எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 08, 2019

சாம்ராஜ்யத்தின் நிலைமை!

மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழுகு புத்தகங்களில் பதிவாகியும் உள்ளது. அதைத் தவிரவும் முக்கியமான ஆதாரம் கங்கா தேவி எழுதிய முதல் பயணம் குறித்த பதிவும் காரணம். இவற்றை கங்கா தேவி சம்ஸ்கிருதத்தில் பாடல்களாக எழுதி வைத்திருந்தாள். அவள் பார்த்த, கேட்ட, நேரில் கண்ட சம்பவங்களின் தொகுப்பு அது. அந்தக் காலகட்டத்தில் உள்ள நிகழ்வுகளைத் தான் எழுதி வைத்திருந்தாள். அதை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் திருவரங்கன் உலாவை எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட அவருடைய எழுத்தை ஆதாரமாகக் கொண்டே இங்கே நானும் எழுதி வருகிறேன்.

தென்னாட்டில் எப்போதுமே வெளியே இருந்து வரும் அரசர்களாலோ, கொள்ளையர்களாலோ எவ்விதமான தொந்திரவுகளும் ஏற்பட்டதில்லை. பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்த தென்னகத்தில் அந்த நாட்டு அரசர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள். பூசல்கள் ஏற்பட்டன. சின்னஞ்சிறு போர்கள் முதல் கொஞ்சம் பெரிய போர் வரை நடந்தாலும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை. போர் நடைபெறுகையில் மக்கள் அந்த இடங்களை விட்டு விலகிக் கொஞ்ச தூரம் சென்று வாழ்வார்கள். போர்கள் முடிந்து சகஜ நிலை திரும்பியதும் தங்கள் இடங்களுக்குத் திரும்புவார்கள். அவர்களின் தொழில்களிலோ, நடைமுறைப்பழக்கங்களோ, பேசும் மொழியோ மாறவில்லை. சமய நெறிகளையும் அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

இப்படிக் கிட்டத்தட்ட அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து வந்த தென்னகத்தில் பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதல் முதலாக தில்லி சுல்தான்கள் படை எடுத்து வந்தனர். அப்போது தமிழகம் பல்லவர்களாலேயோ, சேர, சோழ, பாண்டிய நாடுகள் எனவோ பிரிந்திருக்கவில்லை. பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பாண்டிய சாம்ராஜ்யத்தின் மிச்சங்கள் அப்போது எஞ்சி இருந்தன. மதுரையில் இருந்த பாண்டிய அரச வம்சத்தினரிடையே வாரிசுச் சண்டைகள், சகோதரப் பூசல்கள். வடக்கே இருந்து வலுவுடன் வந்த தில்லி சுல்தானியரை எதிர்க்கும் அளவுக்கு வலுவுள்ள நாடாகப்பாண்டிய நாடு இல்லை. அவர்களில் ஒருவரே தில்லி சுல்தானின் உதவியுடன் மதுரைச் சிம்மாசனத்தைப் பிடிக்கும் ஆவலுடன் இருந்து வந்தார். அதற்கான உதவி நாடியும் சென்றார். எஞ்சியவர்கள் இன்னும் தெற்கே தென்காசி, நாஞ்சில் நாடு, கேரளப் பகுதிகளுக்குப் போய் மறைந்திருந்து வாழ ஆரம்பித்தனர். மக்களைக் காத்துத் தலைமை தாங்கி நிற்கக் கூடிய வலுவான தலைமை இங்கே அமையவில்லை. மக்கள் நிராதரவாக அவர்களே தில்லிப் படையை எதிர்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.


