எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, January 07, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- சங்கரன் கோயில்!

கோயிலின் வடபக்கமாய் கோமதி அம்மனின் தனி சந்நிதி. மதுரை மீனாக்ஷியின் தங்கை என்று அழைக்கப் படும் இவளைக் காணச் செல்லும் முன்னர் மதுரை மீனாக்ஷியை தரிசித்துச் செல்லவேண்டும் என்றும், தரிசித்த பின்னர் திரும்ப மதுரைக்குப் போய் மீனாக்ஷியிடம் நன்றி கூறவேண்டும் என்றும் பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் இப்போது மதுரையில் மீனாக்ஷியை தரிசிப்பது என்பது கனவு என்பதால் அப்படி எல்லாம் செய்யறது ரொம்பக் கஷ்டம். இன்னும் கோமதி அம்மனுக்கு அவ்வளவு மோசமான நிலை ஏற்படவில்லை. நிதானமாய்த் தரிசிக்கலாம். கூட்டம் இருக்கிறது என்றாலும் நின்று தரிசிக்க முடிகிறது. இங்கே மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. அம்மன் சந்நிதியில் உள்ள பள்ளியறையில் மரகதக்கல் பதிக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்கின்றனர்.

இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம் சேமிக்கப் படுகிறது. இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள். அம்மனுக்குத் தனித் தேர் ஆடித் தபசு விழாவின் ஒன்பதாம் நாளன்று நடக்கிறது. நாகராஜர் சந்நிதியும் தனியாக உள்ளது. ஆகமமுறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. சிவாலய வழக்கப்படி விபூதி, குங்குமப் பிரசாதங்களோடு, விஷ்ணு கோயில் வழக்கம்போல் தீர்த்தமும் இங்கே உண்டு. ஐப்பசியில் திருக்கல்யாணவிழா பெரிய விமரிசையாக நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ஆடி மாதம் ஆடித்தபசு விழாவும் விமரிசையாக நடைபெறும். உக்கிரபாண்டியனால் அளிக்கப் பட்ட நிலங்கள் இந்தக் கோயிலுக்கு உண்டு. அதன் நினைவாக சித்திரை பிரம்மோற்சவத்தில் உக்கிரபாண்டியனுக்கு ஒருநாள் விழா இன்றும் நடந்து வருகிறது.

உக்கிரபாண்டியன் தவிர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் பதினைந்தாம் நூற்றாண்டிலும், கெடில வர்மன் என்பவனும் அதிவீரராம பாண்டியனும் முறையே பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளிலும் இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்து வதிருப்பதாய்க் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. திருநெல்வேலியைச் சார்ந்த வடமலையப்பபிள்ளை என்பவர் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். மேலும் இந்தக் கோயில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்திருந்த காலத்தில் அதற்கு நாயக்கர்களின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்த ஆறை அழகப்ப முதலியார் என்பவர் இந்தக் கோயிலின் உற்சவர் திடீரெனக் காணவில்லை என்பதும் துயருற்று அதை மீட்க எடுத்த நடவடிக்கைகளைக் கேட்டால் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது நாளை!!!!

1 comment:

Anonymous said...

ungal thagavaluku nandrigal pala.
anta sangaran koiluku poi vanthathi pola oru unarvu.thodrathum ungal pani..
valthukal.

Valaga Valamudan.