எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 29, 2011

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சண்டேச அனுகிரஹமூர்த்தி!


சோழநாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஊர் திருச்சேய்ஞலூர் ஆகும். சூரனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான் இந்தத்தலத்தில் ஈசனை வணங்கி உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். சர்வசங்காரப் படை என்றும் கூறுவர். சேய் வழிபட்ட ஊராகையால் சேய் நல் ஊர் என்பது மருவி திருச்சேய்ஞலூர் என்றாகித் தற்காலத்தில் சேங்கலூர் என வழங்கப் படுகிறது. காவிரியின் கிளைநதியாகிய மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்திற்கு மண்ணியாறே தீர்த்தமாகவும் அமைந்துள்ளது. இவ்வூரில் யக்ஞதத்தன் என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவனுக்கும் பத்திரை என்னும் அவன் மனைவிக்கும் ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விசாரசருமன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். பிறக்கையிலேயே தெளிந்த அறிவோடு பிறந்த அந்தக் குழந்தைக்கு யாரிடமும் பயிலாமலேயே தானே அனைத்தையும் உணரும் அறிவு இருந்தது. வேதங்களை நன்கு உணர்ந்திருந்தான். உரிய வயதிலே தகப்பனால் உபநயனமும் செய்விக்கப்பட்டான்.

வேத ஆகமங்களின் வழி நடந்த அந்த இளைஞன் ஈசன் ஒருவனே நம்மை வழிநடத்த வல்லான் என்ற பேரறிவை மிகச் சிறு வயதிலேயே பெற்றிருந்தான். அன்றாடம் சிவ வழிபாடு செய்து வந்தான். அவனுடைய நண்பன் ஒருவன் பசுக்களை மேய்க்கையில் ஒரு பசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றது கண்டு அதை அடித்தான். இதைக் கண்ட விசாரசருமனுக்கு மனம் துடித்தது. வாயில்லாப் பிராணியான பசுவை அடிக்கக் கூடாது என நினைத்துத் தானே அன்று முதல் பசுக்களை மேய்க்கும் பணியை வலிந்து ஏற்றான். பசுக்களை தெய்வமாய்க் கண்டதால் அவற்றைச் சிறப்பான முறையில் பராமரித்து வந்ததோடு, வழிபாடுகளும் செய்து வந்தான். பசுக்களை மேய்க்கையிலேயே நேரத்தை வீணாக்காமல் அந்த மண்ணியாற்றங்கரையிலேயே அங்குள்ள அத்திமரத்தின் கீழே மணலால் சிவலிங்கம் அமைத்து, கருவறை, மண்டபம், சுற்றுச்சுவர்கள், கருவறை விமானம், கோபுரங்கள் போன்றவை அமைத்துக் கோயில் போலக் கட்டி வழிபாடுசெய்தான். பசுக்கள் விசாரசருமனின் பராமரிப்பில் செழித்துக் காணப்பட்டதோடு பாலையும் தாராளமாய்ச் சொரிந்தது.

பசுக்களின் பாலைக் கறந்து தான் கட்டிய மண்ணாலான கோயிலின் வழிபாட்டிற்கும், அபிஷேஹத்துக்கும் அந்தப் பாலைப் பயன்படுத்திக்கொண்டான் விசாரசருமன். நாளாவட்டத்தில் இது அன்றாட நடவடிக்கையானது. பசுக்களின் சொந்தக்காரர் பொறுத்துப் பார்த்தும் முடியாமல் விசாரசருமனின் தந்தையிடம் புகார் செய்தார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டுத் தன் மகனைத் தாம் கண்டிப்பதாய்க் கூறினார். அதன் பேரில் மறுநாள் பசுக்களை மேய்ச்சலுக்கு விசாரசருமன் அழைத்துச் சென்றதும் தந்தையார் பின் தொடர்ந்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கையில் மணலால் கோயில் கட்டி மகன் வழிபாடுகள் செய்வதையும், கறக்கும் பாலெல்லாம் அதற்கே செலவாவதையும் கண்டார். மகனைக் கண்டித்தார். ஆனால் தன் வழிபாட்டில் ஆழமாக ஒருமித்த நினைப்போடு மூழ்கி இருந்த விசார சருமனுக்குத் தந்தையின் குரல் காதில் விழவில்லை. தந்தை அவர் முதுகில் ஓங்கி அடித்தார். அப்போதும் விசாரசருமனின் ஒருமித்த வழிபாடு கலையவில்லை. தந்தையார் கோபத்துடன் பால்குடங்களை எட்டி உதைத்தார். எல்லாப் பாலும் மணலில் கொட்டிக் கவிழ்ந்தது.

