எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

14. என்னை அழைத்த கற்பகம்

ஜுலை 07, 2006

நேற்றுத் திடீரெனக் கற்பகாம்பாள் அழைப்பு வந்தது. காலை 10 மணி வரை நான் போகப் போவது எனக்கே தெரியாது. திடீரென ஒரு முடிவு. போகலாம் என. அதற்குப்பின் வேகமாக வேலைகளை முடித்துக் கொண்டுச் சற்று ஓய்வு எடுத்ததும், ரெயிலேயே போகலாம் என முடிவு எடுத்தோம். "மாநரகப் பேருந்து" பயணம் பல வருடங்களாகத் தவிர்த்து விட்டோம். அந்த கூட்டத்தில் நேரம் விரையம் ஆகிறது. ரெயிலில் போனாலும் செண்ட்ரலில் இருந்து வேறு ஊர்களுக்குப் போவதற்குப் போவதோடு சரி. முக்கால் வாசிப் பிரயாணங்கள் கோயம்பேடு 100 அடி சாலை வழியாகப் போய் விடுகிறது. இந்தப் பக்கம் எல்லாம் பார்த்து 4,5 வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆகவே ரெயிலில் போய் செண்ட்ரலில் இறங்கி அங்கிருந்து "ஆட்டோ" வைத்துக் கொண்டு மைலாப்பூர் போனோம். பல வருடங்களுக்குப் பின் மவுண்ட் ரோடில் பிரயாணம். ஆச்சரியம் என்ன என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் பேரம் பேசவே இல்லை. நம்ம சென்னை ஆட்டோதானா என்று சந்தேகம் வந்தது.

நாங்கள் போன வேலை முடிந்ததும் கோவிலுக்குப் போய்க் கற்பகாம்பாள் சமேதக் கபாலீஸ்வரர் தரிசனம் நல்லபடியாகக் கிடைத்தது. போகும் வழியிலேயே குளத்தைச் சுற்றிக் கொண்டு போனோம். புதியதாக வந்திருக்கும் விருந்தாளிகளைப் பற்றித் தினமும் பேப்பரில் படிப்பதால் அவற்றையும் பார்த்தோம். சிருங்கேரி துங்கா நதியில் இருக்கும் மீன்களை விட மிகச் சிறியவைதான். இருந்தாலும் குளத்தில் தண்ணீரையும், குளம் மற்றும் அதன் கரைகள் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருப்பதையும் பார்க்க மிகவும் மனம் நிறைவாக இருந்தது. முன் நாட்களில் அண்ணா ஆழ்வார்ப்பேட்டையில் ராமசாமி நாயக்கன் தெருவில் இருந்த சமயம் அடிக்கடி போவோம். அதற்குப் பின் சந்தர்ப்பமே வரவில்லை.

அம்பாள் மிகச் சிறிய பெண்ணாக மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள். படியில் ஏறும்போதே பார்க்கும் வண்ணம் படிகள் மிக உயரமாக இருப்பதால் ஜாஸ்திக் கூட்டத்தில் அடிபடாமல் பார்க்கவும் முடிகிறது. கூட்டமும் அவ்வளவு இல்லை. அவள் கண்களின் கடைக்கண் பார்வையும், இதழ்களின் முறுவலும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டியது. எல்லா உயிருக்கும் ஆதாரமான அவளை நாம் நம்முடைய இஷ்டத்துக்கு அலங்கரித்துப் பார்க்கிறோம். நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அலங்கரித்துப் பார்ப்பதைப் போலத்தான் இதுவும். நிதானமாகத் தரிசனம் செய்து கொண்டு உள்பிரஹாரம் சுற்றிவிட்டுப் பின் ஸ்வாமி சன்னதி வந்து அங்கேயும் தரிசனம் செய்தோம். நடராஜருக்கு தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. அதற்குப் பின் உற்சவருக்குத் தீப ஆராதனை. எல்லாம் நன்றாகப் பார்க்க முடிந்தது.

கோவிலும் வெளிப் பிரஹாரமும் சுற்றுப் புறங்களும் மிகத் தூய்மையாக இருந்தது. அம்பாள் மயில் வடிவில் தவம் செய்வதால் தான் மைலாப்பூர் என்றும் சொல்வார்கள். எப்படி இருந்தால் என்ன? சக்தியை எப்படி வழிபட்டாலும் சக்தி சக்தி தானே. இங்கே உள்ள கோலவிழி அம்மன் கோவில் சோழர் காலத்தியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வள்ளுவருக்கும் மைலாப்பூரில் கோவில் இருக்கிறது. எப்போவோ போனேன். இன்னொரு முறை போக வேண்டும். இப்போது ஒரு சக்திப்பாட்டு, நம்ம மீசைக்காரர் பாடியதுதான். சக்தியைப் பற்றி அவரைவிட வேறு யார் சொல்ல முடியும்?

"துன்பமிலாத நிலையே சக்தி,
தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி.
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி.
இன்பமுதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத்திருக்கும் எரியே சக்தி.
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி.
தீம்பழந்தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி.
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி.
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங்காக்கும் மதியே சக்தி.
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி.
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணையளக்கும் விரிவே சக்தி.
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத்தொளிரும் விளக்கேசக்தி."

இந்த உள்ளத்துள் ஒளிரும் விளக்கைப் பாரதி கண்டு உணர்ந்ததால் தான் இப்படி ஒரு பாட்டு வந்துள்ளது. எனக்குப் படித்து ஆச்சரியப்படத்தான் முடிகிறது.

No comments: