட்டிக் கொண்டிருக்கக் காவிரியின் நீரிலும் அவை பிரதிபலித்து ஓர் அழகான காலைப் பொழுது உதயம் ஆகிவிட்டதைக் காட்டியது. இது எதிலும் மனம் செல்லாமல் அங்கிருந்த ஓர் பாறை மேல் ஏறி அமர்ந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தான் குலசேகரன். அப்போது அவனை ஹேமலேகா அழைப்பது போல் தோன்றத் திடுக்கிட்டுத் திரும்பியவனுக்கு உண்மையகாவே ஹேமலேகா அவனை அழைத்தவண்ணம் குடத்தை ஏந்திக் கொண்டு வருவதைப் பார்த்தான்.

தலையைக் குனிந்து கொண்ட அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்து விட்டு, "ஸ்வாமி, ஏன் சோகம்? என்ன ஆயிற்று?" என்று வினவினாள். முதலில் பதில் ஏதும் சொல்லாத குலசேகரன் பின்னர் அவளிடம், "ஒன்றா, இரண்டா, எதைச் சொல்ல, எதை விட!" என்று பதில் கொடுத்தான். அவள்,"என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்." என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த குலசேகரனுக்கு அவள் கண்களில் தென்பட்ட ஓர் இருளும் அதன் மூலம் ஏதோ ஓர் மர்மத்தை அவள் ஒளித்து வைத்திருப்பதாகவும் தோன்ற அவளைப் பார்த்து, "ஹேமு!" என அழைக்க அவளும் கம்மிய குரலில், "ஸ்வாமி!" என்று அழைத்தாள்.

Monday, November 19, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹொய்சள இளவரசன் என்னும் பெயரில் இருந்த ராஜவர்த்தன குலசேகரன் கைகளால் வாளைப் பெற்றுக் கொண்ட குலசேகரன் ஆழ்ந்த சிந்தனையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான் அவனுடன் சுமார் இருபது ஹொய்சள வீரர்கள் மாறு வேடத்தில் தொடர்ந்தார்கள். ராணி கிருஷ்ணாயியுடனான தன்னுடைய உறவின் காரணத்தால் தான் திருமணம் ஆகாமலே பெற்றுக் கொண்ட பிள்ளையை நினைந்து ஒரு கணம் குலசேகரன் மனம் சிலிர்த்தாலும் பாசத்தையும் மீறிய வெறுப்பே மேலோங்கியது! ஆனால் அதற்கு அந்தக் குமாரன் என்ன செய்வான்? தான் மட்டும் இணங்கவில்லை எனில் ஹேமலேகா ராணி வாசத்திலேயே வாழ்வதோடு அல்லாமல் விரைவில் மடிந்தும் போயிருப்பாள். ஓர் அழகிய மலர் வெளி உலகைக் காணாமலேயே கருகிப் போய் இருந்திருக்கும். தன்னுடைய இந்தச் செயலால் ஹேமலேகா காப்பாற்றப்பட்டாள் என்பதை நினைத்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான் குலசேகரன். தொடர்ந்து அவர்கள் ஐந்து தினங்கள் ஹொய்சள நாட்டுக்குள்ளேயே பயணம் செய்ததால் வழியில் எவ்விதமான பிரச்னையும் இல்லை. அதன் பின்னர் சுல்தானின் எல்லைக்குள் அவர்கள் நுழைந்தனர்.

மதுரைக்குத் தெற்கே ஆரம்பித்திருந்த சுல்தானிய அரசு வடக்கே கண்ணனூரைத் தாண்டிப் பல காத தூரம் வியாபித்திருந்தது. இந்தக் கண்ணனூர் தான் இப்போது சமயபுரம் என அழைக்கப்படுகிறது. சுல்தானின் எல்லைக்குள் நுழைந்ததும் நேர் வழியில் செல்லாமல் சுற்று வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். நுழைந்த மூன்றாம் நாள் வட காவிரி என அழைக்கப்பட்டக் கொள்ளிடக் கரையை அடைந்தார்கள். பகலெல்லாம் மறைந்திருந்து ஓர் அடர்ந்த சோலைக்குள் தங்கியவர்கள் இரவானதும் "அழகிய மணவாளம்" என்னும் கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் தோட்டங்களை அடைந்ததும் மற்ற வீரர்கள் ஏற்கெனவே பேசி இருந்தபடி தங்கள் குதிரைகளை இளைப்பாறக் கட்டிவிட்டு அவர்களும் அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தனர். குலசேகரன் மட்டும் தன் குதிரையைக் கட்டி விட்டு நடந்தே கிராமத்துக்குள் செல்லலானான். நிலவொளி பாலாய்க் கொட்டி வழி தேடச் சிரமம் இல்லாமல் இருந்தது. அதன் குளுமையில் நனைந்த வண்ணம் சென்ற குலசேகரன் செவிகளில் இனிமையான நாதம் கேட்டது. அது எங்கே என்று கண்டறிந்து கொண்டு அந்தத் திசை நோக்கிச் சென்றவன் ஓர் வீட்டின் வாசலை அடைந்தான். உள்ளிருந்து யாழின் இன்னிசை பிரவாகமாய்க் கிளம்பி எங்கும் வியாபித்தது. அந்த யாழிசையைத் தான் முன்னர் எப்போதே கேட்டமாதிரி இருப்பதாகக் குலசேகரன் ஊகித்தான். உடனே பரபரப்புடன் அந்த வீட்டின் முகப்பின் அருகே இருந்த சாளரத்தின் அருகே சென்று உள்ளே உற்று நோக்கினான்.

அவன் கண்களுக்கு உள்ளே மங்கலாகத் தெரிந்த வெளிச்சம் தவிர ஆள் நடமாட்டம் தெரியவில்லை. ஆகவே கதவருகே சென்று கதவைத் தட்டினான். உள்ளிருந்து ,"யார்?" என்று ஒரு குரல் கேட்டது. அடுத்த கணம் வாயில் கதவு திறக்கப்பட்டுக் கையில் ஓர் அகல் விளக்குடன் மெல்லிய உடலுடைய ஓர் பெண் நின்றாள். விளக்கின் ஒளியில் அவள் மேனி எல்லாம் தங்கமாய்த் தகதகத்தது. அவள் கண்கள் அந்த அகல்விளக்குகள் போலவே சுடர் விட்டுப் பிரகாசித்தது. குலசேகரனுக்கும் அவள் யார் எனப் புரிந்து விட்டது. "நீங்களா" எனக் கேட்டவண்ணம் அவனைப் பார்த்த ஹேமலேகாவின் கைகள் அகல்களைப் பிடிக்க முடியாமல் நடுங்கின. அவளை ஆவலுடன் பார்த்த குலசேகரன், "ஹேமலேகா" என ஆவலுடன் அழைத்தான். அவள் தலை நிமிராமல், "சௌக்கியமா?" எனக் கேட்டாள். அப்போது உள்ளிருந்து ஓர் குரல், "வெளியே யார் வந்திருக்கிறார்கள்? ஹேமு, உள்ளே அழைத்து வா!" என்றது. அந்தக் குரல் கேட்டுத் திடுக்கிட்டான் குலசேகரன். ஹேமலேகா அவனை உள்ளே வரும்படி அழைத்தாள். உள்ளே சென்ற குலசேகரன் அந்த வீட்டின் எளிமையைப் பார்த்து வியந்தான். அங்கே படுத்திருந்த ஓர் வயோதிகர் மெல்ல எழுந்திருந்தார். ஹேமலேகா அவனிடம் "இவர் என் கணவர்" என அறிமுகம் செய்து வைத்தாள். அவருக்கு எழுபது வயது இருக்கலாம். குலசேகரன் திடுக்கிட்டு நின்று விட்டான். 

