எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, April 22, 2010

நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!

திருவாரூரில் தங்கி இருந்து அனைத்தையும் பார்க்கக் குறைந்தது இரண்டு நாட்களாவது வேண்டும். நாங்க அன்னிக்கு மட்டும் தங்கணும்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் அன்னிக்குக் காலம்பரக் கிளம்பினதுமே எட்டுக்குடியில் அவர் விழுந்ததும், எல்லா நிகழ்ச்சி நிரலும் மாறிவிட்டது. சீக்கிரமாய்க் கும்பகோணம் போயிட்டு ஊரைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றிவிட்டது. என்றாலும் வீதிவிடங்கர் வந்த வரலாற்றைத் தெரிந்து கொண்டோம். வன்மீகநாதர் என்னும் புற்றிடங்கொண்டாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் வரலாறு:

புண்யபூமியான குருக்ஷேத்திரம். மாபெரும் யாகம் ஒன்று நடக்க ஏற்பாடு ஆகிறது. யாகத்தைச் செய்யப் போகிறவர்களும் சாமானியர்கள் அல்ல, தலைமை ஏற்பவரும் சாதாரணமானவர் அல்ல. யாகத்தைச் செய்யப் போகிறவர்கள் தேவாதிதேவர்கள். தலைமை ஏற்பவரோ சாட்சாத் மஹாவிஷ்ணுவே. பொருட்கள் சேகரிக்கப் பட்டன. யாகத்தின் மூலம் கிடைக்கப் போகும் பெருமையும், புகழும் அனைவருக்கும் சமம் என முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டது. ஆனாலும் யாகம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஓய்வு எடுக்காமல் இருப்பவரே மிகச் சிறந்தவர் எனச் சொல்லவேண்டும் என்பதற்கும் ஒத்துக்கொண்டனர். அனைவரும் யாகத்தின் தலைமைப் பதவியான யக்ஞ-மான் பதவிக்கு (இன்றைய யஜமான் இதிலிருந்து வந்ததே) திருமாலே ஏற்றவர் என முடிவு செய்தனர்.

யாகத்தை இறுதிவரையிலும் ஓய்வே இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார் திருமால். எனினும் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் செருக்கும் இருந்தது. தேவர்களை விட்டு விலக நினைத்தார். யாகத்தின் குண்டத்தில் இருந்து பலவகையான அஸ்திரங்கள் வந்தன. வில் ஒன்றும் வந்தது. வில் திருமாலின் இடக்கரத்தைப்போய் அடைய, அஸ்திரங்கள் அவர் வலக்கரத்துக்குச் சென்றது. தேவர்களை இதன் மூலம் அடக்க நினைத்தார் திருமால். மெல்ல மெல்ல அவர்களை விட்டு விலகி இந்தத் தலத்தை அடைந்தார். பராசக்திபுரம் என்ற பெயரால் அப்போது அழைக்கப் பட்டு வந்த இந்தத் திருத்தலத்திற்கு வந்த திருமால் சோர்வு மிகுதியால் வில்லின் நுனியைத் தன் தாடையில் அழுத்தியவண்ணம் தூங்கிவிட்டார். அப்போது தேவர்கள் திருமாலிடமிருந்து தப்பவேண்டி குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலோசனையின் பேரில் செல்லுருவில் பூமியைத் துளைக்க ஆரம்பித்தனர். துளைக்கும்போது வில்லின் கீழ்க்கயிறு அறுந்து போக வில்லின் நாண் அறுந்து திருமாலின் தலை துண்டானது. ஏழு உலகுக்கும் சென்ற அந்தத் தலை திரும்பத் திருமால் படுத்திருக்கும் இடமே வந்து விழுந்தது. பயந்து போன தேவர்கள் ஈசனைத் துதிக்க, அவர்கள் துளைத்த பூமியிலிருந்து பெரும் சப்தத்தோடு சிவலிங்க ரூபமாக ஈசன் வெளியே வந்தார்.

அவரை அனைவரும் அபயம் கேட்க அஸ்வினிதேவர்கள் உதவியுடன் திருமாலின் தலையை உடலோடு பொருத்துமாறு சொல்ல, அவ்விதமே திருமாலின் தலை பொருத்தப் பட்டது. தனக்குத் தலை வழங்கிய ஈசனைத் துதித்தாராம் திருமால். பின்னர் மது, கைடபரை வதம் செய்த திருமாலைத் திருமணம் புரியவேண்டி இந்த மூலட்டானேஸ்வரரைத் துதித்துத் தவம் இருந்தாளாம் ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி. அவள் தவம் இருந்ததாலேயே இந்த ஊர்க் குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றது என்று சொல்வார்கள். மேலும் இந்தத் தலத்தில் தான் இந்திரனின் ஆலோசனைப்படி தசரதன் வன்மீகநாதர் என்னும் புற்றிடம் கொண்டாரைத் தரிசித்துச் சென்றானாம். அதன் பின்னரே புத்ரகாமேஷ்டியாகம் செய்து ராமர் முதலான நாலு புத்திரர்களையும் பெற்றான் என்றும் ஐதீகம்.


கமலாம்பாள் தொடர்கிறாள்.

2 comments:

எல் கே said...

hm good ithuthan hayagreevar kathayonu startingla doubt vanduchu appuram cleared

Geetha Sambasivam said...

அட?? நானும் அப்படித் தான் நினைச்சேன் தாத்தா, அப்புறமாத் தான் இது வேறேனு புரிஞ்சது! :))))