எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, January 06, 2010

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள் - சங்கரன் கோயில்

ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது இந்தக் கோயில். கோயிலின் பெயரே ஊருக்கும் அமைந்துள்ளது. சுமார் நாலு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் ஆனையூர் மலையின் கற்களால் கட்டப் பட்டதாய்க் கூறுகின்றனர். ஒரே வளாகத்தில் மூன்று பிரிவுகள் கொண்ட சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒன்று சங்கரலிங்க ஸ்வாமிக்கான சந்நிதி, அடுத்து ஸ்ரீசங்கரநாராயணருக்கான சந்நிதி, அடுத்து ஸ்ரீகோமதி அம்மனின் கோயில். ஒவ்வொன்றும் தனித்தனிக் கருவறை, அர்த்தமண்டபம், மணி மண்டபம், மஹா மண்டபம், தனித்தனிப் பிரஹாரம் கொண்டு விளங்குகின்றது. கோயிலின் ராஜகோபுரத்தில் ஒன்பது நிலைகள் இருக்கின்றன. ஒன்பதாவது நிலையில் பெரிய மணி ஒன்று வைக்கப் பட்டு இரண்டு நாழிகைக்கு ஒருமுறை அடிக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும், தற்சமயம் அது செயல்படவில்லை என்றும் சொல்கின்றனர். ராஜகோபுர வாயிலுக்கு நேரேயே சங்கரலிங்கனாரின் சந்நிதி உள்ளது. திருமுறைகள் பொறிக்கப் பட்டிருக்கும் பிரகாரச் சுவர்களைக் காணலாம். ஒரு காலத்தில் நாகர்கள் அதிகம் வழிபட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதற்கான புராணக்கதையானது:

காச்யப முனிவரின் மனைவியான கத்ரு என்பவளுக்குப் பிறந்த பாம்புகளுக்கும், மற்றொரு மனைவியான விநதையின் பிள்ளையான கருடனுக்கும் எப்போதும் பகை இருந்து வந்தது. இறுதியில் அனைத்துப் பாம்புகளும் கருடனைச் சரணடைந்தன. ஆதிசேஷனை மஹாவிஷ்ணுவிற்குப் படுக்கையாக்கி, வாசுகியை ஈசனின் ஆபரணம் ஆக்கினார்கள். சங்கனும், பதுமனும் ஈசனுக்கும், விஷ்ணுவுக்கும் பக்தர்கள் ஆனார்கள். என்றாலும் அப்போதும் யார் பெரியவர், விஷ்ணுவா, ஈசனா என்ற சண்டையே இருவருக்கும் ஏற்பட, அத்ரி முனிவர் ஈசனே உயர்ந்தவர் என்று சொல்ல, பதுமன் அதை ஏற்காமல் பூலோகம் வந்து புன்னைவனத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டதாகவும், அனைத்துப் பாம்புவர்க்கங்களும் அங்கே வந்து வழிபட, நாகசுனை ஏற்படுத்தப் பட்டதாகவும் கூறப் படுகிறது. இங்கே சங்கனும், பதுமனும் வழிபட்டபோதும், சங்கரநாராயணராகக் காட்சி தந்து அருள் பாலித்தார் ஈசன். ஆகவே இந்தத் தலத்தில் நாகசுனையில் நீராடி சங்கரலிங்கனாரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் என்றும், சொல்கின்றனர்.