Saturday, November 17, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! குலசேகரன் துயரம்!

ஒரு பெருமூச்சுடன் தன்னை அடக்கிக் கொண்டான் குலசேகரன். அவனுக்கு உண்மை புரிந்து ஒரு பக்கம் தன் மகன் என்னும் பாசம் வந்தாலும் ஆழ் மனதின் வெறுப்பே மேலே தலை தூக்கியது. தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாள் கிருஷ்ணாயி என்பதை அவனால் மறக்கவே முடியவில்லை. எதுவும் பேசாமல் சத்திரத்துக்குத் திரும்பிப் படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்பக் கிருஷ்ணாயியின் மகன் முகமே அவன் நினைவில் வந்தது. அவனைப் பார்க்கும் எவருக்கும் அந்தச் சிறுவனைப் பிடித்து விடும். அவ்வளவு சுறுசுறுப்பும் துடிதுடிப்பும். ஆனால் இது என்ன முறைப்படியாகப் பிறந்த குழந்தையா? அவனைக் கிருஷ்ணாயி பயமுறுத்தி மிரட்டி ஹேமலேகாவின் உயிரைப் பலி வாங்குவதாகச் சொல்லி அல்லவோ அவனைச் சம்மதிக்க வைத்தாள். அவள் பிறந்த துளுவ நாட்டில் இது பழக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில்! அதுவும் என்னை எப்படியேனும் அடையவேண்டி அவள் செய்த சாகசங்கள்!

ஹேமலேகாவை எப்படி எல்லாம் வஞ்சித்திருக்கிறாள். அவள் அழகு, இளமை அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு அன்றோ இந்தக் குமாரனை அவள் பெற்றெடுத்திருக்கிறாள். அவளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? இன்னொருவன் மனைவியைத் தான் தொட்டுக் கொஞ்சி, அந்த இறைவனுக்கும் கண்ணில்லாமல் போயிற்றே! நான் எவ்வளவு பெரிய பாவியாகி விட்டேன். இப்படி எல்லாம் யோசித்துத் தன்னை மறந்த நிலையில் இருந்த குலசேகரன் காதுகளில் ஹேமலேகா அழைப்பது போன்ற மயக்கம் ஏற்பட்டது. அவள் இங்கே இல்லை. அவள் அழைக்கவில்லை. ஆனாலும் அவன் மனம் அவளையே நினைத்தது. எவ்வளவு ஆதுரத்துடன் தன்னைக் கனிவு பொங்கப் பார்ப்பாள். அவள் அழகிய புன்னகை சிந்தும் முகம் அவன் கண்ணெதிரே தோன்றியது. இவ்வுலகில் ஹேமலேகாவின் முகமும் குரலும் மட்டுமே அவனுக்குள் இன்பத்தைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் இன்றோ!

ஹேமலேகா!ஹேமலேகா! அவளைப் பார்த்து நீண்ட நேரம் பேசித் தன் துயரங்களை எல்லாம் சொல்லிக் கிருஷ்ணாயி தன்னைப் படுத்திய பாட்டை எல்லாம் சொல்லி ஆறுதல் பெற வேண்டும் போல இருந்தது குலசேகரனுக்கு. ஆனால் அவன் விதியோ அல்லது அவன் கொண்ட லக்ஷியமோ அல்லது அவன் மேற்கொண்டிருக்கும் வேலை காரணமாகவோ எப்போது அவளைப் பார்த்தாலும் நின்று பேச முடியாமல் அவசரமாகக் கிளம்பும்படியே ஆயிற்று.
அவளுக்கும் என்னிடம் நேசம் இருந்திருக்க வேண்டும். ஆம், ஆம் அது தெரிந்ததால் தான் கிருஷ்ணாயி அவளை ராணி வாசம் செய்யச் சொல்லி இருக்கிறாள். பேசும்போது குழைவான குரலில் இனிமை பொங்கப் பேசுவாளே! பார்க்கையில் கனிவு சொட்டுமே!என் மீது எவ்வளவு அக்கறை கொண்டிருந்தாள். எனக்காக எவ்வளவெல்லாம் உதவிகள் செய்தாள். ஆலோசனைகள் கொடுத்தாள். இத்தனைக்கும் அவள் என்னைவிடப் படித்தவள். அழகானவள். தன் பாண்டித்தியத்தின் திறமையால் அரச சபைகளில் முக்கிய இடம் பெற்றவள். படிப்பில்லாத என்னிடம் அவள் கொண்டிருந்த ஈடுபாடு எவ்வளவு வலிமையானது! எப்படி அவளுக்குத் தன் மேல் இவ்வளவு ஈடுபாடு, நேசம் ஏற்பட்டது? தூக்கம் வராமல் தவித்தான் குலசேகரன்.

மறுநாள் குலசேகரன் மாறுவேடம் தரித்த ஹொய்சளக் குதிரைவீரர்களுடன் தெற்கு நோக்கிக் கிளம்பினான். அரச சபை கூடி அவனுக்கு வழியனுப்பியது. அரசர் மாபெரும் திரவியங்கள் அடங்கிய பொதியைக் குலசேகரனிடம் கொடுத்தார். அரசர் வைணவராக  இருந்ததால் அந்தக் கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் குலசேகரனுக்கும் அளிக்கப்பட்டன. பிரசாதத்தைத் தலை குனிந்து ஏற்ற குலசேகரன் நிமிரும்போது எதிரே கிருஷ்ணாயியும் அவள் மகனும் வந்து கொண்டிருந்ததை அதுவும் தன்னை நோக்கி வந்ததைக் குலசேக்ரன் பார்த்துத் திடுக்கிட்டான். மன்னரைப் பார்த்தால் அவர் புன்னகையுடன் இதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அரசகுமாரனான ராஜவர்த்தனன் தன் கையில் வைத்திருந்த பளபளக்கும் வாள் ஒன்றைப் பட்டுத் துணி ஒன்றின் மேல் வைத்து மிக மரியாதையுடன் குலசேகரனிடம் நீட்டினான். குலசேகரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் அவன் அரசகுமாரன் என்னும் பெயரில் இருப்பதால் தலை தாழ்த்தி வணக்கம் சொல்லிவிட்டு அந்த வாளைத் தன் இரு கரங்களாலும் பெற்றுக் கொண்டான். ஒரு கணம் அவன் நெஞ்சம் விம்மியது. கண்களில் நீர்க் கோர்த்தது. அதைப் பார்த்துக் கிருஷ்ணாயியின் முகம் மலர்ந்தது. குலசேகரன் மனம் நிறைய விரக்தியோடு கிருஷ்ணாயியைப் பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கனிவு தெரியவே எதுவும் பேசாமல் தலையைத் தாழ்த்தி அவளையும் வணங்கிவிட்டுக் குலசேகரன் அங்கிருந்து கிளம்பினான்.

