எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 25, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! கங்காள மூர்த்தி!

அந்தகாசுரனுடன் தொடர்பு உள்ள மற்றொரு சிவ வடிவமே கங்காளர் எனப்படும். அந்த நாட்களில் வீடுகளில் கங்காளம் என்ற பெரியதொரு பாத்திரம் இருக்கும். நிறையத் தண்ணீரோ அல்லது அதிக அளவு உணவு சமைக்கவோ பயன்படுத்தப் படும் இந்தப் பாத்திரம் போன்றதொரு பாத்திரம் சைவர்கள் காவடி போல் எடுத்துச் செல்லவும் பயன்படும். பாத்திரத்தின் இருபக்கமும் தொங்கும் வளையம் போன்ற காதுகளில் கம்பைச் செருகி எடுத்துச் செல்லுவார்கள். இவற்றில் சிவலிங்கம், நந்தி போன்றவை அமைத்திருப்பார்கள். பார்த்ததுமே வீர சைவர்கள் எனச் சொல்லும்படியாக இருக்கும். இப்போல்லாம் காணோம். பாசுபத வீர சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கங்காள மூர்த்தியை வழிபடுகின்றனர். பாசுபத விரதத்தை ஸ்ரீகங்காள மூர்த்தி மேற்கொண்டதாகவும் சிவபுராணம் சொல்லுகிறது. உடலெங்கும் விபூதி பூசிய வண்ணம் காட்சி அளிப்பார்கள்.

கங்காள மூர்த்திக்குரிய பாடல் தேவாரத்திலே தேட வேண்டி இருக்கு. சரியாத் தேடத் தெரியலை. ஆனால் கீழே உள்ள ஞானசம்பந்தர் பாடல் கிட்டத் தட்ட அதோடு ஒத்துப் போகிறது. ஆனால் இது திருவேட்களம் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் பாசுபதேஸ்வரர் பற்றிய பாடல். இந்த ஊரில் தான் அர்ஜுனனுக்கு ஈசன் பாசுபதாஸ்திரம் கொடுத்ததாகத் தலபுராணம் கூறுகிறது.

சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர்போல்வார்
உடைதனினால்விரற் கோவணவாடை யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே.

அந்தகாசுரனைச் சூலத்தில் குத்தித் தூக்கி ஏந்தியவண்ணம் உலகை வலம் வந்த கோலமே கங்காள மூர்த்தி எனப்படுகின்றது. வலக்காலை முன்னே வைத்து புலியாடை தரித்து ஜடாமுடியோடு காக்ஷி அளிக்கும் கங்காளருக்குச் சில இடங்களில் போர்வாளும் காணப்படும். சூலாயுதத்தை கங்காள தண்டம் என அழைப்பார்கள். பாம்பை ஆபரணமாய்த் தரித்துக் கொண்டிருக்கும் இவர் வலத் திருக்கரத்தில் ஒன்று மான்குட்டிக்கு அன்போடு புல்லை உணவாய்க் கொடுத்துக் கொண்டிருக்கும். அந்தகன் சூலத்தில் தொங்கியவாறு காக்ஷி அளிப்பான். அவன் ரத்தத்தைக் குடித்த வண்ணம் ஒரு பூதமும் உணவுத்தட்டோடு மற்றொரு பூதமும் கூடவே வரும். மற்ற பூதகணங்கள் மூர்த்தியைச் சூழ்ந்து ஆடிப் பாடியவண்ணம் காக்ஷி அளிப்பார்கள். கங்காளர் வலம் வரும் சமயம் வாயுபகவான் தன் காற்றால் வீதியைச் சுத்தம் செய்வானாம். வருணன் நீர் தெளிப்பானாம். வேதங்கள் ஓதிட, சூரிய, சந்திரர்கள் தங்கள் ஒளியான குடையைப் பிடிக்க, நாரதர் இசைக்க வலம் வருகின்றார் கங்காளர். திருவாரூர் மாவட்டம் திருவிற்குடிக்கு அருகே கங்களாஞ்சேரி என்னும் ஊர் கங்காள வழிபாடு இருந்தற்கான ஒரு அடையாளம் எனச் சொல்லப் படுகிறது. மேலும் விரிஞ்சிபுரம்,சுசீந்திரம், திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராசுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களிலும் கங்காள மூர்த்தியின் சிற்பங்களைக் காணமுடியும்.