இங்கே உள்ள கன்னிமூலகணபதிக்கும் நாக ஆபரணமே! நாகராஜனுக்குப் புற்றுக் கோயிலும் உள்ளது. சர்ப்பவிநாயகரை வணங்கி நாகராஜனுக்குப் பால், பழம் நைவேத்தியம் செய்து புற்று மண்ணைப் பிரசாதமாக எடுத்துச் செல்வதுண்டு. இந்தக் கோயில் புற்று மண்ணை வீட்டில் வைத்துக் கொண்டால் சுப்புக்குட்டிகளின் தொந்திரவு இருக்காது என்றும் சொல்வார்கள். பரிவார தெய்வங்களில் எல்லாச் சிவன் கோயில்களும் போலவே இங்கும் தேவார நால்வரோடு, மஹாவிஷ்ணு, அறுபத்து மூவர், ஜுரதேவர், பிரம, ஈச, குமார,விஷ்ணு, வராஹ, இந்திர, சாமுண்டி சக்திகள் சப்த கன்னிகளாகவும், கூடவே உக்கிரபாண்டியன்(?), உமாபதிசிவம்(?) ஆகியோரின் சிற்பங்களும், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள நடராஜரின் ஞானநடனத்தைக் காரைக்கால் அம்மையார் ரசித்தவண்ணம் காட்சி அளிக்கிறார். சிவகாமி அம்மை தாளம் போடுகிறாள். சங்கரலிங்கனார் சுயம்பு லிங்கம் என முன்னரே பார்த்தோம். கருவறையிலேயே மனோன்மணி சக்தியாக எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இணை பிரியாத சக்தி காட்சி அளிக்கிறாள். வாலற்ற பாம்பு வடிவத்திலேயே சிலருக்குக் காட்சி கொடுத்ததால் ஈசன் இங்கே கூழைப்பிரான் என்றும், கூழையாண்டி, கூழைப் புனிதர், கூழைக்கண்ணுதலார் என்றெல்லாம் சொல்லப் படுகிறார். சூரியனும் இங்கே வந்து வழிபடுவதாகவும், அவை முறையே புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நடக்கும் என்றும் அப்போது சங்கரலிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் முறையே மூன்றுநாட்கள் தொடர்ந்து விழுந்து வணங்குவதைக் காணலாம் என்றும் சொல்கின்றனர். உற்சவ மூர்த்தி உமாமஹேஸ்வரர்.

சங்கரலிங்கனார் சந்நிதிக்கும், கோமதி அம்மன் சந்நிதிக்கும் நடுவே காட்சி அளிப்பது சங்கரநாராயணர் சந்நிதி ஆகும். இது ஒரு தனிக்கோயிலாகக் காட்சி கொடுக்கிறது. திருக்கல்யாணமண்டபம் ஒன்றும் அதில் கண்கவரும் ஓவியங்களும் காட்சி கொடுக்கின்றன. ஈசன் வலப்பக்கம் கங்கையுடன் கூடிய ஜடாமகுடம், நாககுண்டலம், திருநீறணிந்த பொன்னொளிர் மேனியோடும், இடப்பக்கம், ரத்தினக்கிரீடம், மகரகுண்டலம், கஸ்தூரிப் பொட்டு அணிந்த நீலமேக சியாமளனாகவும், ஒரு பக்கம் கொன்றைமாலை, புலித்தோலை அணிந்தும் ,மறுபக்கம் சக்கரம், பொன்னால் ஆன பூணூல், துளசிமாலையுடன் மஞ்சள் வண்ணப் பீதாம்பரம் அணிந்தும் காட்சி கொடுக்கிறார். உற்சவமூர்த்தியும் சங்கரநாராயணரே. அபிஷேஹப் பிரியரான ஈசன் தன்னுடன் இணைந்த விஷ்ணுவிற்காக அபிஷேஹத்தை விட்டுக் கொடுத்துவிட்டார். ஆகையால் இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கே அபிஷேஹம் நடக்கிறது. இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரர் ஸ்தாபித்தது என்றும், ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீநரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஸ்தாபித்தது என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. கோமதி அம்மன் சந்நிதி போலவே இங்கும் வசனக்குழிப்பள்ளம் உண்டு. இங்கும் பேய், பில்லி, சூனியம் போன்றவற்றுக்கு வழிபாடுகள் நடத்துவதுண்டு. எல்லாத்துக்கும் மேலே விடுதலைப் போராட்ட முதல் வீரன் ஆன பூலித்தேவன் மறைந்த இடம் இந்தச் சங்கரன் கோயிலில், சங்கரநாராயணர் சந்நிதிக்கு அருகேயே. அங்கே ஒரு கல்வெட்டு ஒன்றும் காணப்படும். பூலித்தேவன் இங்கே வந்து வழிபாடுகள் செய்துகொண்டிருந்த வேளையில் பறங்கியர் கோயிலுக்குப் பிடிக்க வருவதைத் தெரிந்து கொண்டு இங்கிருந்த சுரங்கப்பாதையில் சென்று மறைந்ததாகவும், அதன் பின்னர் திரும்பவே இல்லை என்றும் சொல்லுவார்கள்.

1 comment:

குப்பன்.யாஹூ said...

many many thanks for sharing this great temple and great city.

kazugumalai murugar koiulm undaaa