எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, January 08, 2010

சங்கரன் கோயில் நாயகர் எங்கே! வேலனுக்கு அரோஹரா!

தமக்கு அடங்கிய மற்ற ஸ்தானாதிபதிகளைக் கூப்பிட்டு வைத்துக் கலந்து ஆலோசித்தார் அழகப்ப முதலியார். அனைவரும் ஒரே வார்த்தையாக இது பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் மட்டுமே ஆகக் கூடிய காரியம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் முழு உண்மை இருந்தாலும் அனைவருக்கும் அடித்தளத்தில் அழகப்ப முதலியார் தங்கள் எல்லாரையும் கீழே விழுந்து வணங்கச் செய்தார். ஆனால் பொன்னம்பலப் பிள்ளையிடம் அவர் பாச்சா பலிக்கவில்லை. இப்போது பிள்ளை அவர்களின் தயவை முதலியார் நாடவேண்டுமே. வேண்டும் முதலியாருக்கு என்ற எண்ணமும் உள்ளூர இருக்கத் தான் செய்தது. ஆனாலும் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலுக்கே வரவேண்டுமானால் அது பொன்னம்பலம் பிள்ளையால் தான் முடியும் என்று புரிந்தும் வைத்திருந்தார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் பொன்னம்பலம் பிள்ளையை வரவழைத்தார் அழகப்ப முதலியார். பிள்ளை அவர்களோ தமக்கு சங்கரன் கோயில் நயினார் காணாமல் போன விஷயம் தெரியும் என்றாலும் முதலியாரால் ஆகாததும் ஒன்று உண்டா என்ற எண்ணத்திலேயே பேசாமல் இருந்ததாகச் சொன்னார். விரைவில் நாயகர் வந்துவிடுவார், சங்கரன் கோயிலில் போய்த் தரிசிக்கலாம் என எண்ணி இருந்ததாகவும் சொன்னார்.

அழகப்ப முதலியார் முழு விபரங்களையும் அவரிடம் கொடுத்தார். மேலும் நாயகர் இப்போது உத்தரகோச மங்கை கோயிலில் சேதுபதி ராஜாவின் பாதுகாவலில் பூரண வழிபாடுகளுடன் இருப்பதாகவும் கூறினார். திருநெல்வேலிச் சீமையின் கெளரவத்தைக் காக்கவேண்டும் என்றும் அதற்கு பொன்னம்பலம் பிள்ளைக்கும் பங்கு இருப்பதால் இந்தக் கைங்கரியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் முதலியார். பொன்னம்பலம் பிள்ளையும் ஒத்துக் கொண்டார். ஆனால் உத்தரகோசமங்கையிலிருந்து எப்படிக் கொண்டு வருவது நாயகரை?? அங்கே யார் போகமுடியும்??? திருடிக் கொண்டு வருவதும் உசிதமாய்த் தெரியவில்லையே என்று கலங்கினார் முதலியார். பொன்னம்பலம் பிள்ளையோ அதைப் பற்றி எல்லாம் கவலை வேண்டாம் என்றும் அதை எல்லாம் தாம் பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டுத் தமக்குச் சில தக்க மனிதர்களையும், தக்க பொருட்களையும் கொடுத்து உதவினால் போதுமானது என்றார். அங்கே இருந்த மற்ற ஸ்தானாதிபதிகளும் அரண்மனையின் வித்வான்களும் தாங்களும் இந்தக் கைங்கரியத்தில் பங்கு கொள்ள ஆசைப்படுவதாய்த் தெரிவிக்க அவர்களில் பொறுக்கி எடுத்த சிலரோடு கிளம்பினார் பொன்னம்பலம் பிள்ளை.

சேதுபதி மஹாராஜாவுக்கும் பொன்னம்பலம்பிள்ளை ஸ்தானாதிபதியாக இருக்கும் சொக்கம்பட்டி ஜமீனுக்கும் பகை இருந்து வந்தது. நீடித்த பகை. சொக்கம்பட்டித் தலைவரை அடக்க சேதுபதி பலமுறை முயன்றும் முடியவில்லை. இப்படி இருக்கையில் பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியின் ராஜ்யத்தில் உத்தரகோசமங்கைக் கோயிலில் பலத்த பாதுகாப்புகளுடன் வழிபாட்டில் இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை எப்படிக் கொண்டு வரப் போகிறார்?? அனைவருக்கும் கவலைதான். பொன்னம்பலம் பிள்ளையோ இவை எதையுமே நினைத்துப் பார்க்காதவர் போல, தம்முடன் வரும் மற்ற ஸ்தானாதிபதிகளோடும், வித்வான்களோடும் சில மேளக்காரர்களையும் கூட்டிக் கொண்டார். சில காவடிகளைத் தயார் நிலையில் ராமநாதபுரம் எல்லைக்கருகில் உள்ள ஊரில் முன்னேற்பாடாக வைக்கச் சொன்னார். அது போல் காவடி முன்னால் சென்றுவிட்டது. பொன்னம்பலம் பிள்ளை மற்றவர்களுடன் பின்னால் சென்றார். ராமநாதபுரம் எல்லையும் வந்தது. முன்னேற்பாட்டின்படி வைக்கப் பட்டிருந்த காவடியைப் பொன்னம்பலம் பிள்ளை எடுத்துக் கொண்டார். மேளக்காரர்களை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னார். தவில்கள் முழங்கின. மற்ற வாத்தியக்காரர்கள் அவரவர் வாத்தியங்களை முழக்கச் சொன்னார். பழநிக்குப் பாத யாத்திரை செல்பவர்கள் போல் மற்றவர்கள் அனைவரையும் தயார் செய்தார். தாம் அந்தக் காவடியை எடுத்துக் கொண்டார். ஆவேசம் வந்தாற்போல், "வேலனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா! அரோஹராண்டி, பழநியாண்டி, அவன் போனாப் போறாண்டி, போனாப் போறாண்டி, முருகன் தானா வராண்டி!” என்று பாடிய வண்ணம் காவடிகளை சுமந்து கொண்டு அனைவரும் நடக்க ஆரம்பித்தனர்.