Friday, October 05, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் மகன்!

மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எனவும் ஒற்றுமையாய் அன்னியனை எதிர்க்க வேண்டும் எனவும் கூறியவர் மேலும் அப்படிப் போரிடத் தொடங்கும் முன்னர் கண்ணனூர்க் கோட்டையில் இருக்கும் சுல்தானியர்ப் படையைத் தாக்கித் தான் ஶ்ரீரங்கத்தை மீட்க முடியும் என்பதால் அந்தச்சமயம் மதுரை சுல்தான் அவர்களுக்கு உதவ முடியாமல் தடுக்க வேண்டும் எனவும் அந்தப் பொறுப்பைக் குலசேகரன் தான் ஏற்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதற்குத் தான் செய்ய வேண்டியது என்னவென்று குலசேகரன் கேட்டான். மன்னர் மேலும் தொடர்ந்து மதுரைக்கும் கண்ணனூருக்கும் செல்லும் ராஜபாட்டையில் ஒவ்வொரு காத தூரத்துக்கும் ஒவ்வொரு வீரனை நிறுத்தி வைத்திருப்பதாகவும்   இவர்கள் மூலம் மதுரைக்கும் கண்ணனூருக்கும் இடையே செய்திப் பரிமாற்றம் நடைபெறுகிறது  என்றும் கூறியவர் இந்தத் தொடர் மனிதச் சங்கிலியை முதலில் அறுக்க வேண்டியது குலசேகரன் கடமை என்றார். கண்ணனூரில் இருந்து எந்தச் செய்தியும் மதுரைக்கோ அல்லது மதுரையிலிருந்து கண்ணனூருக்கு எந்தச் செய்தியுமோ போகாமல் தடுக்க வேண்டும் என்றார்.

தன்னால் நிச்சயமாய் அதைச் செய்ய முடியும் என்ற குலசேகரனிடம் அவனுக்கு உதவியாக மாறுவேடத்தில் 20 குதிரை வீரர்கள் வருவார்கள் எனவும் அவர்கள் உதவியுடன் அந்தச் செய்தி எடுத்துச் செல்லும் மனிதச் சங்கிலியில் அனைவரையும் அழித்து ஒழிக்க வேண்டியது குலசேகரன் பொறுப்பு எனவும் கூறினார் மன்னர். குலசேகரனிடமிருந்து இந்த வேலை முடிந்தது எனத் தகவல் வந்ததும் அவர்கள் தங்கள் படையெடுப்பை உடனே ஆரம்பிக்க வசதியாக இருக்கும் என்றார். இதைத் தவிர்த்தும் மேலும் பல ஆலோசனைகளை மன்னர் குலசேகரனுக்குச் சொன்னார். அவன் ராஜசபையில் இருந்து கிளம்பி அரண்மனை முற்றத்தை அடைந்தான். அப்போது ஓர் இளங்குரல் அவனை "நில்!" என அதிகாரமாக ஆணையிட்டுச் சொன்னது. திரும்பிப் பார்த்த குலசேகரன் சுமார் பத்து வயது நிரம்பிய ஓர் சிறுவன் முகமூடி அணிந்த வண்ணம் வாளைச் சுழற்றிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டான். அந்தச் சிறுவனின் துணிச்சல் குலசேகரனுக்கு மிகவும் பிடித்தது. எனினும் அவன் வாள் குலசேகரனைத் தாக்க முயன்றதால் தன் வாளால் பாதுகாப்புக்காகத் தடுப்பு முறைகளைப் பிரயோகம் செய்து தன்னைக் காத்துக் கொண்டான் குலசேகரன்.

அப்போது அங்கே ஓர் சேடிப் பெண், "இளவரசே! இளவரசே!" எனக் கூவிக் கொண்டே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து ராணி கிருஷ்ணாயியும் ஓடி வந்து கொண்டிருந்தாள். கிருஷ்ணாயியைப் பார்த்த குலசேகரன் மீண்டும் திடுக்கிட்டு அவளைச் சந்திக்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். குலசேகரனை அங்கே ராணியும் எதிர்பார்க்கவில்லை ஆதலால் செய்வதறியாது அவள் திகைத்து நிற்கச் சிறுவன் தன் முகமூடியை அகற்றி விட்டு, "அம்மா! யார் இது?" என்று வினவிய வண்ணம் வாளைச் சுழற்றினான். கிருஷ்ணாயியின் முகத்தில் நாணம் பூத்தது. குலசேகரனைப் பார்த்து அவள் "சுவாமி! இது, இந்தச் சிறுவன்...... தங்கள்....." என இழுத்தவள் மேலே தொடராமல் நிறுத்தினாள். அப்போது தான் திரும்பி அந்தச் சிறுவன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்ட குலசேகரனுக்கு ராணியின் வார்த்தைகள் புரிந்தன. சிறுவனை உற்று நோக்கினான். சிறுவனின் கண்களும் உடல் தோற்றமும் தன்னை ஒத்திருந்ததைக் கண்டு கொண்டான் குலசேகரன். இவன் தன் மகன் என்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான்.

அவன் உடல் ஓர் கணம் சிலிர்த்தது. தன்னில் ஒரு பாதி தன் எதிரே நிற்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் அவன் அறிவோ விழித்துக் கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சிறுவனைத் தான் எவ்விதத்திலும் எந்த உறவும் கொண்டாட முடியாது என்பதையும் உணர்ந்தவனாக இருந்தான். ஆகவே ஆர்ப்பரித்து எழுந்த தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு இறுகிப் போன முகத்தோடு அங்கே நின்றான். கிருஷ்ணாயி அவனைப் பார்த்து, "சுவாமி! இவன் என் மகன் தான். இவன் பெயர் ராஜவர்த்தன குலசேகரன்!" என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்ட குலசேகரன் கண்களில் நீர் பெருகியது. மீண்டும் மீண்டும் அந்தச்  சிறுவன் பக்கமே அவன் கண்கள் சென்றன. அவன் நிற்கும் தோரணை குலசேகரனுக்குத் தன்னைத் தானே பார்த்துக் கொள்வது போல் இருந்தது. தன் வாழ்க்கையில் முதல்முதலாகத் தானே தன்னில் இருந்து பிரிந்து வந்து ஓர் சிறுவனாக எதிரே நிற்பதைக் கண்டதும் அவனுள் தன்னையும் அறியாமல் தந்தை என்னும் உணர்வும் அதற்கான பாசமும் ஏற்பட்டுக்கண்களில் நீர் பெருகச் செய்தது.

