எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 08, 2015

ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் பட்டினி கிடக்கிறான்!

அரங்கனோடு சேர்ந்து கொள்ள மேலும் அரங்கமாநகரிலிருந்து வந்தவர்களில் சில நாட்டியப் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் துருக்க வீரர்களிடம் மாட்டிக்கொள்ள ஒருத்தி மட்டும் எப்படியோ தப்பி அரங்கனைத் தேடிச் செல்லும் இருவருடன் சேர்ந்து கொண்டாள். இருவருமே இளைஞர்கள். தங்களுடன் ஓர் இளம்பெண் சேர்ந்து கொண்டது உள்ளூரப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு நடந்தனர். வழியில் சத்திரம் ஒன்றில் தங்கியபோது அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்த துருக்க வீரர்களிடமிருந்து அவளைக் காக்கவேண்டி நெற்குதிருக்குள் அவளை மறைத்தனர். பின்னர் துருக்க வீரர்கள் திரும்பியதும் அங்கிருந்து தப்பியவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆண் வேடம் போட்டு அழைத்துச் சென்றனர். இருந்தும்  மீண்டும் டில்லி சுல்தானின் வீரர்களின் தலைவன் ஒருவனிடம் மாட்டிக் கொள்ள விரர் தலைவன் அவளைப் பெண் என அடையாளம் கண்டு பிடித்தாலும் என்ன காரணத்தாலோ விட்டு விடுகிறான். 

மூவரும் உள்ளூரக்கலக்கத்துடன் மேலே நடக்க பாண்டியனுக்கு உட்பட்ட வாணாதிராயர் பரம்பரையார் அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்டு எதிர்கொண்டு அழைத்தனர். இரு இளைஞர்களையும் ஓர் இளம்பெண்ணையும் பார்த்துத் திகைக்க இளம்பெண் தன்னுடைய மனைவி என அவர்களில் தலைவன் ஆன இளைஞன் கூற விட்டு விடுகின்றனர். ஒரு வாரம் அங்குமிங்கும் அலைந்தவர்கள் ஒரு வழியாக அரங்கன் போன பாதையைக் கண்டுபிடித்தனர். விரைவில் அரங்கன் ஊர்வலத்தையும் கண்டனர். பல்லக்கில் எவ்வித நகைகளும் இல்லாமல் தன் பரிமள கஸ்தூரி மணம் மட்டும் சுற்று வட்டாரம் முழுதும் மணக்கக் காட்சி அளித்த அரங்கனைப் பார்த்துக் கண்ணீர் விட்டனர். அதோடு ஆரம்பத்தில் அரங்கனோடு சேர்ந்து வந்திருந்த கூட்டமும் குறைந்து போயிருந்தது. பெட்டகங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட விபரமும் அதிலிருந்து உடல் நலம் சரியில்லாமல் மனம் கலங்கிப் படுத்திருந்த பிள்ளை உலகாரியரையும் கண்டு விசனப்பட்டார்கள். 

அவர்கள் திருவரங்கத்திலிருந்து வருவதைக் கேள்விப் பட்ட பிள்ளை உலகாரியர் டில்லி வீரர்கள் அரங்கமாநகரை விட்டுச் சென்றுவிட்டனரா என விசாரித்தார். அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருப்பதை இளைஞன் கூறக் கேட்ட பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு இப்படி ஒரு சோதனையா என மனம் வேதனைப்பட்டார்.  வந்தவர்கள் பல்லக்கின் அருகே சென்று பார்க்க, பல்லக்கு இருந்த கோலம் அவர்கள் மனதைப் பதற அடித்தது. ராஜகிளி, "அரங்கா! அரங்கா!" என்று சோகமாகக் கூறித் தன் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டது. பல்லக்கைச் சுற்றி இருந்த சித்திரத் துணிகள் கிழிந்து போய் இருந்தன. விதானங்கள் உடைபட்டு ஆங்காங்கே தூசியும் மண்ணும் கலந்து பல்லக்கின் ஒளியே குறைந்து காணப்பட்டது. அப்போது வந்தவர்கள், பெருமாளுக்கு விளக்காவது வைக்கக் கூடாதா எனக் கேட்க, எண்ணெய் இல்லாக் கொடுமையைச் சொல்லி அரற்றினார்கள் அரங்கனின் பரிசனங்கள். அதற்குள்ளாக இன்னொருவர் பல்லக்கின் திரையைத் திறந்து அழகிய மணவாளரின் தரிசனத்தைக் காட்ட அதைக் கண்ட மூவரும் திகைத்து உறைந்து போனார்கள்.