இத்தகைய மோசமான சூழ்நிலையில் தமிழகம் வந்த சுல்தானியர் மக்களைக் கிட்டத்தட்டக் கொன்று பலரையும் போர் என நடந்த கூத்தில் வென்று மதுரையில் கி.பி .1323 ஆம் ஆண்டில் சுல்தானிய ஆட்சியை நிறுவினார்கள். பெரும்பாலான தமிழகம் அவர்களுக்குப் பணிந்தே இருக்க நேரிட்டது. இதனால் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறிப் போனது. மக்கள் தங்கள் சமய நெறிகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. உணவுப் பழக்கங்கள் முதற்கொண்டு அனைத்தும் மாற ஆரம்பித்தது. தமிழகமே பெரிய கொந்தளிப்பில் ஆழ்ந்து போனது. இவற்றைச் சகிக்க முடியாமல் எதிர்த்த ஹொய்சளர்கள் தான் தோற்றுப் போனார்கள். சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இந்தச் சமயம் தான் வித்யாரண்யர் உதவியுடனும் கிரியா சக்திப் பண்டிதர் என்பவர் உதவியுடனும் ஹரிஹரன், புக்கன் என்னும் இரு சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர். இவர்கள் வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பிரதாப ருத்திரனின் பொக்கிஷ அதிகாரிகள் எனச் சிலரும் படையில் இருந்தவர்கள் எனச் சிலரும் கூறுகின்றனர். எது எப்படியானாலும் வீரம் மிகுந்தவர்கள். தங்கள் அரசர் பிரதாப ருத்திரர் சிறைப்பிடிக்கப்பட்ட  பின்னர் மனம் நொந்து போய் துங்கபத்திரா நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வித்யாரண்யரைச் சந்திக்க நேர்ந்து விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது எல்லாம் ஏற்கெனவே பார்த்தோம்.


இந்தக் கதை ஆரம்பித்த காலத்தில் ஹரிஹரன் காலம் முடிந்து போய் அவர் சகோதரர் புக்கராயர் தான் ஆட்சி செய்து வந்தார். நிர்வாக வசதிக்காக சாம்ராஜ்யம் பல பகுதிகளாகப்பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றையும் ஆட்சி செய்யத் தக்க அரசகுமாரர்கள் அல்லது அரச வம்சத்தினர் நியமிக்கப்பட்டு அவர்கள் அரசர் என்றே அழைக்கப்பட்டனர் அப்படி ஒரு ராஜ்யம் தான் முள்வாய் ராஜ்யம்.இந்த ராஜ்யத்தை புக்கராயரின் மகன்களில் ஒருவரான கம்பணன் என்பவர் நிர்வகித்து வந்தார். இவர் மனைவியர் தான் நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த குந்தளா தேவியும், கங்கா தேவியும். இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த சேடி ஒருத்தி கிரியா சக்திப் பண்டிதர் அவர்களைக் காண வந்திருப்பதைத் தெரிவித்தனர்.

Saturday, October 05, 2019

விஜயநகர சாம்ராஜ்யம்!

அடுத்து வரும் நிகழ்வுகளைக் காணும் முன்னர் நாம் இப்போது தென்னகத்தில் நிலவி வந்த அரசியல் சூழ்நிலையைக் கொஞ்சம் பார்த்துக் கொள்வோம். கண்ணனூர்ப் போரையும் அதில் ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதும் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். அதன் பின்னர் அரங்கன் பரிவாரங்கள் இனி திருவரங்கம் திரும்ப முடியாது என்னும் எண்ணத்துடன் திரும்ப மேல்கோட்டையே சென்றுவிட்டனர். தமிழகம் எங்கும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்த கண்ணனூர்ப் போர் இம்மாதிரி முடிந்ததில் எங்கும் ஓர் பரிதவிப்பான சூழ்நிலையே இருந்து வந்தது. சரியான தலைமை இல்லாமல், தங்களை வழிநடத்திச் செல்லும் தலைவர் இல்லாமல் மக்கள் யாரிடம் போவது எனத் தெரியாமல் நம்மைக் காப்பவர்கள் யார் எனத் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். கோயில்களில் வழிபாடுகள் நின்று போய்த் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதையே மக்கள் மறந்து போயிருந்தனர். இனி இந்தச் சூழ்நிலையில் இருந்து தமிழகம் மீளுமா என அனைவரும் தங்கள் நம்பிக்கையைக் கை விட்டிருந்தனர்.