அந்தச் சிறுவனைக் கட்டி அணைக்கலாமா என யோசித்து முன்னே ஓர் அடி எடுத்து வைத்தவனுக்கு மீண்டும் அந்தச் சிறுவன், "அம்மா, யார் இவர்?"  எனக்கேட்ட குரல் காதில் விழுந்தது. தன்னிலை உணர்ந்த குலசேகரன் மௌனமாக அங்கேயே நின்றான். தன்னை முழுதும் அடக்கிக் கொண்டான். அவன் மனதில் பாசமும், கிருஷ்ணாயி மேல் வெறுப்பும் சிறுவன் மேல் உள்ள பிள்ளைப் பாசமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன. தன் உணர்வுகளை அடக்க முடியாத குலசேகரன் அங்கிருந்து வெளியேறுவது ஒன்றே வழி என நினைத்து அங்கிருந்து வெளியேறித் தான் தங்கி இருந்த சத்திரத்தை நோக்கிச் சென்றான். சத்திரத்திலும் அவனுக்குத் திரும்பத் திரும்பச் சிறுவனின் முகமே நினைவில் வந்தது. எவ்வளவு துடிப்பான முகம்!பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தவன் அந்தச் சிறுவன். இவன் என் மகன் தான்! ஆனால்! எப்படி! எவ்வாறு! நினைக்க நினைக்கக் குலசேகரன் மனம் துடித்தது.

Tuesday, October 02, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருவண்ணாமலையில்!

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் குலசேகரனைக் கண்டதும் ஓடோடி வந்து விசாரித்த கிருஷ்ணாயியைக் கண்டு குலசேகரன் பிரமித்தான். அவள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதை அவள் கண்கள் காட்டின. பெண்மைக்கே உரித்தான நிதானமும், கனிவும் அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்தது.  என்றாலும் குலசேகரனால் அவளைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஒரு கணம் அவளை வெறித்தவன் மறுபடி தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். அவன் முகம் கல் போல் இறுகியது. கிருஷ்ணாயியோ அவன் தன்னைப் பார்க்கவே விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாக, "ஏன் என்னைப் பார்க்க மறுக்கிறீர்கள் ஸ்வாமி? எப்போது வந்தீர்கள்? என்னை ஏன் வந்து பார்க்கவில்லை! என் மேல் என்ன கோபம்?" என்றெல்லாம் விசாரித்தாள். குலசேகரனோ வேறு பக்கம் திருப்பிய பார்வையுடனேயே அவளைப் பார்த்து, "மஹாராணி, என்னை எதுவும் கேட்க வேண்டாம். நான் பழைய விஷயங்களை எல்லாம் மறக்க விரும்புகிறேன்." என்றான். அவன் கண்களிலே கண்ணீர் ததும்பி நின்றது.

கிருஷ்ணாயியோ அவனைப் பார்த்து,"ஸ்வாமி! எனக்குக் காரணம் புரிகிறது! ஆனால் இனி நான் உங்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யவே மாட்டேன்! இனியும் உங்களுக்குத் தொல்லை கொடுக்க விரும்பவும் இல்லை. பழைய விஷயங்களுக்காகவும், நான் நடந்து கொண்ட முறைக்காகவும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்! நான் வருகிறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். பிறகு அவனைப் பார்த்துத் தயங்கியவண்ணம் அவன் திருவண்ணாமலைக்கு வந்திருக்கும் காரணம் தனக்குப் புரியவில்லை என்றும் எனினும் அவனுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்யத் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தாள். மேலும் அவனை ஒரு முறையாவது அந்தப்புரம் வந்து தன்னைப் பார்த்துச் செல்லும்படியும் அவன் வந்தால் அது தனக்கு என்றென்றும் மறக்க இயலா ஓர் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் என்றென்றும் தான் அதை நினைவில் வைத்துப் போற்றி வருவாள் எனவும் தெரிவித்தாள். குலசேகரன் மறுமொழி சொல்லாமல் அவளைத் திரும்பியும் பார்க்காமல் மௌனம் சாதித்தான். பின்னர் அவள் கிளம்பிச் சென்றபின்னர் அவனும் அங்கிருந்து வெளியேறி முன்னர் தான் தங்கும் சத்திரம் திரும்பினான்.  யாரைப்பார்க்க வேண்டாம் என நினைத்தானோ அவளைப் பார்க்க நேர்ந்தது தன் துர்ப்பாக்கியம் தான் எனக் கருதினான்.

இரவுப் பொழுதைச் சத்திரத்தில் கழித்த குலசேகரன் மறுநாள் காலை தன்னை அரச சந்திப்புக்கு ஏற்றவாறு அலங்கரித்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றான். அங்கே அரசர் வல்லாளர் சிங்காதனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். சுமார் எழுபது வயதுக்கு மேல் ஆனாலும் அவருடைய கம்பீரமும் கட்டுக்குலையாத உடம்பும் குலசேகரனைக் கவர்ந்தது. குலசேகரனை அவர் அடையாளமும் கண்டு கொண்டார். அவனைப்பார்த்து சிங்கப்பிரான் அனுப்பினாரா எனக் கேட்டவர் மேலும் தொடர்ந்து, "வீரனே! நீ திருவண்ணாமலை வர இஷ்டப்படவில்லை என சிங்கப்பிரான் சொன்னாரே!" என்றும் வினவினார்.  குலசேகரன் சற்று நேரம் மௌனமாக இருந்தவன் பின் மன்னரைப் பார்த்து, "அரசே! இந்தத் தென்னாட்டு அதிலும் தமிழகத்து அரசர்களிடம் எனக்கு நம்பிக்கையே இல்லை! சிறிதும் இல்லை!" என்றான். வல்லாளர் கலகலவெனச் சிரித்தார்.

குலசேகரனைப் பார்த்துப் பத்து வருடங்கள் முன்னர் இளமைத் துடிப்பில் இருந்தபோது பேசிய அதே மாதிரி அவன் இப்போதும் படபடப்புடன் பேசுவதைச் சுட்டிக் காட்டினார். மேலும் ராஜரிக காரியங்களில் அவசரமோ, படபடப்போ கூடாது என்றும் அறிவுறுத்தினார்.  எத்தனையோ சோதனைகளுக்குப் பின்னர் ஹொய்சளம் இப்போது தான் இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலுப்பெற்று வருவதாயும் சொன்னார். வடக்கே உள்ள பகைவர்களை இப்போது தான் அழித்து ஒழித்ததாகவும் இனிமேல் தெற்கே தங்கள் கவனத்தைத் திருப்பப் போவதாயும் சொன்னார்.  மேலும் இதைத் தான் ஏற்கெனவே சிங்கப்பிரானுக்குத் தெரிவித்துவிட்டதாயும் கூறியவர் இப்போது ஹொய்சளம் தமிழ்நாட்டின் மதுரை சுல்தான் மேல் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாயும் கூறினார்.  குலசேகரன் முகம் பிரகாசம் அடைந்தது.