காவடி சுமக்காத மற்றவர்கள் சேகண்டி அடித்துக் கொண்டும், பழங்களைச் சுமந்து கொண்டும், ஆங்காங்கே தேங்காய் உடைத்துக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும் வந்தனர். விபூதிப் பைகளில் இருந்து தாராளமாக விபூதி அள்ளி அள்ளிப் பூசப் பட்டது. கூட்டம் ராமநாதபுரத்து எல்லையைத் தொட்டது. சேதுபதி ராஜாவுக்குப் பழநி ஆண்டவரிடம் பக்தி அதிகம். அதிலும் பழநிக்குக் காவடி எடுத்துக் கால்நடையாகச் செல்கின்றவர்கள் ராமலிங்க விலாசத்துக்குள் அனுமதி இல்லாமலே நுழையலாம். நம் விருந்தினர் கூட்டம் ராமலிங்க விலாசத்தை நெருங்கியது. ஒரு ஜமீனை விட்டு மறு ஜமீனுக்குள் நுழைவதற்கே அனுமதி தேவைப்பட்டாலும் பழநிக்குக் காவடி எடுத்துச் செல்வோரை மட்டும் யாரும் தடை சொல்வதில்லை. இதை நன்கு அறிந்து வைத்திருந்த பொன்னம்பலம் பிள்ளை இவ்வாறு பழநியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்த முடிவை எடுத்திருந்தார். முருகனின் தாய், தந்தையர் அவரவர் வீட்டுக்குப் போய்ச் சேர அந்த முருகன் திருவருள்தான் துணை செய்யவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். காவடியோடு வந்தவர்கள் என்னமோ நூறுபேர்தான். ஆனால் போகப் போக உள்ளூர் மக்கள் கூட்டமும் கூடிவிட்டது.

எல்லாருக்கும் பக்தி பிரவாகம் எடுத்து ஓட பெரிய பெரிய அரோஹரா கோஷத்தோடு நடந்து வந்து ராமநாதபுரம் அரண்மனையின் ராமலிங்க விலாசத்திற்குள் நுழைந்தது. அரசருக்குத் தகவல் போனது. இதுவரை இல்லாத அளவிற்கு பக்தியோடும், சிறப்பான முறையிலேயும் காவடி எடுத்துச் செல்லும் கூட்டம் ஒன்று வந்துள்ளது என்று அரண்மனை அலுவலர்கள் அரசரிடம் தெரிவித்தனர். சேதுபதி ராஜாவும் பழநி பாதயாத்திரை செல்பவர்களுக்குத் தக்க மரியாதைகளும், அவர்களிடமே பழநி ஆண்டவனுக்குக் காணிக்கைகளும் செலுத்துவது வழக்கம். ஆகவே தகுந்த ஏற்பாடுகளுடன் வந்திருப்போரை வரவேற்று மரியாதைகள் செய்யத் தயாரானார். கூட்டம் பெரிதாக இருந்த காரணத்தினால் காவடியுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே சென்றனர். காவடிக்கு மாலை, மரியாதைகள் செய்து வழிபாடுகள் நடத்தி தீப ஆராதனையும் காட்டப் பட்டது. மன்னர் கை குவித்து அனைவரையும் வணங்க, திடீரென மன்னரே எதிர்பாராவண்ணம் காவடி தூக்கும் ஒருவர் மன்னர் காலடியில் விழுந்தார். அவர் பொன்னம்பலம் பிள்ளை. காவடியை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாய் மன்னர் காலடியில் விழுந்து வணங்கினார்.

5 comments:

Anonymous said...

Vanakama Madam,

unga blogs epothan padika armbitu eruken..supera erukunga,Nandraga ullathu..padika padika etho oru putunarchi..i like to read like this Raja kalathu Stories..neriya eluthunga..
Valaga Valamudan.

Geetha Sambasivam said...

நன்றி காம்ப்ளான் சூரியா, காம்ப்ளான் குடிக்காமலே புத்துணர்ச்சி வருது??? ஓகேங்க(ஹிஹிஹி, சும்மா தமாஷுக்கு) :)))))))))))

கோமதி அரசு said...

//காவடியை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாய் மன்னர் காலடியில் விழுந்து வணங்கினார்.//

அந்த காவடியில் இருக்கிறாரா?
தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai said...

உத்திரகோசமங்கை நிகழ்வைக் குறித்து அறிந்து கொண்டேன்.

https://killergee.blogspot.com/2022/08/2.html?m=1

Geetha Sambasivam said...

இங்கே வந்து படித்துக்கருத்துச் சொன்னதுக்கு நன்றி கில்லர்ஜி.