திரும்பிப் பார்த்த விசார சருமர் கோபத்துடன் கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்துத் தந்தையை ஓங்கி அடித்தார். என்ன ஆச்சரியம்! அவர் கையில் எடுத்த கம்பு மழுவாக மாறி விசாரசருமரின் தந்தையாரின் காலை வெட்டிவிட்டது. துடித்துப் போனார்கள் இருவரும். தந்தை அப்போதே இறந்தார் என்றும் கூறுவார்கள். அப்போது அங்கே அன்னையோடு காட்சி கொடுத்த ஐயன் தன் சடாமுடியில் சூடிக்கொண்டிருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்து, தம் அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் அவருக்குக் கொடுத்து, “விசாரசருமா! உம் தொண்டை நாம் மெச்சினோம். இன்று முதல் உன் தந்தை நாமே! எம் அடியார்களுக்கெல்லாம் இன்று முதல் நீ தலைவனாக இருப்பாய். எம்மைத் தரிசிக்க எவர் வந்தாலும் உன்னையும் தரிசித்து உன்னிடம் தாங்கள் எம்மைத் தரிசித்ததைச் சொல்லிவிட்டுப் போவார்கள். இன்று முதல் நீ சண்டேசன் என்ற பதவியைப் பெறுவாய்!” எனக் கூறித் தம் திருக்கரங்களால் சண்டேசருக்கு அனுகிரஹம் செய்தார். தம் திருக்கரங்களால் பரிவட்டத்தையும் சூட்டிக் கொன்றை மாலையையும் சூட்டினார்.


படம் நன்றி விஜய்

இவரே சண்டேச அனுகிரஹ மூர்த்தி என்பார்கள். சண்டேசருக்குப் பரிவட்டத்தைச் சூட்டும் கோலத்தில் காணப்படுவார். சேங்கனூர் என்னும் திருச்சேய்ஞலூரில் சண்டேசர் பிறை, சடை, குண்டலம் போன்றவற்றோடு காணப்படுவார் என்கிறார்கள். திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் திருச்சேய்ஞலூர் தேவாரத்தில் கீழ்க்கண்ட பாடல் ஈசனின் இந்தத் திருவிளையாடலைப் பாடுகிறது

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 521

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலான இது கட்டுமலை மேல் உள்ளது. கர்பகிரஹத்தைச் சுற்றிக் கட்டுமலை மேல் ஒரு பிராகாரமும், கீழே ஒரு பிராஹாரமும் உள்ளன. இறைவன் இஙே சத்யகிரீஸ்வரர் என்ற பெயரோடும், அன்னை சகிதேவியம்மை என்ற பெயரோடும் அருள் பாலிக்கின்றனர். சண்டேசர் அன்று முதல் இறைவனின் மகனாக ஆனதால் இறைவனது நிர்மாலியத் தொட்டிக்கும் சண்டேசரின் கோயிலுக்கும் குறுக்கே எவரும் செல்லமாட்டார்கள். தஞ்சைப் பெரிய கோயில் சண்டேச சிற்பம், கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச சிற்பம் ஆகியன அவற்றின் எழில் அமைப்பால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


என்னோட குறிப்புகள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் இணையத்தில் இருந்தும், விக்கிபீடியா, சைவம் ஆர்க் தளங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டி எழுதி உள்ளேன்.

Monday, December 12, 2011

பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்!

சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியபாளையம். அங்கே உள்ள பவானி அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆனது. அந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடாக வேப்பிலையால் ஆடை அணிந்து கொண்டு நிறைவேற்றுவார்கள். ஆகவே நாங்கள் சுருட்டப்பள்ளி சென்ற போது அங்கேயும் செல்ல நினைத்துச் சென்றோம். நாங்கள் போனபோது சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் ஒரு கூற்று உண்டு. அம்மன் கையில் சக்கரமும் உள்ளது; கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப் படுகிறது. அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள் என்கின்றனர்.


இங்கே கோயில் கொண்டிருப்பது பவானி அம்மனா? ரேணுகா தேவியா?? சந்தேகம் துளைத்தது. ஆகவே கோயில் தல வரலாற்றைக் கேட்டோம். தல வரலாற்றின் மூலம் ரேணுகா தேவியே இங்கே பவானி அம்மன் என்ற பெயரில் வீற்றிருப்பதாய்த் தெரிய வந்தது. தலவரலாறு வருமாறு: ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்தும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பின்னர் எழுந்து அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சி அடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகா தேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள். வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு அல்லாமல் ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரஹம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர்.

ஆக ரேணுகா தேவியே இங்கே பவானி என்ற பெயரில் பவனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கின்றனர். கோயில் பல வருடங்கள் வரையிலும் மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும் தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது. பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம். நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். இங்குள்ள முக்கியமான பிரார்த்தனை வேப்பிலைகளால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வது தான்.

Sunday, December 11, 2011

ஆகாச மாரியம்மனைத் தெரியுமா?


கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் இது. இங்கே எந்நாளும் இப்படி தீபம் மட்டுமே எரியும் கருவறை இருக்கிறது. இங்கே அம்மனுக்கெனத் தனியாக சுதைச் சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது. ஏனெனில் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாயும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இது அறுநூறு ஆண்டுகள் முன்னர் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும்.

ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.