இந்தச் செய்தியைக் கேட்கவே தான் காத்திருந்ததாய்ச் சொன்ன அவன் இந்த முடிவு குறித்து அவனுக்கு ஏதும் தெரியாது என்பதால் தான் வந்த உடன் மன்னரிடம் குற்றம் கூறியதாகவும் இது முன்னரே தெரிந்திருந்தால் மகிழ்ச்சியோடு மன்னரை வந்து கண்டிருப்பேன் எனவும் தெரிவித்தான்.  மன்னர் அவனிடம் பொறுமையுடன் காத்திருந்து தான் எதையும் செய்யவேண்டும் என்றும் இப்போது நேரம் வந்து விட்டதாயும் சொன்னார். மேலும் குலசேகரன் தன் மேல் கொண்டிருக்கும் கோபம், வருத்தம் ஆகியவை அவருக்குத் தெரியும் என்பதால் தான் நேரிடையாக அவனைத் திருவண்ணாமலை வரும்படி சொல்லி அனுப்பவில்லை என்றும் சிங்கப்பிரானிடம் சொல்லி அவனை அனுப்பச்சொன்னதாகவும் தெரிவித்தார்.  அவனுக்கு இங்கே நிறைய வேலைகள் காத்திருப்பதாயும் சொன்னார். குலசேகரன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொள்ள மன்னர், திருவரங்கத்தையும், திருச்சியையும் மதுரை சுல்தான்களிடமிருந்து மீட்பதற்காகப் போர் செய்யவும் தயங்கப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். 

Sunday, September 30, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பத்து ஆண்டுகள் பின்னர்!

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களும் ஆகிக் கொண்டிருந்தன. அரங்கனைச் சூழ்ந்திருந்த பரிவாரங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்து விட்டது. ஒரு சிலர் முதுமை, உடல்நிலை காரணமாக உயிரிழக்க நேர்ந்தது. இன்னும் சிலர் பிழைப்பைத் தேடியும், குடும்பங்களைத் தேடியும் சென்று விட்டனர். சென்றவர் திரும்பவில்லை.  தமிழக வரலாற்றில் இந்தப் பத்து வருடங்கள் எவ்வித மாற்றங்களும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தது. தென்காசி, திருநெல்வேலிப் பகுதியில் இருந்து அடிக்கடிப் பாண்டியச் சிற்றரசர்கள் மதுரையிலிருந்து துருக்கியரை விரட்டத் தங்களால் ஆன மட்டும் இயன்றார்கள், ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஹொய்சளர்களோ எனில் வடக்கே தங்கள் கவனம் முழுமையும் செலுத்தி ஆந்திராவையும், தில்லிப் பேரரசில் நடப்பதையும் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடுவே மதுரையில் மட்டும் சிறிய மாற்றம்.

தில்லிக்குத் தளபதியாக  தென்னாடு வந்த அஸன்ஷா என்பவன் தில்லிப் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தவன் தில்லி ஆட்சியினரைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னை மதுரைக்கும் அதைச் சேர்ந்த பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட இடங்களுக்கும் சுல்தானாக அறிவிப்புச் செய்து கொண்டான். ஆக மொத்தம் இதன் மூலம் மதுரையில் ஒரு சுல்தான் பரம்பரை ஆட்சி தொடங்கியது. ஆனால் ஆட்சி நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றில் கவனக்குறைவாகவே இருந்தார்கள். அவர்கள் கவனமெல்லாம் ஆடம்பரமான சுகபோக வாழ்க்கையில் இருந்தது. இருந்தாலும் தங்கள் வலிமையை விட்டுக்கொடுக்காமல் யாரையும் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டனர்.  ஆகவே எவ்வித மாறுதலும் இல்லாமல் பத்தாண்டுகள் கடந்து விட்டன.
*********************************************************************************

திருவண்ணாமலை! ஓர் நாள் மாலை!

ஓர் வாலிப வீரன் பித்துப் பிடித்தாற்போல் வீதியில் நடந்து கொண்டிருந்தான். இளமையுடனும், வீரத்துடனும் காணப்பட்ட அவன் முகத்தைக் கவலை மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. நீண்ட காலம் சென்று அன்று அவன் இந்த ஊருக்கு வந்திருந்தான். நீண்ட நேரம் நடந்த அவன் அந்த மாலை நேரத்தில் அங்கே உள்ள ஓர் வைணவக் கோயில் முன்பாகப் போய் நின்றான்.  பெருமாள் சந்நிதி திறந்திருந்தாலும் உள்ளே செல்ல மனமின்றிக் கண்கள் கலங்க அவன் கை கூப்பியவண்ணம், "பெருமாளே! நான் பதிதன்! உள்ளே வந்து உன்னைச் சேவிக்கும் அருகதை அற்றவன்! ஐயோ! போனமுறை கூட உள்ளே வந்து உன்னைச் சேவித்தேனே! இம்முறை என்னால் அது இயலாது போயிற்றே!" எனப் புலம்பிய வண்ணம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தான்.

அப்போது அங்கே திடீரென சில ஆரவாரங்கள் கேட்கவே அதனால் சிந்தை கலைக்கப்பட்டவனாய்த் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தான் அந்த இளைஞன். அங்கே ராணி கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள்.  அவனை அங்கே கண்டதும் சிறு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் சேடிமார் மெய்க்காப்பாளர் போலக் காவலுக்கு வந்திருந்தனர். இந்தப் பத்து வருடங்களில் அவள் எழில் அதிகரித்துப் பூரணமானதொரு மங்கையாக ஆகி இருந்தாள். கண்களில் முன்னிருந்த காமவெறி இல்லாமல் கனிவு தோன்றி இருந்தது. அவளைப் பார்த்துப் பிரமித்தக் குலசேகரனைக் கண்டு அவள், "ஸ்வாமி! என்னைத் தெரியவில்லையா?" என்று கேட்டபடி முன்னால் வந்தாள்.

Saturday, September 29, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் பிரிவும், அரங்கன் தங்கலும்!