தங்கக்கீரீடம் தாங்கி, அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரீடமாக இருக்கும். நெற்றியில் நீலக்கல், வைரக்கல்லினால் ஆன திருநாமம், காதுகளில் கர்ணப்பூக்கள், மார்பில் பொன்னாபரணங்களும், ரத்தின ஆபரணங்களும் புரள, தங்கப்பூணூல் ஒளி வீச, கை,கால் இடைகளிலும் பொன் ஆபரணங்களைப் பூண்டு சர்வாபரண பூஷிதராய்க் காட்சி அளிக்கும் அரங்கன் இன்று படு ஏழையாகக் காட்சி அளித்தார். அரையில் சின்னப் பருத்தி வேட்டி. கையால் நெய்யப்பட்ட நூலினால் ஆன பூணூல், தலையில் கிரீடம் இல்லை! காதுகளில் ஆபரணங்களோ, திருமார்பில் ஆபரணங்களோ கிடையாது! கைகள், கால்கள், இடை எங்கும் ஆபரணம் எதுவும் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளித்தார். அரங்கனின் நிலைமை பரிதாபகரமாக இருந்ததோடு அல்லாமல் மேலும் வருத்தத்தை அளிக்கும் சொல்லைக் கூறினார் அங்கிருந்த ஒருவர். காலையிலிருந்து பெருமாளுக்கு அமுது செய்யவே இல்லை என்றும் அமுது செய்ய வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூற வந்தவர்கள் கண்களில் கண்ணீர் மழையெனப் பெயதது. 

அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அரங்கனுக்கா இந்நிலைமை? இது என்ன கொடுமை! அரங்கனின் பொருட்களைக் கூடக் களவாடும் மனிதர்கள் இருக்கிறார்களா? மனிதர்கள் செய்யும் இந்தக் கொடுமையை அரங்கன் ஏன் கண்டிக்கவில்லை? தண்டிக்கவில்லை? ஏனெனில் இது அவன் செயல் அன்று! மனிதர்கள் செய்யும் கொடுமை! அவர்களின் விதியால் விளைந்த இந்தக் கர்ம பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். அரங்கனுக்கு அதனால் எவ்விதக் குறையும் இல்லை. அவன் இதற்கு எதுவும் செய்ய இயலாது. அவர்களாகத் திருந்தி வந்தால் தான் உண்டு. அதற்கும் காலம் கனிய வேண்டும். அவன் விதியை மீறி எதுவும் செய்யும் அதிகாரமோ, எண்ணமோ அரங்கனுக்குக் கிடையாது. ஆகையால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்.  

திருவரங்க ஊரை மட்டுமின்றிச் சுற்று வட்டாரம் முழுதையும் அரங்கன் தான்பரிபாலிப்பாதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை. அவருக்கில்லாத சொத்தா? ஆனால் அனைத்தையும் துறந்து இதோ ஒரு துறவி போல் ஒரு காலம் அமுது செய்விக்கக் கூட வழியில்லாமல் அரங்கன் நிற்கையில் மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்!

Friday, September 04, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இனி மேலே நடந்தால் தான் விழுந்துவிடுவோம் என்பதால் தேசிகர் அங்கேயே நின்று விட்டார்.  இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் தான் இரண்டே அடி தூரத்தில் இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்து விட்டு தேசிகர் தாம் தெய்வாதீனமாகத் தப்பித்ததை நினைத்து வியந்தார். பின்னர் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தம் சீடரைக் கூப்பிட்ட வண்ணம் பள்ளத்தாக்கின் கரையோரமாகவே நடந்து சென்றார். சற்று நேரத்தில் அவர் குரலுக்குப் பதில் குரல் வந்தது. தூரத்தில் அக்கரையிலிருந்து வந்த குரலைக் கேட்ட வண்ணம் மேலும் நடந்தார். அதே போல் எதிர்க்கரையிலிருந்த பிரமதந்திரரும் குரல் கொடுத்துக் கொண்டே வர இருவரும் ஒரு நாழிகை நடந்து பள்ளத்தாக்கு முடிவடையும் இடத்தில் மேற்குக் கரை ஓரமாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்கள் விருத்தாந்தஙகளையும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பிரமதந்திரர்  டில்லித் துலுக்க வீரர்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்று கொண்டிருப்பதாயும் ஆகவே தாங்கள் இருவரும் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்தால் அவர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார். பின்னர் இருவரும் ஆலோசித்து மேற்குத் திசை நோக்கிப் பயணப்பட்டனர். இப்படி அரங்கனைத் தேடிச் சென்றவர்களும், அரங்கனோடு சென்றவர்களும் விதி வசத்தாலும், பிராண பயத்தாலும் பிரிந்து ஒவ்வொரு திசை நோக்கிப் பயணப்பட்டனர். கள்வர் பற்றில் விட்டுப் பிரிந்த அரங்கனைத் தேடிப் போவோமா?