Tuesday, August 17, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அந்தகாசுர வதம்!


இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகிய இரு அசுரர்களும் பல தவங்கள் செய்து வரங்களைப் பெற்றனர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதில் இரண்யகசிபுவுக்கு பிரஹலாதன் உட்பட மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தனர். ஆனால் இரண்யாட்சனுக்குக் குழந்தைச் செல்வமே ஏற்படவில்லை. ஆகையால் அவன் சிவனைக் குறித்து எவராலும் வெல்ல முடியாத தாயினால் மட்டும் மரணம் நிகழக் கூடிய ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்து வந்தான். அப்போது ஒருநாள் உமையவள் இறைவனார் கண்களை விளையாட்டாய் மூட உலகமே இருளில் ஆழ்ந்தது. சூரிய, சந்திரர்களின் ஒளியும் இல்லாமல் போய் இருந்த அந்த நேரத்தில் அம்பிகையின் சக்தி மூலமும், ஈசனின் நெற்றிக்கண்ணின் வெப்பத்தில் இருந்தும் கரிய நிறமுள்ள ஓர் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே ஜடாமுடி, தாடி, மீசை எனப் பயங்கரத் தோற்றத்துடன் பிறந்த அந்தக் குழந்தையின் அழுகையோ நாராசமாக இருந்தது. சிரித்தால் அகிலாண்டமும் நடுங்கியது. ஆனால் என்ன இது? இந்தக் குழந்தைக்குக் கண்களே இல்லையே? ஆம்! அந்தக் குழந்தை ஈசனின் கண்களை அன்னை மூடிய தருணத்தில் பிறந்ததால் பார்வை அற்று அந்தகனாய் இருந்தது. அந்தகன் எனவே பெயரிட்டார்கள் அந்தக் குழந்தைக்கு.

பிள்ளைவரம் வேண்டிய இரண்யாட்சனிடன் ஈசன், “உனக்குப் பிள்ளை பெறும் பேறு கிடையாது. ஆனால் எவராலும் வெல்லமுடியாத வலிமை உள்ள இந்தக் குழந்தையை உன் பெற்ற மகனைப் போல் வளர்த்துவா. “ என்று சொல்லி அந்தகாசுரனைக் கொடுத்தார். அந்தகனும் இரண்யாட்சனிடம் செல்வாக்கோடு வளர்ந்து வந்தான். இரண்யாட்சனோ தனக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிட்டது என்ற மமதை தலை மேல் ஏற, அனைத்து மக்களையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். இந்தப் பூமியையே ஒரு பாய்போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் கொண்டு போய் மறைத்துவிட்டான். அனைவரும் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, விஷ்ணுவும் வராஹ அவதாரம் எடுத்துக் கடலுக்கடியில் இருந்த பூமியை மீட்டுக் கொண்டுவந்து சேர்த்தார். இரண்யாட்சனும் அழிக்கப் பட்டான். இரண்யாட்சனின் மகனாக அந்தகன் அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும், அவனுக்குப் பார்வை இல்லாமையால் அவனால் இரண்யாட்சனுக்குப் பின் அரசாளமுடியவில்லை. இரண்யகசிபு முடிசூட்டப் பட்டான். அவனோ அண்ணனுக்கு நான் சளைத்தவனோ, இளைத்தவனோ அல்ல என்னும் நோக்கோடு செயல்பட்டான். அனைவரையும் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது எனப் பணித்தான். மீறினவர்களைத் தண்டித்தான்.

ஆனால் இரண்யகசிபுவின் சொந்த மகனான பிரஹலாதனோ விஷ்ணுவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று சொல்லிவந்தான். மகனுக்குப் பலவிதங்களிலும் தண்டனை கொடுத்த இரண்யகசிபு, கோபத்துடன்,” எங்கே இருக்கிறார் உன் விஷ்ணு? காட்டு, பார்க்கலாம்!’ என்று கோபத்துடன் அருகே இருந்த தூணை உதைக்க, மஹாவிஷ்ணு, நரசிம்மமாக அவதாரம் செய்து அவனை அழித்து பிரஹலாதனுக்கு முடிசூட்டினார். இவ்விதம் பார்வை இல்லாத காரணத்தால் அரசாட்சி கிடைக்கவில்லை என்பதால் மனம் நொந்த அந்தகன் பிரம்மாவை தியானித்துக் கடுந்தவம் மேற்கொண்டான். பிரம்மவால் பல வரங்கள் கிடைத்தன. முக்கியமாய் அவனுக்குப் பார்வையும், அழகான மேனியும் பிரம்மா கொடுத்தார். ஆனால் அந்தகாசுரன் சாகாவரமும் கேட்க அதை மறுத்தார் பிரம்மா. பின்னர் அந்தகன் தந்திரம் செய்வதாய் நினைத்துக் கொண்டு, “ எனக்குத் தாயாக இருக்கக் கூடிய பெண் ஒருத்தியால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும். அதுவும் காரணமின்றி நிகழக்கூடாது. அந்தத் தாய் மேல் நான் மோகம் கொள்ளும் சந்தர்ப்பத்தில் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டான். தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்ட பிரம்மா, அப்படியே வரம் தந்தார்.

தாய் மேல் எவனாவது மோகம் கொள்ளுவானா? அல்லது தாய் தான் தன் குழந்தையை அழிப்பாளா? ஆகவே, நம்மை எவராலும் வெல்லமுடியாது என்றே அந்தகாசுரன் திடமாக எண்ணினான். பார்வையும் கிடைத்தது. அழகான உருவும் பெற்றான். பூலோக அரசர்கள் அனைவரையும் வென்றான். மந்தரமலை அடிவாரத்தில் தனக்கெனத் தனியாக ஒரு நகரை உருவாக்கிக் கொண்டான். தன் விருப்பம் போல் வாழத் தொடங்கினான். அவன் மந்திரிகள் அவனுக்கு துர்போதனைகளே அதிகம் சொல்லிக் கொடுத்து அவன் மீள முடியாமல் செய்தும் வந்தனர். மதுவும், மாதுவுமே அந்தகனுக்கு முக்கியமான சுகபோகம் எனச் செய்தனர். அவன் மோகத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மந்திரிகள் ஒரு நாள் காட்டில் ஒரு குகையில் முனிவர் ஒருவர் தன் மனைவியோடு இருப்பதைக் கண்டனர். முனி பத்தினியின் தெய்வீக அழகு அவர்கள் கண்களைக் கவர, தங்கள் மன்னனுக்கு ஏற்ற பெண் இவள் என எண்ணி அந்தகனிடம் போய் அவள் அழகை வர்ணித்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அழகில் மட்டும் தெய்வீகம் இல்லை, உண்மையாகவே தெய்வப் பெண்ணாம் அன்னையவள் அங்கே ஈசனோடு வந்திருந்தாள். அதை அறியாமல் அந்தகனுக்கு அந்தப் பெண்பால் மோகத்தை மூட்டிவிட அந்தகனும் மோகம் தலைக்கேறியவனாய் குகைக்கு வந்து அந்தப் பெண்ணைக் கவர்ந்து செல்ல நினைத்தான். முனிவரை எதிர்த்து அவனால் முடியவில்லை.