அந்த குகையைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருந்தார்கள் அனைவரும். அப்போது அவர்களில் ஒருவர் ஆழ்வாரையும் அவருடைய ஆபரணப் பெட்டகத்தையும் சங்கிலியில் பிணைத்து மேலே இருந்து இந்தக் குகைக்குள் இறக்கி விட்டு விடலாம் என யோசனை கூறினார். இதனால் ஆழ்வார் எவ்விதமான பயமும் இன்றிப் பாதுகாப்பாக இருப்பார். கள்வர்கள் அவ்வளவு எளிதில் இந்த குகைக்குச் செல்ல முடியாது. இப்படி ஒரு குகை இருப்பதே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் தான் தெரியும்.ஆகவே பின்னால் நல்ல காலம் பிறந்ததும் ஆழ்வாரை எப்படியேனும் குகையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவர் சொன்னதன் சாராம்சம். மீண்டும் அவர்களுக்குள் வாதப் பிரதிவாதங்கள். பலருக்கும் அவ்வளவு ஆழத்தில் உள்ள குகையில் ஆழ்வாரை இறக்கி விடுவது சம்மதம் இல்லை.  எனினும் இப்போது கள்வர் தொடர்ந்து வரும்போது வேறு வழியில்லை.

ஆகவே ஒரு நீண்ட சங்கிலித் தொடரை அங்கிருந்த காட்டுக்கயிறுகளால் பிணைத்துக் கட்டினார்கள். அது அந்தக் குகையைப் போய் எட்டும் அளவுக்கு நீளமானதா என்பதைச் சோதித்தும் பார்த்துக் கொண்டார்கள். கயிற்றுத் தொடர் உறுதியாக ஆழ்வாரையும் ஆபரணப் பெட்டியையும் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் ஆபரணப் பெட்டகத்தைத் திறந்து ஆபரணங்களை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி விட்டு ஆழ்வாரை அந்தப் பெட்டிக்குள் அமர வைத்தார்கள். அவருக்குப் பின்னால் எளிதில் தெரியாதபடிக்கு ஆபரணங்கள் அடங்கிய முடிச்சை மறைத்து வைத்தார்கள். பெட்டகத்தை நன்கு மூடி பத்திரமாய் உள்ளதா எனச் சோதித்துக் கொண்டு  சங்கிலியில் இறுகக் கட்டிச் செங்குத்தான அந்தச் சரிவு வழியே கிணற்றில் கயிறு கட்டி நீர் இழுப்பதற்கு இறக்குவது  போல் மெல்ல மெல்ல இறக்கி விட்டார்கள்.

ஆழ்வாரது பெட்டகம் கீழே போகப் போக ஆட்டம் ஆடத் தொடங்கியது. அனைவருக்கும் அது குகைக்குள் போகாமல் அந்தப் பாதாளத்திலேயே விழுந்து விடுமோ என்னும் கவலை! அதோடு இல்லாமல் சரிவுகளில் ஆங்காங்கே பாறைகள் வேறே சிறிதும், பெரிதுமாய் நீட்டிக் கொண்டிருந்தது. பெட்டகம் அவற்றில் இடித்ததும் ஒரே ஆட்டமாக ஆடியது. எப்படியோ சமாளித்து ஒரு வழியாகக் குகை வாய்க்குக் கொண்டு சென்று விட்டார்கள். மெல்ல மெல்ல அதன் வாய்க்குள் இருட்டில் அந்தப் பெட்டகத்தை உள்ளே விட்டார்கள். குகைப் பகுதியின் தரையைப் பெட்டகம் அடைந்து விட்டதற்கான அடையாளமாகப் பெட்டகம் தரை தட்டியது. உடனே கையில் பிடித்திருந்த நீளமான சங்கிலியையும் நழுவ விட்டனர். அந்தச் சங்கிலியும் பெரிய சப்தம் போட்டுக் கொண்டு குகையில் போய் விழுந்து விட்டது. பின்னர் அனைவரும் மிகுந்த துக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அங்கே இருந்து கீழே இறங்கினார்கள். இவ்வளவும் செய்து முடிப்பதற்குள்ளாகக் கள்வர் கூட்டத்தார் மலை அடிவாரத்தை நெருங்கி இருந்தார்கள்.

இவர்களைக் கண்டதும் கள்வர் கூட்டத்தார் சுற்றிக் கொண்டனர். ஆழ்வாரின் பரிவாரங்கள் ஆழ்வாருக்கு அரங்கன் கூட்டத்தார் அளித்த வட்டமனையை ஆழ்வாருடன் சேர்த்து உள்ளே வைக்காமல் கையில் வைத்திருந்தனர். தங்கத்தால் ஆன அதைப் பார்த்த கள்வர் உடனே அதைக் கைப்பற்றிக் கொண்டதோடு அல்லாமல் "சித்தை" என அழைக்கப்படும் எண்ணெய்த் துருத்தியையும் பிடுங்கிக் கொண்டனர். அவர்களில் சிலரது உடைகளையும் கவர்ந்து கொண்டார்கள். நல்லவேளையாக ஆழ்வாரை மறைத்து வைத்தோமே என ஊர்வலத்தார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். கள்வர் கூட்டத்தார் அங்கிருந்து அகன்றதும் திசைக்குச் சிலராகப் பிரிந்து சென்று ஆங்காங்கே இருக்கும் ஊர்களுக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கியவர் சிலர். சொந்த ஊருக்கே சென்றவரும் சிலர். ஆழ்வாரோ நிம்மதியாக மலைக்குகையில் தன் அஞ்ஞாத வாசத்தைத் தொடர்ந்தார்.
*******************************************************************************

அரங்கன் கூட்டத்தாரின் ஊர்வலம் புங்கனூரை விட்டுக் கிளம்பித் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையைப் போய்ச் சேர்ந்தது. ஹொய்சள ராஜ்யத்தின் கீழ் வந்த இந்த ஊர் ஓர் வைணவத் தலம். இந்தச் சம்பவம் நிகழ்வதற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஶ்ரீராமாநுஜர் சோழ அரசனின் தொந்திரவைத் தாங்க முடியாமல் திருவரங்கத்தில் இருந்து கிளம்பித் திருநாராயணபுரம் சென்று அங்கே வசித்து வந்தார். ராமானுஜரின் வருகையினால் அந்தத் திருத்தலம் மேலும் புகழும் பெருமையும், புனிதமும் அடைந்திருந்தது.  இத்தகையதோர் ஊரிலே தான் திருவரங்கன் சரண் அடைந்தான். ஊர் வைணவர்கள் அனைவருக்கும் இது குறித்து மிக்க மகிழ்ச்சி. அரங்கனே அவர்களைத் தேடி வந்திருப்பது தாங்கள் செய்த புண்ணியமே என நம்பிய அவர்கள் அனைவரும் மிகவும் ஆதரவுடனும், மேள, தாளத்துடனும் அரங்கன் ஊர்வலத்தாரை எதிர்கொண்டு அழைத்தனர்.