முதலாவது கள்வர் பற்றை விட்டுச் சென்ற திருவரங்கன் ஊர்வலத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை எவ்விதத் தொந்திரவும் எங்கிருந்தும் வரவில்லை. பிள்ளை உலகாரியரும் பெருமாளின் பல்லக்கிற்குச் சிறிது தூரம் முன்னாலேயே தமது சீடர்களோடு சென்றார். அப்போது மூன்றாம் நாள் மாலையில் அனைவரின் தலைக்கு மேலும், 'கீ, கீ" எனக் கிளி கத்தும் சப்தம் கேட்கவும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர். அப்போது கூரக் குலோத்தமதாச நாயனார் என்பவர் உலகாரியரைப் பார்த்து, :சுவாமி இது அரங்கனுடனேயே வரும் ராஜகிளியைப் போல் தெரிகிறது. நம்மை இனங்கண்டு அழைக்கிறது போலும்!" என்றார். மீண்டும் கிளி என்ன செய்கிறது என்று பார்த்தால், கிளி, "கீ, கீ" என்று கத்தியவண்ணம் பின்னோக்கிப் பறந்தது. அதைப் பார்த்த பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதால் கிளி தங்களை அழைக்கிறது எனப் புரிந்து கொண்டார். ஆகவே அவரும் திரும்பி விரைந்து பின்னோக்கிச் சென்றார்.

அரங்கன் பல்லக்கோடு வரும் ஊர்வலத்தை அடைந்த பிள்ளை உலகாரியர் திகைத்து நின்றார். மாபெரும் கள்வர் கூட்டம் அரங்கனையும், அரங்கனோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தது. பரிசனங்களில் மூவர் கள்வரால் அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்தனர். கள்வர் தலைவன் கைகளில் ஆயுதபாணியாய் நின்றிருந்தான். வலக்கையில் வேலாயுதம் தூக்கிய வண்ணம் இருக்க தன் ஆட்களைப் பெட்டகங்களைத் தூக்கி எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பெட்டகங்களைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். உலகாரியர் அவனைப் பார்த்து இது அரங்கனின் சொத்துக்கள் என்றும் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வது மகா பாபம் என்றும் கூறக் கள்வர் தலைவனும் பாபம் தான் என்றாலும் அதைப் பார்த்தால் நாங்கள் பிழைக்க வழி என்ன என்றும் கேட்டான்.

மேலும் இது தன் எல்லைக்குள் வந்த சொத்துக்கள் என்றும் இவற்றை அபகரிப்பது தன் உரிமை என்றும் சொன்னான். கள்வர்களான அவர்கள் இந்தக் காட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்வதாகவும், இது அவன் எல்லைக்குள் வந்த சொத்தென்பதால் அவற்றைப் பறித்துக் கொள்வதாயும் திட்டவட்டமாய்க் கூறினான். உலகாரியரும் தம்மால் இயன்ற அளவு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். கள்வர் தலைவன் கேட்பதாக இல்லை. மனம் வேதனை அடைந்து பொறுமை இழந்த உலகாரியர் தம்மிடம் இருந்த ஒன்றிரண்டு ஆபரணங்களான காதுக்கடுக்கன்கள், கைத் தோடாக்கள், மோதிரங்கள் ஆகியவற்றையும் கழற்றி வீசினார். சற்றும் கவலை கொள்ளாமல் அவற்றையும் எடுத்துக் கொண்டான் கள்வர் தலைவன். அனைத்தையும் பறித்துக் கொண்ட பின்னரும் அவ்விடம் விட்டுப் போகாமல் பல்லக்கின் திரையை விலக்கி அரங்கனைப் பார்த்தான் கள்வர் தலைவன்.

உலகாரியர் மன வருத்தத்துடன் அதான் எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு விட்டாயே! இன்னும் என்ன என்று கோபமாய்க் கேட்க அரங்கன் மேல் சாத்தி இருந்த நகைகளையும் கேட்டான் அவன். அவற்றையும் கழற்றிக் கொடுக்கச் சொல்லி உலகாரியர் சொல்ல பட்டாசாரியர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்தனர். பின்னரும் போகாமல் நின்றுகொண்டிருந்த கள்வர் தலைவனைப் பார்த்து,இன்னும் என்ன வேண்டும் எனக் கோபமாய்க் கேட்க, நாச்சிமார்களின் தாலிகளும், பெருமாளின் தங்கப்பூணூலும் இருக்கின்றனவே. ஒன்றுவிடாமல் கொடுத்துவிடுங்கள் என்று கள்வர் தலைவன் நெஞ்சில் ஈரமே இன்றிக் கூறினான். அழுது கொண்டே அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். கள்வர்களில் சிலருக்கு உலகாரியர் மேல் தனி மரியாதை இருந்தது. அவர்கள் மட்டும் ஒன்றுகூடி இவர் ஒரு மகான் இவருக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு ஒரு தட்டில் தங்கக் காசுகள், கனி வர்க்கங்கள் என்று குவித்து எடுத்து வந்து அவருக்குக் காணிக்கை செலுத்த உலகாரியர் வெறுப்புடன் அவற்றை மறுத்துவிட்டு மேலே நடந்தார்.  அனைத்தையும் கள்வர்களிடம் இழந்த அரங்கனும் தன் மக்களைத் தொடர்ந்தான்.