தனி ஒருவனால் முடியாமல், தன் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். முனிவருடன் போரிட்டான். ஆனால் சர்வேசனோ அவனது படைகளைச் சின்னாபின்னமாக்கியதோடு அந்தகனையும் தாக்கினார். ஓட்டம் பிடித்தான் அந்தகன். அந்தகனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் ஈசன். தேவியாலேயே அது முடியவேண்டும் என்பதும் உணர்ந்து தேவியைக் குகையிலேயே தனித்திருக்க வைத்துவிட்டுத் தாம் மட்டும் நந்தியெம்பெருமானோடு கிளம்பிச் சென்றார். இங்கே அன்னைக்குத் துணையாக சப்தகன்னியரும் இருந்தனர். அந்தகனுக்கு தேவி தனித்திருக்கும் செய்தி கிடைத்து மீண்டும் ஒரு பெரிய சேனையோடு வந்தான். போர் நடந்தது. அந்தகனின் சேநாதிபதியான “விசுஸன்” என்பவன் பெரிய பாம்பாக மாறி வந்து தேவிக்குத் துணையாகப் போரிட்ட அனைவரையும் விழுங்க, யோக சக்தியால் அறிந்த ஈசன், அம்பினால் விசுஸனை அழித்தார். எனினும் அசுர சக்தி வளர்ந்தது. சுக்ராசாரியார் தனது “ம்ருத்யுஞ்ச மந்திர”த்தின் மஹிமையால் அசுரர்களைப் பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார். தேவர்கள் சுக்ராசாரியாரைத் தந்திரமாய்ப் பிடித்து ஒரு பழமாக மாற்றி ஈசனிடம் கொடுக்க அவரும் பழத்தை விழுங்கிவிட்டார். அசுர சேனையும் பாதிப்படைந்தது. ஆனாலும் அந்தகன் தன் மாயையால் மும்மூர்த்திகளைப் போன்ற தோற்றம் எடுத்து வந்து அனைவரையும் குழப்பினான். முடிவு நெருங்குவதை நினைத்த ஈசன் தன் வலத்தோளில் இருந்து தன் சக்தியைத் தோற்றுவித்தார். பல முகங்கள், பல நாக்குகளோடு தோன்றிய அந்தச் சக்தியானது மேலும் பல சக்திகளை உண்டாக்கி, அசுரர்களின் ரத்தம் தரையில் விழுமுன் உறிஞ்சிக் குடித்தனர். இதனால் அசுர ரத்தத்தில் இருந்து மேலும் அசுரர்கள் உருவாகாமல் அசுர சேனை அழிய ஆரம்பித்தது. விரைவில் சிவனுடன் தனித்துப் போரிட வேண்டி வந்தது அந்தகனுக்கு.

அந்தகனை வீழ்த்தித் தன் சூலத்தால் அவன் உடலில் குத்தித் தூக்கினார் ஈசன். பின் சூலத்தைத் தன் அம்சம் ஆன ருத்ரனிடம் அளிக்க, அவரும் அதை ஏந்திய வண்ணம் உலகை வலம் வந்தார். அந்தகனின் ரத்தம் பூமியில் விழுந்தால் மீண்டும் அசுர குலம் தலை எடுக்கும் என்பதால் அவரோடு கூடவே ஒரு பூதம் அந்த ரத்தத்தைக் குடித்துக் கொண்டே வந்தது. சூலத்தில் தொங்கிய அந்தகன் இறக்கவில்லை. ரத்தம் உறிஞ்சப் பட்டது. ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மேலும் சிறந்த சிவ பக்தன் ஆனதால் சிவநாமத்தையும் பஞ்சாக்ஷரத்தையும் உச்சரித்தான். ஆயிரம் வருடங்கள் இவ்வாறு சிவனாருக்குக் குடை போல் வலம் வந்த அந்தகன் அதன் காரணமாகவே முக்தியும் பெற்றான். அவனை “ப்ரிங்கிரீடன்” என்ற பெயரில் தன் சிவகணங்களில் ஒருவராக திருக்கைலையில் இருக்குமாறு அருளுகின்றார். இந்த அந்தகாசுர வதம் புரிந்த மூர்த்தியை அந்தகாசுர சம்ஹாரர் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்த மூர்த்தியின் வடிவம் திருக்கோயிலூரில் காணக்கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
முறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. திருஞாநசம்பந்தர் தேவாரம்


ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே. ஆறாம் திருமுறை, நாவுக்கரசர் தேவாரம்


காஞ்சிக்கருகே திருப்புட்குழி என்னு ஊர் பெயர் மாறி மணிகண்டீஸ்வரர் கோயில் என்னும் பெயரால் வழங்கப் படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போன்ற ஊர்களில் அந்தகாசுர வதம் பற்றியும் அவனை அழித்த பைரவர் பற்றியும் காணலாம். அருணகிரிநாதரின் திருவேற்காடு திருப்புகழிலும் அந்தகாசுர வதம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே

பதம் பிரித்துப் பொருளோடு:


பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே ... பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே,//

ஈசனின் வீரட்டானத் திருத்தலங்களில் திருக்கோயிலூர் இரண்டாவதாய்ச் சொல்லப் படுகிறது. அந்தகாசுரனைச் சூலத்தால் ஈசன் குத்தியபோது சிந்திய ரத்தத்தில் இருந்து அசுரர்கள் மேன்மேலும் உற்பத்தி ஆகவே காளி கபாலத்தால் அதை ஏந்துகிறாள். சிந்திய ரத்தக்கோடுகள் குறுக்கும், நெடுக்குமாய் எட்டுத் திசைகளிலும் விழுந்து 64 பதங்களாய் விழ, ஈசன் ஒவ்வொரு பதத்திலும் தன் விஸ்வரூப அம்சமான பைரவரைப் பிரதிஷ்டை செய்கிறார். 64 பைரவர்களாலும் அந்தகாசுரன் அழிக்கப் படுவதாய் ஐதீகம். வீடுகட்ட வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாளில் ஆரம்பிப்பது வழக்கம். இந்த 64 பைரவர்களுக்கும் செய்யப்படும் வழிபாடே வாஸ்து சாந்தி நிவர்த்தி எனப்படும். இவர்களுக்குச் செய்யப் படும் வழிபாடே வாஸ்து பூஜை என்றும் சொல்லப் படும். அடுத்த பதில் பைரவர் அஷ்டகமும், பஞ்சரத்னமும் ஒரு பார்வை. பைரவர் பற்றித் தனியாகப் பதிவு வரும்.

Sunday, August 15, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! வீரபத்திரர்!

வீரபத்திரர்:-
சிவபெருமானின் வடிவங்களில் மிகவும் முக்கியமானது வீரபத்திரவடிவம். தக்ஷனின் யாககுண்டத்தில் விழுந்து இறந்த அன்னையின் முடிவுக்கு தக்ஷனைத் தண்டிக்க எண்ணிய ஈசன் தன்னில் இருந்து உருவாக்கிய வடிவே வீரபத்திர வடிவம். தக்ஷன் கதை நமக்கெல்லாம் நன்கு தெரியும். அருமையும் பெருமையுமாக வளர்த்த தன் மகள் தாக்ஷாயணியை ஈசனுக்கு மணம் புரிவித்ததில் தக்ஷனுக்கு இஷ்டமே இல்லை. பித்தன் ஆன ஈசனுக்குப் போய் என் மகளைக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டதே எனப் புலம்பினான். மேலும் முதல்முறை மணம் செய்விக்க ஏற்பாடுகள் செய்தபோது ஈசன் மறைந்து போக, மறுமுறை மீண்டும் தவம் செய்து தாக்ஷாயணி ஈசனை அடைந்திருந்தாள். ஆனால் தக்ஷனுக்குத் தெரியாமலேயே இது நடக்க நேரிட்டது. அதிலும் தக்ஷனுக்குக்கோபம். ஆனாலும் தேவர்களால் சமாதான மொழிகள் கூறப் பட்டு ஈசனையும், அன்னையையும் பார்க்க கைலை வந்த தக்ஷன் பூதகணங்களால் தடுக்கப் படவே. தக்ஷப் பிரஜாபதியான என்னை இகழ்ந்த உங்கள் ஈசனை நான் இனி வணங்க மாட்டேன். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்குகின்றனர். சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக் கொண்டு திரியும் உங்கள் சிவன் ஒரு பித்தன். நான் மட்டுமில்லாமல் இனி உலகில் எவரும் ஈசனை வணங்கக் கூடாது.” என்று கூறி விட்டுத் திரும்பித் தன் நாட்டு மக்களுக்குக் கட்டளையும் போட்டான்.