வரவேற்பு முடிந்ததும் செலுவப் பிள்ளையின் கோயிலில் அரங்கனின் அர்ச்சாவதாரத்தை எழுந்தருளச் செய்தார்கள்  அரங்கத்தை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டில் அவர்கள் தயவில் இருக்கிறோமே என்னும் சோகத்தையே அனைவரும் சில நாட்களில் மறந்து போனார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்குத் திருநாராயணபுரத்தில் உபசாரங்கள் நடந்தன. அரங்கனுக்கும் தினப்படி, வாராந்தரி, மாதாந்தரி, வருட உற்சவங்களைக் குறைவின்றி நிகழ்த்தினார்கள். நீண்ட நாட்கள் கழித்து அரங்கத்தை விட்டு வந்த அரங்கன் இங்கே கொஞ்சம் நிம்மதியுடன் நீண்ட காலம் தங்க ஆரம்பித்தார்.

Friday, September 28, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அடுத்து என்ன?

குலசேகரன் சொன்னதைக் கேட்டு முதலில் வியந்தாலும் பின்னர் அவர்கள் அனைவரும் சென்று நம்மாழ்வார் விக்ரஹத்தைக் கொண்டு வந்தார்கள். ஆழ்வாரை எப்படித் தண்ணீருக்குள் இருந்து எடுத்தார்கள் என்பதைப் பலமுறை குலசேகரனும் மற்ற முக்குளவர்களும் சொல்லக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். இது நிச்சயம் இறைவன் செயலன்றி வேறேதும் இல்லை என்னும் தீர்மானத்துக்கு வந்தார்கள். அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வாருக்கு "வட்டமனை" என்னும் பெயரில் ஓர் வாகனத்தைத் தங்கத்திலேயும், வெள்ளியினால் ஆன திருமுன் பந்தம் (தீவர்த்தி) ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார்கள். சிறிது தூரம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமலே சென்றார்கள். "திருக்கிணாம்பி" என்னும் வைணவத்தலம் ஒன்று கர்நாடகத்தில் உள்ளது. அங்கே சென்று சிறிது காலம் அங்கே எந்தவிதமான பிரச்னையும் இன்றித் தங்கினார்கள். பின்னர் அரங்கன் ஊர்வலத்தாருக்குத் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்குச் செல்ல ஆவல் உண்டாக அங்கே செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் ஆழ்வார் ஊர்வலத்தாருக்குத் திருக்கிணாம்பியை விட்டுச் செல்ல விருப்பமில்லை.

இதைப் பற்றி இருவரும் விவாதித்தனர். அபிப்பிராய பேதங்கள் அதிகம் ஆகவே அரங்கன் ஊர்வலத்தார் ஆழ்வார் ஊர்வலத்தார் வராவிட்டாலும் தாங்கள் செல்வது என முடிவு செய்தனர்.  ஆழ்வார் ஊர்வலத்தாரிடம் அவர்கள் விருப்பம் போல் செய்யும்படி சொல்லிவிட்டுத் திருநாராயணபுரம் செல்லும் வழியில் புங்கனூர் சென்று அடைந்தார்கள் அரங்கன் ஊர்வலத்தார். இங்கே ஆழ்வார் ஊர்வலத்தார் தனித்து விடப்பட்டதால் அவர்களுக்கு அங்கிருக்க மனமில்லாமல் அவர்களும் கிளம்பினார்கள்.  அரங்கன் ஊர்வலத்தார் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சென்று ஓர் கிராமத்தைச் சென்று அடைந்தனர்.  பின்னர் சிறிது வாத, விவாதங்களுக்குப் பின்னர் மேற்கே பயணிக்க முடிவு செய்து கொண்டு அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு கிளம்பினார்கள். அப்போது கிராமத்தார் இது பற்றிக் கேள்விப் பட்டு ஓடோடி வந்து மேற்கே கள்வர் கூட்டம் அதிகம் என்பதால் அவ்வழி செல்லவேண்டாம் என்றனர். கிழக்கே போகிறோம் என ஊர்வலத்துப் பரிசனங்கள் சொன்னதுக்குக் கிராமத்தார் அங்கேயும் கள்வர் உண்டு. ஆழ்வாருடன் கூடவே நகைகள், பொக்கிஷங்கள் எடுத்துச் செல்வதால் தனிவழி செல்வது உசிதம் இல்லை என்றனர். மேலும் வடக்கே துருக்கியர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாயும் போதாதற்குக் கடலோரமாகக் கடற்கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

மிகவும் யோசனைக்கு இடையில் ஆழ்வாரின் ஊர்வலத்தார் ஆழ்வாரைத் தூக்கிக் கொண்டு தென்மேற்கே செல்ல முடிவு செய்தார்கள்.  அதிகாலையில் கிளம்பினார்கள். முன்னே சிலர் செல்லப் பின்னே சிலர் தொடர்ந்து வர நடுவில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆழ்வாரின் பரிவாரங்கள் தக்க இடைவெளி விட்டுப் பயணம் செய்தார்கள். அப்படியும் சிறிது தூரத்திலேயே பின்னால் வந்த எச்சரிக்கையாளர்கள் கள்வர்கள் வேவு மூலம் இவர்கள் பயணம் செய்வதைத் தெரிந்து கொண்டு விட்டதாகச் சொன்னார்கள். பின்னாலேயே பெரும் கூட்டமாக அவர்கள் வந்து கொண்டிருப்பதாயும் தனிமையான இடம் பார்த்து அனைவரையும் மடக்கிவிடுவார்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். பரிவாரங்கள் குழம்பிப் போய் நிற்க மீண்டும் வாத, விவாதங்கள் தொடர்ந்தன.

சிலர் எழுந்து அரங்கன்  ஊர்வலத்தாரோடேயே அவர்களும்  போயிருக்க வேண்டும் எனவும் அது தவறு எனவும் கூறினார்கள். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். ஆபத்து நாலாபக்கமும் சூழ்ந்து கொண்டிருப்பதால் எங்கே சென்றாலும் எந்தத் தரப்பில் சென்றாலும் ஆபத்து அவர்களைச் சூழ்ந்து கொள்வதோடு ஆழ்வாரின் கதி என்ன என்பதை நிரணயம் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள். அப்போது சிலர் ஆழ்வாரை மறைத்து விட்டுத் தாங்களும் பிரிந்து தனித்தனியாக நடந்தே சென்று வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விடுவது தான் சரியான வழி எனக் கூறினார்கள். எல்லோரும் இதற்கு ஒரு மாதிரியாக ஒத்துக் கொள்ள ஆழ்வாரை மறைத்து வைக்க என்ன வழி என யோசித்தனர்.