ஆனால் தமிழகத்துக்குக் கொஞ்சம் வடக்கே துங்கபத்ரா நதிக்கரையில் ஓர் சந்நியாசி தமிழகத்தையும் மற்ற நாடுகளையும்  புனர் உத்தாரணம் செய்யப் பிறந்தவர் போல ஹரிஹரன், புக்கன் என்னும் இருவரை ஓர் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வைத்தார். தேவி உபாசகரான அவருக்கு இந்த சாம்ராஜ்யம் தான் பல கோயில்களையும் மீட்டுக் கொடுத்து சநாதன தர்மத்திற்குப் பெரும் சேவை செய்யப் போகிறது என்பதை அறிந்திருந்தார். இந்நிகழ்வு கண்ணனூர்ப் போர் நடைபெறுவதற்கு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்தது. மெல்ல மெல்ல அந்த ராஜ்யம் விஜயநகரம் என்னும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு எழுச்சி பெற்று வந்தது. அதற்குப் பின்னர் இந்தக் கதை நடைபெறும் சமயம் சாம்ராஜ்யம் ஏற்பட்டு 25 ஆண்டுகளாகி விட்டன. துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள அந்த சாம்ராஜ்யத்தை இந்தக் கதை நடைபெறும் சமயம் புக்கராயர் என்பவர் ஆண்டு வந்தார்.


இந்த சாம்ராஜ்யத்தின் தென் திசையில் தற்போது முல்பாகல் என அழைக்கப்பட்டு வரும் முள்வாய்ப்பட்டினம் என்னும் மண்டலத்தில் ஓர் அழகிய அரசமாளிகை. அதன் அந்தப்புரத்தினுள் நாம் இப்போது நுழையப் போகிறோம். அனுமதியா? நமக்கெல்லாம் அனுமதி தேவை இல்லையே! கற்பனா தேவியின் துணை கொண்டு நாம் தற்போது அந்தப்புரத்தின் உள்ளே சென்று அதன் அழகிய உத்தியானவனத்துக்குச் செல்லப் போகிறோம். மயில்கள் நடனம் ஆட, குயில்கள் தேவ கானம் இசைக்க அங்கே ஓர் அழகிய கண்களையும், மனதையும் கவரும் வண்ணம் சோலையாகக் காட்சி அளித்த உத்தியானவனத்தில் ஓர் மரத்தின் கீழே அழகியதொரு மேடை. அதிலே அமர்ந்திருந்தாள் ஓர் மங்கை. அவள் தன் கைகளில் ஏடுகளை வைத்துக்கொண்டு எழுத்தாணியால் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாள். கொஞ்சம் யோசிப்பதும் கொஞ்சம் எழுதுவதுமாக இருந்தாள். இவள் தான் பிற்காலத்தில் தன் "மதுரா விஜயம்" என்னும் நூலால் வடமொழியில் முதல் முதலாகப் பயணங்கள் குறித்த காவியம் எழுதிப் பிரபலம் ஆனவள். இப்போதும் ஏதோ எழுதிக் கொண்டு தான் இருக்கிறாள்.

இவள் பெயர் கங்காதேவி. இவள் எழுதிக்கொண்டிருக்கையில் உள்ளே அந்தப்புரத்திலிருந்து வந்த ஓர் பெண் இவளைச் சற்று நேரம் நின்று பார்த்தாள். பின்னர் புன்னகையுடன் இவளை நோக்கி நடந்து வந்தாள். இவள் வரும் சப்தம் மெல்லியதாக இருந்தாலும் கங்கா தேவிக்குக் கேட்டு விடுகிறது. நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள். கங்கா தேவியிடம் அவள் எழுத்துக்கும், கற்பனைக்கும் தான் குறுக்கே வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தை அவள் எழுப்ப கங்கா தேவி இல்லை என்கிறாள். அவள் அழைப்பதிலிருந்து வந்தவள் பெயர் குந்தளா எனத் தெரிகிறது.

Wednesday, October 02, 2019

அரங்கன் எங்கே இருக்கிறான்?