அதன் பின்னர் தந்தையான பிரம்மா செய்த யாகத்துக்கு ஈசன் சார்பில் வந்திருந்த நந்தி தேவரையும், ஈசனையும் இழிவு செய்தும் பேசினான் தக்ஷன். அதோடு நில்லாமல் இனி எந்த வேள்விக்கும் ஈசனை அழைக்கக் கூடாது. வேத மந்திரங்களையே மாற்றவேண்டும் எனவும் தந்தையிடம் சொன்னான். நந்திதேவர் கோபத்துடன் வந்த இடத்தில் அவனுடன் தகராறு செய்யவேண்டாம் என்ற எண்ணத்தில் செல்வதாய்க் கூறிவிட்டு தக்ஷனுக்கு விரைவில் அழிவு ஏற்படும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்து தக்ஷன் யாகம் செய்ய முற்பட்டு அதற்கு ஈசனைத் தவிர அனைவரையும் அழைத்தான். ததீசி முனிவர் ஈசனை விலக்கிச் செய்யும் யாகத்தால் பலன் இல்லை எனக் கூறிவிட்டு அந்த யாகசாலையில் இருந்து சென்றுவிட்டார். மேலும் பல துர்சகுனங்கள் ஏற்பட்டாலும் விடாமல் தக்ஷன் யாகத்தைத் தொடர்ந்தான். நாரதரால் விஷயம் கேள்விப் பட்டு தாக்ஷாயணி யாகத்துக்குச் சென்று தந்தையை உண்மையை உணர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அங்கே வந்து சேர்ந்தாள். தாக்ஷாயணியையும் பெற்ற மகள் எனக் கூடப் பார்க்காமல் இகழ்ந்த தக்ஷன், ஈசனையும் அவ்வாறே இகழ்ந்து பேசினான். கோபம் கொண்ட அன்னை கைலையை அடைந்து நடந்த விஷயங்களைக் கூற ஈசனின் கழுத்தின் விஷத்தின் ஒரு கூறு அவரின் நெற்றிக்கண் வழியே ஆயிரம் முகங்களுடனும், இரண்டாயிரம் கரங்களோடும் தோன்றிய வீர புருஷனே வீரபத்திரன்.அம்மையின் கோபத்தில் இருந்து தோன்றியவளே பத்ரகாளி. இருவரும் தக்ஷனின் யாகசாலையை அடைய தக்ஷன் வீரபத்திரரை யார் எனக் கேட்க, தாம் சிவகுமாரன் எனவும் யாகத்தின் அவிர்பாகத்துக்காக வந்திருப்பதாயும் கூற தக்ஷன் தர மறுக்கிறான். கோபம் கொண்ட வீரபத்திரர் யாகசாலைக்குள் புகுந்து தாக்குகின்றார்.

தேவர்கள் மேலேயும் தாக்குதல் நடத்தி குபேரன், அக்னி, யமன், இந்திரன், நிருதி போன்றவர்களுக்கு மேனியின் ஒரு உறுப்பு இழக்க நேரிடுகிறது. அப்படியும் கோபம் தணியாது இருந்த வீரபத்திரர் தக்ஷனின் தலையை அறுத்துக் கீழே விழுமுன் தடுத்து அக்னியிடம் கொடுத்து உண்ணச் செய்தார். அப்போது அங்கே ஈசன் விடையேறு வாகனனாகத் தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்தார். வீரபத்திரரை நோக்க அவரும் யாகப் பசுவாக வந்திருந்த ஒரு செம்மறி ஆட்டின் தலையை வெட்டி தக்ஷன் உடலில் பொருத்த அன்றிலிருந்து தக்ஷனுக்கு ஆட்டுத் தலை கிடைக்கிறது. மனிதத் தலையோடு ஆணவம் பிடித்துத் திரிந்த தக்ஷன் ஆட்டுத் தலை பொருத்தப் பட்டதில் மனம் மாறி ஈசனைத் துதிக்கிறான். வீரபத்திரரும், காளியும் கைலை செல்கின்றனர். இந்த வடிவே ஈசனின் வீரபத்திர வடிவு. சிவனின் அட்ட வீரட்டானங்களில் இந்த தக்ஷனின் வதமும் ஒன்று என்றாலும் இதை ஈசன் நேரடியாகத் தான் நிகழ்த்தாமல் வீரபத்திரரைத் தோற்றுவித்து அவர் மூலமே நடத்திக் கொண்டார்.

வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும், தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார். இங்கே தான் வீரபத்திரரும், காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் திருப்பறியலூர் தான் அட்ட வீரட்டானத் தலங்களில் தக்ஷனின் தலையைக் கொய்த இடமாகக் கருதப் படுகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒன்றும் இந்த ஊரைக் குறித்துக் காணக் கிடைக்கிறது.

1437.
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
1.134.1
1438

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.



மாணிக்க வாசகரோ தம் திருவுந்தியாரில் தக்ஷன் தலையைக் கொய்தது பற்றிக் கூறியதாவது:

"சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வபாடி உந்தீ பற
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

Friday, August 13, 2010

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! திரிபுராந்தகர்!

அப்பா சம்ஹாரத்திற்குப் பயணப்படும்போது பிள்ளையை வணங்கிச் சொல்லவில்லையாம். அதனால் தேர் அச்சு முறிந்துவிட்ட்தாய்க் கூறுவார்கள். விநாயரை வணங்காமல் அவரிடம் உத்தரவு ஈசன் சம்ஹாரத்திற்குக் கிளம்பித் தேரில் காலை வைத்ததுமே அச்சு முறிந்த்தாம். அந்த இடம் சென்னைக்கு அருகே திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள அச்சிறுபாக்கம் என்னும் ஊர் எனச் சொல்வார்கள். அங்கே உள்ள தலபுராணமும் அவ்வாறே கூறுகிறது. அங்கே உள்ள விநாயகருக்கும் அச்சிறுத்த விநாயகர் என்ற பெயர் எனவும், ஈசன் அங்கே உள்ள மலைமீது லிங்கமாய் எழுந்தருளியிருப்பதாயும் கூறுகின்றனர். இங்கே திரிநேத்ரதாரி என்ற பெயரிலேயே ஒரு முனிவர் வந்து தவம் செய்து ஈசனின் திரிபுர சம்ஹாரக் கோலத்தைக் கண்டு களித்ததாயும் வரலாறு சொல்கின்றது. இந்த்த் தலம் மிகப் பழைய தலம் என்பதற்குத் திருஞானசம்பந்தரின் பாடல் ஒன்றே போதும். பின்னர் விநாயகரை வணங்கிவிட்டு ஈசன் கிளம்பிச் சென்று திரிபுர சம்ஹாரத்தை முடித்ததாய்ச் சொல்வார்கள்.

திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்ததாய்ச் சொல்லப் படும் இடங்கள் வாரணாசி மற்றும் திரியம்பகேஸ்வரர் குடி கொண்டிருக்கும் ஊரான திரியம்பகம் எனப் பரவலாகக் கருதப் படுகின்றது. ஆனால் “தென்னாடுடையான்” என நாம் போற்றும் ஈசன் இங்கே தமிழகத்தில் திருவதிகை வீரட்டானத்தில் நிகழ்த்தினார் எனத் திருவதிகைத் தலபுராணம் கூறுகின்றது. அட்ட வீரட்டானங்களில் ஒன்று திருவதிகை வீரட்டானம். இங்கே வைகாசி மாதத்தில் திரிபுரசம்ஹார வைபவம் நடைபெறுவதாயும் கேள்விப் படுகிறோம்.

ஈசனுக்குச் சரமாய் இருந்த மஹாவிஷ்ணு இங்கே வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு அருகே அதிஉக்ர நரசிம்மராக சரநாராயணப்பெருமாள் என்ற பெயரிலே காட்சி கொடுப்பதாயும் சொல்கின்றனர். திரிபுரம் எரிக்க ஈசன் கை அம்பின் சரமாய்ச் செயல்பட்ட களைப்பு தீர அங்கே அதி உக்ர நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி கொடுப்பதாயும், வேறு எங்கேயும் நரசிம்மரை சயன கோலத்தில் பார்க்க முடியாது என்றும் கூறுகின்றனர். திரிபுர சம்ஹாரத்திற்குப் பின்னர் ஈசன் ஆடிய ஆட்டத்திற்குப் பாண்டரங்கம் எனவும் கொடுகொட்டி எனவும் கூறப்படுகின்றது. திரிபுர சம்ஹாரக் கோலம் தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாய்க் காணமுடியும்.