அப்போது ஒருவர் எதிரே தெரிந்த முந்திரிப்பு மலை என்னும் மலையில் எங்காவது ஆழ்வாரை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லலாம் என்று கூறினார். அனைவரும் மீண்டும் அந்த இடத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு ஒத்துக் கொண்டார்கள். எல்லோரும் உடனே அதி விரைவாக மலையை நோக்கிப் பிரயாணம் செய்தனர். கொடி, செடிகள் நிறைந்த மலையில் மெல்ல மெல்ல மேலே ஏறினார்கள். அத்அன் விளிம்பில் இருந்து எட்டிப் பார்த்தால் கீழே அதலபாதாளம். அங்கே ஒரு குகை! அந்தக் குகைக்குச் செல்ல வழி தேடினால் கிடைக்கவில்லை. குகைக்குச் செல்ல வழியில்லை. கூர்ந்து கவனித்துப் பார்த்ததில் குகைக்கு அடுத்தாற்போல் கீழேயும் ஓர் செங்குத்தான சரிவு காணப்பட மலைகளுக்கு நடுவில் அந்தரத்தில் தொங்குவது போல் அந்தக் குகை காணப்பட்டது. 

Wednesday, September 26, 2018

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நம்மாழ்வார் மீட்பு!

கருடன் வட்டமிட்ட இடத்திலும் அது கொத்திச் சென்ற இடத்திலும் காணப்பட்ட ஜவந்திப்பூமாலை நம்மாழ்வாரின் திருமேனியில் சார்த்தப்பட்டது தான் என்பது குலசேகரனுக்கு நிச்சயமாயிற்று. ஆகவே இந்த இடத்தில் தான் நம்மாழ்வார் விக்ரகம் மூழ்கி இருக்க வேண்டும் என நினைத்தான். மாலை நீரில் ஊறிப் போய்க் கழுத்தில் இருந்து அகன்று மேலே வந்து மிதந்திருக்க வேண்டும். உடனே முக்குளவர்களை அழைத்து அங்கே 3 இடங்களைக் காட்டி அங்கே மூழ்கிப் பார்க்கச் சொன்னான்.  குலசேகரன் வெளியே தவிப்புடன் காத்திருந்தான். கணங்கள் சென்றன. ஆனால் ஒவ்வொரு கணமும் குலசேகரனுக்கு ஒரு யுகமாகத் தோற்றியது. முதலில் வந்தவன் எதுவும் கிட்டவில்லை எனக் கை விரித்தான். மேலே ஓடத்துக்கு வந்து மூச்சு வாங்கிக் கொண்டு இளைப்பாறினான். அடுத்து வந்தவனும் கை விரிக்க மூன்றாமவன் மேலே வந்து, "ஸ்வாமி, இங்கே ஏதோ தட்டுப்படுகிறது!" என்று சொன்னான். குலசேகரன் ஆர்வத்துடன் துள்ளிக் குதித்து அது நம்மாழ்வாராகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தான். அந்த முக்குளவனை நோக்கி ஓடம் சென்றது. உள்ளே இருக்கும் பொருள், அதன் அளவு, பரிமாணம் எதுவும் தெரியாததால் குலசேகரன் அவன் கையில் சுருக்குப் போட்ட ஓர் நீளக் கயிறைக் கொடுத்து மறுபடி உள்ளே முக்குளிக்கச் சொன்னான்.

சிறிது வெளியே வருவதும் மறுபடி நீரில் மூழ்குவதுமாக இருந்த அவன் கடைசியில் மேலே வந்து சுருக்கை நன்றாகக் கட்டி விட்டதாகத் தெரிவித்தான். இனி வெளியில் இழுக்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் மெல்ல மெல்ல இழுக்க ஆரம்பித்தான். நல்ல கனமான ஒரு பொருள் சுருக்குப் போட்டுக் கட்டப்பட்டிருந்தது என்பது புரிந்தது. குலசேகரனால் தனியாய் இழுக்க முடியாமல் போகவே அனைவரும் சேர்ந்து மெல்ல மெல்ல அங்குலம் அங்குலமாக மேலே இழுத்தார்கள். குலசேகரன் இதயம் படபடக்கக் காத்திருந்தான். நீர்ப்பரப்பின் மேலே ஒரு பெரிய பொருள் மேலே எழுந்து வெளிப்பட்டது.  மேலே வந்த பொருளை மனம் படபடக்கக் குலசேகரன் கவனித்தான். அவன் பார்வையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அது நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்திருந்த வாகனம் தான். ஆனால் வாகனம் உடைந்து இருந்தது. மேலும் அது தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கவனமுடன் பார்த்த குலசேகரன் நம்மாழ்வார் அந்த வாகனத்துடன் பிணைக்கப்பட்டிருந்த கயிறுகள் அறுபடாமல் இருந்ததையும் விக்ரகம் பாதிப்பில்லாமல் இருந்ததையும் கண்டு கொண்டான். போகிறது. வாகனம் தானே! போனால் போகட்டும். நம்மாழ்வாருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே! குலசேகரன் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

நம்மாழ்வார் ஆழ்வார் க்கான பட முடிவு

முக்குளவர்களும் உதவி செய்ய அனைவரும் சேர்ந்து பாதி உடைந்திருந்த வாகனத்தோடு பிணைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரை ஓடத்தில் ஏற்றினார்கள். குலசேகரனுக்கு அருகில் சென்று பார்க்கத் தயக்கம். ஆனால் எப்படி வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் உத்தரவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். வாகனத்திலிருந்து நம்மாழ்வாரைப் பிணைத்திருந்த கயிறுகளை விலக்கி அவிழ்த்து விட்டு அவரை மட்டும் தனியாகத் தூக்கி ஓடத்தில் அமர்த்தினார்கள். கூப்பிய கரங்களுடன் ஒரு யோகி போல் நிற்கும் நம்மாழ்வார் விக்ரகத்தைக் கண்ட குலசேகரன் அவரை நேரிலேயே பார்த்தாற்போல் மனம் மகிழ்ந்தான். கண்களில் கண்ணீர் சுரக்க நம்மாழ்வாரை வணங்கினான். பின்னர் கரையை நோக்கி ஓட்டச் சொல்ல ஓடமும் கரைக்குச் சென்றது.

நம்மாழ்வார் ஆழ்வார் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

ஓடம் கரையை நெருங்க நெருங்க அங்கே ஏராளமான உள்ளூர் ஜனங்களும் கூடி இருந்தது தெரிய வந்தது. அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க ஓடம் கரையை அடைந்தது. கரையில் குதித்த குலசேகரன் அவர்களைப் பார்த்து, " பரிசனங்களே! நம்மாழ்வார் கிடைத்து விட்டார். போய் அவரை அழைத்துக் கொண்டு சென்று ஆராதியுங்கள்!" என வேண்டுகோள் விடுக்க அவர்களில் ஒருவர் அவனைப் பார்த்து, "ஐயன்மீர், தாங்களே நம்மாழ்வாரை அழைத்து வரலாமே!" எனச் சொல்ல, "ஐயா, எனக்கு அதற்குத் தகுதி இல்லை. நான் பதிதன்!" என்று கண்கள் நீரைப் பெருக்கிய வண்ணம் கூறினான் குலசேகரன்.