அப்போது வல்லபன் அந்தப் பெரியவரிடம், போருக்குப் பின்னால் சத்தியமங்கலத்திலிருந்து மேல்கோட்டைக்குப் போன அரங்கன் அங்கேயே இல்லாமல் பின்னர் எங்கே போனான்? அவனுக்கு அங்கே என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகச் சொன்னான். அதற்கு அந்தப் பெரியவர்க் கண்ணனூர்ப் போரில் பெற்ற வெற்றிக்கும் பின்னர் மதுரை சுல்தானியர்கள் தமிழ் பேசும் நாடுகள் எங்கும் புகுந்து வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடியதாகவும் அவர்கள் மேல்கோட்டை வரை வந்து விட்டால் பின்னர் அரங்கனுக்கு ஆபத்து என எண்ணிக் கொண்டு அரங்கனின் பரிவாரத்தாரில் சிலருக்கு அவரைத் திருப்பதிக்குக் கொண்டு செல்லும் எண்ணம் வந்ததாகவும் ஆனால் அவர்கள் கொண்டு போனார்களா இல்லையா என்பது தனக்குச் சரியாகத் தெரியாது என்றார். அரங்கன் அங்கே தான் போனானோ அல்லது வேறே எங்கே போனானோ தனக்குத் தெரியாது என்றும் கண்ணனூர்ப் போர் முடிந்து பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதால் அரங்கன் இருப்பிடம் தனக்குத் தெரியாது என்றவர் அவர்களை நோக்கி அரங்கனைத் தேடி வந்திருக்கிறீர்களா என விசாரிக்கவும் செய்தார்.

வல்லபன் அதற்குத் தாங்கள் அரங்கனைத் தேடிக் கண்டு பிடித்துத் திரும்பவும் திருவரங்கத்தில் சேர்ப்பிக்கும் எண்ணத்துடன் தாங்கள் வருவதாகவும், மேல்கோட்டையிலிருந்து அவர் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தாங்கள் அறிவோம் எனவும் சொன்னான். ஆனால் தற்சமயம் அவர் திருப்பதியிலேயே இருக்கிறாரா அல்லது அங்கிருந்து வேறெங்கும் கொண்டு செல்லப்பட்டாரா என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றான். அவர் திருப்பதி மலைக்குப் போய்ச் சேர்ந்ததாக உத்திரவாதமான தகவல் ஏதும் இல்லை என்பதால் இடையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ எனத் தாங்கள் அஞ்சுவதாகவும் அவரை எங்கே எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்னும் கவலையில் தாங்கள் இருவரும் ஆழ்ந்திருப்பதாகவும் கூறினான்.

பெரியவர் முகமலர்ச்சியுடன் இருவரையும் ஆசீர்வதித்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்தக் காரியம் வெற்றி பெறவேண்டும் என்றவர் தான் அசக்தனாகப் போய் விட்டபடியால் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதற்கு வருந்தினார். தகப்பனார் இறந்ததுமே அந்தக் காலத்திலேயே தான் இந்தச் சிற்றூருக்கு வந்துவிட்டதாகவும் தான் மட்டும் உடல்நிலையில் வலுவானவனாக இருந்திருந்தால் அரங்கனை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் கூறினார். அவ்வளவில் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர் இளைஞர்கள் இருவரும். அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அரங்கன் இருக்குமிடம் பற்றி விசாரித்த வண்ணம் இருந்தார்கள். எங்கும் அரங்கனைப் பற்றி எவ்விதச் செய்தியும் கிட்டவில்லை. பலருக்கும் இந்தத் தகவல் புதியதாகவே இருந்தது. அப்படி இருக்கையில் இந்தப் பெரியவர் இத்தனை தகவல்களை அளித்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவை அவர்கள் அந்தக் கிராமத்துச் சத்திரத்திலேயே கழிக்க நினைத்தனர். சத்திரத்தில் உணவருந்திவிட்டுப் படுத்த இருவருக்கும் படுக்க இடம் கொடுத்து விரிப்புக்களையும் கொடுத்தார் சத்திரத்துப் பரிசாரகர். ஆனால் தத்தன் படுத்ததுமே தூங்கிவிட வல்லபனுக்கு மட்டும் தூக்கமே வரவில்லை.

அவன் மனதில் வழியில் பார்த்த அந்த இளம்பெண்ணின் நினைவே மாறி மாறி வந்து கொண்டிருந்தது. அடிக்கடி அவள் கண்களை நினைத்தவனுக்கு அது மீனைப் போல் இருப்பதாகத் தெரிந்தது. அந்த மீன் சிறிது நேரத்தில் ஓர் மகர கண்டிகையாக மாறிப் பின்னர் அந்த இளம்பெண்ணாக மாறி அவன் முன்னே வந்து நிற்பது போலவும், "சத்திரத்தில் பார்த்த இளைஞரே!" என அவனை அழைப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் இனிமையான குரல் காதுகளில் கேட்பது போல் இருந்தது. அவன் மனமும் முகமும் அதை நினைத்து மலர்ந்து விகசித்தது.